In Science ஜல்லிஸ்

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன்னா, முதல்ல நான் இதைப் போல் சம்பாதிப்பதற்கு என்ன செய்யணும்னு தேடினேன், எனக்கு தமிழ் வலைப்பூக்களில் விவரம் எங்கிருக்கிறதுன்னு தெரியலை. அதான் நான் பட்ட கொஞ்சம் சிரமத்தை இனிமேல் வர்றவங்க படாமயிருக்குறதுக்காக ஒரு பதிவு. உஷா கூட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பினாத்தல் சுரேஷிடம் கேட்டிருந்தார்கள். பினாத்தலார் கவனிக்கலையோ இல்லை தனிமடலிட்டாரோ நான் அறியேன் பராபரமே. ஏதோ என்னால் முடிஞ்சது போட்டுட்டேன்.

முதல்ல ஒரு நம்பிக்கை வார்த்தை.

கூகுளிருக்க பயமேன், ஆமாங்க நான் கூகுளைப் பயன்படுத்தி வலைத்தளத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்கிறேன்.

முதல்ல கூகுள் கிட்ட நான் பார்த்த வரைக்கும் ஒரு பிரச்சனை தமிழ் வலைப்பூவைப்பயன்படுத்தி இந்த சேவையை முதலில் பெறமுடியாது.(அதனால ஒரு டிரிக் செய்யணும் இதுக்கு அதையும் சொல்றேன் பின்னாடி). அதனால் ஒன்றும் வருத்தப்படாதீங்க. ஒரு ஆங்கிலப்பதிவைத் தொடங்குங்க அதில ஒரே ஒரு பதிவை போட்டு வைச்சிருங்க. எடுத்துக்காட்டுக்கு நான் பயன்படுத்தின ஆங்கிலப்பதிவு ஜாவா பையன் ( எல்லாம் ஒரு விளம்பரம்தான்.)

பின்னாடி அந்த ஆங்கிலப்பதிவின் டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். அதில ஆட் சென்ஸ் அப்பிடிங்கிற அய்டத்தை செலக்ட் பண்ணுங்கோ. பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு பார்ம் வரும் அதில் உள்ள அய்டத்தையெல்லாம் பில்லப் பண்ணுங்கோ, கூகுள் பணம் கொடுக்கும்ங்கிறதால உண்மையான விவரம் கொடுத்தால் நலம். (நான் கம்பெனி அட்ரெஸ் கொடுத்துருக்கேன் போன் நம்பர் உட்பட.)

அப்புறம் சரியான விவரம் எல்லாம் கொடுத்து சப்மிட் பண்ணீங்கன்னா, அடுத்த ஸ்கீரினுல நீங்க எந்த மாதிரியான விளம்பரத்தை உங்க வலைத்தளத்தில் போடப்போறீங்கன்னு கேட்பாங்க, விவரமானவங்க அவங்க வலைத்தளத்தின் கலருக்கு ஏற்ற மாதிரி விளம்பரத்தை தேர்ந்தெடுக்கலாம். என்னை மாதிரி முட்டாளுங்க அவங்க கொடுக்குற டிபால்ட் விளம்பரத்தையே ஒத்துக்கிட்டு ஸேவ் அப்பிடின்னு கொடுக்கலாம். இது முடிஞ்சிருச்சுன்னா எப்பவும் போல திரும்ப பப்ளிஷ் பண்ண கேட்பாங்க பண்ணீருங்க. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு முதல் கட்டம்.

இனிமேல் இரண்டாம் கட்டம்.

அதாவது இனிமேல் நீங்க சொன்ன மெய்ல் அட்ரஸ்க்கு ஒரு மெயிலை கூகுள் அனுப்பும் எப்பிடின்னா இப்படி,

Hello Mohandoss Ilangovan,

Welcome to Google AdSense. In order to verify your email address and
submit your information for review, please click on the link below.

https://www.google.com/adsense/c?u=1461447&k=0x503

This link will take you directly to an email confirmation page. If it
does not, please copy and paste the full URL into your web browser's
address box and hit the "Enter" key on your keyboard. Once you confirm
your email, we'll review your application and email you after we check
your site for AdSense eligibility. If you're accepted, you'll then be
able to log in to your account at https://www.google.com/adsense, or
through the application or service from
which you originally registered. Please use the email address and
password you
submitted with your application.


இதில் சொல்லப்பட்டிருக்கும் உரலை கிளிக்கினால் மட்டும் போதும்(உங்களுடையதை மட்டும்; என்னுடையதை வேண்டாம் நான் உரலை மாற்றியிருக்கிறேன் இந்த உரல் போகாது) அது ஒரு பக்கத்தை திறக்கும் அதன் பின்னர் கூகுள் உங்கள் பக்கத்தைப் பற்றி விவரங்களை ஆராய்ந்து உங்கள் வலைப்பூவில் தங்கள் விளம்பரத்தை போடலாமா அப்பிடின்னு ஆராய்ச்சி செய்வாங்க. (தமிழ்ல பதிவிருந்தா மட்டும் தான் பிரச்சனை. நானெல்லாம் இரண்டு தடவை முயற்சி பண்ணேன் தமிழில், ரெண்டு தடவையும் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆகியிருச்சு ஆனா நம்ம ஆங்கில பதிவு ஓக்கே ஆயிருச்சு அதுமாதிரி.)

இரண்டு நாள்ல உங்களுக்கு திரும்பவும் ஒரு மெயில் வரும் அதாவது உங்களோட அப்ளிகேஷன் ஓக்கேஆயிருச்சா இல்லையான்னு பதில் அனுப்புவாங்க. ஆங்கிலம்னா அப்ரூவ் ஆயிரும் கவலைப்படாதீங்க.

அப்ரூவ் ஆச்சின்னா இப்படி ஒரு மெயில் வரும்.

Congratulations!

Your Google AdSense application has been approved. Your account is now
activated, and Google ads are being delivered to your pages.

You can log in to your AdSense account at any time, to make changes to
your ad layouts or to view your activity reports.

------
Make changes to your Google ads:

Log in to your account at https://www.google.com/adsense?hl=en_US, or
through the application or service from which you originally
registered. Select from the available color and layout options to
select an ad format that works best for your web pages.

-------------------------

இப்ப உங்களோட இரண்டாவது கட்டம் முடிஞ்சிருச்சு மூணாவது தான் முக்கியமான கட்டம் அதாவது உங்களோட தமிழ் பதிவில் வரும் வாசகர்களின் வருகைக்கும் சேர்த்து பணம் சம்பாதிப்பது பற்றி.

அதாவது நீங்க ஒரு ஆடை செலக்ட் செய்தீர்களே அது ஒரு ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் டெம்ப்ளேட்டில் உருவாக்கும் நீங்கள் அதை வைத்து இரண்டு விஷயங்கள் செய்யணும். முதல் வேலை,

div id="main" div id="main2"
script type="text/javascript"
google_ad_client="ca-pub-5614942101384756";
google_ad_width=468;
google_ad_height=60;
google_ad_format="468x60_as";
google_ad_type="text";
google_color_border="336699";
google_color_bg="FFFFFF";
google_color_link="0000FF";
google_color_url="008000";
google_color_text="000000";
/script
script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"
/script

இது தான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆட் ஸ்கிரிப்ட் (தயவு செய்து இதை காப்பி செய்யாதீர்கள் இல்லாவிட்டால் எனக்குத்தான் உங்கள் பணம் முழுக்க வரும். இதில இந்த நம்பர் தான் ca-pub-5614942101384756 முக்கியம் இதைவச்சுத்தான் உங்கக்கிட்டேர்ந்து வர்றாங்கன்னு கண்டுபிடிப்பாங்க, அதனா எப்ப காப்பி பண்ணி எத்தனை தடவை எங்கப்போட்டாலும் இந்த நம்பர் தப்பாகாம பார்த்துக்கோங்க. )

முதலில் இதை உங்கள் ஆங்கிலப்பதிவிலிருந்து எடுத்து, தமிழ் பதிவில் இடுங்கள். ஆங்கிலப்பதிவில் எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே.

அதாவது உங்கள் தமிழ் டெம்ப்ளேட்டின் இந்த இடத்திற்கு கீழே,

Begin #content
div id="content"
Begin #main
div id="main" div id="main2"

//here//

{ நான் < > இந்தக் குறிகள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நீக்கியிருக்கிறேன் நீங்கள் காப்பி செய்து போடும் பொழுது அதை அப்படியே போடுங்கள் அதாவது <> குறிகளை நீக்காமல். }

முதல் காரியம் முடிந்துவிட்டது. பின்னர் உங்கள் தமிழ் வலைப்பூவில் முன்பே சொன்னதைப்போல டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். இதில் ஆட் சென்ஸை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.


https://www.google.com/adsense?hl=en_US

இந்த இடத்துக்கு வந்து லாகின் ஆகி பாத்தீங்கன்னா இப்படி கொடுப்பாங்க,




ஒரு நாளில் நம்ம இம்ப்ரஷன் அதிகம் ஆயிருச்சு. டாலர் கணக்கும் ஆரம்பிச்சுருச்சு. ரொம்ப சந்தோஷம்.



இதிலையும் இரண்டு விஷயம் இருக்கு இரண்டு விதமா நமக்கு பணம் கிடைக்கும் முதல் முறை நாம் போட்டுறுக்குற ஆடைக் கிளிக் பண்ணி யாராவது உபயோகிச்சாங்கன்னா காசு கிடைக்கும் இன்னொன்னு நம்ம வலைப்பூவிற்கு யாரும் வந்தாலும் அந்த கவுண்ட் படியும் காசு கிடைக்கும் அதை அவங்க இம்ப்ரஷன்னு சொல்றாங்க இன்னிக்கு காலையிலேர்ந்து 19 இம்ப்ரஷன் கிடைச்சிருக்கு எனக்கு. இது ஆயிரமா ஆனா டாலர் கிடைக்க ஆரம்பிக்கும் 50$ கிடைத்தால் பணத்தை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாவே திரும்பவும் பழைய மாதிரி பதிய ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சேன் பின்னாடி வேண்டாம்னு உட்டுட்டேன் அந்த ஐடியாவை. நமக்குத்தான் பிரச்சனை தமிழ் வலையில் குஷ்பு, சுகாசினி, ராமதாஸ், திருமா, ரஜினி, முசலமான் பத்தி எழுதினா சீக்கிரமே 50$ கிடைச்சிரும். :-)

டவுட் இருந்தால் கேட்கலாம். என்னால் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்.

mohandoss.i @ gmail.com
நான் கூறிய விஷயங்களில் தவறிருந்தாலும் கூறினால் திருத்திக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கறது தான் நம்ம கொள்கை அதான் இவ்வளவு.

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In கவிதைகள் சுய சொறிதல்

நாங்கிழிச்ச கவிஜைகள்

நானெல்லாம் கவிதை எழுதினா பிரளயமே வரும்.(நாலே நாலு வார்த்தையெழுதி பெரிய பிரச்சனைகள் எல்லாம் கிளப்பியிருக்கிறேன்.) இல்லைன்னா பிரளயம் வந்தாத்தான் கவிதையே எழுதுறது வழக்கம். இப்ப ஏன் எழுதினேன்னா ஏதோ கவிதைப்போட்டின்னு சொல்லச்சொல்லோ, காசு வேற கொடுக்குறதா சொல்லச்சொல்லோ, நான் என் பின்நவீனத்துவ மூளையை தட்டிவிட்டு எழுதிக்கிழித்த கவிதைகள் இவை.

என் கனவுகள்
------------

கண்கள் முழுவதும் கனவுகள்,
வண்ணங்களாய் இன்றி
நடுங்கும் நினைவுகளாய்

சிலசமயம்
காற்றின் நெருக்கமாய்
இரவின் அடர்த்தியாய்
அன்பின் உணர்ச்சியாய்

பலசமயம்
கானலின் நீராய்
இரவின் நிழலாய்
தூரத்து வெய்யலாய்

கனவுகள்
சுமக்கும் எல்லையற்ற கணங்கள்
சுகங்கள்.
தொலைந்துபோன சுவடைப் போல
நிகரில்லா வானத்தைப்போல

கனவுகள்
மௌனக்கதவில்
முன்னறிவிப்பில்லா அறிவிப்புகள்

தன்னந்தனியாய்,
எந்தக் கணக்கானாலும் எத்தனை எதிர்பார்ப்புகள்
யௌனவத்தின் அழகென்னும்
புதைகுழியாய் கனவுகள்

பச்சைமரத்தின்
ஆழமாய் விமர்சனத்தின் கால்களை
அடக்கிவிடும் நினைவுகளை
கண்டுபிடிக்கக் கனவுகள்

பார்வையினின்றும்
வார்த்தைகளினின்றும்
உணர்ச்சிகளிலினின்றும்
மாறுபடும்
வாசிக்கப்படாத
என் கனவுகள்.
-------------------------------

விபச்சாரி
--------

வானவெளியின் நீலநிறத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
படுக்கையறையின்
பாதி ஒளியில்
வெற்றுடல்களின் வெம்மைப் பரிமாற்றம்

மூங்கில் காட்டின்
சடசடக்கும் சப்தத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
சப்த நிசப்தத்தின்
சங்கட ஓசைகள்

ஆர்ப்பரிக்கும் அலைகடலின்
வெண்நுரையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
தேடலில் சிக்கிய
மயிறிழைகள்

அவசரகதி வாகனம்
உரசிச் செல்லுகையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
கீறிச்சென்ற
நகத்தின் பிம்பங்கள்

இன்னும் இன்னும்
நினைவில் வந்தன
நேற்றைய இரவின்
நிழற்படமாய் பல
உரிமையாய்
வரமறுக்கிறது
அவள் முகம் !!!!
------------------------------

புன்னகைகள்
-----------

மனமுடைந்த நிலையில்
நினைவுகள் சொல்ல மறுக்கும்
நாம் காதலில் சுகித்த கணங்களை
சீறிவரும் என் கோபக்கணைகள்
சிதறிப்போகும் உன் புன்னகையால்

தொடுதலுக்காக
காத்திருந்த தருணத்தில்
ஏதேதோ காரணங்களுக்காக
என் மறுத்தலித்தலின்
அத்துனை ரணங்களையும்
தாங்கிக் கொள்ளும் விழுதுகளாய்
உன் புன்னகைகள்

அடுத்த வீட்டுக்காரனின்
வீரியத்தில் என் இயலாமையைக்
காணும் ஆத்திரத்தில்
சிதறும் மனப்பக்கங்களை
சேகரிக்கும்
உன் புன்னகைகள்.

உன் புன்னகைகள்
நிகழ்த்தும்
மாற்றங்களறிந்தும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயே தொலைந்துபோன
என் புன்னகைகளை
-------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா விமர்சனம்

Million Dollar Baby - Clint Eastwood



மில்லியன் டாலர் பேபி, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின்(Clint Eastwood) படங்கள் முன்பே பார்த்திருந்ததால், இந்தப்படம் வெளியானதுமே பார்க்கவேண்டும் என்ற என் ஆர்வத்தை கிளப்பிய படம். ஒன்றிரண்டு அல்ல நான்கு ஆஸ்கர்களை வென்ற படம், அதுவும் ஏவியேட்டர், ரே, சைட்வேஸ் போன்ற மிகச்சிறப்பான படங்கள் போட்டியிட்ட பொழுதும் வெற்றி பெற்றதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் சிறந்த படம், சிறந்த இயக்குநர்(Clint Eastwood), சிறந்த நடிகை(Hillary Swank), சிறந்த துணைநடிகர்(Morgan Freeman) என மிகமுக்கியமான நான்கு ஆஸ்கார்கள்.

சிலரிடம் எனக்கு சிலவிஷயங்கள் பிடிக்கும் சுராவிடமும், ராமகிருஷ்ணனிடமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்கள் கதைசொல்லும் பாங்கு, அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கதைசொல்லியை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள் அதைப்போல இந்தப்படமும் ஒரு அற்புதமான கதைசொல்லியை தன்னகத்தே கொண்டது.

தன்னுடைய பெண்ணை இழந்த(பிரிந்த), லாஸ் ஏஞ்சல்ஸில் பாக்ஸிங் டிரெய்னிங் கொடுக்கும் ஒருவர், அந்த நபரால் பயிற்சியளிக்கப்பட்டு பல வெற்றிகளைப்பெற்று கடைசியில் ஒரு போட்டியில் ஒரு கண்ணை இழந்த அவருடைய மானேஜர், ஹோட்டலில் வேலைசெய்யும், வாழ்க்கையில் தன்னுடைய இடத்தை நிரூபிக்க நினைக்கும் 32 வயதான ஒரு பெண். இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மில்லியன்டாலர் பேபி, படம் ஹாலிவுட்டிற்கே உரிய எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாதது.

பிராங்கி டன்(Frankie Dunn - Clint Eastwood)), ஸால் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு குறுகலான சந்தில் இருக்கும் ஜிம்மிற்கு சொந்தக்காரர், யீட்ஸின்(William Butler Yeats)கவிதைகளைப்படிப்பவர், கேலிக்(Gaelic) எனப்படும் ஒரு அழிந்து கொண்டிருக்கும் மூன்று மொழிகளைப்பற்றி சிந்திப்பவர், தினமும் சர்ச்சிற்கு செல்பவர் குறிப்பாக அங்கிருக்கும் இளவயது சாமியாரிடம் தேவையற்ற சர்ச்சகைகளை செய்வதற்காக. அதுமட்டுமில்லாமல் ஒரு அற்புதமான பாக்ஸிங் பயிற்சியாளர். ஆனால் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற காமன்சென்ஸ் என்கிற, அவருடைய நெர்வஸ்னஸ் அவரை முழுமையான பயிற்சியாளராக செயலாற்றவிடமால் செய்திருக்கும்.



எட்டி டியூப்ரிஸ்(Eddie Dupris - Morgan Freeman), பிராங்கியின் ஜிம்மில் வேலைசெய்து வரும் முன்னால் பாக்ஸர். ஒரு காலத்தில் பிராங்கிதான் எட்டியின் பயிற்சியாளர். கடைசி போட்டியில் ஒரு கண்ணையிழந்து பிராங்கியிடம் வேலைசெய்து வருவார். பிராங்கிக்கும் எட்டிக்கும் இடையில் நடக்கும் சின்னச்சின்ன நகைச்சுவை நிகழ்ச்சிகள் படத்தில் மிக அற்புதமாக வந்திருக்கும். அங்கு இளம் வீரர்களுக்கு பயற்சியளித்து வரும் எட்டி, பிராங்கியின் பெண்ணிற்கு அவள் தகப்பனின் உண்மையான அன்பைக்காட்ட சொல்வதாக, படத்தின் கதைசொல்லியாக இருந்திருப்பார் எட்டி, (மார்கன் பிரீமனின் குரல்வளம் தத்ரூபமாகயிருக்கும்.)

மேகி பிட்ஸ்ஜெரால்ட்(Maggi Fitzjerald - Hillary Swank), 32 வயதான வாழ்க்கையில் எதையாவது சாதிக்க துடிக்கும் பெண்ணாக, ஹில்லாரி ஸ்வாங்க் முதலில் தனக்கு பாக்ஸிங் பயிற்சியளிக்க பிராங்கியிடம் கேட்பதில் தொடங்கும் படத்தில், பிராங்கி, எட்டி, மேகி மூவர் மட்டுமே படத்தின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருப்பார்கள். இந்த மூவரைச் சுற்றி சூழழும் கதையில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி. தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரு அற்புதமான படத்தை இயக்கியிருப்பார், ஒரு பாக்ஸிங் சம்மந்தப்பட்ட படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளில் கட்டுப்படாமல் புகுந்துவிளையாடியிருப்பார் மனுஷன்.

முதன் முதலில் மேகி, பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்கும் பொழுது இந்த வயதிற்கு மேல் மேகிக்கு பயிற்சியளித்து அவளை அந்தவிளையாட்டில் தலைசிறந்த வீராங்கனையாக மாற்றமுடியாது என நினைக்கும் பிராங்கி அதை அவளிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார் ஆனால் பின்னர் அவளின் தொடர்ச்சியான வற்புறுத்துதாலும், தன் நண்பர் எட்டியின் வேண்டுகோளுக்காகவும் பயிற்சியளிக்கத்தொடங்கும் பிராங்கிக்கு, மேகியின் உத்வேகமும், மனப்பான்மையும் அவளின் இடைவிடாத பயிற்சியும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பின்னர் பிராங்கியின் பாக்ஸிங் ஆட்டத்தைப்பற்றிய அழகான அணுகுமுறையால் அவள் தொடர்ச்சியாக பரிசுகளை வென்றுகொண்டே இருப்பாள்.



கடைசியில் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, பிராங்கி, லாஸ்வேகாஸில் நடைபெறும் ஒரு போட்டியில் பங்கேற்க மேகியுடன் செல்வார். எதிராளியின் தவறாக ஆட்டத்தால் பயங்கரமாக தாக்கப்பட்டு, கழுத்திற்கு கீழ் எதுவும் வேலைசெய்யாமல் போகும் அளவிற்கு பாதிக்கப்படுவார். பின்னர் மருத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாது என்ற நிலைக்கு வந்துவிடும். இடையில் மேகியின் குடும்பத்தைப்பற்றியும் வரும், காசிற்காக அலையும் குடும்பமாக, அவளின் முடியாத நிலையில் கூட அவள் சொத்தை கைப்பற்ற நினைப்பவர்களாக அவளஇடம் கையெழுத்து வாங்க நினைக்கும் சில காட்சிகள். இது போன்ற காரணங்களால் மேகி, பிராங்கியிடம் தன்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி வற்புறுத்துவார். ஆனால் முதலில் முடியாதென மறுத்துவிடும் பிராங்கி, மேகி தன் நாக்கை தானே கடித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் இறுக்கம் தாங்க முடியாமல் கடைசியில் அவளை கருணைக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து மட்டுமல்ல மொத்தமாக மறைந்துவிடுவதாக முடியும் இந்தப்படம்.

இயக்குநராக ஈஸ்ட்வுட், தனக்கே உரிய அவருடைய உலகத்தின் சாயல்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார், வெறித்தனமான பழிவாங்கத்துடிக்கும் கதாப்பாத்திரங்களையே தன்படங்களில் பயன்படுத்தும் ஈஸ்ட்வுட் தன் படங்களில் இதிலிருந்து பார்ப்பவர்களை விலகிச்செல்ல சில உத்திகளையும் பெரும்பாலும் மிக அழகாக பயன்படுத்துவார். இந்தப்படத்தில் பாக்ஸிங் பற்றிய அவருடைய அழகான விஷயஞானத்தால் அதை மறைத்திருப்பார். மற்ற அமேரிக்க இயக்குநர்களிடமிருந்து வேறுபடும் ஈஸ்ட்வுட் தன்படங்களில் காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி தன் படத்தை வோட்டச்செய்யும் உத்தியை பயன்படுத்தவேமாட்டார். இந்தப்படத்திலும் மேகிக்கும், பிராங்கிக்கும் இருக்கும் அந்த அற்புதமான உறவில், செக்ஸ் என்ற ஒரு விஷயத்தைப் புகுத்தும் காட்சியமைப்புக்களோ சம்பவங்களோ இருக்காது.

படத்தில் யீட்ஸின் கவிதைவிரும்பியாக வரும் பிராங்கியின் மூலமாக தன் படக்கதையை சில கவிதைகளை முன்வைத்து சொல்லியிருப்பார் கிளின்ட் ஈஸ்ட்வுட். கடைசிக்காட்சிகளில் பிராங்கி, மேகிக்கு படித்துக்காட்டும் பாடல்களில் அவளைப்பற்றிய தன்னுடைய அனுமானத்தை விளக்கியிருப்பார். முதலில் சின்ன வயது யீட்ஸின் கவிதைவரிகள் ("The Lake Isle of Innisfree")சொல்வது, பின்னர் வயதான யீட்ஸின் கவிதைவரிகள்(From "The Apparitions")சொல்வது என தன்னுடைய படம் இயக்கும் திறமையை மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

"When a man grows old his joy grows more deep day after day,
His empty heart is full at length,
But he has need of all that strength
Because of the increasing Night
That opens her mystery and fright."

படத்தின் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகயிருக்கும் குறிப்பாக, முதன்முதலில் மேகிக்கு பயிற்சியளிக்க பிராங்கி ஒப்புக்கொள்ளும் காட்சி, பின்னர் மேகி உடல்நலமில்லாமல் இருக்கும் பொழுது அவருடைய முகத்தில் தெரியும் புன்னகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ஹில்லாரி ஸ்வாங்கைப்பற்றியும் நிச்சயமாக சொல்லவேண்டும், அவர் மேகியாக வாழ்ந்திருப்பார், ஆரம்பத்தில் பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்பதிலாகட்டும், பின்னர் அவர் அனுமதியில்லாமலே அவர் ஜிம்மில் பயிற்சியெடுப்பதிலாகட்டும், ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார். குறிப்பாக கடைசிக்காட்சிகளில் வெறும் முகபாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட்டுக்காட்டியிருப்பார் ஹில்லாரி ஸ்வாங்க். அதைப்போலவே மார்கன் ப்ரீமனும் படத்தின் தொடர்சிக்கும் அழகாக தன் நடிப்பால் உதவியிருப்பார். ஆகமொத்தத்தில் ஒரு மிகஅற்புதமான படம் பார்த்த திருப்தி ஏற்படுத்திய படங்களில் மில்லியன் டாலர் பேபியும் ஒன்று.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

Tom Hanks & Philadelphia



நடிப்புலகில் நான் பார்த்து வியக்கும் ஒரு மனிதர் டாம் ஹேங்ஸ், இன்று இவர் அமேரிக்காவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர், இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் சேர்த்து ஐந்து முறை விருதுக்கு பரிசீளிக்கப்பட்டவர். ஐந்து முறை கோல்டன் குலோப் விருதுகள், சிறந்த தயாரிப்பாளருக்கான எம்மி விருதுகள் பெற்றவர். நடிப்புத்திறமையைப் போலவே இவருடைய கதையெழுதும் மற்றும் இயக்கும் திறனும் சிறப்பானதே.

தன் திரைத்துறை வாழ்க்கையை 1978ல் தொடங்கியவர், இன்று வரை வெற்றியுடன் தொடர்ந்து வருகிறார். ஆனால் அனைத்து நடிகர்களையும் போலவே இவருடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்துனை சுலபமாக அமைந்துவிடவில்லை. ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவர். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வெளிக்காட்டி ஹாலிவுட் திரைப்படங்களில் கொஞ்சம் டம்மியான ரோல்களில் நடிக்கத்தொடங்கினார்

இப்படியாக சின்னச்சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த 1988ல் டாமிற்கு கிடைத்தது, பஞ்ச்லைன்(Punch Line) என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இது இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று கூட கூறலாம். தன்னுடைய அபாரமான நடிப்புத்திறமையால், நகைச்சுவை உணர்வால், இந்தப்படத்தில் டாம்மின் நடிப்பு பாராட்டைப்பெற்றது. அதே வருடத்தில் வெளியான பிக்(Big), தன்னுடைய இளவயதில் 35 வயதுடைய ஒருவராக நடித்தது டாமின் வாழ்க்கையில் மேலும் ஒரு புதிய அத்யாயத்தை தொடங்கிவைத்தது. அந்தப்படத்திற்காக டாம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லையென்றாலும் பலராலும் டாமின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அதற்கு பிறகு சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், டாமின் நடிப்பு தொடர்ச்சியாக பாராட்டும்படியே இருந்துவந்தது, 1993ல் வெளிவந்த ஸ்லீப்பிங் இன் சியாட்டிள்(Sleeping in Seattle) படத்திலும் டாமின் மெலிதான நகைச்சுவை கலந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், 1993ல் வெளிவந்த பிலடெல்பியா படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வக்கீலாக ஹோமோசெக்ஸவலாக நடித்த டாமிற்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் கிடைத்தது. அதேப்போல் டாமின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது, அறிவுத்திறன் குறைந்த(Low IQ) ஒருவனின் அதிர்ஷ்டத்தைப்பற்றி எடுக்கப்பட்ட பாரஸ்ட் கம்ப்(Forrest Gump) படம் அமேரிக்க வரலாற்றின் முப்பது ஆண்டுகளை சுருக்கமாக சொல்வது அதில் பாரஸ்ட் கம்ப் ஆக நடித்த டாமிற்கு(1994) அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதுகளை வாங்கி சாதனை படைத்த டாமின் வெற்றி இன்று வரை அப்படியே தொடர்கிறது.

இதன் பிறகு ஒரு படத்தை டாம் தயாரித்து இயக்கினார் அது That Thing You Do. இது பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் அவரின் நடிப்பில் பல உச்சங்களைக் காட்டிய ஒன்று. இதைப்போலவே அப்பல்லோ 13(Apollo 13), சேவிங்க பிரைவேட் ரைன், யூ ஹேவ் காட் மெய்ல், காஸ்ட் அவே, ரோட் டு ப்ரடிக்ஷன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் டாம் ஹேங்ஸ். தற்பொழுது கூட டான் புரௌன் எழுதிய த டாவின்ஸி கோட்(The Da vinci Code) படத்தில் நடித்துவருகிறார். அவருடைய நடிப்புத்திறன் பிரமாண்டமானது.

இத்தனையிலும் அவருடைய குடும்பவாழ்க்கையை அவர் சினிமா வாழ்க்கையில் கலக்கவில்லை. கொஞ்சம் மூடியான மனிதர் என்றும் பெயர்வாங்கியிருந்தார் டாம். ரீட்டா வில்ஸன்(Reeta Wilson) என்னும் நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார்(முதல் திருமணத்தில் ஸமந்தா லீவிஸ்(Samantha Lewis) உடன் இரண்டு குழந்தைகள்).



Awards win by Tom Hanks

Academy
1994 Best Actor Forrest Gump (1994) Win
1993 Best Actor Philadelphia (1993) Win

Berlin International Film Festival
1994 Silver Bear for Best Actor Philadelphia (1993) Win

Chicago Film Critics Association
2000 Best Actor Cast Away (2000) Win

Golden Globe
2000 Best Actor - Drama Cast Away (2000) Win
1994 Best Actor (Drama) Forrest Gump (1994) Win
1993 Best Actor Forrest Gump (1994) Win
1993 Best Actor (Drama) Philadelphia (1993) Win
1988 Best Actor (Musical or Comedy) Big (1988) Win

அவரின் ஆஸ்கார் விருதுவாங்கிய பிலடெல்பியா(Philadelphia) படத்தைப்பற்றி

எனக்கு இது போன்ற ஒரு சினிமா தமிழில் வராதா என்று ஏங்க வைத்தபடங்களில் ஒன்று பிலடெல்பியா(Philadelphia), 100% ரியலாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு 80% உண்மையான ஒரு கோர்ட் சீன் கொண்ட திரைப்படத்தை நான் தமிழில் வெகுநாளாக எதிர்பார்த்துவருகிறேன். என்னைக்கவர்ந்த ஆங்கில கோர்ட் சார்ந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆண்ட்ரு பெக்கெட்(Andrew Beckett) என்ற ஹோமோசெக்சுவல் வக்கீலான டாம் ஹேங்சை வேலைக்கு எடுத்திருக்கும் அவருடைய நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை அறிந்து, அவரை வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் டாமிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லாமல் அவருடைய வேலைசெய்யும் ஆற்றலை குறைசொல்லி நிறுத்திவிடுவார்கள்.

இதனால் கோபமடைந்த ஆண்ட்ரு(Tom Hanks), தன் நிறுவனத்தின் மீது மான நஷ்டவழக்கு தொடுப்பார். அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காததால் பிரபலமான மற்றொரு வக்கீலின் துணையை நாடுவார் ஜோ மில்லர்(டென்ஸல் வாஷிங்டன்). முதலில் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய ஜோவின் மனதை மாற்றி பின்னர் அவர் எப்படி அந்த நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்துதான் வேலையை விட்டு நீக்கியது என்பதை நிரூபிக்கிறார் என்பது தான் கதை.

கொஞ்சம் தவறானாலும் அசிங்கமாகப் போய்விடக்கூடிய கதைதான் இது. ஆனாலும் இதில் துளிக்கூட ஆபாசத்தை பார்க்கமுடியாது. படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் டாமிற்கும் முடிவில் எய்ட்ஸின் பாதிப்பில் இருக்கும் டாமிற்கும் இடைப்பட்ட காலத்தில் படத்தின் மேக்கப்மேனின் திறமை தனியாக வெளிப்படுமென்றாலும், மேக்கப் மட்டுமில்லாமல் அந்த வித்தியாசத்தை டாம் வெளிப்படுத்தும் அழகே தனிதான். அவருக்கும் அவருடைய கே நண்பர் ஆண்டனியோ பண்டாரஸ்(இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பார்) இடையே இருக்கும் அந்த நட்பையும் அத்தனை அந்தரங்கமாக காட்டியிருக்க மாட்டார்களென்றாலும் சில அற்புதமான காட்சியமைப்பில் விவரம் தெரியும்.

தன் நிலைமையில் வாதாட நிச்சயமாக முடியாது என்ற காரணத்தால், ஜோ மில்லரை சந்தித்து தனக்காக வாதாடுமாறு டாம் கேட்பதிலிருந்து படமும் வேகமெடுக்கும். அவருக்கு இருக்கும் ஹோமோசெக்ஸ்வல்களைப் பற்றிய அபிப்ராயம், எய்ட்ஸ் நோயாளிகளை தொடலாமா கூடாதா, அவர்கள் உபயோகித்த விஷயங்களை தொடலாமா என்பதிலிருந்து டாமைப்பார்த்தாலே அருவருப்பாக உணரும் அவருடைய நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார் டென்ஸல் வாஷிங்டன்.

டாம் ஹேங்ஸ் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரமாதமாக நடித்திருப்பார், அவர் சிறிது சிறிதாக எய்ட்ஸால் இறந்துகொண்டிருக்கும் நிலைகளை படத்தின் இயக்குநர் அழகான காட்சியமைப்பால் காட்டியிருப்பார். குறிப்பாக கோர்ட் காட்சிகளில் டாம் கஷ்டப்படுவதையும் பின்னர் சூழ்நிலையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுவதிலும் மிக அற்புதமாக நடித்திருப்பார். அதேப்போல் டாம் டென்ஸலின் குடும்பத்துடன் பழகும் பொழுது இருக்கும் சூழ்நிலையை இயக்குநரும் டாமும் மிக நேர்த்தியாக உருவாக்கி செய்திருப்பார்கள்.

படத்தின் இயக்குநர் ஜோநாத்தன் டெம்மி, கதை ரோன் நிஸ்வாநிர்.

Awards & Nominations for Philadelphia

Academy - 1993
Best Actor Tom Hanks Win
Best Makeup Alan D'Angerio, Carl Fullerton Nominated
Best Original Screenplay Ron Nyswaner Nominated
Best Song Bruce Springsteen, Neil Young Nominated

Berlin International Film Festival - 1994
Silver Bear for Best Actor Tom Hanks Win

Golden Globe - 1993
Best Actor (Drama) Tom Hanks Win
Best Original Song Bruce Springsteen Win

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

சர்க்கஸ்காரி

சர்க்கஸிற்கும் எனக்குமான தொடர்பு அதிகம் கிடையாது, என் வாழ்நாளில் நான்கைந்து முறைதான் பார்த்திருப்பேன். ஆனால் ஒவ்வொறுமுறையும் சர்க்கஸ் பார்த்துவிட்டு வந்ததும் அது ஏற்படுத்தும் தாக்கம் மாறாதது.

சர்க்கஸ் பார்த்துவிட்ட பிறகு வரும் எண்ணங்களும் ஒருமாதிரியாகவே இருந்துவருகிறது பலஆண்டுகளாய். ஒவ்வொறுமுறையும் பார்க்கும் பொழுதும் ஏற்படும் பிரமிப்பு, அந்த சர்க்கஸ் வீரர்களுடன் பழக வேண்டும் என்ற துடிப்பு, அவர்கள் வெளியில் காண்பிக்கும் முகத்திற்கு பின்னால் இருக்கும் சோகத்தை கண்டிறிய நினைக்கும் எண்ணம், பின்னர் சர்க்கஸ்காரிகளைப் பற்றி கிளம்பும் விவாதம்.



இந்தமுறையும் அத்தனையும் நிகழ்ந்தது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டதிலிருந்து உடன் தங்கியிருக்கும் நண்பர்களை பார்க்கலாம் என நச்சரிக்கத்தொடங்கினேன். மறுக்கமுடியாத அவர்களும் என்னுடன் ஒரு வாரஇறுதியை சர்க்கஸில் கழிக்க ஒப்புக்கொண்டனர். மென்பொருளiயில் தந்த பணம், முதல் முறையாக முதல் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதியைத்தந்திருந்தது. மிகப்பெரிய சர்க்கஸ் என்றில்லாமல் கொஞ்சம் சிறியதுதான்.



எப்பொழுதையும் போல என் உணர்வுகளை அத்துனை வெளிப்படையாக காட்ட முடியாத ஒரு சூழ்நிலை, முன்னைப்போலில்லாமல் நான் இப்பொழுது ஒரு மென்பொருளாளன். விகல்பமில்லாமல் சிரித்த பழையகாலங்கள் நினைவில் வந்தாலும் சிரிப்புவரவில்லை, அத்துனை எளிதாக. ஆனால் அவர்களில் உடலசைவில், பயிற்சிகளில், வித்தியாசமான திறமைகளின் மீது எனக்கிருந்த பிரமிப்பு மட்டும் அப்படியேயிருந்தது. விலங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு சட்டம் இந்தியாவில் நிலுவையில் உள்ளதால் விலங்குகள் அவ்வளவாக இல்லை.

முன்பொறுமுறை எங்கள் வீட்டின் பக்கத்திலிருந்து ஒரு இடத்தில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட அந்த மனிதர்கள் டீ, காப்பி குடிக்க வரும் வேளைகளில் அவர்களிடம் பேச்சுவார்த்தை கொடுத்திருக்கிறேன். அவர்களின் சர்க்கஸ் திறமைகளைப் போலில்லாமல் பேச்சு திறமை அவ்வளவு நன்றாக இருக்காது. சில வாழ்க்கையில் நொந்துபோன ஜோடிகளைக் கூட நான் அந்த இடத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களின் டீ,காப்பிக்கு காசு கொடுத்து பழகிக்கொள்ளும் என் தந்திரம் அவர்களிடம் செல்லுபடியாகியிருந்தாலும். அதற்காக பின்காலங்களில் வருந்தியிருக்கிறேன்.

அவர்களுக்கே உரிய பேச்சு வழக்கில் அவர்கள் சொல்லும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் காரணங்களால் இந்த முறையும் நான் அவர்களுடன் பேச்சு கொடுக்க மனம் பிரியப்பட்டாலும் சூழ்நிலை ஒப்பவில்லை. என்னவோ சர்க்கஸ் பிடிக்காததைப்போலும் எனக்காகப் பார்ப்பதைப் போலவும் உட்கார்ந்திருந்த நண்பர்கள் மத்தியில் நான் இன்னும் கொஞ்சம் சர்க்கஸ் பற்றிய என் அனுபவங்களைப்பேசப் போக அவர்கள் இன்னும் தவறாக எண்ணுவார்களோ என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது.

நான் மட்டும் அவர்கள் செய்யும் ஐட்டங்களைப்பார்க்காமல் அவர்கள் கண்களை படிக்க நினைத்து முயன்றுகொண்டிருந்தேன். அந்தக் கண்களும் எனக்கு எப்பொழுதையும் போல் நிறையக் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தது. அவ்வளவுதான் முடிந்துவிட்டது நேராய் ஹோட்டலுக்கு வந்து சூப் ஆர்டர் செய்துவிட்டு நிமிரவும் ஆரம்பித்தது சர்க்கஸ்காரிகள் பற்றிய சர்ச்சை. வேறென்ன அவர்கள் கற்பைப்பற்றிய விவாதங்கள்தான். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்திருந்ததால், நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான் இனிமேல் வெள்ளைக்காரிங்க விளையாட்டுத்தான்னு சொல்லி ஆரம்பித்து அவர்கள் அறிந்த இதுபோன்ற சம்பவங்களை வரிசையாகச்சொல்ல எனக்கு ஆச்சர்யமே மிஞ்சியது.

அவர்கள் வேலை செய்யும் சூழ்நிலை கூட அதற்குக் காரணம், குறையாடைப்பெண்கள், குடித்துவிட்டு இரவில் ஆட்டம் போடுபவர்கள் இப்படிப்பட்டவர்கள் உடன் வேலை செய்வதால் அவர்களால் சர்க்கஸ்காரிகளின் கற்பைப்பற்றி விமரிசனம் சர்வசாதாரணமாய் செய்யமுடிந்தது. நானும் என்னால் முடிந்தவரை பெண்ணியக்கருத்துக்களை பேசப்பார்த்து, அவர்களின் முகபாவங்கள் மாறுவதைப்பார்த்து நிறுத்திவிட்டேன். உடன் இருப்பவர்கள் அனைவருமே சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தனக்கென்ற தனிமதிப்புடன். என் கருத்துக்களைச் சொல்லப்போய் சிலவற்றை விலையாகக்கொடுக்க விரும்பவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, நான் பார்த்த சிலதடவைகள் என்னுடன் சர்க்கஸ் பார்க்க வந்த அனைவருக்குமே இதேபோன்ற விமரிசனங்களையே வைத்தது வருத்தத்தையே அளித்தது. ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதைப்பற்றிய விமரிசனம் தேவையில்லாதது என்பது என் கருத்து.ஆனால் ஒவ்வொரு முறையைப்போலவும் இந்த முறையும் அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. பார்க்கலாம் இன்னொரு சர்க்கஸ் பார்க்கும் பொழுதாவது என்னுடைய இந்த நிலைப்பாடு மாறுகிறதா என.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல்

அசமஞ்சங்கள் மற்றும் அம்மாஞ்சிகள்

இந்த தங்கர், குஷ்பு, சுகாசினி, கற்பு, கொம்பு பிரச்சனைகளால் எத்தனை பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள், ஆச்சர்யமாகயிருக்கிறது.

தங்கருக்கு, தன் படப்பிடிப்பை நிறுத்திய பெண்ணை பொதுவில் திட்டி தீர்த்ததால், அவர் படம் ஜெயாடிவிக்கு விற்கப்பட்டு தீபாவளியன்று வெளியானதில், நடந்த பிரச்சனைகளால் திரையறங்குகளிலும் கொஞ்சம் நல்ல வசூலில்.

குஷ்பு, மனோரமா, ஸ்ரீப்பிரியா உள்ளிட்டவர்களுக்கு தங்கர் விவகாரத்தில் தாங்கள் பணத்திற்காக நடிக்கவில்லை என்று தம்பட்டமடிக்கவும், தங்களை பொதுவில் திட்டினால் இப்படித்தான் நடக்கும் எனக்காட்டவும்.

இந்தியா டுடேவுக்கு, குஷ்புவை இந்த செக்ஸ் பற்றிய சர்வேவிற்கு பதிலளிக்க அழைத்ததால் நிறைய பிரதிகள் முன்பெப்போதுமில்லா அளவிற்கு விற்றுத்தீர்ந்தது. இன்னும் பிரச்சனையை வளர்த்தால் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம்.

பதிலளித்த குஷ்பு நினைத்திருக்கலாம், தங்கர் பிரச்சனைக்கு பிறகு பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என்று, இது தற்பொழுது பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் அளவிற்கு வளரும் என்பது வேண்டுமானால் அடிஷினல் ப்ளஸ். அடுத்த ஆண்டு அதிமுகவின் ஆயிரம்விளக்கு டிக்கெட் கிடைத்தால் ப்ளஸ்ஸோ ப்ளஸ்.

திருமா, ராமதாஸ் போன்றவர்களுக்கு, ஒரு வழியாக தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்க்குலப்பெண்களின் கற்பையும் காத்தமாதிரியும் ஆச்சு, அவங்க பேரு பத்திரிக்கையில் அவுட் ஆப் போகஸ் ஆகாம தடுத்தமாதிரியும் ஆச்சு.

பெண்ணியவாதிகளுக்கு, ஒரு வழியா ரொம்பநாளா கிடப்பில் இருந்த தங்கள் நீண்டகால கனவுகளை, எண்ணங்களாக மாற்றி பேப்பர்களும் பேனாக்களும் செலவுசெய்து எழுதி தீர்த்தாவது மக்களின் மத்தியில் எடுத்துரைக்க முடிந்தது.

ஆணியவாதிகளுக்கு, இது எப்படி ஆகப்போச்சு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா அடிமைப்படுத்தி வைச்சிருந்த ஒரு இனம் இறக்கை கட்டி பறந்துவிடும் நிலையை எப்படி அடக்குவது ஒன்றிரண்டு இறக்கைகளை பிய்த்து எறியலாமான்னு நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இறக்கையை அடியோடு பிய்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சன்டிவி, ஜெயாடிவி போன்ற டிவிக்களுக்கு அதிகம் அலையாமல் அதேசமயம் தேடிவந்து விழும் பேட்டிக்களைப்போட்டு தாங்கள் சார்ந்த கட்சிகளின் நிலையை அடுத்த கட்சிக்கு எதிரான போராட்டமாக காட்ட முடிந்தது.

ஞாநி போன்ற சிந்தனை டாங்குகளுக்கு, சுஜாதா பாய்ஸ் படத்திற்கு வசனம் எழுத, தன் கோபக்கணைகளை தீம்தரிகிடவில் வைணவ சரணாகதி, இரண்டுமுறை இதய அறுவைச்சிகிச்சை, இன்னொருமுறை அட்டாக் வந்தால் என காத்திருந்து காரி உமிழ்ந்ததைப்போல பெண்ணியம் சம்மந்தமான தன் சிந்தனை சிகரங்களை காட்ட முடிந்தது. (உபயம் ஜெயஸ்ரீ)

சுகாசினி போன்ற பெண்ணிய சிந்தனை அருவிகளுக்கு, தமிழருக்கு கொம்பிருக்கிறதா, இல்லை தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான ஹாலிவுட் சார்ந்தவர்களுக்கும் மேற்கு நாகரீக மக்களுக்கு மட்டுமே கொம்பு முளைத்திருக்கிறதா என்ற ஆராய்ச்சி செய்ய முடிந்தது.

நம் போன்ற வலைபதிபவர்களுக்கு, தங்களின் பிரச்சனைசார்ந்த ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்துக்களை ஒரு பக்கமாகவோ, மற்றொருபக்கமாகவோ, ப்க்கமே இல்லமலோ வைத்து எழுதக்கற்றுக்கொள்ள உதவியது. எழுத்தின் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது.

என்னைப்பொறுத்தவரை சாதாரண மக்கள் யாருக்கும் இதனால் ஒரு லாபமும் கிடைக்கப்போவதில்லை, அதனை அறிந்ததன் மூலமாகவோ இல்லை தங்கள் சார்ந்திருக்கும் நிலைப்பாடு வெளிப்படுமோ அது அவமானமோ என நினைத்து முகம் முடியிருக்கிறார்களோ என்னவோ, திமுக, அதிமுக, விஜயகாந்த், பெரும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள் வாய் பேசாமல் அப்படியே இருத்தலிலும் அவர்களுக்கு நன்மையிறுக்கிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் மக்கள் மனதில் ஒரு கருத்தை திணிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக கிடையாது, அது தங்கர் சொன்ன பணத்திற்காக நடிப்பவர்கள் விபச்சாரிகள் என்ற கருத்தோ, இல்லை குஷ்புவின் சர்வே பற்றிய கருத்துக்களோ, இல்லை ஞானி போன்றவர்களின் காரி உமிழ்வதோ, சுகாசினியின் கொம்பு பற்றிய கண்டுபிடிப்போ எதுவாக இருந்தாலும் சரி.

இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னர் எனக்கிருந்த நடிகைகளைப்பற்றிய கருத்துக்களோ, தயாரிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களோ, சிந்தனை டாங்குகள், அருவிகள் பற்றிய கருத்துக்களோ, கற்பு, பெண்ணியம், ஆணியம், கொம்பு முழைத்தல், தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம் பற்றிய என் கருத்துக்களும் அப்படியே இருக்கின்றன. அந்த சமயத்தில் மக்களின் மத்தியில் இருக்கும் கியூரியாசிட்டியை பயன்படுத்தி மீடியாக்கள், அரசியல்வாதிகள் விளையாடும் பணவிளையாட்டு இது என்பதைத்தவிர வேறு ஒன்றும் நினைக்கமுடியவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் இந்த விஷயத்தில் அதிகமாக சிந்தித்தது, கழுதைகள் மற்றும் எருமைமாடுகள், போல் நாமும் அசமஞ்சங்களும் அம்மாஞ்சிகளும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதலாமான்னுதான். யாரும் வாங்கமாட்டாங்கன்னு அதையும் எழுதலை.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Science ஜல்லிஸ்

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 2

முன்பே சொன்னது போல கொஞ்சம் கிரப்டோகிராபியைப் பற்றி கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன் கொஞ்சம் விவரமாய்த்தான். இங்கே எனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை, என் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள நான் பயன்படுத்தவில்லை. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரிவிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். இனி கிரிப்டோகிராபி,

இப்படியாக நாலாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் கிரிப்டோகிராபி, கணிணி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தபிறகு, கொஞ்சம் வடிவம் மாறத்தொடங்கியிருந்தது. இதன் காரணமாக அதன் பயன்படுத்தப்டும் முறைகளும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் அடையத் தொடங்கின.

முதலில் மதிப்பு (Key Based) சார்ந்த கிரிப்டோகிராபி.

அதாவது நம்மிடம் இருக்கும் தகவலை, ஒரு மதிப்பைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்றவேண்டும், பிறகு தகவல் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்ததும், மீண்டும் அதே மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை, அந்தக் மதிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பெறப்பட்ட மற்றொரு மதிப்பையோ கொண்டு பாதுகாக்கப்பட்ட தகவலை மீண்டும் சாதாரண தகவலாக மாற்ற வேண்டும்.

இதில் இரண்டு வகை உண்டு, ஒன்று மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரம் (Secret Key Algorithm or Symmetric Algorithm), மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம் (Public Key Algorithm or ASymmetric Algorithm). முதலில் சொன்ன மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் நாம் தகவலை பாதுகாக்க பயன்படுத்திய மதிப்பு மறைக்கப்பட்டிருக்கும் அதாவது, அந்தக் மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை அந்தக் மதிப்பிலிருந்து உருவாக்கப்படும் மற்றொரு மதிப்பையோ பயன்படுத்தி தகவல் மறுபடியும் நேராக்கப்படும். இதனால் அந்த மதிப்பு பாதுகாப்பாக வைக்கப்படுவது அவசியம். இந்த வகையான தகவல் பாதுகாக்கும் முறைக்கு உதாரணம், தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் (DES - Data Encryption Standard) வகையான சூத்திரங்கள், இதில் மூன்றடுக்கு DES (Triple DES) எனவும் ஒரு வகை உண்டு, விளக்கமாக எழுதவேண்டாம் என்பதால் விடுகிறேன். 2000த்தில் AES என்றழைக்கப்படும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை DES சை விட வேகமாக செயல்படுபவை.

மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம், இதில் தகவலை பாதுகாக்க பயன்படுத்தப்படும் மதிப்புக்கும், பாதுகாக்கப்பட்ட தகவலிலிருந்து மீண்டும் நேரான தகவலாக மாற்ற பயன்படும் தகவலுக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது. அதனால் இந்த வகையான தகவல் பாதுகாப்பில், தகவலை பாதுகாக்க பயன்படும் மதிப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படும். ஆனால் பாதுகாகப்பட்ட தகவலை நேர்த்தகவலாக மாற்றக்கூடிய மதிப்புதான் மறைத்துவைக்கப்படும். இதைப்போன்ற காரணங்களால் தான் பொதுவான மதிப்பு சம்மந்தப்பட்ட சூத்திரங்கள் இணையத்துறையில் வெகுவாக பிரபலம். இதில் தான் வரும் RSA (Rivest, Shamir, Adelman - இந்த மூவரும் சேர்ந்து கண்டுபிடித்தது தான் இந்த சூத்திரம்)வகையான சூத்திரங்கள். இதைப்பற்றியும் விரிவாக எழுத விருப்பமில்லை.

தற்சமயங்களில் கிரிப்டோகிராபி என்பது தகவலை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மட்டுமல்லாமல். அந்த தகவல்களினுடைய நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும் பயன்படுகின்றன. ஒருவழி(One Way) முறை என்ற ஒன்று இதில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அதாவது நீங்கள் பேப்ரை, நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதை மீண்டும் பேப்பராக மாற்ற முடியுமா, அதைப்போலத்தான் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலின் மொத்த விஷயங்களையும் வைத்து ஒரு சிறியதாக ஒரு குறிப்பு(Message Digest) உறுவாக்குவது, எப்படியென்றால் நீங்கள் எப்பாடு பட்டாலும் இரண்டு வெவ்வேறான தகவல்களுக்கு ஒரு குறிப்பு வராது என்ற உத்திரவாதத்துடன். இந்த வகையான முறைக்கு எம்டி5, எம்டி4 போன்ற அல்காரிதங்கள் பயன்படுகின்றன.

இதைப்போலவே நீங்கள் தற்சமயத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், Digital Siganature என்று, இதுவும் புரிந்துகொள்ள சுலபமான ஒன்றே. இந்த டிஜிடல் சிக்நேட்சர் என்பதும் ஒரு வகையான மதிப்பே(Value), இதையும் உங்களுடைய உண்மையான தகவலிலிருந்தே தயாரிப்பார்கள், மதிப்பு சார்ந்த சூத்திரங்கள் பயன்படுத்தி. அதாவது இந்த டிஜிடல் சிக்நேட்சர் வைத்திருப்பவர் நினைத்தால், தன்னிடம் உள்ள தகவல் சரியானதுதானா இல்லை தகவல் பரிமாற்றத்தின் பொழுது இடைமறிக்கப்பட்டு மாற்றப்பட்டதா எனத் தெரிந்து கொள்ளலாம். டிஜிடல் சிக்நேட்சர்கள் பெரும்பாலும் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களையே பயன்படுத்துகின்றன. சிறு மாறுதல்களுடன் அதாவது நாம் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களில் பயன்படுத்தியைப்போலில்லாமல், தகவலை பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்ற அவர்கள் ரகசிய மதிப்பைப் பயன்படுத்துவார்கள். பாதுகாக்கப்பட்ட தகவல்களஇல் இருந்து நேர்ப்படுத்த பொதுவான மதிப்பைப் பயன்படுத்துவார்கள்.

அதாவது முதலில் மொத்த தகவல்களில் இருந்து ஒரு சிறு குறிப்பை(Message Digest) பெறுவது. பின்னர் அந்தக் குறிப்பை பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் ரகசிய மதிப்பைப்பயன்படுத்தி பாதுகாப்பான தகவலாக மாற்றவேண்டும். இந்தத் தகவலே டிஜிடல் சிக்நேட்சர். பின்னர் உபயோகிப்பாளரை தகவல் சென்றடைந்ததும், தன்னிடம் உள்ள பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தை பயன்படுத்தி, அவர் டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து சிறுகுறிப்பை(Message Digest) பெறுவார். பின்னர் அந்தக் குறிப்பைப் பயன்படுத்தி வந்த பாதுகாப்பான தகவலை நேர்த்தகவலாக மாற்றுவார். பின்னர் இரண்டையும் ஒப்பு நோக்கி வந்த தகவல் சரியானதுதானா என சரிபார்த்துக்கொள்வார். தற்சமயம் இந்த முறையை பயன்படுத்த DSA(Digital Signature Algorithm) என்ற சூத்திரம் புழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் Digital Certificate, டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து பெறுவது தான். அதாவது நாம் உபயோகிப்பாளருக்கு கொடுக்கும் பொதுவான மதிப்பை ஒரு தேர்ந்த நிறுவனத்திடம்(Certification Authority like Verisign, National Security Agency - America) இருந்து பெற்றுக்கொண்டு நாம் உபயோகப்படுத்துவதே டிஜிடல் சர்டிபிகேட், அதாவது நீங்கள் உங்கள் கடனாளர் அட்டையைப் ஒரு இணையத்தளத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் அந்த இணையத்தளத்தின் நம்பிக்கைத்தன்மையை இந்த டிஜிடல் சர்டிபிகேட்டை வைத்து மதிப்பிடலாம். அதாவது, மைக்ரோசாப்ட் இருக்கிறதென்றால் அவர்கள் தங்களின் இணையத்தளத்திற்கென்று ஒரு சர்டிபிகேட் அத்தாரிடியிடம், அனுமதி வாங்கியிருப்பார்கள் தாங்கள் இன்னாரென்றும் இன்னது செய்கிறோமென்றும் இதை வைத்துக்கொண்டும அந்த சர்டிபிகேட் அத்தாரிடி ஒரு குறிப்பிட்ட பொதுவான மதிப்பை இந்த நிறுவனத்தின் உபயோகரிப்பாளர்களிடம் கொடுக்கும் இதை வைத்துக்கொண்டு, அந்த உபயோகிப்பாளர் தான் இருப்பது மைக்ரோசாப்டின இணையத்தளத்தில் தானா, தன் தகவல் பரிமாற்றங்கள் அவர்களுடன்தான் நடக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்ற சர்டிபிகேஷன் அத்தாரிடிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் இருப்பார்கள், நம்பகத்தன்மையுடன். இந்த வகையான டிஜிடல் சர்டிபிகேட்களில் தற்சமயத்தில் புழக்கத்தில் இருப்பது, X.509, இதன் உட்பிரிவுகள்(Versions), மூன்றும்(X.509.3) ஒன்றும்(X.509.1).

இத்துடன் நான் கிரிப்டோகிராபி என்ற பெயரில் எழுதி வந்த இந்தக் கட்டுரையை வெற்றிகரமாக முடிக்கிறேன். நான் முழுமையாக விளக்கவில்லை முன்பே சொன்னதைப்போலவும் தலைப்பைப்போலவும் இது ஒரு ஜல்லியடிக்கும் முயற்சியே, என்னிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் வந்து ரோடு போட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

For Advanced Reading

Why Cryptography is Harder than it Looks
Security Pitfalls in Cryptography
Cryptography, Security, and the Future
The Code Book

Only for genius

Algorithms and Mechanisms:

Key Management

Digital Signature:

Authentication:

Sessions

Email:

Electronic commerce

Smart cards and crypto devices

Miscellaneous

Crypto Politics.

Thanks to my sister for helping me in this article. :-)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு 2ம் பாகம் - முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராகத்தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப்பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொருப்புக்களை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகதப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிறறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது, அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களஇலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத்தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணீ இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப்பற்றி பார்க்கலாம்(கி.பி. 985).

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts