In

உத்தம வில்லன்

எல்லாப் படங்களும் எல்லோருக்குமல்ல என்பதை இன்னொரு முறை சொல்கிறது உத்தம வில்லன். மணிரத்னம் எடுத்த குப்பை OKK போலில்லாமல் புதிய முயற்சி. அதற்குள்ளும் இணையத்தில் வெளியாகிவிட்டது உத்தம வில்லன். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் இல்லாமல் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் வெளியாகியிருந்தது. நான் எங்கே பார்த்தேன் என்பதற்குள் போகவிரும்பவில்லை. இணையம் கதறித்தீர்த்திருந்தது அதற்குள், பார்ப்பதா வேண்டாமா என்பதைப்பற்றிய கேள்விகள் இல்லை.

கதை தெரிந்திருக்கும் எனக்கும் கதை சொல்லிச் செல்வதில் விருப்பமில்லை. பேச விரும்புவது கமல்ஹாசனின் இந்தப் படத்திற்கான தேவை என்னவாகயிருக்க முடியும் என்பது. மக்களுக்குப் பிடிக்கும் ஒரு படத்தை கமலால் எடுக்க முடியாதென்பதல்ல, செய்யாதவருமல்ல, கமலுக்கு  பஞ்ச தந்திரம் போல் ஒரு கதையைத் திரைக்கதையாக்கி படமாக்க எளிதாகவே முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற பரீட்சைசார்ந்த படத்தை - அப்படிச் சொல்லவே வாய் வரலை - ரொம்பச் சாதாரணமான படம் தான் இதுவும், என்டர்டெய்ன்மென்ட் வால்யூ இல்லை - அதையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது தமிழ்ச்சினிமா பற்றி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கற்பனை தானே. மூன்று படங்கள் வருகிறதே ஒன்று இப்படியிருந்துவிட்டுப் போகட்டும் என்று கமல் விட்டிருக்கலாம். 

எனக்குப் பிடிக்காத அம்சங்கள் இதில் இருந்தது, பாலச்சந்தருக்கு நடிக்க வரலை, பூஜா குமார் சுத்தம். இயல்பாய் வந்திருந்தது ஊர்வசியுடைய நடிப்பு தான், மிகையைத் தொடாமல் விட்டுவிலகியிருந்தார். பாலச்சந்தர் ஒருமுறை சொல்லியிருந்தது போல், கமல் ஒரு படத்தில் காட்டத்துடிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் இன்னமும் கிரிஸ்பாக படம் வந்துவிடும் தான். எல்லாவற்றையும் ஒரே படத்தில் போட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தையும் அவருக்குத் திணித்தது கோடம்பாக்கமும் தமிழ் சினிமா ரசிகர்களும் தான். 

இது போன்ற படமெடுக்கும் துணிபு கமலுக்குத்தான் வருமென்ற சொல்ல முடியவில்லை, இன்னமும் சினிமாச்சூழல் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதற்கே குதிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ப்ளாக்-ஆக இன்னும் வறட்சியாக எடுத்திருந்தால் என்னவாகியிருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 'வோ லம்ஹே' படத்தில் வரும் ஒரு காட்சியை கமல் எடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. சொல்லப்போனால் எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காததே, தமிழ்ரசிகர்களுக்காக கமல் தன்னைத் தானே கட்டுக் கொண்டிருக்கும் போக்கு தான். இந்தப் பக்கமும் வராமல் அந்தப் பக்கமும் வராமல் மத்தியில் நின்றிருக்கிறார் கமல். கலைப் படம் எடுக்கத் தெரியாதவர் அல்ல, வணிக சினிமாவும் எடுக்கத்தெரியாதவர் இல்லை, ஆனால் மத்தியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் இக்காலங்களில், ஏதாவது ஒரு பக்கம் நகர்ந்துவிடுவது அவருக்கும் தமிழ்ச்சினிமாவுக்கும் நமக்கும் நல்லது. 

அவர் கதை - திரைக்கதைக்கு மற்றவர் இயக்குநர் என்றால் அது எப்படிப்பட்டமாயிருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு, எங்கே ரசிகர்கள் ஏமாந்தார்கள் என்று தெரியாது. கடைசி கமலஹாசன் படங்களைப் பார்த்தாலே இம்மாதிரியான படத்திற்கான தேவையும் அதை கமல் செய்யாமல் விடமாட்டார் என்பதும் தெரிந்தேயிருக்கும். மீண்டும் சொல்கிறேன், எப்பொழுதும் எல்லாப்படமும் எல்லோருக்குமல்ல. இதில் உயர்த்தி தாழ்த்தி சொல்வதில் எதுவும் இல்லை, நான் எல்லாப் படங்களையும் தொடர்ச்சியாய் பார்த்தே வருகிறேன், நெட்ப்ளிக்ஸில் ஐந்து நட்சத்திரத்திற்கு ஒன்று வாங்கிய படங்களையும். சினிமா என் வாழ்க்கையின் ஒரு பாதி என்று முடிவு செய்திவிட்டிருக்கிறேன், இன்னமும் சுஜாதா போல் ஆகவில்லை, கொஞ்ச காலம் தான் உயிர்வாழ்வேன் என்று தெரிந்த பின்னால் மட்டுமே நான் சினிமாவில் காலம் தள்ளுவதை நிறுத்துவேனாயிருக்கும். 

இதை உத்தம வில்லன் விமர்சனம் என்று சொல்லவில்லை, தொடர்ச்சியாய் இணையத்தில் பார்த்த விமர்சனங்களால் தோன்றிய எண்ணம். சுஹாஸினி சினிமா விமர்சனம் பற்றிச் சொல்லியதற்கு கமல் கொடுத்த வியாக்கியானம் சரியானதல்ல, ஆனால் அது அவருடைய பர்ஸனல் ஒப்பினீயன் என்றே எடுத்துக் கொள்கிறேன். சில பல காரணங்களுக்காக இந்தப் படத்தையும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகச் சொல்வேன் தான், இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம், ஆனால் அது தமிழ்மக்களுக்கு மொத்தமாகப் பிடிக்காமல் போயிருக்கும் என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

எம்டிஎம் விமர்சனம் பார்த்தேன். பின்னர் இன்னும் சில எம்டிஎம் சொல்லும் புள்ளியில் நின்று. ஆனால் இந்தப் படம் முக்கியம் என்றால், எம்டிஎம் சொல்லும் அதே புள்ளிக்காகத்தான். அவர்களுக்கு வெறுப்பதற்கான புள்ளி என்றால் எனக்கு இந்தப் படம் பிடித்திருப்பதற்கான புள்ளி அது தான்.

ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்கள் தொடக்கூடாத விஷயம் என்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்துகிறார்கள்.  கமலால் இத்தனை துள்ளியமாய் கிறிஸ்துவத்தை, இஸ்லாத்தை துகிலுறிக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் ஒன்றுதான். இன்னமும் இந்தியாவில் தமிழகத்தில் இவை சிறுபான்மை மதங்கள் தான், அதைப்பற்றிய விரிவான விமர்சனம் அந்த மதங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருக்கும், அது அப்படித்தான் முடியும். பில் மாஹ்ர் அளவிற்கு கிறிஸ்துவத்தை ஓட்டுபவர்கள் குறைவு தான்(பில்-இடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் தற்சமயத்தில், இஸ்லாம் பற்றி அவர் வைக்கும் விவாதம்.) இப்படி இவர்கள் கதறுவதற்காகவே இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்.

PS: Updated the post after reading MDM review. 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்

பெண்ணியமும் சில புடலங்காய்களும்

ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே என்னைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி வரவில்லை, ஏனென்றால், என்னைவிட குறைவாய்ப் படித்த, தமிழ் மீடியத்தில் படித்தப் பெண் அதிக சம்பளம் வாங்கும் வாய்ப்பிருக்காது என்பதல்ல அதற்கு காரணம். அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பப்போவதில்லை என்பதுதான். ஆப்பியஸ்லி வேலைக்குப் போகாத பெண் என்னைவிட அதிக சம்பளம் வாங்க முடியாதில்லையா?

இதெல்லாம் சொல்லப்போனால் ரொம்பவும் சராசரியானவை. பின்நாட்களில் என் நண்பர்களுடைய திருமண விபத்திற்கு பிறகு இந்த பட்டியல் நீண்டது தான் ஆச்சர்யம், அதுவும் முந்தயதைவிடவும் நீளமாய். பொண்ணோட பேமிலி எங்க பேமிலியைவிட வசதியானதாய் இருக்கக்கூடாது. பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருக்க வேண்டும். நிச்சயமாய் ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே என்பது அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட அத்தனை நண்பர்களின் ஒட்டுமொத்த அறிவுரையாக இருந்தது. அதைப் போலவே பெண்ணிற்கு கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் டீபால்டாக சொல்லப்பட்டது. அப்படி ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு நிச்சயமாய் பெண்ணியம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் எதற்கெடுத்தாலும் பிறகு சண்டை வருமென்றும் சொல்லித்தரப்பட்டது. இப்படியாக பேச்சுப்போட்டியில் அந்தப் பெண் ஒருமுறை கலந்துகொண்டிருந்தால் கூட நிராகரிக்கும் படியாகக் ஒரு தண்ணீர்ப்பார்ட்டியில் அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட நண்பர் அழுதுகொண்டே கூற, சிறிது நேரத்தில்தான் தெரிந்தது. நண்பருடைய மனைவி சண்டை வந்துவிட்டால் நேரடியாக பாரதி, பாரதிதாசன் போன்ற இன்னபிற ஆட்களின் கவிதை வரிகளைப் பாடிக் காண்பித்து கடைசியில் நீங்களெல்லாம் எப்பத்தான் உருப்புடுவீங்களோ என்றுதான் முடிப்பார் என்பது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், பெண்ணுடைய சகோதரகள், பொண்ணுடைய சகோதரியுடைய கணவர்கள் இவர்களை விட நீ சம்பளம் அதிகம் வாங்கினால் மட்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்றுகூட அட்வைஸ் வழங்கப்பட்டது.

அதென்னமோ கல்யாணம் ஆகிவிட்ட அத்தனை நண்பர்களுக்கும் என்னுடன் தண்ணியடிப்பதில் ஒரு அலாதி திருப்தி, தங்களின் சோகங்களைச் சொல்லி விரைவில் திருமணம் ஆக இருக்கும் ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வீரர்கள் போன்ற ஒரு உணர்வு வரும்போலிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் இதற்கெல்லாம் வழியில்லாமல் அப்பாவிற்கு தெரிந்தவர் மகள் என்ற பெயரில் நான் அகிலாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். பொண்ணு பிராமணப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் எப்படியாவது இந்தக் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திவிட நான் செய்த அத்தனையும் தவிடுபொடியானது. இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் இதெல்லாம் நினைவில் வர. நான்கு ஆட்கள் தலைக்கு மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் போன்ற தலைவலி தானாய் வந்தது.

தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரிந்தது, ஆராம்ஸேயாய் கையில் காபித் தம்ளருடன் சோபாவில் உட்கார்ந்து, எதிரில் தேடித்தேடி கஷ்டப்பட்டு வாங்கிய டீப்பாயின் மீது வைத்துக்கொண்டிருந்த, அகிலாவின் கால்கள். அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்திருக்க டீவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலைப் பார்த்ததும் அதுவரை கஷ்டப்பட்டு பொத்திக்கொண்டிருந்த கோபம் வார்த்தைகளாய் சீறியது.

"யேய் எனக்கு இப்ப உடனேயே காப்பி வந்தாகணும்."

"ஏண்டா புள்ளத்தாச்சிப் பொம்பளைக்கிட்ட உன் ராங்கித்தனத்தைக் காட்டுற. ஒரு நிமிஷம் இரு போட்டுத் தர்றேன்." அம்மா எழுந்திருக்க, அந்த நொடியே அதுவரை டீப்பாயில் இருந்த ரிமோட் வேகவேகமாக அவள் முதுகிற்கும் அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கும் இடையில் சென்றது.

