In தொடர்கதை

தேவதையின் காதலன் - 5

அடுத்த இரண்டு வருடமும் இப்படித்தான் போனது. ஆனால் எங்கள் இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பயம் வரத்தொடங்யிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்கும் காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்வது நன்றாக இருந்தது. ஆனால் கல்யாணத்தைப் பற்றி நினைத்தபொழுது யாரோ மனதைப் பிழிவது போலிருந்தது. ஆறாம் செமஸ்டர் அதாவது கடைசி செமஸ்டரில் மிகவும் பயந்து போயிருந்தோம். இப்பொழுதெல்லாம் லெட்டருடன் சாயங்காலம் கொஞ்சநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருப்பாள்.



பெரும்பாலும் அவளுடைய அப்பா அம்மாவைப்பற்றி- அவள் குடும்பத்தைப் பற்றி, சொல்லிக் கொண்டிருப்பாள். அந்தச் சமயங்களில் எங்கள் இருவருக்கும் இடையில் சிவசங்கரி பெரும்பாலும் இருப்பாள். ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நாங்கள் கடைசி செமஸ்டர் ப்ரோஜக்ட் வாங்கியிருந்தோம், ஆளுக்கு ஒன்றாய். ஏற்கனவே இருக்கும் மொத்த புரோஜக்டையும் நாங்கள் படித்து முடித்து, கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

இடையில் சிவசங்கரி, கௌசியின் வீட்டிற்குப் போய் இரண்டு நாள் தங்கியிருந்தாள். என்ன பேசினார்களோ, அதை கௌசியின் அம்மா எப்படிக் கேட்டார்களோ தெரியாது, கௌசியை அழைத்து மெதுவாய் பேசியிருக்கிறார்கள். அந்த நாளில் இருந்து கௌசி என்னிடம் பேசமாட்டாள்; லெட்டர் வருவதும் நின்றது. என்னுடைய பயம் அதிகமானது. ஆனால் எங்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், புரோஜக்ட் பற்றிய எண்ணங்களும்தான் அதிகமாக வந்தது. சங்கரிதான் அண்ணே அவங்க வீட்டில் என்னமோ சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ஆனா நீங்க பயப்படாதீங்கன்னு சொல்லி என்னைத் தேற்றிக்கொண்டிருந்தாள்.

ப்ரோஜக்ட் சப்மிட் செய்தாகிவிட்டது, வைவாவும் முடிந்திருந்தது. அவள் சிவசங்கரியிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். நான் பக்கத்தில் வருவதைப் பார்த்தால் விலகிச் சென்றுவிடுவாள். நானும் சரி இப்பொழுது பேசவேண்டாம்மென்று விட்டுவிட்டேன். நாட்கள் குறைந்துவிட்டது, தேர்வுகள் நெருங்கின. கடைசி ஸ்டெடி ஹாலிடேக்களில் நான் அவளைப் பார்க்கவேயில்லை. அடுத்தநாள் எக்ஸாம் தொடங்குகிறது. அவள் நாங்கள் படிக்குமிடத்திற்கு வந்தாள். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தாள்.

"தாஸ் எங்கம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு! முதலில் அழுதாங்க பிறகு, நீ அந்தப் பையன்கிட்ட இனிமே பேசினா நம்ம வீட்டில இன்னொரு சாவு விழும்னு சொன்னாங்க. நான் ரொம்ப பயந்து போயிருக்கிறேன். இந்த காலேஜ் படிப்பை வைச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது தாஸ். அதனால நீங்க என்னை மறந்திடுங்க, நீங்க ரொம்ப நல்லவரு; நானா உங்ககிட்ட பேசாதவரைக்கும் நீங்களா வந்து பேசாம இருந்தீங்கள்ள, இதுபோலவே இருந்திடலாம். எங்கவீட்டில் இன்னொரு சாவு விழுவதைவிட நாம பிரிஞ்சி இருக்கிறதுதான் நல்லாயிருக்கும். அம்மாகிட்ட நான் உங்களைப் பத்தி பேசவேயில்லை, இன்னமும் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதை நினைச்சாலே மனசு படபடன்னு அடிச்சுக்குது. எனக்கு சுத்தமா தைரியம் கிடையாது. உங்களை என்னால மறக்க முடியுமான்னு கேட்டா தெரியாது. ஆனா கடவுள் அருள் இருந்தா, நாம மீண்டும் சந்திக்கலாம். நான் அப்பவே இப்படித்தான் நினைத்தேன் அதனால்தான் உங்களை காதலிக்கிறேன்னு கூட நான் சொல்லலை. என்னை மன்னிச்சிருங்க தாஸ், எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட நான் இதைச் சொல்லியிருப்பேன். ஆனா அடுத்தநாளே ஊருக்கு போறோம், நீங்க இதை எப்பிடி எடுத்துக்கிறீங்கன்னு எனக்கு தெரியணும் அதான் இப்ப சொன்னேன். நல்லா படிங்க, நல்லா எக்ஸாம் எழுதுங்க, நல்ல வேலைல சேருங்க, பார்ப்போம் கடவுள் நம்மளை சேர்த்து வைக்கிறாராருன்னு. 90 சதவீதம் நடக்க வாய்ப்பேயில்லை, நம்மக்கிட்ட இருந்தது சாதாரணமான நட்பா நினைச்சு மறந்திருங்க தாஸ். உங்களுக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பாள்..." சொன்னவள் நெருங்கி வந்து உதட்டில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நான் சுதாரிப்பதற்குள் மறைந்து போனாள்.

இது நான் ஒருவாறு யோசித்திருந்ததுதான் ஆனால் நேரில் அவள் சொன்னதும் என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. அடுத்த ஐந்து நாள்கள் என்னிடம் கண்ணாமூச்சி ஆடினாள். நாங்கள் எக்ஸாம் ஹாலிற்குள் நுழைந்ததும் உள்ளே வருவது, நான் வெளியே வருவதற்குள் திரும்பிவிடுவது என்று. அவளுக்கு நன்றாகத் தெரியும், நான் எக்காரணம் கொண்டும் எக்ஸாமோடு விளையாடமாட்டேன் என்று. ஆனால் கடைசி எக்ஸாம் வேகமா எழுதிவிட்டு வந்து பார்த்தேன், அப்பொழுதுதான் வெளியே வந்து கொண்டிருந்தாள். நான் அவள் அருகில் போக நினைத்தேன். அங்கிருந்தே கைகூப்பி அழுது வராதீங்கன்னு சைகைகாட்டினாள். பிறகு பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். நான் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

o

வாழவே பிடிக்கலை, அவளைப் போய் வீட்டில் பார்ப்போம் என்று நினைத்தேன் அதற்கும் மனது இடமளிக்கவில்லை. நான் இப்படி பைத்தியமாய் அலைவதால் வீட்டில் பயந்துபோய், என்னை டெல்லி சித்தப்பா வீட்டிற்கு பேக் செய்தார்கள். மனசு முழுக்க திருச்சியில் இருக்க, நான் மட்டும் டெல்லிக்குப் போனேன். சித்தப்பா வீட்டிற்கு போய் சில காலம் சிம்லா, குல்லு, மணாலியென்று ஊரைச் சுற்றிவிட்டு அவர்கள் ஆசைக்காய், பிறகு வேலையில் சேர்ந்தேன். அதன் பிறகு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்ததால், வார நாட்களில் அவள் ஞாபகம் வராது. வாரக் கடைசியில் வாழ்க்கை கொடுமையாக இருக்கும்.

நான் முனிர்க்காவில் இருந்து கிளம்பி, கனாட்பிளேசிற்குப் போய்விடுவேன். அந்த பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நிற்பேன். இல்லையென்றால் இந்தியா கேட்டில் உட்கார்ந்து பிள்ளைகள் விளையாடுவதைப் பார்ப்பேன். அந்த இரண்டு நாள்கள் ஓடுவதற்குள் நான் பலமுறை செத்துப் பிழைத்துவிடுவேன். டெல்லியில் சிலசமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலையிருக்கும்; கலீக்குகள் வெறுப்புடன் வர நான் மட்டும் சிறிது சந்தோஷமாய் வருவேன். அவளை சிறிது மறந்திருக்கலாமே. எனக்கு நம்பிக்கை சுத்தமாய் போயிருந்தது. இனிமேல் அவளை சந்திப்பதாவது; கல்யாணம் செய்துகொள்வதாவது. ம்ஹூம்; முடியாது என்ற முடிவிற்கு வந்தேன்.

காலேஜ் கான்வொக்கேஷனுக்குக் கூட போகவில்லை நான். அப்பா அம்மாவும் போகவில்லை, பிறகு டிகிரியை ஆஃபிஸ்ரூமிலிருந்து வாங்கினார்கள். எப்பொழுதாவது பிரபுவோ ராஜேஷோ மெய்ல் அனுப்புவார்கள். நான் கான்வொகேஷன் சமயத்தில் வந்த மெயிலில் கேட்டிருந்தேன், கௌசி வந்திருந்தாளா என்று. அதற்கு அவன், அவள் வரவில்லையென்றும் அதன் பிறகு ஒரு செய்தியும் அவளைப்பற்றி இல்லையென்றும் சொல்லியிருந்தான். சிவசங்கரியும் வரவில்லையென்றும் அவளுக்கு வேறொரு இடத்தில் அவள் மாமனுடன் கல்யாணம் ஆகிவிட்டதென்றும், கௌசியைப் போலவே சங்கரியும் பிரபுவிடம் வந்து அழுது, மறந்துடுங்கன்னு சொன்னதாகவும் சொன்னான். ஆனால் உண்மையில் பிரபு சங்கரியை மறந்துதான் போயிருந்தான். விஜியென்றொரு அவன் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான்.

வருத்தமாக இருந்தது, நான் கௌசிக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அவள் இல்லாத ஒரு கல்யாண வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த மெயிலுக்கு பிறகு நான் தாடியை ஷேவ் செய்துகொள்ளவில்லை, அது வளரத்தொடங்கியது. நான் என் சோகத்தை வெளியில் காட்டியது இப்படி மட்டும் தான். ஆபிஸில் கூட சிலமுறை சொல்லிப் பார்த்தார்கள், நான் செய்ய மாட்டேன் என்று மறுக்கவே விட்டுவிட்டார்கள்.

ஒரு வருடம் இப்படியே டெல்லியில் ஓடியது. ஆனால் அவள் முகமும் அந்தக் காதலும் என் மனதை விட்டு அகலவேயில்லை. ஆனால் நம்பிக்கை போயிருந்தது. நல்லகாலம் எங்கள் குடும்ப வழக்கப்படி 28,29ல் தான் கல்யாணம் செய்வார்கள். அதற்கு இன்னும் 7,8 ஆண்டுகள் இருந்தது. நான் நினைத்தேன் அதற்குள் இந்த ஞாபகம் மறந்துவிடுமென்று. ஆண்டுகள்தான் ஓடியது. ம்ஹூம் முதல் காதல் மறந்துபோகவேயில்லை.

o

வேலை மாறி நான் பெங்களூர் வந்தேன்; இங்கே கொஞ்சம் அதிக சம்பளம். இரண்டாம் வருடம் இங்கே கழிந்தது, அற்புதமான ஊர், அழகான மக்கள், சுமாரான சேலரி என அத்துனையும் வரப்பெற்றேன். காதல், கௌசி, தாடி மட்டும் மாறவேயில்லை. இப்பொழுது முடியும் வளர்க்கத் தொடங்கியிருந்தேன்; போனிடைல். இடையில் ஊருக்குப் போயிருந்த பொழுது கொஞ்சம் கூட மறைக்காமல் பிச்சைக்காரனைப்போல் இருக்கிறாய்னு அம்மா சொன்னார்கள்.

இங்கே ஒரு வருடம் பெங்களுரில் ராஜேஷ் மற்றும் பிரபு பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். சிலசமயம் எப்படி வேலை வாங்குவது எனக் கேட்டு சில மெய்ல்கள் வரும்; அவ்வளவே. நான் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் நல்லவிதமாய் வேலைசெய்து நிறைய கற்றுக்கொண்டிருந்தேன். பெங்களுர் ஒரு சௌத்இண்டியன் சிட்டி கிடையாது என்றுதான் சொல்லுவேன். எல்லா ஊரிலுமிருந்து மக்கள் வந்து குடியேறிக்கொண்டிருந்தார்கள். நான் வேலை செய்த மகாத்மா காந்தி ரோடு, மிகப் பிரசித்தம். அத்துனை ஊர் மக்களையும் குறிப்பாக, நிறைய பெண்களை குறைந்த ஆடைகளுடன் பார்க்கலாம்.

குறைந்த ஆடை பெண்களைப்பற்றிச் சொல்லியதால் இதைப்பற்றியும் சொல்ல வேண்டும், நான் வேலை செய்த கம்பெனியில் நிறைய முழு ஆடை அணிந்த பெண்கள் இருந்தார்கள். இதற்கு என் கம்பெனியைத் தவிர பெங்களூரில் குறைவான ஆடை அணிந்த பெண்களே இருந்தார்கள் என்ற பொருள் ஆகாது. நான் கம்பெனியில் சாமியார் என்று பெயர் எடுத்திருந்தேன். பதினெட்டு மணிநேரம் கம்பெனியில்தான் இருப்பேன், வேலைசெய்து கொண்டு. மீதி நேரம் கம்பெனியிலேயே தூங்கிக்கொண்டு இருப்பேன். எங்கள் கம்பெனி அதற்கு அனுமதி கொடுத்திருந்தது.

நான் வேலை செய்துகொண்டே பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதேசமயம் என்னுடைய வேலை சம்மந்தமான சில சர்டிபிகேஷன்களும் செய்து கொண்டிருந்தேன். அதன் காரணமாக ஒரு நல்ல சம்பளத்துக்கான வேலை புனேவில் கிடைத்தது. ஆனால் இடம் ஒரு பெரும் காடு. நான் டெல்லியில் கனாட்ப்ளேசிலும், பெங்களுரில் மகாத்மா காந்தி ரோடிலும் வேலை பார்த்து, புனேவில் காட்டில் வேலைபார்ப்பதை போன்ற உணர்வே அதிகமாக ஏற்ப்பட்டது. ம்ம்ம் இப்படியே புனேவிலும் ஒரு வருடம் ஓடியிருந்தது. இடையில் நான் ப்ரோஜக்ட் சம்மந்தமாய் சிலமுறை ஐரோப்பாவும் சென்றுவர, மூன்று ஆண்டு முடிவில் என் கையில் பட்ட மேற்படிப்பும் மூன்றாண்டு வேலைசெய்த எக்ஸ்பீரியன்சும் இருந்தது.

எனக்குச் சுலபமாய் இப்பொழுதெல்லாம் கௌசியின் நினைப்பு வராது. நான் நிச்சயமாய் சாமியார் கிடையாது. பார்த்த சில மணிநேரத்தில் லவ்லெட்டர் கொடுத்த நான் சாமியாராக இருக்க முடியாது. கம்பெனியில் சிலசமயம், சில பெண்களைப் பார்க்கும் பொழுது கௌசியின் ஞாபகம் வந்துவிடும். நான் நினைப்பேன் அவளுக்கு கல்யாணமாகி இந்நேரம் ஒன்று இரண்டு குழந்தையிருக்கும் என்று. இப்பொழுது தாடியும் நன்றாக வளர்ந்து முடியும் நீளமாக போனிடைல் போட்டு, பார்க்க சாமி யார் மாதிரியே இருந்தேன்.

அம்மாவிடம் சின்னவயதில் விவேகானந்தரைப் பற்றி கேட்டு, அவரைப் போலவே ஆகவேண்டும் என நினைத்ததுண்டு, சில சமயம் அம்மாவை பயமுறுத்தியிருக்கிறேன், சாமியாராய் போகிறேன் என்று. அம்மா கூலாய் சொல்லுவார்கள், நீ இந்த உலகத்தில் கஷ்டப்படுவதை விட விவேகானந்தரைப் போலவோ, இல்லை மிலிட்டிரியில் சேர்ந்து தாய்நாட்டுக்காக உயிரை விட்டாலோ சந்தோஷம்தான் என்று. அப்பொழுது விளையாட்டாய் சொன்னது இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வரத் தொடங்கியிருந்தது.

அன்றைக்கு ஒரு நாள், என்னிடம் வந்த புரோஜக்ட் மேனேஜர், "தாஸ், புரோஜக்ட் லீடர் வரவில்லை, புரோஜக்ட் பெஞ்சில் இருந்து ஒரு டெவலப்பர் எடுக்க வேண்டும். இன்டர்வியூ பண்ண வர்றியா?"

இது பல சமயம் நடக்காது; இதுவரை நடந்ததேயில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் வெறும் பிஎஸ்ஸி என்பதால் பலசமயம் கூப்பிடமாட்டார்கள். ஏனென்றால் நிச்சயம் நான் இன்டர்வியூ பண்ண இருப்பவர்கள் பிஈ படித்தவர்களாகவோ இல்லை, அதற்கு மேல் படித்தவர்களாகவோத்தான் இருப்பார்கள்.

"கிரீஷ், ப்ராப்ளம் வராதுன்னா பரவாயில்லை. வேணும்னா நீ நம்ம கிருஷ்ணகுமாரை கூப்பிட்டுக்கோயேன்." வயதில் மிக மூத்தவன்தான் என்றாலும் கம்பெனி பழக்கம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுதான்.

"அதுவும் இல்லாமல் பையன் என்னைப் பார்த்து பயந்திரப்போறான்." நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"அவன் பயப்படுகிறானோ இல்லையோ, நான் உன்னை முதலில் பார்த்ததும் பயந்திட்டேன்." சொல்லிச் சிரித்தான்.

"சரி கிரீஷ், நீ ஆரம்பிச்சிறு; நான் வந்து கலந்துக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம்!" சொன்னதும் அவன் கிளம்பினான். நான் ஒரு பத்து நிமிஷம் கழித்து உள்ளே போனேன்.

அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து என்னவோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். கொஞ்சம் குண்டாய் இருந்தாள். அவளை கிரீஷ் அவளுடைய பழைய புரோஜக்ட் ஆர்க்கிடெக்சர் வரையச் சொல்லியிருக்கணும். கருத்தாய் வரைந்து கொண்டிருந்தாள்.

நான் நேராய் அவனிடம் போய், "கிரீஷ் பையன்னு சொன்னே, பெண்ணு இருக்கு?"

