In Science ஜல்லிஸ்

Of Big Bangs, Parallel Universes and 11 dimensions - The String Theory

நீண்டகால யாஹூ உபயோகிப்பாளன் என்ற முறையில் யாஹூவின் இந்த புதிய பீட்டா மெயிலைப்பற்றி தீவிரமாகப்படித்துவருகிறேன்.

கூகுளைப்போல யாஹூவும் டாட் அய்ட்டத்தை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. என்னோட பேவரைட் ஐடிதான் கிடைக்கலை. mohandoss.i@yahoo.com() டாட்டுக்கு பிறகு நான்கு கேரக்டர்கள் வரணுமாம். அதுனால வேற ஒரு ஐடியை எடுதுக்கொண்டேன்.(ஹிஹி உண்மையில் இரண்டு. இன்னும் ஆசை போக மாட்டேங்குது.)

அப்புறம் ஒரு ஆன்லைன் வேர்ட் புரொசசிங் டூல் ஒன்னு வந்திருக்கு. இன்னும் சிறிது காலத்தில் ப்ளாக் எழுதும் மக்களிடம் வரவேற்பு நிச்சயமாய்க்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன் உபயோகப்படுத்தி பாருங்கள்.

அப்புறம் கொஞ்சம் சைன்ஸ் பத்தி, அறிவியல் உலகத்தில் இருக்கும் மோசமான வேலைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். நீங்களும் படித்துப்பாருங்கள்.

கட்டுரை குறிப்பு இலகிய மனம் கொண்டவர்கள் படிக்கவேண்டாம்.

வழக்கம் போல ஒரு சூப்பரான ஐட்டம் படிக்கக்கிடைத்தது. ஆனால் தமிழில் எழுதும் எண்ணம் இல்லாததால் அப்படியேத் தருகிறேன். தனித்தமிழ் மக்கள் மன்னிக்கவும். இதைப்பத்தி ஒரு சைன்ஸ் பிக்சன் கதை எழுதியாகிவிட்டது. அடுத்தவாரம் போடுகிறேன். (செத்தீங்கடே)

உங்கள் அனைவருக்குமே, Big Bang Theory, Parallel Universes பத்தி தெரிஞ்சிருக்கும். சில அறிவுஜீவிகளுக்கு 11 dimensions and The String Theory பற்றியும். அதைப்பற்றி சில டாக்குமெண்டரிக்களை பார்க்கமுடிந்தது.

என்னால் முடிந்த சில பில்டப்புகளை மட்டும் கொடுக்கிறேன். ஐன்ஸ்டின் தியரி ஆப் எவரிதிங் என்ற ஒன்றை நிரூபிக்க நினைத்திருந்தார். தலைவரின் வார்த்தகளின் படி "ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், The Theory of Everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்... முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது."

இந்த ஸ்டிங் தியரியால் அது முடியும்னு சொல்றாங்க(????) சில டாக்குமெண்டரிக்களும் கிடைத்தது. கூகுள் அனுமத்தித்திருக்கும் நாடுகள் மட்டுமே பார்க்கமுடியும். முக்கியமாய் இந்தியாவிலிருந்து பார்க்கமுடியாது. நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்தேன்.

நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்த, வெளியில் சொல்லக்கூடிய முறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே விளக்கமான டாக்குமெண்டரிகள். அனைவரும் பார்க்கவேண்டியது. யாரோ எழுதியிருந்தார்கள், வாத்தியாரும் கூட, ஐன்ஸ்டின் சொன்ன கடவுள் டைஸ் விளையாடுவதில்லை என்பதைப்பற்றி, அந்த வரிகளில் உள்ள தவறுகளைக்கூட டாக்குமெண்டரியில் சொல்லியிருந்ததாக ஞாபகம். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒன்னாம் நம்பர்
இரண்டாம் நம்பர்
மூன்றாம் நம்பர்



கட்டக்கடேசியா,

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷமும் வருவோமுல்ல தொல்லை பண்ண.

Credits: geetham.net, pbs.org, yahoo.com, writely.com, popsci.com.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சோழர்கள்

சோழர்களும் கேசரிப்பிரச்சனையும்

பராந்தகன் இறந்ததற்கும், முதலாம் இராஜராஜன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகள் கொண்ட குறுகிய காலமாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். இப்பகுதிக்கான ஆதாரங்கள் அறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் முழு விவாதத்திற்கு பிறகே யார் யார் எப்போது அரியணை ஏறினர் என்பதை ஒருவாறு நிர்ணயிக்க முடியும்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்

முதலில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் தன்மையை ஒருவாறு அறிய வேண்டும், இவற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளே முக்கிய ஆதாரங்களாகும்.

இந்த காலநிலையைப்பற்றிய கல்வெட்டுக்களைத்தவிர, பல செப்புப்பட்டயங்களும் நமக்குச் சான்றுகளாக உள்ளன. இச்சான்றுகளிலிருந்து முதலாம் பராந்தகனுக்கும் இராஜராஜனுக்குமிடையேயான சோழமன்னரின் வமிசாவழியை நாம் முடிவு செய்யவேண்டும்



கண்டராதித்தன்

இராஜகேசரி கண்டராதித்தனின் ஆட்சிக்குத் திருவாலங்காடு, லெய்டன் பட்டயங்களும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தில் கிடைக்கும் 8-ம் ஆண்டைச்சேர்ந்த பிள்ளையார் மற்றும் ஆழ்வார் அரிகுலகேசரி தேவ என்று குறிப்பிடும், பல இராஜகேசரி கல்வெட்டுக்களும் தென் ஆற்காட்டில் கிடைக்கும் மும்முடிச் சோழ கண்டராதித்தனின் 2-ம் ஆண்டைச்சேரந்த கல்வெட்டு ஒன்றும் சான்று கூறுகின்றன.

இவனது பட்டத்தரசி

செம்பியன் மாதேவி என்ற மனைவி மூலம் பிறந்த உத்தமசோழன் என்ற சிறுகுழந்தையை விட்டுச்சென்றான். இவ்வரசி மிகுந்த சிவபக்தியுடையவள். இளவயதிலேயே தன் கணவனையும் பின் தன் மகனையும் இழந்த செம்பியன் மாதேவி, கி.பி. 1001 வரை பல ஆண்டுகள் வாழ்ந்தாள். இவ்வரசி எடுப்பித்துள்ள சிவன் கோயில்களும், இவற்றைப்பராமரிக்கும் பொருட்டு தன் மகனுடைய ஆட்சியில் விடப்பட்ட பல அறக்கட்டளைகளை இதற்கு சான்றுகூறுகின்றன.

அரிஞ்சயன்

அரிகுலகேசரி, அரிஞ்சயன் அல்லது அரிந்தமன் ஆகிய பட்டங்களின் பொருள் ஒன்றாயிருப்பதன் அடிப்பஆயில், இவை முதலாம் பராந்தகனின் இளையமகனையே குறிப்பிடுகின்றன. அரிஞ்சய பரகேசரி தன் சகோதரன் கண்டராதித்தனை அடுத்து சிறிது காலம் ஆட்சிசெய்தான்

அரிஞ்சயனைப் பொருத்தமட்டில் இவனது ஆட்சியைப்பற்றிக் கூறும் சில செப்பேடுகளுடன் 12-ம் ஆட்சிஆண்டைச் சேர்ந்த இராஜகேசரிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரிஞ்சயன் நெடுநாள் வாழ்ந்து அரசுரிமையைப் பெற்றிருந்தபோதும், இவ்வுரிமையைச் சிறிதுகாலமே அவன் நுகரமுடிந்தது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

சுந்தரசோழன்

அரிஞ்சயனுக்குப்பின் அவனுக்கும் அன்பில் பட்டயங்களில் கூறப்படும் அவனது ஒரே பட்டத்து அரசியான வைதும்பை இளவரசி கல்யாணிக்கும் பிறந்த ஒரே மகனே அரியணை ஏறினான். இவன் பெயர் இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன். இவன், மதுரை கொண்ட இராஜகேசரி என்றும் அழைக்கப்பட்டான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டதாலும், இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்று அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து வானவன் மாதேவி என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.


தலைகொண்ட என்பதற்குப் பொருள்

இக்காலப்பகுதியின், வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைகொண்ட என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்பதை காணலாம். சோழ மன்னன் ஒருவனின் தலையைக் கொண்டதாக, வீரபாண்டியனும், வீரபாண்டியனது தலையைக்கொண்டதாக மற்றவரும் கூறியிருக்கின்றனர்.

பாண்டிய மன்னனால் தலையை வெட்டி எறியப்பட்ட சோழ மன்னர் யார் என்பதைப்பற்றி சர்ச்சைகள் இருந்துவருகின்றன. ஆனால் இந்தச் சொற்றொடர், தன்னை வெற்றிகொண்ட மன்னனிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒரு மன்னன் தலைசாய்ந்து நிற்பதையே குறிக்கும்.

இதே காலத்தில், இரண்டாம் ஆதித்தன் வீரபாண்டியனைப் போரில் கொன்று, வெட்டப்பட்ட அவனுடைய தலையைச் சோழநாட்டின் தலைநகருக்குக் கொணர்ந்தான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றன. இவ்வாறிருக்க ‘தலைகொண்ட’ என்ற விருதை வீரபாண்டியன் ஏற்றிருப்பது தான் ஒரு சோழ மன்னன் அல்லது இளவரசன் மீது தற்காலிகமாகக்கொண்ட வெற்றியைப் புகழ்ச்சியுடன் கூறிக்கொள்வதையே குறிக்கும்.

கேசரி பிரச்சனை

அதாவது சோழ மன்னர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் பரகேசரி, மற்றும் இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களை ஒரு ஒழுங்குமுறையில் வைத்துக்கொண்டனர். அதாவது பட்டத்தில் இருக்கும் மன்னன் இராஜகேசரியாக இருந்தால் அடுத்து பட்டத்திற்கு வரும் மன்னர் பரகேசரி. இது அப்படியே அடுத்த முறை மாறும் அதாவது இராஜகேசரியாக. இப்பொழுது உள்ள பிரச்சனையைப் பார்ப்போம்.

அதாவது, மதுரை கொண்ட இராஜகேசரி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது யார்? என்பதைப்பற்றிய கேள்வி. கண்டராதித்த இராஜகேசரி, ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கல்வெட்டுக்களில் உள்ளது.

பராந்தகன், வாழ்நாளிலேயே இராஜாதித்தன் இறந்தபிறகு, இளவரசுப்பட்டம் பெற்ற இவனது ஆட்சி தொடங்கி இருக்கவேண்டும். கண்டராதித்தன் ஒரு பரகேசரி என்றும் திருவாலங்காட்டு பட்டயங்களில் இவனுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ள அரிந்தமனே, மதுரை கொண்ட இராஜகேசரி ஆவான் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தவாதம் தவறானது. இராஜாதித்தன், இளவரசுப்பட்டம் பெற்ற பொழுது இராஜகேசரி விருதைப் பெற்றிருக்கலாம், ஆனால் இவன் தன் தந்தைக்கு முன்பே இறப்பதனால், இவனுடைய விருதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பராந்தகப் பரகேசரியை அடுத்தவந்த மன்னன், ஒரு இராஜகேசரியே ஆவான் கண்டராதித்தன் ஒரு இராஜகேசரியே என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது என்றாலும். இது இராஜாதித்தன் தன் தந்தைக்கு முன்பே இறந்ததன் விளைவே இது என்பது தளிவாக உணரப்படவில்லை.

அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர் இராஜகேசரியா? அல்லது பரகேசரியா? என்பதைப் பொறுத்தே இளவரசனோ அல்லது இளவரசர்களோ, இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற விருதினை ஏற்ற வழக்கத்திலிருந்து, வாரிசுப்பிரச்சனையை நாம் தளிவாக தீர்க்கமுடியும்.

அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் ஒரு இராஜகேசரி என்று அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. இவனே மதுராந்தகன் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தான். இவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பதையே ‘பாண்டியனை சுரம் இறக்கின‘ என்ற இவனுடைய பட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இக்குறிப்புக்களின் படி, இரண்டாம் பராந்தகச் சுந்தரசோழனே இவன் எனவும். இவனுடைய கல்வெட்டுக்கள் சிலவற்றில் மதுரை கொண்ட இராஜகேசரி எனக் குறிப்பிடப்பட்டான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சாமுராய்கள் & Last Samurai, The (2003)



சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.



சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்



சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.



இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்



இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.



எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.



டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.



கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.



இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சின்டிரெல்லா மேன்



சின்டிரெல்லா மேன், இந்த படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு சிலகாலமாகவே இருந்து வந்தது, இதற்கு முக்கியமான சில காரணங்களும் உண்டு. ரான் ஹோவார்ட் இயக்கத்தில், ரஸல் குரோ நடிப்பதால் வந்த எதிர்பார்ப்பு. இவர்களின் சேர்க்கையில் வந்த ‘A Beautiful Mind’ படம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால். இந்த படத்தையும் பார்க்கவேண்டும் எண்ணம் ஆரம்பத்திலேயே எழுந்தது.

இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம். அமேரிக்க மக்கள் முட்டிக்காலில் நின்றுகொண்டிருந்த பொழுது அவர்களை தன் பாக்ஸிங் திறமையால் நுனிக்காலில் நிற்கவைத்தவர் என்ற பெருமை பெற்ற ஜேம்ஸ் பிராட்டாக் பற்றிய உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் சின்டிரெல்லா மேன்.



படத்தின் தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் உண்டு, அதாவது ஜேம்ஸ் பிராட்டாக் சிறிய அளவிலான பாக்ஸராக இருந்து உலகத்தின் ஹெவிவைட் சாம்பியனானது ஒரு கற்பனைக்கதையைப் போன்றதாகவே இருந்தது. தன்னுடைய முப்பதாவது வயதில், பாக்ஸிங் ரிங்கில் தன்னுடைய தாக்குதலால் இரண்டு நபர்களை கொன்றதாக பெயர்பெற்ற மாக் பியரரை வென்றது ஹெவிவைட் பாக்ஸிங்கில் இன்றும் குறிப்பிடப்படும் ஒரு மிகப்பெரிய வெற்றி. போட்டிக்கு முன்பு 1/10 மட்டுமே வெல்வதற்காக பெற்றிருந்த பிராட்டாக் வென்றது பாக்ஸிங்கின் மிகப்பெரிய அப்செட் இன்றைக்குவரைக்கும்.



மில்லியன் டாலர் பேபியைப்போன்றோ, இல்லை அதற்கு முன் வந்த பாக்ஸிங் படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இந்த சின்டிரெல்லா மேன். படத்தில் பாக்ஸிங் இடம்பெற்றிருந்தாலும். ஜேம்ஸின் வாழ்கையைத்தான் இயக்குநர் வெகுவாக படமாக்கியிருப்பார். அவருடைய ஏழ்மை, அமேரிக்காவின் தொழில் முடக்கம் இப்படியாக.



படம் 1929ல் ஜேம்ஸ் லைட்வைட் சாம்பியன்ஷிப்பிற்காக மோதும் போட்டியில் தொடங்கும். அப்பொழுது அவர் குடும்பம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பிராட்டாக், பிறப்பில் ஒரு ஐரிஷ். பின்னர் நடக்கும் அமேரிக்க ஸ்டாக் மார்க்கெட் இழப்பில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அளவிற்கு போய்விடும். பின்னர் சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல், தன்னுடைய வலது கையில் அடிபட்டிருக்கும் நிலையிலும் சண்டையில் பங்கேற்று கையை உடைத்துக்கொள்ளும் பிராட்டாக்கின் பாக்ஸிங் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும்.

இந்தச் சமயத்தில் அவர் குடும்பம் மின்சாரத்திற்கு கூட பணமில்லாமல் வீட்டில் இருந்து இணைப்புத்துண்டிக்கப்படும். இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பாக்ஸிங் வீரரின் முன்னறிவிப்பில்லா விலகலில் மீண்டும் பாக்ஸிங் செய்ய பிராட்டாக்கிற்கு ஒருவாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிராட்டாக் எப்படி உலக ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாக்ஸ் பியரரை வெல்கிறார் என்பதே கதை.




கொஞ்சம் மென்மைத்தன்மையுள்ள பாக்ஸராக பிராட்டாக்கின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ருஸல் குரோ, குறிப்பாக சில காட்சிகளில் வசனங்கள் இல்லாமல் தன்னுடைய முகபாவத்திலேயே பேசும் பொழுது பின்னுகிறார். அவருடைய மனைவியாக மற்றொருமொறு ஆஸ்கர் வின்னர் ரெனி ஷெல்வேக்கர் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் பரவாயில்லை செய்திருக்கிறார், கொஞ்சம் கஷ்டமான கதாப்பாத்திரம், இருந்தாலும் பரவாயில்லை லெவல்தான். பிராட்டாக்கின் மேனேஜராக பவுல் கிமாட்டி நடித்திருக்கிறார் அவரின் திறமை பல காட்சிகளில் பளிரிடுகிறது. பாக்ஸிங் போட்டிகளில் காமிராவின் கோணங்கள் எனக்கு கொஞ்சம் புதியதாய்ப்பட்டது. மற்றபடி இயக்குநரின் திறமை படமாக்களில் தெரியத்தான் செய்கிறது.



தன் மகன் சாப்பாட்டிற்காகத் திருடிவிடும் சூழ்நிலையில், எக்காரணம் கொண்டும் அவனை மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்லும் காட்சி நன்றாய் இருக்கும். பிறகு ஹெவிவைட் சாம்பியன்ஷிப்போட்டிக்கு முன் நடக்கும் பேட்டியில், தான் சண்டையிடுவதும் வெற்றிபெறுவதும் தன் குடும்பத்திற்கு தேவையான பாலை(சாப்பாட்டை) தரவே என்று சொல்லும் காட்சியும் நன்றாய் இருக்கும்.

இதுபோல இயக்குநரின் டச் சில இடங்களில் தெரியும், பாக்ஸிங் படமாதலால் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் நிரம்பிய படம் தான் இதுவும்.

பிராட்டாக் அந்தப்போட்டிக்கு பிறகு, இரண்டாண்டு கழித்து தன் ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பை ஜான் எஹுன்றி லீவிஸிடம் இழந்தார். ஆனால் அந்தப்போட்டியில் கிடைத்த பணத்தில் கடைசிவரை அவர் வாழவழிகிடைத்தது. அதன்பிறகு அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருடைய திறமையைக் கருத்தில் கொண்டு அமேரிக்க அரசு இவருடைய படம் இடம்பெற்றுள்ள தபால்தலையை வெளியிட்டது.



இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ரஸல் மற்றும் ரோன் ஹோவார்ட் இருக்கிறார்கள் இந்தப்படத்திற்காக கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடிக்கு ரோன் ஹோவார்டுக்காகவும் ரஸல் குரொவுக்குமாக ஒருமுறை நிச்சயமாய்ப் பார்க்கலாம்.

References

http://movies.yahoo.com
http://en.wikipedia.com
http://www.jamesjbraddock.com

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள் சுய சொறிதல் சொந்தக் கதை

பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்

இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு 
நேற்றிரவு 
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது 
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய 
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுபடுத்தும்
மனக்கணக்குகள் 
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ 
ஏதாவதொன்றை 
நானாய்க்கேட்டாலொழிய 
தலையில் கட்ட மறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை 
ஜோடிகளின் இறுக்கத்தில் புழுங்கும் 
மனதின் வெம்மையை

மற்றவற்றை போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும் 
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை 
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை

Read More

Share Tweet Pin It +1

1010 Comments

In சிறுகதை

தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை

அது நடந்து இரண்டாண்டு ஆகியிருக்கும், சந்திரா கண்கலங்க தன் படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணனுடன் சென்ற நாள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒவ்வொருமுறை இணையப்பக்கங்களில் ஈழத்தமிழர்களுடன் உரையாடும்பொழுதோ இல்லை ஈழத்தமிழை உரைநடையில் படிக்கும் பொழுதோ சந்திராவின் ஞாபகங்கள் வராமல் இருந்ததில்லை.

எங்கள் வீட்டில் நான் புனேவிற்கு வந்ததும் இவ்வளவு தூரம் வரமுடியாதென்று சொல்லி பெங்களூர் வீட்டைவிற்றுவிட்டு சொந்த ஊரான காரைக்காலிற்கே குடிபோய்விட்டார்கள். ஒரு தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது பிரான்ஸில் இருந்து வந்த அப்பா வழி மாமா, என்னை பிரான்ஸ் வந்துவிடுமாறு வற்புறுத்த நானும் சிறிதுகாலம் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வந்தால் இந்த தொல்லை பிடித்த ஐடி வேலையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் லெக்சரராய் சேர்ந்துவிடும் எண்ணமும் இருந்தது. அதுவுமில்லாமல் நான் பிறந்தது காரைக்கால் என்பதால் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு பிரஜையாகத்தான் இருந்தேன். அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.

அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்த மாமாவின் வீட்டிற்குத்தான் போயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முறைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மனது முழுவதும் சந்திராவேயிருந்ததால் மாமா பெண் சுமதியைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் பணிசார்ந்த பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது செங்கன் விசா என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன். ப்ரான்ஸ் ஒரு அற்புதமான நாடு, அதைப்போலவே மக்களும். நான் முதன்முதலில் பரியில் இறங்கியதிலிருந்தே அந்த மக்களஇன் பழக்கவழக்கங்கள் ஆச்சர்யத்தை அளஇத்திருக்கின்றன. அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று தீவிரமானது. ப்ரெஞ்ச் மொழிமேல் அந்த மக்கள் கொண்டிருந்த ஈடுபாடு அலாதியானது. குதிரை வண்டிக்காரனிடம் பேசும் மொழி ஜெர்மன் என்றும், தொழிலாளியிடம் பேசுவதற்கான மொழி ஆங்கிலமென்றும் காதலியிடம் பேசும் மொழி ப்ரெஞ்ச் என்றும் விளையாட்டாக உடன் வேலைசெய்யும் நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.

"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.

சிறிதுநேரம் நன்றாய் விழித்துவிழித்து பார்த்துவிட்டு,

"ஏய் சந்திரா நீ எங்க இங்க, சொரூபன் எப்படியிருக்கான். கல்யாணமாயிருச்சா உனக்கு" எனக்கு நாங்கள் பெங்களூரில் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது. இன்னும் அப்படியேத்தான் இருந்தாள், எனக்கென்னவோ அவள் கண்களில் பிரகாசம் கூடியிருப்பதாய்ப்பட்டது.

"இல்லை இன்னும் ஆகலை சொரூபன் அண்ணா சுகமா இருக்கிறான்; அவனும் இங்கதான் இருக்கிறான். அது சரி நீங்கள் இங்க என்ன செய்யுறங்கள்" சந்திரா பேச முன்பைப்போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் இரண்டு கைகளையும் அசைத்தவளாய் என் கவனத்தைக் கலைத்தாள்

"நான் உன்கிட்ட முன்னயே சொல்லியிருந்தேன்ல, எங்கம்மாவிற்கு பிரெஞ்ச் ஸிட்டிஷன்ஷிப் இருக்குன்னு. அதான் கொஞ்சநாள் பிரான்ஸ் வந்து நிறைய சம்பாதித்துவிட்டு. இந்தியா போய் செட்டில் ஆய்டலாம்னு இங்கே வந்தேன். நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவேயில்லை"

நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டவள்.

"உங்கட அக்கா மோகனா எப்பிடியிருக்கிறா?"

"அவளுக்கென்ன கல்யாணமாயிருச்சு, அமேரிக்க மாப்பிள்ளை என் சொத்தில் பாதியை எடுத்துக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டா." சொல்லிவிட்டு நான் சிரிக்க முதலில் சிரித்தவள்.

"விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாதயுங்கோ மோகன். அக்காக்கு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காய் திரும்பக்கிடைக்கும்."

"ஏய் அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கண்ணன் நிறைய வரதட்சணை தருவான்னு சொல்லு." கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் அவளிடம் காதலுக்காக வேண்டினேன். இதைக்கேட்ட அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பிறகு வேறு பக்கம் முகத்தை திருப்பியவளாக,

"மோகன் சொரூபனை நீங்கள் இப்பப் பார்த்தால் நம்பவேமாட்டீங்கள். இங்க ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஒரு வருஷத்திலேயே நாங்கள் எங்கள் உறவினர்கள் வழியாக இங்கே வந்திட்டம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்ததுதான் ஆனால் இப்ப எல்லாம் பழகிட்டுது..."

அவள் மறைமுகமாக இந்த விஷயத்தைப்பற்றி பேசாதீர்கள் என்று சொல்வதாய்ப்பட்டதால் நானும் விட்டுவிட்டேன். பிறகு நாங்கள் தோரபெல் மேலேயிருந்து கீழிறங்கி வரும் பொழுது எங்களை வரவேற்ற நபரை எனக்கு நிச்சயமாய் அடையாளம் தெரிந்தது. அது சொரூபன்தான் நன்றாய் சதையடித்திருந்தான். முதலில் என்னைப்பார்த்து வியந்தவனாய். 'மோகனண்ணா நீங்கள் எப்பிடி இங்க நிச்சயமாய் னஉங்களை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. சந்திராவை பார்த்தனீங்களோ?'ன்னு கேட்டதில் நான் வியந்துபோனேன். பின்னே அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை. நானும் திறமையைக்காட்ட சொரூபா நானும் அப்படித்தான். உன்னை இந்த நிலையில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறதுன்னு ப்ரெஞ்சில் சொல்ல. எல்லாம் ஆண்டவன் அருள் அண்ணே, கதிர்காமக்கந்தன் அருள். வாங்க நமக்குத்தெரிந்த கடையொன்னு பக்கத்தில் இருக்கு அங்கப்போய் பேசலாம். அப்படின்னு அவனும் தெள்ளத் தெளிவான ப்ரெஞ்சில் சொல்ல எனக்கு நான் இருந்த இடம் லேசாய் ஆடுவதைப்போல் இருந்தது. சத்தியமாய் சந்தோஷத்தில் தாங்க.