"அகிலா சொன்னா மரியாதையா கேளு. இப்ப ரிமோட் என்கிட்ட வந்தாகணும்."

அவளிடமிருந்து பதிலேதும் வராமல் உதட்டைச் சுழித்து பழிப்பு மட்டும்தான் வந்தது. எங்க வீட்டுப் பொண்ணுங்க இப்படிச் செய்து பார்த்ததேயில்லை. இதை ஒருநாள் இருவரும் சந்தோஷமாக இருந்த நாள் ஒன்றில் சொல்லிக்காட்ட, உங்க வீட்டுப் பொண்ணுங்களெல்லாம் பொண்ணுங்களே இல்லை என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் நான் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்து பிறகு அக்காவிடம் சொல்லி சமாதானம் ஆனது நினைவில் வந்தது. அவளுக்கு நன்றாகவேத் தெரியும் இந்தச் சமயத்தில் நான் அவளின் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று. ஏனென்றால் அவள் எங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.

மனதிற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்க, கண்களால் நான் கைகளால் செய்ய முடியாததை செய்துகொண்டிருக்க, கண்ணெதிரில் காபித் தம்ளர் நீட்டப்பட்டது, கூடவே தலையில் ஒரு கொட்டுடன்.

"வந்ததும் வராததுமா அவகிட்ட ஏண்டா வம்பு பண்ற? அவ ஒன்னும் சீரியல் பார்க்கலை, நான் தான் பார்த்துக்கிட்டிருந்தேன். போதுமா?"

இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது கடந்த நான்கைந்து மாதங்களாய், நாங்கள் மணாலியில் இருந்து திரும்பியதிலிருந்து அம்மாவின் புல் சப்போர்ட் அவளுக்குத்தான். இது என் கோபத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்றார்போல் அவள் திரும்பவும் பழிப்புக் காட்ட. அம்மா,

"ஏய் சும்மா இருடீ. நீயும் அவனுக்குச் சமமா வம்பிழுத்துக்கிட்டு." எனக்குச் சாதகமாய் பேசினாலும் கோபம் தலைக்கேற.

"இனிமேல் நான் வேலைக்குப் போக மாட்டேன். இவ குட்டிப் போட்டதும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டு வரட்டும் நான் வீட்டைப் பார்த்துக்கிறேன்."

"குட்டிப்போடுறன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன வேலைக்குப் போகணும் அவ்வளவு தானே போனாப்போகுது. என்ன பெரிய விஷயம்? புள்ளப் பெத்துக்கிறத விட பெரிய விஷயம்."

அம்மாவிற்கு இந்தச் சண்டை சின்னப்பிள்ளைத்தனமாய்த் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவில் இருந்து எழுந்தவர்.

"நான் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போகப்போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதுதான் நான் உங்க ரெண்டுபேருக்கும் கொடுக்குற டைம். அதுக்குள்ள சண்டபோடுவீங்களோ, இல்லை கத்தியை எடுத்து மாத்திமாத்திக் குத்திப்பீங்களோ தெரியாது ஆனா நான் வந்தப்புறம் வீடு அமைதியாகிடணும். அவ்வளவுதான்."

அம்மா அந்தப் பக்கம் சென்று ஒன்றிரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். என்னையே கண்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அருகில் வந்தாள். அவள் அப்படிப் பார்த்ததற்கான அர்த்தம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னை கணக்கிடும் கால்குலேட்டராய் கண்களை மாற்றிக்கொண்டு, வரப்போகும் பொய் மலையில் இருந்து அன்னமாய் உண்மையை கறக்கும் ஒரு நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிதான் அது.

"என்னாச்சு என் செல்லத்துக்கு ஏன் இப்படியொரு கோபம். ஆபிஸில் கோகிலா ஆண்ட்டி ஏதாவது வஞ்சாங்களா?"

இதுதான் எனக்கு அகிலாவிடம் அடியோடு பிடிக்காதது. நான் நடந்த பிரச்சனைய அடியோடு மறந்து வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி உண்மையான பிரச்சனையில் தெரிந்துவிட்டிருந்த என்னுடைய கையாலாகாத்தனத்தைக் கோபமாக வெளியிட்டுக் மறைக்கலாம் என்றால் அது என் செல்லப் பெண்டாட்டியிடம் நடக்காது. அதுவும் நிறைய பொய்களைச் சொல்லி அடுக்குவதற்கு முன்பே உண்மையான பிரச்சனை கண்டுபிடிக்கப்படும். என்னுடைய பொய்கள் செல்லுபடியாகாத ஒரே ஆள் அகிலாதான். சின்னவயதிலிருந்தே நம்பும்படியாய் பொய் சொல்லி வளர்ந்தவன் ஆதலால் அநாயாசமாய் வெளிப்படும் மூட்டையை அதைவிட அநாயாசமாய் புறந்தள்ளிவிடும் சாம்ர்த்தியம் அகிலாவிடம் நான் எப்போதும் மலைக்கும் ஒரு குணம்.

ஒரு விஷயம் ஒரு நபருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த விஷயத்தை எந்தவித பிரச்சனையுமில்லாமல் அந்த நபர் கண்டுபிடித்துவிடும் நேரத்தில் ஏற்படும் வாழ்க்கையின் மீதான விரக்தி எனக்கும் ஏற்பட்டது அவளுடைய அந்தக் கேள்வியால். அப்படியிருந்தும் உண்மைவெளிப்பட்டுவிடக்கூடாது என நினைத்து,

"எதுக்குத் தேவையில்லாம அவளை இழுக்குற இங்கே. என் கம்பெனிக்கும் இந்த முடிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தெரியுமா நான் வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு இருபது. இப்ப முப்பத்தி மூணாகுது. அக்காவிற்கு கல்யாணம் செய்து வச்சு, அம்மா அப்பாவிற்கு வீடு கட்டிக்கொடுத்து. உன்னைக் கல்யாணம் பண்ணி இப்ப குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.

ஏதாவது கேட்டா உடனே வீட்டைப் பார்த்துக்கிறதும் கஷ்டம் தான்னு ஒரே அலப்பற. அதனாலதான் இப்படி ஒரு முடிவு. இனிமேல் நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன். வேணுனா நீ பெத்துப்போடுற குட்டிப்பிசாச பார்த்துக்குறேன்.

நீயே சொல்லு என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம். நிம்மதியா உட்கார்ந்து ஒரு சீரியல் பார்க்கமுடியுதா, மனசவிட்டு ஒரு சீரியல் கேரக்டருக்காக அழ முடியுதா. என்ன வாழ்க்கை அதான் இப்படி ஒரு முடிவு. நீயும்தான் படிச்சிருக்கயில்லை, வேலைசெய்தா என்னவாம்."

நான் சொல்லிமுடிக்க அவள் நினைத்திருக்க வேண்டும், இப்ப பேசி தீர்க்கிற பிரச்சனையில்லை இது என்று அவளாய் நகர்ந்துபோய் பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கதில் கிடந்த கல்கியை புரட்டத் தொடங்கினாள். நானும் ஒருவாறு அவளை சமாளித்ததாய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கை, கால் அலம்பிக் கொண்டுவந்திருப்பேன் அம்மா கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். வந்ததும் வராததுமாய் புதுப்பிரச்சனை.

"டேய் இங்கப்பாரு எனக்கு காலெல்லாம் ஒரே வலியாயிருக்கு. இன்னிக்கு நீ அகிலாவை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு."

என்னுடைய வேலை காரணமாக ஒரு சமச்சீரான அலுவலக நேரங்கள் எனக்குக் கிடையாது. அதன் காரணத்தால் பொதுவாகவே நான் நடுஇரவில் ஆந்தை போல் உலாவிக் கொண்டிருந்ததால் அகிலாவை டாக்டரிடம் அழைத்துச் செல்வது, வாக்கிங் கொண்டு செல்வது என எல்லாச் சமாச்சாரங்களையும் அம்மாதான் செய்து வந்தார்கள். இதுவரை கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே அவள் என்னுடன் வந்திருப்பாள். இதில் இடையில் ஒரு மாதம் ஆன்சைட் வேறு. அம்மா என்னிடம் நேற்று அகிலாவிற்குத் தெரியாமல் கேட்டுக்கொண்டதற்காக மறுபேச்சுப் பேசாமல் அவளுடம் கிளம்பினேன். அகிலாவிற்கு ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும் என்னுடைய செயல்.

சாதாரணமாகவே வேகமாக நடக்கும் எனக்கு அவள் மெதுவாய் நடந்துவந்ததுதான் காரணமா தெரியாது ரொம்பவே மெதுவாய் நடப்பதாய்ப் பட்டது. பெங்களூர் பசுமையான ஊர், 100 மீட்டருக்குள் ஒரு பூங்காவைப் பார்த்துவிடலாம். அதுவும் நவம்பர் டிசம்பர் மாதத் தொடக்கம் என்பதால் பூங்காவெங்கும் விதவிதமான ரோஜாப்பூக்களைப் பார்க்கலாம். எனக்கும் ரோஜாப் பூக்கள் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சாப்ட்வேர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தில் மறைந்து போன ஒரு விஷயம் ரோஜாக்களுடன் நேரத்தை செலவிடுவது.

மௌனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் நடை, பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் பெஞ்சில் முடிவடைந்ததைப் போலவே எங்கள் மௌனமும் ஒரு முடிவிற்கு வந்தது. பூங்காவிற்குள் நுழையும் பொழுதே என்னுடைய கைகளை இருகப் பிடித்துக்கொண்டாள் அகிலா. அந்தத் தொடுதல் டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் இருந்தது.

"மோகன் நம்ம பையன் உதைக்குறான் பாருங்க." என்று சொல்லி அவள் கையோடு சேர்த்திருந்த என் கையை அவள் வயிற்றுப் பகுதிகுள் கொண்டுசெல்ல, அநிச்சையாய் என் கைகளை வெளியே உருவினேன். முதலில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் செய்தாலும் பிறகு செய்தது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் எனத் தெரிந்ததால் சமாதனப்படுத்தும் எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ சப்தமாய்ச் சிரித்தாள்.

"இத்தனை வருஷத்தில் நீங்க இன்னமும் மாறவேயில்லை. தாஸ்."

உண்மைதான், அந்த அந்நிச்சை செயல் அவள் மனதில் எந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியிருக்கும் என்று எனக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை நினைத்ததும் எனக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. எங்கள் திருமணம் முடிந்து அதாவது தாலி கட்டிமுடித்த பிறகு ஏதேதோ பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் என்னிடம், அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல நான் விழித்தேன்.

அதற்கு அவர் இது சாந்திமுகூர்த்த பூஜைக்காக, கல்யாணம் முடிந்ததும் ஐயர் அவர் வீட்டிற்கும் நாங்கள் எங்கள் வீட்டிற்கும் செல்வதாய் ப்ளான் அதனால் சாந்திமுகூர்த்தத்திற்கு முன்னர் செய்யவேண்டிய சடங்கை இங்கேயே செய்துவிடலாம் என்றே சொல்வதாகவும், சீக்கிரமாக அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல, அப்படியொரு சடங்கு எங்கள் பழக்கத்தில் கிடையாது என்பதால் என் துணைக்கு அக்காவையோ அம்மாவையோ தேட, பக்கத்தில் இருந்த ஒரே ஆள் அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ தான்.

நான் ஐயர் சொன்னதை மட்டும் செய்யாமல் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் பார்த்து திருதிருவென முழிக்க, ஐயர் 'ஓய் உம்ம அகமுடையாள் தப்பா நினைச்சுக்க மாட்ட. சும்மா தொடுங்க ஓய்' என்று சொல்ல. நடப்பதையெல்லாம் பார்த்து ஜெயஸ்ரீ சிரிக்க அகிலா என்னுடைய கையை எடுத்து அவள் வயிற்றுப்பக்கத்தில் கொண்டு சென்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று. அந்த நினைவுகள் பசுமையாக எழவும். வேகமாய் விலக்கிக் கொண்ட கையை நானாகவே அவள் வயிற்றுப்பக்கம் கொண்டு செல்ல, என் கைகளுக்குக் கீழ் எதுவோ ஒன்று அழகாய் புரள்வதாய்த் தோன்றியது, தொடர்ச்சியாய் அகிலா லேசாய் முனகினாள்.

நான், "நம்ம பொண்ணுக்கு அதுக்காட்டியும் அவசரம் பாரு..." சொல்ல அகிலா,

"வேண்டவே வேண்டாம், உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அப்புறம் பொறக்குறது பொண்ணா பொறந்துத் தொலைக்க என்னென்ன பிரச்சனை பண்ணுவீங்களோ." என்று சொல்லி அழகாய்ச் சிரிக்க, நான்.

"இங்கப்பாரு எதுக்கூட எதை கம்பேர் செய்யற. எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா. சொல்லப்போனா என்னை நான் பெண்ணியவாதின்னு கூட சொல்லிக்குவேன். ஒரு பெண்ணியவாதிக்கான கடமைகள் எதுஎதுன்னு யாருமே இதுவரை வரையறுத்துச் சொல்லலை. இதுவரைக்கும் நீ எதாவது சொல்லி நான் இல்லைன்னு சொல்லியிருக்கேனா? இப்பக்கூட பாரு உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டில் இருக்கேன்னு சொல்றேன். இதைவிட என்ன செய்துவிடமுடியும் ஒரு பெண்ணியவாதியாக. சொல்லப்போனால் இதுமட்டுமே போதும் என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்க." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"பெண்ணியவாதியாம் பெண்ணியவாதி, புடலங்காய் பெண்ணியவாதி. எனக்குத் தெரியாது உங்க லட்சணம். இன்னிக்கு கோகிலா எதுவும் வேலை கொடுத்திருக்கும். நீங்களும் செய்திருப்பீங்க, பார்த்துட்டு இதை இப்படி செய்றத விட இன்னொருமாதிரி செஞ்சா நல்லாவும் வேகமாகவும் வேலை செய்யும்னு சொல்லியிருக்கும். அங்க சரி சரின்னு சொல்லிட்டு வந்து உங்க கோபத்தை இங்க காட்டூறீங்க. சரிதானே?"

அவள் சொன்னதன் ஒரு பாதி சரிதான், கோகிலாவிற்கும் எனக்கும் இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இன்று நடந்தது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது. நான் வேலைக்குப் போகமாட்டென் என்று சொல்லியதற்கு அகிலாவும் ஒரு காரணம்.

நேற்று அம்மா வெளியில் ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி காரில் இறக்கிவிடச் சொன்ன பொழுது நான் ஒன்றும் யோசிக்கவேயில்லை, சாதாரண நிகழ்வுதானேயென்று. ஆனால் அம்மா வண்டியில் உட்கார்ந்து வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னது தான் நான் வேலையை சிறிது நாட்கள் விட்டுவிட நினைத்ததற்கு முக்கியக்காரணம்.

"தம்பி அகிலா ரொம்ப பயப்படறாடா! முதல் பிரசவம் வேற, அம்மா இருந்து பார்த்துகிற அளவுக்கு வசதி பத்தாது அப்படின்னு நிறைய பிரச்சனை. முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு செத்துப் பிழைக்கிறது மாதிரிடா. உனக்குப் புரியாது. கவலையேப்படாமல் நார்மலாகப் பெத்துப் போடுற பொண்ணுங்க இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.

உன்னை ஏன் இப்படி வளர்த்தேன்னு இப்ப வருத்தப்படுறேன். உங்க தாத்தா பாட்டிய ஏன் என்னைய உங்கப்பாவை கூட எப்படியிருக்கீங்க, உடம்பு நல்லாயிருக்கான்னு கேட்க மாட்ட நீ. நானும் அதை ஒரு பிரச்சனையா பார்க்கவேயில்லை. ஆனால் இதையே அகிலா இப்படி இருக்கிற நேரத்தில் அவள்கிட்ட செய்யக்கூடாதும்மா.

அவ கூட உட்கார்ந்திரு, உடம்பு எப்படியிருக்கு எதுவும் கஷ்டமாயிருக்கான்னு கேளு. அவ இத நேரா உன்கிட்ட சொல்லாட்டியும் நிச்சயமா இத உன்கிட்டேர்ந்து எதிர்பார்ப்பா. உன்னைய பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டேன்னா கொஞ்ச நாளைக்கு லீவைப் போட்டுட்டு அவக்கூட இரு.

உனக்கும் அவளுக்கும் முந்தி இருந்த பிரச்சனையை நீ முழுசா மறந்திட்டேன்னு எனக்குத் தெரியும் ஏன் அவளுக்கேக் கூடத் தெரியும். ஆனால் இந்த முழுகாம இருக்கிற நேரம் இருக்குப் பாரு எல்லாத்தையும் தப்பாவே நினைக்கச் சொல்லும், நான் சொன்னா நம்ப மாட்ட இதை எப்படி சொல்றதுன்னு கூட நான் நினைச்சேன் ஆனால் பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்குப் புரியணும்னா சொல்லித்தான் ஆகணும்னு சொல்றேன். இந்த ஐந்து மாசத்தில் அவளை தொட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீ இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவ நினைக்கிறா! அதுமட்டுமில்லாமல் நீ ஏதோ தப்பு பண்ணுறீயோன்னு பயப்படுறா, வேற பொண்ணொட தொடர்பு எதுவும் இருக்கும்னு நினைச்சு தினம் அழுகைதான். அதனால் தான் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு லீவைப் போடு அது முடியாதுன்னு வேலையை விட்டுறு கொஞ்ச நாளைக்கு."

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது அம்மா சொன்னது, அப்படியுமிருக்குமான்னு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அப்படின்னு தான் நான் அகிலாவை நினைத்தேன். வார்த்தைகளால் மட்டும் காண்பிக்கப்படுவதில்லை அன்புங்கிறது அவளுக்கு தெரியும் என்றும் நினைத்தேன். ஆனால் அம்மா சொன்னது ஆச்சர்யத்தை அளிப்பதாகயிருந்தாலும் என் செல்ல மனைவிக்காக இதைக்கூட செய்யாம எப்படியென்று தான் வேலையைவிட முடிவெடுத்தேன். அதைச் சொன்னால் ஒருவேளை ஏதாவது காம்ப்ளக்ஸ் வரலாம் என்பதால் கோகிலா மேட்டரையே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து அகிலா கேட்டதற்கு உண்மை என்பதைப் போல் சிரித்து வைத்தேன்.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

மச்சினிச்சி வந்த நேரம்

"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.

"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.

நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.

"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல

"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."

அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.

"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.

"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.

"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."

சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.

வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.

"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.

"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"

"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"

நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."

நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"

கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.

என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,

"என்னடா பிரச்சனை?"

சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,

"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"

"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.

"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."

அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,

"யோவ்..." என்றாள்.

நான் திடுக்கிட்டவனாய்,

"என்னாடி இது மரியாதை கொறையுது."

"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.

ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."

அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.

"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."

வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.

அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.

சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

நான் நுழைந்ததும்,

"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."

"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.

"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.

"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.

"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."

அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.

"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."

"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.

நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.

"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."

விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.

"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை."

நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.

"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.

இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"

ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."

"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.

"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."

அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.

"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.

"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"

"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.

"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.

"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.

ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.

"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"

பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.

"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"

நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"

மூச்சை இழுத்துவிட்டவள்,

"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"

சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.

பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."

"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."

சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு

"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.

அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.

"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"

"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.

"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.

"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"

நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.

"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."

அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.

"எங்க கிளம்புறீங்க?"

"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.

"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,

"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"

கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,

"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.

காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.

"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"

"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.

"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,

"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.

"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.

"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"

"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.

இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.

உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"

முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.

"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.

"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.

"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"

கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.

"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.

"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

Popular Posts