In நாட்குறிப்பு

நான் என்ன கேக்க ஜாத்தாவுன்னா?

ஹிந்தி பற்றி ஏற்கனவே நிறைய பேசியிருக்கிறேன், இன்னிக்கு புதுசா ஒன்னும் சொல்லிடப்போறதில்லை தான். இந்த முறை டெல்லி சென்றிருந்த பொழுது பழைய கம்பெனி நண்பர்களைச் சந்தித்தேன், அது ஏற்படுத்திய தாக்கத்தில் நிச்சயம் ஒரு பதிவே எழுதலாம் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அங்கே நண்பர்கள் சொன்னது "உன்னுடைய ஹிந்தி இப்ப நல்லாயிருக்கு!". நான் சமீப காலமாக ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு சுமார் இப்படி ஒன்றைக் கேள்விப்படவேயில்லை என்பதால் முதலில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. புனேவிலும் சரி பெங்களூருவிலும் சரி என்னுடைய ஹிந்தி என்பது எப்பொழுதும் என்னுடன் பேசுபவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடியது தான், தமிழ்நாட்டிலிருந்து வந்து எப்படி நீ ஹிந்தி பேசுற என்று ஏகப்பட்ட கேள்விகள் வந்திருக்கிறது. ஆனால் யாரும் உன் ஹிந்தி இப்ப நல்லாயிருக்கு என்று சொல்வதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு என் ஹிந்தியின் தொடக்க காலம் பற்றிய அறிமுகம் இல்லாமல் இருப்பது தான்.
 
ப்ராத்மிக் முடிக்காவிட்டாலும் நான் ஹிந்தியில் எழுதியிருப்பதை படிக்கக்கூடியவன், அத்தனை வேகமாக என்றில்லாவிட்டாலும் ஓரளவு வேகத்திற்கு. ஆனால் ராஷ்ட்ரபாஷா(இதன் தமிழ்பெயர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு நான் இப்பொழுது வரவில்லை அந்த படிப்பின் பெயர் அது அவ்வளவே!) வரை படித்த தமிழ்மக்கள் கூட ஹிந்தியில் சரளமாகப் பேச மாட்டார்கள் என்பதை என் குறைந்த பட்ச அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் படிப்பு ஹிந்திக்கும் பேசும் ஹிந்திக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நான் டெல்லியில் இருந்த பொழுது என்னைவிடவும் பெரிய அதிகாரிகளிடம் ஹிந்தியிலும் என் அளவில் அல்லது என்னை விட குறைந்த பதவியில் வேலை செய்பவர்களிடம் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் என் உள்ளுணர்வு அறியாமல் இதை செய்து வந்தேன் இதற்கு முக்கியக் காரணம் என் ஆங்கிலத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை. ஒருமுறை என்னைவிட குறைந்த பதவியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் சொல்லப்போய் எனக்கு இந்த விஷயம் புரிந்தது; பின்னர் இதை அப்படியே மாற்றிக்கொள்ள முயன்றேன். அதன் விளைவே நான் இன்றைக்கு கற்றிருக்கும் ஹிந்தி. டெல்லியில் இருந்த கடைசி சில மாதங்களில்(2003) எல்லாமே ஓரளவிற்கு சமாளிக்கக்கூடிய அளவில் ஹிந்தி பேசினேன்.
 
பெங்களூரிலோ அல்லது புனேயிலோ பார்க்காத ஒன்று(இந்த விளையாட்டிற்கெல்லாம் தமிழ்நாட்டை நான் சேர்த்துக் கொள்ளவேயில்லை) டெல்லியில் பார்த்தேன், தப்பும் தவறுமாக ஹிந்தியில் பேசினாலும் புரிந்து கொண்டு சிரித்து கேவலப்படுத்தாமல் அதே சமயத்தில் நம்மை ஊக்கப்படுத்தும் மனப்பான்மை அது. நான் ஓட்டை(ரவிக்கு மட்டும் இது உழுந்த வடை கிடையாது!) ஹிந்தி பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னை கேவலப்படுத்தியிருந்தால் என் ஈகோவிற்கு நான் ஹிந்தி பக்கம் கூட தலைசாய்த்திருக்க மாட்டேன். எங்கையோ போய்ட்டேன்; என் நண்பர்கள் உன் இந்தி இப்ப நல்லாயிருக்கு என்று சொன்னதும் எனக்கு தலை கால் புரியவில்லை. இப்பொழுதும் சில பல தவறுகள் செய்வேனாய்த்தான் இருக்கும் ஆனால் என் ஆரம்ப கால ஹிந்தியுடன் ஒப்பிட்டு அவர்கள் சொன்னது எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. இது எல்லாம் இப்பொழுது எப்படி நினைவில் வந்ததென்றால், ஒரு தமிழ் நண்பரும் ஹிந்திக்காரனும் இருக்கும் கேபினில் போய் என்னமோ கேட்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று சொன்ன "நான் என்ன கேக்க ஜாத்தாவுன்னா?" என்று பொதுவில் கேட்க பக்கத்தில் உட்கார்ந்திருந்த தமிழ் தெரிந்த கன்னட நண்பன் ஒருவன் சிரி சிரியென்று சிரித்ததும் தான் நான் செய்தது என்ன என்பது புரிந்தது.
 
------------------
 
சமீபத்தில் கேட்ட ஹேமா சின்ஹாவிற்கு கல்யாணம் ஆய்டுச்சாம் என்ற வரிகளில், சட்டென்று சின்னதாய், இதயம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவதைப் போல் உணர்ந்தது என்ன மாயை என்று புரியவில்லை. எனக்கே அதை நினைத்ததும் சிரிப்பாய் வந்தது, அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை என்றாலும் ஏன் அப்படி உணர்ந்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பரொருவர் சினிமாவில் சேர்வதில் உனக்கு விருப்பம் உண்டா(ஏதாவது ஒரு வகையில் நடிகனாக மட்டுமல்ல, கதை வசனம் எழுத, இயக்க, ஒரு சீனில் வந்து தலைகாட்டி விட்டுப் போக) என்று கேட்ட பொழுது நான் முற்றிலுமாக மறுத்து இல்லை என்று சொல்ல, சினிமா நடிகைகளுக்காகவாவது செய்வேய்யா நீ என்று சொல்ல, நான் சினிமா நடிகைகள் பற்றி சொன்ன கருத்தில் கடுப்பாகிப் போய். நீங்க ஒரு "Misogynist" என்று சொல்லி புது வார்த்தை ஒன்றை அறிமுகப்படுத்தினார். நான் அவரிடம் என்னுடைய சினிமா நடிகைகள் பற்றிய கருத்து 'இவ்வளவுதான்' என்று சொன்னேன்.
 
