In

உத்தம வில்லன்

எல்லாப் படங்களும் எல்லோருக்குமல்ல என்பதை இன்னொரு முறை சொல்கிறது உத்தம வில்லன். மணிரத்னம் எடுத்த குப்பை OKK போலில்லாமல் புதிய முயற்சி. அதற்குள்ளும் இணையத்தில் வெளியாகிவிட்டது உத்தம வில்லன். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் இல்லாமல் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் வெளியாகியிருந்தது. நான் எங்கே பார்த்தேன் என்பதற்குள் போகவிரும்பவில்லை. இணையம் கதறித்தீர்த்திருந்தது அதற்குள், பார்ப்பதா வேண்டாமா என்பதைப்பற்றிய கேள்விகள் இல்லை.

கதை தெரிந்திருக்கும் எனக்கும் கதை சொல்லிச் செல்வதில் விருப்பமில்லை. பேச விரும்புவது கமல்ஹாசனின் இந்தப் படத்திற்கான தேவை என்னவாகயிருக்க முடியும் என்பது. மக்களுக்குப் பிடிக்கும் ஒரு படத்தை கமலால் எடுக்க முடியாதென்பதல்ல, செய்யாதவருமல்ல, கமலுக்கு  பஞ்ச தந்திரம் போல் ஒரு கதையைத் திரைக்கதையாக்கி படமாக்க எளிதாகவே முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற பரீட்சைசார்ந்த படத்தை - அப்படிச் சொல்லவே வாய் வரலை - ரொம்பச் சாதாரணமான படம் தான் இதுவும், என்டர்டெய்ன்மென்ட் வால்யூ இல்லை - அதையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது தமிழ்ச்சினிமா பற்றி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கற்பனை தானே. மூன்று படங்கள் வருகிறதே ஒன்று இப்படியிருந்துவிட்டுப் போகட்டும் என்று கமல் விட்டிருக்கலாம். 

எனக்குப் பிடிக்காத அம்சங்கள் இதில் இருந்தது, பாலச்சந்தருக்கு நடிக்க வரலை, பூஜா குமார் சுத்தம். இயல்பாய் வந்திருந்தது ஊர்வசியுடைய நடிப்பு தான், மிகையைத் தொடாமல் விட்டுவிலகியிருந்தார். பாலச்சந்தர் ஒருமுறை சொல்லியிருந்தது போல், கமல் ஒரு படத்தில் காட்டத்துடிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் இன்னமும் கிரிஸ்பாக படம் வந்துவிடும் தான். எல்லாவற்றையும் ஒரே படத்தில் போட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தையும் அவருக்குத் திணித்தது கோடம்பாக்கமும் தமிழ் சினிமா ரசிகர்களும் தான். 

இது போன்ற படமெடுக்கும் துணிபு கமலுக்குத்தான் வருமென்ற சொல்ல முடியவில்லை, இன்னமும் சினிமாச்சூழல் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதற்கே குதிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ப்ளாக்-ஆக இன்னும் வறட்சியாக எடுத்திருந்தால் என்னவாகியிருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 'வோ லம்ஹே' படத்தில் வரும் ஒரு காட்சியை கமல் எடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. சொல்லப்போனால் எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காததே, தமிழ்ரசிகர்களுக்காக கமல் தன்னைத் தானே கட்டுக் கொண்டிருக்கும் போக்கு தான். இந்தப் பக்கமும் வராமல் அந்தப் பக்கமும் வராமல் மத்தியில் நின்றிருக்கிறார் கமல். கலைப் படம் எடுக்கத் தெரியாதவர் அல்ல, வணிக சினிமாவும் எடுக்கத்தெரியாதவர் இல்லை, ஆனால் மத்தியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் இக்காலங்களில், ஏதாவது ஒரு பக்கம் நகர்ந்துவிடுவது அவருக்கும் தமிழ்ச்சினிமாவுக்கும் நமக்கும் நல்லது. 

அவர் கதை - திரைக்கதைக்கு மற்றவர் இயக்குநர் என்றால் அது எப்படிப்பட்டமாயிருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு, எங்கே ரசிகர்கள் ஏமாந்தார்கள் என்று தெரியாது. கடைசி கமலஹாசன் படங்களைப் பார்த்தாலே இம்மாதிரியான படத்திற்கான தேவையும் அதை கமல் செய்யாமல் விடமாட்டார் என்பதும் தெரிந்தேயிருக்கும். மீண்டும் சொல்கிறேன், எப்பொழுதும் எல்லாப்படமும் எல்லோருக்குமல்ல. இதில் உயர்த்தி தாழ்த்தி சொல்வதில் எதுவும் இல்லை, நான் எல்லாப் படங்களையும் தொடர்ச்சியாய் பார்த்தே வருகிறேன், நெட்ப்ளிக்ஸில் ஐந்து நட்சத்திரத்திற்கு ஒன்று வாங்கிய படங்களையும். சினிமா என் வாழ்க்கையின் ஒரு பாதி என்று முடிவு செய்திவிட்டிருக்கிறேன், இன்னமும் சுஜாதா போல் ஆகவில்லை, கொஞ்ச காலம் தான் உயிர்வாழ்வேன் என்று தெரிந்த பின்னால் மட்டுமே நான் சினிமாவில் காலம் தள்ளுவதை நிறுத்துவேனாயிருக்கும். 

இதை உத்தம வில்லன் விமர்சனம் என்று சொல்லவில்லை, தொடர்ச்சியாய் இணையத்தில் பார்த்த விமர்சனங்களால் தோன்றிய எண்ணம். சுஹாஸினி சினிமா விமர்சனம் பற்றிச் சொல்லியதற்கு கமல் கொடுத்த வியாக்கியானம் சரியானதல்ல, ஆனால் அது அவருடைய பர்ஸனல் ஒப்பினீயன் என்றே எடுத்துக் கொள்கிறேன். சில பல காரணங்களுக்காக இந்தப் படத்தையும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகச் சொல்வேன் தான், இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம், ஆனால் அது தமிழ்மக்களுக்கு மொத்தமாகப் பிடிக்காமல் போயிருக்கும் என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

எம்டிஎம் விமர்சனம் பார்த்தேன். பின்னர் இன்னும் சில எம்டிஎம் சொல்லும் புள்ளியில் நின்று. ஆனால் இந்தப் படம் முக்கியம் என்றால், எம்டிஎம் சொல்லும் அதே புள்ளிக்காகத்தான். அவர்களுக்கு வெறுப்பதற்கான புள்ளி என்றால் எனக்கு இந்தப் படம் பிடித்திருப்பதற்கான புள்ளி அது தான்.

ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்கள் தொடக்கூடாத விஷயம் என்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்துகிறார்கள்.  கமலால் இத்தனை துள்ளியமாய் கிறிஸ்துவத்தை, இஸ்லாத்தை துகிலுறிக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் ஒன்றுதான். இன்னமும் இந்தியாவில் தமிழகத்தில் இவை சிறுபான்மை மதங்கள் தான், அதைப்பற்றிய விரிவான விமர்சனம் அந்த மதங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருக்கும், அது அப்படித்தான் முடியும். பில் மாஹ்ர் அளவிற்கு கிறிஸ்துவத்தை ஓட்டுபவர்கள் குறைவு தான்(பில்-இடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் தற்சமயத்தில், இஸ்லாம் பற்றி அவர் வைக்கும் விவாதம்.) இப்படி இவர்கள் கதறுவதற்காகவே இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்.

PS: Updated the post after reading MDM review. 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்

பெண்ணியமும் சில புடலங்காய்களும்

ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே என்னைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி வரவில்லை, ஏனென்றால், என்னைவிட குறைவாய்ப் படித்த, தமிழ் மீடியத்தில் படித்தப் பெண் அதிக சம்பளம் வாங்கும் வாய்ப்பிருக்காது என்பதல்ல அதற்கு காரணம். அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பப்போவதில்லை என்பதுதான். ஆப்பியஸ்லி வேலைக்குப் போகாத பெண் என்னைவிட அதிக சம்பளம் வாங்க முடியாதில்லையா?