நாங்கள் ஒருவழியாய் சொரூபனின் ஈழ நண்பன் ஒருவனுடைய கடைக்கு வந்திருந்தோம். சொரூபன் என்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்த எனக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை அளவிடமுடியாதது. சொரூபனையும் சந்திராவையும் தவிர்த்து எனக்கு ஈழத்தைப்பற்றி தெரிந்தது கையளவே. இதன் போன்ற காரணங்களால் முன்பே மனதில் விசுவரூபமெடுத்திருந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய நல்லெண்ணம் பின்பு வாமன ரூபம் கொண்ட மகாப்பிரபு இரண்டடியை அளந்துவிட்டு மூன்றாம் அடிவைக்க நிலம் கேட்ட பொழுது தன் தலையைக் கொடுத்த மகாபலியைப்போன்று என் திருவடியைக்காட்டி எந்தன் உள்ளும் புறமும் புகுந்து எங்கும் நிறைந்த பரம்பொருள் போன்றதொரு நிலையை எட்டியிருந்தது.

"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,

"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளஇத்தேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியேல்ல ஒருநாள் உங்க அக்காவை குறிக்க நான் பெட்டைன்னு சொல்லிட்டன் நீங்கள் என்னை அடிக்க கையை உயர்த்தினீங்கள்." அவன் கேட்டுவிட்டு என்னையே பார்த்தான்.

"நினைவிருக்கிறது சொரூபா."

"அண்ணை பெட்டைகள் எண்டால் எங்கட வழக்கில பெண்பாலைக் குறிக்கும் சாதாரண வார்த்தைப் பிரயோகம்."

"ஆனால் எனக்குத் தெரியாதே சொரூபா, தமிழீழ வார்த்தைகள் மட்டுமில்லை, சில தூய தமிழ் சொற்களோட அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. உதாரணத்துக்கொன்னு எடுத்துக்கோயேன் நாற்றம் அப்பிடின்னா தூயதமிழ்ல வாசனைன்னு அர்த்தம், அதையே மெட்ராஸ்ல இருக்குற ஒருத்தன்ட போய் அண்ணே உங்க சட்டைலேர்ந்து அற்புதமான நாற்றம் வருதுண்ணேன்னு சொல்லிப்பாரு தெரியும். அதுக்காக தமிழ்நாட்டுக்காரனுக்கு தமிழ் மேல மதிப்பில்லை மரியாதையில்லை ஏட்டிக்குப் போட்டியாய் பேசுறான்னு அர்த்தமா? இதைக்கூட நீ என்னை இன்னும் நல்லா புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். அதெல்லாமிருக்கட்டும் நான் உனக்கு பெங்களூரில் எவ்வளவோ உதவியிருக்கேன். நான் சொல்லிக் காண்பிக்கிறேன்னு நினைக்கக்கூடாது உனக்கு கடைசியில் என்னைப்பற்றிய நினைவு வரும்பொழுது அந்தப் பெட்டைன்னு நீ சொன்னதுக்காக நான் கோபப்பட்டதுதான் நினைவிற்கு வருதா?" நான் கேட்க என்னவோ பதில் சொல்லவந்தவன் நிறுத்திக்கொண்டு,

"உங்கட அம்மா அப்பாவை நம்பி என்ர தங்கச்சியை விட்டுட்டுப் போனால் நீங்கள் கையைப்பிடிச்சு காதலிக்கிறியா எண்டு கேட்டது மட்டும் சரியோண்ணா?. எங்கடப் பெண்கள் எண்டா உங்களுக்கு அவ்வளவு கேவலமா?" இதைக்கேட்ட பொழுது அவன் கண்கள் கோபத்தில் சிகப்பேறியிருந்தது. சிறிது நேரம் யோசித்தவனாய்.

"உண்மைதான் சொரூபா, ஒரு பதின்ம வயது பெண்ணிடம் ஏற்பட்ட சாதாரண இனக்கவர்ச்சியை தவறா உபயோகப்படுத்திக்கிட்டனோன்னு அப்பவே நினைத்தேன். ஆனால் இதெல்லாம் நாம சந்திராவை கல்யாணம் செய்துக்கிட்டா தப்பாகாதுன்னும் நினைச்சதால சரின்னு நினைச்சிட்டேன். ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நிச்சயமாய் தப்புதான் சொரூபா, தப்புதான்."

இந்த பதில் சொரூபனின் முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்ளை குறிப்பெடுக்க நினைத்த எனக்கு குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. அவன் அந்த பதிலை ஜீரணம் செய்துவிட்டவனைப்போல் நகர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திராவை பார்த்த பொழுது முன்பிறுந்த மனநிலையில் எந்தவொருமாற்றமும் இல்லை.

"மோகன் நான் முந்தியே உங்களிட்ட சொன்னானல்லே. ஆரம்பத்திலாவது பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. நீங்கள் சொரூபன் அண்ணா உண்டியல் பணம் போட உங்கட வங்கிக்கணக்கை கேக்க நீங்க தரமறுத்து ஏதோ கொலைக்குற்றவாளி போல் பார்த்தீங்களாம்.
உண்டியல் பணம் என்றது கடத்தல் பணமோ திருட்டுப்பணமோ இல்லை தெரியுமோ? நேர்மையான வழியில் சம்பாதிக்கிற பணம்தான்."

"சந்திரா நீ கூடவா என்னை புரிஞ்சிக்கவில்லை. தமிழ்ல கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை அப்படின்னு ஒரு பழமொழியிருக்கு. எல்லாப் பழமொழியையும் போல இதையும் மக்கள் திரிச்சிட்டாங்க. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு, கழு அப்படிங்ற ஒரு வகையான பருத்தி வளர்றப்போ கற்பூரம்போல் வாசனை வரும். அதை அறுவடை செஞ்சு தறியில நெஞ்சு துணியா மாத்தினா அந்த பருத்தியில இருக்கிற கற்பூர வாசனை போயிரும் அப்பிடிங்கிறதுதான் அந்த பழமொழி. ஆனா இப்ப மக்கள் கிட்ட இருக்குற பழமொழியோட அர்த்தம் வேறயில்லையா. அதுமாதிரிதான் உண்டியல் சம்மந்தப்பட்ட என்னோட அறிவும். நான் தமிழ்ல கதை கட்டுரையெல்லாம் எழுதுவேங்கிறதுக்காக இந்த விளக்கத்தையெல்லாம் நான் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் உங்கண்ணனை போலீஸ்கிட்டையா புடிச்சிக் கொடுத்தேன். என் அக்கௌன்ட் டீடெய்ல் தரமுடியாதுன்னுதானே சொன்னேன். அதுல வேற பிரச்சனையேயில்லையா, நாளைக்கே நான் டேக்ஸ் ரிட்டர்ன் காமிக்கிறப்ப அந்த பணம் எதுக்கு வந்துச்சுன்னு கேள்விவராதா. நான் எங்கப்போய் பதில் சொல்வேன். ஒன்னும் தெரியாம குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது."

"அதைத்தான் நானும் சொல்றன். எங்களுக்குள்ள மொழி முதற்கொண்டு பிரச்சனையிருக்கு. அதால நமக்குள் இடைவெளிகள் அதிகம் என்னதான் முயன்றாலும் எங்களைப்பற்றி உண்மையாக நீங்கள் தெரிந்துகொள்வதில் 1 சதவீதம் கூட உண்மையிருப்பதில்லை. அதனால் நீங்க உங்கள் வழியைப் பார்த்து ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுங்கோ. ஒருவிஷயம் மட்டும் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்கோ நீங்கள் பெங்களூரில் செய்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம். இன்று நாங்கள் நல்ல நிலைக்கு வந்திட்டதால சொரூபன் அண்ணாவோ நானோ இப்படி கதைக்கிறம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஏதோ மனசை உறுத்திக்கிட்டிருந்தது கேட்டிட்டன் அவ்வளவுதான்."

அவள் முன்னமே முடிவெடுத்துவிட்ட ஒரு நிலையில் இருப்பதையே உணர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நான் கேட்டதற்கும் அவள் அவ்வளவு சாதகமாய் பதில் சொல்லியிருக்காததால். நானும்,

"இல்லை சந்திரா இதுதான் நல்லவழிமுறை. என்பேர்ல எதாவது குற்றம் இருந்தால் அதை நேரா கேட்டுடணும். என்னால முடிஞ்ச பதிலை நானும் கொடுப்பேன். உன்விரும்பம் அதுதான்னா எனக்கும் பிரச்சனை கிடையாது."

சொல்லிவிட்டு அவளின் தொலைபேசி எண்ணை ஒப்புக்காய் வாங்கியவனாய் தோரபெல்லில் என் காதலை தலை முழுக நினைத்தேன். நினைவுகளை காற்றிலே கரைக்க நினைத்தவனாய் சப்தமாய் மூச்சுவிட்டுக்கொண்டே நான் வந்திருந்த பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தேன். என்னவோ ஒன்று நீண்டநாளாய் அரும்பாடுபட்டு காத்துவந்தது உடைந்துவிட்டதைப்போன்றதொறு எண்ணம் உண்டானது. என்னவோ நினைவில் செல்லிடைபேசியை எடுத்தவன் மாமாவின் எண்ணை அழைக்க,

"மாமா, நான் சுமனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்."

"தம்பி அதை நீ சுமன் கிட்டையே கேளு." சொல்லியவுடன் தொலைபேசி இடம்மாற,

"சொல்லுங்க வாவா, என்ன விஷயம்?"

"இல்லை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மாமாக்கிட்ட கேட்டேன் அவர்தான் உன்கிட்ட கேக்கச்சொன்னாரு. அதான்"

"வாவா இதென்ன என்கிட்ட கேக்குறீங்க, நைனாக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா. இங்க நேர்ல வாங்க பேசிக்கலாம். ஆமாம் இப்ப எங்க இருக்கீங்க, எப்ப வீட்டிற்கு வர்றீங்க." சுமன் கேட்க, யாரையோ பழிவாங்க நினைத்தவனாய்.

"சுமன் மாமாக்கிட்ட சொல்லீறாத, நான் இப்ப தோரபெல்லில் இருக்கேன். முல்லா ரூஜ் போய்ட்டு இன்னிக்கு நைட் வந்திற்ரேன்."

நிராகரிப்பின் வலி எல்லா சமயமும் அடக்கிவிட முடிவதாய் இருப்பதில்லை, அதன் ரணங்கள் பெரும்பாலும் நேர்மறையான வினைகளையே ஆற்றியிருந்தாலும் சில சமயங்களில் எதிர்மறையான வினைகளும் அதனால் ஏற்பட்டுவிடுகிறது. யுயுத்சு நூறு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்தவன் ஆனாலும் அவனுக்கு சமூகத்தில் அத்தனை நபர்களஇன் நிராகரிப்புத்தான் பரிசாய்க்கிடைத்தது. அதேபோல் தான் அம்பையும் பீஷ்மனின் வில்லின் வலிமையில் சால்வன் தன் இயலாமையைக்கண்டதால் நிகழ்ந்த நிராகரிப்பு, பின்னர் கங்கை புத்ரர் வரை தொடர்ந்தது. நிராகரிப்பின் சுழற்சியில் இருந்து வெளிவர நினைத்தவனாய் இந்த பதிலை சுமனிடம் சொன்னேன். மறுமுனையில் அவள் நக்கலாய்ச் சிரித்தபடி தொலைபேசியை வைக்க, என் ஐந்தாண்டு நினைவை மூளை மடிப்புக்களில் உள்ள நியூரான்களிடமிருந்து ஆஸிட் ஊற்றி அழித்துவிட நினைத்தவனாய் முல்லா ரூஜ்ஜை நோக்கி நகர்ந்தேன்.


--------------

மீண்டும் ஒருமுறை ஈழமக்களின் உரையாடலை திருத்தி எழுதிக்கொடுத்தமைக்கு சினேகிதிக்கு நன்றி. :-) :D

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சிறுகதை சுஜாதா

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் - ஜெர்மனி

"சுஜாதாவை கடத்தப்போறோம்**."

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

"என்ன பிளான்? "

"அதே பழைய பிளான்தான்."

"ம்ம்ம்... சொல்லு."

"வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்."

"வெப்பன்ஸ்?"

"ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்."

"மற்றபடி..."

"இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்."

"காருக்குள்ளயா?"

"ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். "

"முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். "

"கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"எதைப்பத்தி?"

"கடவுளைப்பத்தி."

"இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. "

"என்ன ஐயங்கார்னு சொல்றியா."

"அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை 'யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்'னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். "

"அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். "

"அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?"

"அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்."

"கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்."

"எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. "

"இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்."

"என்ன எழுதுறார்?"

"காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்."

"அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்... அல்லாவென்று
சொல்வார்... அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது."

"இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

"நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. "

"சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு..."

"எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ."

சென்னை - இந்தியா

"டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே." மோகன் கேட்க.

வந்தி சொன்னான் "அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா."

"நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?"

"நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?"

"சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?."

ஆறு மணி - சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி - ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

"என்னதாண்டா ஆச்சு?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்." சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

"சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?".

"ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்." சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ரொம்ப முன்னாடியே எழுதியதுதான்னாலும் திரும்பவும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சுய சொறிதல்

விசிலடிச்சான் குஞ்சுகளூம் வெளக்கமாத்து கட்டையும்





விசில் அப்படின்னதுமே எனக்கு நினைவுக்கு வருவது. எங்க BHELலில் காலங்காத்தாலயே விசில் அடிச்சு எம்ப்ளாயிங்கள தூக்கத்திலிருந்து எழுப்பிவிடறதுதான், பின்னாடி வீட்டிலேர்ந்து கிளப்பி கம்பெனிக்கு வர வைக்கிறதுக்கு ஒரு விசில். இந்த விசில் சப்தம் நான் பிறந்ததிலிருந்தே கேட்டுவருகிறேன்.



(பிறந்திலிருந்தே கூடவேவருது)


அப்புறம் எங்கப்பா ஒரு பியிடி(PET) அப்பிடிங்கிறதால எங்க வீட்டில் நிறைய விசில் இருக்கும். இதில் எங்கப்பா உபயோகிக்கிற ஒரு அமேரிக்காவிலிருந்து வாங்கிவந்த விசில் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா ஆசிரியர்களையும் போல அவர் அந்த விசிலை மற்றவர்கள் உபயோகிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் நான் எங்க கிளப்பில் நடக்கும் பேஸ்கட்பால் மாட்சுக்கு போய் கலாட்டா பண்ண ஒருமுறை எடுத்துட்டு போய் அப்பாக்கிட்ட பயங்கரமாய் உதை வாங்கியிருக்கேன்.

அந்த மாட்சுக்கு வந்த அப்பாவோட ஒரு பிரண்ட் பின்னாடி நான் வேற ஒரு வாலிபால் மாட்சுல பிரச்சனையே பண்ணாம மாட்டினப்ப 'இவன் தானே நிச்சயம் செஞ்சிருப்பான். விசிலடிச்சான் குஞ்சு தானே இவன்.' அப்படின்னு போட்டுக்குடுத்தார்.(வேற அர்த்தமாயிருக்குமோ ??? :-))

அதிலிருந்து அந்த டெர்ம்மை யார் உபயோகித்தாலும் எனக்கு பிடிக்காது.

பின்னாடி காலேஜ் வந்ததும் சினிமாவுக்கு போனா விசிலடிக்கிறதுக்குன்னே என்னையும் கூட்டிக்கிட்டு போற அளவுக்கு நான் விசில் அடிப்பதில் தேர்ந்திருந்தேன்.

இப்புடி நான் விசில் அடிக்கிறதுல பெரிய ஆள் ஆனதிற்கு எங்கப்பாவும் ஒரு காரணம் அவரு கபடி, கொக்கோ மாட்சுக்கெல்லாம் ஊதுறதுக்கு போவாரு.(சிலசமயம் என்னையும் கூட்டிக்கிட்டு). அப்ப ஏற்பட்ட பழக்கம் தான்.

பின்னாடி நான் இன்டஸ்டிரிக்கு(Software Industry) வந்ததுக்கு அப்புறமும் விசில் என்னை விடலை. இங்க நடக்குற இன்டர் கம்பெனி வாலிபால், டக்வார், பேஸ்கட்பால் மேட்சுக்கெல்லாம் ஊதிக்கிட்டு(விசிலைத்தான்) இருக்கேன்.





அப்புறம் வெளக்கமாறைப்பத்தி, ஒருமுறை இப்படித்தான் டெல்லியில் பார்க்க நார்த் இன்டியன் மாதிரியே இருந்த ஒரு பெண்ணைப்பார்த்து விசிலடிச்சிக்கிட்டே ஒரு பாட்டு பாட நேராய் என்கிட்ட வந்து வெளக்கமாறு பிச்சிறுன்னு சொன்னிச்சே பார்க்கணும் எனக்கு தூக்கிவாறிப்போட்டுறுச்சு.

இப்படியாக எனக்கும் விசிலுக்குமான தொடர்ப்பு நீண்டு நெருக்கமாய் இருக்கிறது. மற்றபடிக்கு இந்த பதிவுக்கும் தற்சமயம் வெளிவந்திருக்கும் எந்தபதிவுக்கும் எந்தச்சம்மந்தமும் கிடையாது.

For more reference on Whistle

http://en.wikipedia.org/wiki/Whistle
http://en.wikipedia.org/wiki/Whistling
(பதிவு ஆழமாயிருக்கணுமில்ல அதான்)

Read More

Share Tweet Pin It +1

22 Comments

In Science ஜல்லிஸ்

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன்னா, முதல்ல நான் இதைப் போல் சம்பாதிப்பதற்கு என்ன செய்யணும்னு தேடினேன், எனக்கு தமிழ் வலைப்பூக்களில் விவரம் எங்கிருக்கிறதுன்னு தெரியலை. அதான் நான் பட்ட கொஞ்சம் சிரமத்தை இனிமேல் வர்றவங்க படாமயிருக்குறதுக்காக ஒரு பதிவு. உஷா கூட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பினாத்தல் சுரேஷிடம் கேட்டிருந்தார்கள். பினாத்தலார் கவனிக்கலையோ இல்லை தனிமடலிட்டாரோ நான் அறியேன் பராபரமே. ஏதோ என்னால் முடிஞ்சது போட்டுட்டேன்.

முதல்ல ஒரு நம்பிக்கை வார்த்தை.

கூகுளிருக்க பயமேன், ஆமாங்க நான் கூகுளைப் பயன்படுத்தி வலைத்தளத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்கிறேன்.

முதல்ல கூகுள் கிட்ட நான் பார்த்த வரைக்கும் ஒரு பிரச்சனை தமிழ் வலைப்பூவைப்பயன்படுத்தி இந்த சேவையை முதலில் பெறமுடியாது.(அதனால ஒரு டிரிக் செய்யணும் இதுக்கு அதையும் சொல்றேன் பின்னாடி). அதனால் ஒன்றும் வருத்தப்படாதீங்க. ஒரு ஆங்கிலப்பதிவைத் தொடங்குங்க அதில ஒரே ஒரு பதிவை போட்டு வைச்சிருங்க. எடுத்துக்காட்டுக்கு நான் பயன்படுத்தின ஆங்கிலப்பதிவு ஜாவா பையன் ( எல்லாம் ஒரு விளம்பரம்தான்.)

பின்னாடி அந்த ஆங்கிலப்பதிவின் டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். அதில ஆட் சென்ஸ் அப்பிடிங்கிற அய்டத்தை செலக்ட் பண்ணுங்கோ. பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு பார்ம் வரும் அதில் உள்ள அய்டத்தையெல்லாம் பில்லப் பண்ணுங்கோ, கூகுள் பணம் கொடுக்கும்ங்கிறதால உண்மையான விவரம் கொடுத்தால் நலம். (நான் கம்பெனி அட்ரெஸ் கொடுத்துருக்கேன் போன் நம்பர் உட்பட.)

அப்புறம் சரியான விவரம் எல்லாம் கொடுத்து சப்மிட் பண்ணீங்கன்னா, அடுத்த ஸ்கீரினுல நீங்க எந்த மாதிரியான விளம்பரத்தை உங்க வலைத்தளத்தில் போடப்போறீங்கன்னு கேட்பாங்க, விவரமானவங்க அவங்க வலைத்தளத்தின் கலருக்கு ஏற்ற மாதிரி விளம்பரத்தை தேர்ந்தெடுக்கலாம். என்னை மாதிரி முட்டாளுங்க அவங்க கொடுக்குற டிபால்ட் விளம்பரத்தையே ஒத்துக்கிட்டு ஸேவ் அப்பிடின்னு கொடுக்கலாம். இது முடிஞ்சிருச்சுன்னா எப்பவும் போல திரும்ப பப்ளிஷ் பண்ண கேட்பாங்க பண்ணீருங்க. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு முதல் கட்டம்.

இனிமேல் இரண்டாம் கட்டம்.

அதாவது இனிமேல் நீங்க சொன்ன மெய்ல் அட்ரஸ்க்கு ஒரு மெயிலை கூகுள் அனுப்பும் எப்பிடின்னா இப்படி,

Hello Mohandoss Ilangovan,

Welcome to Google AdSense. In order to verify your email address and
submit your information for review, please click on the link below.

https://www.google.com/adsense/c?u=1461447&k=0x503

This link will take you directly to an email confirmation page. If it
does not, please copy and paste the full URL into your web browser's
address box and hit the "Enter" key on your keyboard. Once you confirm
your email, we'll review your application and email you after we check
your site for AdSense eligibility. If you're accepted, you'll then be
able to log in to your account at https://www.google.com/adsense, or
through the application or service from
which you originally registered. Please use the email address and
password you
submitted with your application.


இதில் சொல்லப்பட்டிருக்கும் உரலை கிளிக்கினால் மட்டும் போதும்(உங்களுடையதை மட்டும்; என்னுடையதை வேண்டாம் நான் உரலை மாற்றியிருக்கிறேன் இந்த உரல் போகாது) அது ஒரு பக்கத்தை திறக்கும் அதன் பின்னர் கூகுள் உங்கள் பக்கத்தைப் பற்றி விவரங்களை ஆராய்ந்து உங்கள் வலைப்பூவில் தங்கள் விளம்பரத்தை போடலாமா அப்பிடின்னு ஆராய்ச்சி செய்வாங்க. (தமிழ்ல பதிவிருந்தா மட்டும் தான் பிரச்சனை. நானெல்லாம் இரண்டு தடவை முயற்சி பண்ணேன் தமிழில், ரெண்டு தடவையும் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆகியிருச்சு ஆனா நம்ம ஆங்கில பதிவு ஓக்கே ஆயிருச்சு அதுமாதிரி.)

இரண்டு நாள்ல உங்களுக்கு திரும்பவும் ஒரு மெயில் வரும் அதாவது உங்களோட அப்ளிகேஷன் ஓக்கேஆயிருச்சா இல்லையான்னு பதில் அனுப்புவாங்க. ஆங்கிலம்னா அப்ரூவ் ஆயிரும் கவலைப்படாதீங்க.

அப்ரூவ் ஆச்சின்னா இப்படி ஒரு மெயில் வரும்.

Congratulations!

Your Google AdSense application has been approved. Your account is now
activated, and Google ads are being delivered to your pages.

You can log in to your AdSense account at any time, to make changes to
your ad layouts or to view your activity reports.

------
Make changes to your Google ads:

Log in to your account at https://www.google.com/adsense?hl=en_US, or
through the application or service from which you originally
registered. Select from the available color and layout options to
select an ad format that works best for your web pages.

-------------------------

இப்ப உங்களோட இரண்டாவது கட்டம் முடிஞ்சிருச்சு மூணாவது தான் முக்கியமான கட்டம் அதாவது உங்களோட தமிழ் பதிவில் வரும் வாசகர்களின் வருகைக்கும் சேர்த்து பணம் சம்பாதிப்பது பற்றி.

அதாவது நீங்க ஒரு ஆடை செலக்ட் செய்தீர்களே அது ஒரு ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் டெம்ப்ளேட்டில் உருவாக்கும் நீங்கள் அதை வைத்து இரண்டு விஷயங்கள் செய்யணும். முதல் வேலை,

div id="main" div id="main2"
script type="text/javascript"
google_ad_client="ca-pub-5614942101384756";
google_ad_width=468;
google_ad_height=60;
google_ad_format="468x60_as";
google_ad_type="text";
google_color_border="336699";
google_color_bg="FFFFFF";
google_color_link="0000FF";
google_color_url="008000";
google_color_text="000000";
/script
script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"
/script

இது தான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆட் ஸ்கிரிப்ட் (தயவு செய்து இதை காப்பி செய்யாதீர்கள் இல்லாவிட்டால் எனக்குத்தான் உங்கள் பணம் முழுக்க வரும். இதில இந்த நம்பர் தான் ca-pub-5614942101384756 முக்கியம் இதைவச்சுத்தான் உங்கக்கிட்டேர்ந்து வர்றாங்கன்னு கண்டுபிடிப்பாங்க, அதனா எப்ப காப்பி பண்ணி எத்தனை தடவை எங்கப்போட்டாலும் இந்த நம்பர் தப்பாகாம பார்த்துக்கோங்க. )

முதலில் இதை உங்கள் ஆங்கிலப்பதிவிலிருந்து எடுத்து, தமிழ் பதிவில் இடுங்கள். ஆங்கிலப்பதிவில் எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே.

அதாவது உங்கள் தமிழ் டெம்ப்ளேட்டின் இந்த இடத்திற்கு கீழே,

Begin #content
div id="content"
Begin #main
div id="main" div id="main2"

//here//

{ நான் < > இந்தக் குறிகள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நீக்கியிருக்கிறேன் நீங்கள் காப்பி செய்து போடும் பொழுது அதை அப்படியே போடுங்கள் அதாவது <> குறிகளை நீக்காமல். }

முதல் காரியம் முடிந்துவிட்டது. பின்னர் உங்கள் தமிழ் வலைப்பூவில் முன்பே சொன்னதைப்போல டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். இதில் ஆட் சென்ஸை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.


https://www.google.com/adsense?hl=en_US

இந்த இடத்துக்கு வந்து லாகின் ஆகி பாத்தீங்கன்னா இப்படி கொடுப்பாங்க,




ஒரு நாளில் நம்ம இம்ப்ரஷன் அதிகம் ஆயிருச்சு. டாலர் கணக்கும் ஆரம்பிச்சுருச்சு. ரொம்ப சந்தோஷம்.



இதிலையும் இரண்டு விஷயம் இருக்கு இரண்டு விதமா நமக்கு பணம் கிடைக்கும் முதல் முறை நாம் போட்டுறுக்குற ஆடைக் கிளிக் பண்ணி யாராவது உபயோகிச்சாங்கன்னா காசு கிடைக்கும் இன்னொன்னு நம்ம வலைப்பூவிற்கு யாரும் வந்தாலும் அந்த கவுண்ட் படியும் காசு கிடைக்கும் அதை அவங்க இம்ப்ரஷன்னு சொல்றாங்க இன்னிக்கு காலையிலேர்ந்து 19 இம்ப்ரஷன் கிடைச்சிருக்கு எனக்கு. இது ஆயிரமா ஆனா டாலர் கிடைக்க ஆரம்பிக்கும் 50$ கிடைத்தால் பணத்தை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாவே திரும்பவும் பழைய மாதிரி பதிய ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சேன் பின்னாடி வேண்டாம்னு உட்டுட்டேன் அந்த ஐடியாவை. நமக்குத்தான் பிரச்சனை தமிழ் வலையில் குஷ்பு, சுகாசினி, ராமதாஸ், திருமா, ரஜினி, முசலமான் பத்தி எழுதினா சீக்கிரமே 50$ கிடைச்சிரும். :-)

டவுட் இருந்தால் கேட்கலாம். என்னால் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்.

mohandoss.i @ gmail.com
நான் கூறிய விஷயங்களில் தவறிருந்தாலும் கூறினால் திருத்திக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கறது தான் நம்ம கொள்கை அதான் இவ்வளவு.

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In கவிதைகள் சுய சொறிதல்

நாங்கிழிச்ச கவிஜைகள்

நானெல்லாம் கவிதை எழுதினா பிரளயமே வரும்.(நாலே நாலு வார்த்தையெழுதி பெரிய பிரச்சனைகள் எல்லாம் கிளப்பியிருக்கிறேன்.) இல்லைன்னா பிரளயம் வந்தாத்தான் கவிதையே எழுதுறது வழக்கம். இப்ப ஏன் எழுதினேன்னா ஏதோ கவிதைப்போட்டின்னு சொல்லச்சொல்லோ, காசு வேற கொடுக்குறதா சொல்லச்சொல்லோ, நான் என் பின்நவீனத்துவ மூளையை தட்டிவிட்டு எழுதிக்கிழித்த கவிதைகள் இவை.

என் கனவுகள்
------------

கண்கள் முழுவதும் கனவுகள்,
வண்ணங்களாய் இன்றி
நடுங்கும் நினைவுகளாய்

சிலசமயம்
காற்றின் நெருக்கமாய்
இரவின் அடர்த்தியாய்
அன்பின் உணர்ச்சியாய்

பலசமயம்
கானலின் நீராய்
இரவின் நிழலாய்
தூரத்து வெய்யலாய்

கனவுகள்
சுமக்கும் எல்லையற்ற கணங்கள்
சுகங்கள்.
தொலைந்துபோன சுவடைப் போல
நிகரில்லா வானத்தைப்போல

கனவுகள்
மௌனக்கதவில்
முன்னறிவிப்பில்லா அறிவிப்புகள்

தன்னந்தனியாய்,
எந்தக் கணக்கானாலும் எத்தனை எதிர்பார்ப்புகள்
யௌனவத்தின் அழகென்னும்
புதைகுழியாய் கனவுகள்

பச்சைமரத்தின்
ஆழமாய் விமர்சனத்தின் கால்களை
அடக்கிவிடும் நினைவுகளை
கண்டுபிடிக்கக் கனவுகள்

பார்வையினின்றும்
வார்த்தைகளினின்றும்
உணர்ச்சிகளிலினின்றும்
மாறுபடும்
வாசிக்கப்படாத
என் கனவுகள்.
-------------------------------

விபச்சாரி
--------

வானவெளியின் நீலநிறத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
படுக்கையறையின்
பாதி ஒளியில்
வெற்றுடல்களின் வெம்மைப் பரிமாற்றம்

மூங்கில் காட்டின்
சடசடக்கும் சப்தத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
சப்த நிசப்தத்தின்
சங்கட ஓசைகள்

ஆர்ப்பரிக்கும் அலைகடலின்
வெண்நுரையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
தேடலில் சிக்கிய
மயிறிழைகள்

அவசரகதி வாகனம்
உரசிச் செல்லுகையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
கீறிச்சென்ற
நகத்தின் பிம்பங்கள்

இன்னும் இன்னும்
நினைவில் வந்தன
நேற்றைய இரவின்
நிழற்படமாய் பல
உரிமையாய்
வரமறுக்கிறது
அவள் முகம் !!!!
------------------------------

புன்னகைகள்
-----------

மனமுடைந்த நிலையில்
நினைவுகள் சொல்ல மறுக்கும்
நாம் காதலில் சுகித்த கணங்களை
சீறிவரும் என் கோபக்கணைகள்
சிதறிப்போகும் உன் புன்னகையால்

தொடுதலுக்காக
காத்திருந்த தருணத்தில்
ஏதேதோ காரணங்களுக்காக
என் மறுத்தலித்தலின்
அத்துனை ரணங்களையும்
தாங்கிக் கொள்ளும் விழுதுகளாய்
உன் புன்னகைகள்

அடுத்த வீட்டுக்காரனின்
வீரியத்தில் என் இயலாமையைக்
காணும் ஆத்திரத்தில்
சிதறும் மனப்பக்கங்களை
சேகரிக்கும்
உன் புன்னகைகள்.

உன் புன்னகைகள்
நிகழ்த்தும்
மாற்றங்களறிந்தும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயே தொலைந்துபோன
என் புன்னகைகளை
-------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா விமர்சனம்

Million Dollar Baby - Clint Eastwood



மில்லியன் டாலர் பேபி, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின்(Clint Eastwood) படங்கள் முன்பே பார்த்திருந்ததால், இந்தப்படம் வெளியானதுமே பார்க்கவேண்டும் என்ற என் ஆர்வத்தை கிளப்பிய படம். ஒன்றிரண்டு அல்ல நான்கு ஆஸ்கர்களை வென்ற படம், அதுவும் ஏவியேட்டர், ரே, சைட்வேஸ் போன்ற மிகச்சிறப்பான படங்கள் போட்டியிட்ட பொழுதும் வெற்றி பெற்றதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் சிறந்த படம், சிறந்த இயக்குநர்(Clint Eastwood), சிறந்த நடிகை(Hillary Swank), சிறந்த துணைநடிகர்(Morgan Freeman) என மிகமுக்கியமான நான்கு ஆஸ்கார்கள்.

சிலரிடம் எனக்கு சிலவிஷயங்கள் பிடிக்கும் சுராவிடமும், ராமகிருஷ்ணனிடமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்கள் கதைசொல்லும் பாங்கு, அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கதைசொல்லியை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள் அதைப்போல இந்தப்படமும் ஒரு அற்புதமான கதைசொல்லியை தன்னகத்தே கொண்டது.

தன்னுடைய பெண்ணை இழந்த(பிரிந்த), லாஸ் ஏஞ்சல்ஸில் பாக்ஸிங் டிரெய்னிங் கொடுக்கும் ஒருவர், அந்த நபரால் பயிற்சியளிக்கப்பட்டு பல வெற்றிகளைப்பெற்று கடைசியில் ஒரு போட்டியில் ஒரு கண்ணை இழந்த அவருடைய மானேஜர், ஹோட்டலில் வேலைசெய்யும், வாழ்க்கையில் தன்னுடைய இடத்தை நிரூபிக்க நினைக்கும் 32 வயதான ஒரு பெண். இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மில்லியன்டாலர் பேபி, படம் ஹாலிவுட்டிற்கே உரிய எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாதது.

பிராங்கி டன்(Frankie Dunn - Clint Eastwood)), ஸால் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு குறுகலான சந்தில் இருக்கும் ஜிம்மிற்கு சொந்தக்காரர், யீட்ஸின்(William Butler Yeats)கவிதைகளைப்படிப்பவர், கேலிக்(Gaelic) எனப்படும் ஒரு அழிந்து கொண்டிருக்கும் மூன்று மொழிகளைப்பற்றி சிந்திப்பவர், தினமும் சர்ச்சிற்கு செல்பவர் குறிப்பாக அங்கிருக்கும் இளவயது சாமியாரிடம் தேவையற்ற சர்ச்சகைகளை செய்வதற்காக. அதுமட்டுமில்லாமல் ஒரு அற்புதமான பாக்ஸிங் பயிற்சியாளர். ஆனால் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற காமன்சென்ஸ் என்கிற, அவருடைய நெர்வஸ்னஸ் அவரை முழுமையான பயிற்சியாளராக செயலாற்றவிடமால் செய்திருக்கும்.



எட்டி டியூப்ரிஸ்(Eddie Dupris - Morgan Freeman), பிராங்கியின் ஜிம்மில் வேலைசெய்து வரும் முன்னால் பாக்ஸர். ஒரு காலத்தில் பிராங்கிதான் எட்டியின் பயிற்சியாளர். கடைசி போட்டியில் ஒரு கண்ணையிழந்து பிராங்கியிடம் வேலைசெய்து வருவார். பிராங்கிக்கும் எட்டிக்கும் இடையில் நடக்கும் சின்னச்சின்ன நகைச்சுவை நிகழ்ச்சிகள் படத்தில் மிக அற்புதமாக வந்திருக்கும். அங்கு இளம் வீரர்களுக்கு பயற்சியளித்து வரும் எட்டி, பிராங்கியின் பெண்ணிற்கு அவள் தகப்பனின் உண்மையான அன்பைக்காட்ட சொல்வதாக, படத்தின் கதைசொல்லியாக இருந்திருப்பார் எட்டி, (மார்கன் பிரீமனின் குரல்வளம் தத்ரூபமாகயிருக்கும்.)

மேகி பிட்ஸ்ஜெரால்ட்(Maggi Fitzjerald - Hillary Swank), 32 வயதான வாழ்க்கையில் எதையாவது சாதிக்க துடிக்கும் பெண்ணாக, ஹில்லாரி ஸ்வாங்க் முதலில் தனக்கு பாக்ஸிங் பயிற்சியளிக்க பிராங்கியிடம் கேட்பதில் தொடங்கும் படத்தில், பிராங்கி, எட்டி, மேகி மூவர் மட்டுமே படத்தின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருப்பார்கள். இந்த மூவரைச் சுற்றி சூழழும் கதையில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி. தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரு அற்புதமான படத்தை இயக்கியிருப்பார், ஒரு பாக்ஸிங் சம்மந்தப்பட்ட படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளில் கட்டுப்படாமல் புகுந்துவிளையாடியிருப்பார் மனுஷன்.

முதன் முதலில் மேகி, பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்கும் பொழுது இந்த வயதிற்கு மேல் மேகிக்கு பயிற்சியளித்து அவளை அந்தவிளையாட்டில் தலைசிறந்த வீராங்கனையாக மாற்றமுடியாது என நினைக்கும் பிராங்கி அதை அவளிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார் ஆனால் பின்னர் அவளின் தொடர்ச்சியான வற்புறுத்துதாலும், தன் நண்பர் எட்டியின் வேண்டுகோளுக்காகவும் பயிற்சியளிக்கத்தொடங்கும் பிராங்கிக்கு, மேகியின் உத்வேகமும், மனப்பான்மையும் அவளின் இடைவிடாத பயிற்சியும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பின்னர் பிராங்கியின் பாக்ஸிங் ஆட்டத்தைப்பற்றிய அழகான அணுகுமுறையால் அவள் தொடர்ச்சியாக பரிசுகளை வென்றுகொண்டே இருப்பாள்.



கடைசியில் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, பிராங்கி, லாஸ்வேகாஸில் நடைபெறும் ஒரு போட்டியில் பங்கேற்க மேகியுடன் செல்வார். எதிராளியின் தவறாக ஆட்டத்தால் பயங்கரமாக தாக்கப்பட்டு, கழுத்திற்கு கீழ் எதுவும் வேலைசெய்யாமல் போகும் அளவிற்கு பாதிக்கப்படுவார். பின்னர் மருத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாது என்ற நிலைக்கு வந்துவிடும். இடையில் மேகியின் குடும்பத்தைப்பற்றியும் வரும், காசிற்காக அலையும் குடும்பமாக, அவளின் முடியாத நிலையில் கூட அவள் சொத்தை கைப்பற்ற நினைப்பவர்களாக அவளஇடம் கையெழுத்து வாங்க நினைக்கும் சில காட்சிகள். இது போன்ற காரணங்களால் மேகி, பிராங்கியிடம் தன்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி வற்புறுத்துவார். ஆனால் முதலில் முடியாதென மறுத்துவிடும் பிராங்கி, மேகி தன் நாக்கை தானே கடித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் இறுக்கம் தாங்க முடியாமல் கடைசியில் அவளை கருணைக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து மட்டுமல்ல மொத்தமாக மறைந்துவிடுவதாக முடியும் இந்தப்படம்.

இயக்குநராக ஈஸ்ட்வுட், தனக்கே உரிய அவருடைய உலகத்தின் சாயல்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார், வெறித்தனமான பழிவாங்கத்துடிக்கும் கதாப்பாத்திரங்களையே தன்படங்களில் பயன்படுத்தும் ஈஸ்ட்வுட் தன் படங்களில் இதிலிருந்து பார்ப்பவர்களை விலகிச்செல்ல சில உத்திகளையும் பெரும்பாலும் மிக அழகாக பயன்படுத்துவார். இந்தப்படத்தில் பாக்ஸிங் பற்றிய அவருடைய அழகான விஷயஞானத்தால் அதை மறைத்திருப்பார். மற்ற அமேரிக்க இயக்குநர்களிடமிருந்து வேறுபடும் ஈஸ்ட்வுட் தன்படங்களில் காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி தன் படத்தை வோட்டச்செய்யும் உத்தியை பயன்படுத்தவேமாட்டார். இந்தப்படத்திலும் மேகிக்கும், பிராங்கிக்கும் இருக்கும் அந்த அற்புதமான உறவில், செக்ஸ் என்ற ஒரு விஷயத்தைப் புகுத்தும் காட்சியமைப்புக்களோ சம்பவங்களோ இருக்காது.

படத்தில் யீட்ஸின் கவிதைவிரும்பியாக வரும் பிராங்கியின் மூலமாக தன் படக்கதையை சில கவிதைகளை முன்வைத்து சொல்லியிருப்பார் கிளின்ட் ஈஸ்ட்வுட். கடைசிக்காட்சிகளில் பிராங்கி, மேகிக்கு படித்துக்காட்டும் பாடல்களில் அவளைப்பற்றிய தன்னுடைய அனுமானத்தை விளக்கியிருப்பார். முதலில் சின்ன வயது யீட்ஸின் கவிதைவரிகள் ("The Lake Isle of Innisfree")சொல்வது, பின்னர் வயதான யீட்ஸின் கவிதைவரிகள்(From "The Apparitions")சொல்வது என தன்னுடைய படம் இயக்கும் திறமையை மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

"When a man grows old his joy grows more deep day after day,
His empty heart is full at length,
But he has need of all that strength
Because of the increasing Night
That opens her mystery and fright."

படத்தின் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகயிருக்கும் குறிப்பாக, முதன்முதலில் மேகிக்கு பயிற்சியளிக்க பிராங்கி ஒப்புக்கொள்ளும் காட்சி, பின்னர் மேகி உடல்நலமில்லாமல் இருக்கும் பொழுது அவருடைய முகத்தில் தெரியும் புன்னகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ஹில்லாரி ஸ்வாங்கைப்பற்றியும் நிச்சயமாக சொல்லவேண்டும், அவர் மேகியாக வாழ்ந்திருப்பார், ஆரம்பத்தில் பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்பதிலாகட்டும், பின்னர் அவர் அனுமதியில்லாமலே அவர் ஜிம்மில் பயிற்சியெடுப்பதிலாகட்டும், ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார். குறிப்பாக கடைசிக்காட்சிகளில் வெறும் முகபாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட்டுக்காட்டியிருப்பார் ஹில்லாரி ஸ்வாங்க். அதைப்போலவே மார்கன் ப்ரீமனும் படத்தின் தொடர்சிக்கும் அழகாக தன் நடிப்பால் உதவியிருப்பார். ஆகமொத்தத்தில் ஒரு மிகஅற்புதமான படம் பார்த்த திருப்தி ஏற்படுத்திய படங்களில் மில்லியன் டாலர் பேபியும் ஒன்று.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

Tom Hanks & Philadelphia



நடிப்புலகில் நான் பார்த்து வியக்கும் ஒரு மனிதர் டாம் ஹேங்ஸ், இன்று இவர் அமேரிக்காவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர், இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் சேர்த்து ஐந்து முறை விருதுக்கு பரிசீளிக்கப்பட்டவர். ஐந்து முறை கோல்டன் குலோப் விருதுகள், சிறந்த தயாரிப்பாளருக்கான எம்மி விருதுகள் பெற்றவர். நடிப்புத்திறமையைப் போலவே இவருடைய கதையெழுதும் மற்றும் இயக்கும் திறனும் சிறப்பானதே.

தன் திரைத்துறை வாழ்க்கையை 1978ல் தொடங்கியவர், இன்று வரை வெற்றியுடன் தொடர்ந்து வருகிறார். ஆனால் அனைத்து நடிகர்களையும் போலவே இவருடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்துனை சுலபமாக அமைந்துவிடவில்லை. ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவர். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வெளிக்காட்டி ஹாலிவுட் திரைப்படங்களில் கொஞ்சம் டம்மியான ரோல்களில் நடிக்கத்தொடங்கினார்

இப்படியாக சின்னச்சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த 1988ல் டாமிற்கு கிடைத்தது, பஞ்ச்லைன்(Punch Line) என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இது இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று கூட கூறலாம். தன்னுடைய அபாரமான நடிப்புத்திறமையால், நகைச்சுவை உணர்வால், இந்தப்படத்தில் டாம்மின் நடிப்பு பாராட்டைப்பெற்றது. அதே வருடத்தில் வெளியான பிக்(Big), தன்னுடைய இளவயதில் 35 வயதுடைய ஒருவராக நடித்தது டாமின் வாழ்க்கையில் மேலும் ஒரு புதிய அத்யாயத்தை தொடங்கிவைத்தது. அந்தப்படத்திற்காக டாம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லையென்றாலும் பலராலும் டாமின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அதற்கு பிறகு சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், டாமின் நடிப்பு தொடர்ச்சியாக பாராட்டும்படியே இருந்துவந்தது, 1993ல் வெளிவந்த ஸ்லீப்பிங் இன் சியாட்டிள்(Sleeping in Seattle) படத்திலும் டாமின் மெலிதான நகைச்சுவை கலந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், 1993ல் வெளிவந்த பிலடெல்பியா படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வக்கீலாக ஹோமோசெக்ஸவலாக நடித்த டாமிற்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் கிடைத்தது. அதேப்போல் டாமின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது, அறிவுத்திறன் குறைந்த(Low IQ) ஒருவனின் அதிர்ஷ்டத்தைப்பற்றி எடுக்கப்பட்ட பாரஸ்ட் கம்ப்(Forrest Gump) படம் அமேரிக்க வரலாற்றின் முப்பது ஆண்டுகளை சுருக்கமாக சொல்வது அதில் பாரஸ்ட் கம்ப் ஆக நடித்த டாமிற்கு(1994) அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதுகளை வாங்கி சாதனை படைத்த டாமின் வெற்றி இன்று வரை அப்படியே தொடர்கிறது.

இதன் பிறகு ஒரு படத்தை டாம் தயாரித்து இயக்கினார் அது That Thing You Do. இது பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் அவரின் நடிப்பில் பல உச்சங்களைக் காட்டிய ஒன்று. இதைப்போலவே அப்பல்லோ 13(Apollo 13), சேவிங்க பிரைவேட் ரைன், யூ ஹேவ் காட் மெய்ல், காஸ்ட் அவே, ரோட் டு ப்ரடிக்ஷன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் டாம் ஹேங்ஸ். தற்பொழுது கூட டான் புரௌன் எழுதிய த டாவின்ஸி கோட்(The Da vinci Code) படத்தில் நடித்துவருகிறார். அவருடைய நடிப்புத்திறன் பிரமாண்டமானது.

இத்தனையிலும் அவருடைய குடும்பவாழ்க்கையை அவர் சினிமா வாழ்க்கையில் கலக்கவில்லை. கொஞ்சம் மூடியான மனிதர் என்றும் பெயர்வாங்கியிருந்தார் டாம். ரீட்டா வில்ஸன்(Reeta Wilson) என்னும் நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார்(முதல் திருமணத்தில் ஸமந்தா லீவிஸ்(Samantha Lewis) உடன் இரண்டு குழந்தைகள்).



Awards win by Tom Hanks

Academy
1994 Best Actor Forrest Gump (1994) Win
1993 Best Actor Philadelphia (1993) Win

Berlin International Film Festival
1994 Silver Bear for Best Actor Philadelphia (1993) Win

Chicago Film Critics Association
2000 Best Actor Cast Away (2000) Win

Golden Globe
2000 Best Actor - Drama Cast Away (2000) Win
1994 Best Actor (Drama) Forrest Gump (1994) Win
1993 Best Actor Forrest Gump (1994) Win
1993 Best Actor (Drama) Philadelphia (1993) Win
1988 Best Actor (Musical or Comedy) Big (1988) Win

அவரின் ஆஸ்கார் விருதுவாங்கிய பிலடெல்பியா(Philadelphia) படத்தைப்பற்றி

எனக்கு இது போன்ற ஒரு சினிமா தமிழில் வராதா என்று ஏங்க வைத்தபடங்களில் ஒன்று பிலடெல்பியா(Philadelphia), 100% ரியலாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு 80% உண்மையான ஒரு கோர்ட் சீன் கொண்ட திரைப்படத்தை நான் தமிழில் வெகுநாளாக எதிர்பார்த்துவருகிறேன். என்னைக்கவர்ந்த ஆங்கில கோர்ட் சார்ந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆண்ட்ரு பெக்கெட்(Andrew Beckett) என்ற ஹோமோசெக்சுவல் வக்கீலான டாம் ஹேங்சை வேலைக்கு எடுத்திருக்கும் அவருடைய நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை அறிந்து, அவரை வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் டாமிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லாமல் அவருடைய வேலைசெய்யும் ஆற்றலை குறைசொல்லி நிறுத்திவிடுவார்கள்.

இதனால் கோபமடைந்த ஆண்ட்ரு(Tom Hanks), தன் நிறுவனத்தின் மீது மான நஷ்டவழக்கு தொடுப்பார். அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காததால் பிரபலமான மற்றொரு வக்கீலின் துணையை நாடுவார் ஜோ மில்லர்(டென்ஸல் வாஷிங்டன்). முதலில் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய ஜோவின் மனதை மாற்றி பின்னர் அவர் எப்படி அந்த நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்துதான் வேலையை விட்டு நீக்கியது என்பதை நிரூபிக்கிறார் என்பது தான் கதை.

கொஞ்சம் தவறானாலும் அசிங்கமாகப் போய்விடக்கூடிய கதைதான் இது. ஆனாலும் இதில் துளிக்கூட ஆபாசத்தை பார்க்கமுடியாது. படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் டாமிற்கும் முடிவில் எய்ட்ஸின் பாதிப்பில் இருக்கும் டாமிற்கும் இடைப்பட்ட காலத்தில் படத்தின் மேக்கப்மேனின் திறமை தனியாக வெளிப்படுமென்றாலும், மேக்கப் மட்டுமில்லாமல் அந்த வித்தியாசத்தை டாம் வெளிப்படுத்தும் அழகே தனிதான். அவருக்கும் அவருடைய கே நண்பர் ஆண்டனியோ பண்டாரஸ்(இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பார்) இடையே இருக்கும் அந்த நட்பையும் அத்தனை அந்தரங்கமாக காட்டியிருக்க மாட்டார்களென்றாலும் சில அற்புதமான காட்சியமைப்பில் விவரம் தெரியும்.

தன் நிலைமையில் வாதாட நிச்சயமாக முடியாது என்ற காரணத்தால், ஜோ மில்லரை சந்தித்து தனக்காக வாதாடுமாறு டாம் கேட்பதிலிருந்து படமும் வேகமெடுக்கும். அவருக்கு இருக்கும் ஹோமோசெக்ஸ்வல்களைப் பற்றிய அபிப்ராயம், எய்ட்ஸ் நோயாளிகளை தொடலாமா கூடாதா, அவர்கள் உபயோகித்த விஷயங்களை தொடலாமா என்பதிலிருந்து டாமைப்பார்த்தாலே அருவருப்பாக உணரும் அவருடைய நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார் டென்ஸல் வாஷிங்டன்.

டாம் ஹேங்ஸ் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரமாதமாக நடித்திருப்பார், அவர் சிறிது சிறிதாக எய்ட்ஸால் இறந்துகொண்டிருக்கும் நிலைகளை படத்தின் இயக்குநர் அழகான காட்சியமைப்பால் காட்டியிருப்பார். குறிப்பாக கோர்ட் காட்சிகளில் டாம் கஷ்டப்படுவதையும் பின்னர் சூழ்நிலையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுவதிலும் மிக அற்புதமாக நடித்திருப்பார். அதேப்போல் டாம் டென்ஸலின் குடும்பத்துடன் பழகும் பொழுது இருக்கும் சூழ்நிலையை இயக்குநரும் டாமும் மிக நேர்த்தியாக உருவாக்கி செய்திருப்பார்கள்.

படத்தின் இயக்குநர் ஜோநாத்தன் டெம்மி, கதை ரோன் நிஸ்வாநிர்.

Awards & Nominations for Philadelphia

Academy - 1993
Best Actor Tom Hanks Win
Best Makeup Alan D'Angerio, Carl Fullerton Nominated
Best Original Screenplay Ron Nyswaner Nominated
Best Song Bruce Springsteen, Neil Young Nominated

Berlin International Film Festival - 1994
Silver Bear for Best Actor Tom Hanks Win

Golden Globe - 1993
Best Actor (Drama) Tom Hanks Win
Best Original Song Bruce Springsteen Win

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

சர்க்கஸ்காரி

சர்க்கஸிற்கும் எனக்குமான தொடர்பு அதிகம் கிடையாது, என் வாழ்நாளில் நான்கைந்து முறைதான் பார்த்திருப்பேன். ஆனால் ஒவ்வொறுமுறையும் சர்க்கஸ் பார்த்துவிட்டு வந்ததும் அது ஏற்படுத்தும் தாக்கம் மாறாதது.

சர்க்கஸ் பார்த்துவிட்ட பிறகு வரும் எண்ணங்களும் ஒருமாதிரியாகவே இருந்துவருகிறது பலஆண்டுகளாய். ஒவ்வொறுமுறையும் பார்க்கும் பொழுதும் ஏற்படும் பிரமிப்பு, அந்த சர்க்கஸ் வீரர்களுடன் பழக வேண்டும் என்ற துடிப்பு, அவர்கள் வெளியில் காண்பிக்கும் முகத்திற்கு பின்னால் இருக்கும் சோகத்தை கண்டிறிய நினைக்கும் எண்ணம், பின்னர் சர்க்கஸ்காரிகளைப் பற்றி கிளம்பும் விவாதம்.



இந்தமுறையும் அத்தனையும் நிகழ்ந்தது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டதிலிருந்து உடன் தங்கியிருக்கும் நண்பர்களை பார்க்கலாம் என நச்சரிக்கத்தொடங்கினேன். மறுக்கமுடியாத அவர்களும் என்னுடன் ஒரு வாரஇறுதியை சர்க்கஸில் கழிக்க ஒப்புக்கொண்டனர். மென்பொருளiயில் தந்த பணம், முதல் முறையாக முதல் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதியைத்தந்திருந்தது. மிகப்பெரிய சர்க்கஸ் என்றில்லாமல் கொஞ்சம் சிறியதுதான்.



எப்பொழுதையும் போல என் உணர்வுகளை அத்துனை வெளிப்படையாக காட்ட முடியாத ஒரு சூழ்நிலை, முன்னைப்போலில்லாமல் நான் இப்பொழுது ஒரு மென்பொருளாளன். விகல்பமில்லாமல் சிரித்த பழையகாலங்கள் நினைவில் வந்தாலும் சிரிப்புவரவில்லை, அத்துனை எளிதாக. ஆனால் அவர்களில் உடலசைவில், பயிற்சிகளில், வித்தியாசமான திறமைகளின் மீது எனக்கிருந்த பிரமிப்பு மட்டும் அப்படியேயிருந்தது. விலங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு சட்டம் இந்தியாவில் நிலுவையில் உள்ளதால் விலங்குகள் அவ்வளவாக இல்லை.

முன்பொறுமுறை எங்கள் வீட்டின் பக்கத்திலிருந்து ஒரு இடத்தில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட அந்த மனிதர்கள் டீ, காப்பி குடிக்க வரும் வேளைகளில் அவர்களிடம் பேச்சுவார்த்தை கொடுத்திருக்கிறேன். அவர்களின் சர்க்கஸ் திறமைகளைப் போலில்லாமல் பேச்சு திறமை அவ்வளவு நன்றாக இருக்காது. சில வாழ்க்கையில் நொந்துபோன ஜோடிகளைக் கூட நான் அந்த இடத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களின் டீ,காப்பிக்கு காசு கொடுத்து பழகிக்கொள்ளும் என் தந்திரம் அவர்களிடம் செல்லுபடியாகியிருந்தாலும். அதற்காக பின்காலங்களில் வருந்தியிருக்கிறேன்.

அவர்களுக்கே உரிய பேச்சு வழக்கில் அவர்கள் சொல்லும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் காரணங்களால் இந்த முறையும் நான் அவர்களுடன் பேச்சு கொடுக்க மனம் பிரியப்பட்டாலும் சூழ்நிலை ஒப்பவில்லை. என்னவோ சர்க்கஸ் பிடிக்காததைப்போலும் எனக்காகப் பார்ப்பதைப் போலவும் உட்கார்ந்திருந்த நண்பர்கள் மத்தியில் நான் இன்னும் கொஞ்சம் சர்க்கஸ் பற்றிய என் அனுபவங்களைப்பேசப் போக அவர்கள் இன்னும் தவறாக எண்ணுவார்களோ என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது.

நான் மட்டும் அவர்கள் செய்யும் ஐட்டங்களைப்பார்க்காமல் அவர்கள் கண்களை படிக்க நினைத்து முயன்றுகொண்டிருந்தேன். அந்தக் கண்களும் எனக்கு எப்பொழுதையும் போல் நிறையக் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தது. அவ்வளவுதான் முடிந்துவிட்டது நேராய் ஹோட்டலுக்கு வந்து சூப் ஆர்டர் செய்துவிட்டு நிமிரவும் ஆரம்பித்தது சர்க்கஸ்காரிகள் பற்றிய சர்ச்சை. வேறென்ன அவர்கள் கற்பைப்பற்றிய விவாதங்கள்தான். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்திருந்ததால், நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான் இனிமேல் வெள்ளைக்காரிங்க விளையாட்டுத்தான்னு சொல்லி ஆரம்பித்து அவர்கள் அறிந்த இதுபோன்ற சம்பவங்களை வரிசையாகச்சொல்ல எனக்கு ஆச்சர்யமே மிஞ்சியது.

அவர்கள் வேலை செய்யும் சூழ்நிலை கூட அதற்குக் காரணம், குறையாடைப்பெண்கள், குடித்துவிட்டு இரவில் ஆட்டம் போடுபவர்கள் இப்படிப்பட்டவர்கள் உடன் வேலை செய்வதால் அவர்களால் சர்க்கஸ்காரிகளின் கற்பைப்பற்றி விமரிசனம் சர்வசாதாரணமாய் செய்யமுடிந்தது. நானும் என்னால் முடிந்தவரை பெண்ணியக்கருத்துக்களை பேசப்பார்த்து, அவர்களின் முகபாவங்கள் மாறுவதைப்பார்த்து நிறுத்திவிட்டேன். உடன் இருப்பவர்கள் அனைவருமே சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தனக்கென்ற தனிமதிப்புடன். என் கருத்துக்களைச் சொல்லப்போய் சிலவற்றை விலையாகக்கொடுக்க விரும்பவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, நான் பார்த்த சிலதடவைகள் என்னுடன் சர்க்கஸ் பார்க்க வந்த அனைவருக்குமே இதேபோன்ற விமரிசனங்களையே வைத்தது வருத்தத்தையே அளித்தது. ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதைப்பற்றிய விமரிசனம் தேவையில்லாதது என்பது என் கருத்து.ஆனால் ஒவ்வொரு முறையைப்போலவும் இந்த முறையும் அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. பார்க்கலாம் இன்னொரு சர்க்கஸ் பார்க்கும் பொழுதாவது என்னுடைய இந்த நிலைப்பாடு மாறுகிறதா என.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல்

அசமஞ்சங்கள் மற்றும் அம்மாஞ்சிகள்

இந்த தங்கர், குஷ்பு, சுகாசினி, கற்பு, கொம்பு பிரச்சனைகளால் எத்தனை பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள், ஆச்சர்யமாகயிருக்கிறது.

தங்கருக்கு, தன் படப்பிடிப்பை நிறுத்திய பெண்ணை பொதுவில் திட்டி தீர்த்ததால், அவர் படம் ஜெயாடிவிக்கு விற்கப்பட்டு தீபாவளியன்று வெளியானதில், நடந்த பிரச்சனைகளால் திரையறங்குகளிலும் கொஞ்சம் நல்ல வசூலில்.

குஷ்பு, மனோரமா, ஸ்ரீப்பிரியா உள்ளிட்டவர்களுக்கு தங்கர் விவகாரத்தில் தாங்கள் பணத்திற்காக நடிக்கவில்லை என்று தம்பட்டமடிக்கவும், தங்களை பொதுவில் திட்டினால் இப்படித்தான் நடக்கும் எனக்காட்டவும்.

இந்தியா டுடேவுக்கு, குஷ்புவை இந்த செக்ஸ் பற்றிய சர்வேவிற்கு பதிலளிக்க அழைத்ததால் நிறைய பிரதிகள் முன்பெப்போதுமில்லா அளவிற்கு விற்றுத்தீர்ந்தது. இன்னும் பிரச்சனையை வளர்த்தால் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம்.

பதிலளித்த குஷ்பு நினைத்திருக்கலாம், தங்கர் பிரச்சனைக்கு பிறகு பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என்று, இது தற்பொழுது பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் அளவிற்கு வளரும் என்பது வேண்டுமானால் அடிஷினல் ப்ளஸ். அடுத்த ஆண்டு அதிமுகவின் ஆயிரம்விளக்கு டிக்கெட் கிடைத்தால் ப்ளஸ்ஸோ ப்ளஸ்.

திருமா, ராமதாஸ் போன்றவர்களுக்கு, ஒரு வழியாக தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்க்குலப்பெண்களின் கற்பையும் காத்தமாதிரியும் ஆச்சு, அவங்க பேரு பத்திரிக்கையில் அவுட் ஆப் போகஸ் ஆகாம தடுத்தமாதிரியும் ஆச்சு.

பெண்ணியவாதிகளுக்கு, ஒரு வழியா ரொம்பநாளா கிடப்பில் இருந்த தங்கள் நீண்டகால கனவுகளை, எண்ணங்களாக மாற்றி பேப்பர்களும் பேனாக்களும் செலவுசெய்து எழுதி தீர்த்தாவது மக்களின் மத்தியில் எடுத்துரைக்க முடிந்தது.

ஆணியவாதிகளுக்கு, இது எப்படி ஆகப்போச்சு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா அடிமைப்படுத்தி வைச்சிருந்த ஒரு இனம் இறக்கை கட்டி பறந்துவிடும் நிலையை எப்படி அடக்குவது ஒன்றிரண்டு இறக்கைகளை பிய்த்து எறியலாமான்னு நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இறக்கையை அடியோடு பிய்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சன்டிவி, ஜெயாடிவி போன்ற டிவிக்களுக்கு அதிகம் அலையாமல் அதேசமயம் தேடிவந்து விழும் பேட்டிக்களைப்போட்டு தாங்கள் சார்ந்த கட்சிகளின் நிலையை அடுத்த கட்சிக்கு எதிரான போராட்டமாக காட்ட முடிந்தது.

ஞாநி போன்ற சிந்தனை டாங்குகளுக்கு, சுஜாதா பாய்ஸ் படத்திற்கு வசனம் எழுத, தன் கோபக்கணைகளை தீம்தரிகிடவில் வைணவ சரணாகதி, இரண்டுமுறை இதய அறுவைச்சிகிச்சை, இன்னொருமுறை அட்டாக் வந்தால் என காத்திருந்து காரி உமிழ்ந்ததைப்போல பெண்ணியம் சம்மந்தமான தன் சிந்தனை சிகரங்களை காட்ட முடிந்தது. (உபயம் ஜெயஸ்ரீ)

சுகாசினி போன்ற பெண்ணிய சிந்தனை அருவிகளுக்கு, தமிழருக்கு கொம்பிருக்கிறதா, இல்லை தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான ஹாலிவுட் சார்ந்தவர்களுக்கும் மேற்கு நாகரீக மக்களுக்கு மட்டுமே கொம்பு முளைத்திருக்கிறதா என்ற ஆராய்ச்சி செய்ய முடிந்தது.

நம் போன்ற வலைபதிபவர்களுக்கு, தங்களின் பிரச்சனைசார்ந்த ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்துக்களை ஒரு பக்கமாகவோ, மற்றொருபக்கமாகவோ, ப்க்கமே இல்லமலோ வைத்து எழுதக்கற்றுக்கொள்ள உதவியது. எழுத்தின் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது.

என்னைப்பொறுத்தவரை சாதாரண மக்கள் யாருக்கும் இதனால் ஒரு லாபமும் கிடைக்கப்போவதில்லை, அதனை அறிந்ததன் மூலமாகவோ இல்லை தங்கள் சார்ந்திருக்கும் நிலைப்பாடு வெளிப்படுமோ அது அவமானமோ என நினைத்து முகம் முடியிருக்கிறார்களோ என்னவோ, திமுக, அதிமுக, விஜயகாந்த், பெரும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள் வாய் பேசாமல் அப்படியே இருத்தலிலும் அவர்களுக்கு நன்மையிறுக்கிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் மக்கள் மனதில் ஒரு கருத்தை திணிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக கிடையாது, அது தங்கர் சொன்ன பணத்திற்காக நடிப்பவர்கள் விபச்சாரிகள் என்ற கருத்தோ, இல்லை குஷ்புவின் சர்வே பற்றிய கருத்துக்களோ, இல்லை ஞானி போன்றவர்களின் காரி உமிழ்வதோ, சுகாசினியின் கொம்பு பற்றிய கண்டுபிடிப்போ எதுவாக இருந்தாலும் சரி.

இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னர் எனக்கிருந்த நடிகைகளைப்பற்றிய கருத்துக்களோ, தயாரிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களோ, சிந்தனை டாங்குகள், அருவிகள் பற்றிய கருத்துக்களோ, கற்பு, பெண்ணியம், ஆணியம், கொம்பு முழைத்தல், தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம் பற்றிய என் கருத்துக்களும் அப்படியே இருக்கின்றன. அந்த சமயத்தில் மக்களின் மத்தியில் இருக்கும் கியூரியாசிட்டியை பயன்படுத்தி மீடியாக்கள், அரசியல்வாதிகள் விளையாடும் பணவிளையாட்டு இது என்பதைத்தவிர வேறு ஒன்றும் நினைக்கமுடியவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் இந்த விஷயத்தில் அதிகமாக சிந்தித்தது, கழுதைகள் மற்றும் எருமைமாடுகள், போல் நாமும் அசமஞ்சங்களும் அம்மாஞ்சிகளும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதலாமான்னுதான். யாரும் வாங்கமாட்டாங்கன்னு அதையும் எழுதலை.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Science ஜல்லிஸ்

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 2

முன்பே சொன்னது போல கொஞ்சம் கிரப்டோகிராபியைப் பற்றி கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன் கொஞ்சம் விவரமாய்த்தான். இங்கே எனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை, என் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள நான் பயன்படுத்தவில்லை. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரிவிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். இனி கிரிப்டோகிராபி,

இப்படியாக நாலாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் கிரிப்டோகிராபி, கணிணி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தபிறகு, கொஞ்சம் வடிவம் மாறத்தொடங்கியிருந்தது. இதன் காரணமாக அதன் பயன்படுத்தப்டும் முறைகளும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் அடையத் தொடங்கின.

முதலில் மதிப்பு (Key Based) சார்ந்த கிரிப்டோகிராபி.

அதாவது நம்மிடம் இருக்கும் தகவலை, ஒரு மதிப்பைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்றவேண்டும், பிறகு தகவல் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்ததும், மீண்டும் அதே மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை, அந்தக் மதிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பெறப்பட்ட மற்றொரு மதிப்பையோ கொண்டு பாதுகாக்கப்பட்ட தகவலை மீண்டும் சாதாரண தகவலாக மாற்ற வேண்டும்.

இதில் இரண்டு வகை உண்டு, ஒன்று மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரம் (Secret Key Algorithm or Symmetric Algorithm), மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம் (Public Key Algorithm or ASymmetric Algorithm). முதலில் சொன்ன மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் நாம் தகவலை பாதுகாக்க பயன்படுத்திய மதிப்பு மறைக்கப்பட்டிருக்கும் அதாவது, அந்தக் மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை அந்தக் மதிப்பிலிருந்து உருவாக்கப்படும் மற்றொரு மதிப்பையோ பயன்படுத்தி தகவல் மறுபடியும் நேராக்கப்படும். இதனால் அந்த மதிப்பு பாதுகாப்பாக வைக்கப்படுவது அவசியம். இந்த வகையான தகவல் பாதுகாக்கும் முறைக்கு உதாரணம், தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் (DES - Data Encryption Standard) வகையான சூத்திரங்கள், இதில் மூன்றடுக்கு DES (Triple DES) எனவும் ஒரு வகை உண்டு, விளக்கமாக எழுதவேண்டாம் என்பதால் விடுகிறேன். 2000த்தில் AES என்றழைக்கப்படும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை DES சை விட வேகமாக செயல்படுபவை.

மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம், இதில் தகவலை பாதுகாக்க பயன்படுத்தப்படும் மதிப்புக்கும், பாதுகாக்கப்பட்ட தகவலிலிருந்து மீண்டும் நேரான தகவலாக மாற்ற பயன்படும் தகவலுக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது. அதனால் இந்த வகையான தகவல் பாதுகாப்பில், தகவலை பாதுகாக்க பயன்படும் மதிப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படும். ஆனால் பாதுகாகப்பட்ட தகவலை நேர்த்தகவலாக மாற்றக்கூடிய மதிப்புதான் மறைத்துவைக்கப்படும். இதைப்போன்ற காரணங்களால் தான் பொதுவான மதிப்பு சம்மந்தப்பட்ட சூத்திரங்கள் இணையத்துறையில் வெகுவாக பிரபலம். இதில் தான் வரும் RSA (Rivest, Shamir, Adelman - இந்த மூவரும் சேர்ந்து கண்டுபிடித்தது தான் இந்த சூத்திரம்)வகையான சூத்திரங்கள். இதைப்பற்றியும் விரிவாக எழுத விருப்பமில்லை.

தற்சமயங்களில் கிரிப்டோகிராபி என்பது தகவலை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மட்டுமல்லாமல். அந்த தகவல்களினுடைய நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும் பயன்படுகின்றன. ஒருவழி(One Way) முறை என்ற ஒன்று இதில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அதாவது நீங்கள் பேப்ரை, நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதை மீண்டும் பேப்பராக மாற்ற முடியுமா, அதைப்போலத்தான் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலின் மொத்த விஷயங்களையும் வைத்து ஒரு சிறியதாக ஒரு குறிப்பு(Message Digest) உறுவாக்குவது, எப்படியென்றால் நீங்கள் எப்பாடு பட்டாலும் இரண்டு வெவ்வேறான தகவல்களுக்கு ஒரு குறிப்பு வராது என்ற உத்திரவாதத்துடன். இந்த வகையான முறைக்கு எம்டி5, எம்டி4 போன்ற அல்காரிதங்கள் பயன்படுகின்றன.

இதைப்போலவே நீங்கள் தற்சமயத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், Digital Siganature என்று, இதுவும் புரிந்துகொள்ள சுலபமான ஒன்றே. இந்த டிஜிடல் சிக்நேட்சர் என்பதும் ஒரு வகையான மதிப்பே(Value), இதையும் உங்களுடைய உண்மையான தகவலிலிருந்தே தயாரிப்பார்கள், மதிப்பு சார்ந்த சூத்திரங்கள் பயன்படுத்தி. அதாவது இந்த டிஜிடல் சிக்நேட்சர் வைத்திருப்பவர் நினைத்தால், தன்னிடம் உள்ள தகவல் சரியானதுதானா இல்லை தகவல் பரிமாற்றத்தின் பொழுது இடைமறிக்கப்பட்டு மாற்றப்பட்டதா எனத் தெரிந்து கொள்ளலாம். டிஜிடல் சிக்நேட்சர்கள் பெரும்பாலும் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களையே பயன்படுத்துகின்றன. சிறு மாறுதல்களுடன் அதாவது நாம் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களில் பயன்படுத்தியைப்போலில்லாமல், தகவலை பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்ற அவர்கள் ரகசிய மதிப்பைப் பயன்படுத்துவார்கள். பாதுகாக்கப்பட்ட தகவல்களஇல் இருந்து நேர்ப்படுத்த பொதுவான மதிப்பைப் பயன்படுத்துவார்கள்.

அதாவது முதலில் மொத்த தகவல்களில் இருந்து ஒரு சிறு குறிப்பை(Message Digest) பெறுவது. பின்னர் அந்தக் குறிப்பை பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் ரகசிய மதிப்பைப்பயன்படுத்தி பாதுகாப்பான தகவலாக மாற்றவேண்டும். இந்தத் தகவலே டிஜிடல் சிக்நேட்சர். பின்னர் உபயோகிப்பாளரை தகவல் சென்றடைந்ததும், தன்னிடம் உள்ள பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தை பயன்படுத்தி, அவர் டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து சிறுகுறிப்பை(Message Digest) பெறுவார். பின்னர் அந்தக் குறிப்பைப் பயன்படுத்தி வந்த பாதுகாப்பான தகவலை நேர்த்தகவலாக மாற்றுவார். பின்னர் இரண்டையும் ஒப்பு நோக்கி வந்த தகவல் சரியானதுதானா என சரிபார்த்துக்கொள்வார். தற்சமயம் இந்த முறையை பயன்படுத்த DSA(Digital Signature Algorithm) என்ற சூத்திரம் புழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் Digital Certificate, டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து பெறுவது தான். அதாவது நாம் உபயோகிப்பாளருக்கு கொடுக்கும் பொதுவான மதிப்பை ஒரு தேர்ந்த நிறுவனத்திடம்(Certification Authority like Verisign, National Security Agency - America) இருந்து பெற்றுக்கொண்டு நாம் உபயோகப்படுத்துவதே டிஜிடல் சர்டிபிகேட், அதாவது நீங்கள் உங்கள் கடனாளர் அட்டையைப் ஒரு இணையத்தளத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் அந்த இணையத்தளத்தின் நம்பிக்கைத்தன்மையை இந்த டிஜிடல் சர்டிபிகேட்டை வைத்து மதிப்பிடலாம். அதாவது, மைக்ரோசாப்ட் இருக்கிறதென்றால் அவர்கள் தங்களின் இணையத்தளத்திற்கென்று ஒரு சர்டிபிகேட் அத்தாரிடியிடம், அனுமதி வாங்கியிருப்பார்கள் தாங்கள் இன்னாரென்றும் இன்னது செய்கிறோமென்றும் இதை வைத்துக்கொண்டும அந்த சர்டிபிகேட் அத்தாரிடி ஒரு குறிப்பிட்ட பொதுவான மதிப்பை இந்த நிறுவனத்தின் உபயோகரிப்பாளர்களிடம் கொடுக்கும் இதை வைத்துக்கொண்டு, அந்த உபயோகிப்பாளர் தான் இருப்பது மைக்ரோசாப்டின இணையத்தளத்தில் தானா, தன் தகவல் பரிமாற்றங்கள் அவர்களுடன்தான் நடக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்ற சர்டிபிகேஷன் அத்தாரிடிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் இருப்பார்கள், நம்பகத்தன்மையுடன். இந்த வகையான டிஜிடல் சர்டிபிகேட்களில் தற்சமயத்தில் புழக்கத்தில் இருப்பது, X.509, இதன் உட்பிரிவுகள்(Versions), மூன்றும்(X.509.3) ஒன்றும்(X.509.1).

இத்துடன் நான் கிரிப்டோகிராபி என்ற பெயரில் எழுதி வந்த இந்தக் கட்டுரையை வெற்றிகரமாக முடிக்கிறேன். நான் முழுமையாக விளக்கவில்லை முன்பே சொன்னதைப்போலவும் தலைப்பைப்போலவும் இது ஒரு ஜல்லியடிக்கும் முயற்சியே, என்னிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் வந்து ரோடு போட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

For Advanced Reading

Why Cryptography is Harder than it Looks
Security Pitfalls in Cryptography
Cryptography, Security, and the Future
The Code Book

Only for genius

Algorithms and Mechanisms:

Key Management

Digital Signature:

Authentication:

Sessions

Email:

Electronic commerce

Smart cards and crypto devices

Miscellaneous

Crypto Politics.

Thanks to my sister for helping me in this article. :-)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு 2ம் பாகம் - முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராகத்தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப்பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொருப்புக்களை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகதப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிறறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது, அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களஇலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத்தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணீ இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப்பற்றி பார்க்கலாம்(கி.பி. 985).

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts