In புத்தகங்கள்

மோகமுள்

"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று எழுதியிருந்த பொழுது அதனால்தால் பிரபலமானது இந்த டெர்ம் என்று நினைத்திருந்தேன். ஆனால் "மோகமுள்" படித்ததும் இந்த ஒரு வார்த்தை தான் மனதில் ஒட்டிக்கொண்டு நகரவே மாட்டேன் என்கிறது. நான் முன்பே மரப்பசு படித்திருக்கிறேன், மோகமுள் பார்த்திருக்கிறேன்.

நான் படிக்காமல் போனதற்கு பல காரணங்கள், முதலில் புத்தகத்தின் தலைப்பு இந்தத் தலைப்புள்ள புத்தகத்தை ஒரு பதினாறு வயது பையனோ இல்லை பதினெட்டு வயது பையனோ படித்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய சமூகத்தில் நான் வளரவில்லை, அதுமட்டுமில்லாமல் மோகமுள் படத்தை ஒரு பிட்டுப் படம் போல் வியய்டீவி இரவில் போடுவதால் பலருக்கும் அதைப் பற்றி ஒரு "உவ்வே" படிக்காமல், தெரியாமல், என்னவென்றே உணராமல். என் வீட்டில் படித்திருந்தால் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள் தான். கடல்புறாவை, யவனராணியை, இன்னும் பல ஸிட்னி ஷெல்டன் நாவல்களையே நான் படிப்பதைத் தடுக்காதவர்கள் மோகமுள்ளைத் தடுத்திருக்க மாட்டார்கள் தான். என்னவோ என்னால் முடிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் பொழுது மரப்பசுவுடன்(முன்பே சொல்லியிருந்தது போல்) மோகமுள்ளையும் வாங்கினேன். கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்களையே இப்பொழுது அதிகம் வாங்குவதால் புக் குவாலிட்டி மனதிலேயே நின்று கொண்டிருந்தது மோகமுள்ளும் மரப்பசுவும் வடிவமைப்பிலாவது மாறியிருக்கும் என்று, செம்பதிப்பென்று எழுதியிருந்தது நினைவில் வந்தது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் அப்பாஸ்டெப்பி, உரைநடையில்லாத இடங்களில் எல்லாம் ஆரம்பித்து விட்டு பின்னர் விட்டுர்கிறார்கள். நிறைய இடங்களில் அவருடய் கற்பனை வளம் ஒற்றை அப்பாஸ்டெப்பியுடன் நிற்கிறது.



படம் பார்த்ததால் ஒரு விஷயம், பாபுவாக நடித்திருந்தவரை பாபுவாகவும், யமுனாவாக நடித்திருந்தவரை யமுனாவாகவும் என்னால் ஒப்புக்கொள்ளமுடிந்திருந்தது. அதுவும் பாபு விஷயத்தில் தான் கொஞ்சம் உதைத்தது. மற்ற விஷயத்தில்(யமுனா) அப்படிச் சொல்லமுடியாது, நான் அந்த நடிகை நடித்த மற்ற படங்கள் பார்க்காதது காரணமாய் இருக்கலாம். அந்தப் பொண்ணு வேறுபடம் நடித்து நான் பார்த்திருந்தால் எனக்கு உவ்வே என்றுதான் வந்திருக்கும்.(ஹிஹி, இதைத்தான் மெலோட்டிராமா பிடிக்காமல், ஆனால் மெலோட்டிராமாவில் தங்களுடைய சோகத்தை, பிரச்சனைகளைக் கழுவிக் கொள்கிறவர்கள் என்று ஆதவன் 'என் பெயர் ராமசேஷனில்' சொல்வார்.)

மற்றபடிக்கு என்னால் ராஜமாக விவேக்கையோ, ரங்கண்ணாவாக நெடுமுடிவேணுவையோ நினைக்கமுடியவில்லை, முதலாவதற்கு காரணம் சொல்லவேண்டிய அவசியம் மோகமுள் படித்து படம் பார்த்தவர்களுக்குத் இல்லையென்பது தெரிந்திருக்கும் ஆனால் இரண்டாவதற்கு எனக்கே காரணம் தெரியவில்லை.

சரி கதைக்கு,

உண்மையில் ஆரம்பம் படித்துக்கொண்டிருந்த பொழுது நினைத்தேன் சரி அந்த பழைய மோகன்தாஸ் கிடையாது ஒன்றரை மணிநேரம்(அதுவே இப்பல்லாம் அதிகம்) படித்துவிட்டு வைத்துவிடுவேன் என்று. ஆனால் புத்தகத்தை வைக்கவே முடியவில்லை, இன்னொருமுறை என் தலையில் தட்டப்பட்டுவிட்டது உனக்கு இன்னும் பொதுபுத்து போகவில்லை என்று. ஆனால் திஜாவின் இந்தப் புத்தகத்தை பொதுபுத்தியில் சேர்க்கலாமா என்று. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தீர்கள் என்றால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இது பொதுபுத்திக் கதை தான். தன்னைவிட பத்துவயது பெண்ணைக் கலியாணம்(???) செய்து கொள்வதை இல்லை சேர்ந்து வாழ்வதை, இன்றைய நாளில் கூட சர்வ சாதாரணமாகப் போய்விடாத ஒன்றை அந்தக் காலத்தில் சொல்லமுயன்றதால் மட்டும் பொதுபுத்தி நாவல் இல்லையென்று சொல்லமுடியாது.

கதை படிக்கப் படிக்க, நான் அதனுடைய முடிவைப் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு படம் பார்த்து ஒருவாறு அதன் முடிவு தெரியும் அதனால் அதை தியாவின் வார்த்தை யாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன் அவ்வளவுதான். அதுவும் பாபு மெட்ராஸ் வந்ததும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசெல்லாம்(மூளை நியூரான் செல்கள் ???) கல்லாகிவிட்டதைப் போன்ற உணர்வு. எனக்குத் தெரிந்த மோகமுள் படத்தில் அர்ச்சனா யோக்லேக்கர் "இதற்குத்தானே" என்று கேட்டுவிட்டு போய்விடுவதாகத்தான் நான் உணர்ந்திருந்தேன்(படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டுருக்கிறது - நினைவில்லை - தவறிருந்தால் திருத்தலாம்). கதையில் முடிவிற்கு இருநூறு பக்கங்களுக்கு முன்பே இந்த முடிவைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்தொடங்கின.

எனக்கு சமீபத்தில் பார்த்த 'தேயா வு' படம் தான் நினைவில் வந்தது டென்சல் வாஷிங்டன் ஒரே சமயத்தில் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பார் நானும் அதே நிலையில், முடிவு தெரிந்த பிறகும் நிகழ்காலத்தில் கடந்தகாலத்தில் நடந்ததைப் பற்றி படித்த உணர்வு. உண்மையில் படத்தில் காண்பித்தது போலில்லாமல் ஹாப்பி எண்டிங். என்னைப் பொறுத்தவரை. அதுவும் கடைசியில் பாபுவும் யமுனாவும் பேசுவது ஒரு காலத்தில் வந்தியத்தேவனும்-குந்தவையும் பேசும் பொன்னியின் செல்வன் வசனங்களைப் போல் உற்சாகப்படுத்தியது. படித்துமுடித்துவிட்டு மணியைப் பார்த்தால் மணி ஆறரை. சாயங்காலம் ஒரு ஒன்பதரை பத்திற்கு எடுத்து வைத்திருப்பேன்.சுஜாதா அளவிற்கு fast reading இல்லையென்றாலும் நானும் fast reader தான்(இது சும்மானாச்சுக்கும்) ஆனால் பிரச்சனை அது இல்லை. அடுத்த நாள் விடுமுறை கிடையாது. இடையில் நான்கைந்து முறை டீ குடித்தது, மற்றும் இன்னபிற தவிர்த்து தூக்கம் என்பது பக்கத்தில் வரவில்லை. நான் பயந்தது அடுத்த நாள் வேலையைப் பற்றி.

நீ மூன்றாண்டு எக்ஸ்பீரியன்ஸாயிரு, எத்தனையோ சர்டிபிகேஷன்ஸ் பண்ணியிரு, கொடுத்த வேலையை அவர்கள் நினைத்ததற்கு முன்பேகூட எத்தனையோ முறை செய்திரு வேஸ்ட். கடந்த காலம் சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் வேஸ்ட், நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களைப் ப்ரூப் பண்ணவேண்டும். போட்டிகள் ஏராளம், வாய்ப்புகள் ஏராளம், பொறாமைகள் ஏராளம், பாலிடிக்ஸ் ஏராளம் செட்டிலாகி உட்கார்ந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் தலையில் கால்வைத்து போய்விடுவதற்காக காத்திருப்பவர்கள் ஆயிரம். ஆனால் உண்மையில் ஒரு ஹாப்பி எண்டிங் என்னால் ஆறரை மணிக்குப் பிறகு கிடைத்த இரண்டரை மணிநேரத் தூக்கத்தில் அடுத்த நாள் வேலையை நான் நினைத்ததை விடவும் சீக்கிரமாக செய்துவிட்டு இன்னொருமுறை மீள்வாசிப்பு செய்யவைத்தது.

என்னுடன் ஒரே அறையில் இருந்த ப்ளாக்கர் ஞானசேகருக்குத் தெரிந்திருக்கும், இரவு எத்தனை மணிக்கு ஆபிஸில் வருகிறேன் என்ற கணக்கு இல்லாமல் இருந்த காலத்தில் எல்லாம் 'என் பெயர் ராமசேஷன்' இரண்டு பக்கமாவது படித்திருக்கிறேன் தினமும். அவன் கூட கேட்டிருக்கிறான் அந்தப் புத்தகத்தைத் தான் படித்துவிட்டீர்களே என்று. ஆனால் படித்தப் புத்தகத்தின் படித்தப் பக்கங்களில் மீண்டும் மூழ்குவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல புத்தகங்கள் திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன் உபபாண்டவம் கைவசம் இருந்த நாட்களில் கூட அப்படித்தான்.

ஒவ்வொரு கதையிலும் நாம் யாரோ ஒருவராகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு படிக்கத் தொடங்குறோம் இது இன்றைய பின்நவீனத்துவ நாவல்களுக்கு மட்டும் பொறுந்தாது, வேண்டுமானால் என்வரையில். ராமசேஷனும் சரி, பாபுவும் சரி கதையில் பல சமயங்களில் என்னுடன் நிறையத் தொடர்புடையவர்களாகப் பட்டது. அதுவும் பாபு - யமுனா. நான் முன்பொருமுறை கதையில் ஒரு வார்த்தை எழுதியிருந்தேன் நினைவில் இருக்கிறது.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

இதுவருவது முதலிரவு சிறுகதையில். அந்த ஒரு கையில்லாத ஆன்ட்டி அப்படியே யமுனா என்று வைத்துக்கொள்ளலாம், யமுனாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் இவங்களுக்கு ஒரு பிரச்சனை ஒரு கை கிடையாது. அந்தக் காலத்தில் நினைத்திருக்கிறேன் பெரியவனானதும் இவங்களைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று. நான் என்ன அப்பொழுது பத்தாவது படித்துக்கொண்டிருந்தால் ஆச்சர்யம். அவர்களுடன் பேசுவதற்காக, நின்று அவர்கள் வருவதைப் பார்ப்பதற்காக ஆயிரம் ப்ளான் போட்டிருக்கிறேன். சின்னப் பிள்ளை ப்ளான் இல்லையா எல்லாமே பெயிலியர் தான். ஆனால் ஒன்றிரண்டு தடவை பேசியிருக்கிறேன் அவ்வளவே. அவங்க இருக்கும் பொழுதே அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆனது நினைவில் இருக்கு.

அந்தக் குடும்பத்தில் எல்லாரும் ஏதோ ஒரு துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். நல்லவேளை பத்தாவது படித்த பொழுது மோகமுள் கதையைப் படிக்கவில்லை என்று இப்பொழுது நினைக்கிறேன் ;).

ஆனால் இன்று "இதற்குதானா" என்று ஒரு கேள்வி, திஜா மூலமாய், யமுனா மூலமாய், மோகமுள் மூலமாய் என்னிடம் நேரடியாய்க் கேட்கப்பட்டதாக உணர்கிறேன். என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் "அதற்குத்தானா" உண்மையில் தெரியவில்லை. ஆனால் இனக்கவர்ச்சியெல்லாம் அங்கேதான் சென்று முடியும் இல்லையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராகக் கூடயிருக்கலாம், நான் என்னுடன் பாபுவையும் அந்த ஆன்ட்டியுடன் யமுனாவையும் ஒப்பிட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இதுபோன்ற உணர்வுகள் வருமென்று தான் நினைக்கிறேன். பாலகுமாரன், அநிருத்த்ர பிரம்மராயர் நான் தான் என்று முடிவளர்த்து இருப்பதைப் போல, நான் தான் வந்தியத்தேவன் என்று குதிரையைத் தேடி அலையாமல் நிற்கும் வரை என் மனநிலை ஒரு சமானத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

PS: இனிமேல் என்னுடைய சில கதைகளைல் யமுனா என்ற கதாப்பாத்திரம் அதிகம் இடம்பெறலாம் யாருக்காவது பிரச்சனையிருந்தால் ஒருவரி எழுதிவிடுங்கள்.

mohandoss.i@gmail.com

Related Articles

5 comments:

  1. இது இந்தப் புத்தகத்தோட ரிவியூவா சரியாப் போச்சு.

    ReplyDelete
  2. ம்.........மோகமுள் படம் மிகச்சின்ன வயதில் பார்த்திருகிறேன்.இலங்கை ரூபவாகினியில் ஒருமுறை போட்டர்கள் என்று நினைகிறேன்.வீட்டுக்காறர் பார்த்தபோது நானும் பார்த்த ஞாபகம்.அப்போதே எனக்கு அது ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.ஏனெனில் இப்போது வரை மீண்டும் அந்த படத்தை நான் பார்த்தது இல்லை.ஆனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த படத்தின் காட்சிகள் இன்னும் எனக்கு நினைவில் இருகிறது.வசனங்கள் நினைவில் இல்லை.ஆனால் கதை புரிந்தது.உங்கள் பதிவைப் பார்த்தபோது காட்சிகள் மனதில் ஓடியது பின்னாளில் நாவல் படிக்கும் போதும் முன்பு பார்த்த காட்சிகளின் தாக்கமே அதிகம் இருந்தது.

    உறவுகளை உணர்வுகளைப் புரிந்து கொள்ள வயது இப்போது தடையில்லை.நீங்கள் சொல்லும் போதுதான் நினைத்தேன் மோகமுள் படத்தை நான் ரசித்துப் பார்த்த சினவயதில் அதப் பார்க்க வேண்டாமென்ற தடையெதுவும் எனக்கு வரவில்லை.

    ReplyDelete
  3. ரிவ்யூவான்னு சொல்லமுடியாது, ஆனால் படித்து முடித்ததும் மனதில் பட்டது எழுதிட்டேன். டயம் கிடைத்தால் இன்னொரு பாகமும் எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. //உறவுகளை உணர்வுகளைப் புரிந்து கொள்ள வயது இப்போது தடையில்லை.//

    இதை நான் சொன்னா யாரும் புரிஞ்சிக்கிறதேயில்லை.

    ஆமாம் எனக்கும் அந்த சினிமாக்காட்சிகள் தான் மனதில் வந்துகொண்டேயிருந்தன ஆனால் நிறைய சினிமாக்காட்சிகள் இல்லாததால் பிரச்சனையில்லை.

    ReplyDelete
  5. சும்மா நச்சுன்னு ஒரு விமர்சனம் எழுதலாம்னு உட்கார்ந்தேன் நேற்று. பின்னர் மரப்பசு கோபாலியும், அம்மணீயும் அந்த நேரத்தை இன்னொருமுறை எடுத்துக்கொண்டார்கள்.

    ReplyDelete

Popular Posts