----------------
 
இன்னொரு நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' பற்றிய பேச்சு வந்தது. அந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னது பாவமாய் உச்சுக் கொட்டியவர், என்னைப் பார்த்து பரிதாபப்பட்டார் 'உன் நிலைமை இப்படி ஆய்டுச்சே' என்று. இருள்வ மௌத்திகம் என்றால் இருளில் முத்து என்றோ இருள் முத்து என்றோ இருளில் ஒளிரும் முத்து என்றோ பொருள் சொல்லலாம். ஒரு காலத்தில் எப்படி வேகவேகமாக நகரும் கதைகளின் மீது அதீத ஆர்வம் இருந்ததோ அப்படியே இப்பொழுதெல்லாம் வாசகனை ஒவ்வொரு சொல்லிலும் அதிர்ச்சியடைய ஆச்சர்யப்பட வைக்கக்கூடிய பிரதிகள் மீதான ஆர்வம் அதிகமாய் இருக்கிறது. 'இருள்வ மௌத்திகம்' சக்க தீனியாய் இருக்கும் என்று நினைக்கிறேன் எதிர்பார்க்கிறேன். நண்பர் சிரிக்கச் சிரிக்க கோணங்கி பற்றியும் புத்தகத்தையும் பற்றியும் தலைப்பைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
 
-----------------
 
வெகுசில சமயங்களிலேயே தமிழ்ச் சினிமா ஹீரோயின்களை ஆரம்ப படத்தில் இருந்தே கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைத்திருக்கிறேன். அதில் கடைசியில் சேர்ந்தது
 





 
'குத்து' ரம்யா ச்ச 'பொல்லாதவன்' திவ்யா பொல்லாதவனின் 'எங்கேயும் எப்போதும்' பாடல் பார்த்ததில் இருந்தே இந்த உணர்வு இருந்தது. இடையில் அர்ஜூனின் படம் ஒன்று போட்டார்கள் சன் டிவியில் அதில் பார்த்ததும் என்னுடைய அந்த மேற்சொன்ன உணர்வு அதிகமானது.
 
-----------------
 
விகடனில் ப்ரொஃபைல் அப்டேட் செய்யச் சொல்லி கேட்டிருந்தார்கள், ரொம்பக்காலமாய் ஸ்கிப் செய்துகொண்டு போயிருந்தேன். சரி அப்டேட் செய்வோம் என்று நினைத்து பத்து பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு செய்தேன். மொக்கை மொக்கை பெரும் மொக்கை கடைசியில் ஒப்புக்கொள்ளாமல் மட்டுறுத்தப்பட்டுள்ளது. நானும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மட்டுறுத்துபவன் என்ற முறையில் பிரச்சனையில்லை, ஆனால் இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அந்த பத்து பதினைந்து நிமிடங்களை வேஸ்ட் செய்திருக்க மாட்டேன்.
 
ப்ரொபைல் அப்டேட் செய்தது எப்படி என்பதற்கு சில உதாரணங்கள்.
 
விகடனில் பிடித்தது: இலக்கியம் பகுதியில் இடம் பெறும் 'முடியலத்துவம்'
 
பிடித்த கலாச்சாரம் : சர்வ நிட்சயமாய் தமிழ்க் கலாச்சாரம் இல்லை.
 
இப்படி...
 
----------------------------------
 
 

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா

John Rambo - படம் ஒரு பார்வை

வெள்ளிக்கிழமை இரவு John Rambo படத்திற்குச் சென்றிருந்தேன். என் காலத்தில் இல்லாமல் கொஞ்சம் முன் வெளியானவை Ramboவின் மற்ற வரிசைப் படங்கள் பார்த்தவன் என்ற முறையில் இந்தப் படத்திற்கும் செல்ல முடிவெடுத்திருந்தேன். Inox cinemas இணையதளம் எப்பொழுது ஆரம்பித்தார்கள் என்று தெரியாது ஆனால் சமீபத்தில் தான் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் தியேட்டர் என்றாலும் கருடா மாலில் இருக்கும் Inox தியேட்டருக்குச் செல்லாமல் இருந்ததற்கு ஒரே காரணம் இன்டர்நெட்டில் டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது தான். பெங்களூரில் பார்த்த பெரும்பான்மையான படங்கள் Forum இல் PVR cinemasல் பார்த்ததாகத்தான் இருக்கும்.
 




ராம்போ வரிசையில் ஆக்ஷன் பட ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் இருக்கிறது. வன்முறையை விரும்பாதவர்கள் ராம்போ படங்களுக்குப் போகாமல் இருப்பது தான் ஒரே தீர்வு என்பதால் இதில் இருக்கும் வன்முறையைப் பற்றி பெரும் பிரச்சனையில்லை. இன்னமுமே கூட இதைவிடவும் City of God படம் வன்முறை அதிகம் கொண்டது என்று சொல்வேன். அபோகலிப்டா அளவிற்கு சொல்ல முடியாவிட்டாலும். காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
 
மியான்மாரில் நடக்கும் எதைப்பற்றியும் படம் பேசவில்லையென்றும் படம் கற்பனைக்கதை என்றும் சொல்வதை நாம் நம்புவதும் நம்பாததும் நம்விருப்பம். அறுபது வருடங்களாக சிவில் வார் நடந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்று மியான்மாரைப் பற்றிய வரிகளும் மனிதர்களை விவசாய மண்ணில் கண்ணிவெடிகளுக்கு நடுவில் பந்தயம் வைத்து விளையாடுவதும் மனதை வருத்தப்படத்தான் செய்தது.




 
தாய்லாந்தில் ஸில்வெஸ்டர் ஸ்டலோன் கோப்ரா பாம்புகளைப் பிடிப்பதில் தொடங்கும் படம், மியான்மரைப் பற்றிய கொடுமைகளைக் காட்டிக் கொண்டே மெல்ல நகரத்தொடங்குகிறது. ஒரு கிறிஸ்துவ மிஷனரி அவரை அணுகி தங்களை மியான்மாரில் இருக்கும் ஒரு ரெபெல் க்ரூப் இருக்குமிடத்திற்கு சென்று சேர்க்குமாறும் அவர்களுக்கான மருத்துவ உணவு வசதிகளுடன் தாங்கள் வந்திருப்பதாகவும் சொல்ல படம் பயணிக்கிறது. ஸ்டலோன் முதலில் மறுத்து பின்னர் ஒப்புக்கொண்ட பிறகும் அவர் உங்களால் எதையும் மாற்றிவிட முடியாது என்று சொல்லி அவர்களை அழைத்துச் செல்கிறார். இந்த இடங்களில் எல்லா இயற்கைக் காட்சிகளை படமாக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது ஆனால் சட்டென்று ஸ்டலோன் துப்பாக்கியை எடுத்து இடையில் வம்பிழுக்கும் பர்மீஸ் மக்களைக் கொல்ல படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது, அப்பொழுது "No life should be taken for any reason."  என்று கிறிஸ்துவ மிஷினரில் வரும் ஒரு நபர் சொல்லும் பொழுதே படத்தின் கடைசியில் அவர் ஒருவரை கொல்லும் படி வரும் என்று நினைத்தேன் சரியாக வருகிறது.
 


ராணுவம் இருக்கும் இடங்களில் இருக்கும் வன்முறை, சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு அழைத்துச் செல்வது, பெண்களைக் கொடுமைப்படுத்துவது சிறுவர்களை ராணுவத்துக்கு என்று அழைத்துச் செல்வது என்று தொடர்ச்சியாக அத்தனையையும் பதிவு செய்கிறது படம். ஸில்வெஸ்டர் ஸ்டலோன் படத்தின் சில காட்சிகளில் மெல்லிய நகைச்சுவையைக் காட்டியிருந்தாலும் ஆனால் அது தொடராமல் விடப்பட்டிருக்கிறது. அதுவும் சரிதான்.

கடைசியில் வயிற்றைக் கிழித்து ஒருவரை தள்ளிவிடும் காட்சியைத் தவிர்த்து பெரிய அளவில் கிராபிக்ஸ் செய்தது போல் இல்லை. அதாவது படத்தில் அதைத் தவிர்த்து கிராபிக்ஸ் செய்திருப்பது போல் இல்லை. ஒளிப்பதிவும் சரி RRவும் சரி சட்டென்று விரிந்து செல்லும் படத்தை தொந்தரவு செய்யாமல் பயணிப்பது நமக்கும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறது. ஸ்டலோன் பிரம்மாண்டமாய் இருக்கிறார் படத்தில் அவர் முகத்திற்கு க்ளோசப் போட்டால் திரை முழுவதும் அவர் மட்டுமே இருக்கிறார். படம் எதுவும் மெஸேஜ் சொல்லுதா என்றால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஆனாலும் மியான்மரின் கதை தான் நமக்குத் தெரிந்தது தானே.
 
படத்தைப் பார்க்க சிபாரிசு செய்யும் அதே நேரத்தில் அதிக வன்முறைக் காட்சிகளைக் கொண்ட படம் என்ற டிஸ்க்ளெய்ம்பரையும் போட்டு விடுகிறேன். ராம்போ படங்களில் வேறெதையும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றாலும் ஏதோ என்னால் முடிந்தது.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In பயணம்

சித்தன்னவாசல் சித்திரமா அல்லது நாமா யார் வெட்கமடைவது?



போன பதிவின் பொழுதே சொல்லியிருந்தேன் சித்தன்னவாசல் பற்றி எழுதுகிறேன் என்று முதலில் குடுமியான்மலையைப் பற்றி எழுதிவிட்டு சித்தன்னவாசலைப்பற்றி எழுதுவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் சித்தன்னவாசல் சித்திரங்களை நானாய்ப் புகைப்படம் எடுக்கவில்லை என்ற காரணங்களைச் சொல்லலாம்.




இந்த மூடப்பட்ட மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

 
சரியான வழி எங்கேயும் சொல்லப்படவில்லை, சித்தன்னவாசல் என்ற நேம் போர்ட்டை நாங்கள் பார்த்த இடங்களில் அந்த போர்ட்கள் நிச்சயம் தேவையில்லை என்றே கூட சொல்லலாம். பாழடைந்த மண்டபம் ஏதோ ஒன்றிற்குச் செல்லும் வழி போல் இருந்தது, அங்கே ஒரு பூங்கா வேறு கேட்கணுமா லவ்வர்ஸ் ஸ்பாட் ஆகிவிட்டது, கல்லணை முக்கொம்பு புளியஞ்சோலை என்று கெடுத்துவிட்டு இப்பொழுது கல்லூரி இளசுகளும் வகையறா ஆட்களுக்கும் புகலிடமாக இப்பொழுது சித்தன்னவாசல் இருக்கிறது.
 
நிறைய எதிர்பார்த்துப் போனேன் என்பது உண்மைதான், ஆனால் மண்டபத்தைப் பார்த்த பொழுது அத்தனை பிரமிப்பு வரவில்லை பின்னர் அங்கிருந்த தொல்பொருள்த்துறை ஊழியர் சொல்லப்போய் தான் விவரம் புரிந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - ராஜா முகமதுவில் படித்து இன்னும் விவரங்கள் தெரிந்து கொண்டேன். வெகு சமீபத்தில் தான் அந்த ஓவியங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.
 
கையில் 500 ரூபாயைத் திணித்தாவது அன்றைக்கு புகைப்படம் எடுத்துவிடும் மனநிலையில் தான் நான் இருந்தேன் ஏனென்றால் தனியாக கார் வைத்துக் கொண்டு சித்தன்னவாசலைப் பார்க்க வந்த பொழுது குடுமியான்மலை திட்டத்தில் இல்லை. காசு செலவு செய்து வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் போக மனம்வரவில்லை, ஆனால் தொல்பொருள்த்துறை ஊழியர் நிச்சயமாக அனுமதிக்க மறுத்துவிட்டார். நான் வற்புறுத்தவில்லை எனக்கு வருத்தத்தை விடவும் சந்தோஷமே அதிகம் இருந்தது. அதனால் என்வசம் சித்திரங்களின் புகைப்படம் இல்லை.
 
மேலே சமணர் படுக்கைக்கு சென்று பார்த்ததும் ஏன் கம்பிவேலி போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது, சமணர் படுக்கையை காதலர்கள் தங்கள் வேலைகளை செய்யும் இடமாக மாற்றியதை வேதனையுடன் சொன்ன அவர் இதனாலெல்லாம் வேலி போடுவேண்டியதாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்.



சமணர்படுக்கையின் தற்போதைய நிலை - பலங்காலத்துக் கல்வெட்டுக்களைக் காட்டிலும் நம் காலத்து ஹார்டின்களும் இன்ன பிற பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

நாங்கள் சென்றிந்த பொழுதும் நாலைந்து கப்புள் பூங்காவிலும் மேலே சமணர் படுக்கை அருகில் மூன்று கப்புள்களும் இருந்தனர். லால் பாஹ், கப்பன் பார்க் அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பதாக தொல்பொருள் துறை ஊழியர் புலம்பினார். இதில் தண்ணியடித்துவிட்டு அவரிடம் வேறு கரைச்சல் செய்வார்களாம், வெட்கக்கேடு. சரி நல்ல விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து அப்படியே நகர்ந்துவிட்டது.
 
எனக்குத் தெரிந்து மாமல்லன் என்ற பெயர் வரும் பொழுதெல்லாம் நீங்கள் பல புத்தகங்களில் ஒரு அரசனுடைய சித்திரம் காண்பிக்கப்படும், ஆனால் அது அவர் இல்லை என்றும் ஒரு பாண்டிய மன்னனுடைய படம் தான் அது என்றும் கண்டுபிடித்திருப்பதாக தொல்பொருள் துறை நண்பரும் சொன்னார் பின்னர் புத்தகமும் அதையே சொன்னது. 1000 வருடங்களுக்கு முன் வரைந்திருக்கிறார்கள் இந்த ஓவியங்களை எனும் பொழுது ஆச்சர்யம் வருகிறது, மண்டபத்தின் விதானத்தில் எப்படி வரைந்திருப்பார்கள், அதிலும் அளவுப் பொருத்தம் எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லோருமே ஒரு முறை சித்தன்னவாசலுக்குச் சென்று அந்த ஓவியங்களைப் பார்த்துவரவேண்டும் என்று நினைக்கிறேன்.
 
கீழிருப்பது சித்தன்னவாசல் என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதிய ராஜா முகமது அவர்கள் வானொலியில் வாசித்த கட்டுரையின் வடிவம் கீழே, சொல்லப்போனால் சித்தன்னவாசலைப் பற்றி விரிவாகவே அலசுகிறது கட்டுரை.

சித்தன்ன வாசல்
 
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழித்தடத்தில் 15 கிமீ தூரம் சென்றதும் உயரமான ஒரு குன்று நம் கவனத்தை கவருகிறது. இதுதான் சித்தன்னவாசல். இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகளும் முதுமக்கள் தாழிகள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு உலகப் புகழ்வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக்கோயில் ஆகியன இந்த சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை நமக்கு விளக்குகின்றன. இவ்வூர் அண்ணல் வாயிலுக்கு(அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னவாயில் என்று வழங்கப்பட்டு பின்னர் சித்தன்னவாயில், சித்தன்னவாசல் என மருவி வழங்குவதாகக் கொள்ளலாம். இங்குள்ள பிராமிக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சிறுபாவில் என்பது சித்துப்போசில் என்பதன் திரிபு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளும் இவ்வூரைச் சேர்ந்த பழமையான சமணச் சின்னங்களும் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் காஞ்சி மாநகர் புத்தமத மையமாக விளங்கியது போல சித்தன்னவாசல் சமண மத மையமாகத் திகழ்ந்ததாக அறிகிறோம்.
 
பேருந்து தடத்திலிருந்து குகைக்கோயிலுக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் கிழக்குப் பகுதியில், அக்காலத்தில், இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் முதுமக்கள் தாழிகளும் காணப்படுகின்றன. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை கருங்கல் பலகையினால் ஆன நீள் சதுரக் கல்லறைகள், பல, தரையில் புதைந்திருப்பதையும் அவற்றைச் சுற்றி செம்புறைக் கற்கள் வட்டமாக அமைந்திருப்பதையும் காண்கிறோம். இன்னும் சில கல்வட்டங்களுள் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவை இவ்விடத்தின் காலத்தால் முற்பட்ட வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன.
 
 குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர் தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடம்.



இந்த குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியிலிருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளைக் குடைந்து குகையினுள் நுழைகிறோம். எனவே தான் இவ்விடம் ஏழப்பட்டம் எனப் பலராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலக வாழ்க்கை விடுத்து ஏழுவிதமான ஆன்மீக உறுதிகளை மேற்கொண்டு, உண்ணாநோன்பு இருந்து உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளுதல் பொருந்தும். எனினும் இப்பெயர் மிகவும் பிற்காலத்திலேயே வழக்கிற்கு வந்ததாகத் தெரிகிறது.
 



















குகையில் நுழைந்ததும் ஒரு ஏர்கண்டிஷண் தியேட்டருக்குள் நுழைந்தது போன்ற உணர்வு, அவ்வளவு குளிர்ச்சி குகையின் தரையில் 17 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழவழப்பாகவும் ஆக்கப்பட்டுள்ளன. படுக்கையின் ஒரு பகுதி தலையணையாக பயன்படுத்தும் வண்ணம் உயர்ந்துள்ளது. இந்த படுக்கை ஒன்றின் விளிம்பில் தான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு சமண முனிவரைப் பற்றீய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது இந்தக் குகையின் தொன்மையைக் காட்டுகிறது. கி.பி. 10ம் நூற்றாண்டுவரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருந்திருக்க வேண்டுமென்பதற்கு இங்குள்ள இன்னும் சில கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
 
குன்றின் மேற்கு முகப்பில் எளிதாகச் சென்றடையக்கூடிய பகுதியில் அறிவர் கோயில் என்னும் சமண குகைக்கோயில் அமைந்துள்ளது. கருங்கல் மலையைக் குடைந்து இந்தக் குகைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகைக்கோயிலில்தான் நமது சிந்தையைக் கவரும் ஓவியங்கள் உள்ளன. மரம் போன்ற அழியும் பொருட்களில் கோயில் கட்டுவதை விடுத்து இதுபோன்ற குகைக்கோயில் எடுக்கும் பழக்கத்தை கி.பி.ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் தமிழகத்தில் அறிமுகம் செய்தான். அந்த குகைகளில் ஓவியம் தீட்டி வைக்கும் பழக்கமும் ஏற்பட்டது. கி.பி 7ம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே பல்லவர்கள் ஆட்சியும் தெற்கே பாண்டிய மன்னர்களின் ஆட்சியும் நிலவியது. பல்லவர் கலைப் பாணி பாண்டிய நாட்டிலும் பரவத் தொடங்கியது. இக்காலத்தில் சித்தன்னவாசல் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தப் பகுதியாகும்.
 
மகேந்திரவர்ம பல்லவன், மண்டகப்பட்டு, வல்லம், திருச்சி ஆகிய இடங்களில் குகைக்கோயில்கள் எடுப்பித்தப் பாணியைப் பின்பற்றி சித்தன்னவாசலிலும் பாண்டிய மன்னர்களால் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டிருக்க வேண்டும். சித்தன்னவாசல் குகைக் கோயிலும் ஓவியங்களும் மகேந்திரவர்ம பல்லவனின் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இது பல்லவர் கலைப்படைப்பு எனவும் மகேந்திரவர்மன், அப்பரின் முயற்சியால் சைவனாக மாறுவதற்கு முன்பு சமண மதத்தைப் பின்பற்றியபோது இந்த சமண குகையை எடுப்பித்திருக்கலாம் என்றும் கருத்தப்பட்டு வந்தது.




ஆனால் குகைக்கோயிலின் வெளிப்பக்கம் தென்புறச் சுவற்றில் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது பாண்டிய மன்னர்களது கலைப்படைப்பு என்பது தெரியவந்தது. கி.பி 9ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட, ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில்(815 - 862) மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்னும் சமண முனிவர் குகைக்கோயில் முன் மண்டபத்தைப் புதுப்பித்து தற்போது நாம் காணும் ஓவியங்களையும் வரைந்து வைத்ததாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
 
"திருத்திய பெரும்புகழ் தேவதரிசனத்து
அருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறன்கிளர் நிலைமை இளம்கௌதமன் எனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனிபசேகர சீர்கெழு செங்கோல் சீரீவல்லபன்"
 
இந்தக் கல்வெட்டுச் செய்தியாகக் கொண்டும் காவிரிக்குத் தெற்கே மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சி ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் கொண்டும் சித்தன்னவாசல் ஓவியம் பல்லவ மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்பது தெரியவருகிறது.
 
 குகைக்கோயில் 160 சதுர அடி, அளவுள்ள ஒரு முக மண்டபத்தையும் அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய ஒரு கருவறையும் கொண்டது. முன் மண்டபத்தின் முகப்பில் இரண்டு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவர் மாடத்தில் ஒரு சமண ஆசிரியரின் (திருவாசிரியன்) சிற்பமும், தெற்கு மாடத்தில் ஐந்து தலை பாம்பு குடைவிரித்திருக்க வீற்றிருக்கும் 23வது சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சிற்பமும் உள்ளன. இடது பக்கமும் நடுவிலும் உள்ள சிற்பங்கள் முக்கடையின் கீழ் உள்ளதால் தீர்த்தங்கரர்கள் என்றும் வலது பக்கம் உள்ளது ஒரு குடையின் கீழ் உள்ளதால் இது ஒரு சக்கரவர்த்தியின் சிற்பம் என்று சொல்லலாம். குகையின் முகப்பிலுள்ள சிறிய மண்டபம், அலக்சாண்டர் டாட்டன்ஹாம் சமஸ்தான ஆட்சியாளராக இருந்த போது குடுமியான்மலை, பனங்குடி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது.
 
சிற்பங்களை விட இங்குள்ள ஓவியங்களே நம் மனதைக் கவர்ந்திழுக்கின்றன. குகைக்கோயிலின் தரை நீங்கலாக மற்ற பகுதிகள் அனைத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அழிந்தவை போக எஞ்சியுள்ள ஓவியங்களை முன் மண்டபத்தின் விதானத்திலும் கருவறையின் விதானத்திலும் காணலாம். இந்த ஓவியங்கள் Fresco-Secco என்னும் முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொளிந்து சமப்படுத்தி சுண்ணாம்பு சாந்து பூசி அதன்மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழப்பாகத் தேய்ந்து அப்பரப்பில் ரேகைகளும் வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளிலெல்லாம் சமீப காலத்தில் தோன்றிய இவ்வகைப்பாணி ஓவியக்கலை வெகுகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்தது. இதற்கு சங்க இலக்கியங்கள் பல சான்று பகர்கின்றன. மனித உணர்வுகளையும் அங்க அசைவுகளையும் ஓவியங்களில் வெளிக்கொணரும் பாங்கு ஓவியர்கள் கையாண்ட உத்திகள், சங்ககால அரண்மனை சித்திர கூடங்களின் சிறப்பு ஆகியன பற்றியெல்லாம் பரிபாடல், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க நூல்கள் நிறைய செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஓவியச் செந்நூல் என்றொரு நூல் இருந்ததை மணிமேகலைக் குறிப்பிடுகிறது. சங்ககால ஓவியங்களை காணும் வாய்ப்பினை நாம் பெறவில்லையாயினும் இலக்கியங்கள் கூறும் இலக்கணத்தோடு தமிழக சித்திரக்காரர்கள் சித்தன்னவாசல் ஓவியங்களைத் தீட்டி நமது கண்ணூக்கும் விருந்தாக்கியிருக்கின்றனர்.
 
கருவறையின்(உள் மண்டபம்) விதானத்தில் ஓவியம் வரையப்பட்ட பட்டுத்துகில் ஒன்று விரிந்துள்ளது போன்ற காட்சியினைக் காண்கிறோம். இதில் பல வட்டங்களும் சதுரங்களும் இணைப்பின்னி ஒரு தொகுதியாக விளங்குகின்றன. சதுரங்களில் தாமரைப் பூக்கோலமும் வட்டங்கள் ஸ்வஸ்திக் வடிவத்தில் நான்கு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேல் இரண்டு பிரிவில் இரண்டு மனித உருவங்களும் கீழ் இரண்டு பிரிவில் இரண்டு சிங்கங்களும் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளன.
 
முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்தரிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் நம் சிந்தையைக் கவருகிறது. சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்த தாமரைத் தடாகம்தான். மணிமேகலைக் கூறும், வித்தகரியற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன் தாமரையும் அல்லியும் இந்த தடாகத்தில் பூத்துக் குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்ற்ன. யானைகள் நீரக் கலக்கி களித்திருக்கின்றன சுற்றுச் சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றம் இயல்பாகவே உள்ளது. துள்ளிக்குதிக்கும் மீன்கள் மீனலோசினி மீனாட்சியின் கண்களுடன் போட்டியிடுகின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் பெடைகளுடன் குஞ்சுகளுடன் குலாவிக் கொண்டிருக்கின்றன. மருட்சியுடன் விழித்துக் கொண்டு "யார் எனது குஞ்சுகளை மிரட்டுவது" என்று கேட்கும் பாவனையில் தனது குஞ்சுகளுக்கு அடைக்கலமளிக்கப் பறந்தோடி செல்லும் ஒரு சிறகியின் ஓவியத்தோற்றம் தாயன்பு எவ்வுயிர்க்கும் பொதுவானது என்பதனை உணர்த்துகிறது.
 
தாமரையும் அல்லியும் கூட மொட்டாகவும் இதழ் விரித்தும் இயற்கையின் விதியை நம் கண்முன் கொண்டு வருகின்றன. பவ்யர்கள் என்னும் கந்தர்வ புருஷர்கள் நீராடி வழிபாட்டிற்கு பூக்களை பறித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக தடாகம் முழுவதும் எங்கு நோக்கினும் உயிரோட்டம் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி. இங்கு காணப்படும் அனைத்துமே சுறுசுறுப்புடன் இயங்குவதுபோல நமக்குத் தோற்றமளிக்கின்றன. மனதிற்கினிய இந்த ஓவியங்களை எப்படித்தான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. சமண புராணங்கள் கூறும் சுவர்க்கங்களுள் ஒன்றாகிய கடிக பூமியிலுள்ள சமசரண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ள தாமரைத் தடாகத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது இந்தக் காட்சி, எனக் கூறப்படுகிறது.
 
தூண்களின் முகப்பில் நாட்டியக் கணிகையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்த கன்னியரின் ஓவியங்கள் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், நாட்டிய சக்கரவர்த்தி நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் கச்சையணிந்து பலவித அணிகலன்களையும் அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவ்விரு கன்னியரும் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.
 
இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன. அஜந்தா ஓவியங்களில் கூட இது போன்ற நாட்டிய சாத்திர விதிகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே சித்தன்னவாசல் நடன கன்னியரின் ஓவியங்கள் இந்திய நாட்டியக்கலைக்கே சிறப்பு செய்கின்றன.
 
தென்புறத்தூணின் வடக்கு முகத்தில் மணிமுடியுடனும் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படும் ஓவியம் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்வித்த ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் என்றும் அவனுக்குப் பின்னால் மிடுக்கான தோற்றத்துடன் உள்ள ஓவியம் அவனது தேவி என்றும் கருதப்படுகிறது. இதுவரை சொன்ன ஓவியங்களைத் தவிர தூண்களுக்கு மேலே உள்ள விட்டத்திலும் அதிலிருந்து நீண்டிருக்கும் கொடுங்கையிலும் தாமரை மலர்களும் அன்னப்பறவைகளும் வரையப்பட்டுள்ளன.
 
உயிரோட்டம், இயற்கையின் இலக்கணம் அங்க அளவுப் பொருத்தம் லாவண்யம் ஆகிய பண்புகளனைத்தும் அமைந்தவையே உயர்கலை ஆகுமென்றால் இக்குணங்க்கள் அனைத்தும் பொருத்தப் பல உயிரனங்களையும் மலர்களையும் உயிரோட்டத்துடன் இங்கு படைத்திருக்கும் சித்திரக்காரர்கள் மணிமேகலை கூறும் வரந்தரவெழுதிய லோவிய மாக்களே ஆவார்கள்.
 
சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
 
காலத்தின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

பீமா

விமர்சனம் எழுதுவதற்காகவே சிலர் படம் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எப்பொழுதுமே வரும்; சில பேருடைய திரைப்பட விமர்சனம் செய்யும் பதிவுகள் படிக்கும் பொழுது. பீமா படத்தைப் பார்த்த பிறகு அக்காவிடம் அரைமணிநேரம் அட்வைஸ் செய்துகொண்டிருந்தேன்; தமிழ்ப்படத்திற்கு தமிழ்ப்பதிவுகள் தரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வது என்று. அதை திரும்பவும் இன்னொருமுறை சொல்லி போரடிக்க விரும்பவில்லை அதைவிட நாலுவரி கூடுதலாக பீமா பற்றி எழுதிவிடலாம்.

வருடக்கணக்கில் எடுத்து வந்திருக்கும் படம், விக்ரமுடைய உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் கொடுத்தக் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநரின் தைரியம் பாராட்டுதலுக்குரியது, இது போன்ற க்ளைமாக்ஸ் வைக்கப்போகிறார் என்றால் இடைவேளையில் ஒரு சின்ன க்ரிப் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லைதான். படம் க்ளாமாக்ஸ் காட்சியை நோக்கி அழகாக நகர்த்தப்படுகிறது. சண்டைக்காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன, மற்றவர்களைப் பற்றித் தெரியாது சண்டைக்காட்சிக்காக, அதுவும் ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால் நான் மாட்ரிக்ஸ் 1ம், த லாஸ்ட் சாமுராய் படமும் இப்படி ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக, அந்த சண்டைக்காட்சி வரப்போகிற தருணத்திற்காகக் காத்திருந்து பார்த்திருக்கிறேன்.

மாட்ரிக்ஸில் முதன் முதலில் கியானோ ரீவ்ஸ், தனக்கு சண்டை போடத்தெரியும் என்று சொல்ல அதைப் பார்க்கலாம் என்று சொல்லி Laurence Fishburneவும் கியானோ ரீவ்ஸும் இறங்கும் சண்டைக்காட்சி அருமையாக இருக்கும் அதைப் போலவே. லாஸ்ட் சாமுராயிலும் டாம் க்ரூயூஸ் கத்திச் சண்டையைக் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டிருக்கும் பொழுது சாமுராயைக் கொல்லவரும் ஆட்களுடன் சண்டை போடுவது பிரம்மாதமாக அமைந்திருக்கும். இந்த இரண்டு காட்சிகளுக்காக நிறைய முறை இந்தப் படங்களைப் பார்த்திருப்பேன். நீண்ட நாள் கழித்து அது போல் என்று ஒப்பீட்டு அளவில் சொல்லாவிட்டாலும் ரசித்துப் பார்த்த சண்டைக்காட்சி படம் 'பீமா'.

சும்மா வன்முறை அதிகமாயிருக்கு என்று சொல்பவர்கள், லிங்குசாமியின் விக்ரமிற்கான படத்தில் "A" சர்டிபிகேட் எதற்காகத் தந்திருப்பார்கள் என்று தெரியாமல் படம் பார்க்கச் சென்றார்கள் என்றால் ஆச்சர்யமே. கனல் கண்ணன் என்று நினைக்கிறேன் சண்டைப் பயிற்சி பாராட்டுக்கள், சண்டையின் பொழுது லைட்டிங் அருமை - ஒளிப்பதிவாளர் விளையாடியிருந்தார். பாடல்கள் அனைத்தும் முன்னமே வெளிவந்து ரசிக்கவைத்தவை தான். பாடல்காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன, பாடல்காட்சிகளின் ஹீரோ ஹீரோயின் உடைகள் அழகாக தேர்வுசெய்யப்பட்டு ஏற்கனவே இருக்கும் விக்ரம்-த்ரிஷா கெமிஸ்ட்ரியில், பிஸிக்ஸ், ஸூவாலஜி எல்லாம் சேர்த்து டோட்டல் சயின்ஸே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஹீரோயினின் வேலை என்னவோ அதை மட்டும் த்ரிஷா செய்திருக்கிறார் சும்மா மொட்டைமாடியில் இருந்து திருடன் துப்பாக்கியுடன் கீழே குதித்தால் காதல் வருமா என்றால் இந்தக் காலப்பெண்களுக்கு வந்தாலும் வருமாயிருக்கும் :). நான் காலேஜ் முடித்து ஐந்தாண்டு ஆகிவிட்டது, அப்பொழுது என்னுடம் படித்த பெண்களே கூட இப்படி சிகரெட் குடிக்கிறான், பாத்ரூமில் வைத்து இரண்டு பேரை அடிக்கிறான் என்று காதலித்தப் பெண்ணைத் தெரியும் கடைசியில் "இந்த ஆம்பளைங்களே மோசம்" என்ற ஒரு வரியில் முடிந்துவிட்டது அத்தனையும் மூன்றாண்டிற்குப் பிறகு. பெண்களை முட்டாள் என்று சொல்லவில்லை ;) ரௌடியோ என்ன எழவோ அவர்களுக்குப் பிடித்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் அஷ்டே!

பிரகாஷ்ராஜ் - ஒரு அருமையான நடிகன் என்பது எல்லாருக்கும் நன்றாகவேத் தெரியும். இயக்குநர் அவரிடம் இருந்து நல்ல பெர்ஃபார்மென்ஸைக் கொண்டுவந்திருக்கிறார். "பத்மா" பெயரைக் கேட்டதும் வழியிறது, இடையில் தன்னை மீறி விக்ரம் நகரும் பொழுது மிதமான அதிர்ச்சியை வெளிக்காட்டுவது என தன்னுடைய பங்கிற்கு பீமனின் ஒரு கையாக அவரும் இருக்கிறார்.

இயக்குநர் மனதில் க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். படம் பார்த்து முடித்த பின்னால் அதை நோக்கி காட்சிகளை இயக்குநர் நகர்த்தியிருப்பது தெரியவரும். மையக் கருவை நோக்கி நகரும் காட்சிகள் அவர் சொல்ல வந்த மையக் கருவை தீர்மானிக்கும் நிறுவும் அனுபவங்கள் என்று அருமையாக நகர்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த கட்டுரைக்கான அம்சமாகச் சொன்ன "ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்" வரிகள் நினைவில் வருகின்றன. இது திரைப்படத்திற்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு உடைவாக இந்த பீமா படம் க்ளைமாக்ஸ் காட்சியை முன்வைக்கிறது எனவே வேறு இடைவேளை உடைதல்கள் அநாவசியமே.

கதாநாயகன் காதல் வசப்படும் காட்சியும், தடுமாறுவதும், முக்கியமான தீர்மானத்தை முன்னெடுக்கும் காட்சிகளும் நெருடாமல் படத்தின் ஓட்டத்துடனேயே அமைகின்றன.

சுஜாதா எப்பொழுதும் திரைப்படத்திற்கான க்ளைமாக்ஸ் does matters என்று சொல்வார். ஒரு தேர்ந்த சிறுகதை எப்படி அதன் முடிவை நோக்கிச் செல்கிறதோ அப்படி ஒரு தேர்ந்த திரைக்கதை க்ளைமாக்ஸை நோக்கிச் செல்ல வேண்டும்.

முதலில் இந்தப் படம் எந்தப் படத்தைப் போலவும் இல்லை என்பதைச் சொல்லவேண்டும், சும்மா நாயகன் போல், தளபதி போல் இருக்கிறது என்பதெல்லாம் காமெடியாயிருக்கிறது. இனிமேல் காதல் கதை ஒன்றை எடுத்தீர்கள் என்றால் உள்ளூர் சினிமாவோ வெளிநாட்டு சினிமாவிலோ இருப்பதைப் போன்ற காட்சிகள் இல்லாமல் ஒரு கதையை எடுக்க முடியுமா? இயக்குநர் மற்ற படங்களின் பாதிப்பு இருக்கக்கூடாது என்று கவலைப்பட்டிருப்பதும் அக்கறை எடுத்திருப்பதும் தெரிகிறது.

த்ரிஷா வரும் காட்சிகளில் வரும் மெல்லிய நகைச்சுவை படத்தை தொந்தரவு செய்யவில்லை, முன்பே சிவாஜியின் பொழுது சொன்னதுதான் கதாநாயகிகள் ஆறாம் விரல் தான் பாடல்காட்சிகள் ஆறாம் விரலின் நகங்கள் தான். இவை தமிழ்சினிமாவின் நகச்சுத்திகள் போலத்தான் என்றாலும் இதிலிருந்து மீறிவர அதிக துணிவு தேவைப்படுகிறது. "பணம்" முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்ச்சினிமாவில் பாலாக்களே சிம்ரனின் மூடப்பட்ட தொப்புள்களை நம்பவேண்டியிருப்பது நிச்சயமாய் ஆரோக்கியமானது இல்லைதான் ஆனால் தொடர்ச்சியாக வந்த ஒரு விஷயம் சட்டென்று நிறுத்திவிட முடியாதது.

இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல் க்ளவேஜ் காண்பிப்பது தற்போதைய தமிழ்சினிமாவின் பேஷன் போலிருக்கிறது :) பீமாவும் த்ரிஷாவும் விதிவிலக்கல்ல. லாஜிக்களை மூட்டைகட்டிவிட்டல்ல லாஜிக்குகளை எடுத்துக் கொண்டு போய் கூட பீமாவைப் பார்க்கலாம். படம் நன்றாகத்தான் இருக்கிறது - முன்னர் வந்த ரௌடி கதைகள் போலில்லாமல்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

காஷ்மீர் பயணம் முடித்ததும் கிடைத்த இடைவேளையில் படித்த சில நாவல்களால் கவரப்பட்டு திரும்பவும் சிறுகதை எழுதணும் என்ற ஆர்வம் நிறைய வருகிறது. ஆனால் டோனும் நடையும் பேசும் விஷயமும் வித்தியாசமாக முன்னைக்கு மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்ற ஆவலில் பயணத்தைப் பற்றி குறிப்புகள் எழுதவும் எடுத்தபடங்களைக் தட்டி நிமிர்த்தி சரிசெய்து போடவும் நேரம் அமையணும். பார்ப்போம். ஆனால் முதலில் எழுதணும் என்று நினைத்திருப்பது "குடுமியான் மலை" பற்றி ஒரு பதிவு.

புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாளே சென்றிருந்தேன் தொடர்ச்சியாய் மேலும் மூன்று நாட்கள் சென்னையில் இருந்ததால் புத்தகக் கண்காட்சியை நன்றாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் முன்னமே முடிவு செய்திருந்த புத்தகங்களைத் தவிர்த்து ஒரு புத்தகம் கூட அடிஷனலாய் வாங்கலை என்பது என் வரையில் அதிசயமே. 'கிழக்கின்' விடுதலைப்புலிகள் புத்தகம் வாங்காதீர்கள் புலிகள் பற்றி தெரிந்துகொள்ள என்று நண்பர்கள் சொன்னதையும் மீறி வாங்கினேன். எழுதப்பட்டிருந்த டோன் சுத்தமா பிடிக்கலை, அதிசயமாய் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் வேறு என்ன சொல்ல. 'உயிர்த்தலம்' ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆபிதீனின் தொகுப்பு பெரும்பாலும் படித்த கதைகள் தான் என்றாலும் புத்தகத்தில் படிப்பதில் சுகமே தனிதான்.

'பின்தொடரும் நிழலில் குரல்' லும் 'காடு'ம் படித்திருந்தேன். இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி நிறைய எழுதணும் என்று அரிப்பு அதிகமாயிருக்கிறது.

சர்வேசனின் 'நச்' போட்டியில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றதும் சந்தோஷமாய் இருந்ததைப் போல் இல்லாமல் கடைசியில் wild-card என்று என்னன்னமோ நடந்து 'நடுவர்'களின் தேர்வுகளுக்குப் பின் மூன்றாவது வந்ததில் சரியான 'காண்ட்'டாகியிருந்தேன். அக்கா இதைப் பற்றிச் சொல்ல முதலில் எனக்குப் புரியவேயில்லை நான் எப்படி கடைசி சுற்றுக்கு வந்தேன் என்று. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை, மற்றதைப் போலில்லாமல் நானாய் சென்று சேர்ந்து கொண்டது என்பதால் என்ன சொல்வதென்றே தெரியலை, ஆனால் 'நடுவர்' வகையறா விஷயம் சர்வேசன் முன்னமே சொல்லாதது. ஆனாலும் முக்கியமான விஷயம் நானாய் சென்று கலந்துகொண்டது ஆனாலும் நான் நினைப்பதை எழுதுவதில் தவறில்லை என்பதால் எழுதுகிறேன். முன்னமே இப்படி ஒரு ஐடியா இருப்பதையோ இன்னார் நடுவராக வருவார்கள் என்றோ சொல்லியிருந்தால் கலந்துகொண்டிருந்திருப்பேனா? தெரியலை!

ஆஸ்திரேலிய அணி இந்தக் கடைசி போட்டியில் ஜெயிச்சுருவாங்க என்று தான் நான் நினைக்கிறேன், எல்லோரும் கஷ்டமான டார்கெட் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம். Go Aussie Go!!!

Politically correct ஆ இல்லையா என்று பார்க்காதீர் உங்களுக்கு சரின்னு பட்டதை எழுதித் தொலையும், மொன்னையா இருக்கு நீங்க எழுதுறதெல்லாம் என்று நண்பர் ஒரு சொன்னதில் இருந்து அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சமாய் செயல்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் சொன்ன நண்பருடனேயே சண்டை போடும் நிலை வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் நண்பர் அதையே(மனசில் பட்டதைச் சொல்பவர்) செய்பவர் என்பதால் புரிந்துகொள்வார் என்று தெரியும். ஆனால் இப்படி எல்லா விஷயங்களிலும் எழுதிவிடமுடியுமா என்று தெரியலை! சில விஷயங்களைப் பார்த்தும் வாயை மூடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனமான மௌனம் தான் என்றாலும் இப்போதைக்கு இதை மட்டுமே செய்ய முடிகிறது. பார்க்கலாம் எத்தனை விஷயங்களில் பேச முடிகிறதென்று.

சென்னையில் இருந்த பொழுது நண்பர்களுடன், The Legend, புலிவருது, அப்புறம் இன்னொரு முறை பில்லா பார்த்தேன்(இந்த முறை சூப்பரான தூக்கம்). புலிவருது படம் பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலை கனவு கனவுன்னு சொல்லி கடுப்பேத்தினாலும் ஏதோ மூணு மணிநேரம் பார்க்கிற மாதிரி இருந்தது. இரண்டு பாடல் கேக்குற மாதிரி இருந்தது. வேடந்தாங்கலுக்கும் சென்னை மியூஸியத்திற்கும் சென்றிருந்தேன் சுகமான அனுபவங்கள் இரண்டுமே. என் காமெரா லென்ஸ் போதாமை ஒரு குறை என்றாலும் வேடந்தாங்கல் நன்றாகயிருந்தது.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In புகைப்படம்

புகைப்பட தொடருக்காக காஷ்மீரத்து ஷிக்காரா



சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் தால் ஏரியில் கடந்து செல்லும் ஷிக்காரா படகிற்காக காத்திருந்து சூட்டிங் போட்ட படம்.

தால் ஏரி பிரம்மாண்டம் என்ற வர்ணித்தால் சொன்னால் கிளிஷே ஆகிவிடும், ஆனால் சூரியனின் அசைவுகளுக்கு(indeed பூமியின்) ஏற்ப தால் ஏரி காட்டும் வண்ணக்குழப்பம் பிரம்மாண்டம். காஷ்மீருக்கு சென்று இந்த வித்தையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம், அப்படி ஒரு தருணம் தான் மேலே படத்தில்.

அன்பு நண்பர் இராமநாதன் ஏதோ விளையாட்டென்று கூப்பிட்டிருந்தார். நான் ஊரில் இல்லாத காரணத்தால் போன வாரம் போல் போடுறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு போடாமல் விடப்பட்டது. இராம்ஸ் போட்டாச்சு!

ஆட்டத்துக்கு கூப்பிட்டே ஆகணுமா தெரியலை. கூப்பிட்டு வைக்கிறேன் நான் கூப்பிட்டா படம் போடுவாங்களா தெரியாது இருந்தாலும் ஏதோ என்னால் ஆனது.

1) பெயரிலி அண்ணாச்சி(ஏற்கனவே ஒரு தடவை மறுத்துட்டீங்க, இது உங்க கிரவுண்டு வந்து விளையாடுங்க).

2) ஹரன்பிரசன்னா(வாங்கய்யா வாங்க சீக்கிரமா ஒரு நல்ல படம் போடுங்க.)

3) உஷா அக்கா(பாத்துக்கோங்கப்பா நாங்க மூன்றில் ஒன்று சதவீதம் தந்துட்டேன்.)

Read More

Share Tweet Pin It +1

9 Comments

Popular Posts