இதெல்லாம் சொல்லப்போனால் ரொம்பவும் சராசரியானவை. பின்நாட்களில் என் நண்பர்களுடைய திருமண விபத்திற்கு பிறகு இந்த பட்டியல் நீண்டது தான் ஆச்சர்யம், அதுவும் முந்தயதைவிடவும் நீளமாய். பொண்ணோட பேமிலி எங்க பேமிலியைவிட வசதியானதாய் இருக்கக்கூடாது. பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருக்க வேண்டும். நிச்சயமாய் ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே என்பது அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட அத்தனை நண்பர்களின் ஒட்டுமொத்த அறிவுரையாக இருந்தது. அதைப் போலவே பெண்ணிற்கு கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் டீபால்டாக சொல்லப்பட்டது. அப்படி ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு நிச்சயமாய் பெண்ணியம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் எதற்கெடுத்தாலும் பிறகு சண்டை வருமென்றும் சொல்லித்தரப்பட்டது. இப்படியாக பேச்சுப்போட்டியில் அந்தப் பெண் ஒருமுறை கலந்துகொண்டிருந்தால் கூட நிராகரிக்கும் படியாகக் ஒரு தண்ணீர்ப்பார்ட்டியில் அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட நண்பர் அழுதுகொண்டே கூற, சிறிது நேரத்தில்தான் தெரிந்தது. நண்பருடைய மனைவி சண்டை வந்துவிட்டால் நேரடியாக பாரதி, பாரதிதாசன் போன்ற இன்னபிற ஆட்களின் கவிதை வரிகளைப் பாடிக் காண்பித்து கடைசியில் நீங்களெல்லாம் எப்பத்தான் உருப்புடுவீங்களோ என்றுதான் முடிப்பார் என்பது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், பெண்ணுடைய சகோதரகள், பொண்ணுடைய சகோதரியுடைய கணவர்கள் இவர்களை விட நீ சம்பளம் அதிகம் வாங்கினால் மட்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்றுகூட அட்வைஸ் வழங்கப்பட்டது.

அதென்னமோ கல்யாணம் ஆகிவிட்ட அத்தனை நண்பர்களுக்கும் என்னுடன் தண்ணியடிப்பதில் ஒரு அலாதி திருப்தி, தங்களின் சோகங்களைச் சொல்லி விரைவில் திருமணம் ஆக இருக்கும் ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வீரர்கள் போன்ற ஒரு உணர்வு வரும்போலிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் இதற்கெல்லாம் வழியில்லாமல் அப்பாவிற்கு தெரிந்தவர் மகள் என்ற பெயரில் நான் அகிலாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். பொண்ணு பிராமணப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் எப்படியாவது இந்தக் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திவிட நான் செய்த அத்தனையும் தவிடுபொடியானது. இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் இதெல்லாம் நினைவில் வர. நான்கு ஆட்கள் தலைக்கு மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் போன்ற தலைவலி தானாய் வந்தது.

தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரிந்தது, ஆராம்ஸேயாய் கையில் காபித் தம்ளருடன் சோபாவில் உட்கார்ந்து, எதிரில் தேடித்தேடி கஷ்டப்பட்டு வாங்கிய டீப்பாயின் மீது வைத்துக்கொண்டிருந்த, அகிலாவின் கால்கள். அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்திருக்க டீவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலைப் பார்த்ததும் அதுவரை கஷ்டப்பட்டு பொத்திக்கொண்டிருந்த கோபம் வார்த்தைகளாய் சீறியது.

"யேய் எனக்கு இப்ப உடனேயே காப்பி வந்தாகணும்."

"ஏண்டா புள்ளத்தாச்சிப் பொம்பளைக்கிட்ட உன் ராங்கித்தனத்தைக் காட்டுற. ஒரு நிமிஷம் இரு போட்டுத் தர்றேன்." அம்மா எழுந்திருக்க, அந்த நொடியே அதுவரை டீப்பாயில் இருந்த ரிமோட் வேகவேகமாக அவள் முதுகிற்கும் அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கும் இடையில் சென்றது.

"அகிலா சொன்னா மரியாதையா கேளு. இப்ப ரிமோட் என்கிட்ட வந்தாகணும்."

அவளிடமிருந்து பதிலேதும் வராமல் உதட்டைச் சுழித்து பழிப்பு மட்டும்தான் வந்தது. எங்க வீட்டுப் பொண்ணுங்க இப்படிச் செய்து பார்த்ததேயில்லை. இதை ஒருநாள் இருவரும் சந்தோஷமாக இருந்த நாள் ஒன்றில் சொல்லிக்காட்ட, உங்க வீட்டுப் பொண்ணுங்களெல்லாம் பொண்ணுங்களே இல்லை என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் நான் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்து பிறகு அக்காவிடம் சொல்லி சமாதானம் ஆனது நினைவில் வந்தது. அவளுக்கு நன்றாகவேத் தெரியும் இந்தச் சமயத்தில் நான் அவளின் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று. ஏனென்றால் அவள் எங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.

மனதிற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்க, கண்களால் நான் கைகளால் செய்ய முடியாததை செய்துகொண்டிருக்க, கண்ணெதிரில் காபித் தம்ளர் நீட்டப்பட்டது, கூடவே தலையில் ஒரு கொட்டுடன்.

"வந்ததும் வராததுமா அவகிட்ட ஏண்டா வம்பு பண்ற? அவ ஒன்னும் சீரியல் பார்க்கலை, நான் தான் பார்த்துக்கிட்டிருந்தேன். போதுமா?"

இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது கடந்த நான்கைந்து மாதங்களாய், நாங்கள் மணாலியில் இருந்து திரும்பியதிலிருந்து அம்மாவின் புல் சப்போர்ட் அவளுக்குத்தான். இது என் கோபத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்றார்போல் அவள் திரும்பவும் பழிப்புக் காட்ட. அம்மா,

"ஏய் சும்மா இருடீ. நீயும் அவனுக்குச் சமமா வம்பிழுத்துக்கிட்டு." எனக்குச் சாதகமாய் பேசினாலும் கோபம் தலைக்கேற.

"இனிமேல் நான் வேலைக்குப் போக மாட்டேன். இவ குட்டிப் போட்டதும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டு வரட்டும் நான் வீட்டைப் பார்த்துக்கிறேன்."

"குட்டிப்போடுறன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன வேலைக்குப் போகணும் அவ்வளவு தானே போனாப்போகுது. என்ன பெரிய விஷயம்? புள்ளப் பெத்துக்கிறத விட பெரிய விஷயம்."

அம்மாவிற்கு இந்தச் சண்டை சின்னப்பிள்ளைத்தனமாய்த் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவில் இருந்து எழுந்தவர்.

"நான் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போகப்போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதுதான் நான் உங்க ரெண்டுபேருக்கும் கொடுக்குற டைம். அதுக்குள்ள சண்டபோடுவீங்களோ, இல்லை கத்தியை எடுத்து மாத்திமாத்திக் குத்திப்பீங்களோ தெரியாது ஆனா நான் வந்தப்புறம் வீடு அமைதியாகிடணும். அவ்வளவுதான்."

அம்மா அந்தப் பக்கம் சென்று ஒன்றிரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். என்னையே கண்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அருகில் வந்தாள். அவள் அப்படிப் பார்த்ததற்கான அர்த்தம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னை கணக்கிடும் கால்குலேட்டராய் கண்களை மாற்றிக்கொண்டு, வரப்போகும் பொய் மலையில் இருந்து அன்னமாய் உண்மையை கறக்கும் ஒரு நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிதான் அது.

"என்னாச்சு என் செல்லத்துக்கு ஏன் இப்படியொரு கோபம். ஆபிஸில் கோகிலா ஆண்ட்டி ஏதாவது வஞ்சாங்களா?"

இதுதான் எனக்கு அகிலாவிடம் அடியோடு பிடிக்காதது. நான் நடந்த பிரச்சனைய அடியோடு மறந்து வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி உண்மையான பிரச்சனையில் தெரிந்துவிட்டிருந்த என்னுடைய கையாலாகாத்தனத்தைக் கோபமாக வெளியிட்டுக் மறைக்கலாம் என்றால் அது என் செல்லப் பெண்டாட்டியிடம் நடக்காது. அதுவும் நிறைய பொய்களைச் சொல்லி அடுக்குவதற்கு முன்பே உண்மையான பிரச்சனை கண்டுபிடிக்கப்படும். என்னுடைய பொய்கள் செல்லுபடியாகாத ஒரே ஆள் அகிலாதான். சின்னவயதிலிருந்தே நம்பும்படியாய் பொய் சொல்லி வளர்ந்தவன் ஆதலால் அநாயாசமாய் வெளிப்படும் மூட்டையை அதைவிட அநாயாசமாய் புறந்தள்ளிவிடும் சாம்ர்த்தியம் அகிலாவிடம் நான் எப்போதும் மலைக்கும் ஒரு குணம்.

ஒரு விஷயம் ஒரு நபருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த விஷயத்தை எந்தவித பிரச்சனையுமில்லாமல் அந்த நபர் கண்டுபிடித்துவிடும் நேரத்தில் ஏற்படும் வாழ்க்கையின் மீதான விரக்தி எனக்கும் ஏற்பட்டது அவளுடைய அந்தக் கேள்வியால். அப்படியிருந்தும் உண்மைவெளிப்பட்டுவிடக்கூடாது என நினைத்து,

"எதுக்குத் தேவையில்லாம அவளை இழுக்குற இங்கே. என் கம்பெனிக்கும் இந்த முடிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தெரியுமா நான் வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு இருபது. இப்ப முப்பத்தி மூணாகுது. அக்காவிற்கு கல்யாணம் செய்து வச்சு, அம்மா அப்பாவிற்கு வீடு கட்டிக்கொடுத்து. உன்னைக் கல்யாணம் பண்ணி இப்ப குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.

ஏதாவது கேட்டா உடனே வீட்டைப் பார்த்துக்கிறதும் கஷ்டம் தான்னு ஒரே அலப்பற. அதனாலதான் இப்படி ஒரு முடிவு. இனிமேல் நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன். வேணுனா நீ பெத்துப்போடுற குட்டிப்பிசாச பார்த்துக்குறேன்.

நீயே சொல்லு என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம். நிம்மதியா உட்கார்ந்து ஒரு சீரியல் பார்க்கமுடியுதா, மனசவிட்டு ஒரு சீரியல் கேரக்டருக்காக அழ முடியுதா. என்ன வாழ்க்கை அதான் இப்படி ஒரு முடிவு. நீயும்தான் படிச்சிருக்கயில்லை, வேலைசெய்தா என்னவாம்."

நான் சொல்லிமுடிக்க அவள் நினைத்திருக்க வேண்டும், இப்ப பேசி தீர்க்கிற பிரச்சனையில்லை இது என்று அவளாய் நகர்ந்துபோய் பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கதில் கிடந்த கல்கியை புரட்டத் தொடங்கினாள். நானும் ஒருவாறு அவளை சமாளித்ததாய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கை, கால் அலம்பிக் கொண்டுவந்திருப்பேன் அம்மா கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். வந்ததும் வராததுமாய் புதுப்பிரச்சனை.

"டேய் இங்கப்பாரு எனக்கு காலெல்லாம் ஒரே வலியாயிருக்கு. இன்னிக்கு நீ அகிலாவை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு."

என்னுடைய வேலை காரணமாக ஒரு சமச்சீரான அலுவலக நேரங்கள் எனக்குக் கிடையாது. அதன் காரணத்தால் பொதுவாகவே நான் நடுஇரவில் ஆந்தை போல் உலாவிக் கொண்டிருந்ததால் அகிலாவை டாக்டரிடம் அழைத்துச் செல்வது, வாக்கிங் கொண்டு செல்வது என எல்லாச் சமாச்சாரங்களையும் அம்மாதான் செய்து வந்தார்கள். இதுவரை கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே அவள் என்னுடன் வந்திருப்பாள். இதில் இடையில் ஒரு மாதம் ஆன்சைட் வேறு. அம்மா என்னிடம் நேற்று அகிலாவிற்குத் தெரியாமல் கேட்டுக்கொண்டதற்காக மறுபேச்சுப் பேசாமல் அவளுடம் கிளம்பினேன். அகிலாவிற்கு ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும் என்னுடைய செயல்.

சாதாரணமாகவே வேகமாக நடக்கும் எனக்கு அவள் மெதுவாய் நடந்துவந்ததுதான் காரணமா தெரியாது ரொம்பவே மெதுவாய் நடப்பதாய்ப் பட்டது. பெங்களூர் பசுமையான ஊர், 100 மீட்டருக்குள் ஒரு பூங்காவைப் பார்த்துவிடலாம். அதுவும் நவம்பர் டிசம்பர் மாதத் தொடக்கம் என்பதால் பூங்காவெங்கும் விதவிதமான ரோஜாப்பூக்களைப் பார்க்கலாம். எனக்கும் ரோஜாப் பூக்கள் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சாப்ட்வேர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தில் மறைந்து போன ஒரு விஷயம் ரோஜாக்களுடன் நேரத்தை செலவிடுவது.

மௌனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் நடை, பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் பெஞ்சில் முடிவடைந்ததைப் போலவே எங்கள் மௌனமும் ஒரு முடிவிற்கு வந்தது. பூங்காவிற்குள் நுழையும் பொழுதே என்னுடைய கைகளை இருகப் பிடித்துக்கொண்டாள் அகிலா. அந்தத் தொடுதல் டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் இருந்தது.

"மோகன் நம்ம பையன் உதைக்குறான் பாருங்க." என்று சொல்லி அவள் கையோடு சேர்த்திருந்த என் கையை அவள் வயிற்றுப் பகுதிகுள் கொண்டுசெல்ல, அநிச்சையாய் என் கைகளை வெளியே உருவினேன். முதலில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் செய்தாலும் பிறகு செய்தது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் எனத் தெரிந்ததால் சமாதனப்படுத்தும் எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ சப்தமாய்ச் சிரித்தாள்.

"இத்தனை வருஷத்தில் நீங்க இன்னமும் மாறவேயில்லை. தாஸ்."

உண்மைதான், அந்த அந்நிச்சை செயல் அவள் மனதில் எந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியிருக்கும் என்று எனக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை நினைத்ததும் எனக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. எங்கள் திருமணம் முடிந்து அதாவது தாலி கட்டிமுடித்த பிறகு ஏதேதோ பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் என்னிடம், அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல நான் விழித்தேன்.

அதற்கு அவர் இது சாந்திமுகூர்த்த பூஜைக்காக, கல்யாணம் முடிந்ததும் ஐயர் அவர் வீட்டிற்கும் நாங்கள் எங்கள் வீட்டிற்கும் செல்வதாய் ப்ளான் அதனால் சாந்திமுகூர்த்தத்திற்கு முன்னர் செய்யவேண்டிய சடங்கை இங்கேயே செய்துவிடலாம் என்றே சொல்வதாகவும், சீக்கிரமாக அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல, அப்படியொரு சடங்கு எங்கள் பழக்கத்தில் கிடையாது என்பதால் என் துணைக்கு அக்காவையோ அம்மாவையோ தேட, பக்கத்தில் இருந்த ஒரே ஆள் அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ தான்.