"இந்த ரெக்ருட்மெண்ட் டிபார்ட்மெண்ட் எப்பவுமே இப்படித்தான். நாம ஏதாவது ஒன்னு சொன்னா அதுக்கு நேர்மாறா எது இருக்கோ அதைத்தான் செய்வாங்க. ஃபிரஷ்ஷர் அனுப்புங்கடான்னா எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களை அனுப்புவாங்க. இன்னிக்கும் பார் பையன்னு சொல்லிட்டு பெண்ணை அனுப்பிட்டாங்க. உன் கொஸ்டின்ஸ் கிளயர் பண்ணி இந்தப் பெண்ணு ப்ரோஜக்ட்ல வந்து, ம்ம்ம் இன்னும் பத்து மெயில் அனுப்புனும் நான் இன்னொரு ஆள் பிடிக்க." எப்பொழுதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் கிரீஷ் இந்தியில் சொன்னான் இதை அதுவும் அந்தப் பெண் இருக்கும்போதே. மிகவும் நல்ல மனிதன் கிரீஷ்; இப்படிச் செய்யவே மாட்டான். நான் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தேன். அவன் ஆங்கிலத்தில், "இது தமிழ்நாட்டுப் பெண்ணாம், இந்தி தெரியாதாம். பேர் என்னவோ சொன்னிச்சே?" சொல்லி யோசிக்க, அந்தப் பெண் தலைநிமிர்ந்து, "என் பெயர் கௌசல்யா ரங்கனாதன்." என்றாள்.

o

அவளே தான், ஆனால் நன்றாய் குண்டடித்திருந்தாள். என்னை அடையாளம் தெரிந்ததா இல்லையா தெரியவில்லை, ஒருவேளை இன்டர்வியூ பயமாய் இருக்கலாம். நானும் கரடிபோல் இருந்தேன். சுடிதார் போட்டு, ஷால் போட்டிருந்ததால், தாலி இருக்கிறதா பார்க்க முடியவில்லை, கால்களை டீப்பாய்க்குக் கீழே வைத்திருந்ததால், மெட்டி போட்டிருந்தாளா தெரியவில்லை. அப்பா பெயரும் ஞாபகமில்லை, ரங்கனாதனா... அந்த சமயத்தில் உண்மையிலேயே என் மூளை வேலை செய்யவில்லை; நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்; அவளும் தான்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கிரீஷ், "தாஸ் இவங்களை உனக்கு முன்பே தெரியுமா?" நான் அவன் கேட்டது புரியாதது போல் முழிக்க, அவன் திரும்ப ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான். நான் தெரியும்னு தலையாட்டியதும், "சரி பேசிக்கிட்டு இருங்க, நான் வந்திருறேன்." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான். நான் சொன்னேனல்லவா கிரீஷ் நல்ல மனிதன்னு அந்தப் பண்புதான்.

நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க, அவள்தான் ஆரம்பித்தாள்,

"உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"இல்லை..."

"யாரையாவது காதலிக்கிறீங்களா? காதலிச்சீங்களா எனக்கப்புறம்?"

"இல்லை... ஆமாம் ஏன் கேக்குற இதையெல்லாம். என்ன இவ்வளவு குண்டாயிட்ட?"

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் அதான்."

"அப்பிடியா ரொம்ப சந்தோஷம். உனக்கு எத்தனை குழந்தைங்க, புருஷன் என்ன வேலை பார்க்கிறார்?" கேட்டதும் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தவள்.

"உதை வாங்குவீங்க, நீங்கத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை கொடுக்கணும்." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

"என்னடி சொல்ற?" நான் பதற்றமடைந்தேன்.


"பின்ன நான் உங்கள காதலிச்சனா? ஊர்ல இருக்கிறவனையெல்லாம் காதலிச்சனா? உங்ககூட தானே நான் சினிமாவுக்கு, கோயிலுக்கெல்லாம் வந்தேன். அதுசரி இதென்ன கோலம் சாமியார் மாதிரி, ஆனா முன்னவிட இப்பத்தான் நீங்க அழகா இருக்குறீங்க." நான் இப்ப அந்த இன்டர்வியூ ரூமிற்குள் இருப்பதாக நினைக்கிறீங்களா. ம்ஹூம் நான் எங்கேயே பறந்து போய்க்கிட்டிருந்தேன். பறந்து.......

யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு திரும்பிய என்முன்னால் கிரீஷ் நின்றிருந்தான்.

"கூல்டிரிங்ஸ் வரச்சொல்லவான்னு கேட்கவந்தேன்."

அவனை திரும்பிப் பார்த்து, "சாப்பாடே எடுத்துட்டு வரச்சொல்லுங்க கிரீஷ்!"

நான் சொன்னதும் நம்பாததைப் போல் பார்த்தவன், பிறகு என்ன நினைத்தானோ சிரித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டான். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் பழைய கௌசியில்லை; சிறிது சதை போட்டிருந்தாள். முடியின் நீளம் அதிகமாகியிருந்தது. மற்றபடிக்கு அதே முகம், அதே கண், அதே..., என்னால் என் கண்களை நம்பவேமுடியவில்லை. நான் அவளை இப்படி பலமுறை கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். பார்வை கொஞ்சம் ஏடாகூடமாய் ஆனதும் ஒன்று என்னைத் தலையில் கொட்டித் திருத்துவாள், இல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவாள். ஆனால் இன்று இரண்டும் இல்லை. அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"சரி என்ன நடந்துச்சு இந்த மூணுவருஷமா சொல்லு?"

நான் மெதுவாய் எங்கள் பக்க சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன், அவள் என் எதிரில் இருந்த சோபாவில் இருந்து எழுந்து வந்து என்னருகில் உட்கார்ந்தாள் பிறகு, "அம்மாகிட்ட வந்து நடந்ததச் சொன்னேன், இனிமே உங்களை பார்க்க மாட்டேன்னு சொன்னேன். நான் வீட்டுக்கு வராதீங்கன்னு சொன்னாலும் மீறி நீங்க வருவீங்கன்னு நினைச்சேன், ஒரு நாள் சங்கரி கல்யாணம்னு ஃபோன் பண்ணின பொழுதுதான் தெரிந்தது, நீங்க டெல்லிக்குப் போய்ட்டீங்கன்னு. என்னதான் பாக்க வராதீங்கன்னு சொன்னாலும் மனசு கேக்கலை, இரண்டு நாள் அழுதுக்கிட்டேயிருந்தேன், என்னன்னு கேட்ட அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன், நீங்க டெல்லி போய்ட்டதா. அம்மாவால நம்பவே முடியலை. அவங்க நினைச்சாங்க, நீங்க வீட்டுக்கு முன்னாடி ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்து ரகளை பண்ணுவீங்கன்னு. இப்படியே நானும் அம்மாவும் ரகசியமா இதைப்பத்தி பேசுறதை பார்த்த அப்பா என்கிட்ட வந்து, என்ன விஷயம்னு கேட்டார். நான் அம்மாகிட்டு கேளுங்கன்னு சொன்னேன். அன்னிக்கு நைட்டு அவங்க ரூமில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது." சொல்லிவிட்டு நிறுத்தியவள் பிறகு, என் ஒரு கையை எடுத்து அவள் கையில் வைத்துக் கொண்டாள்.

"அடுத்த நாள் என்கிட்ட வந்த அப்பா, ’கௌசி, ஏற்கனவே ஒரு சாவு விழுந்ததால உங்க அம்மா ரொம்ப பயப்படுறா, ஆனா நான் இன்னொரு சாவு விழுந்துடக்கூடாதுன்னு பயப்படுறேன். உங்கக்காவும் இதே தப்பைதான் பண்ணினாள். உனக்கு ஒரு இருபது வயசு இருக்குமா. அதுக்குள்ள காதல்னுட்டு..., சரி அது போகட்டும் நீ உங்க அக்கா மாதிரி கிடையாதுன்னு எனக்குத் தெரியும். சொல்லு அந்த பையன் யாரு, நல்ல பையனா, படிப்பானா, குடும்பம் எப்படி, உன்னையும் கொன்னு, எரிச்சு, சாம்பலை ஆத்தில கரைக்கிற அளவுக்கு திடம் இப்ப இல்லை. நான் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன்..' அப்பா சொன்னதும் நமக்குள்ள நடந்த அனைத்தையும் அப்பாகிட்ட சொன்னேன்.

நீங்க டெல்லியில இப்ப இருக்கிறதாகவும், ஏதோ வேலை பார்ப்பதாகவும் சொன்னேன். நீங்க பிரச்சனையெதுவும் பண்ணாமல் நான் சொன்னதும் போனீங்க பாருங்க அதில் தான் எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷமே. நானும் சொல்லிட்டேன், "அப்பா நான் தாஸ்கிட்ட சொல்லிட்டேன் என்னை மறந்துடுங்கன்னு; அவனும் சோகத்தையெல்லாம் மனசில வைச்சுக்கிட்டு என்னைத் தனியா விட்டுட்டுபோய்ட்டான். ஆனா நிச்சயமா ஒரு நாள் திரும்பி வருவான். நீங்க அதுவரைக்கும் ஒன்னும் பண்ணவேண்டாம். வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் நானும் மேல்படிப்பு எதாச்சும் படிக்கிறேன்"னு சொன்னேன். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கப்புறம் என்ன, பிரபுகிட்ட கேட்பேன் நீங்க எங்க இருக்கிறீங்க, என்ன பண்ணுறீங்கன்னு.

ஆனா என்னைப்பத்தி சொல்லவேணாம்னு சொல்லியிருந்தேன். உங்களுக்கும் என்ன சின்ன வயசுதானே, இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னுதான் விட்டுவைச்சேன். ஒரு விஷயம்தான் உறுத்திக்கிட்டேயிருந்தது, என்னடா இது நாம ஒன்னும் அவ்வளவு அழகில்லை நம்மளுக்கே முதல்நாள் லவ்லெட்டர் கொடுத்தவராச்சே, டெல்லியில் ஃபிகருங்களெல்லாம் சூப்பரா இருக்குமே. எங்க கவுந்திடப் போறீங்களோன்னு தான் ஒரே பயம். ஆனா நான் உங்களை நம்பினேன். நீங்க எனக்கு பத்திரமா திரும்பக் கிடைப்பீங்கன்னு முழுசா நம்பினேன். அதே சமயம் நீங்க நல்ல வேலையில் இருந்து வந்தீங்கன்னா நம்ம கல்யாணம் சீக்கிரம் ஆகிடும்னுதான் அப்படிச் செய்தேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு மட்டும் தான் தெரியும். ஏன்னா எனக்கும் பிரபுக்குமே தொடர்பு அவ்வளவா கிடையாது."

"அப்ப இந்தக் கம்பெனி?"

"இல்லை தெரியாது, நீங்க புனேவில் இருக்கிறதா தெரியும் அவ்வளவுதான், நானும் மூணு வருஷம் காத்துக்கிட்டிருந்தாச்சு, இனிமேலாவது உங்களை பார்க்கலாம்னுதான், இந்தக் கம்பெனியில் இன்டர்வியூ கிளியர் பண்ணி சேர்ந்தேன். இங்க வந்து தேடிக்கலாம்னு. நீங்க இந்தக் கம்பெனியில் இருப்பீங்கன்னு தெரியாது."

அவள் சொல்வதை நம்பமுடியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும், ரொம்ப நேரம் அழுகழுகையா வரும். என்னடா உங்கக்கிட்ட இப்படி பண்ணுறமேன்னு, என்கிட்டயாவது நீங்க எழுதின லவ்லெட்டர், புரோக்கிராம் பத்தி எழுதின லெட்டர், கவிதைகள், நான் எழுதி, நீங்க படிச்ச லெட்டர்ன்னு இருந்துச்சு, உங்ககிட்ட என் நி னைவா ஒன்னுமே கிடையாது, அந்தக் கடைசி முத்தத்தை தவிர; இப்படி பண்ணிட்டமேன்னு சில நாள் ராத்திரி முழுக்க அழுதிருக்கேன். சில சமயம் முடியாம மெய்ல் அனுப்பிரலாம்னு நினைப்பேன். ஆனா கட்டுப்படுத்திக்கிட்டேன். சோகமா இருக்கிறப்பல்லாம் உங்க லவ் லெட்டரை படிச்சால் சிரிக்கத் தொடங்கிவிடுவேன்.

எப்படி ஒருத்தனால் முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு லவ்லெட்டர் தரமுடியும், அதுவும் முதல் நாளே; இதை யோசிக்காத நாளே கிடையாது. நானே நினைச்சு நினைச்சு சிரிச்சிக்கிட்டு இருப்பேன், அம்மா பார்த்துட்டு பயந்திருவாங்க. ஆமாம் தாஸ் நீங்க எனக்குப் பிறகு அழகான பொண்ணுங்களை பார்க்கவேயில்லையா?"

"நீ ஒன்னு! சூப்பரானா பெண்ணுங்களையெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா உன்னை மறக்க முடியலை. என்ன சொன்ன? உன் நினைவா ஒன்னுமேயில்லைன்னா; இருக்கு; நீ போட்டு என்கிட்ட கொடுத்த செயின்!" கையில் ப்ரேஸ்லெட் மாதிரி போட்டுக்கொண்டிருந்ததைக் காண்பித்தேன்.

"சில சமயம் எனக்கு உன்மேல் ரொம்பக் கோபமா வரும். அதுவும் யாராவது ஒரு பொண்ணும் பையனும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு பைக்ல போறதைப் பார்த்தா அப்பிடியே பத்திக்கிட்டு எரியும். அப்புறம் இந்த செயினைக் கழட்டி என் லாப்டாப் மேல போட்டு, அதை நீயா நினைச்சுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டி, என் மனசை சமாதானப்படுத்துக்குவேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"ஆனா ஒன்னு இப்ப உன்னைப் பார்த்த பிறகு சொல்றேன், உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்க சித்தப்பா சொல்லியிருக்காரு, சந்தோஷத்துக்கும் குண்டாயிருக்குறதுக்கும் சம்மந்தமே கிடையாதுன்னு. நீ நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி, இப்ப குண்டா அசிங்கமா இருக்க, இதைவிட இங்க புனாவில ஃபிகருங்க எல்லாம் சூப்பரா இருக்குங்க, அதில ஒரு குஜராத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணிப்பேன். ம்ஹூம் உன்னைப் பண்ணிக்க மாட்டேன்." நான் சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தேன்.

"தாஸ் வேணும்னா சொல்லுங்க இரண்டு மாசம் சாப்பிடாம இருந்து, ஒல்லியாயிருறேன். நீங்க விளையாட்டுக்குத்தான் சொல்றீங்கன்னு தெரியும், ஆனால் இனிமேல் விளையாட்டுக்குக் கூட அப்பிடி சொல்லாதீங்க. ஆளையும் பார்க்காம, உங்களை பத்தி முழுவிவரமும் தெரியாம, நீங்க யாரையும் காதலிச்சிருக்க மாட்டீங்க, கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்க மாட்டீங்கன்னு வெறும் உங்க மேல வெச்ச நம்பிக்கைலதான் வாழ்ந்துக்கிட்டிருந்தேன். ஆனா அதைத்தவிர வேற ஒரு பிரச்சனையே கிடையாது இந்த மூணு வருஷத்துல; அதான் கொஞ்சம் குண்டாயிட்டேன்."

நான் அவளை இன்னும் வம்பிழுக்க எண்ணி, "இல்லை கௌசி, இந்த மூணு வருஷத்துல, சில சமயம் சாமியாரா போயிடலாமான்னு நினைச்சதுண்டு. அப்பல்லாம், "சாமி நான் சாமியாரா ஆகாம, கௌசியை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளை திருப்பதி கூட்டிக்கிட்டு வந்து மொட்டை போடுறேன்"னு வேண்டிக்கிட்டேன், அதனால நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா மொட்டை போடவேண்டியிருக்குமே?" கேட்டுவிட்டுச் சிரித்தேன்.

சிறிது நேரம் என்னையே பார்த்தவள், "தாஸ் உங்களுக்காக ஆ·ப்டரால் இந்தத் தலைமுடிய இழக்க மாட்டேனா? நீங்க விளையாட்டுக்கு சொன்னீங்களோ, இல்லை உண்மையா சொன்னீங்களான்னு தெரியாது. நான் சாமிக்கிட்ட இப்படி வேண்டிக்க மட்டும்தான் இல்லை, ஆனா தினம் தினம் சாமிக்கிட்ட சொல்லிக்கிட்டேயிருப்பேன், தாஸை என்கூட சேர்த்துரு, சேர்த்துருன்னு. இப்ப நீங்க சொன்னதை சாமியே என்கிட்ட கேக்கிற மாதிரி எடுத்துக்கிறேன். சாமி அப்பிடியே அழகா உங்களை என்கிட்ட சேர்த்துருச்சு; இனிமேல் நீங்களே மறுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் மொட்டைதான்; அதுவும் திருப்பதியில." சொல்லிவிட்டு என்னைக் கட்டிக்கொண்டாள்.

இரண்டு வருடம் கழித்து அவளுக்கும், எங்களுக்கு பிறந்த பெண்ணிற்கும் சேர்த்து திருப்பதியில் மொட்டை போட்டோம்.

முற்றும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In குறுந்தொகை

குறுந்தொகை - இளமையின் அழகு உச்சத்தில் மயங்கினான்

கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்ந் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணங்குக - தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

காதற் பரத்தை தலைமட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.

- மாங்குடி மருதனார்.

நான் புரிந்து கொண்டது:

தன்னைப் பிரிந்த சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவி, தலைவனை தன்னிடம் இருந்து பிரித்த பரத்தையைப் பற்றித் தவறாகப் பேசினாள். இதைக் கேள்விப்பட்ட பரத்தை, வாளைமீன் ஒன்று நிறை மாதமாய் சூள் கொண்டிருக்கும் பொழுது துள்ளித் தாவி சாப்பிட இயலாமல் தானாய் வளைந்து கிடைக்கும் மாமரக் கிளையில் பழுத்து நீரில் கிடக்கும் மாங்கனியை உண்பதைப் போல இளமையில் அழகின் உச்சத்தில் இருக்கும் என்னை நானாய்ச் சென்று தலைவனை மயக்காமல் என் அழகில் மயங்கி அவனாய் வந்து தான் சேர்ந்து கொண்டான். அது தெரியாமல் நான் தலைவனை மயக்கினேன் என்று தலைவி நினைத்தது உண்மையானால் கடல் தெய்வம் என்னை பழிதீர்த்துக் கொள்ளட்டும் என்றாள்.



பொருள்:

தோழி, திரண்ட கொம்பினையுடைய வாளைமீனின், நிறைந்த சூலினைக் கொண்ட இளைய பெட்டை, கொத்தாக உள்ள தேமாவின் இனிய கனிகளைப் பற்றிக் கொள்ளும். மனையாட்டி, அறியாமையால் புலத்தற்குக் காரணமாகும் அத்தன்மையுடையேமாகத் தலைவன் திறந்து யாங்கள் ஆயினோம் என்றால், இத்தகைய வளம் பொருந்திய பழமையாய், அறிவுச் சுற்றத்தால் முதிர்ந்த வேலிர் குலத்திற்கு உரியவர்களின் குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துக.

விளக்கம்:

குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள கடல், கீழ்க்கடலைக் குறிப்பதாகும் தேமாவின் கனி, நீர் நிலையில் உதிர்ந்த கனியன்று, நீரில் படியும் கிளைகளில் பழுத்த கனி ஈண்டு குறிக்கப்பட்டது.

வாளை மீனின் தலையீற்றுப் பெடை ஆதலின், நீரில் பல இடங்களிலும் விரைந்து சென்று, இரை தேட இயலாமை உணர்த்தப்பட்டது. இருக்கும் இடத்திலேயே வளமான, இனிய, கொத்தோடு விளங்கும் மாங்கனி, வாளையின் மடநாகு முயற்சி ஏதுமின்றிப் பற்றிக் கொள்வதற்கு ஏற்ப, நீரில் தோய்வதாய்க் கிடந்தது. தலைவனும், தானே வலியச் சென்ற தங்களை நுகர்ந்தானேயன்றி, தாங்கள் அவனை மனையாட்டியிடமிருந்து, அவள் கூறுவதுபோல் நயப்பித்துப் புறம் போகாதவாறு பிரித்திலம் என்றாள். மனையாட்டி, உண்மை அறியாமல் தம்மீது குறை கூறிப் புலந்தனள் என்றும், யாம் அத்தகையேம் ஆயின், அத்தவற்றிற்குத் தண்டமாகக் கடல் தெய்வத்தால் ஒறுக்கப்படுவேம் ஆகுக என்றும் பரத்தை சூள் உரைத்தனள்.

மனையோள் என்ற சொல், பரத்தை தலைவனின் மனைக்குரியளாம் பேறு பெறாமை குறித்தது. ‘வாளை மடநாகு’ எனப் பரத்தை குறிப்பிடுதல், தலைவன் நுகர்தற்கு ஏற்ற இளமை நலம் வாய்க்கப்பெற்றமை கருதியாகும். இல்லறக் கடமைகளுக்கு மட்டும் உரியளாம் தன்மை பெற்ற தலைவி, ’மனையோள்’ எனப் பரத்தையால் இகழ்ந்துரைக்கப்பட்டனள். மனையோள் என்ற சொல், புறத்தில் நிகழ்வது அறியும் வாய்ப்பு இல்லாதவள் மனைவி எனக்குறிப்பதாகும். தீது நீங்கக் கடலாடும் மரபு ஈண்டுக் குறிக்கப்பட்டது.

சொற்பொருள்:

நாகு : இளைமை குறித்த சொல்
கணைக்கோடு - திரண்ட கொம்பு, செதிலைக் குறித்தது.
கமஞ்சூல் - நிறைந்த சூல், முதற் சூல்
தேக்கொக்கு - இனிய மா; மாவினுள் ஒரு சாதி - தேமா
துணர் - கொத்து
பவ்வம் - கடல்
அனையேம் - அத்தகையேம் - நெஞ்சறி கட்டு
அணங்குக - வருத்துக

மேற்கோள்:

1. “நீடிய மரத்த கொடுநோய் மலிர் நிறை” குறுந்தொகை 99
2. “பைந்துணர், நெடு மரக் கொக்கின் நறுவடி” பெரும்பாணாற்றுப்படை 308-309
3. “தொன்று முதிர் வேளிர் குன்றூர்” நற்றிணை 280
4. “அணங்குடை முந்நீர்” அகநானூறு 207
4. “உருகெழு தெய்வம், புனை இருங்கதுப்பின் நீ வெய்யோள் வயின் அனையேன் ஆயின் அணங்குக என் என” அகநானூறு 166
6. “அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம்பாடு ஆதல் அதனினும் அரிதே” நற்றிணை 330
7. “கழனி மாஅத்து விளைந்து உகுதீம்பழம் பழன வாளை கதூஉம்” குறுந்தொகை 6

பொருள் முடிவு:

தோழி மனையோள் புலக்கும், மகிழ்நற்கு அனையேம் ஆயினம் எனின் பவ்வம் அணங்குக. 

முனைவர் வி. நாகராசன் உரை

நானா காரணம்?

தோழி!
வாளைமீன்கள் பழங்களைக் கவ்வும்
வேளிர்குன்றத்தின்
கிழக்கே உள்ள கடல்
என்னைக் கொள்ளட்டும்.
அறியாமையால் அவர் மனைவிக்கு
என்னால் புலம்பல்
ஏற்பட்டதென்றால்.

சுஜாதா - மருதம் _ காதற் பரத்தை கூற்று

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 4

அன்றைக்கு மனசு சுத்தமாய் நொறுங்கிப் போயிருந்தது எனக்கு. நான் அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, காதலால் சாவு விழுந்த வீட்டின் ஒருபெண், லவ்லெட்டர் கொடுத்தால் அப்படித்தான் நடந்துகொள்வாள் என்பதை. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது. பிரபுவும் ராஜேஷம்தான் சிறிதளவு சமாதானப்படுத்தினார்கள். ஏதோ ஞாபகமாய் மாலை நோட்டை சிவசங்கரியிடம் வாங்காமலே சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் வந்ததில் இருந்து, கௌசி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்ருந்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.



அன்று மாலை எல்லோரும் சென்றவுடன், சிவாவும் கௌசியும் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிவசங்கரி தான் தொடங்கினாள்.

"கௌசி உங்ககிட்ட என்னவோ பேசணுமாம்." சிவசங்கரி தான் சொன்னாள் அதையும்.

"சொல்லச் சொல்லு." அந்த விளையாட்டு போரடிக்கத் தொடங்கினாலும் சொன்னேன்.

பிரபுவும், ராஜேஷம் அங்கிருந்து நகரத்தொடங்க, "நீங்களும் இருங்க!" என்று கௌசி சொல்லிவிட்டு, இருவரும் நின்றதும், "இங்க பாரு சங்கரி, எனக்கு இப்ப இவர் மேல கோபம் இல்லை, நான் என் குடும்பத்தில் நடந்ததை மனசில் வைச்சிக்கிட்டு, அவரு சாதாரணமா லவ்லெட்டர் கொடுத்ததை பெரிய அளவில் கொண்டுவந்திட்டேன். ஆனா அவர் பண்ணியதும் தப்புத்தான். பரவாயில்லை, காதல்ங்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது, அவரோட நோட்டை படிச்சேன் நான் மனசால அவரை பாதிச்சிட்டேன்னு நினைக்கிறேன். இவரைப் பார்த்தா எனக்கு பாவமாயிருக்கு, இன்னும் சொல்லப்போனா எனக்கு அவரைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு, இதுக்கு நிச்சயமா நான் அவரை காதலி க்கிறேன்னு அர்த்தம் இல்லை. எங்க அப்பா அம்மா சம்மதத்தோடத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன், அது யாராயிருந்தாலும் சரி; அவராயிருந்தாலும். அவ்வளவுதான். இனிமேலும் நான் அவர்கிட்டையும் அவர் என்கிட்டையும் பேசாம இருக்க வேணாம். ஆனா சில கண்டிஷன்ஸ். உங்கள்ல யாராவது கூடயிருக்கிறப்ப அவர் பேசலாம், இதுகூட ஆரம்பிக்கிறதுக்காத்தான். ஆனா எக்காரணம் கொண்டும் காதலை பத்தி மட்டும் பேசக்கூடாது. பேசுறது கல்லூரிக்குள்ல மட்டும்தான். வெளியே நான் அவரை இதுவரைக்கும் என்னைப் பின்தொடர்ந்து பார்த்ததில்லை, அதுவே போதும். கல்லூரிக்கு வெளிய பேசக்கூடாது. என்னை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுக்கெல்லாம் சம்மதம்னா பேசலாம்!" சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.

நான் அவள் சொன்ன விஷயம் அளித்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டவனாய், "என் நோட்டைக் கொடு!" நேராக அவளிடம் கோபமாகக் கேட்டேன்.

"மறந்திட்டேன், அதையும் சொல்லணும்னு நினைச்சேன். என் பேரை இனிமே நீங்க நோட்டில எல்லாம் எழுதாதீங்க. ப்ளீஸ். அப்புறம் உங்க நோட்டில் இருந்த பாட சம்மந்தப்பட்ட பேப்பர்களை தவிர மற்றவற்றையெல்லாம், எரித்துவிட்டேன். அதுக்காக மன்னிச்சுக்கோங்க." சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.

நான் கோபமாக பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்.

அதிலிருந்து எங்களுக்குள் சிறிது பேச்சுவார்த்தை ஆரம்பமானது. சிலமுறைதான் அவள் என்னுடன் நேரடியாகப் பேசுவாள். பல சமயங்களில் முன்புபோல் யாராவது ஒருவரிடம் சொல்லித்தான் பேசிக்கொண்டிருந்தாள். நான் பெரும்பாலான சமயங்களில் அவள் பேசும்போது அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் இதை கவனித்துவிட்டு அவள் பேச்சை முறித்து கிளம்பிப்போய்விடுவாள். சிறிது நாள்களிலேயே அவள் வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரத்தொடங்கியது. ஆனால் அவள் என்னிடம் வாங்கிச் சாப்பிட மாட்டாள். அவள் சிவசங்கரியின் டிபனைச் சாப்பிட, சிவாதான் குஸ்கா சாப்பிட்டு வந்தாள்.

எங்கள் லெக்சரர் எல்லோருக்கும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்து எழுதி வரச் சொன்னார். எழுதினால் தான் இன்டர்னல் மார்க் என்று சொல்லிவிட்டதால், நான் சிவசங்கரியிடம் என்னுடையதையும் எழுத சொன்னேன். அவளுக்கு கோபம்.

"அண்ணே நான் ஏற்கனவே பிரபுவோடதையும் எழுதணும். இருந்தாலும் பரவாயில்லை எழுதிக் கொடுக்கிறேன். நீங்களும்தான் பார்த்து பார்த்து லவ் பண்ணுணீங்களே ஒருத்திய. அய்யோ..." தலையிலடித்துக் கொண்டாள். கௌசி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் இதை. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த வாரம் திங்கட்கிழமை காலேஜ் வந்ததும் என்னிடம் வந்து அசைன்மெண்டை சிவசங்கரி கொடுத்துச் சென்றாள்.

பார்த்ததுமே புரிந்துவிட்டது எழுதியது கௌசிதான் என்று.

லெக்சரர் வந்தார், வந்தததுமே ஞாபகமாய், "அசைன்மெண்ட் கொடுத்திருந்தேன். எழுதாதவங்க மட்டும் எழுந்து நின்று காரணத்தைச் சொல்லிவிட்டு, உட்காரலாம். மத்தவங்க லேப்பில் அட்டண்டரிடம் கொடுத்துவிடுங்கள். ம்ம்ம் சொல்லுங்கள் யார் யார் எழுதலை?"

நான் எழுந்து நின்றேன். நான் மட்டும் தான் எழுந்து நின்றேன். கிளாஸே என்னைத் திரும்பிப் பார்த்தது. எங்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் பார்த்தது.

o

அந்த லெட்டர் சிவசங்கரிக்கு இல்லை, நேராகவே என்னிடம் தான் வந்தது. நான் படித்ததும் சிவாவிடம் கொடுத்தேன் படித்தவள். சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் கேரியரில் ஒரு அடுக்கை எடுத்துக் கொண்டு எனக்கு ஒரு அடுக்கை கொடுத்தாள். சாயங்காலம் கௌசி என்னிடம் வந்து நின்றாள்.

"என்ன?"

"அந்த லெட்டரை திரும்பக் கொடுங்கள்."

நான் பதில் சொல்லாமல் சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு,

"இன்னும் நீ என்னை நம்பலைல்ல?" நான் கேட்டதும், அமைதியாக இருந்தாள்.

மீண்டும், "ப்ளீஸ் அந்த லெட்டரைக் கொடுத்துடுங்க."

நான் லெட்டரை திரும்பக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவள், "இப்பத்தான் நல்லபிள்ளை!"ன்னு சொல்லிவிட்டு நகர்ந்தாள். இப்படி அடுத்த ஒரு மாதத்தில் நாள்தவறாமல் கடிதம் வருமெனக்கு; எதையாவது எழுதியிருப்பாள். ஆனால் காதலைப்பற்றி ஒரு வார்த்தைகூட இருக்காது, எப்பப் பார்த்தாலும் நல்லா படிங்க, அப்பத்தான் நல்ல வேலை கிடைக்கும் இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லா லெட்டரிலும் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கும்; அது சி வசங்கரிக்கு என்ற தலைப்பு. முதல் சிலநாள்கள், சாயங்காலம் வந்து லெட்டருக்காக நிற்பாள். பிறகு நானே படித்துவிட்டு அவளிடம் திரும்பக் கொடுத்துவிடுவேன்.

எங்கள் செமஸ்டர் மார்க் வந்தது, நான் எப்பொழுதும் போல மார்க் வாசிக்கும் பொழுது வெளியே கிளம்பிப் போய்விட்டேன், அது என்னுடைய ஒரு சூப்பர்ஸ்டிஷன். மொத்தமும் படித்துவிட்டு, லெக்சரர்கள் வெளியே போனதும் தான் திரும்பவும் கிளாசிற்கு வந்தேன். நாங்கள் நினைத்தது தான். நாங்கள் மூன்று பேரும்தான் முதல் மூன்று இடங்களில் வந்திருந்தோம். மொத்தம் அரியர் இல்லாமல் பாஸானவர்கள் ஏழுபேர் தான். எங்களுக்குள் சில மார்க் வித்தியாசங்களே இருந்தன. எல்லா பேப்பர்களிலும் எங்கள் மூன்று பேரில் ஒருவர்தான் முதலிடம் வாங்கியிருந்தோம், ஆனால் பிராக்டிகலில் நாங்கள் மூன்று பேருமே நாற்பத்தைந்து மதிப்பெண்தான் ஐம்பதுக்கு. கௌசிமட்டும் ஐம்பதுக்கு ஐம்பது.

அவள் அழுது கொண்டிருந்தாள், நான் பக்கத்தில் சென்று, "என்ன ஆச்சு, ஏதாச்சும் பேப்பர் ஊத்திக்கிச்சா?"

"இல்லை, இதுவரை நான் படித்த பள்ளிகளில், நான்தான் முதல் மார்க் வாங்குவேன், இரண்டாம் இடம் கூட வந்ததில்லை, இங்கே நாலாவதோ, ஐந்தாவதோ தான் வந்திருக்கிறேன். அதுதான் பொறுக்கவில்லை."

ஆனால் இதைக்கேட்டு சிவசங்கரி கோபமானாள். "எனக்கு ஒரு பேப்பர் அரியர் வந்திருக்கு, நானே அழுவலை; நிறைய மார்க் வரலைன்னு அழறாளாம். இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்காள கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் ஆமாம்." சொல்லிவிட்டு சிரித்தாள் சங்கரி.

இதைக்கேட்ட கௌசி மெதுவாக அவளை அடித்தாள். அன்றும் ஒரு லெட்டர் வந்தது, எல்லாவற்றையும் போல்தான் ஆனால் இந்த முறை ஒரு கூடுதல் வரி, இன்னும் நிறைய மார்க் வாங்கணும், அப்படியென்று. அன்று உண்மையிலேயே எனக்குக் கோபம் வந்தது. நான் நேராக அவளிடம் வந்து, "யேய், உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லை என் மார்க்கையா? எப்பப் பார்த்தாலும் மார்க் வாங்குங்க, இன்னும் நிறைய, இன்னும் நிறையன்னா எப்படி?"

"நான் உங்ககிட்ட எப்பயாவது உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கேனா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். பிறகு, "ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, நீங்க மட்டும் கிளாசில் முதல் மார்க் வாங்காத பையனா இருந்திருந்தீங்கன்னா உங்களைத் திரும்பிக் கூட பார்த்திருக்காமாட்டேன். அதுவும் நீங்க பண்ணிணதுக்கு!" மூஞ்சை குரங்காட்டம் வைத்துக் காட்டினாள். பிறகு, "ஏதோ நல்லா படிக்கிற பையன்கிறதாலதான் உங்கக்கிட்ட பேசுறதே. அதனால ஒழுங்கா போய்ப் படிங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள். அன்று மதியம் கல்லூரி விடுமுறை விட்டார்கள். நாங்களெல்லாம் ஒரு படத்துக்கு போவது என்று முடிவானது. வழக்கம்போல் ஏகப்பட்ட கன்டிஷன் போட்டாள்.

நானும் சங்கரியும் தனியா வருவோம், நீங்க தனியா வரணும். நாங்க தனியா உட்கார்ந்து பார்ப்போம், வெளியில என்கிட்டையோ சங்கரிகிட்டையோ நீங்க யாரும் பேசக்கூடாது, இதுக்கு ஓக்கேன்னா வரேன்னு சொன்னா. எங்களுக்கு ரொம்ப கோபம் ஆனால் சங்கரிதான் கண்ணடித்தாள். தியேட்டர் போய் பார்த்துக்கலாம்னு சொன்னாள். நாங்கள் சோனா மீனா தியேட்டர் வந்தோம். 'உன்னைத்தேடி' அஜித்தோட படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். நாங்கள் அதிகம் படம் பார்க்க மாட்டோம். பக்கத்து பக்கத்து சீட்டு ஐந்து கொடுத்திருந்தார்கள்.

கௌசிக்கும் லேசாய் பயம் இருந்தது, அந்த தியேட்டரிலேயே மொத்தம் சில பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே காலேஜ் பெண்கள் தான். எனக்கும் கௌசிக்கும் இடையியில் சங்கரியை உட்கார வைத்தாள். நான் படம் பார்க்காமல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதனால் கோபமான சங்கரி, என்னை எழுப்பி கௌசியின் பக்கத்தில் உட்கார வைத்து, இங்கேயிருந்து பார்த்தா இன்னும் கிளியரா தெரியும்' சொல்லிவிட்டுச் சிரித்தாள். இதற்கு கௌசியும் ஒன்றும் சொல்லவில்லை.

அரைமணிநேரம் படம் ஓடியிருக்கும், நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு அஜித்தை ரொம்பப் பிடிக்கும் ஆதலால் ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சிலசமயம் திரும்பி என்னைப் பார்ப்பாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாள். சிறிது நேரம் ஆனதும் நான் என் கையை அவள் கையின் மீது வைத்தேன். அந்த ஏசி அறையிலும் எனக்கு வேர்த்துக்கொட்டிக் கொண்டிருந்தது.

ஐந்து நிமிடம் ஒன்றும் சொல்லிவில்லை; பிறகு திரும்பி என்னைப்பார்த்தவள், "எழுந்திருங்க...!" சொல்லிவிட்டு, அவளும் எழுந்தாள். கூடவே எழுந்த மற்றவர்களை உட்காரச் சொல்லிவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தோம். நேராக அங்கு வந்த சத்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். நானும் ஏறி உட்கார்ந்தேன். நேரே மெயின்கார்ட்கேட் வந்தவள். உள்ளே நுழைந்து உச்சி பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தாள். எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியவள். என்னை கேட்ககூட இல்லை; நேரே சிவன் கோயிலுக்குள் நுழைந்தாள். பலருக்கு அங்கே ஒரு சிவன்கோயில் இருப்பதே தெரியாது. எல்லோரும் உச்சி பிள்ளையார் கோயிலுக்குத்தான் வருவார்கள்.

மதிய நேரமாதலால் யாருமே இல்லை, சாமியைத் தவிர. சாமிக்கு எதிரில் நின்றவள். என் எதிரில் கையை நீட்டினாள்.

"சத்தியம் பண்ணுங்க, இனிமே எங்க அப்பா, அம்மா சம்மதத்தோட நமக்கு கல்யாணம் ஆகிறவரை என்னை தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. அதுமட்டுமில்லாம வேற எதுக்காகவும் என்னை வற்புறுத்த மாட்டேன்னும் சத்தியம் பண்ணுங்க!" சொல்லிவிட்டு நின்றாள்.

நான் மெதுவாய், "ஏன் என்மேல் நம்பிக்கையில்லையா, இதை கோயிலில் வைத்துதான் கேட்கணுமா, தியேட்டரிலேயே கேட்டிருக்கலாமே?"

"இல்லை வரவர என்மேலையே எனக்கு நம்பிக்கை போய்க்கிட்டிருக்கு, இன்னும் சொல்லப்போனால் என்னைவிட உங்கமேல் தான் நம்பிக்கை அதிகம்; சத்தியம் பண்ணுங்க." இதற்கு மேல் என்ன செய்ய? நான் அவள் கையில் அடித்து சத்தியம் செய்தேன். பிறகு அவள் பிரகாரத்தில் உட்கார்ந்து சத்தமாக சாமி பாடல்கள் பாடத்தொடங்கினாள். அவள் குரல் மிக அருமையாக இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு எழுந்தவள். வீட்டிற்குக் கிளம்பினாள். நான் அவளிடம், "நீ போறதுன்னா போ! நான் போய் தலைவரை (வேற யாரு, உச்சிப் பிள்ளையார்தான்) பார்த்துட்டு வரேன்." அவள் வரவில்லையென்று சொல்லி வீட்டுக்குக் கிளம்பினாள். நான் அவளை அனுப்பிவிட்டு, மேலே வந்தேன். அந்தச் சூட்டில் மலைமேல் லவ்வர்ஸ் உட்கார்ந்து கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன், கௌசி மேலே வந்தாலும் பிள்ளையார் பாட்டைத்தான் பாடிக்கொண்டிருப்பாள். அதற்கு வராமல் இருப்பதே மேல். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அன்று அவள் பேசியது.

அடுத்த நாள் வந்ததுமே சங்கரி, "எண்னண்னா அதுக்காட்டியுமே பூரிக்கட்டையா. செம அடியாமே நேத்திக்கு, கேள்விப்பட்டேன்." கேட்டுவிட்டுச் சிரித்தாள். நான் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் நடந்ததைச் சொன்னேன். கேட்டுவிட்டுச் சிரித்தாள்; அவ்வளவுதான்.

அதற்கு பிறகு நான் அவளைத் தொட்டது கிடையாது, முன்புபோல் கிளாசிலும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். வெறும் லெட்டர் தான் எங்களுக்குள் கருத்துப்பரிமாற. அதுவும் ஒருபக்கம்தான். அவள்தான் எழுதித் தருவாள். பிப்பிரவரி 14 வந்தது, நாங்கள் படித்தபொழுதெல்லாம் எங்கள் கல்லூரியில் ஒரு பழக்கம்; பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சுடிதாரில் வரும், இல்லையென்றால் எப்போதாவது சேலையில் வரும். தாவணியில் வரமாட்டார்கள். அதுவும் பிப்பிரவரி 14 நிச்சயம் வரமாட்டார்கள். ஏனென்றால் அன்றைக்கு தாவணிபோட்டிருந்தால் யாரையோ காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்.

நான் அடிக்கிற நீலத்தில் பேண்ட் சட்டை போட்டு வந்திருந்தேன், அதுதான் ஆண்களுக்கு காதலிக்கிறார்கள் என்பதைக் காட்ட. ஆச்சர்யம் அன்று கௌசி தாவணியில் வந்திருந்தாள், சங்கரியும் தான். நான் நினைத்தேன் தெரியாமல் போட்டுவந்திருப்பாள் என்று. இதற்கு முன்பும் ஒரு நாள் பரிட்சையில் போட்டு வந்தவள்தான் அவள். ஆனால் சங்கரி தான் வந்து, "அண்ணே தெரியுதா உங்க ஆளு தாவணியில வந்திருக்கு இன்னிக்கு."

"தெரியாம வந்திருப்பாம்மா அவ, உன்னை மாதிரி விவரமெல்லாம் தெரியாது அவளுக்கு."

"நீங்கத்தான் மெச்சிக்கணும், நான் நேத்தி சொல்லித்தான் அனுப்பினேன். இந்த விஷயத்தை நாளைக்கு தாவணி போட்டுட்டு வந்தா இந்த அர்த்தம் தான் என்று. தெரிஞ்சிதான் போட்டுட்டு வந்திருக்கா."

அவள் முன்பே எங்கள் கல்யாணத்தை பற்றியெல்லாம் பேசியதால் இதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனாலும் அவளை அன்று வம்பிழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்தது. அதனால் கடைசி பெஞ்சில் இருந்து வந்து முதல் பெஞ்சில் அவளுக்கு இடதுபுறமாக உட்கார்ந்தேன். பிறகென்ன அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் செய்வதுதான் என்பதால் அவள் முதலில் ஒன்றும் நினைக்கவில்லை. சிறிது நேரத்தில் சிவசங்கரி அவள் காதில் ஏதோ ஓதினாள். அவ்வளவுதான்.

கோபமாகிவிட்டாள், நேராக என் பக்கத்தில் வந்தவள். என் தலையில் வேகமாக கொட்டிவிட்டு, "அப்பவே நினைச்சேன் சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு, போங்க போய் ஒழுங்கா பின்னாடி உட்காருங்க!"

ரொம்ப நாள் கழித்து வகுப்பில் என்னிடம் பேசினாள், நான் அவள் பேசுவதையே கவனிக்காமல், அவள் கண்களையும் பார்க்காமல் வேறெங்கையோ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் வேகமாக தலையில் கொட்டியவள், "தாஸ் ஒரு மாதிரி இருக்கு ப்ளீஸ் போங்க. போய் பின்னாடி உட்காருங்க" நான் வந்து பின்னாடி உட்கார்ந்துகொண்டேன். ஆனால் அவள் திரும்பும் போதெல்லாம் பயங்கரமாக சிரித்து வம்பிழுத்தேன். அடுத்த செமஸ்டர் எக்ஸாம் வந்தது; கௌசி எங்களிடம் பெட் கட்டியிருந்தாள். இந்த முறை எங்களை விட மார்க் அதிகம் வாங்குவதாய். ராஜேஷும் பிரபுவும் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ராஜேஷுடைய கேர்ள்ஃபிரண்ட் அவனை விட்டுப் போய்விட்டாள். அதனால் அவன் சில நாள்களாகவே மிகவும் அமைதியாக இருந்தான். நாங்கள் மீண்டும் குரூப்ஸ்டடி ஆரம்பித்திருந்தோம். நாங்கள் மூன்று பேரும் இந்தமுறை யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்க முயற்ச்சித்தோம்.

எக்ஸாம் அருமையாக நடந்து முடிந்தது, நாங்கள் எப்பொழுதும் போல் மிகவும் நன்றாய் எழுதியிருந்தோம். ஆனால் கௌசி ஒரு பேப்பர் ஒழுங்காய் எழுதவில்லையென்று சொல்லியிருந்தாள். சிவசங்கரி, எக்ஸாமில் பிரபுவின் பேப்பரை வாங்கி எழுதியிருந்தாள். நான் கௌசியிடம், "ஏன் ஒரு பேப்பர் ஒழுங்கா எழுதலை?"

"அன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்லை, உங்கக்கிட்ட பேசலாம்னு பார்த்தேன். ஆனா உங்க மூட கெடுக்க விரும்பலை. அன்னிக்கு அக்காவுக்கு நினைவுநாள். அதான். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு தாஸ். இப்பல்லாம் ஒழுங்கா தூக்கமே வரமாட்டேங்குது. படிக்கவே முடியலை. நீங்கள்லாம் எப்பிடித்தான் படிக்கிறீங்கன்னே தெரியலை. தேதியை பார்த்ததுமே அம்மா அழ ஆரம்பிச்சிடாங்க. அப்பாதான் வந்து சமாதானம் பண்ணினார். நாளைக்கு நான் ஊருக்கு போறேன்; லீவெல்லாம் முடிஞ்சிதான் திரும்பவருவேன்." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

ஒரு மாதம் கழித்துத்தான் நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். முதல் நாள் காலேஜ், இந்த வருடம் நாங்கள் சீனியர்கள்.

புதுவகுப்பிற்கு வந்திருந்தோம். கௌசி வந்து உட்கார்ந்ததுமே, அவளிடம் சென்ற நான் ஒரு தங்கச் சங்கலியைக் கொடுத்தேன்.

"என்னாயிது?"

"உனக்குத்தான், நான் லீவெல்லாம் ஒரு புரௌசிங் சென்டரில் வேலை பார்த்து வாங்கினேன், போட்டுக்கோ!"

"போய் உங்கம்மாகிட்ட கொடுங்க, சந்தோஷப்படுவாங்க, நான் போட்டுக்க மாட்டேன் எடுத்துட்டுபோங்க!" அவள் திரும்பி அந்தச் செயினை மேஜையில் வைத்தாள். நான் அதை எடுத்துக்கொள்ளாமல் திரும்பவந்து பெஞ்சில் உட்கார்ந்து, தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். தலை நிமிர்ந்து பார்த்தபொழுது அந்தச் சங்கிலி அவள் கழுத்தில் இருந்தது. சாயங்காலம் திரும்ப என்னிடம் வந்தது,

"இங்கப் பாருங்க, உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் இதை இவ்வளவுநேரம் போட்டுக்கிட்டு இருந்தேன். இதை ஒன்னு உங்க அம்மாகிட்ட கொடுங்க, இல்லை திரும்ப வாங்கிய இடத்திலேயே கொடுத்திடுங்க." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டாம் வருடம், தமிழ் ஆங்கிலம் பேப்பர்கள் கிடையாது. அதனால் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. முந்திய செமஸ்டர் மார்க்குகளிலும் நாங்கள் தான் முதன்மையாக வந்திருந்தோம். கௌசி அந்தப் பேப்பரில் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தாள். முன்பை விட இந்த வருடம் நாங்கள் பேசிக்கொள்வது குறைந்தது. ஆனால் அவள் லெட்டர்களின் நீளம் அதிகரித்தது. கிளாசிற்கு வந்ததில் இருந்து எழுதத் தொடங்குவாள். மதியம் என்னிடம் வரும். நான் படித்ததும் சாயந்திரம் அவளிடம் கொடுத்துவிடுவேன்.

எங்கள் வகுப்பில் படித்த பலருக்கு நாங்கள் பழகுவது தெரியாது, எங்களுக்குள் சண்டை என்று தான் நினைப்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் நாங்கள் வகுப்பில் பேசினால் அது எதையாவது பற்றிய வாக்குவாதமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் எதுவுமே எங்கள் கடிதத்தொடர்பை பாதிக்கவில்லை. ஒரு முறை கௌசியை செமினார் எடுக்கச் சொன்னார் லெக்சரர். எங்களிடம் கேட்டதுக்கு மாட்டோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் செமினாருக்கு டாபிக் எழுதி தந்தது நான்தான்.

ஆங்கிலம் அவ்வளவு நன்றாக பேசமாட்டாள் அவள். செமினார் எடுக்க ஆரம்பித்ததும் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்து கொண்டு வந்திருந்தவள் தடுமாற ஆரம்பித்தாள். பிரபுவும் ராஜேஷும் என்னைத் தடுத்தார்கள். இருந்தும் நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன். சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவள். மற்ற கேள்விகளுக்கு விழித்தாள். லெக்சரர் என்னை அழைத்து லாப்-இல் போய் உட்காரச் சொன்னார். நான் போனதும், நன்றாக செமினார் எடுத்ததாக கௌசி லெட்டர் எழுதினாள்.

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 3

அதன் பிறகு எங்கள் கல்லூரி வாழ்க்கை சாதாரணமாகப் போகத்தொடங்கியது. கௌசி, எங்களிடம் எதுவும் கேட்க வேண்டுமென்றால் சிவசங்கரியிடம் சொல்லிக் கேட்பாள். ஒரு நாள் இப்படித்தான், நியுமெரிக்கல் மெத்தட்ஸ் கணக்கு ஒன்றைப் போட வல்லரசு சார்(பட்டப்பெயர் தான்) சொல்லி கொடுத்தார். சில விநாடிகளில் நாங்கள் போட்டு அந்த சமன்பாட்டின் ரூட்டைச் சொன்னோம். ஆனால் என்ன காரணத்தினாலோ கௌசிக்கு அந்தக் கணக்கிற்கு விடைவரவில்லை. சிவசங்கரி என்னிடம் வந்தாள்.



"அண்ணா, அவளுக்கு அந்தக் கணக்கு வரலையாம்; உங்க நோட்டைக் கேட்டாள். கொடுத்துத் தொலைங்க. இது பெரிய தொல்லையா போச்சு உங்களால நேரா உங்ககிட்ட கேட்காம என்கிட்ட கேட்கிறது, நான் என்ன தரகரா?" அவளிடம் கோபமிருந்தது

ஆனால் என் நோட்டைக் கொடுப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. நோட்டில் கணக்கு கொஞ்சம்தான் இருக்கும் அவள்தான் நிறைய இருப்பாள். அதாவது பக்கம் பக்கமாய், அழகழகாய் அவள் பெயர், அவள் பற்றிய கவிதை இப்படி. அதனால் நான் பிரபுவிடம் சொல்லி அவன் நோட்டில் கணக்கை காப்பி பண்ணச் சொல்லிக்கொடுத்தேன். (எங்கள் மூன்று பேருக்கும் சேர்த்து ஒருவர் தான் கணக்கு எழுதவோம். அன்று அது நான்). சிறிது நேரம் ஆனதால் திரும்பிப் பார்த்தாள் கௌசி, பிரபு அவன் நோட்டில் என் நோட்டைப் பார்த்து காப்பி செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டாள்.

இப்படியே எங்கள் வாழ்க்கை எந்த சுவாரசியமுமில்லாமல் சென்றது. இடையில் ஒருமுறை நான் சொல்லாமலே சிவசங்கரி என்னைப்பற்றி கௌசியிடம் பேசியிருக்கிறாள். அதைக் கேட்டு அவள் திட்டிவிட்டதாகவும் இனிமேல் என்னைப்பற்றி பேசக்கூடாதென்று சிவசங்கரியிடம் கண்டிப்பாகச் சொன்னதாகவும் சொன்னாள். நான் இடைக்கால சந்தோஷங்கள் மறைந்து மீண்டும் சோகமாகிவிட்டேன்.

எங்கள் தேர்வுகள் வந்தன; முதலில் பிராக்டிகல்ஸ். கோபால் லேங்குவேஜ்.  ஒரு சிறு தவறு இருந்தாலும், அதாவது ஒரு புள்ளியை நீங்கள் விட்டு விட்டாலும், கோபால் நூறு எரர் கொடுக்கும். போன தலைமுறை மொழியாததால் உள்ளப் பிரச்சனை அது. கௌசல்யா, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, அடுத்து நான் மோகன்தாஸ். அதாவது எனக்கும் அவளுக்கும் இடையில் மூன்று பேர் இருப்பார்கள் தேர்வில். அன்று அதிசயமாக கௌசி, தாவணி அணிந்து வந்திருந்தாள்.

அவள் டெஸ்ட் பேப்பரை மேஜையில் இருந்து எடுத்து கொண்டு போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்தால், விதி, லேப் அட்டெண்டர் என்னை அவளுக்குப் பக்கத்து கம்ப்யூட்டரில் உட்கார வைத்தாள். நான் ஒரு நிமிடம் அவளைப் பார்த்தேன். பின்னர் தேர்வில் மும்முரமாகிவிட்டேன். அல்காரிதம், ஃப்ளோ சார்ட், புரோக்கிராம் எல்லாம் வேகமாக எழுதினேன். +2விலிருந்தே நான்தான் பிராக்டிகல் முதலாவதாக முடிப்பேன். இந்த விஷயத்தில் நான் ஒரு வெறியன். ஆனால் கௌசி எனக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டாள் என்ன இருந்தாலும் தொடர்ச்சியாய் இதைப் போல் எழுதிப்பார்ப்பவள் முன்னால் நிற்க முடியுமா? ஆனால் டைப்செய்து, எரர் கிளியர் செய்து, அவுட்புட் காட்ட வேண்டும். அதனால் விட்டுவிட்டேன்.

என்ன, எனக்கும் அவளுக்கும் இதில் ஒரு நிமிட வித்தியாசம், எக்ஸ்டர்னலிடம் காண்பித்துவிட்டு வந்து கணிணியில் எக்ஸாமிற்காகக் கொடுக்கப்பட  லாகினில் நுழைந்து உட்கார்ந்தேன். நான் வேகமாக டைப் செய்வேன் என்பதால் இருநூறு லைன் புரோக்கிராமையும் சீக்கிரமே டைப் செய்துவிட்டேன். முப்பது எரர் வந்தது நான் கம்பைல் செய்யும் போது. பிறகு அதை சரிசெய்துவிட்டு பிரிண்ட்அவுட் எடுத்து, எக்ஸ்டெர்னலிடம் காண்பித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். வந்து பார்த்தால் கௌசி அழுது கொண்டிருந்தாள் நான் வருத்தமாயிருந்தது அவளிடம் பேசவும் பயமாயும். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.

கொஞ்சம் நகர்ந்து பார்த்தால், அவள் ஸ்கிரீனில் ஒரு இருநூறு எரர் நின்று கொண்டிருந்தது, அளவுக்கு மிஞ்சினால் டாஸ் ப்ராம்டில் எல்லா எரரையும் ஒன்றாகப் பார்க்கக் கூட முடியாது. நான் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தபொழுது அவளுக்கும் எனக்கும் ஒரே புரோக்கிராம் தான் வந்திருந்தது எனத்தெரிந்தது. இந்த மாதிரி எனக்கும் இதே புரோக்கிராம் தான் வந்திருக்கிறது, என் லாகினில் இருந்து காப்பி செய்து கொள் என்று எழுதித் தரலாமென்றால் கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியிருந்தது. ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்து, சிவசங்கரிக்கு, "எனக்கும் இந்த புரோக்கிராம் தான் வந்திருக்கிறது, என் லாகின் எக்ஸாம்0118; இதிலிருந்து காப்பி செய்து கொள்ளலாம். முறைகள்..." போட்டு காப்பிசெய்யும் முறைகளையும் எழுதி, அவள் பக்கத்தில் வைத்து விட்டு நேராக எக்ஸ்டர்னலிடம் வந்தேன். நான் என் வாழ்க்கையை ரிஸ்க் எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் அந்தப் பேப்பரை எக்ஸ்டர்னலிடமோ, இல்லை வேறு லெக்சரரிடமோ கொடுத்தாலோ, இல்லை அந்தப் பேப்பரை அங்கிருந்து எடுக்காமல் இருந்தாலோ நான் மாட்டிக்கொள்வேன். என்னை மூன்று ஆண்டுகள் படிக்கவிடாமல் செய்துவிடுவார்கள்.

நான் அவரிடம் சென்று நான் முடித்துவிட்டதாகவும் போகலமா என்றும் கேட்டேன், அவர் போகலாமென்று சொல்ல, திரும்பிய நான் அவள் அந்தப் பேப்பரை தன் ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைக்க, அதுவரை அமைதியில்லாமல் தவித்த என் மனசு ஒருவாறு மெதுவாகத் துடிக்கத் தொடங்கியது.

வெளியே வந்ததும்தான் ஞாபகம் வந்தது, என் எக்ஸாம் லாகினுக்கு பாஸ்வேர்ட் இருப்பதும் அதை நான் சொல்லாமல் வந்ததும். ஆனால் பாஸ்வேர்ட் அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பார்த்தாள் என்றால் கண்டுபிடித்திருப்பாள் என்பதால் சிறிது அமைதியானேன்.

அரை மணிநேரத்தில் வெளியே வந்தாள் கௌசி, என்னுடன் எங்கள் முதல் பேட்ச் முடிந்திருந்தது. மதியம், பிரபு, பிரதீப், பிரேம் குமார், ராஜகோபால், ராஜாமணி, அப்புறம் ராஜேஷ், அதுக்கு கொஞ்சம் அப்புறம் சிவசங்கரி. மதிய இடைவெளி முடிந்ததும் இரண்டாம் பேட்ச், லேப்பில் இருந்து கிளாசிற்கு வந்தவள் முதல் முறையாக என்னைப் பார்த்துச் சிரித்தாள், பிறகு நேராக சிவசங்கரியிடம் வந்து என்னவோ கையையும் காலையும் ஆட்டி ஆட்டி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். இதுதான் முதல் முறை அவள் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்தது.

சிறிது நேரத்தில் என்னிடம் வந்த சிவசங்கரி, "அண்ணே ரொம்ப ரொம்ப தேங்ஸ்னு சொல்லச் சொன்னா, ரொம்ப பயந்துட்டாளாம். கடைசியில் உங்க லாகினில் இருந்து காப்பி பண்ணிக் காமிச்சாளாம்; சொல்லச் சொன்னாள்." சிரித்தாள்.

"சிவா, அதில் பாஸ்வேர்ட் இருந்தது. நான் சொல்ல மறந்துட்டேன்." அவள் காண்பித்திருந்தாளேயானால் தெரிந்துதான் இருக்கும் என்றாலும் சும்மா கேட்டேன்.

"வேணும்னே தானே நீங்க சொல்லலை" சிரித்தாள் பிறகு, "அவள் முதலில் லாகின் பாஸ்வேர்ட் கேட்டதும் கொஞ்சம் பயந்தாளாம், பிறகு இரண்டாவது தடவையே பாஸ்வேர்ட் கண்டுபிடித்து உள்ளே போனதாகச் சொன்னாள். சரி அதெல்லாம் இருக்கட்டும் பாஸ்வேர்ட் என்னாது?" அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் வெகுளியாய்க் கேட்டாள்.

எனக்கு மனசுக்குள் பட்டாப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின, வாழ்நாளிலேயே இன்றுதான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.

"அதெல்லாம் சின்னப்புள்ளங்கள் கேட்கக்கூடாது." சொன்ன நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு கௌசியை வம்பிழுக்க நினைத்தவனாய் "சிவா அவளுக்கு நான் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன் அதை திரும்ப என்னிடம் கொடுக்கச் சொல்லு, ஏன்னா உன் பிரண்டை நம்பமுடியாது கொண்டுபோய் பிரின்ஸிபாலிடம் கொடுத்தாலும் கொடுத்துவிடுவாள். வாங்கிக் கொடுத்துடு!" வரவழைத்துக் கொண்ட கண்டிப்புடன் கேட்டேன்.

சிவசங்கரி நான் சொன்னதும் என்னையே பார்த்தாள். நான் சீரியஸாய் சொல்வதாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்ததால். கௌசியிடம் கேட்பதற்குக் கிளம்பினாள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருந்தேன், என் சிந்தனை முழுவதும் இப்பொழுது அவள் என்ன செய்வாள், என்ன பதில் சொல்வாள் என்றே யோசித்துக் கொண்டிருந்தது.

நேராக கௌசியிடம் சென்ற சிவசங்கரி என்னவோ கேட்க, அவள் திரும்பி என்னை கண்களைக் குறுக்கிப் பார்த்தாள். நான் தலையை குனிந்து கொள்ள, மீண்டும் அவள் பக்கம் திரும்பி என்னவோ பதில் சொன்னாள். சிவசங்கரி வேகமாய் என்னிடம் திரும்பி வந்து, நறுக்கென்று என் தலையில் கொட்டினாள். உண்மையிலேயே வலித்தது.

"கொழுப்புத்தான் உங்களுக்கு, என்னடா இன்னும் வேதாளம் முருங்க மரம் ஏறலையேன்னு பார்த்தேன். ஏறிருச்சு. இதைக் கேட்கிறதுக்கு நான்தான் கிடைச்சேனா, சீச்சீய்..." மீண்டும் என் தலையில் கொட்டினாள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரபு, "மாம்ஸ் என்ன பிரச்சனைன்னு சொன்னா நான் உதவுவேன்ல?"

"சரிதான் இதுங்கிட்ட சொல்லுங்க, பிரச்சனை தீர்ந்திடும்." அவன் தலையிலும் கொட்டினாள்.

நான் நடந்ததை அவனிடம் சொல்ல யத்தனிக்க என் வாயைப் பொத்தியவள், "அண்ணே தப்பா நினைக்கப் போறா, சொல்லாதீங்க."

"அப்பிடின்னா, வாங்கிட்டு வந்து கொடு அந்த லெட்டரை!" நான் சொல்ல, முறைத்தவள் நேராக கௌசியிடம் சென்று, "கொடுத்துத்தான் தொலையேண்டி, பிசுனாரி ஒரு பேப்பருக்கு அலையுது!" கொஞ்சம் சத்தமாக சொன்னாள். திரும்பி என்னைப் பார்த்த கௌசி, சிவசங்கரியிடம் ஏதோ சொன்னாள். கேட்டுவிட்டு என்னிடம் வந்தவள், "அதைக் கிழிச்சு, குப்பைத்தொட்டியில் போட்டுட்டாளாம், வேணும்னா போய் பொறுக்கிக்கோங்க." என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

மனசு லேசாக வலித்தாலும், நான் வேகமாக கிளாசைவிட்டு லேப்பிற்கு விரைந்தேன். அங்கிருந்த அத்துனை பாக்ஸிலும் பார்த்தேன், அந்தப் பேப்பர் மட்டும் இல்லை. நான் இன்னும் சோகமாகி வெறுங்கையுடன் கிளாசிற்குத் திரும்பினேன். முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவளும், சிவாவும் நான் திரும்ப வருவதைப் பார்த்து சிரித்தார்கள்.

"என்னணேன் குப்பைத்தொட்டியெல்லாம் கிளரியாச்சா, கிடைச்சுதா."

நான் அவளிடம் கோபமாய், "இப்ப கொடுக்க முடியுமா முடியாதான்னு கேட்டுச் சொல்லு".

அவள் சிவசங்கரியிடம், "கொடுக்க முடியாதுன்னு சொல்லு."

நான் திரும்பி அவளைப்பார்த்தேன். சிரித்துக்கொண்டிருந்தாள். மனசு முழுக்க திரும்பவும் மகிழ்சி திரும்பியிருந்தது, ஆனாலும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்தேன்.

o

அன்று மதியம் இரண்டாம் பேட்ச் ப்ராக்டிகல் நடந்தது, அங்கு வந்த பழனிவேல் மொத்தம் முதல் பேட்சில் மூன்று பேர்தான் அவுட்புட் காண்பித்ததாகவும், எக்ஸ்டெர்னல் கொஞ்சம் கோபமாக இருப்பதாகவும் கூறிச்சென்றார். அவர் சென்றதும் கௌசி என்னை திரும்பிப் பார்த்தாள். நான் வேகமாக நோட்டில் கவிதை எழுத தொடங்கியிருந்தேன்.

===
பூக்களே,
சென்று என் காதலை
அவளிடம் சொல்லுங்கள்.

ஒரு பைத்தியக்காரன்,
உனக்காக
உனக்காக மட்டும்
உயிர் வாழ்கிறான்
என்று சொல்லுங்கள்.

பிறகு கூட
காதலிக்கலாம், முதலில்
பேச சொல்லுங்கள்,
இறந்து கொண்டிருக்கிறேன்
நான்
ஒரு வார்த்தை பேசி
உயிர்ப்பிக்கச் சொல்லுங்கள்.
===

அதற்குப் பிறகு நாங்கள் குரூப் ஸ்டடி ஆரம்பித்திருந்தோம், நான், பிரபு, ராஜேஷ் மூவரும்.நாங்கள் கல்லூரி நாள்களில் ஒழுங்காகப் படிக்க மாட்டோம் என்பதால் கொஞ்சம் சீரியஸாகப் படிக்கவேண்டி, சிவசங்கரியிடம் கூடச் சொல்லவில்லை. ஒவ்வொரு சப்ஜெக்டாக படித்து முடித்துக்கொண்டிருந்தோம். ஸ்டடி ஹாலிடேஸ் ஆதலால், காலையிலேயே கல்லூரிக்கு வந்து பிறகு அந்த ஸப்ஜெக்ட் முடித்ததும் தான் கிளம்புவோம்.

ஒரு நாள், நாங்கள் படித்துக்கொண்டு தீவிரமாக ஆர்க்கியு செய்துகொண்டிருந்த பொழுது, கௌசியும், சிவசங்கரியும் அங்கே வந்தார்கள்.

"ஹலோ அண்ணே இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?"

"பார்த்தா தெரியலை படிக்கிறோம், குரூப் ஸ்டடி. ஆமா நீங்க எங்க இங்க?"

"இல்லை, பாடத்தில் கொஞ்சம் சந்தேகம் அதான் லெக்சரர்ஸ் கிட்ட கேட்கலாம்னு வந்தோம். நீங்க என்கிட்ட சொல்லவேயில்லை இங்கே காலேஜில் படிப்பீங்ன்னு."

"பிரபுதான் சொல்லவேணாம்னு சொன்னான்." நான் சொன்னதும் அவள் பிரபுவை முறைத்தாள். அந்த நாள் தொடங்கி அவர்களும் காலையில் வந்து எங்களுடன் படிக்கத் தொடங்கினார்கள். ஆனால் கௌசி என்னுடன் பேசமாட்டாள். கேள்வி கேட்பதாய் இருந்தாலும் சிவாவிடமோ, இல்லை மற்றவர்களிடமோதான் கேட்பாள்.

எங்கள் எக்ஸாம் எல்லாம் முடிந்தது, நான் என்னுடைய கவனத்தை கௌசியிடம் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு திருப்பி எழுதியிருந்தேன். விடுமுறை முழுக்க அவள் ஞாபகமாகவேயிருந்தது. என்னுடைய சோகம் முழுவதையும் என் நோட்தான் இப்போது சுமந்துகொண்டிருந்தது. மீண்டும் எங்கள் கல்லூரி தொடங்கியது. இரண்டாம் செமஸ்டரின் முதல்நாள். நான் என் கல்லூரியின் முதல் நாளை நினைத்துக் கொள்ளத் தொடங்கினேன். மனசு கொஞ்சம் சரியில்லாததால், பிரபுவிடம் என் நோட்டைக் கொடுத்து கிளாசிற்கு எடுத்துக்கொண்டு போகும்படியாகவும், நான் கொஞ்சம் கல்லூரி வளாகத்தில் இருந்த கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவதாகவும் சொன்னேன். பிரபுவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் திரும்பவும் வகுப்பிற்கு வந்த பொழுது என் நோட் சிவசங்கரியிடம் இருந்தது.

நான் நேராக பிரபுவிடம் போய், "ஏண்டா அவகிட்ட கொடுத்த?"

"மாம்ஸ் புடுங்கிட்டாடா, நான் என்ன சொல்லியும் கேட்காமல் எடுத்துக்கிட்டு போய்ட்டா." இப்பொழுதெல்லாம் சிவசங்கரி பிரபுவிடம் உரிமையாக நடந்துக் கொள்ள தொடங்கியிருந்தாள். நான் நேராக அவளிடமே சென்றேன்.

"சிவா கொடுத்துறு அதை, ப்ளீஸ்"

"நான் படிச்சிட்டு கொடுத்துருறேன், நான் படிக்கிறதுல என்ன தப்பு?"

"நீ படிக்கிறதுல தப்பொன்னும் கிடையாது, கௌசி பார்த்தா? ம்ஹூம் நான் திரும்பவும் பிரின்ஸிபால் ரூமிற்கு போக முடியாது, கொடுத்துரு, ப்ளீஸ்"

"நான் அவகிட்ட கொடுக்க மாட்டேன். ப்ளீஸ், ப்ளீஸ் நீங்க சூப்பரா கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க. நான் படிச்சிட்டு தரேன்..." அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கௌசி வந்ததால், அந்த விஷயத்தை பற்றி பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்.

மதியம் லஞ்ச் இடைவெளியின் போது என்னிடம் வந்தவள், "அண்ணே இவ்வளவு சீரியஸா காதலிக்கிறீங்களா? நான் சும்மா விளையாடுறீங்கன்னு நினைச்சேன்."

நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டேன்.

அன்று மாலை என்னிடம் திரும்பி வந்தவள், "அண்ணே நான் அவகிட்ட உங்க விஷயமா பேசினேன், முன்னமாதிரி இப்ப கோபமா பேசலை. ஆனா கொஞ்சம் விலாவரியா பேசினா..." சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.

"என்ன சொன்னாள்?"

"அவங்க வீட்டில் அவளோட அக்கா, காதலிச்சு அவங்க காதலன் ஏமாத்திட்டு போனதால தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்." சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

நானும் எதுவும் பேசாமல் இருக்க, தொடர்ந்தாள்.

"அதனாலதான் அவளுக்கு காதலை பார்த்தாலே வெறுப்பாவும், காதலிக்கிறவங்களையே பிடிக்கலைன்னும் சொன்னாள். ஆனால் நீங்க நல்லா படிப்பீங்கன்னு கனவிலையும் நினைக்கலைன்னு சொன்னாள். நல்லா படிக்கிற யாராலையும் இப்படி காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு சுத்த முடியாது, லவ் லெட்டர் கொடுக்க முடியாதுன்னு; அதுதான் ஆச்சர்யமாய் இருக்குதுன்னு சொன்னவ, இப்ப உங்கமேல கோபம் இல்லையாம். ஆனா உங்ககிட்ட சாதாரணமா பேசினா நீங்க திரும்பவும் காதலைப்பத்தி பேசுவீங்கன்னு தான் பயப்படறதா சொல்றா, கடைசியா..."

"ம்ம்ம், சொல்லு கடைசியா..."

"இன்னொரு சாவை அவங்க வீடு தாங்காதுன்னு சொல்லிட்டு அழுதுட்டா!"

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In குறுந்தொகை சுஜாதா

பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்




பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே -
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது - மோசிகீரன் - குறுந்தொகை 84 பாலை

பொருள்:

கழலுமாறு அணிந்துள்ள தோள் வலையினை உடையவன், ஆய் என்ற வள்ளலாவான். அவனுடைய மலை மேகங்கள் தவழும் பொதியில் மலையாகும். ஆண்டு வளர்ந்துள்ள வேங்கையின் மலர் காந்தளின் மலர் ஆகியவற்றின் மணத்தை உடையவளாய், ஆம்பல் மலரைவிட குளிர்ச்சியுடையவளாய் விளங்குபவள் தலைவி, அவளை யான் ஒருமுறை தழுவியதோடு அமையாமல், மீட்டும் தழுவும் போது, அதற்கு உடன்படாது, அவள் ‘யான் வியர்த்தேன்’ என்றாள். யான் அங்ஙனம் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாவதற்கு காரணமாயிற்று என்பதை, அவள் உரைத்த பொழுது உணர்ந்திலேன் ஆனால், அவள் உடன் போக்கில் சென்ற இப்பொழுது அறிந்தேன்.

விளக்கம்:
தலைவி, உடன்போக்கில் சென்றவழி, செவிலித்தாய், தலைவி தன்னிடம் வெறுப்பைப் புலப்படுத்தியது தலைவன் மேல் உள்ள விருப்பினால் தான் என்பதை முன்னரே, தான் அறியாமை எண்ணி வருந்துவாளாயினாள். செவிலியர், தலைவியை தன் அருகில் துயிலச் செய்தல் வழக்கம். ‘வியர்த்தனென்’ என்ற தலைவியின் உரை ‘நீ முயங்கற்க’ என்ற குறிப்பை உணர்த்திற்று. அப்பொழுதே அறிந்திருந்தால் தலைவி விரும்பியதைச் செய்திருக்கலாம் என்ற செவிலியின் இரக்கம் இப்பாடலில் புலப்படுகின்றது. தலைவனைத் தழுவிய மார்பிற்கு தாயின் அணைப்பு வெறுப்பைத் தருவதாயிற்று. தலைவியின் இவ்வுணர்வு, ‘பயில்வு’ எனப்படும். “தலைவி, செவிலி முலையிடத்து துயில் வேண்டாது, வேறோர் இடத்தில் பயிறல்”, என இதனை நச்சினார்க்கினயர் விளக்குவர். (தொல்காப்பியம், கலவியல், 23) வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள், பகற்குறியில் தலைவன் சுட்டிய மலர்கள் என்றும், தலைவி இயல்பாகவே அம்மலர்களின் மணம் உடையவள் என்றும் இருவகையாகவும் பொருள் கொள்ளப்படும். தலைவி, ஆம்பள் மலரை விட தண்ணியளாய் இருந்த போதிலும், இரவு பொழுதில், அவன் நினைவினாள் ஏற்பட்ட உடல் வெப்பம் காரணத்தால் ‘வியர்த்தனென்’ எனக்கூறியதாகவும் கொள்ளலாம். தன்னைப் பிரிவதற்காகவே, தலைவி விலகிச்சென்றனள் என்பதை அப்பொழுது உணரவில்லையே எனச் செவிலி ஆற்றாலாயினாள்.

ஆஅய் வேல் என்பவன், கடையேழு வள்ளல்களில் ஒருவன் பொதியில் மலைத்தலைவன். இரவலற்கு வரையாது ஈபவன், அவன் நல்லாட்சியால் அவன் நாட்டில் பருவமழை பொய்யாது பெய்யும் என்பது ‘மழை தவழ் பொதியில்’ என்ற தொடரால் குறிக்கப்பட்டது.

ஆம்பல் மலரினும் தண்ணியள், கொடிய பாலையில் செல்ல நேர்ந்ததே எனச் செவிலி வருந்தினள் தன்னுடைய முதுகுப்புறம் படுத்துறங்கிக்கிடந்த தலைவியைப் பெயர்த்து, மார்புப் பகுதியால் முன்புறம் தழுவி உறங்கச் செய்த பொழுது, தலைவி அவ்வணப்பைப் பொறாது ‘வியர்த்தனன்’ எனக்கூறியதாகவும் பொருள் கொள்ளப்படும்.

சொற்பொருள்

முயங்குதல் - தழுவுதல்
பெயர்த்தனன் - மீண்டும்; அவளை தன் முகத்தை நோக்கி திரும்பி
துனி - வெறுப்பு
மழை - மேகம்
நாறி - மணம் வீசி

மேற்கோள்

“பிற்றை ஞான்று, தலைமகளது போக்கு உணர்ந்து
செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய்
நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்”
என்ரு கூறியது - இறையனார் களவியல் உரை, 23

“உடன் போக்கிய செவிலி கவன்று உரைத்தத” தொல்காப்பியம், அகத்திணையியல், 39 இளம்பூரணர்.

”குறுக வ்ந்து, குவவு நுதல் நீவி
மெல் எனத் தழீஇயினேன் ஆக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே” அகநானூறு 49

”பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே” ஐங்குறுநூறு, 97

”நறுந் தண்ணீரல்” குறுந்தொகை, 70

”ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி” குறுந்தொகை, 62

“பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே” குறுந்தொகை 353

பொருள் முடிவு:

தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள், அது, துனி ஆகுதல், இனி அறிந்தேன்.

முனைவர் வி. நாகராசன் உரை

அவனுடன் போய்விட்டாள்

தழுவியபோது
வியர்த்தாள்.
ஏன் என்று அப்போது தெரியவில்லை!
இனி அறிந்தேன்,
ஆய் அரசனின்
மழை தவழும் பொதிய மலையின்
வேங்கை, காந்தள் மலர்களின்
மணம் கொண்டவள்
ஆம்பல் மலரின் குளிர்ச்சியுள்ளவள்.

சுஜாதா

பின்குறிப்பு - என் மச்சான் வாங்கிவந்த சங்கப்பாடல்களை படித்தமாதிரியும் இருக்கும் என்று நினைத்து எடுத்த குறுந்தொகைப் பாடல்களை முடிந்தவரை உரையுடன் தொகுக்க நினைத்தேன் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 2

நான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லவ்லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் இது மாதிரியான லெட்டர்கள் கிழித்துப் போடப்படும், இல்லை கூப்பிட்டு திட்டுவிழும், ஆனால் இந்த முறை லெட்டர் பிரின்ஸியிடம் சென்றது. விஷயம் சொல்லிமுடித்ததும் அவளை வெளியே அனுப்பிவிட்டார். நாங்கள் மூன்று பேரும் தலையைக் குனிந்தபடியே உள்ளே நின்றோம். பிரின்ஸிபால் ஜூலியன் ஒரு தமிழ்ப் பேராசிரியர்.

"யார் எழுதினா இந்த லெட்டர்?" சத்தமாய்க் கேட்டார்.

நான், "சார், எழுதினது நான்தான்; அந்தப்பொண்ணு தப்பா இவங்களையும் இழுத்துவிட்டுருச்சு." சொல்லி விட்டு தலைகுனிந்து நின்றேன். பிரின்ஸிபால் அவர்கள் இருவரையும் பார்த்தார். இருவரும் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல் பாவனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெல்லாம் எவ்வளவு திமிரிருந்தா, முதல் நாளே லவ்லெட்டர் கொடுப்பீங்க, உங்களுக்கெல்லாம் யார்றா சீட் கொடுத்தா காலேஜில. சரி நீங்க இரண்டு பேரும் வெளியே நில்லுங்க" சொல்லி அவர்களை வெளியே அனுப்பினார்.

என்னை மேலும் கீழும் பார்த்தவர், "சொல்லுங்க சார்? உங்கப்பா அம்மா என்ன பண்ணுறாங்க?"

"சார், ரெண்டு பேரும் டீச்சர்."

அவர் முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம் தொடங்கி மறைந்தது, "டீச்சர் பையனா நீ, உன்னையெல்லாம் என்ன பண்ணினா தகும்?" என்ன இருந்தாலும் ஆசிரியர் பையன் தன் பையன் போலத்தான் என்ற எண்ணம் வந்திருக்குமாயிருக்கும்.

"இல்லை சார், தெரியாமல் எழுதிட்டேன் சார். இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் சார்." தடவி தடவி சொன்னேன்.

ஒரு மணிநேரம் பாட்டுவிழுந்தது, ஆசிரியர் புள்ளைகள் முன்மாதிரியா நிக்கணும் இந்த மாதிரி தலைகுனிந்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி.

"இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கு மேல உன்பேர்ல யாராவது தப்பு சொன்னாங்கன்னா அவ்வளவுதான் நீ மேடத்தைப் பார்க்க வேண்டிவரும். அப்புறமென்னா டிசிதான். சரி அவனுங்களையும் கூப்பிட்டு ஒரு அப்பாலஜி லெட்டர் கொடுத்துட்டு ஒழுங்கா வகுப்புக்குப் போங்க."

"சார் அவங்க வேணாம் சார். நான் வேணா எழுதித்தரேன் சார். நான்தான் சார் பண்ணினது. அவங்க பாவம் சார்."

நான் சொன்னவுடன் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர், "சரி எழுதிக் கொடுத்துட்டு போ."

நான் எழுதிகொடுத்துவிட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்து பாவமாய்ச் சிரித்தேன். அவர்களும் நானும் சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்ததும்...

"மாமு, அப்ப கௌசல்யா எங்களுக்கு தங்கச்சி, அதானே?" சொல்லிவிட்டு ராஜேஷ் சிரித்தான்.

"மாப்ள, முத நாளே அப்பாலஜி லெட்டர்டா, அரசியல்ல இதெல்லாம் சகஜம்னாலும் இது கொஞ்சம் ஓவர் மச்சி, தமிழ் மீடியம்னதுமே நினைச்சேன். சரியாப் போச்சு. இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா?" இருவரும் தலையிலடித்துக் கொண்டனர்.

"கேட்காட்டி விடவா போற சொல்லித்தொலை" பிரபு.

===
"காதல் கடிதம்
எழுதிய என்னை
மன்னிப்பு கடிதம்
எழுதவைத்ததேன்
பெண்ணே?

ஒருவேளை
தேவதைகளுக்கு
மனிதர்களின் மொழி
புரியாதோ?

நான்
உன்னைக்
காதலிக்கிறேன் இந்த
மூன்று வரியை விளக்க
உனக்கு முனைவர்
பட்டம் பெற்றவர் தேவையோ?

உனக்கும் எனக்குமான
காதலை
ஊருக்குத் தெரியவைத்தாயே
சரிசரி ஒருநாள்
தெரியவேண்டியதுதானே!"
===

"மாம்ஸ் உண்மையைச் சொல்லு, நீ அவள உண்மையிலேயே காதலிக்கிறியா, நம்ம ஸ்கூல்ல பார்க்காத ஃபிகரா, இவள்லாம் என்னடா பம்மாத்து. இதெல்லாம் சரியாத் தெரியலை மவனே, டாடி போட்டு வாங்கிடுவாரு ஞாபகம் இருக்கில்லை." அவன் சொன்னதும் எங்க அப்பா வேறு மனதில் வந்து போனார், நான் ஒரு முறை தலையை வழுக்க ஆட்டி அந்த நினைவை நீக்கினேன்.

"அப்படியெல்லாம் இல்லடா, ஏதோ சுமாரா இருக்காளேன்னு லெட்டர் கொடுத்தா. இப்பிடிச் செய்வான்னா நினைச்சேன். சரி சரி, பார்த்துப்போம். இன்னும் மூணுவருஷம் இருக்குள்ள, நம்ம பழக்கவழக்கத்தை மாத்திக்க வேண்டாம். அப்பிடியே இருப்போம். ஸ்கூல் மாதிரியில்லாம இங்க அடிக்க மாட்டாங்ய, அதனால் ப்ராப்ளம் கிடையாது. ஆனா மாப்ள என்னமோ மனசுல இதுவரைக்கும் இல்லாத ஒரு லேசா உறுத்தல் வருதுடா, தப்பு பண்ணிட்டமோன்னு"

"மாம்ஸ், ரொம்ப ஃபீல் பண்ணுற. இதெல்லாம் நமக்கு சரிவராதுடா. அவளுக்கு ஒருநாள் நிச்சயம் தெரியவரும் நாம யாருன்னு. அதுவரைக்கும் வெயிட் அண்ட் சீ தான்." இந்த மாதிரி விஷயங்களில் ராஜேஷ் நன்றாக பேசுவான், ஆனால் பிரபு வாயை மூடிக்கிட்டு இருப்பான். ஆனா உதவின்னு வந்துட்டா முதல் ஆளா பிரபுதான் இருப்பான்.

நாங்கள் படித்த ஆங்கில மீடியம் பள்ளிகளில் லெட்டர் கொடுப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை, பெண்கள்தான் எங்களைக் கலாய்ப்பார்கள், 'தோடா, லெட்டர் கொடுக்கிறான் மொத நாளே!'ன்னு. நான் அதைத்தான் அவளிடம் இருந்து எதிர்பார்த்தேன். ஆனால் நிச்சயமாய் பிரின்ஸிபால் ரூம் விசிட் நாங்கள் எதிர்பாராதது. சொல்லப்போனால் நாங்கள் மூன்று பேரும் சிறிது பயந்துதானிருந்தோம்.

o

நாங்கள் கல்லூரி நேரம் முடிந்து எல்லோரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, வகுப்பிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அப்பொழுது அங்கே எதையோ மறந்துவிட்டுப் போனதை எடுக்க வந்த கூடப்படிக்கும் ஒரு பெண், நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நேராய் எங்களிடம் வந்தாள்.

"வணக்கம், என் பேரு சிவசங்கரி, ம்ம்ம் வந்த முதல் நாளே லவ் லெட்டரா, ஜமாய்ங்க, என்ன சொன்னாரு பிரின்ஸி?" சிரித்தபடியே கேட்டாள்.

"என்னங்க ஜமாய்க்கிறது, முதல் நாளே அப்பாலஜி லெட்டர் கொடுத்தாச்சு. ஆனாலும் உங்க ஃபிரெண்ட் ரொம்ப மோசங்க, இதுக்கு கூப்பிட்டுவச்சு கன்னத்தில அறைஞ்சிருக்கலாம்." நான் புலம்பினேன்.

"அவ என் ப்ரெண்டெல்லாம் கிடையாது, இருந்தாலும் நீங்க செஞ்சது மட்டும் சரியா, முதல்நாளே லவ்லெட்டர் எல்லாம் ரொம்ப ஓவர்." அவளிடம் கோபமிருந்தது.

"நான் உண்மையிலே இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கலை, பார்த்துட்டு கூப்பிட்டு திட்டுவாங்கன்னு நினைச்சேன். சரி போகுது விடுங்க. காலையிலே நீங்க சொன்னதைக் கேட்கலை, நீங்க எந்த ஊரு?" றகு நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; கிளம்பும் தருவாயில், "நான் உங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமா?"

அதற்கு நான் "என்னை நிச்சயமா கூப்பிடலாம், ராஜேஷையும் கூப்பிடலாம், ஏன்னா அவன் ஸ்கூல் டிக்கெட் ஒன்னை சைட் அடிக்கிறான்; அவளும்தான். ஆனா பிரபுவைப்பத்தி என்னால சொல்லமுடியாது. நீங்க அவனை வேணும்னா பிரபுன்னே கூப்பிடுங்களேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

அவளும் சிரித்துவிட்டு, "சரி அப்பிடியே கூப்பிட்டுருவோம். நான் வரேன்." சொல்லிவிட்டு நகர்ந்ததும். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் சீக்கிரமே வந்து சிவசங்கரியின் சீட்டின் மீது உட்கார்ந்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் காலேஜ் பஸ்ஸில் வராதவர்கள் முன்னமே வந்துவிடுவார்கள். காலேஜ் பஸ்ஸில் வந்த கௌசல்யா, எங்களைக் கண்டுகொள்ளாமல் சிவசங்கரியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நாங்களும் எதற்கு பிரச்சனையென்று சங்கரியிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து எங்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.

நாங்கள் இங்கே வந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விட்டது.

வகுப்பு தொடங்கியது, லெக்சரர்ஸ் வந்து சிலபஸ் கொடுத்துவிட்டு, முன்னுரையைத் தொடங்கினர். நாங்கள் ஏதோ வேற்று கிரகத்து மனிதர்கள் போல் உட்கார்ந்திருந்தோம். டீ பிரேக்கின் போது நாங்கள் வெளியே செல்லவில்லை; உட்கார்ந்திருப்பதைப் பார்த்த சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே வெளியே போகலை?"

"இல்லைம்மா போகலை, சரி என்ன சொல்றா உன் ஃபிரண்ட்?" அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்பொழுது எனக்கிருந்த ஒரே வாய்ப்பு சங்கரி தான்.

"நான் உங்ககூட பேசறது பிடிக்கலைன்னு சொன்னாள்."

நான் எதிர்பார்த்தது தான், "அதுக்கு நீயென்ன சொன்ன?" ஆர்வமாய்க் கேட்டேன்.

"மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ்னு சொன்னேன், அவளுக்கு கோபம் வந்திருச்சு, ஆனா சிறிது நேரத்தில் அந்த விஷயத்தை விட்டுட்டா மற்ற விஷயங்களை பேசத் தொடங்கிட்டா." சொல்லிவிட்டு சிரித்தாள்.

நான் "ரொம்ப பசிக்குது, டிபன்பாக்ஸ் இருக்கா" கேட்டேன்.

அவள் அதற்கு பயந்ததைப் போல் நடித்து, "அய்யோ, உங்களுக்கு டிபன்பாக்ஸ் கொடுத்தால் திரும்பி சும்மா வராதே, உள்ளே பெரிய பாமோடல்ல வரும்." சொன்னவள் நேராய் போய் டிபன்பாக்ஸ் எடுத்துவந்து கொடுத்தாள்.

"அண்ணே எதுவும் சொல்றதுன்னா நேர்லயே சொல்லுங்க லெட்டர் எல்லாம் வேண்டாம்" சொல்லிவிட்டுச் சிரித்தாள். நாங்கள் அவசரமாய் அவளுடைய டிபன் பாக்ஸ் தோசைகளை சாப்பிட்டு முடித்து, "சிவா நாங்க கழுவி கொடுத்துருறோம்!" சொல்லி ராஜேஷிடம் டிபன்பாக்ஸை கொடுத்தேன். இதையெல்லாம் அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பரவாயில்லை, தோசை எப்படி இருந்தது."

"பரவாயில்லை, சாப்பிடுறமாதிரிதான் இருந்தது. ஆனால் காரம் பத்தலை." நான் சொன்னதும்.

"ஆனால் இந்த மூஞ்சு மட்டும் ஏன் குரங்காட்டம் முளிக்குது." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

"அவன் மூஞ்சே அப்படித்தான், அதுசரி ஏன் நீ அவனை மட்டும் தனியா கவனிக்குற, இது சரியாத் தெரியலையே?" நான் சிரித்தேன்.

பக்கத்தில் வந்து என் தலையில் கொட்டிவிட்டு, "ஆரம்பிச்சிட்டீங்களா, இந்த வம்புக்கு நான் வரலை. என்னை விட்டுருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

பிரபு என்னிடம், "மாம்ஸ் என் மூஞ்சு குரங்காட்டமா இருக்கு?" வருத்தமாய்க் கேட்டான்.

நான் ராஜேஷிடம் திரும்பி, "புதுசா ஒரு கதை ஆரம்பிக்குதுடா மாப்ள." சொல்லிச் சிரித்தேன். ஆனால் நான் இங்கே பேசி, சிரித்துக் கொண்டிருந்தாலும் என் மனம் முழக்க கௌசியிடம் தான் இருந்தது. அவள் இங்கு நடந்த அத்துனை நிகழ்ச்சிகளையும் கவனிக்காதது போல் இருந்தாள். நான் என் நோட்டையெடுத்து கவிதையெழுதத் தொடங்கினேன்.

===
"பார்த்தும் பார்க்காதது போல்
நடிக்கிறாய் தோழி,
நான் இருந்தும் இல்லாமல்
ஆய்விட்டேன் போடீ."
===

o

மதியம் சிவசங்கரியின் சாப்பாட்டுக்கு, ஒரு குஸ்காவும் வடையும் வாங்கிக் கொடுத்தோம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. நாங்கள் வகுப்பில் எல்லா லெக்சரர்ஸையும் ஓட்டிக்கொண்டிருந்தோம். இங்கே கல்லூரியில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது பிடித்திருந்தது. இப்படித்தான் ஒருநாள், பழனிவேல் C எடுத்துக்கொண்டிருந்தார். எடுத்துக்கொண்டிருந்தார் என்றால் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக்கொண்டிருந்தார்.

நாங்கள் வேண்டுமென்றே சிரித்துக்கொண்டிருந்ததால், என்னையும் ராஜேஷையும் எழுந்து நிற்க வைத்தார். அவர் ஒரு ஃபார் லூப்பை விவரித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் தடுமாறிக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்னர் கூட அவரால் முடியவில்லை. இதையெல்லாம் மிகவும் பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபுவால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. அவன் முகம் இன்னும் விகாரமானது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம் முடியவில்லை.

"சார் வருமா வராதா?" எழுந்து கேட்டேவிட்டான்.

வகுப்பே திரும்பி எங்களைப் பார்த்தது, அவளைத்தவிர. நானும் ராஜேஷும் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பழனிவேல் கோபமாகிவிட்டார். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை, அவர் முகமெல்லாம் சிவந்துவிட்டது.

"இன்னிக்கு கொஞ்சம் சரியாவரலை, எங்கையோ தப்பாகுது வேறயாராவது வந்து கிளியர் பண்ணறதுன்னா பண்ணுங்க." சொல்லிவிட்டு சேரில் உட்கார்ந்துவிட்டார்; கையை அசைத்து எங்களையும் உட்கார சொன்னார். பிரபுவால் அவனை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை, எழுந்துபோய் சொல்வதற்குத் தயாரானான். நானும் ராஜேஷும் அவன் தோளைப் பிடித்து அமுக்கி உட்காரவைத்தோம்.

அடுத்த அரைமணிநேரம் யாரும் பேசாமல் அமைதியாகவே கழிந்தது, அவர் போனதும் கௌசல்யா நேராக எங்களிடம் வந்தாள்.

"ஹலோ நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாது, நானெல்லாம் படிக்க வந்திருக்கேன். நீங்க பண்ணறதால நாங்களும்தான் பாதிக்கப்படுறோம். இதையெல்லாம் நிறுத்திடுங்க..." அவளை முடிக்ககூடவிடாமல் ராஜேஷ் தொடர்ந்தான்.

"ஹலோ நீங்க நிறுத்துறீங்களா, எங்களைப் பார்த்தா பொறுக்கீங்க மாதிரியா தெரியுது? நாங்களும் படிக்கத்தான் வந்திருக்கோம். அந்தாளு மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறான். அதைக்கேட்டா என்னவோ பருப்பு மாதிரி பேசுறீங்களே, போங்கம்மா போய் கடம் தட்டுற வேலையைப் பாருங்க. இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வைச்சுக்கோங்க!!" பிரபுவும் மிகவும் கோபமாக இருந்தான்.

"கடம் தட்டறதுன்னு சொல்றதெல்லாம் சரியில்லை, என்னவோ பண்ணி மார்க் வாங்க்குறோம் இல்லை, உங்களை மாதிரியா? படிக்கிற பிள்ளைங்களா நீங்கள்லாம், முதல் நாளே லவ் லெட்டர் கொடுத்துக்கிட்டு, லெக்சரர்ஸ் பாடம் நடத்த விடாம பண்ணிக்கிட்டு, நீங்கள்லாம் நிச்சயமா படிக்க வரலை, இதுல தப்பு சொன்னா கோபம் வருதாக்கும் கோபம்."

அவள் இப்படிச் சொன்னதும் பிரபு எங்களைப்பற்றிய ஒரு விஷயத்தை உளறிவிட்டான், நாங்கள் எதை மறைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதைச் சொல்லிவிட்டான்.

"லவ் லெட்டர் கொடுத்ததுக்கு பிரின்ஸிபால் கிட்ட போட்டுக்குடுத்துட்டல்ல, அதுக்கப்புறம் அதப்பத்தி நீ பேசக்கூடாது, என்னாடி பெரிய மார்க் வாங்கியிருக்க, உன்னைவிட நாங்க மூணுபேருமே +2 ல மார்க் கூட, போதுமா, போய் உட்கார்ந்துக்க. வந்துட்டாளுங்க, அங்கேயிருந்து கடம் அடிக்கிறதுக்கு." இது பிரபு.

அவளால் நம்ப முடியவில்லை, எங்களாலும்தான்; எங்கள் வழக்கமே அப்படித்தான். நாங்கள் எங்கள் உண்மையான மார்க்கை சொல்லி தனியே பிரிந்து போகவிரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் நிறைய மதிப்பெண் வாங்கிவிட்டும் இந்தக் காலேஜில் சேர்ந்ததால், உண்மையான மதிப்பெண் சொன்னால் நிறைய கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கும், அதனால் நாங்கள் வாங்கிய மார்க்கில் பாதியைச் சொன்னோம். ஆனால் இந்த ஓட்டவாய் சொல்லுவான்னு நாங்க நினைக்கவேயி ல்லை, அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் போய் அவள் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள். சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே பிரபு சொல்றது உண்மையா?"

"ஆமாம்."

"இதையேன் நீங்க எங்ககிட்ட மறைச்சீங்க?"

"எங்களுக்கு மார்க்கை சொல்லிக்காட்ட விரும்பலை அதான் வேணாம்னு மறைச்சோம். மற்றபடிக்கு ஒன்னுமில்லை."

"ஆனாலும் இப்பத்தான் நீங்க பண்ணினது சரியில்லை, அப்ப உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமில்ல, அதான் நீங்க பாடம் நடத்தவிடாம பண்றீங்க. இனிமே இப்பிடி பண்ணாதீங்க. சரியா? ஆமாம் ஏன் நீங்க இன்ஜினேரிங் படிக்கலை?"

"இந்தக் கேள்விக்காகத்தான் நாங்க மார்க்கைச் சொல்லாம மறைச்சது, குடும்ப பிரச்சனைன்னு வச்சுக்கோயேன்." நான் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"ஆனா உங்களையெல்லாம் பார்த்தா படிக்கிற பசங்க மாதிரியே தெரியலை, ரௌடிங்க மாதிரி தான் இருக்கீங்க, அதுவும் இந்த மூஞ்சியைப் பார்த்தா சொல்ல வேண்டியதேயில்லை." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

நான் சொல்லத்தொடங்கும் முன், "வேணாம் ஒன்னும் சொல்லவேணாம், நான் இதைப்பத்தி பேசவேணாம்னு நினைச்சாலும் முடியலை. சரி இனிமே பிரபுவைப்பத்தி பேசலை, நீங்க வேற எதையும் நினைச்சுக்காதீங்க." சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அடுத்த வாரங்களில் கௌசல்யா நடந்துகொள்ளும் முறையில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நாங்கள் ஜோக் அடித்தாள் திரும்பி பார்த்து சிரித்தாள். லேப்பில் ஒருநாள் ஒரு ப்ரோக்கிராம் வொர்க் ஆகவில்லையென சொல்லி சிவசங்கரி மூலம் பிரபுவை கூப்பிட்டனுப்பினாள். அவன் வேண்டுமென்றே அங்கேபோய் தெரியாதது போல் நடித்து, என்னைக் கூப்பிட்டான் அவள் சிறிது தூரம் நகர்ந்து செல்ல, நான் எரர்ரை சரிசெய்துகொடுத்துத் திரும்பினேன். ராஜேஷும் பிரபுவும் நக்கலடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

"என்ன மாம்ஸ், காத்து உன் பக்கம் வீசுது போலிருக்கு!"

"தம்பி தெரியுமில்ல, அடுத்தது செகரட்டரி ரூமும் டிசியும் தான். அதனால பெட்டர் இதப்பத்தி பேசாம இருக்குறதுதான்."

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 1

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம் அன்று  நான் சேர இருந்த கல்லூரி சிறியது எனக்கேள்விப்பட்டிருந்தேன் மொத்தமே நானூறு பேர்தான் படிப்பதாகதச் சொல்லிக் கேள்விப்பட்டேன். அன்று முதல் நாள் கல்லூரி என் பெற்றோர் உடன் வருவதாகச் சொன்னதை மறுத்து நான் மட்டும் வந்திருந்தேன் கல்லூரி தொடக்க விழாவுவிற்கு.


சின்ன கல்லூரி ஒரேயொரு கட்டிடம் மட்டும் தான் நின்றிருந்தது மருந்துக்குக் கூட கல்லூரியைச் சுற்றிலும் மரங்களைக் காணோம். என்னடா இது அடுத்த மூன்று ஆண்டுகளை இங்கேதான் கழிக்க வேண்டுமாயென்று நான் நினைத்துக்கொண்டே காலேஜுக்குள் நுழைகிறேன். அங்கே நின்று கொண்டிருந்த ராஜேஷையும் பிரபுவையும் பார்த்து எனக்கு ஆச்சர்யம்.

"மாப்ளே, நீங்க எங்கடா இங்க?" ஆச்சர்யமாய்க் கேட்டேன் நான்.

அவர்கள் முகத்திலும் அதே ஆச்சர்யம் இருந்தது, "அய்யோ தாஸு நீயுமா! எனக்குக் குருவி அப்பயே சொன்னிச்சு, என்னடா இது உள்ள வர்றவன் மூஞ்சையெல்லாம் பார்த்தா, எல்லாருமே பப்பு மாதிரி இருக்கானுங்களே, என்னடா இது ஒன்னுமே தேறாது போலிருக்கே, நம்மளுக்கு கூட்டே கிடைக்காதோன்னு நினைச்சேன். மாம்ஸ் நீ வந்திட்டேல்ல, தாராளம் மாமே தாராளம்." என்றான் ராஜேஷ்.

"டேய் என்னடா இது, இரண்டு பேருமே நல்ல மார்க் தானே, இங்க ஏண்டா இந்தக் காலேஜுக்கு வந்தீங்க, சரி சரி, எங்க வீட்டு வில்லன் மாதிரிதான் உங்க வீட்டிலையுமா?" ஆதங்கத்துடன் கேட்டேன்.

"பின்ன என்னடா, நீயே வந்திருக்க நாங்க வர்றதுக்கு என்ன? மாமே காலேஜ் முழுக்க சூப்பர் ஃபிகருங்கடா, எங்கப்பன் என்னடா இப்படியொரு பிசுனாரி காலேஜில் சேர்த்துட்டானேன்னு நினைச்சு கவலைப்பட்டேன்; சும்மா எங்கப்பார்த்தாலும் கேரளத்து ஃபிகருங்களாயிருக்குது. எங்க மனசு இப்ப எங்ககிட்ட இல்லப்பா!!" இருவரும் சேர்ந்து பெருமூச்சு விட்டார்கள்.

"கொம்மாஞ்சக்க, அப்பிடியா சொல்ற, உனக்குச் சொன்ன குருவி எனக்கும் சொன்னிச்சின்னு வைச்சுக்கோயேன்; அதான் காலையிலே வர்றப்பவே அட்ரஸ் இல்லாம லவ் லெட்டர் எழுதி எடுத்துட்டு வந்திருக்கேன். காலையிலே பஸ்ஸில் வர்றப்ப அப்பிடியே ஒரு கவிதை மின்னலா தோன்றி மறஞ்சுச்சு பாரு; அப்பவே நினைச்சேன் நம்ம லெட்டருக்கு இன்னிக்கு வேலை வந்திருச்சுன்னு. அந்தக் கவிதையை சொல்றேன் கேக்குறியா?" விளையாட்டாய்க் கேட்டேன் நான்.

"பங்காளி! ஆரம்பிச்சிட்டான்டா இவன், வந்த முத நாளே ஆரம்பிச்சிட்டான். அங்க ஸ்கூல்ல இவன்கூட சேர்ந்து, முட்டிக்கால் போட்டதுதான் மிச்சம். இங்கயாவது திருந்தலாம்னு பார்த்தா தேடிப்பிடிச்சு சேர்ந்திருக்காண்டா!," பிரபு.

"ஆனாலும் பரவாயில்லை மாமூ, நீ சொல்லு." இது ராஜேஷ்.

===
"கால் நடந்து வரும்
அஜந்தா குகை ஓவியமோ
நீதான்
தேன் கொண்டு தரும்
கண்ணதாசன் காவியமோ

சித்தன்னவாசல் சிற்பமோ
நீதான்
முத்திரை பதிக்கும்
சித்திரை மழையோ

கம்பனாய் இருந்தால்
பாடியிருப்பேன் உன்னை
வர்மனாய்(ரவி) இருந்தால்
வரைந்திருப்பேன்,
நானாய் இருப்பதால்
வாடியிருக்கிறேன்

என் இதயமிருந்தமிடமின்று
வெற்றாய்,
பறந்து விட்டது உன்னிடம்
சிட்டாய்.

வைத்துக்கொள்ளடி பெண்ணே
உன்னை மட்டுமே நினைத்து,
உன் பெயரைச் சொல்லித் துடித்து
உனக்காகவே இருக்கும் அதை
நான் வைத்து
என்ன செய்வது,
நீயே வைத்துக்கொள்! "
===

"எப்பிடிடா மாப்ள இருக்கு?" முகம் முழுவதும் பொழிவுடன் கேட்டேன் நான்.

"மாம்ஸ் இதெல்லாம் இருக்கட்டும், நீ காலேஜ் வந்தாவது திருந்தாலாம்னு இருக்கியா, இல்லை பழையபடியேதானா?" கேட்டுவிட்டு முறைத்தான் பிரபு.

"மாம்ஸு இவனுக்குப் பொறாமைடா; நீ கலக்குடா மச்சி. ஆனா ஸ்கூல் மாதிரிதான் நடந்துக்கணும். மற்றவங்க ஆளுங்களை தங்கச்சியாத்தான் பார்க்கணும். என்ன?" ராஜேஷ்.

எங்களுக்குள் வந்த முதல் நாளே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இது அணிசேரா ஒப்பந்தம் இல்லை, அணிமாற்றா ஒப்பந்தம். நாங்கள் எல்லாம் வீட்டில் இருந்து வந்திருந்தோம். ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் வரவேண்டிய பாக்கி இருந்தது. வந்தவுடன் ஏதோ நிகழ்ச்சியாம் அதன் பிறகு கிளாஸுக்குப் போகவேண்டியதுதான். காலேஜ் பஸ் வந்தது. முதலில் ஒரு தேவதைக் கூட்டம் இறங்கியது. நாங்கள் அழகான பெண்கள் எல்லாரும் எங்கள் பிரிவெடுத்திருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம்.

அந்த தேவதைக் கூட்டத்தின் இடையில்தான் என் தேவதையும் நடந்துவந்தாள். வெள்ளைக் கலர் சுடிதாரில் அவள், சராசரிக்கும் குறைவான உயரமாய், மாம்பழ நிறத்தில் இருந்தாள்; கையில் நோட்டொன்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்; சிரித்துக் கொண்டே நடந்து வந்த அவள் ரஜினிகாந்தைப்போல் தலைமுடியைக் கோதிய போது, என் கவிதையைப் போல் என்னிடம் இருந்த ஏதோவொன்று இடம் மாறத் தொடங்கியிருந்தது.

அவளைப் பார்த்தவுடன் மனம் கவிதை எழுத தொடங்கியது,



===
தேவதைகள்
வானிலிருந்து
வருவதுண்டோ

உண்டென்றால்
அது நீயென்றால்,
தேவதையே உந்தன்
சிறகெங்கே?

இறக்கையில்லா
தேவதையாயினும்
இரக்கமுமாயில்லை

வரமளிக்குமாமே தேவதைகள்
வரம்வேண்டாம், ஒருமுறை
திரும்பித்தான் பாரேன்

உன் கண்பார்வைக்காக
காத்திருக்கும்
அகலிகன் நான்

அய்யோ, இதென்ன
என் கால்கள்
தரையில் பரவ
மறுக்கிறதே,
நான் பறக்கத் தொடங்கிவிட்டேனோ?
நான் தேவதையின் தேவனாகிவிட்டேனோ?
===

மனம் முழுக்க அவள்தான் இருந்தாள், ராஜேஷும் பிரபுவும் என்னன்னவோ பேசினார்கள் எதுவுமே என் காதில் விழவில்லை. விழா முடிந்தது நாங்கள் கிளாசிற்கு வந்தோம் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள். அந்தக் தேவதைக் கூட்டம் அப்படியே என் வகுப்பில் வந்து உட்கார்ந்தது. எங்கள் வகுப்பில் முதல் இரண்டு பெஞ்சில் அவர்கள் உட்கார்ந்ததும், மற்ற சொம்புப் பசங்கள் எல்லாம் மீதமிருந்த முதல் பெஞ்சுகளில் உட்கார, பெயருக்கு ஏற்றமாதிரி நாங்கள் மாப்பிள்ளை பெஞ்சில் உட்கார்ந்தோம்.

முதல் வகுப்பு ஆரம்பித்தது, பாடம் நடத்த வந்த லெக்சரர் அனைவரையும் அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். இடையில் அவர் பேசுவது கேட்காமல், அடிக்கடி பேசிக்கொண்டிருந்த பிரபுவின் மண்டையில் தட்டிப் பேசாமல் இருக்கச் சொன்னேன். ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினார்கள். அவள் முறையும் வந்தது.

"பெயர் கௌசல்யா, தமிழ் மீடியம், ஊர் திருவானைக்கோவில், படித்தது அறிவியல் பிரிவு, மதிப்பெண் 1030, அப்பாக்கு ஃபாக்டரியில் வேலை."

சொல்லி முடித்ததில் இருந்து அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ உலுக்குவது போலிருந்ததால் உலகத்திற்கு வந்த நான், என் முறை வந்தவுடன், பெயர் தாஸ், ஆங்கில மீடியம், படித்தது கம்ப்யூட்டர் சைன்ஸ், மதிப்பெண் 526, அப்பா டீச்சர்னு சொன்னவுடன் வகுப்பில் ஒரு சிரிப்பு எழுந்தது.

ஆசிரியர் அதை அடக்கியதும், பிரபு எழுந்தான்; அவன் சொல்லத்தொடங்கினான், நான் அவன் சொல்லப்போகும் மதிப்பெண்ணுக்காக காத்திருந்தேன், நினைத்தது போலவே, 560 என்று சொன்னான். பிறகு எழுந்த ராஜேஷ் 520 என்று சொன்னான்.

உடனே அந்த லெக்சரர், "ம்ம்ம், ஒன்னாத்தேன் சேர்ந்திருக்கிறீங்க போலிருக்கு? மாப்பிள பெஞ்சா, சரிதான் உங்களுக்கு ஏத்த இடம்தான். ம்ம்ம் கல்லூரி பேரைக் கெடுக்காம இருந்தாப்போதும்." சொல்லிவிட்டுச் சிரித்தார். நாங்களும் எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.

இப்படியே அந்த நாள் முழுவதும் தொடர்ந்தது, ஒவ்வொருமுறையும் நாங்கள் சொல்லி முடிக்கும்பொழுது சிரிப்பொலி எழுந்து அடங்கியது, பெரும்பாலும் பெண்கள் பகுதியில் இருந்துதான் அது தொடங்கியது.

லஞ்ச் பிரேக் நான் நேராக அவளிடம் சென்று, "என்னங்க, ரொம்ப பசிக்குது, டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வரலை. காசும் கொஞ்சம் கம்மியா இருக்கு. உங்க சாப்பாடு கொடுக்க முடியுமா நாங்க மூணுபேரும் ஷேர் பண்ணிப்போம்."

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அவள் யோசிக்க முடியாமல் கையில் இருந்த டிபன்பாக்சை என்கையில் கொடுத்தாள். நாங்கள் எதிர்பார்த்தது தான் அது; ஆனால் டிபன்பாக்சை திரும்பக் கொடுக்கும் பொழுது நாங்கள் நினைக்காதது நடந்தது.

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இருத்தலியநவீனம் காமம் தொடர்கதை மோகனீயம்

மோகனீயம் - உமையாள் நாச்சி


அது ஒரு அசாதரணமான பொழுது, உடலுறவை ஓவியம் வரைவதைப் போல் சிற்பம் செதுக்குவதைப் போல் கலையுணர்ச்சியுடன் இரவெல்லாம் செய்ததால் வந்த ஒரு எழுச்சி அடங்கி ரம்மியமான முன்னிரவில் அமைந்த முழுமையான தூக்கம் விடியற்காலை என் படுக்கைக்கு மிக அருகில் சிரிப்புச்சத்தத்தால் கலைந்து எழ முயற்சித்த பொழுது நான் உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம் உமையாள் நாச்சி சுந்தருடன் பேசிக்கொண்டிருந்தாள். ஏறக்குறைய அவளும் என் நிலை தான், இடுப்பிற்குக் கீழ் பெட்ஷீட்டிற்குள் இருந்தாலுமே கூட. சுந்தருக்கு உமையாள் நாச்சி ஒன்றும் புதிதில்லை, சுந்தர் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் அவனை விட்டுவிடு என்று உமையாள் நாச்சியிடம் நான் சொல்லப்போய்தான் எனது குடியிருந்த வீட்டின் உரிமையாளரான அவளின் பழக்கமே எனக்கு வந்தது. நான் அதன் பிறகு சுந்தரை இந்த மூன்றாண்டுகளில் பார்த்ததில்லை, ஆனால் உமையாள் நாச்சி அவனிடம் சொல்லியிருந்தது போல் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டிருந்தாள், அந்த விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லியிது மட்டும் நினைவிருக்கிறது. அவள் கணவனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிந்தாலும் கண்டுகொள்ளாததற்கு காரணம் அவன் ஒரு ஹோமோ என்பது முதலில் சுந்தரும் பின்னர் உமையாளுமே சொல்லித் தெரியும். நேற்றைய இரவெல்லாம் கசங்கின அவளது முலைகள் அதற்கான தடயங்களுடன் இருந்தது அதைக் கொஞ்சம் உறுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலே அவை நேற்றிரவு உணர்ந்ததைப் பார்க்க முடியும். கொஞ்சம் ஆச்சர்யமான அசாதாரணமான பொழுது, உமையாள் சுந்தரிடம் எந்தவித வித்தியாசமும் இன்றிப் பேசிக்கொண்டிருந்தாள், நீண்ட நாள் நண்பனொருவனிடம் பேசும் லாவகமும் தெளிவும் உற்சாகமும் இருந்தது அந்தப் பேச்சில். அந்த நெருக்கம் நான் எதிர்பாராதது நானும் உமையாளும் சுந்தரைப் பற்றிப் பெரிதாய் பேசியிராததால் அப்படியொன்று நான் எதிர்பாராதது.

நான் எழுந்து உட்கார்ந்ததும் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை, உமையாள் என்னிடம், “சுந்தர் இப்பத்தான் வந்தான். பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு ஏதோ டூருக்கு வந்திருக்கான். பாக்கணும் போல தோணித்தாம் வந்திருக்கான்” அவள் என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு சுந்தரைப் பார்த்தாள், சுந்தர் என்னைப் பார்த்த பார்வையில் ஒன்றுமேயில்லை ஏதோ ரோட்டில் நண்பன் ஒருவனைப் பார்த்த உணர்ச்சியை மட்டுமே அவன் முகம் வெளிக்காட்டியது. நானும் சிரித்துபடி கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன் அதுதான் முதல் முறை நானும் ஒரு பெண்ணும் ஆடைகளில்லாமல் இன்னொரு மூன்றாம் ஆண் நபர் முன் உட்கார்ந்திருப்பது, முன்னர் இதே போல் சில பெண்கள் முன்னும் உடனும் உட்கார்ந்திருக்கிறோம். அந்த அனுபவம் என்னைக் கொஞ்சம் இயல்பாய் இருக்க வைத்தது, அவர்கள் இருவரும் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தனர் நான் கேட்டுக்கொண்டு மட்டும்.

”உம் பொண்டாட்டி எங்கயிருக்கா சுந்தர்.”

“அவளை ஹோட்டலில் விட்டுட்டு ஆபீஸ் வேலையா போய்ட்டு வர்றதா சொல்லிட்டு வந்திருக்கேன்.”

“குழந்தை இருக்கா சுந்தர்”

“ம்ம்ம் வயசு இரண்டாகுது.” என்றான் இருவருக்கே அந்தக் கேள்விகள் போரடித்தது என்று நினைத்தேன்.

”பொண்டாட்டிக்கிட்ட எப்படி சுந்தர் என்கிட்ட செய்தது மாதிரி தானா, ஒரு நாளைக்கு ஐஞ்சு ஆறு தரம்னு எப்பப்பாரு சுன்னிய கையில பிடிச்சிக்கிட்டே நிப்பியே” அவள் கேட்டுவிட்டு சிரித்தாள்.

அவனும் சிரித்தான், “இல்ல நாச்சியா வாரத்துக்கு ஒன்னு ரெண்டு வாட்டி செய்யறதே இப்பல்லாம் பெரிசாயிருக்கு. அதெல்லாம் அந்தக் காலம். இங்க எப்படி...” கேட்டான். நான் அதற்கு தயாராகியிருக்கவில்லை அவள் அவனிடம் எங்களைப் பற்றிய பர்சனல் விஷயங்களை எந்த அளவிற்குச் சொல்வாள் என்று தெரியாது சுந்தருக்கும் அவளுக்கும் இருந்த நெருக்கம் அவள் முயற்சிசெய்த தற்கொலை மூலமாய்த் தெரியுமென்றாலும் கூட. நான் அவள் சொல்லப்போவதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தேன் என்பது மட்டும் உண்மை.

”விசு...” என்று சொல்லி என்னைப்பார்த்து பெருமூச்சு விட்டாள் “நீ எத்தனை தடவை எனக்கு வாயால செஞ்சி விட்டிருபேன்னு நினைவிருக்கா? யோசிச்சு பார்த்தா சொல்லிடலாம் எத்தனை தடவன்னு கூட அதுவும் ஈரமாக்குறதுக்கு. ஆனா விசு அப்படிக் கிடையாது. நாங்க செக்ஸ் வைச்சிக்கிட்ட எல்லா நாளும் அவன் வாயால செஞ்சி நான் ஒரு தரம் வந்திருப்பேன் சொல்லப்போனா அன்னிக்கு செக்ஸ் அதுலேர்ந்து தான் ஆரம்பிக்கும். நீ நல்லாவே செய்வ நான் இல்லேங்கல ஆனா நாம இரண்டு பேரும் செஞ்சப்ப உன்கிட்ட என்னைப் பத்தி தேவிடியா தானங்கிற புத்தியை இதுவரைக்கும் விசுகிட்ட பாத்ததில்ல. அவனுக்கு நானொரு தேவதை பதினாறு பதினெட்டு வயசு புள்ளையை உன்கிட்ட ஓக்க விட்டிருந்தா நீ எப்படி செஞ்சிருப்பேன்னு நான் நினைக்கிறேனோ அதைவிட 100% பெர்பெக்டா என்னை செய்வான். புருஷங்காரன் ஹோமா இருந்து கல்யாணம் ஆனபின்னாடி என்னவோ செய்துக்க எனக்கு கெட்டபேர் வராம ஆனால் என்னை விட்டுடுன்னு சொன்னவளுக்கு நீ ஒரு கருவின்னா விசு ஒரு வரம்...” சொல்லிவிட்டு இன்னொரு பெருமூச்சு விட்டாள். ”உனக்காக தற்கொலை பண்ணிக்கப்போனேன்னு நினைச்சா, விசுவுக்காக என்ன பண்ணனும்.” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள், நான் முகத்தைக் கல் போல் வைத்திருந்தேன். “ஆனா இன்னிக்கு விசு என்னை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, அவன் கூடவே நின்னு நல்ல பொண்ணு ஒன்னைப் பார்த்து முடிச்சி வைச்சிட்டுத்தான் ஓய்வேன்.” கொஞ்சம் நிறுத்தினாள் “என் பொண்ணையே கூட அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் அவன் தப்பா நினைக்காட்டி” என்று முடித்தாள்.

காலம் தன் எல்லையில்லா ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்து விளையாடத் தொடங்கிய நாளொன்றில் நான் உமையாளை மருத்துவமனையில் சென்று பார்த்திருந்தேன். மருத்துவ வாடையையும் அதன் அசாத்தியமான சூழ்நிலையையும் தவிர்த்தும் என்னுள் ஏகாந்தங்களை ஏற்படுத்த அவளால் முடிந்திருந்தது. முடிந்ததைக் கடந்து வருவதில் தன்னை நுழைக்க முடியாமல் அவள் கடத்திய ஆறு மாதங்கள் அவளுடன் எனக்கு முழுத்தொடர்பு இருந்தது, அவளை அறிந்த ஒருவனாய் பொதுவில் அவளுக்கு உதவுபவனாய் அவளுக்கு காலத்தை அறிமுகப்படுத்துபவனாய் மட்டும். என்னில் அவள் கண்டுகொண்ட அறிவார்ந்த முகமூடியொன்று என்னில் அவளை காலத்தை மறக்கச் செய்தது, அவளுள் அடங்காமல் குடி கொண்டிருந்த காமம், நான் என் தேவதைக்காய் கட்டிவத்திருந்த மனப்பக்கத்தில் ஒன்றைக்காட்டியதில் அவிழ்ந்தது. நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்தவள் அப்படி அவிழ்ந்ததும் தொடர்ச்சியாய் என்னில் கொட்டிய அள்ளிய காமமும் நான் அணிந்திருந்த முகமூடிக்கும் அதற்காய் நான் படித்த புத்தகங்களுக்கும் வாயால் செய்தாலே ஒழிய எனக்கு வருவதில்லை என்று நட்பை மட்டும் முழுவதும் திறந்து காட்டிய நண்பியொருத்திக்கும் நன்றி சொல்ல நினைத்தேன். அவளுக்கு வந்ததும் எனக்கும் எனக்கு வந்ததும் இருவருக்கும் என்று நாங்கள் கொளுத்திய இரவுகள் வெகு நீளம், இதில் புகுத்திய புதுமைகள் உயிர்ப்புடன் நீள உதவியது. உமையாளுக்கு சிந்துவை என்னிடம் ஒப்படைக்க ஆசை, தேவதை ஒன்றிற்குச் செய்ததை இன்னொரு தேவதைக்கு நான் மறுக்காமல் செய்வேன் என்று நினைத்தாள் மற்றைய பாகத்தின் பொங்கும் உற்சாகத்தில் மட்டுமே நான் நிம்மதியடைவது அவளுக்குத் தீவிரமாய்த் தெரிந்ததுமே அவள் சிந்துவை என் ஆளுமைக்குள் திணிக்கப்பார்த்தாள். சிந்துவின் தகப்பனைப் போன்ற தொல்லைகள் என் வயதின் காரணமாய் இல்லாவிட்டாலும் சிந்துவின் தனிப்பட்ட எல்லைக்குள் நானாய் திணிக்கப்படக்கூடாதென்றே நினைத்திருந்தேன். ஆனால் உமையாள் நடத்திய நாடகமொன்றில் நானும் சிந்துவும் பாவைகளாகி நடத்துனருமே புகுந்து களித்த இரவொன்றும் வந்தது, சிந்துவின் வயது அளித்திருந்த அறிவிற்குள் நின்றுகொண்டு அவள் நடத்திய இந்த நாடகம் அவள் நானுமாய் நகர்த்தத் தொடங்கியிருந்த எல்லையின் விளம்புப் புள்ளி.

”உனக்குச் செய்யறதில் எனக்கு கூச்சம் இருந்ததில்லை, ஆனா அப்படி பழக்கப்படுத்தி விடாதன்னு அப்ப ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான்” என்று சொன்ன சுந்தரின் முகத்தில் தெரிந்த கவலை அவள் என்னை உயர்த்திக் காட்டியதில் இருந்து தொடங்கியிருக்கலாம் என்று நினைத்தேன்.

“சரியாப்போச்சு நீ செஞ்சதுக்கப்புறம் நானா எதையும் விட்டு வேற செய்துக்கணும்.” அவள் முகம் சிரித்தபடியே இருந்தது, “என்னடா எழவு இதுன்னு நினைச்சுப்பேன். போ எதோ உன்னால் முடிந்தது ஆனால் உன்னால க்ளைமாக்ஸே வரலைன்னு சொல்ல மாட்டேன். ஆனா கொஞ்சம் தான் அதுவும் சின்னதா. உன் பொண்டாட்டிக்கிட்ட எப்படி” கேட்டாள்.

சுந்தர் கொஞ்சம் தெளிவாகயிருந்தான், “எனக்கு அவ ஐந்து தடவ வாயால செஞ்சிவிட்டா நான் ஒரு தடவை அவளுக்குச் செய்வேன்னு சொல்லியிருக்கேன்.”

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள், “அதென்னாடா வாய்ப்பாடு மாதிரி” என்று அவள் கேட்டதும். அவன் பதில் சொல்லவில்லை, தொடர்ந்து கேட்டான், “எனக்கேதாவது பொண்டாட்டியைக் கட்டிப்போடுற டிப்ஸ் கொடேன்” எனக்கேட்டான் அவளிடம். எனக்கும் அவளுக்கு எது அப்படிப் பிடிக்கும் என்று கேட்க ஆசை நானாய்க் கேட்டதில்லை. அவள் சொன்னாள்,

”நாங்க நிறைய செஞ்சி பார்த்திருக்கோம். எப்பவும் புதுசா எதையாவது யோசிச்சிட்டு வருவான் எனக்கு கேக்கணுமா அவன் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி நானொரு ஆராய்ச்சிப் பொருள் மாதிரி நான் அவன்கிட்ட தடை சொன்னதேயில்லை, ஒரு நாள் இப்படித்தான் ஒரு வாழைக்காயுடன் வந்தான்.” என்று சொல்லி அவள் என்னைப் பார்த்தாள் என் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. முகமது ரஃபியின் பாடலுடன் காற்றில் பரவத் தொடங்கும் சந்தன வாசத்துடனும் ஸ்டூடியோவின் ஒழுங்குடன் வெளிச்சத்தைப் பொங்கும் விளக்குகளுடன் தொடங்கிய அந்த நாள் நினைவில் இருந்தது, வழமையாய் அவள் அவள் உச்சமடைந்ததும் நான் செருகிய மென்மையான கதகதப்புடன் கூடிய வாழைக்காயை அவள் கட்டப்பட்ட கண்கள் வழியல்லாமல் அவள் கதறலுடனேயே யோனிவழி உணர்ந்திருந்தாள். அவளை இழுத்து கட்டிலின் நுனியில் போட்டு வெண்ணெய் தடவிய தாக்குதலொன்றை நான் நடத்திய கணம் அவள் என்னிடம் அதுவரை நான் கேட்டிராத ”போதும்” என்கிற வார்த்தையைச் சொல்லியிருந்தாள். அன்றைக்கு அவளை விடுவித்த பொழுது அவள் என் காதில் சொன்னது நினைவில் இருக்கிறது ”நான் எத்தனை முறை வந்தேன் என்று நினைவில் இல்லை”. இதைக்கேட்டதும் சுந்தர் “City of God" என்றான் நான் மறுக்கலை அவனுக்கு தியரி தெரிந்திருந்தது நான் அதை முயற்சி செய்து பார்த்திருந்தேன் உமையாள் விழித்தாள்.

இது மோகனீயம் கதையுடன் தொடர்புடையது.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In கிரிக்கெட்

Go Aussie Go!!!

ஐய்யா! இன்னொரு ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் சீரியஸ்.

அபிஷியலா இந்தியா தான் முதல் ராங்கில் இருக்காம், இந்த சீரியஸ் தொடங்கும் பொழுது. முடியும் பொழுது எப்படி இருக்கும் என்று ராங்கிங் எப்படிச் செய்வாங்கன்னு சரியாத் தெரியாததால் தெரியலை. ஆனால் நிச்சயம் ஹோம் கிரவுண்டில் இரண்டு டெஸ்ட் மேட்சும் தோற்றால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும்.

போன முறை இந்தியாவில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளின் பொழுது விளையாடாத பான்டிங்கிற்கு இது கடைசி வாய்ப்பு(அவர் தான் சச்சின் டெண்டுல்கர் இல்லையே) என்பதால் அடித்து உதைக்க நல்ல வாய்ப்பு.

We never thought about our team as No. 1 team or of our team as being better than anyone else, but when Australia play, there is very good cricket. We don't play draws, we always have results. அப்படின்னு சொல்லியிருக்கும் பான்டிங்கின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறேன் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் பான்டிங் அது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்.

இந்தியாவிற்கு வந்து தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன்னாய் இருக்கும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி அடிக்கப் போகும் ஆப்பை பார்ப்பதற்கு ஆவலாய் நான் இருக்கிறேன். Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Baise Moi - Kiss Me

முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு செய்தார்.



அவரிடம்(மட்டும்) நான் பெண்ணியத்தைப் பற்றிய விவாதத்தை செய்ய மாட்டேன்; கிழித்தெரிந்துவிடுவார் என்று தெரியும். ஆனாலும் சுத்திச் சுத்தி பேசுவேன்.

"இங்கப்பாருங்க எந்த ஒரு விஷயமும் இந்தியாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இந்தியனைஸ்ட் செய்யப்பட வேண்டும். நாம இந்தியாவில் சாப்பிடும் பீட்ஸா இருக்கே அதை அமேரிக்காவிலோ இல்லை அதன் தாயகமான இத்தாலியிலோ கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் ஏன் தெரியுமா? நாம் சாப்பிடும் பீட்ஸா இந்தியாவிற்காக செய்யப்பட்டது நம்முடைய மசாலாக்கள் போடப்பட்டு செய்யப்பட்டது. அவன் லத்தின் அமேரிக்காவிலோ, அமேரிக்காவிலோ செல்லுபடியாகும் பீட்ஸாவை அப்படியே இந்தியாவில் கொண்டுவந்தால் அது ஊத்தி மூடியிருக்கும்.

அதைப் போலத்தான் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற கொள்கைகளும் கட்டுமானங்களும். இந்தியனைஸ்ட் செய்யாமல் இங்கே ஒன்றுமே வெற்றி பெற முடியாது. அப்படி செய்தீர்களேயானால் அது படுதோல்வியில் முடியும். அது புரட்சியாக இருந்தாலும் சரி பெண்ணியமானாலும் சரி." நான் வைத்த இந்த பாய்ன்ட்டை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் பல சமயம் இந்தியனைஸ்ட் செய்யும் பொழுது அந்தக் கொள்கை அப்படியே மாறிவிடுகிறது என்றும் புலம்பினார்.

ஏன் இதைப் பற்றி Baise-Moi பற்றி எழுதும் பொழுது சொல்கிறேன் என்றால், நான் பெண்ணியம் பற்றிய விமர்சனங்களை வைத்திருக்கும் பொழுது எனக்கு இந்தப் படத்தை அந்த நபர் அறிமுகப்படுத்தியிருந்தார். படம் பார்த்ததும் எனக்கு வந்த உணர்வுகளைத்தான் நான் சொல்லியிருந்தேன் அதனால் தான் அந்த வரிகள்.

சரி படத்தைப் பற்றி, ஏற்கனவே டிசே தமிழன் இந்த நாவலைப் பற்றி(இந்த படம் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது நாவலை எழுதியவர் துணை இயக்குநராய் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது) எழுதியிருந்தார். இந்தப் படம் 1973க்குப் பிறகு ப்ரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஏனென்றால் உலகின் கலாச்சார தலைநகரம் என்று பெயர் பெற்ற ப்ரான்ஸைப் பற்றிச் சொல்லும் பொழுது அதனுடைய சுதந்திரம் மிக முக்கியமான ஒன்றாக வைக்கப்படுகிறது அதாவது எழுத்து, பேச்சு சுதந்திரங்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு படம் என்ற Tag உடன் என்னிடம் அறிமுகம் ஆனது இப்படம்.

விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கையை காட்டுவதாக படம் அமைந்திருக்கிறது, நாவலை எழுதியவர்(இயக்குநர்) மற்றும் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் இந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆதலால் தத்ரூபமாக அம்மக்களைப் படம் பிடிப்பதாய் இருக்கிறது படம். இந்தப் படத்தை நாம் எந்த முறையில அணுகுகிறோம் என்பது மிகமுக்கியமான ஒரு விஷயமாகயிருக்கிறது. ஏனென்றால் இன்னமுமே கூட இது போன்ற ஒரு சூழ்நிலையை படமெடுக்க ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மறுக்கிறார்கள் எனும் பொழுது, நம் நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்தப் பிரச்சனைகள் இல்லையா நம் நாட்டில் என்றால் - இருக்கிறது சொல்லப்போனால் நிறையவே என்ற பதில் தான் வரும்.

எழுத்து வடிவத்தில் நம்மூர் ஆட்களில் இதைப் பற்றி எழுதுபவர்கள் இன்று இருக்கிறார்கள். ஜே.பி. சாணக்யா எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த விதத்தில்; ஆனால் பாலியல் விவகாரங்களை விளிம்பு நிலை மக்கள் துடைத்துப் போட்டுவிட்டுப் போகும் ஒரு விஷயமாகப் பார்ப்பதை நீங்கள் சாணக்யாவின் எழுத்துக்களில் பார்க்கலாம். (ஆனால் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு நபர் - சாணக்யாவின் எழுத்துக்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய விஷயங்கள் மிகைப்படுத்தலானதும் கொஞ்சம் போல் போலியானதாகவும் இருப்பதாக சொல்லிக் கேள்விப்பட்டேன்.) ஆனால் 'ரா'வாக விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் விவரிக்கிறது.

Baise Moi க்கு டிசே சொல்லியிருப்பதைப் போல் Rape Me நேரடியான அர்த்தமாக இருக்காதெனவும் Kiss Me தான் அர்த்தம் என்றும் இயக்குநரின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.(ஆனால் தற்சமயங்களில் F*** Me என்ற அர்த்தமும் வருமாம்).

நடீன் என்ற பகுதிநேர விலைமாதுவிற்கும், மனு என்ற தன்னுடைய வாழ்விற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு பெண்ணிற்கும் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. இருவருமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைச் சேர்ந்தவர்களையே கொன்றுவிடும் நிலை. நடீன் தன்னுடைய அறைத் தோழியையும் மனு தன்னுடைய சகோதரனையும் கொன்றுவிட்டு செல்லும் வழியில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் இருக்கும் ஒத்த பின்னணியால் சேர்கிறவர்கள். பணத்திற்காகக் கொள்ளையடிக்கிறார்கள், தேவைகளுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், பின்னர் வெறிக்காக(சமுதாயத்தின் மேல்) கொலை செய்கிறார்கள். இப்படியே நீளும் கதையில் கடைசியில் ஒரு கடையில் கொள்ளையடிக்கும் பொழுது மனு கொல்லப்பட, மற்றவர்(நடீன்) தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் பொழுது பிடிபடுகிறார்.

இவ்வளவு தான் படம் படமாக்கியிருக்கும் விதம் உண்மையிலேயே அதிர வைக்கிறது. அவர்களின் 'ரா'வான தன்மை. எந்த நோக்கமும் இல்லாமல் இயங்குவது, கொலை செய்வது என்று ஆச்சர்யப்படவைக்கிறது படம். இந்த வகையான எடிட்டிங் முன்பே பார்த்திருக்கிறேன்; தனித்தனியாய் இருவரைப் பற்றியும் ஆரம்பிக்கும் படம். இருவரும் சேர்ந்ததும் ஒன்றாய் பயணிக்கிறது. படத்தில் இருக்கும் ஒரு ரேப் சீன் பெரும்பான்மையான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று. உலகத்தின் பல பாகங்களில் இந்தப் படம் இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது; இந்தியாவிலெல்லாம் கேட்காதீர்கள்.

படம் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான நேரத்தில் ஒரு படம் பார்ப்பதைப் போன்ற உணர்வே எழுவதில்லை. இதற்கு இந்தப் படத்தை எடுத்த முறையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன் - இயற்கையான வெளிச்சத்திலேயே இந்தப் படத்தை எடுத்தார்களாம். இதைப் போலவே முன்பே நினைத்த ஒரு படம் Battle of Algiers's. நாம் எவ்வளவு செக்யூர்டான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு இதைப் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கிறது.

இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது எதற்காக இப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலாக இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை உலகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்ய என்று கூறலாம்; இயக்குநர் Virginie Despentes சொல்கிறார் படத்தில் காண்பிப்பதை விடவும் வன்முறையா ஒரு உலகம் இருப்பதாகவும் அதில் அவர் வாழ்ந்ததாகவும். விக்கிபீடியாவில் தேடிக்கொண்டிருந்த பொழுது தான் தெரியவந்தது இந்தப் படத்தில் நடீனாக நடித்த நடிகை Karen Bach சிறிது காலத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய கடைசி Note ஆக "Too Painful" என்று எழுதி வைத்திருந்ததாகவும். Karen Bach ஒரு போர்ன் ஸ்டாராக இருந்தவர் தான்.


Karen Bach

இந்தியாவில் இந்தப் படம் கிடைக்கிறதா தெரியவில்லை, படத்தில் செக்ஸ் சீன்களும் வன்முறையும் அதிகம் இருக்கும். இதை ஒரு ரிவ்யூ போல் எல்லாம் எழுதாமல் இந்தப் படம் பார்த்ததால் நான் உணர்ந்ததை எழுதியிருக்கிறேன்.

Written & Directed by - Virginie Despentes, Coralie Trinh Thi
Starring - Karen Lancaume, Raffaëla Anderson

http://en.wikipedia.org/wiki/Baise_moi
http://en.wikipedia.org/wiki/Virginie_Despentes
http://en.wikipedia.org/wiki/Karen_Lancaume

Read More

Share Tweet Pin It +1

9 Comments

Popular Posts