நான் ஐயர் சொன்னதை மட்டும் செய்யாமல் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் பார்த்து திருதிருவென முழிக்க, ஐயர் 'ஓய் உம்ம அகமுடையாள் தப்பா நினைச்சுக்க மாட்ட. சும்மா தொடுங்க ஓய்' என்று சொல்ல. நடப்பதையெல்லாம் பார்த்து ஜெயஸ்ரீ சிரிக்க அகிலா என்னுடைய கையை எடுத்து அவள் வயிற்றுப்பக்கத்தில் கொண்டு சென்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று. அந்த நினைவுகள் பசுமையாக எழவும். வேகமாய் விலக்கிக் கொண்ட கையை நானாகவே அவள் வயிற்றுப்பக்கம் கொண்டு செல்ல, என் கைகளுக்குக் கீழ் எதுவோ ஒன்று அழகாய் புரள்வதாய்த் தோன்றியது, தொடர்ச்சியாய் அகிலா லேசாய் முனகினாள்.

நான், "நம்ம பொண்ணுக்கு அதுக்காட்டியும் அவசரம் பாரு..." சொல்ல அகிலா,

"வேண்டவே வேண்டாம், உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அப்புறம் பொறக்குறது பொண்ணா பொறந்துத் தொலைக்க என்னென்ன பிரச்சனை பண்ணுவீங்களோ." என்று சொல்லி அழகாய்ச் சிரிக்க, நான்.

"இங்கப்பாரு எதுக்கூட எதை கம்பேர் செய்யற. எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா. சொல்லப்போனா என்னை நான் பெண்ணியவாதின்னு கூட சொல்லிக்குவேன். ஒரு பெண்ணியவாதிக்கான கடமைகள் எதுஎதுன்னு யாருமே இதுவரை வரையறுத்துச் சொல்லலை. இதுவரைக்கும் நீ எதாவது சொல்லி நான் இல்லைன்னு சொல்லியிருக்கேனா? இப்பக்கூட பாரு உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டில் இருக்கேன்னு சொல்றேன். இதைவிட என்ன செய்துவிடமுடியும் ஒரு பெண்ணியவாதியாக. சொல்லப்போனால் இதுமட்டுமே போதும் என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்க." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"பெண்ணியவாதியாம் பெண்ணியவாதி, புடலங்காய் பெண்ணியவாதி. எனக்குத் தெரியாது உங்க லட்சணம். இன்னிக்கு கோகிலா எதுவும் வேலை கொடுத்திருக்கும். நீங்களும் செய்திருப்பீங்க, பார்த்துட்டு இதை இப்படி செய்றத விட இன்னொருமாதிரி செஞ்சா நல்லாவும் வேகமாகவும் வேலை செய்யும்னு சொல்லியிருக்கும். அங்க சரி சரின்னு சொல்லிட்டு வந்து உங்க கோபத்தை இங்க காட்டூறீங்க. சரிதானே?"

அவள் சொன்னதன் ஒரு பாதி சரிதான், கோகிலாவிற்கும் எனக்கும் இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இன்று நடந்தது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது. நான் வேலைக்குப் போகமாட்டென் என்று சொல்லியதற்கு அகிலாவும் ஒரு காரணம்.

நேற்று அம்மா வெளியில் ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி காரில் இறக்கிவிடச் சொன்ன பொழுது நான் ஒன்றும் யோசிக்கவேயில்லை, சாதாரண நிகழ்வுதானேயென்று. ஆனால் அம்மா வண்டியில் உட்கார்ந்து வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னது தான் நான் வேலையை சிறிது நாட்கள் விட்டுவிட நினைத்ததற்கு முக்கியக்காரணம்.

"தம்பி அகிலா ரொம்ப பயப்படறாடா! முதல் பிரசவம் வேற, அம்மா இருந்து பார்த்துகிற அளவுக்கு வசதி பத்தாது அப்படின்னு நிறைய பிரச்சனை. முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு செத்துப் பிழைக்கிறது மாதிரிடா. உனக்குப் புரியாது. கவலையேப்படாமல் நார்மலாகப் பெத்துப் போடுற பொண்ணுங்க இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.

உன்னை ஏன் இப்படி வளர்த்தேன்னு இப்ப வருத்தப்படுறேன். உங்க தாத்தா பாட்டிய ஏன் என்னைய உங்கப்பாவை கூட எப்படியிருக்கீங்க, உடம்பு நல்லாயிருக்கான்னு கேட்க மாட்ட நீ. நானும் அதை ஒரு பிரச்சனையா பார்க்கவேயில்லை. ஆனால் இதையே அகிலா இப்படி இருக்கிற நேரத்தில் அவள்கிட்ட செய்யக்கூடாதும்மா.

அவ கூட உட்கார்ந்திரு, உடம்பு எப்படியிருக்கு எதுவும் கஷ்டமாயிருக்கான்னு கேளு. அவ இத நேரா உன்கிட்ட சொல்லாட்டியும் நிச்சயமா இத உன்கிட்டேர்ந்து எதிர்பார்ப்பா. உன்னைய பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டேன்னா கொஞ்ச நாளைக்கு லீவைப் போட்டுட்டு அவக்கூட இரு.

உனக்கும் அவளுக்கும் முந்தி இருந்த பிரச்சனையை நீ முழுசா மறந்திட்டேன்னு எனக்குத் தெரியும் ஏன் அவளுக்கேக் கூடத் தெரியும். ஆனால் இந்த முழுகாம இருக்கிற நேரம் இருக்குப் பாரு எல்லாத்தையும் தப்பாவே நினைக்கச் சொல்லும், நான் சொன்னா நம்ப மாட்ட இதை எப்படி சொல்றதுன்னு கூட நான் நினைச்சேன் ஆனால் பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்குப் புரியணும்னா சொல்லித்தான் ஆகணும்னு சொல்றேன். இந்த ஐந்து மாசத்தில் அவளை தொட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீ இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவ நினைக்கிறா! அதுமட்டுமில்லாமல் நீ ஏதோ தப்பு பண்ணுறீயோன்னு பயப்படுறா, வேற பொண்ணொட தொடர்பு எதுவும் இருக்கும்னு நினைச்சு தினம் அழுகைதான். அதனால் தான் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு லீவைப் போடு அது முடியாதுன்னு வேலையை விட்டுறு கொஞ்ச நாளைக்கு."

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது அம்மா சொன்னது, அப்படியுமிருக்குமான்னு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அப்படின்னு தான் நான் அகிலாவை நினைத்தேன். வார்த்தைகளால் மட்டும் காண்பிக்கப்படுவதில்லை அன்புங்கிறது அவளுக்கு தெரியும் என்றும் நினைத்தேன். ஆனால் அம்மா சொன்னது ஆச்சர்யத்தை அளிப்பதாகயிருந்தாலும் என் செல்ல மனைவிக்காக இதைக்கூட செய்யாம எப்படியென்று தான் வேலையைவிட முடிவெடுத்தேன். அதைச் சொன்னால் ஒருவேளை ஏதாவது காம்ப்ளக்ஸ் வரலாம் என்பதால் கோகிலா மேட்டரையே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து அகிலா கேட்டதற்கு உண்மை என்பதைப் போல் சிரித்து வைத்தேன்.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

மச்சினிச்சி வந்த நேரம்

"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.

"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.

நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.

"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல

"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."

அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.

"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.

"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.

"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."

சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.

வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.

"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.

"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"

"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"

நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."

நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"

கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.

என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,

"என்னடா பிரச்சனை?"

சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,

"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"

"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.

"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."

அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,

"யோவ்..." என்றாள்.

நான் திடுக்கிட்டவனாய்,

"என்னாடி இது மரியாதை கொறையுது."

"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.

ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."

அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.

"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."

வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.

அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.

சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

நான் நுழைந்ததும்,

"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."

"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.

"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.

"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.

"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."

அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.

"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."

"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.

நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.

"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."

விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.

"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை."

நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.

"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.

இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"

ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."

"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.

"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."

அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.

"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.

"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"

"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.

"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.

"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.

ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.

"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"

பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.

"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"

நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"

மூச்சை இழுத்துவிட்டவள்,

"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"

சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.

பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."

"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."

சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு

"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.

அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.

"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"

"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.

"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.

"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"

நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.

"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."

அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.

"எங்க கிளம்புறீங்க?"

"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.

"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,

"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"

கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,

"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.

காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.

"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"

"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.

"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,

"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.

"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.

"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"

"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.

இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.

உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"

முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.

"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.

"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.

"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"

கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.

"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.

"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In இந்து இப்படியும் ஒரு தொடர்கதை சிஐஏ சிறுகதை

இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்

ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது, நாங்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியிருந்தது.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரும்மா, நாங்க அப்பவே முடிவெடுத்துட்டோம், மூணு நாலு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்குறதுன்னு. அதுமட்டுமில்லாம குழந்தையை சுமக்கப்போறது அவ. அதனால இதப்பத்தி அவதான் முதலில் முடிவெடுக்கணும்." அப்பொழுது தான் இருவரும் சேர்ந்திருந்ததால், மீண்டும் ஒரு பிரச்சனையை என்னிடம் உருவாக்கவேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும் அம்மா, ஆனால் அகிலாவிடம் என்ன சொன்னார்களென்றெல்லாம் தெரியாது. அந்த வாரக்கடைசியில் எங்களுக்கிடையில் இதைப்பற்றிய பேச்சு எழுந்தது.

"மோகன் நாம ஒரு விஷயத்தைப் பத்தி இப்பவே பேசி முடிவெடுத்துக்கணும்."

"எதைப்பத்தி?"

"நம்ம குழந்தையைப்பற்றி..." அவள் சொன்னதும்,

"அகிலா அம்மா எதுவும் சொன்னாங்களா?"

"அதை விடுங்க, அது இல்ல இப்ப முக்கியம். நம்ம குழந்தையைப் பற்றி நாம சில விஷயங்களை இப்பவே பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

எனக்கு எங்கம்மாவின் மீது கோபம் வந்தாலும், இவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாததால்,

"என்ன விஷயம்?"

"இல்லை நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டாலும், நம்மிடையே ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை நிறைய வேறுபாடுகள் உண்டு, நம்ம குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம். என்னென்ன கற்றுக்கொடுக்க போகிறோம் இதையெல்லாம் முன்னாடியே தீர்மானிச்சிற்றது பெட்டர். ஏன்னா நம்ம இரண்டு குடும்பங்களோட பழக்க வழக்கங்கள் கூட முழுவதும் வித்தியாசமானது. நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்க, நான் சாப்பிட மாட்டேன் இப்படி நிறைய விஷயங்கள். முட்டாள்தனமா ஒன்னுமே யோசிக்காம இந்த குளத்தில் விழ நான் விரும்பவில்லை..."

அவள் சொன்னதும், "இங்கப்பாரு அகிலா குழந்தை பெத்துக்கிறதைப் பத்தி தீர்மானிக்கிற மொத்த உரிமையையும் நான் உன்கிட்ட கொடுக்குறேன். ஆனால் நீதான் குழந்தை பெற்றாய் என்பதற்காக உன் பாணியிலோ, அல்லது குழந்தையில் வளர்ச்சியில் முழுபங்கையோ உனக்கு மட்டுமே விட்டுத்தர்றது என்னால முடியாது. இதுவரைக்கும் நான் உன்னை நான்வெஜ் சாப்பிடவோ இல்லை சமைக்கவோ கூட நான் வற்புறுத்தியதில்லை. சரியா?"

"மோகன் நானும் உங்கக்கிட்டேர்ந்து முழுஉரிமையை எதிர்பார்க்கவில்லை, ஏன் சொல்றேன்னா, நாளைக்கே அவனுக்கு பூணுல் போடணும்னு நினைத்தால், நான்வெஜ் சாப்பிட்டுக்கிட்டு பூணுல் போடறுதுங்கிறது தப்பு அதனால் தான். முதலில் நாம அவனுக்கு பூணுல் போடப்போறமா இல்லை உங்க வழக்கப்படி வளர்க்கப்போறமா அது தெரியணும்."

"அகிலா நான் ஒன்னு சொல்லட்டுமா. இதெல்லாம் இப்ப தீர்மானிச்சாலும் சரிவராதுங்கிறது என்னோட பாலிஸி. நம்மளோட வழக்கத்துக்கு குழந்தையை வளர்க்கிறதுக்கு பதிலா, குழந்தையை வளர்க்கும் பொழுது எது நல்ல வழக்கமா படுதோ அதை தேர்ந்தெடுப்போம். அவள் சங்கீதம் கத்துக்கப்போறேன்னா கத்துக்கட்டும், டான்ஸ் ஆடப்போறேன்னா செய்யட்டும், கம்ப்யூட்டரில் வாழ்வேன்னா வாழட்டும்..."

"எல்லா விஷயங்களும் அப்படி முடியாதுங்க, குழந்தைக்கு ஆரம்பத்தில் சிலவிஷயங்களை கத்துத்தரணும். அந்த அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் கடைசிகாலம் வரை மாறாமல் இருக்கும். குறிப்பா கடவுளைப்பற்றியது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒரு வழக்கம் இருக்கும். நம்ம வீட்டிலோ இரண்டு விஷயம். நீங்கள் கடவுளை நம்பமாட்டீங்க உங்களைத் தவிர்த்த அனைவரும் வீட்டில் கடவுளை நம்புவோம். ஆனால் உங்களுக்கு சரின்னு பட்ட சில விஷயங்ளை உங்கப் பிள்ளைக்கு சொல்லித்தர நான் எப்படி தடுக்க முடியும். ஒரே வீட்டில் இருந்துக்கிட்டு, நான் கடவுளை நம்புண்ணும் நீங்க நம்பாதேன்னும் சொன்னீங்கன்னா சரியா வராது இல்லையா."

எனக்கு இதைக் கேட்டதும் முதலில் சிரிப்புத்தான் வந்தது, இந்த விஷயத்தை பேசத்தான் அவள் இவ்வளவு இழுத்திருக்கிறாள். அதுவரை எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தவளை பக்கத்தில் இருந்த சேரில் வந்து உட்காரச்சொன்னேன் பிறகு,

"இங்கப்பாரு அகிலா இதுதான் உன்னோட பிரச்சனையா? அப்படின்னு நீ நினைச்சா இதுக்கான முழு உரிமையை நான் உனக்குத் தர்றேன். இது நீதான் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெத்த என்பதற்காக இல்லை. நம்ம குழந்தையை நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவே வளர்த்துக்கோ நான் ஒன்னும் சொல்லலை.

உனக்கே தெரியும் எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவங்கன்னு, ஆனால் நான் ஏன் இப்படி, பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது. அப்பெல்லாம் எங்கப்பா வருஷத்துக்கு இரண்டு முறை சபரிமலைக்கு வேற போய்க்கிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையின்மை மட்டும், தானே உணர்ந்துதான் வரணும். அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்துச்சுன்னா நாளைக்கு இன்னொருத்தன் சொன்னான்னு கருத்து மாறும். அது தேவையில்லை.

அவள் நம்பிக்கையோடவே வளரட்டும், படிச்சு பிற்காலத்தில் புரிஞ்சிப்பான் ஆனா நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். பிற்காலத்தில் அவள் கடவுள் மறுப்பை செய்தான்னா நீ ஒத்துக்கணும்." சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தி..."இதுதானே நீ முக்கியமா என்கிட்ட கேட்க நினைச்சது." சிரித்தேன். அவளும் சிரித்தவள்.

"அவ்வளவு முக்கியம் இல்லைன்னாலும் முக்கியம் தான், நீங்க பாட்டுக்கு இந்துங்கிறது ஒரு மதமேயில்லை, அப்படி இப்படின்னு சின்ன வயதிலேர்ந்தே அவனுக்கு சொல்லித்தந்து வளர்க்கணும் நினைக்கிறப்ப நான், வேதம் அது இதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்னா பிள்ளைக்கு கஷ்டமாப்போய்டும் இல்லையா அதான்." அவள் சொல்ல இன்னுமொறு தொடர்கதையை இழுத்தாள்.

"அகிலா அப்ப நீ என்ன சொல்ற, நாம இதப் பத்தி எவ்வளவு பேசினோம். வெள்ளக்காரன் தான் இதையெல்லாம் கொண்டுவந்தான். இந்துங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் கிடையாது இப்படியெல்லாம்..."

"அட நீங்க வேற, வெள்ளைக்காரன் கிறிஸ்துவன், முஸ்லீம் இடமிருந்து தனியே பிரித்துப்பார்க்குறதுக்காகத்தான் இந்தியாவில் இருந்த மற்ற மதத்தினரையெல்லாம் இந்துன்னு சொன்னான்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது சரியாப் படலைங்க.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தப்பையே பிரிச்சு பிரிச்சு, காஷ்மீருக்கு தனியா, ஹைதராபாத்துக்கு தனியா, செகந்திராபாத்துக்கு தனியான்னு சுதந்திரம் கொடுத்தவன் அவன்.

எப்பிடிடா இந்த நாட்டை துண்டாடலாம்னு நினைத்துக் கொண்டிருந்தவன். ஏற்கனவே பல பிரிவுகளால் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களை ஒரே கூட்டமா சாரி மதமா மாத்தணும்னு நினைச்சிருப்பானா அதெல்லாம் நடந்திருக்காதுங்க. லாஜிக் உதைக்கிறது உங்களுக்கே தெரியலை. இந்துயிஸம் அப்படிங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்திருக்கும். இடையில விட்டுப்போயிருக்கும், அதை நான்தான் கண்டுபிடிச்சேன்னு வெள்ளக்காரன் சொல்வதில் அவனுக்கு வேண்டுமானால் பெருமையா இருக்கலாம் ஆனால் உண்மையாயிருக்காது.

அதுமட்டுமில்லாம இதெல்லாமே அமேரிக்காவோட சிஐஏவின் சதி அப்படின்னு நேத்திக்கு ஆபிஸிற்கு ஒரு மெயில் ஃபார்வேடா வந்தது. உங்களுக்கு கூட சிசி இருந்ததே படிக்கலையா?"

அகிலா கேட்க, நான் "தேவுடா தேவடா" பாட்டை பாடிக்கொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?

சொந்தக்காரர்கள் முதற்கொண்டு எங்களைப் பார்க்கிறவர்களெல்லாம் எப்பொழுதும் சொல்லும் ஒன்று உண்டு, எங்கள் இருவருக்கும் சரியான ஜோடிப் பொருத்தம் என்று. ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் எல்லா விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துக்கள் தான், இருவருடைய அணுகுமுறையும் முற்றிலும் வேறுவேறாய் இருக்கும். நான் அகிலாவை பொண் பார்க்கப் போயிருந்த பொழுதில் நடந்தது இன்றைக்கு நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி.

அம்மா 'அகிலான்னு ஒரு பிராமணப் பொண்ணு இருக்கு, பாவம் கஷ்டப்படுற குடும்பம் அவங்க அப்பாவை உங்க நைனாவுக்கு ரொம்ப நாளாத் தெரியும், நம்ம பக்கத்தில் இப்படி பண்றதில்லைன்னாலும் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது' அப்படி இப்படி என்று சொல்லிப் பெண் பார்க்க இழுத்துச்சென்றார்கள். அப்பொழுது நான் இருந்த மனநிலையில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியே கூட எனக்கு நல்ல எண்ணம் கிடையாது. பாச்சுலராய் கணிணித் துறையில் அத்தனை நல்ல விஷயங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு, திருமணம் என்ற புதைகுழியில் தள்ள இவர்கள் நினைப்பதாகவேப்பட்டது. பெண்ணை பார்க்காமலே எப்படியாவது இந்த முயற்சியை தவிர்த்துவிட நினைத்தேன், அதையே செய்யவும் செய்தேன்.

"உங்களுக்கு கேயாஸ் தியரி தெரியுமா?" பார்க்கப் பதுமை போலவேயிருந்த அவளை பேசாமல் கல்யாணம் செய்து கொள் என்று இதயம் சொல்ல, இதயம் சொல்றதைக் கேட்டு வேலைசெய்ய ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு அவர் செய்வார் நாம மூளையைக் கேட்டு வேலைசெய்வோம் என்று நினைத்தவனாய் அவளிடம் தனியாய் பேசவேண்டும் என்று அழைத்து வந்து கேட்ட முதல் கேள்வி, அவள் திருதிருவென்று விழிக்க மனதிற்குள் சிரித்தவனாய்,

"ஆம்ப்ரோஸ் பியர்ஸ் தெரியுமா?" அவள் அதற்கும் விழிக்க, "அவர் விதி பத்தி என்ன சொல்றார்னா, ‘விதி என்பது சர்வாதிகாரிகள்...’" ஏதோ சொல்லவருவதைப் போல் ஆரம்பித்துவிட்டு, "பச்..." சொல்லி நிறுத்தினேன்.

பின்னர், "இங்கப்பாருங்க நான் கொஞ்சம் வித்தியாசமான ஆளு, கம்ப்யூட்டர்ஸில் இருந்தாலும், செகுவாரா, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஸ்டிரிங் தியரி, கொஞ்சமா கம்யூனிஸம், நிறைய கிரிக்கெட்னு இருக்கிற ஆளு. உங்களைப் பார்த்தா வித்தியாசமா இருக்கீங்க..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க, அவள் முதன் முறையாய் பேசினாள்.

"நான் உங்கக்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?" கொஞ்சம் வித்தியாசமாய் உணர்ந்தாலும், "பரவாயில்லை கேளுங்க" என்று சொன்னதும்.

"நான் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் உங்களால் அது சிம்மேந்திரமத்யமமா கீரவாணியான்னு சொல்ல முடியுமா?" அவள் எதிர்கேள்வி கேட்க, ராகம், ஆலாபனை, சிம்மேந்திரமத்யம், கீரவாணி போன்று சொற்களை முதல்முறையாக கேட்ட குழந்தையாக நான் திருதிருவென முழிக்க,

"அதை விடுங்க,

'பொரிவரித் தடக்கை வேதல் அஞ்சி
சிறுகண்யானை நிலம் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆர் இடையானும்
தண்மை செய்த இத்தகையோள் பண்பே' - இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுமா உங்களால?"

எனக்கு ஒருமாதிரி அம்மா மேல் கோபம் வந்தாலும், நல்ல வேளை இந்தப் பொண்ணுக்கும் நம்மளை பிடிக்கவில்லை போலிருக்கிறது, அம்மாதான் இந்தப் பொண்ணையும் வற்புறுத்தியிருக்கணும். இதுவும் நல்லதாப் போச்சு என்று நினைத்தவனாய்.

"நீங்க சொல்றதும் சரிதாங்க, நீங்க கேட்டது இரண்டுக்குமே என்னோட பதில் முடியாதுங்கிறதுதான். நம்ம இரண்டு பேரோட ஒப்பீனியனும் வித்தியாசமாயிருக்கு..." சொல்லிவிட்டு நான் முடிக்கமுடியாமல் திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

"ப்ளிஸ் கொஞ்சம் நில்லுங்க." அவள் சொல்ல திரும்பியவனிடம், "உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அப்படின்னா ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா நான் உங்களை கேள்வி கேட்டதனால தப்பா நினைச்சிட்டீங்கன்னா சில விஷயங்களை விளக்குறது என்கடமை."

சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தியவள்,

"நான் உங்கக்கிட்ட அந்த கேள்விகளை கேட்டதுக்கு காரணம் உங்களை விட நான் புத்திசாலின்னு நிரூபிக்கிறதுக்கோ இல்லை உங்களை தட்டிக்கழிக்கிறதோ நிச்சயமா காரணம் கிடையாது. நான் சொல்லவந்தது ஒன்னே ஒன்னுதான், எனக்கு தெரியாததை நீங்க சொல்லித்தாங்க, உங்களுக்கு தெரியாததை எனக்கிட்டேர்ந்து கத்துக்கோங்க. ஒரே மாதிரி ஒப்பீனியன் உள்ளவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே வாழ்க்கை போரடிச்சிடும்." ஒரே மூச்சாய் பேசிவிட்டு அவள் அழகாய் சிரிக்க ஒரு மாதத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது. முதலிரவில்,

"அகிலா நான் உன்னை பெண் பார்க்க வந்திருந்தப்ப ஒரு பாட்டு சொல்லி அதுக்கு அர்த்தம் கேட்டல்ல அதுக்கு என்ன அர்த்தம்?"

"அதுவந்து ஓதலாந்தையார் அப்படிங்கிறவர் எழுதின பாட்டு, ஐங்குறுநூறுல பாலை பிரிவில் வரும். அர்த்தம் என்னன்னா ‘மூங்கில் உலர்ந்து வாடும் கோடை கால வெயிலுக்கு அஞ்சி சிறிய கண் யானை தன் புள்ளிபோட்ட தும்பிக்கை தரையைத் தொடாமலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோடைகாலத்திலும் அவளை நினைத்தால் குளிர்ச்சி’ அப்படின்னு அர்த்தம் வரும் அந்தப்பாட்டுக்கு." அவள் சொல்லச் சொல்ல 'ஆ' என்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் வெறும் பாடல்களுடனே கழிந்தது. எனக்காக அகிலா தனக்கு மிகவும் பிடித்த சில சுசீலா பாடல்களை அன்றிரவு முழுவதும் பாடிக்கொண்டிருந்தாள்.

இன்றைக்கு என்னிடம் பேசவும் கூட மறுத்து திருப்பிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவளிடமிருந்து எதையுமே நான் மறைத்தது கிடையாது. இது நான் செய்ததற்கான தண்டனை தான். நாங்கள் போடாத சண்டையா, ஒரு வருடம் இருவரும் பேசிக்கொள்ளாமல் வேறுவேறு வீடுகளில் தனித்தனியாய், அய்யோ இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அந்த நாட்களை நல்லவேளையாய் எல்லாம் சரியாய்விட்டது.

பக்கத்து அறையில் பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த பவானி எழுந்துவந்து,

"நைனா தூக்கமே வரலை. ஏதாச்சும் கதைசொல்லு." என்று சொல்லி நச்சரிக்க, இருந்த வெறுப்பில் "டேய் மரியாதையாய் நீயே போய் படுத்து தூங்கிறு இல்லை அவ்வளவுதான்."

நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்தில் படுத்திருந்த அகிலா எழுந்து என்னை முறைத்துவிட்டு,

"எத்தனை தடவை சொல்லியிருக்கேன், குழந்தைக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு. எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா. நீவாடா செல்லாம் அம்மா கதை சொல்றேன். ஒரு ஊர்ல தம்புடு தம்புடுன்னு ஒரு முட்டாள் இருந்தானாம்..." அவள் சொல்லத்தொடங்க எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்துவந்தது. சின்னவயதில் வீட்டில் என்னை தம்புடுன்னு கூப்பிடுவது வழக்கம். இது அவளுக்கும் தெரியும் கொஞ்சம் மஜாவான நாட்களில் அவளும் அப்படித்தான் கூப்பிடுவாள். இன்னிக்கு கோபத்தில் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை கடப்பாரை கற்பு

கற்புங்கிறது ஒரு கடப்பாரை...

"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது.

"அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம்,

"டேய் உள்ளப்போய் விளையாடு. போ." அவனை மிரட்ட அவனும் இரு இரு உன்னை இன்னொரு நாள் பார்த்துக்குறேன்னு சொல்பவன் போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் போனதும்தான் தாமதம் அம்மா தன்னுடைய பாராயணத்தை மீண்டும் ஆரம்பிக்க,

"இங்கப்பாரு அவளை உன்னால கட்டுப்படுத்தி வைக்கமுடியும்னா வை. இல்லைனா அவளைத் தள்ளி வைச்சிட்டு வேறவொருத்தியை கல்யாணம் பண்ணிக்க. ஆயிரம் பேரு இருக்காளுங்க இவ திமிர் பிடிச்சி அலையறா."

அம்மாவின் இந்த பேச்சை திசைதிருப்ப நினைத்தவனாய்,

"நானா லவ் பண்ணி கட்டிக்கிட்டேன், நீதானே கட்டிவைச்ச. பொண்ணு லட்சணமா இருக்கா, அமைதியா பேசுறா அது இதுன்னு. இத்தனைக்கும் நம்ம பக்கம் வேற கிடையாது. எங்கேர்ந்தோ ஒரு பாப்பாத்திய வந்து கட்டி வைச்சிட்டு இப்ப அப்படி பண்றா இப்படி பண்றான்னா எப்படி."

"சரி நான் தான் கட்டிவைச்சேன் அதுக்கென்ன, சிலசமயங்கள்ல நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? இல்ல நீ கஷ்டப்படணும்னே கொண்டுவந்து கட்டிவைச்சேனா சொல்லு பார்ப்போம். ஒத்து வரலையா வெட்டி விட்டுறணும்."

"அம்மா திரும்ப திரும்ப அதையே பேசாதேம்மா, வேற எதாவது நடக்குறதா பேசு. எனக்கென்னமோ எல்லாமே சரியாயிறும்னு தோணுது. அதுமட்டுமில்லாம அவ்வளவு சுலபமா வெட்டிவிட்டுற முடியும் நம்ம பவானிக்கு ஆறு வயசாகுது. வேற ஏதாச்சும் தான் பண்ணனும்."

"ஆமாம்டா உம்பொண்டாட்டி, அழகிப்போட்டி அது இதுன்னு பாதி ட்ரெஸ் போடாம ஆட்டி ஆட்டி நடந்துக்கிட்டிருக்கா. இதை பார்க்கிறதுக்கு ஆயிரம் பேர் வேற. கர்மம் கர்மம். எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடி இதையெல்லாம் பண்ணாளா என்ன? இன்னிக்குப் பாரு நம்ம குடும்ப பேரையே கெடுக்குற மாதிரி இப்படி ஆயிருச்சு. நாளையும் மன்னியும் நீ வெளியில தெருவில போகவேணாம்.

இப்படி பாதியில ட்ரெஸ் அவுத்துக்கிட்டு நிக்குறா, வெளியில போனா செருப்பால அடிக்கப் போறாங்க போ உன்னை." அம்மாவின் முகத்தில் தெரியும் ஆத்திரத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன். பின்னாலிருந்து யாரோ தலையில் அடிப்பது போலிருந்ததால் திரும்பிப்பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள் அகிலா, கையில் வெளக்கமாறோட...


"என்ன காலங்காத்தாலேயே கனவா?" அவள் இன்னுமொறுமுறை தலையில் தட்ட, முழுதாய் முழிப்புவந்தவனாய்.

"ச்ச எல்லாம் கனவா?" எனக்கு நானே கேட்டுக்கொள்ள, சட்டையை பிடித்து பக்கத்தில் இழுத்தவள்.

"உண்மையை சொல்லுங்க, கனவுல மீரா ஜாஸ்மின் கூட கொஞ்சல்ஸ் தானே?" அகிலா கேட்க, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் யோசித்த எனக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது.

"ச்ச உனக்கு வேற வேலையேயில்லை, எப்பப்பாரு கொஞ்சல்ஸ், கொஞ்சல்ஸ்ன்னுக்கிட்டு..." சொல்லிக்கொண்டே அவளை பக்கத்தில் இழுக்க கையை தட்டிவிட்டவள்.

"தெரியுமே உங்க உள்குத்து அரசியல் நல்லாவே தெரியுமே எனக்கு. வேணாம்பா நீங்க பேசாம தூங்கி, கனவில மீரா ஜாஸ்மீன்கிட்ட கொஞ்சுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு." சொல்லிவிட்டு விறுவிறுன்னு நகர்ந்தவளை தடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். சிக்மண்ட் ப்ராய்டின் இன்டர்ப்ரட்டேஷன் ஆப் டீரீமஸ் படித்துவிட்டு இன்னும் குழம்பிப்போய் இருந்தவனுக்கு இன்றைக்கு வந்த கனவு ஏதோ பாடம் நடத்துவது போல் இருந்தது. நேற்றிரவு விடாப்பிடியாய், லேட்நைட் ஷோவும் பிகினி ஓப்பனும் பார்த்துக் கொண்டிருக்க, கோபம் வந்தவளாய் ரிமோட்டை பிடுங்கி உடைத்துவிட்டு,

"இங்கப்பாருங்க உங்களுக்கு கொஞ்சம் அதிகமாய் உரிமை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராய்த்தான் பண்றீங்க. திரும்பவும் இப்படி பண்ணீங்கன்னா நானும் கேட்வாக் பண்ண போய்டுவேன் பார்த்துக்கோங்க."

ஏதோ கோபத்தில் அவள் சொன்ன அந்த விஷயம் அப்படியே மனதில் பதிந்து இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்படியே அச்சுஅசலாய் நேரில் நடந்ததைப் போலிருந்தது, அதே ஆட்கள் அதே உருவம், அதே வயதில், அம்மா, பையன் பவானி ஆச்சர்யமாய் இருந்தது. இந்த கனவைப்பற்றி அவளிடம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டவனாய் இருமுறை உடம்பைக் குலுக்கிக்கொண்டேன்.

"பாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.

அப்படியே நான் மிஸஸ் வேர்ல்ட்ல் கலந்து கொண்டால் என்னை தள்ளி வைச்சிருவீங்களோ, என்ன அநியாயமாய் இருக்கு. நாளைக்கு நீங்க வேட்டிக்கட்டிக்கிட்டு கோயிலுக்கு போறீங்க ஏதோ தடங்கல்ல வேட்டி சிக்கி அவிழ்ந்திருது அதுக்காக உங்களை நான் டைவர்ஸா பண்ணுவேன். நல்ல வேடிக்கையாய் இருக்கு. பாதியை மட்டும் சொல்லிட்டு மீதியை மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அத்தம்மாவுக்கு நீங்களே எடுத்து கொடுத்திருப்பீங்க, ‘கற்புங்கிறது ஒரு கடப்பாரை...’ அது இதுன்னு"

அன்றிரவு கொஞ்சம் தனிமையாய் அழகாய் அமைந்த ஒரு இரவில் மெதுவாய் இந்த கனவு விஷயத்தை சொல்லப்போய் அது பிள்ளையாரைப் பிடிக்கப்போய் குரங்கான கதையாய் ஆகியது. இதை சரிகட்ட நினைத்தவனாய்,

"இங்கப்பாரு அகிலா, என் கனவில வந்ததுங்கிறதால அப்படித்தான் நான் நினைப்பேன்னு நீ நினைக்கிறியா. சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளை மூணுவிதமா பிரிக்கிறார் தெரியுமா. அதில் ஒரு விதத்தில் நாம் அதீதமாய் வெறுக்கும் விஷயங்கள் கனவில் வரும்னு சொல்றார். புரிஞ்சிக்கோம்மா நடந்தது நான் அதீதமாய் வெறுக்கும் விஷயத்தில் ஒன்று.

அதுமட்டுமில்லாமல் பாதியில கனவை கலச்சிட்டியா அதனால நான் அம்மாக்கிட்ட என்ன சொல்லவந்தேன்னே யோசிக்க முடியலை..." இப்படி நான் சிக்மண்ட் ப்ராய்டை எல்லாம் வம்புக்கிழுத்து சமாளித்துக் கொண்டிருக்க. அவளது கோபம் சிறிதும் குறைந்ததாய் தெரியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In 18+ 21+ Eminem ஆண்டாள் மோகனீயம்

மோகனீயம் - மாமாயன்

சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.  


“she was consumed by three simple things:
drink, despair, loneliness; and two more:
youth and beauty” - Bukowski

புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், "You shouldn't take advantage of her, that's not fair" போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது.  ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி.  "Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare" போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது - நான் '
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்' என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, 'எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!' என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், "bro, what did you smoke", நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், 'now all you gota do is nibble on this little bitch's earlobe'. 'எழுந்திருச்சிராத மூதேவி'.

எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது. 

சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், 'அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்' என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.' என்றாள் விரக்தியாய். 'என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு'. நான் 'உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா' கேட்டேன். அவள் இல்லை என்றாள், 'அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா' என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். 'நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?' கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும்  பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள். 

நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன்.  ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.

 “இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.

“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.” 

“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட். 

“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும். 

நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். 

"இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி." நான் சரியென்று தலையசைத்தேன், "Do you know about sororities?" கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, "பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!". மலர்ந்தவள், "என் செல்லம் ஆமாண்டா ஆமாம்." இடைவெளிவிட்டு, "என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join 'Kappa, Kappa, Gamma' in the rush week. But..." என்று இழுத்தாள். "என்ன மேட்டர் சொல்லு சிந்து." கேட்டேன். "They have joining requirements and it seems that includes..." திரும்பவும் இழுத்தாள். "a blow job to your boyfriend".  நான் சிவந்திருந்தேன், "என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே." என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.

தடுத்து நிறுத்தியவள். "You owe me one!" என்றாள். 

"Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that" சீறினேன்.

"Its my choice, you remember." அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.

"I will talk to mom." என்றாள், "what do you mean" உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். "I will say I dont love you anymore..." நிறுத்தி, "so you folks can live happily ever after" அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

திரும்பி அவளிடம், "I dont cum Sindhu." என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "I will let your seniors know you did it, that would make it right?" புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum." என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me." என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. 

நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட. 

“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one." வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன். 

அவள், “are you going to get undressed, or do you want me to do it." புள்ளியில் நின்றாள். 

 "I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani." என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me." என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது. 

“just relax and give me your fly." கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here" என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying" என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so" என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on" சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it." என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping" என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது. 

அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள். 

அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now" சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting" என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன். 

நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 

"Thanks." நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum." பின்னர் “Usually that never happens for me"  என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it" என்றாள் நான் இன்னொரு முறை “disgusting" என்றேன் அவளுக்குக் கேட்கும் படி. 

Paintings by MF Hussain

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts