In

உள்ளம் உடைக்கும் காதல்

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து மோகன் தன் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டிவிட்டு கோபமாய் "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லி வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அன்றைய பொழுதின் நினைவுகள்  மீண்டும் மீண்டும் வந்து அவன் கழுத்தை நெரித்து இரவு தூக்கம் வராமல் செய்யத்தொடங்கியது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களின் பொழுது பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவன் அன்று கொடுக்கப்பட்ட தலைப்பில் அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.

பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு மோகன் திருச்சியில் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலான பள்ளிகளுக்கிடையிலான பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்குமானது - யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். அவன் பேசி முடித்தபின் மேடையேறிய அவள், முதல் வரியிலேயே "முன்னால் பேசிட்டு போனாரே, அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரி என்பதால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவளுக்கு கொடுத்திருந்த தலைப்பிலும் பேசினாள். அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தப் பளீர் சம்பவம் நடந்தது. பொதுவாய் பெண்களை மதிக்கும் மோகன், அவ்வாறு நடந்து கொண்டது அவனுக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது. 

இதெல்லாம் நடந்து முடிந்திருந்த ஒரு ஜீன் மாத  காலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வழமை போல் கல்லூரிப் பேருந்திற்காக மோகன் காத்துக்கொண்டிருந்தான், அவன் வீடிருக்கும் திருவெறும்பூருக்கு அவன் கல்லூரிப் பேருந்து வராதென்பதால் எப்பொழுதையும் போல் இன்னொரு பேருந்து மாறிவந்திருந்தான். விராலிமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் நிழற்குடை அருகில் நண்பர்கள் ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் வருவது பேச்சுப்போட்டியில் அவனைத் திட்டியவளைப் போல் தோன்றியதால் தூணிற்குப் பின்னால் சென்று மறைந்து கொள்ள உத்தேசித்தான் முதலில் ஆனால் அவளும் அவர்களுடைய நிழற்குடை அருகில் வந்ததால், இதை இங்கேயே இன்றே முடித்துக் கொள்ள நினைத்தவனாய் நேராய் அவளிடம் சென்று,

"உன்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்." அவன் சொன்னதும், கொஞ்சம் விலகி வந்தவள் "ம்ம்ம் சொல்லுங்கள்." அவனை அவள் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவள் முகத்தில் துளிர்த்த ஆச்சர்யத்தில் உணர முடிந்தது. 

"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிவிட்டு அவள் கண்களையே உறுத்துப் பார்த்தான், அவனிடம் கபடமில்லை, பொய்யுமில்லை, மனம் வருந்தியபடியே இருந்தான் எப்படியும் ஒரு நாளிற்கு ஒரு முறையாவது அதைப் பற்றி நினைத்தபடியிருந்தான். அவளை மீண்டும் எங்கே பார்ப்பது என்பதைப் பற்றிக்கூட யோசித்தான். திருச்சிக்கு மாற்றலாகி வந்தவளாயிருக்க வேண்டும். இன்னொரு பேச்சுப்போட்டியின் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். 

அவள் ஆச்சர்யத்தில் முகம் சிவந்தாள்,  "நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீங்கன்னு தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கே, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" கேட்டாள். அந்தக் கேள்வியில் அவளுடைய கரிசனம் தெரிந்தது, ஆனால் மோகனிடம் அவளிடம் சொல்வதற்கும் கேட்பதற்கும் மன்னிப்பைத் தவிர வெறொன்றும் இல்லை. 

"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவந்து நின்றான்.

சிறிது நேரத்தில் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, அவனும் நண்பர்களும் ஏறி உட்கார்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் அவர்களுடைய கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்தாள். மோகனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?' என்று கேட்டான்.

சார்ல்ஸ் மோகனின் பிரிய நண்பன், சார்லஸின் அப்பா சத்திரம் பேருந்து நிலையத்தில் அரிசி கடை வைத்திருந்தார், சார்லஸின் அண்ணன் அந்தக் கடையில் தான் வேலை பார்த்துவந்தார். சார்லஸுக்கு படிப்பு வரவில்லையென்றால் அவனுக்கு அதே கதிதான். ஆனால் அவன் கொஞ்சம் நன்றாகப் படித்தான் எப்படியென்றால் அவங்கப்பா அவனை அரிசிக்கடையில் உட்கார வைக்க முடியாதபடிக்கு. சார்லஸ் கொஞ்சம் குள்ளம் மோகனுமே கூட நடுத்தர உயரம் தான். சார்லஸ் கொஞ்சம் கருப்பாய் நல்ல களையாய் இருப்பான், திருநெல்வேலி பக்கம் அவன் குடும்பத்திற்கு. திருச்சி வந்து செட்டில் ஆகி இரண்டு தலைமுறை ஆகிவிட்டது என்றாலும் இன்னும் கொஞ்சம் தமிழ் தாமிரபரணி தண்ணியில் பட்டுத்தான் வரும். மோகனுக்கு திருச்சி சிட்டி இல்லையென்பதால், அவனுக்கு சிட்டி சார்லஸால் தான் அறிமுகம்.

“யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.” கொஞ்சம் நறுக்குத்தெறித்தாற்போலத்தான் அவன் பதில்கள் இருக்கும். பொழுதுபோக்கிற்கு அரிசிக்கடையில் உட்கார்ந்த வழமை. 

அய்யோ இந்த விஷயம் இதோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் முடியாது போலிருக்கிறதே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்ட வேண்டும் போலிருக்கிறதே என்று அவன் நினைத்தான். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைத்திருந்தது.

அன்று கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், நிர்வாகம் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது அவர்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு மோகனுக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும். எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது, சில கடைசி நேர விஷயங்கள் மட்டும் மீதமிருந்ததன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் மோகன் பொறுப்பில் இருந்தது.

காலையில் கல்லூரிக்குள் நிழைந்ததுமே பிரின்ஸிபால் மோகனிடம், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".

"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்றான்.

நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள், அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும். இது தெரிந்துதான் மோகன் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லியிருந்தான், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் நன்றாக நடந்தது.

வாழ்த்துரை கூறவந்த சேர்மன், மிகவும் உற்சாகமாகி மேடையில் நின்று கொண்டிருந்த அவனை அருகில் அழைத்து, “இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்” என்று ஒரே பாராட்டு மழை.

பிறகு "உங்கள்ளேர்ந்து - புதிய மாணவர்களிடம் - ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" என்று சொல்லி உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். அவனும் அப்போழுதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தான். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான்.

கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் அவன் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.

நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த அவன் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு - அவளுக்கும் சேர்த்து - 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தான்.

நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் அவனிடம் வந்து அப்படி ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லை.

.

"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".

மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டிவிட்டு, வகுப்பிற்கு செல்ல படியேறினான். அவன் கல்லூரி இருந்த காட்டில் சாப்பிடுவதற்கான உணவங்கள் அப்பொழுது இல்லை. அவன் கல்லூரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரி அருகில் கூட பெரிய உணவகங்கள் கிடையாது. கிழக்குப் பக்கம் ஐந்து கிலோமீட்டர் மேற்குப்பக்கம் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் குறிப்பிடும்படியான ஊர்கள் இருந்தன. கல்லூரி இருந்த இடத்தின் அருகில் இருந்த ரைஸ்மில்லிற்காய் ஒரு தாத்தா பாட்டி நடத்தி வந்த கடை தான். பொதுவாய் டேஸ்காலர்கள் அங்கே உணவருந்த வருவதில்லை, ஆனால் மோகன் டேஸ்காலராக இருந்தாலும் ஆயாவுடனான பழக்கத்தில் அங்கே வருவதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் திரும்பிப் போகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு மோகன் நினைத்துக்கொண்டே நகர்ந்தான், அவன் கடக்கும் பொழுது அவள் கேட்டாள்.

உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தான்.

அங்கே என்னுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர்கள் இருந்தார்கள்.

"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றான். 

"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"

"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"

"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."

"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".

எல்லா புதுமுகங்களும் உட்கார்ந்திருந்தார்கள், இவள் முதல் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தாள், முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.

"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்" மோகன் விலகி பின்னால் சென்று நின்றான்.

அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது அவன் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.

"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் மீண்டும் உணர்ச்சி வந்தது.

"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".

"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான் - மூன்றாம் செமஸ்டரில் இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்யறதுன்னு..."

இது அவன் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் அவனிடம்  கேட்டாளா என்று அவன் யோசித்தான், ஐயோ என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டவனாய்

"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். இப்பொழுதும் அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களைச் சொன்னார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.

இதன் கடைசியில், சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.

"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்றான்.

உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு அவனை வேறு தனியாகப் பார்த்தாள்.

"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு அவனைப் பார்த்தான்.

தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானே என்று நினைத்தவனாய் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதனால உங்கள்ல யார் யாரெல்லாம் நல்லா பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று மோகன் சொன்னான். அவளுக்காக என்றில்லாவிட்டாலும், அதுதான் முறை.

என்னடா இது இன்று சுத்தி சுத்தி அடிக்குதே என்று  நினைத்துக்கொண்டவனாய் மீண்டும் வகுப்பறைக்கு வந்தான்.

மாலை ஐந்து மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கே முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் அவன் கிளம்பியிருக்கவில்லை. ஐந்து மணிக்கு அகிலா பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள அவன் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைத்தவனாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டான்.

"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."

"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.

அவன் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டு.

"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"

"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"

வேண்டுமென்றே அவனைக் கிண்டுகிறாள் என்று அவன் ‘ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலை’என்று கேட்கவில்லை.

"நாங்க அது இல்லாம, ஸ்கிட், மைம் இரண்டுலேயும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"

"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"

மோகன் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,

"ம்ம்ம்... அப்புறம்?" என்றான்.

அவள், "இல்லை, நோட்ஸ்..." என்றாள் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு.

"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்."

"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் என்று நினைத்தான்.

"கனிமொழியா?" கனிமொழி மோகனுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர், சொல்லப்போனால் அவனுடைய ஒரே பெண் தோழி, நாடகத்திலெல்லாம் அவனுடன் நடிக்கும் பெண், இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே அவனைக் கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.

"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?" பதறியபடி கேட்டான், இவளிடம் நான் நடந்துகொண்டது தெரிந்தால் என்ன கேட்பாளோ என்று நினைத்தபடி.

"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுதானிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான் மோகன் தப்பித்தேன்.

"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"

"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"

"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினான்.

அன்றைக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க்கிட்டேயிருக்கிற மாதிரி தோன்றியது அவனுக்கு.

.

அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தான். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. ஆனால் கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டான்.

கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" அவனே ஆரம்பித்தேன்.

"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"

"எதைச் சொல்ற?..."

"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"

"இதென்னாடி ஒம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"

"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே."

"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"

"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி என்கிட்ட சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.

"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"

"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.

அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சே என்று நினைத்துக்கொண்டே மோகன் கண்களை மூடினான்.

அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை அவனுக்கு. கனிமொழி சாப்பிடும் நேரத்தில் அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவளும் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே யாரோ கூப்பிடுவது போல் சப்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"அத்தே..."

 தன் அம்மாவையா கூப்பிடுறா பாவி என்று நினைத்து, உடனே வெளியல் வரலாம்னு என்று பார்த்தால் அவன் போட்டுக்கிட்டிருந்த உடுப்பு பத்தலை, அதனால் மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அவன் அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.

"யாரும்மா நீ?"

"அத்தே, இது மோகன் வீடு தானே, நான் அவரைப் பார்க்கணும்..."

"அவன் வீடுதான் நீயாரும்மா?"

"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று சட்டென்று அவங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.

அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து அவனிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" என்று சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் போய்விட்டார்கள்.

நேராய் அவளிடம் சென்று, "ஏய், இங்க எதுக்கு வந்த?" அவன் கேட்க

"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு"

"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?" ஏறக்குறைய கத்தினான்.

"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."

அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா"

"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"

"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"

அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"

"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது அவளிடம்.

"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது" நழுவத் தயாரானான். 

"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..." புலம்பினாள்.

"சரி, என்னாத்தான் பண்ணனும்"

"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்." என்னவோ ப்ளான் போட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தான்.

"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?" அம்மா திரும்ப வருவதற்குள் அவளை அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தான்.

"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்" பிடிவாதம் செய்தாள்.

இன்றைக்கு உதை வாங்கித்தராம போக மாட்டாள் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகியது அவனுக்கு.

அம்மா வந்தவுடன் முதல் வேலையா அவனிடம் வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" என்று ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்க.

"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினான்.

.

ஞாயிற்றுக் கிழமை, காலையில் அவன் எழுந்ததிலிருந்து சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் மணி ஒன்றாகியிருந்தது, தலைவருடைய தளபதி படம் வேறு போட்டிருந்தான். மோகன் அவனுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுக்கு நினைவில் வந்தது அகிலாவிடம் அவன் அன்றைக்கு லைப்பரரிக்கு வருவதாகச் சொல்லியிருந்தது. உடனே  அவசரமாக கிளம்ப நினைத்தவன், அம்மா "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" சொல்லவும் அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து. அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். அவனுக்கென்னமோ அவள் வந்திருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு லைப்ரரி சென்றான்.

தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே அங்கு, அகிலா உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லூரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என அப்பொழுதுதான் திரும்பியிருப்பான், பின்னால் யாரோ வேகமாக நகர்ந்து அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றியது. திரும்பினால் எதிரே அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.

"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?" உண்மையிலேயே மனம் சங்கடப்பட்டது, சமாதானம் சொன்னான்.

"காலையிலேர்ந்து வெய்ட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?" அவள் கண்களில் கோபமில்லை விளையாட்டுத்தனம் இருந்தது ஆனால் என்னயிருந்தாலும் தவறு அவனுடையது என்பதால்.

"அதான் சாரி கேட்டேன்ல..." என்றான்.

"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள். அவள் எந்த நிகழ்ச்சியைச் சொல்ல வருகிறாள் என்று தெரிந்திருந்தாலும் சட்டென பழகிய வார்த்தை மனதில் ஓடியது.

"what do you mean?" வந்துவிட்டது.

"I mean, what I mean!" பெரிய இங்கிலீஷ் ப்ரொபசர் போல் பதில் சொன்னாள், ஆனால் எந்தக் கணத்திலும் கோபம் மட்டும் இல்லவேயில்லை, கண்கள் விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டேயிருந்தது.

ரொம்பத்தான் என்று நினைத்துக் கொண்டவனாய், "சரி இப்ப என்ன பண்ணனுங்ற?" அவன் கேட்க,

"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"
என்னடா இது இரண்டு நாளில் தைரியம் அதிகம் வந்துவிட்டது போலிருக்கே என்று நினைத்தபடியே,

"எதுக்கு?"  

"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.

காபி ஷாப் வந்து சேர்ந்தார்கள். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னா?" அவனையே தின்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தது சங்கடத்தை அளித்தது. அப்படி வெறுமனே அவள் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவளிடம் பேசிவிடுவதே உத்தமம் என்று நினைத்துக் கேட்டான்.

"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்." என்றாள்.

"எதைப்பத்தி?"

"உங்களைப்பத்தி..."

"என்னைப் பத்தி என்னா?"

"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." இழுத்தாள்.

"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"

"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."

"என்ன சொல்லுவா?"

"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."

"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"

"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"

"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"

"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"

"ஏய்! உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"

"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள். அவள் எங்கே எதற்கு வருகிறாள் என்பது சரியாய்த் தெரியாவிட்டாலும் இப்படியொன்று இருக்க முடியுமென்று ஊகித்திருந்தான். அவள் கண்களில் தெரிந்த அந்த விளையாட்டு, சுட்டித்தனம் எல்லாம் அதையே வழிமொழிந்தன.

"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒருத்தியை"

அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லி வீட்டிற்கு வந்துவிட்டான்.

"அப்பா நிம்மதி", இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் அடுத்த நாள் இடி ஒன்று தலையிறங்கியது. காலையில் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தான். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக அவன் கிளாஸ் ரூமிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் அவனே தொடங்கினேன்.

"என்ன கனிமொழி?"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." தயங்கினாள்.

"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."

"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."

"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தான். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.

"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..." அவளை வழிக்குக் கொண்டுவர நினைத்தவனாய்.

"ஆமா அவளைப்பத்தி தான்..."

"என்ன விஷயம்"

"அண்ணே நான் சொல்ரனேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா." ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒன்று நடக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால் அத்தனை சுலபமாய் அவளால் இந்த விஷயத்தை நகர்த்த முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அவளுக்கு அவன் மனம் தெரிந்திருந்தது கனிமொழி மூலமாய் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வைத்ததில் ஒரு தனித்திறமை இருந்தது. அந்தத்திறமை அவனுக்கு கோபமளித்தது. ஆனால் பாவம் கனிமொழி, அகிலா இந்த விஷயத்தில் கனிமொழியை இழுத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தான்.

"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து ‘அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்." 

"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறியான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு" அவன் அவளிடம் அதீத கோபம் காட்டாததன் காரணமாய் அவள் அவனைச் சீண்டினாள். 

"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."

கால் மணிநேரத்தில் அகிலா கேன்டீனுக்கு வந்தாள்.

"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?" கத்தினான்.

மௌனமாக நின்றாள்.

"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேழு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை - பெண்ணை என்ன பெண்ணை - குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"

தலையை மட்டும் ஆட்டினாள்.

"வாயத்திறந்து பதில் சொல்லு..."

"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"

"அதெதுக்கு உனக்கு?"

"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"

"சரி பொய், அதுக்கென்ன?"

"அது போதும்," என்று அவன் தாடையைத் தடவி அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.

அவன் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி அவனைப் பார்த்து சிரித்தாள்.

.

அடுத்த ஒரு மாதம் அகிலா மோகன் கண்ணில் சிக்கவேயில்லை, சரி பொண்ணு திருந்திவிட்டது என்று நினைத்துக் கொண்டு இவனும் சும்மாயிருந்துவிட்டான். கல்லூரியில் எப்பொழுது வெளியில் போனாலும் அவள் அவனைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு வரும், ஆனால் சுற்றிப் பார்த்தால் அவள் எங்கும் இருக்க மாட்டாள். இதெல்லாம் முதல் ஒரு வாரத்திற்குத்தான், பின்னர் உண்மையிலேயே அவளை மறந்துவிட்டிருந்தான். கனிமொழி மட்டும் அவ்வப்பொழுது வந்து அவனைப் பார்ப்பாள், ஏதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வாள், அவ்வளவுதான். அகிலாவை பார்த்து மூன்று வாரம் ஆகியிருக்கும், பின்னர் ஒருநாள் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவள் பின்னாடியே யாரோ வருவது போல் இருந்தததால், யாரென்று கனிமொழி பின்னால் பார்க்க முயற்சித்தான்.

"யாரண்ணே தேடுறீங்க, உங்க லவ்வரையா?" நக்கலடித்தாள்.

"கனி, என்ன விளையாட்டிது, அவளே விட்டுட்டாலும் நீ விடமாட்டே போலிருக்கே?" உண்மையிலேயே கவலையுடன் கேட்டான்.

"அவ விட்டுட்டாளா, யார் சொன்னது?" அவள் முகத்தில் புன்னகை அரும்பியது விளையாட்டுத்தனத்துடன்.

"பின்னே என்ன, நான் அவளைப் பார்த்தே பல வாரம் ஆகுது, சரி அவ என்னதான் சொல்றா?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கிறா, நீங்கதான் யாரையும் காதலிக்கலைன்னு சொல்லீட்டீங்களாமே, அதனால அன்னிலேர்ந்து ஒரே ஆட்டம் தான். நீங்க தான் அவளை பார்க்கலைன்னு சொல்றீங்க. அவளைப் பார்த்தா அப்படி தெரியலை, ஒரு வேளை உங்களுக்கு தெரியாம, சுத்திக்கிட்டிருக்கிறாளோ என்னவோ?" அவளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் சமாளித்தாள்.

"எப்பிடியோ போகட்டும், இந்த பயம் இருந்தா சரி, அதுமட்டுமில்லாம என் வம்புக்கு வராம இருந்தா ரொம்ப நல்லது." அவன் வரைக்கும் அகிலா விஷயம் வராமல் இருந்தால் சரிதான் என்று நினைத்து தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் திரும்பவும் அவன் அவளைப் பார்த்திருக்கவில்லை, அன்றைக்கு மோகன் சந்தோஷமாக இருந்தான், அவனாக தேடி அலைந்து கஷ்டப்பட்டு எடுத்துச் செய்து கொண்டிருந்த ப்ரோஜட் ஒரு வழியா நல்ல விதமாக முடிந்து கிளெயண்ட் கிட்ட காட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சம் ரெக்வயர்மெண்ட் சேஞ்சும் நிறைய பக் ஃபிக்ஸிங் எல்லாம் முடிஞ்சு நாலேஞ் ட்ரான்ஸ்ஃபரும் ஆகியிருந்தது. ப்ரொஜக்ட் கொடுத்த முதலாளி அன்றைக்குத்தான் இருபதாயிரம் ரூபாய்க்கு செக் குடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவன் காலேஜ் ப்ராஜக்ட்க்கும் இதை உபயோகப்படுத்தக் கொள்ளலாம் என்றும் என்ன சர்டிபிகெட் வேணுமின்னாலும் வாங்கிக்கொள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆறு மணிக்கு கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அவனும் சார்லசும் பேசிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் கனிமொழியும், அகிலாவும் நடந்து வருவது தெரிந்தது. என்னமோ அன்றைக்கு அகிலாவை வம்பு இழுக்கணும் போல் இருந்தது அவனுக்கு. ஆனால் எதற்கு வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கணும் என்று பேசாமல் இருந்தான். சொல்லப்போனால் ஒரு மாதம் கழித்து அவளைப் பார்க்கிறான். அவர்கள் இவர்களை நோக்கித்தான் வந்தார்கள். ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பதை அவர்கள் முகம் காட்டிக் கொடுத்தது. 

"அகிலா உங்ககிட்ட தனியா பேசணுமாம்," என்றாள் கனிமொழி

"முடியாது!" கண்டிப்புடன் சொன்னாலும் அவனிடம் விளையாட்டுத்தனம் வந்திருந்தது.

"அண்ணே கொஞ்சம் சீரியஸ்." கனிமொழி புலம்பினாள்.

"நீயே சொல்லு கனி!"

"அவதான் சொல்லணுமா, என்னன்னு தான் கேளுங்களேன்.."

அவளிடம் திரும்பி, "சரி சொல்லு!" கேட்டான்.

"தனியா பேசணும்..." சொல்லிவிட்டு குனிந்து கொண்டாள். அவன்  சொல்லாமலே சார்லசும் கனி மொழியும் நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அகிலா "ஒரு பிரச்சனை.." நிமிர்ந்து ஒரு முறை அவன் கண்களைப் பார்த்துவிட்டு பின்னர் தலையை குனிந்தபடியே சொல்ல ஆரம்பித்து பின்னர் தொடராமல் நிறுத்தினாள்.

"என்ன பிரச்சனை?"

"என் கூடப்படிக்கிற ஒரு பையன் என்னை காதலிக்கிறேன்னு சொல்றான், எனக்கு பயமா இருக்கு." அவள் கண்களில் பயம் தெரிந்தது. அவன் அவளுடன் விளையாடும் ஆசையில் இருந்தான்.

சந்தோஷமாய், "கன்கிராட்ஸ், ரொம்ப சந்தோஷம். அப்ப இனிமே என்னை விட்டுறுவ." நக்கலடித்தான். 

"ம்ம்ம், சீரியஸ்..." கண்களில் கோபம் தெரிந்தது.

"சரி பிரச்சனை பண்றானா?"

"இல்லை பிரச்சனையெல்லாம் ஒன்னும் பண்ணலை, லெட்டர் எழுதிக் கொடுத்தான் அதான்"

"இதிலென்ன பிரச்சனை, பிடிக்லைன்னா பிடிக்லைன்னு சொல்லு, பிடிச்சிருந்தா லவ் பண்ணு, இதுக்கு என்னை ஏன் கேட்குற?" அவன் சொல்லிமுடித்ததும் தான் தாமதம், அழ ஆரம்பித்துவிட்டாள். இதுதான் முதல் முறை அவன் குடும்பத்தில் இல்லாத பெண் அவன் முன்னாடல் இப்படி அழுவது. 

"ஏய் நான் என்ன சொன்னேன்னு இப்பிடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?" கத்தினான். 

"நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரியும் உங்களுக்கு, இருந்தும் இன்னொருத்தனை காதலின்னு சொன்னா அழாம என்ன பண்ணுறதாம்" அவள் அவன் கண்களையே கவனித்தபடி சொன்னாள், அவன் இதற்குச் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்தபடி இருந்து அவளது கண்கள்.

"இதென்னடி வம்பாயிருக்கு, நானா உன்னை காதலிக்க சொன்னேன், ஒரு மாசத்தில திருந்திட்டேன்னு நினைச்சேன் இல்லையா?" விட்டேத்தியாகப் பதில் சொன்னான்.

"அது நமக்குள்ள உள்ள பிரச்சனை, நாம பேசி தீர்த்துக்கலாம். இதுக்கு ஒரு வழி சொல்லுங்க" அவள் சொன்னதும் “தோ பாருடா” என்று நினைத்துக் கொண்டவனாய், "என்ன சொல்லச் சொல்லுற?" அமைதியாகவே கேட்டான்.

"நான் அவன்கிட்ட, 'இந்தமாதிரி நான் மோகனை காதலிக்கிறேன், நீ வேற யாரையாவது பார்த்துக்கோ'ன்னு சொல்லப் போறேன்; இதுல நீங்களும் இருக்கிறதால உங்ககிட்டையும் சொல்றேன்" சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் ஒரு தெளிவு இருந்தது அது மோகனை ரொம்பவும் சீண்டியது.

"நீ எனக்கு செருப்படி வாங்கித்தரப்போற, அதானே?" கொஞ்சம் கோபமாகக் கேட்டான், திரும்பவும் அழத் தொடங்கினாள். அவன் அப்பொழுது எதுவும் பேசாமல் இருந்தான். சிறுது நேரத்தில் அங்கு வந்த கனிமொழி, "திரும்பவும் அழவுட்டுட்டீகளா, என்னண்ணா இது, சின்னப் பொண்ணை எப்பப் பார்த்தாலும் அழவைச்சி வேடிக்கை பார்க்கிறது."

கனிமொழியிடம் "அவ யார்கிட்டையும் எதுவும் பேச வேண்டாம், நான் அவன் கிட்ட பேசிக்கிறேன், கூட்டிட்டு போ இவளை இங்கிருந்து, எப்பப்பாரு அழுமூஞ்சியாட்டம் அழுதுகிட்டு" சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்த நாள் அந்தப் பையனை அழைத்து கண்டித்து அனுப்பினான். அவன் "இல்லை தெரியாமல் செய்துட்டேன் விஷயத்தை பெரித்தாக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அதென்னமோ ப்ரோஜக்ட் நல்லா முடிஞ்சதில் இருந்தே அகிலா ஞாபகமாவே இருந்தது, அந்தப் பிரச்சனைக்கு பிறகும் கூட அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. அவனுக்கும் விளையாட வேண்டும் போல் தோன்றியது வாஸ்தவம் தானே, அதனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டியை பார்க்க சென்றுவிட்டான். அடுத்த நாள் கல்லூரியில் முதல் மூணு மணிநேரமும் கம்ப்யூட்டர் லேப், அகிலாவுடைய கிளாசுக்கு பாடம் எடுக்க வேண்டிய லெக்சரர் வரவில்லை.

Head of the Department அவனிடம் வந்து, "தாஸ், கொஞ்சம் டைட் ஸெட்யூல், நீ அந்த ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடண்டுகளுக்கு ஏதாச்சும் பாடம் எடுத்துட்டு வந்திரேன்?" என்றார். 

"சார் சொல்றனேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கு உடம்பு சரியில்லை, வேணும்னா அவங்களை லேப்புக்கு வரச் சொல்லுங்களேன்" சொன்னதும், HOD, அப்பிடியா, உடம்பு சரியில்லையா பரவாயில்லை, லேப்புக்கு வரச்சொல்லிவிடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அட்டெண்டர் ஒருவரிடம் சென்று அவர்களை லேப்பிற்கு வரச்சொல்லிச் சொல்லிவிட்டு, பிறகு நேராக சார்லஸிடம் வந்து, "சார்லஸ், அவ வருவா. நான் இல்லைன்னா நிச்சயம் உன்கிட்ட வந்து கேட்பா, நீ எனக்கு உடம்பு சரியில்லைன்னும் ரெஸ்ட் ரூமில் இருக்கிறேன்னும் சொல்லு!" சொன்னதும் சார்லஸ், "மாமா, எதுக்குடா இது. இதுவரைக்கும் சரியா போய்க்கிட்டிருந்த நீ இப்ப ரூட் மாத்தறாப்புல இருக்கு." என்றான்.

"ரூட்டும் மாறலை ஒன்னும் மாறலை, அவ என்கிட்ட கண்ணாம்மூச்சி விளையாடுறா அதான்," சொல்லிவிட்டு அட்மின் ரூமிற்குள் சென்றான். அங்கே விசேஷம் என்னவென்றால், அட்மின் ரூமிலிருந்து லேப்பைப் பார்க்க முடியும் ஆனால் லேப்பில் இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது மாணவர்கள் தப்பு எதுவும் பண்ணாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் லேபிற்கு வந்தாள், எங்க கிளாஸ் தான் உள்ளேயிருக்கிறதுன்னு தெரிந்து கொண்டதும் என்னைத் தேடினாள். நான் இல்லாததால், நேரே சார்லஸிடம் போய் என்னவோ கேட்டாள். பின்னர் நேராக அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். கால் மணிநேரம் இருக்கும், நேராக லேப் அட்டெண்டரிடம் போய் என்னவோ சொன்னாள், வேறு என்னவாயிருக்கும் அவளுக்கும் உடம்பு சரியில்லைன்னு சொல்லி ரெஸ்ட் ரூமிற்கு வர நினைத்திருப்பாள்.

அவள் லேபை விட்டு வெளியே வந்தாள், அவனும் அவள் பின்னே லேப்பை விட்டு வெளியே வந்து பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டான். பயந்து திரும்பியவளிடம், "ஏய் லேப்பில் இல்லாமல், எங்கடி ஊர் சுத்திக்கிட்டிருக்க?" கேட்டான்.

அவள், "சே..., நீங்கதானா, நான் பயந்திட்டேன். பின்னாலேர்ந்தெல்லாம் தொடாதீங்க பயமாயிருக்கு. ஆமா உங்களுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.

"இனிமேல் தொடலை, ஏன் உடம்புக்கு ஒன்னுமில்லையே"

"நான் பயமுறுத்தாதீங்கன்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்." விளக்கம் வேறு சொன்னாள். "நேத்திக்கு நீங்க வரலை, இன்னிக்கு சார்லஸ் சொன்னார் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அதான் கேட்டேன்".

"எனக்கு உடம்பு சரியில்லைன்னா உனக்கென்ன?" சொல்லிவிட்டு அவளையே பார்த்தான். மூஞ்செல்லாம் சிவந்து போனது உடனே, "ஏய் அழுதுத் தொலையாதே, இது காலேஜ், என் சீட்டைக் கிழிச்சிருவாங்க."

"அழமாட்டேன், பயப்படாதீங்க. உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல, நீங்க இன்னிக்கும் லீவு போட்டிருந்தீங்கன்னா. உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்."

"வருவே, வருவே. எங்கம்மாகிட்ட போட்டுக் குடுத்துருவேன். நீ என்னை காலேஜூல மிரட்டுறன்னு"

"நானா மிரட்டுறேன், நீங்கதான் சந்திச்ச முதல் நாளே கன்னத்தில் அறைஞ்சீங்க, அப்புறம் தினம் தினம் அழவைச்சுக்கிட்டிருக்கீங்க. நானும் சொல்றேன் அத்தைகிட்ட"

"சொல்லுவடி, சொல்லுவ..." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கனிமொழி அங்கே வந்தாள்.

"அய்யோ காதலர்கள் பேசும் போது குறுக்கே வந்திட்டனோ?"- கனிமொழி.

"கனி, என்னம்மா இது. உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்னய கேட்டா உன் பேருலத்தான் தப்பு. இவளை அதட்டி வைக்காம நீதான் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்க. இது ரொம்ப தப்பு"

"ஆமா தப்பெல்லாம் என் பேருலத்தான், உங்காளுக்கு ஒன்னுமே தெரியாது, பப்பா பாரு." கனிமொழி சீண்டினாள், ஆனால் அவள் உங்காளுக்கு என்று சொன்னதை அவன் கண்டுகொள்ளவில்லை.

"ம்ம்ம், இங்கப்பாரு உங்ககூட வெட்டிப்பேச்சு பேச எனக்கு நேரம் இல்ல, நானே உன்னை பார்க்ணும்னு நினைச்சேன். அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இந்த வாரம் வீட்டில ஏதோ விசேஷமாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரு என்ன?" சொன்னவுடன் அகிலா தலையைக் குனிந்து கொண்டாள். அவளை கூப்பிடவில்லை என்றவுடன் அவள் வருத்தப்பட்டது தெரிந்தது, இன்னும் கொஞ்சம் வம்பிழுப்போம் என்று நினைத்தேன்.

"அண்ணே என்ன இது, அகிலாவை கூப்பிடுறதில்லையா? உங்க லவ்வரா இல்லைன்னா கூட என் தங்கச்சின்னாவது கூப்பிடலாமில்லை"

"கனி அவரை ஏன் வற்புறுத்துற? அவருக்குப் பிடிக்கலைன்னா விட்டிரு!"  அகிலா ரொம்பவும் பிகு பண்ணினாள். 

"கனி, அவளையும் கூட்டிட்டு வா, ஆனா வந்தா சும்மா இருக்க மாட்டாளே, அத்தேம்பா, கால்ல விழுவா, ஓவரா பில்டப் கொடுப்பா, அதான் பயமாய் இருக்கு. நார்மலா நடந்துப்பான்னா கூப்பிட்டு வா," அவளைப் பார்த்து சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்.

.

சனிக்கிழமை அகிலாவும் கனிமொழியும் வீட்டிற்கு வந்திருந்தார்கள், முதல் முறை இப்பொழுது தான் அவளைக் கவனித்தான். அழகாகத்தான் இருந்தாள், வெளிர் நிறம், வட்டமான முகம், நடுவில் வாகெடுத்து தலை சீவியிருந்தாள். சிறிய நெற்றியில் சந்தனத்தீற்றும் ஒரு குட்டி கறுப்புப் பொட்டும். அன்றும் எப்பொழுதும் போல பாந்தமான நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தாள், தோள்களின் இரண்டு பக்கமும் பின் குத்தி துப்பட்டா போட்டிருந்தாள், அவள் அப்படி துப்பட்டா போடாமல் அவன் பார்த்ததேயில்லை, அந்தத் துப்பட்டா அலை அலையாய்ப் பரவி அவளுடைய மேல்பாதி உடலை சுத்தமாக மறைத்திருந்தது. எப்பொழுதுமே நேர்த்தியாகவே அவள் உடை அணிந்திருந்திருக்கிறாள். கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தங்க வளையல், கழுத்தில் ஒரு சின்னச் சங்கிலி, காதில் தோடென்று இரு வளையங்கள் என்று அதிகமாக அலங்காரம் செய்து கொள்ளவில்லை. முகத்திற்கு பவுடர் போடுவதில்லை போலிருக்கிறது. மிகவும் நல்ல பழக்கம், பத்து வயதிலிருந்து அவனும் பவுடர் போட்டதில்லை, ஆகா இவளை ரசிக்க ஆரம்பித்து விட்டோம், இது தவறு என்று நினைத்தவனாய் சார்லசுக்கு போன் செய்து அவனை விளையாட வரச்சொன்னான்.

போகும் பொழுது அகிலாவை கூப்பிட்டு, "அகிலா அம்மாகிட்ட ரொம்ப பேசாதே அம்மாவுக்கு பிடிக்காது, அப்பாகிட்ட பேசிடவே பேசிடாதே சொல்லிட்டேன்," சொன்னதும் அகிலா ஆச்சர்யமாகப் பார்த்தாள். "உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், பேசணும்னா அக்காகிட்ட பேசு என்னோட பொம்பள உருவம் தான் என் அக்கா, ஜாக்கிரதை, வாயைப் புடுங்குவா மாட்டிக்காதே!" அவள் சரி என்று தலையசைத்தாள். ஆனால் அவனுக்கு ஒன்று புரியவில்லை, எதற்காக இதையெல்லாம் இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று.

சார்லஸ் வந்தான், அவர்கள் பக்கத்தில் இருந்த ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தார்கள். மூன்று மணி நேர விளையாட்டிற்குப் பிறகு வீடு வந்தபொழுது பூஜை முடிந்திருந்தது, மோகன் அக்கா, கனிமொழி, அகிலா மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் நேராக உள்ளே புகுந்து, "மோனா, நான் சொன்னேன்ல அந்தப் பொண்ணு இதுதான்" கனிமொழியும் அகிலாவும் ஒருவரையொருவர் ஒன்றும் புரியாமல் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தார்கள்.

"டேய், நீ வந்தவுடனே சொல்றதில்லையா? நான் ஏதோ நம்ம கனியோட வேற ஃப்ரெண்ட்னு நினைச்சேன். இப்ப சைட் அடிக்க உரிமையா வீட்டுக்கே வர ஆரம்பிச்சாச்சா, முன்னையே சொல்லியிருந்தா இந்நேரம் அழவைச்சிருப்பேன்ல, சின்ன பொண்ணுன்னு சொன்ன, பார்த்தா அப்படித் தெரியலையே?" அவள் இன்னொமொருமுறை அகிலாவை மேலும் கீழும் பார்த்தாள்.

"அக்கா, அண்ணே உங்ககிட்ட சொல்லிட்டாரா, எனக்கு உண்மையிலே தெரியாது. இவளை அழவைக்க நீங்க ரொம்ப சிரமப்படவேண்டாம். அண்ணே முறைச்சு ஒரு தடவை பார்த்தாலே அழுதுறுவா. அதுமட்டுமில்லாமல் இவ சிரிச்சா தான் அதிசயம். அண்ணனைப் பார்த்ததில் இருந்து தினமும் அழுகை தான்" கனிமொழி கண்களில் கலவரம் தெரிந்தது. அகிலா எதுவும் பேசவில்லை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மோனா எனக்குத் தெரியாது, நீதான் இவகிட்டையும் இவ தங்கச்சி கிட்டையும் எப்பிடியாவது சொல்லணும், கனியும் சேர்ந்துக்கிட்டு விளையாடுறா, இதெல்லாம் ரொம்ப டிஸ்டர்பென்ஸா இருக்கு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். நீ பேசி வச்சிறு."

அக்கா எப்படியும் இவர்கள் இருவரையும் சமாளித்து அகிலாவிற்கு வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பாள் என்று நினைத்திருந்தான். அரைமணிநேரம் கழித்து வெளியே ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து பார்த்த பொழுது, மோகனாவும் அகிலாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கனிமொழி சமையல் கட்டில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

"என்ன மோனா, என்ன சொல்றா?"

"பேசினேன், உங்கிட்ட சில கேள்வி கேக்கணும்?" அவள் அவனைக் கூர்மையாகக் கவனித்தப் படியே கேட்டாள்.

"ம்ம்ம் கேளு..."

"இவளை உனக்குப் பிடிக்குமா?"

"என்ன கேள்வியிது?"

"பதில் சொல்லு..."

"இங்கப்பாரு எனக்கு கனிமொழியைக் கூட பிடிக்கும் அந்த மாதிரிதான் கேட்கிறேன்னா, இவளையும் பிடிக்கும். ஏன் கேட்கிற?" ஒரு தேவையில்லாத ஒரு சூழலில் சிக்கிக்கொள்ளத் தொடங்கியதாகப்பட்டது அவனுக்கு.

"இல்லை, என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான். நான் நினைச்சேன் எல்லா பெண்ணுங்க கூட உனக்கு இருக்கிற மாதிரி எதுவும் ஈகோ பிரச்சனையோன்னு, ஏன்னா உனக்குத்தான் யாரும் உன் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா ஒத்துக்க மாட்டே, இந்தப் பொண்ணு முதல் நாளே உன்னை திட்டியிருக்கு, அதனால ஏதும் ஈகோ பிராப்ளமான்னு கேட்டேன்." மோகனாவிடமும் இப்பொழுது விளையாட்டுத்தனம் தெரிந்ததாய்ப்பட்டது அவனுக்கு.

"இல்லை, நிச்சயமா இல்லை, உங்கூட கூடத்தான் பாதி நேரம் சண்டை போடுவேன் அதுக்கா உன்கூட ஈகோ பிரச்சனையா, சின்ன பொண்ணு, பதினேழு, பதினெட்டு வயதிருக்கும். இந்த வயதிலேயே காதல்னா கோபம்தான் வருது. அவங்கப்பா படிக்கிறதுக்கு அனுப்பினா, இவ இங்க வந்து காதல் பண்ணுறா. இப்பவாவது பரவாயில்லை, முன்னாடி எங்க போனாலும் பின்னாலையே வர்றது, வந்து என்னையே பார்த்துக்கிட்டிருக்கிறதுன்னு ஒரே ப்ராப்ளம். இப்ப திட்டினது பிறகு பரவாயில்லை, நான் அவளைப் பார்க்கிறது இல்லை, நல்லா நோட் பண்ணிக்கோ; நான்தான் அவளைப் பார்க்கிறதில்லை. அவள் என்பின்னாடி தான் சுத்துறான்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு அகிலாவைப் பார்த்தான். அவள் தலையைக் குனிந்திருந்தாள்.

"அப்ப உன் பிராப்ளம் அவ வயது, அவ படிப்பு, உன் கான்ஸன்டிரேஷன் அப்பிடித்தானே, அவளை உனக்கு பிடிக்கலை, அழகாயில்லை, எதிர்த்து பேசுறா இதுமாதிரியெல்லாம் ஒன்னுமில்லையே?"

"மோனா என்னயிது?" இது எங்கே போகிறது என்று பாதை தெரியாமல் குழம்பினான்.

"கேட்ட கேள்விக்கு பதில்"

"மேலோட்டமா பார்த்தா ஆமாம், ஆனா இந்தக் காரணங்களுக்காக எல்லாம் நான் அவளைக் காதலிக்க முடியாது. எனக்கு அந்த கான்ஸப்டிலேயே நம்பிக்கையில்லை."

"இங்கப்பாரு உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ சொன்ன இதையேத்தான் நான் அவகிட்ட சொன்னேன். முதல்ல ஒழுங்கா படி, இன்னும் இரண்டு மூணு வயசு ஆகட்டும். அவனைத் தொந்தரவு பண்ணாதே, அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு அப்பிடின்னு தான் சொன்னேன்." கட் அண்ட் ரைட்டாக அவள் சொன்னாள்.

"மோனா இது வீண் பேச்சு, நாளைக்கு இவளை விட அழகா ஒரு பொண்ணை பார்த்து நான் அவளைக் காதலிச்சா என்ன பண்ணுவ?" கேட்டுவிட்டு பயத்துடன் அகிலாவைப் பார்த்தான், அழுது தொலைக்கப் போகிறாளோ என்று. அப்படியொன்றும் நடக்கவில்லை.

"இங்கப் பாரு, நான் ஒன்னு சொல்லவா. நீ இவளை காதலிக்கிறன்னு சொல்லமாட்டேன், ஆனா இவளை உனக்கு ரொம்ப பிடித்திருக்கு. அதனாலத்தான் நீ இவளை இங்க வரவைச்சு என்கூட பேசவைச்சிருக்கே, நான் இவகிட்ட என்ன சொல்லுவேண்ணும் உனக்கு தெரியும். அது தான் உன் விருப்பமும். நீ வேலை வாங்கணும். அவளுக்கும் இருபதுக்கு மேல வயசாகணும். ஆனா உனக்கென்னன்னா, எங்க யாராவது மோகன் சின்ன பெண்ணை ஏமாத்திட்டான்னு சொல்லிடுவானோன்னு பயம். அதான் வீட்டுக்கு வரவைச்சு என்ன வச்சு பேசவைச்சு, உன் விருப்பத்தை சொல்லிட்ட, நானும் அம்மாவும் கனியும் பூஜையும் ஒரு கருவி உனக்கு."

"சரி நான் இப்ப என்ன பண்ணனுங்ற?" அப்படியொன்று அவன் மனதில் இல்லாவிட்டாலும் இருந்திருக்க முடியுமோ என்ற கேள்வி அவள் சொன்ன பிறகு வந்தது.

"ஒன்னும் பண்ணவேணாம், ஏற்கனவே இவ உன் முன்னாடி வர்றதில்லை, நான் சொல்லிட்டேன் இனிமே உனக்குத் தெரியாம கூட உன் பின்னாடி சுத்தமாட்டா; ஆனா ஒன்னு, நீ கனிமொழிகிட்டையோ, இல்லை என்கிட்டையோ பேசுற மாதிரி கூட வேணாம். சாதாரணமா ஒரு பெண்ணுகிட்ட பேசுற மாதிரி அவகிட்டையும் பேசு, முக்கியமா பயமுறுத்தாதே. என்ன புரியுதா" கண்டிப்புடன் சொன்னாள்.

"மோனா உன்கிட்ட பிரச்சனையை சால்வ் பண்ண சொன்னா, நீ இன்னும் பெரிசாக்குற?" உண்மையிலேயே புலம்பினான்.

"நீ ஏன் இப்பிடி நினைக்கிற, எப்பிடியிருந்தாலும் ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போற, அந்தப் பொண்ணு ஏன் இவளா இருக்கக்கூடாதுன்னு தான் கேட்கிறேன்."

"மோனா அது அவ்வளவு சுலபமில்லை, அது அய்யர் பெண்ணு, நைனாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். அது மட்டுமில்லாம எனக்கு அவளைப் பத்தி எதுவுமே தெரியாது." அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாதென்பது எவ்வளவு உண்மை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.

"அதைப் பத்தியெல்லாம் இப்பவே எதுக்கு நினைக்கிற, பிரச்சனைதான் சால்வ் பண்ணுவோம். நான் பேசின வரை உனக்கு ரொம்ப மேட்ச்சான பெண்ணு, அவளைப்பத்தி என்னல்லாம் தெரியணுமோ பேசித் தெரிஞ்சிக்கோ."

"ம்ம்ம்ஹூம், இது சரியாப் படலை. சரி இப்ப என்ன, எனக்கு வேலை கிடைச்சு, இவளுக்கு இன்னும் கொஞ்சம் வயசாகி, நான் கல்யாணத்த பத்தி யோசிக்கும் போதுதானே பிரச்சனையில்லை அதுவரைக்கும் என் மனசு மாறலைன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுவரைக்கும் இவ என்னை தொந்தரவு பண்ணாமலிருந்தால்."

அகிலா முகத்தில் ஒரு சாந்தமான புன்னகை அரும்பியது, காலையிலிருந்தே அவளை அவன் ஜீனியர் என்கிற விதத்தில் இல்லாமல் ஒரு தோழி என்று பின்னர் என்னைக் காதலிப்பவள் என்று பார்க்கத் தொடங்கியிருந்தான். அதுவரை அவன் கண்களில் படாத அவளுடைய பயம் கொள்ளவைக்காத அழகு அவனைக் கட்டிப்போடத் தொடங்கியது.

அதன் பிறகு அவன் அகிலா அழுது பார்த்ததே கிடையாது. இன்னொரு புது புரோஜக்ட் எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கல்லூரிக்கும் வரவேண்டும் ப்ராஜக்ட்டும் பண்ணனும், இதனால் நிறைய நேரம் ட்ராவலுக்கே செலவளிக்க விருப்பமில்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு வீடு எடுத்துக்கொண்டான். ஒரு பழைய கம்ப்யூட்டரும், இன்னொரு கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்து அவனும் சார்லசும் அந்தப் புரோஜக்ட்ல் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்சம் பெரிய புரோஜக்ட், வெற்றிகரமாக முடித்த புரோஜக்ட் ரெஃபரென்ஸுடன் சென்றதால் கிடைத்தது. இரண்டு மாசம் டெட்லைன் ஐம்பதாயிரம் ரூபாய். சார்லசுக்கு பதினைந்தாயிரம், அவனுக்கு முப்பந்தைந்தாயிரம் என்று டீல்.

பத்து நாள்களில் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரை விற்றுவிட்டு இன்னும் கொஞ்சம் பணம் போட்டு ஒரு லாப்டாப் வாங்கினான். புரோஜக்டுக்கு முக்கியமாக இருந்தது. கல்லூரியில் வகுப்புகள் சீரியஸாய் நடக்கத் தொடங்கியருந்த நேரம் அது. அன்றும் காலேஜ் முடிந்த மாலை நேரத்தில் லாப்டாப்பில் டாக்குமென்ட்ஸ் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அகிலா வந்து நின்றாள். மனம் ஒருபக்கம் அகிலாவைப் பார்க்க வேண்டும் என்று அரித்துக் கொண்டிருந்தாலும் அவனாய் அவளைப் பார்க்காமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

"ம்ம்ம் சொல்லு..."

"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்... அதான்!" அமைதியாகச் சொன்னாள், அகிலா என்றில்லாமல் பொதுவாய் யாருக்கும் பிறந்தநாள் என்றால் சின்னது முதல் பெரியது வரை ஏதாவது ஒரு பரிசு கொடுப்பது அவனது வழக்கம்.

"ரொம்ப சந்தோஷம், விஷ் யூ அ வெரி ஹாப்பி பர்த்டே, முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல, நான் ஏதாவது ப்ரஸென்டேஷன் வாங்கி வைத்திருப்பேனே?"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஒரு சின்ன பார்ட்டி. நீங்க, நான், கனி அக்கா மூணுபேரும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் வரீங்களா?"

"ம்ம்ம் போகலாமே, எப்ப?"

"இப்பவே..."

பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு வந்தார்கள்.

அவனும் கனிமொழியும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள அகிலா எதிரில் உட்கார்ந்தாள். புதுத்துணி போலிருந்தது அவள் அணிந்திருந்த ஊதா நிற சுடிதார். வழமையான அவள் நேர்த்தியுடன் தலையில் ஒரு மஞ்சள் ரோஜாப்பூ பூத்திருந்தது. நினைத்துக் கொண்டான், ‘எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்குமென்று இவளுக்குத் தெரியுமா’ என்று.

"ஆமா அகிலா உன்னை இப்பெல்லாம் பார்க்கவே முடியறதில்லை, முன்னமாதிரி தானா இல்லை, உண்மையிலேயே படிக்கிறியா?"

"இல்லை உண்மையிலேயே டைம் கிடைப்பதேயில்லை, நிறைய படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடிவதில்லை, காலேஜூக்கு வரீங்களான்னே தெரியலை" அவனைப் பார்க்க முடியாத வருத்தம் தெரிந்தது அகிலாவிடம்.

"ஆமாம் உண்மைதான், அண்ணே நிறைய சம்பாதிக்கிறீங்க ஆனா செலவு செய்து பார்க்கவேயில்லை, சரியான கஞ்சன் நீங்க." என்றாள் கனிமொழி.

"இல்லைம்மா நான் புரோஜக்ட் முடிஞ்சவுடனேயே ஒரு பார்ட்டி தரணும்னு ஆசை. அதுக்குள்ள இவ புகுந்து குட்டையைக் குழப்பிட்டா. அதான் முடியலை. இப்ப சுத்தமா டயமே இல்லை. ரொம்ப பிஸி. ஆமா ரெண்டுபேருக்குமே இந்த செமஸ்டர் சி லேங்குவேஜ் இல்லையா."

"ஆமா, எனக்கு எப்பொழுதையும் போல, ஆனா இவளுக்கு சிலபஸ் மாறியதால் இப்பவே." என்றால் கனிமொழி.

"யார் எடுக்குறா உங்களுக்கு, ஏதாவது புரியுதா?"

"மாணிக்கவாசகம் எடுக்கிறார், ஒரளவுக்கு புரியது, டவுட் கேட்கலாம்னா உங்களைக் காணோம். ஆளை பிடிக்கவே முடியறதில்லை." என்றாள் கனிமொழி.

"என்னாதிது, நான் தங்கியிருக்கிற வீடு தெரியுமில்லை, வரவேண்டியது தானே. ஆமா ரெண்டுபேரும் ஹாஸ்டலில் தானே இருக்கிறீங்க?"

"ஆமா இவளால ஹாஸ்டலில் தான் இருக்கிறோம். ஒரே பயம் அங்க வருவதற்கு, எங்க கடிச்சுடுவீங்களோன்னு? அதுவும் இவளோட மேட்டருக்கு பிறகு நாம பழகின மோகன் அண்ணனான்னு சந்தேகமா இருக்கு."

"இந்த வாரம் சனிக்கிழமை வாங்க, பார்க்கலாம். சீக்கிரமா படிங்கடி எனக்கு புரோஜக்ட்ல ஹெல்ப் பண்ணலாம்ல?"

"உங்களுக்கா? நாங்களா? என்ன விளையாட்டா. சரி எதுல பண்ணுவீங்க நீங்க புரோஜக்ட்." - அகிலா கேட்டாள் சுட்டித்தனமாய்.

"ஜாவாதான் வேறென்ன" பின்னர் கனிமொழி கைகழுவ சென்றிருந்த நேரம்.

“அகிலா எனக்கு உண்மையிலேயே வருத்தமாய் இருக்கு நீ இன்னிக்கு உனக்கு பிறந்தநாள்னு சொல்லியிருக்கலாம். உனக்கு எதுவும் கொடுக்க முடியலையே...” அதுதான் உண்மையில் அகிலாவிடம் அவன் மனம்விட்டு பேசிய முதல் வரிகளாகயிருக்கும். அவளிடம் அப்படி பேசியதே ஆச்சர்யத்தை அளித்திருக்க வேண்டும். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதையாவது அவளிடம் பேசவேண்டும் என்று மனம் அரித்தது.

“எனக்கு மஞ்சள் நிறம்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் மஞ்ச ரோஸ்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்” மோகனாவிற்கு அடுத்து தன் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களை சொல்லிக் கொண்டிருந்தான் அவளிடம்.

சிரித்தாள், “தெரியும். அன்னிக்கு உங்க வீட்டில் அக்கா சொன்னாங்க.” அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது கனிமொழி வந்தாள்.

“சரி நேரமாச்சு, கொஞ்சம் வேலையிருக்கு. வரேன் அப்புறம் பார்ப்போம்." சொல்லிவிட்டு அவர்களைப் பிரிந்தான்.

வெள்ளிக்கிழமை இரவு அவனுக்கு நிறைய வேலை இருந்தது, காலை நாலு மணி வரைக்கும் வேலை பார்த்ததால் ஒன்பது மணி வரைக்கும் தூங்கிக்கொண்டிருந்தான். காலிங்பெல் அடித்தது. திறந்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்... வா அகிலா, கனி வரலை."

"இல்லை, உடம்புக்கு சரியில்லை, பொம்பளங்க சமாச்சாரம், சொல்லிட்டமே அதான் பார்த்துட்டு வந்திரலாம்னு வந்தேன்"

"படிக்கிற ஐடியாவில் தானே வந்திருக்க?" என்னவோ கேட்கவேணும் போலிருந்ததால் கேட்டான்.

சிரித்தாள், "வேற எதுக்குன்னு நினைச்சீங்க?"

"இல்ல அதுக்குத்தான், சும்மா கேட்டேன். புக் வைச்சிருக்கிறியா."

"ம்ம்ம், பாலகுருசாமி புக் வைச்சிருக்கேன். உங்க கம்ப்யூட்டர்ல கம்பைலர் இருக்குள்ள?"

"ம்ம்ம் இருக்கு, சொல்லு எங்க ப்ராப்ளம்?"

"சரி ஒரு விஷயம், பாச்சுலர் ரூம் மாதிரியே இல்லையே, பொம்பளைங்க சுத்தம் செய்யுற ரூம் மாதிரியில்ல இருக்கு."

"ஏன் நாங்கல்லாம் சுத்தமா வைச்சிருக்க கூடாதா, சரி இரு குளிச்சிட்டு வந்திர்றேன், அதுவரைக்கும் வேண்டுமானால் கம்ப்யூட்டரை நோண்டிட்டு இரு." குளிக்காமல் ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு.

"சரி பாஸ்வேர்ட் சொல்லுங்க?"

"எங்க நீ சொல்லு பார்க்கலாம்?"

"செகுவாரா?"

"சரிதான் நீ சொன்னது; ஆனா இப்ப மாத்திட்டேன், அகிலாண்டேஸ்வரி தான் பாஸ்வேர்ட்" சொல்லிவிட்டு குளிக்கக் கிளம்பினான்.

.

குளித்துவிட்டு வந்து பார்த்தால், அவன் லேப்டாப்பை மடியில் வைத்து என்னமோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை சுத்த சைவம் அந்த லாப்டாப். சொல்லப்போனால் அதுவரை அவன் அக்காவைக் கூட தொடவிட்டதில்லை, ஆனால் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவன் இவளைச் சந்தித்த நாளில், சத்தியமாய் நினைக்கவில்லை, ஒரு நாள் இவள் அவன் ரூமில் தனியாக அவன் லாப்டாப்பை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிப்பாள் என்று.

"என்னங்க இது, ஒரு கேம் கூட இல்லை, வெறும் சாப்டுவேரா இருக்கு" விரக்தியாகக் கேட்டாள்

"நான் விளையாட கம்ப்யூட்டர் வாங்கவில்லைன்னு நினைக்கிறேன், சரி சிலபஸ் இருக்கா. நாம வரிசையா பார்ப்போமா." 

சொல்லப்போனால் அடுத்த ஐந்து மணிநேரம் அவளுக்கு சி லேங்குவேஜ் பற்றி அவள் தேர்வுக்கு தேவைப்படும் எல்லாமும் சொல்லிக் கொடுத்திருந்தான், அவளும் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தாள். பாடங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதும் அது மட்டுமல்லாமல் அவளுமாய் படிக்கத் துவங்கியிருந்ததும் அவள் புரிந்து கொண்ட வேகத்திலேயும் கேட்ட கேள்விகளிலும் அது தெரிந்தது. எங்கெல்லாம் உதாரணம் காட்ட முடியுமே அங்கெல்லாம் லேப்டாப்பில் உதாரணங்கள் எழுதிக்காட்டினான். அவனைப் பொறுத்தவரை கணிணி சம்பந்தப்பட்ட எந்தப் படிப்பும் ப்ராக்டிகலாக இருந்தால் தான் சுவைக்கும். கடைசியில் அவள் முகம் சுருங்குவது போல் இருந்தது உடனே,

"என்னா போர் அடிக்குதா?" அவள் ஆர்வம் மங்கி கண்கள் அலைபாய்ந்த பொழுது கேட்டான்.

"போர் எல்லாம் அடிக்கலை, பசிக்குது. நான் காலையில் இருந்து சாப்பிடலை சரி இங்க வந்தா உங்ககூட சாப்பிடலாம்னு பார்த்தா, எனக்கு சாப்பாடு போடாம சி சொல்லித்தந்து கொன்னுறுவீங்க போலிருக்கு, நல்லா சொன்னாரு வள்ளுவர், செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்னு. உங்கக்கூட வந்தா வயிற்றுக்கு உணவு கிடையாது போலிருக்கு, வெறும் செவிக்கு மட்டும் தானோ?" சிரித்தாள்.

"ஏய் சொல்லலாம்ல, சாரிம்மா! நானும் இன்னும் சாப்பிடலை. பசிக்கவேயில்லை, சரி உட்கார்ந்திரு, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்." அவளை அங்கேயே உட்கார வைத்துவிட்டு அருகில் இருந்த கடையொன்றில் சாப்பாடு வாங்கிவந்தான். பொறுமையாக குறைந்த அளவே சாப்பிட்டாள், அவள் சாப்பிடுவதற்கும் அவள் உடல் எடைக்குமான கேள்வி இதனால் இல்லாமல் போனது. 

நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், "சரி நான் வரலையின்னா, எப்ப சாப்பிடுவீங்க?"

"சில சமயம் சாப்பிடவேமாட்டேன், இராத்திரி எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா சாப்பிடுவேன். சரி படிப்போமா?"

"இல்ல தலைக்கு மேல ஒரே ப்ளென்சரா போய்க்கிட்டிருக்கு, வேற எதாச்சும் பேசுவோமே?"

"எதைப்பத்தி?"

"ஏன் வாழ்க்கையில 'சி'யையும், கம்ப்யூட்டரையும் தவிர வேறு ஒன்றும் இல்லையா?"

"சரி எதைப்பத்தி பேசலாம் நீயே சொல்லு?" சிரித்தபடியே கேட்டான்.

"வாழ்க்கையைப் பத்தி..." தெளிவாகச் சொன்னாள்.

"உனக்கு இன்னும் அந்த அளவுக்கு வயது வரலைன்னு நான் நினைக்கிறேன்." சீண்டினான்.

"இங்கப்பாருங்க, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வயசாகலையே தவிர எனக்கும் சில விஷயங்கள் தெரியும், எங்கம்மா இறந்தப்ப எனக்கு மூணுவயசு, அப்புறம் நானும் அப்பாவும் தான். நான் சமைக்க ஆரம்பிச்சப்ப வயசு எட்டு, அப்பாவை பார்க்க கஷ்டமா இருக்கும், ஆனா அவரு எனக்காகத்தான் வாழ்கிறார். அவருகிட்ட நான் இன்னிக்கு போய் நான் இப்பிடி மோகன்னு ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொன்னால். சத்தம் போடமாட்டார், உட்கார்ந்து யோசிப்பார். நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னா தப்பாயிருக்காதுன்னு நினைப்பார். உங்களைப் பத்தி விசாரிப்பார். பிடிச்சிருந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிவைப்பார். எனக்கும் எங்கப்பாவுக்கும் ஈகோ பிராப்பளம் கிடையாது; நான் நல்ல பையனையே பார்த்திருந்தாலும், அவருக்கு தெரியாம பண்ணிட்டேன்னு எகிறி குதிக்க. உங்களமாதிரியே அவரும் ஒரு நல்ல மனிதர்."

"சரி உங்கப்பா நல்ல மனிதராகவே இருக்கட்டும், நான் நல்ல பையன்னு நீ எப்படி கணக்கு போடலாம். நான் பெண்ணுங்க கூட பேசறதில்லை என்பதால் நல்ல பையனாதான் இருப்பேன்னு நினைக்கிறியா?" அவன் கண்களில் விளையாட்டுத்தனம் அவளுக்கும் தெரிந்திருக்கும். 

கேட்டதும் சிரித்தாள் பிறகு,

"தனியா ஒரு ரூம், தன்னைக் காதலிக்கும் பதினெட்டு வயது, சுமாரான அழகுள்ள ஒரு பொண்ணு, ஆனா உங்களால ஐந்து மணிநேரம் வேறு எதையும் பத்தி யோசிக்காம, உங்க பார்வை கூட மாறாம, சி சொல்லித்தர முடியும்னா நீங்க நல்ல பையன்தான். அது மட்டுமில்லாம நீங்க சிகரெட் குடிக்க மாட்டீங்க, தண்ணியடிக்க மாட்டீங்க, இதுவே போதும். நான் இரண்டு வருஷம் பொறுத்துக்கூட என் காதலைச் சொல்லியிருப்பேன். ஆனா ஒன்னுமே தெரியாத இந்தப் புள்ளையை வேறு யாராவது, எதையாவது காட்டி மயக்கிட்டா, அதனாலத்தான் நான் அவ்வளவு சீக்கிரம் சொன்னது. நீங்கத்தான் இப்படி, உங்கக்கா எமகாதகி, நான் நினைச்சதை எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா, 'இங்கப்பாரு அவன் உன்னை குழந்தைம்பான்; ஆனா அவன்தான் குழந்தை, கம்ப்யூட்டரையும், பேச்சுப்போட்டியையும் தவிர வேறு ஒன்னும் தெரியாது. உன்னைப் பார்த்தால் அவனுக்கு ஏத்த பெண்ணா இருக்கு, நான் அம்மாகிட்ட பேசுறேன். ஆண்டவன் தான் எங்க அப்பாகிட்ட பேசணும். அவனை பத்திரமா பார்த்துக்கோ' னு சொன்னாங்க அன்னிக்கே. நான் வேறு எதாவது சொல்லணுமா இதைப்பத்தி."

அவள் சொன்னதைப் பற்றி சிறிது நேரம் யோசித்திருப்பான், அவன் அக்கா அப்படிச் சொல்லியிருக்கக் கூடியவள் தான். அகிலாவை அவளுக்குப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் இத்தனை தூரம் பிடித்திருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அகிலாவைப் பற்றி அத்தனை தூரம் அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாததால் அவளுடைய முதிர்ச்சி தெரியாதது, அவனை அவ்வளவு சீக்கிரம் காதலிக்கத் தொடங்கியதால் அவன் அவளை வெறும் விடலையாகவே பார்த்தேன். ஆனால் அவள் அதற்குப் பின்னால் இருந்த காரணங்களை அடுக்கிய பொழுது அகிலா அப்படிச் செய்தது நியாயமாகவே பட்டதவனுக்கு. அவளைப் பற்றி இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

"சரி முதல் நாள் நான் உன்னை அடிச்சப்ப நீ என்ன நினைச்ச?"

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா, பேச்சுப்போட்டியில் நீங்க ஆரம்பிச்ச தமிழ் வாழ்த்துப் பாட்டு, முடிச்சப்ப சொன்ன சிலவரிகள்னு எல்லாமே நான் வழக்கமா சொல்றது. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, இதுல கூட ஒருத்தரோட ஒற்றுமையிருக்குமான்னு, ஆனா உங்களைப்பத்தி அன்னிக்கு சொன்னதுல கோபமாவீங்கன்னு நினைக்கலை. பேச்சுப்போட்டியில பேசுறவங்க பெரும்பாலும் இந்த மாதிரி எதிர்ப்புக்களைச் சந்திச்சிருப்பாங்க. ஒரு வேளை நான் - ஒரு பெண்ணு - உங்களை இப்படி சொன்னது தான் பிரச்சனைன்னு நினைச்சேன் அவ்வளவுதான்."

அவன் பேச்சை மாற்ற விரும்பினான், "சரி கனிமொழி இங்க வரவேண்டியது தானே, வேறு எதும் பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேன். அக்காவுக்கு கோபம், உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் முக்கியமா வந்தேன் பேசிட்டேன். உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே?"

"கோபமெல்லாம் ஒன்னுமில்லை, வந்தவுடனேயே இதை நீ சொல்லியிருக்கலாம், அவளுக்கும் சேர்த்து சி சொல்லித் தந்திருப்பேன். அவளுக்குச் சொந்தமா இல்லைன்னா நீ என்னை நெருங்கியிருக்கவே முடியாது. அதுதான் உண்மை." அவன் நேர்மையாகச் சொன்னான்.

"நல்லாவே தெரியும். இதுதான் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்ட், எனக்கு அக்கா முன்னாடி உங்ககிட்ட இப்பிடிப் பர்ஸனலாய்ப் பேசமுடியாது அதான். மத்தபடி அவங்களை தவிர்க்கணும்னுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது." அவள் கண்களில் உண்மை இருந்தது.

சிறிது நேரம் இருவரும் ஒன்றையும் பேசாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தெளிவும் முதிர்ச்சியும் இயல்பான அழகும் அவளை நோக்கி அவனை இழுக்கவே செய்தன. அத்தனை தைரியமாய் அவளால் அவன் முன்னால் தனியாக இருக்க முடிந்தது ஆச்சர்யத்தைக் கிளப்பியது அவளை வம்பிழுக்க நினைத்தவனாய்.

"அது இருக்கட்டும், நான் படிச்ச காதல் கதைகளில் எல்லாம் முத்தம் இல்லாத கதையே கிடையாது. நீயோ காதல்ங்கற, காதலிங்கிற, ஆனா அந்த விஷயத்தை பத்தி சத்தமே இல்லை?"

"சரி ரூட் மாறுது, நானே நல்ல புள்ளையை கிளப்பி விட்டுட்டேன் போலிருக்கு, நான் கிளம்புறேன்." அவள் அழகாய்ச் சிரித்தாள்.

"இங்கப்பாருங்க இங்கே கிளம்பி வரும் பொழுது நான் இன்றைக்குப் பொழுது இப்படித்தான் போகும் என்று கற்பனை செய்திருக்கவில்லை என்னதான் நல்லவராயிருந்தாலும் 18 வயதுப் பெண்ணொருத்தி பக்கத்தில் இருந்தால் சபலம் கிளம்பும் என்று நினைத்தேன். நானே கூட உங்களிடம் 'நீங்க என்னை எதுவும் செய்யலை' என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த முத்தம் பற்றிய பேச்சைக் கூட நீங்க கிளப்பியிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். நானாய்க் காதலித்து நானாய்ச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு தனியாய் வந்து உங்களைச் சீண்டினேன். சொல்லப்போனால் முத்தமென்ன நீங்க கேட்டால் கொடுக்காமல் மறைத்து எடுத்துச் செல்ல என்னிடம் எதுவுமே இல்லை. புரிஞ்சிக்கோங்க, ஆனால் வேண்டாம் ப்ளீஸ் இன்றைக்கு ஒரு அற்புதமான நாள் என்னைப் பொறுத்தவரை அப்படியே இருந்துட்டுப் போகட்டும் தப்பா நினைக்காதீங்க. முத்தம் அதை மாத்திடும்னு நினைக்கலை ஆனால் வேண்டாமே." கெஞ்சினாள்.

அவன் பதில் எதுவும் சொல்லலை. 

"நான் கிளம்புறேன்னு சொன்னேன், நீங்க பதில் சொல்லலைன்னா எனக்கு இதுதான் மனசிலே ஓடும். அதுனால ஏதாவது பேசுங்க."

விளையாட்டாய்த் தான் அவளிடம் முத்தம் கேட்டேன் அவளிடம் நான் மனமொன்றத் தொடங்கி நாட்களாகியிருக்காது. அவள் தருவாளா மாட்டாளா என்று நினைத்துக் கூட அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் என்னை உயர்த்தி வைத்திருந்த இடம் கொஞ்சம் அதிகம் என்று மனதிற்குப்பட்டது.

சிரித்தபடியே, "சரி ஒழிஞ்சிப் போ. முத்தம் தான் கொடுக்கலை. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்போ." 

"தன்யனானேன் பிரபு, கேளுங்க." என்றாள் மகிழ்ச்சியுடன்.

"ஆமாம் உன் சைஸுக்கு எல்லாம் பிரா தயாரிக்கிறாங்களா. என்ன ஸைஸ் உனக்கு" என்றான், கண்களை அவர் மார் மீது ஓட்டியபடி.

அவள் முகம் சிவந்தது அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் நான் கேட்ட கேள்வியை உணர்ந்ததும் கொஞ்சம் முறுவளித்தாள். 

"ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை கெட்டவனாக்கிக்காதீங்க..." என்று சொல்லிச் சிரித்தவள் "கேட்டுட்டீங்க சொல்றேன். வயசுக்கு வந்ததில் இருந்து அம்மா இல்லாததால் பக்கத்து வீட்டு மாமியைக் கூட்டிக்கொண்டு போய் நானா தான் வாங்கியிருக்கேன். என் ஸைஸுக்கும் பிரா கிடைக்கும். ஸைஸெல்லாம் சொல்லி பிரா வாங்கிறதில்ல நான், போனால் அவங்களே உடம்ப பார்த்து எடுத்து கொடுத்துடுவாங்க. இல்லை அன்டர் பஸ்ட் சைஸ், ஓவர் பஸ்ட் சைஸ் எல்லாம் தெரியணும்னா சொல்லுங்க அளந்து பார்த்துச் சொல்றேன்." சொல்லிவிட்டு கண்களைச் சிமிட்டிக் காட்டினாள்.

"ஏய் சும்மாத்தான் கேட்டேன், போய்ட்டு வா தாயே." என்றான் இரண்டு கைகளையும் கூப்பியபடி.

"கோபமில்லையே?"

"நிச்சயமாய் இல்லை." அவளை பக்கத்திலிருந்த ஆட்டோஸ்டாண்ட் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.

அடுத்த நாள் கல்லுரிக்கு போனதும் HOD வந்து,

"மோகன் நேத்திக்கு லெக்சரர் வராததால லேப் அட்டெண்டர, பர்ஸ்ட் இயர் கிளாசுக்கு அனுப்பினேன். அங்க ஒருத்தன் ரொம்ப பருப்புமாதிரி அவங்ககிட்ட பண்ணியிருக்கான். புதுபையன் கொஞ்சம் படிச்சவன் போலிருக்கு. நான் நேரடியா தலையிட விரும்பலை. நீ கொஞ்சம் இன்னிக்கு கிளாசுக்குப் போய் அவனை தட்டிவையேன்."

அவரே சொன்னதுக்கு பிறகு போகலைன்னா எப்பிடி?

"பசங்களா, இன்னிக்கு லெக்சரர் வரலை. அதான் நான் வந்திருக்கேன். ஒரு மணிநேரம் ஜாலியா ஏதாவது பேசலாம். என்ன பேசலாம், ஏதாவது விளையாடலாம்னாலும் விளையாடலாம்."

சொல்லிமுடிந்ததும் அந்தப் பையன் தான் எழுந்தான்.

"எக்ஸ்கயூஸ் மீ, நாங்க இங்க படிக்க வந்திருக்கோம். விளையாட இல்லை, நாலு நாளா லெக்சரர் வரலை. எங்க படிப்புத்தான் வீணாகுது. நேத்திக்கு லேப் அட்டண்டர் வந்தாங்க, அதுகூட பரவாயில்லை, இன்னிக்கு ஒரு ஸீனியர் ஸ்டுடண்ட் வந்திருக்கீங்க. என்ன நடக்குதேன்னே புரியலை. நான் உங்களைத் தப்பா நினைக்கலை, இந்த ஒரு மணிநேரமும் வேஸ்ட்" சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்ததும். சரியா மாட்டிக்கிட்ட மகனேன்னு நினைத்துக்கொண்டவனாய், "ஐயோ, சூப்பர் தம்பி உங்க பேரு என்ன சொல்லமுடியுமா?" கேட்டான்.

"விஸ்வநாதன்..."

"விசு, எனக்கும் இதுதான் பிராப்ளம். எனக்கு விளையாடவோ, சும்மா ஜாலியா இருக்கவே பிடிக்கவே பிடிக்காது. ஃபர்ஸ்ட் இயர் பையன்கள் சீரியஸா இருக்கமாட்டாங்கன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். சொல்லுங்க இந்த ஒரு மணிநேரம் உபயோகமா போகணும்னா என்ன பண்ணலாம்."

"எது வேண்டுமானாலும் ஆனால் உபயோகமாய்!"

"சரி புரோஜக்ட் பத்தி பேசலாம், நாம படிக்கிறதே அதுக்குத்தானே," சொல்லிவிட்டு புரோஜக்ட் பத்தி எல்லாவற்றையும் சொன்னான். அப்பப்ப அவனையும் எழுப்பி ஒரு கருத்தைக் கேட்டு அவன் சரியான கருத்தே சொல்லியிருந்தாலும் இல்லையென்றும் அவனை மட்டம் தட்டியும் பேசினான். சிலசமயம் அவன் சொன்ன கருத்து எல்லோருக்குமே முரணாக இருந்ததால் மற்ற மாணவர்களிடமும் கேட்டு அவனை முட்டாளாக்கினான். முடிவில் அவன் அப்பொழுது செய்துகொண்டிருக்கும் புரோஜக்ட் பத்தி சொல்லி கையில் வைத்திருந்த லாப்டாப்பில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டினான்.

ஒரு மணிநேரம் முடிந்திருக்கும் அவனை எழுப்பி, "உபயோகமாக இருந்ததா?"

"ம்ம்ம், மிகவும் உபயோகமாக இருந்தது!"

"தெரியுமா, நான் இந்த ஒரு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்தில் புரோஜக்ட் பண்ணியிருந்தால் சம்பாதித்து இருப்பேன். பரவாயில்லை இந்தப் பையனுக்காக இல்லை. மற்ற மாணவர்களுக்காவும்தான் நான் சொன்னது. அதானால் சந்தோஷம்." சொல்லிவிட்டு வகுப்பறைக்கு வந்துவிட்டான்.

மதியம் கேன்டீனில் அவன் உட்கார்ந்திருக்கும் பொழுது அங்கு வந்தனர் அகிலாவும் கனிமொழியும்.

"அண்ணே, இன்னிக்கு ஜூனியர் ஒருத்தனை போட்டு வாங்கிட்டீங்களாமே?"

"ஆமாங்கா அவன் அழாத குறைதான். எனக்கு ஆச்சர்யம் நம்மாளுக்கு இவ்வளவு தெரியுமான்னு, சும்மா பிசிறு கிளப்பிட்டார். நேத்திக்கு அவர் கேட்டதுக்கும் அதுக்கும், இவர் பேசி முடித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா உண்மையிலே நானே பயந்திட்டேன்."

"இல்லை கனி, லேப் அட்டண்டரை தப்பா பேசியிருக்கான். HOD புலம்புறார். அதான் என்னை விட்டு அடக்கச் சொன்னார்."

"அப்பிடியா, வேணும்னே பழிவாங்குனதா இது. நான் அப்பவே நினைச்சேன். என்னடா இது இப்படி நடந்துக்கிற ஆளில்லையேன்னு. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதையிருக்கா?" - அகிலா.

"சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு."

"அண்ணே என்ன இது, நான் இங்க இருக்கேன் மறந்திட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கீங்க." கனிமொழி வேண்டுமென்றே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.

.

அதற்குப் பிறகு அவனுக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது, கிளெயண்ட் இடம் போய், ரெக்வெய்ர்மெண்ட் வாங்கி வந்து, அவர்களுக்கு அந்தப் ப்ரொஜக்டை எப்படிச் செய்யப்போகிறோம்னு டிஸைன் அனுப்பி பின்னர் அவன் அதில் கேட்ட சந்தேகத்தை தீர்த்து இன்னொரு ட்ராஃப்ட் அனுப்பி என்று புரோஜக்ட் தலைக்கு மேல் போய்க்கொண்டிருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது, அந்த நாட்களில் அவனும் சார்லசும் கல்லூரி சென்றுவந்த பிறகு இரவு ஐந்து, ஆறு மணிநேரம் தினமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உணவை பற்றி கவலைப்படாத நாட்கள் அவை. அகிலாவிற்கும் கனிமொழிக்கும் கல்லூரி வேலை அதிகம் இருந்ததால் பல நாட்கள் பார்க்கக்கூட முடியாது. சில நாட்கள் பார்த்தாலும் ஹாய், ஹலோ சொல்லத்தான் நேரம் இருக்கும், வெகுசில நாட்கள் தான் அவன் அகிலாவிடம் கூட தனிப்பட்ட முறையில் பேசியிருந்தான். 

சரியாக உணவு உட்கொள்ளாத காரணத்தால் மெலியத் தொடங்கியிருந்தான், கண்கள் உள்ளே சென்றுவிட்டதாக சனிக்கிழமை பார்க்க வந்திருந்த அவனுடைய அம்மாவும் அக்காவும் சொல்லியிருந்தார்கள். திங்கட்கிழமை மதிய உணவுவேளையில் அவனும் சார்லசும் கிளாசில் உட்கார்ந்து புரோஜக்ட் டிசைன் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சார்லஸ் அந்த வாரம் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு அதற்கு உதாரணங்களை காட்டிக்கொண்டிருந்தான். கனிமொழியும், அகிலாவும் அங்கு வந்தார்கள்.

அகிலா வேகமா அவனருகில் வந்து லாப்டாப்பை மூடி கையில் எடுத்துக் கொண்டாள்.

"ஏய் என்னாடி பண்ணுற?" மெதுவாகக் கத்தினான்.

"ஒன்னும் பேசாதீங்கண்ணே, நேத்திக்கு அம்மாவும் அக்காவும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தார்கள். அம்மா ஒரே அழுகை, உங்களை அப்படிப் பார்க்கவே முடியலையாம். என்னைத்தான் திட்டினார்கள். நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்தானே. அவன் சாப்பிடுறதேயில்லை, கேட்கிறதில்லையான்னு?" இது கனிமொழி.

"உங்கக்கா என்கிட்ட வந்து, என்னாடி அவனை காதலிக்கிறேன்னு சொன்னே, அவனோ லூசு மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கான். நீ அவனை தினமும் பார்க்கிறியான்னு கேட்கிறாங்க. நான் என்னத்த சொல்றது, நான் உங்களை பார்த்தே பத்து நாள் இருக்கும். சார்லஸ் கூட வண்டியில் வறீங்க, காலேஜ் முடிஞ்சதும் போயிர்றீங்க. இனிமே உங்க இரண்டு பேருக்கும் மதியம் சாப்பாடு எங்ககூடத்தான்." அவளிடம் கவலை தெரிந்தது.

"சொல்லியாச்சுல்ல, கொடு அதை. உங்ககூட சாப்பிட்டா தப்பா நினைக்காமாட்டாங்களா. லூசுங்களா"

"சரி எங்ககூட சாப்பிட வேண்டாம், நான் கேன்டீனில் சொல்லிடுறேன் சாப்பாட்டுக்கு நீங்க சாப்பிடலைன்னா வந்து லாப்டாப்பை தூக்கிட்டு போயிருவேன், சரி இப்ப போய் சாப்பிட்டு வந்து வாங்கிக்கங்க." லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு போயேவிட்டாள்.

ஆனால் சிறிது நாள்களில் எங்களுக்கு எல்லா ரெக்வெய்ர்மண்டுகளும் வந்து சேர்ந்துவிட்டது, டிசைனும் முழுதாய் முடிந்திருந்தது. இனிமேல் வெறும் டெவலப்மெண்ட் மட்டும் தான் மீதமிருந்தது. அதனால் மூச்சு வாங்க முடிந்ததால் தினமும் அவனும் சார்லசும் சாப்பிடத்தொடங்கியிருந்தார்கள். செங்குட்டுவன் சார் கூப்பிடுறதா சொல்லி அட்டெண்டர் வந்து சொன்னார். போய்ப் பார்த்தேன்.

"மோகன், பார்ட் பெஸ்ட்க்கு அழைப்பு வந்தாச்சு, சேர்மன் உன்னைக் கூப்பிட்டு கொடுக்கச்சொன்னார். நான் அவரிடம் சொல்லிவிட்டேன் நீ கொஞ்சம் பிஸியா இருக்கன்னு இந்த வருஷம் வேறு யாரையாவது வைத்து செஞ்சுக்கலாம்ன்னு. ஆனால் அவருக்கு இதில கொஞ்சம் கோபம். அதனால நீ சின்னதா ஏதாச்சும் பண்ணிக் கொடுத்துறேன். ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை. எப்பிடியிருந்தாலும் எலொக்கேஷன்ல நீதான் வருவ. என்ன?" அவரிடம் சுயபச்சாதாபம் மேலிட்டது.

"சார் பரவாயில்லை, நான் நாடகம் பண்ணித்தரேன், ஆனா நான் இந்த வருடம் பேசலை, வேறு யாரையாவது பேசவைக்கலாம்."

"யாராவது மனசில் இருக்காங்களா?" பெரும்பாலும் அவனை மறுக்கமாட்டார் என்பதால் கேட்டார்.

"அதெல்லாம் இல்லை சார், காம்படீஷன் நடத்துங்க, ஜெயிக்கிறவங்க கலந்துக்கிட்டும்." அகிலா மனதில் இருந்தாலும் இதுதான் சரிவரும் என்று சொல்லியிருந்தான்.

"அப்ப ஒரு ப்ரைஸ் போயிருச்சு, நாடகத்துக்கு கிடைக்குமா?" அவர் முகத்திலேயே அந்தக் கேள்வி இருந்தது.

"அப்படியெல்லாம் இல்லை சார், பேச்சுலயும் நான் வாங்க வைக்கிறேன். இந்த வருஷம் நாடகம் நமக்குத்தான், சார் அப்ப நான் ஆரம்பிக்கிறேன். ரிகர்ஸல் எப்ப பார்க்கிறீங்க."

"ரிகர்ஸல் எல்லாம் வேண்டாம், உனக்கு நம்பிக்கையிருந்தா போதும், பேச்சுப்போட்டிக்கு நீயே ஆளை செலக்ட் பண்ணிரு" தட்டிக்கழிக்கப் பார்த்தார். 

"இல்லை சார், அது நல்லாயிருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை நடத்தி நீங்களே செலக்ட் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நேராக முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தான். பேசுவேன்னு சொன்ன பையனை செங்குட்டுவனை பார்க்கச் சொல்லிவிட்டு கனிமொழியையும் அகிலாவையும் கேன்டீனுக்கு கூப்பிட்டான்.

"அகிலா, இந்த வருஷம் பேச்சுப்போட்டியில் நான் கலந்துக்கலைன்னு சொல்லிட்டேன். அதனால இந்த சனிக்கிழமை காலேஜில் ஒரு போட்டியிருக்கும். ஜெயிச்சா நீ கலந்துக்கலாம்"

"நான் கலந்துக்கலை..." தலையைக் குனிந்தபடியே சொன்னாள்.

"ஏன்?"

"கலந்துக்கலைன்னா கலந்துக்கலை, இதுக்கு என்ன காரணம் சொல்ல?" காரணம் அவள் முகத்தில் தெரிந்தது.

"உதை வாங்குவ, உனக்காகத்தான் நான் பேசலைன்னு சொன்னேன், இப்ப நீ இப்பிடி சொன்னாயெப்படி?" கேட்டேன்.

"தெரியும் எனக்கு, அதனாலத்தான் சொல்றேன் நீங்களே கலந்துக்கோங்க, நான் கலந்துக்கிட்டாலும் தோத்திடுவேன்." அவளிடம் பயம் தெரிந்தது.

"அப்பிடியெல்லாம் உன்ன தோக்க விடுவேனா, நான் எழுதி தரேன நீ போய் பேசு. அப்புறம் ஒரு நாடகம் நானும் கனிமொழியும் இன்னும் கொஞ்சம் பேர், தேவையிருந்தா நீயும். என்ன கனிமொழி?"

"அண்ணே, இதுக்கு முன்னாடி யாரும் வரமாட்டாங்க அதனால நான் நடிச்சேன். இப்பத்தான் இவ நடிப்பாளே இருந்தும் நான் நடிக்கணுமா?" கனிமொழி அகிலாவிற்காகப் பேசினாள்.

"இங்கபாரு இதுல கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணு வேணும், அதுக்கு நீதான் சரியாயிருப்ப. அதுவும் இல்லாம இந்த நாடகத்தில் பெண்களுக்கு காலம் காலமா நடக்கும் கொடுமைகளைக் காட்ட வேண்டியிருக்கும், சில இடத்தில் பெண் கேரக்டரை அடிக்கிற மாதிரி கதையிருக்கும்..." முடிக்காமல் நழுவினான்.

"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இவளை அடிக்க மாட்டீங்க, என்னை அடிப்பீங்க அப்பிடித்தானே?" கனிமொழி சீண்டினாள்.

"ஏம்மா ஏறுக்குமாறா பேசுனா எப்படி, பதில்தான் வேணும்னா, ஆமாம்னு வைச்சுக்கோயேன்." சொல்லி விட்டு அகிலாவைப் பார்த்தான், அவளுக்கு இதில் விருப்பம் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் அவன் முடிவை மாற்றுவதாக இல்லை. கடைசியில் நாடகத்திலும் அவள்தான் நடித்தாள்.

அடுத்த நாள், கனிமொழி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"என்னம்மா?"

"நான் நடிக்கலை அந்த நாடகத்தில்?"

"ஏன் என்னாச்சு?"

"நேத்திக்கு பூரா அகிலா மூஞ்சிய தூக்கிவச்சுகிட்டு இருந்தா, நான் அவளை டிஃபண்ட் பண்ணலையாம். நான் சொன்னா நீங்க கேப்பீங்களாம். ஆனா நான் சொல்லலைன்னு சொல்லிட்டு அதுக்கு பிறகு என்கூட பேசவேயில்லை. எங்க இரண்டுபேருக்கு இடையில் சண்டை மூட்டி விடாதீங்கண்ணே. அவளே நடிக்கட்டும்." புலம்பினாள்.

"அப்பிடியா, சரி அவளே நடிக்கட்டும். ஆனால் நான் கதையை மாத்திருறேன். சீதை, திரௌபதி, இவங்களை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் வித்தியாசமா காட்டி, பெண்ணுங்களை தெய்வமா பாக்காதீங்க, பெண்ணா பாருங்க அதுபோறும்னு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப அதை மாத்திவிட்டு சுதந்திர போராட்டத்த வித்தியாசமா காட்டப்போறேன். நீ அவக்கிட்டையும் இதைச் சொல்லிறு."

கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் அவள் தான் ஜெயித்தாள். அவர்கள், குமரனையும், கப்பலோட்டிய தமிழனையும் வித்தியாசமாகக் காட்டி நாடகம் போட்டோம் - பக்கத்தில் கொடி பிடிக்கிற கதாப்பாத்திரம் அகிலாவுக்கு. அவளுக்கு முதலில் கோபம்தான். பின்னர் நடித்துக் கொடுத்தாள். அவளுக்கு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், நாடகத்திற்கு அவர்களுக்கு முதல் பரிசும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கொஞ்சம் அவளுடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் எப்பொழுதும் சுற்றி மூன்று நான்கு பேர் நின்று கொண்டே இருந்ததால் அவ்வளவு பர்ஸனலாய் பேசி முடிந்திருக்கவில்லை அவனுக்கு.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்வது சிரமமானது. மோகன் புரோஜக்டிலும் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம் அது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இருவரும் வருவார்கள். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். செமஸ்டர் பரிட்சை வந்தது, மிகவும் கஷ்டமான காலங்கள். ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. எக்ஸாமுக்குப் படிக்கவும் வேண்டும் ப்ராஜக்ட் வேலையும் செய்ய வேண்டும். எக்ஸாம் ஒருவழியாக முடிந்தது. ஒருநாள் கனிமொழியும், அகிலாவும் வந்தார்கள்.

"நாங்கள் ஊருக்குப் போகிறோம், நீங்க வரீங்களா?" என்று கேட்டாள் கனிமொழி. அகிலா முகத்தில் நான் வரமாட்டேன் என்று தெரிந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

"உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாதவனா நான், ஊர் சுத்துவதற்கு? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டுவாங்க" சொன்னேன்.

"நீங்க வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க, நாங்க போய்ட்டு வர்றோம்" - இருவரும் பழிப்பு வேறு காட்டிவிட்டுப் போனார்கள்.

பதினைந்து நாள் விடுமுறை, அவனுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. செதுக்கிச் செதுக்கி அவனும் சார்லசும் அந்த புரோஜக்டை முடித்தார்கள். நாள்களும் முடிந்திருந்தது. நாளை கல்லூரி தொடங்கும் நாள். சார்லஸ் வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். அவன் மேனுவல் டெஸ்டிங் மற்றும் சில டெஸ்டிங்க டூல் எல்லாம் வைத்து எல்லாம் ஒழுங்காப் போகுதான்னு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மணி காலை பதினொன்று இருக்கும். பசித்தது. எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாமேன்னு நினைத்து வெளியே கிளம்பினான். அகிலா வந்து கொண்டிருந்தாள், சுடிதார் அணிந்திருந்தாள் இப்பொழுதுகளில் முளைத்திருக்கும் மஞ்சள் ரோஜாவும் இருந்தது கண்களில் களைப்பு தெரிந்தது.

"என்னாடி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா?"

"ம்ம்ம், முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட்டீங்களா?"

"அதுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!"

"நான் நினைச்சேன், அதனாலத்தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன், சாப்பிடுங்க. எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு. சரி உங்களை பார்த்துட்டு ஹாஸ்டல் போகலாம்னு வந்தேன். ம்ஹூம் முடியலை. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சாயந்திரமா எழுப்பிவிடுங்க. என்ன?"

"சரி தூங்கு, கனிமொழி எங்க?"

"நான் வீட்டில் இருந்து நேரா இங்க வந்திட்டேன். அக்கா வீட்டுக்கு போயிருக்கு; நாளைக்கு வரும். புரோஜக்ட் முடிஞ்சிருச்சா?"

"சூப்பரா முடிஞ்சிருச்சு, பார்க்கிறியா?"

"ஆமாம் அதைவிட்டா வேற வேலையில்லை பாருங்க, உங்களைமாதிரி," சொல்லிவிட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள்.

அவன் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள டெஸ்டிங் பண்ணிக் கொண்டிருந்தான்.

"என்னங்க மணியென்ன, ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு?"

"மணி பத்தரை" சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தான்.

"என்னங்க இது, பத்தரையா நான் எப்படி ஹாஸ்டல் போறது? நான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்ல?"

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..."

அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை.

.

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..." சொல்லிவிட்டு அவன் முறுவளித்தான்.

மெதுவாய் சோம்பல் கலைத்தபின் அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தபடியே “நான் தூங்கிக் கொண்டிருந்தது தான் காரணமா இல்லை வேறதெவும் இருக்கா?” அவளும் சிரித்தாள். அவள் கண்களில் அன்றைக்கு ஹாஸ்டலுக்குப் போக முடியாது, மீண்டும் கனிமொழி வீட்டிற்கும் போக முடியாது என்கிற பயம் தெரியவில்லை விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. அவள் அறைக்குள் வந்த நேரத்தை வைத்து அவள் அங்கே இரவு தங்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இரவு அவனுடன் தங்குவதாய் இருந்தால் அதற்கான சாதக பாதகங்களையும் அவள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும், அந்த நினைப்பே அவனுக்கு அன்றைய இரவுப்பொழுது ஏற்படுத்தப்போகும் சந்தர்ப்பங்களை விளக்கியது.

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, “வேறென்ன காரணம் இருக்க முடியும் அகிலா.” என்றேன்.

அவள் முகத்திலிருந்த சிரிப்பு விலகவேயில்லை, கொஞ்சமாய் சிவக்கத்தொடங்கியிருந்தது அவள் முகம் “அப்படின்னா எனக்கொன்னும் பிரச்சனையில்லை. ஆனால் பூனை இந்தக் கட்டில் பக்கம் மட்டும் வரக்கூடாது.” என்றாள். கீழே உட்கார்ந்து லாப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து போய் அவள் கால்மாட்டில் அமர்ந்தான். இடது கை ரொம்பவும் பழக்கப்பட்டது போல் அவள் பாதங்களை அமுக்கிவிடத் தொடங்கியது அம்மாவிற்கு அமுக்கிவிட்ட பழக்கம். பாதத்தில் இருந்து தொடங்கினான். முதலில் தடுப்பதற்காய் எழுத்தொடங்கியவளை வலது கையால் தள்ளிப் படுக்கவைத்தேன். பஸ்ஸில் வந்த களைப்பு அவள் கால்கள், அவன் கைபேச்சுக் கேட்கத் தொடங்கியது. அவள் வைத்தக்கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் மிகவும் மிருதுவாய் இருந்தது அவன் கைகளுக்கும் அவள் கால்களுக்கும் இடையில் அவள் சுடிதார் பாண்ட் இருந்த பொழுதும் அவனால் உணர முடிந்தது. முட்டிக்கு மேல் செல்லாமல் இரண்டு கால்களையும் மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினான். 

“உங்க அப்பா எப்படியிருக்காரு?” அதுவரை அவளாய்ச் சொல்லாமல் அவளுடைய அப்பாவைப் பற்றி அவன் கேட்டதில்லை. அந்த ஆச்சர்யம் அவள் முகத்தில் தெரிந்தது. 

“நல்லாயிருக்காரு உங்களைப்பத்தி லேசா சொல்லி வைச்சிருக்கேன். அப்படியா அப்படியான்னு கேட்டுகிட்டாரு.” சொன்னாள்.

“ஊரெல்லாம் எப்படியிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பியே ஊரில்?” கேட்டான் அப்படியிருக்கக் கூடாது என்று வேண்டியபடியே.

“ஏண்டா போனோம்னு ஆயிடுச்சி, அப்பாவுக்காகத்தானேன்னு மனதை அடக்கிக்கிட்டேன்” ஏன் என்பது போல் பார்த்தான். “இங்கையாவது உங்களை பார்க்க முடியாட்டாலும் பக்கத்தில் தான இருக்கிறோம் வேணும்னா பார்த்துக்கலாம்னு நினைப்பேன். அங்க அப்படியில்லை உங்களைப் பார்க்காமல் ரொம்பக் கஷ்டமாயிருந்துச்சு. பல்லக் கடிச்சிக்கிட்டு பதினைஞ்சு நாள் பொறுத்துக்கிட்டேன். எதைப்பார்த்தாலும் உங்க ஞாபகம் தான் வரும். உங்களுக்கு இந்தப் பதினைஞ்சு நாளில் என் ஞாபகம் வந்ததா?” அபாயமான ஒரு கேள்வியைக் கேட்டாள்.

உண்மையில் அவளைப் பற்றிய நினைப்பு அவனுக்கு அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருந்தது. 

“வந்தது அகிலா, ப்ராஜக்டில் பிஸியா இருந்ததால அவ்வளவு மிஸ் பண்ணினேன்னு சொல்ல முடியாட்டாலும் கொஞ்சம் மிஸ் செய்தேன் தான்.” உண்மையை உளறிக்கொட்டினான்.

அவள் சொன்னாள், “நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்னு. இந்த இரவுக்காக நீங்க மாறலைங்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க நினைப்பு என்னைப் பாடாப்படுத்திருச்சு. கண்ணை மூடி தூங்கினா கனவு முழுக்க நீங்க தான். எங்க ஊரு எங்க அப்பால்லாம் இருக்காரு ஆனால் நீங்களும் எங்கிருந்தோ வர்றீங்க முத்தம் கேட்கிறீங்க. இது மாதிரியே தான் கனவு, இழவு அன்னிக்கு முத்தம் கொடுத்தே தொலைஞ்சிருக்கலாம்னு இருந்தது.” கொஞ்சம் நிறுத்தினாள் பின்னர், “இப்ப பஸ்ஸுல வர்றப்ப கூட அப்படித்தான் ஆனால் அதில் முத்தத்தில் நிக்கலை. சட்டுன்னு முத்தத்தில் ஆரம்பிச்சு என் உடம்பெல்லாம் உங்க கை நகறுது நான் தட்டிவிடுறேன்னு நினைச்சு பக்கத்தில் இருக்கிற அம்மா கையைப் பிடிச்சு உதற்றேன் பஸ்ஸில். ஒரே காமடியாப் போச்சு.” அவள் கனவு அவனுக்கு ஊக்கத்தை அளித்தாலும் தானாய்த் தொடங்காமல் இருந்தான் அவளை வற்புறுத்தக்கூடாது என்று நினைத்து அதுவும் அவள் அவன் கேட்டால் எதையும் கொடுப்பாள் என்று சொன்ன பிறகு இது சாதாரணமாய் இயல்பாய் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

“அப்ப அந்த முத்தத்த கொடுத்துத்தான் தொலையேன்.” வேண்டினான். இந்த முறை அவள் மறுப்பொன்றும் சொல்லவில்லை கால்களை அவன் மடியில் இருந்து விடுவித்துக்கொண்டு, அருகில் வந்து அவன் கன்னங்களை கைகளால் பிடித்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தாள், முடித்த பொழுது “இன்னொன்னு கொடேன்” என்றான். இன்னொன்று கொடுத்தவளிடம் “நல்லாயிருக்கு, இன்னொன்னு கொடு” என்றான். இந்த முறை அவள் உதடுகளைப் பிரிக்காமல் சிறிது நேரம் நீண்டிருந்தாள். அவன் வலது கை அதுவாய் அவள் மார்புகளை நோக்கி நகர்ந்தது, அது வரை அவள் துப்பட்டாவிற்குள் மறைத்து வைத்திருந்த இரட்டையர்களின் அளவு கைகளில் தெரிந்தது. உதடுகளைப் பிரிக்கும் வரை அவள் என் கைகளைத் தவிர்க்கவில்லை உதடும் மார்பும் ஒரே சமயத்தில் பிரிந்தது. என்னுடையது ஏதோ ஒன்றை என்னிடம் இருந்து பிரித்து எடுத்துச்செல்வதைப் போலிருந்தது அந்தச் செயல். கட்டிலில் சற்று தூரத்தில் சென்று உட்கார்ந்து “போதுமா?” என்றாள். நான் இன்னமும் அவளுடைய மென்மையான உதடுகளை என் உதட்டிலும் அவளுடைய சாந்தமான மார்பை என் கைகளிலும் உணர்ந்து கொண்டிருந்தேன், நான் அடைந்த பரவசம் என் கண்களில் தெரிந்திருக்க வேண்டும். 

அவன் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “அவ்வளவு தானா?” என்றான் கண்கள் நிறைந்த ஆசைகளுடன். “வேறென்ன வேணும் பாப்பாவுக்கு எனக்கு அவ்வளவு தானே தெரியும். வேறெதுவும் வேணும்னா சி சொல்லிக்கொடுத்த மாதிரி சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு.” அவள் குரலும் அந்தச் சூழ்நிலையும் சேர்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு பெரும் மயக்கத்தை ஏற்படுத்தியது. அவளிடம் கம்பீரமான வெட்கம் இருந்தது, அவள் வேண்டாம் என்று சொன்னாள் விலகிவிடுவான் என்கிற தெளிவு அவளுக்கு அந்த துணிச்சலை அளித்திருக்கவேண்டும். ப்ராஜக்ட் அவனை அவள் பற்றிய சிந்தனையிலிருந்து இயல்பாக விடுவித்திருந்தது, ஆனால் பிரிவும் அவன் மீது கொண்டிருந்த ஆழமான காதலும், இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த பேருந்து பயணமும் அவளை மனதளவில் தயார்ப்படுத்தியிருந்தது. அவளை இழுத்து மடியில் போட்டான். ஆட்டுக்குட்டியைப் போல் மடியில் படுத்திருந்தாள். முதலில் கண்களை மூடியபடியே இருந்தாள், பின்னர் திறந்த கண்களில் மோகம் தெரிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு அவள் முதுகுவழி கைவிட்டு ஹூக்கைக் கழட்டினேன். அவள் முதுகை ஒருமுறை விரித்துப்பார்த்து, “பாப்பாவிற்கு இதெல்லாம் தெரியுதே...” அவள் கண்கள் இன்னும் விரிந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்துட்டேன், எங்க ஊர் தையக்காரம்மா சொன்னாங்க. என் சைஸ் 30B யாம். அவ்வளவுதான்பா அதுக்கு மேல வேணும்னா வேற யாரையாவது தான். தேடணும்”. வேறொரு சமயமாயிருந்தால் அவள் சொன்னது இன்னொரு அடல்ஸ் ஒன்லி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கும். ஆனால் சீறும் மூச்சுடன் அவன் மடியில் படுத்திருந்த அவள் மேல் விரல் ஓடிக்கொண்டிருந்த பொழுதில் பதில் சொல்ல வாய்வரவில்லை. அந்த அறையில் மெல்லியதாய் ஒளி சமையலறையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அவன் ஏற்கனவே அவிழ்ந்து கிடந்த பூமியில் ஆராய்ச்சியாளனின் தேர்ச்சியுடன் தேடுதலைத் தொடங்கியிருந்தான். தேடுதலுடனேயே அவர்கள் உரையாடல் நீண்டது. தேடுதல் முடிவடைந்த பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவன் தியரியை அதுவரை ஒழுங்காக படித்திருந்தான் என்று நிறுவியது.

காலையில், "யேய், காலேஜ் வரலை?" அவளிடம் கேட்டான்.

"நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க"

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்ன புரோஜக்ட் செய்யப் போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததில் மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சிறியதாய் ஒரு குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு அகிலா தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய வெளிர் மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் அவன் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்ப்பது.

"தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது." அகிலா முகத்திலும் வெட்கம் படர்ந்திருந்தது.

"ஏய் என்னன்னு கூப்பிட்ட?"

"தாஸ்னு... ஏன்?"

"ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து..."

"இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்..."

"ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்..."

"பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்..., இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க."

"நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்."

நாலே காலுக்கு அவள் அவனைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி - கேரளா - அவனிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தான். அவள் சென்ற பிறகு அருகில் வந்தாள் அகிலா.

"அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?"

"வேறென்ன நோட்ஸ்தான்..., சரி என்ன சண்டை?"

"அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?"

"வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ஃபிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்." சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. "ஏய் இந்தாடி, ஏறிக்கோ" சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் இருவருக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. அவர்கள், கோயிலுக்குப் போனார்கள். அவன் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்திருந்தான். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். அவனைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை கொஞ்சம் அவன் நெற்றியிலும் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் அவன் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறியவன் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டேன். அவன் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, "இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?"

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளைத் திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் மோகன் அவளிடம் பேசவில்லை, அவள் பார்க்க வந்தாலும் அவனாய் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். அவன் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக அவன் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, "இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?" கேட்டாள்.

.

“சேலை கட்ட தெரியும்னா, போய் கட்டிக்கிட்டுவா, ஒரு வேலையிருக்கு…” என்றான்

அரைமணி நேரத்தில் அவர்கள் மதுரை - திருச்சி ரோட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்தார்கள் ஆனால் இடைவெளி மட்டும் அப்படியே இருந்தது.

“நாம இப்ப எங்க போறோம்?”

“எங்கப்பாவைப் பார்க்க…”

“எதுக்கு?”

“நம்ம விஷயத்தை சொல்லப்போறோம்…”

“இங்கப் பாருங்க, அதுக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட சொல்லலாம்ல, உங்கப்பா கோபக்காரருன்னு வேற சொல்றீங்க. உங்கம்மாகிட்ட சொன்னா அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்கல்ல…”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்…” அவன் சொல்லி நிறுத்தினான்.

“தாஸ், கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க.”

அவன் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான். நேராக அவனெதிரில் வந்தவள்.

“என்ன சொன்னீங்க?”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்னு…”

“எல்லாம்னா?”

“எல்லாம் தான்.”

அவள் உடனே தலையில் அடித்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிஷம் ஆகியிருக்கும். லேசாக சிரித்துக் கொண்டே அவனருகில் மீண்டும் வந்தவள்.

“என்ன தாஸ் இது, அம்மாகிட்ட எதையெல்லாம் சொல்றதுன்னு விவஸ்தையில்லை, நான் இனிமே உங்கம்மா முகத்தில எப்பிடி முழிப்பேன். அன்னிக்கு ஹாஸ்டல்ல என்னைய விட்டுட்டு போனதுக்கு பிறகு என்ன நடந்தது. உங்கம்மா கிட்ட எப்ப சொன்னீங்க, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“அன்னிக்கு என்கிட்ட அப்பிடி நடந்துக்கிட்டதுக்காக, எனக்கு உம்மேல துளிகூட கோபமில்லை, உனக்கும் அப்படித்தான்னு தெரியும். ஆனா அன்னிக்கு நைட்டு தூக்கமே வரலை எனக்கு, ஒரே கெட்ட கெட்ட கனவா வந்தது. ஏற்கனவே சின்ன பெண்ணை ஏமாத்திட்டதா ஒரு கில்டி ஃபிலிங். கனவுல இந்தியன் தாத்தா வந்து, ‘செய்வியா, செய்வியா’ ன்னு கத்தியில குத்துறார். ஒரு பையன் வந்து, ‘நீ இந்த செமஸ்டர்ல மூணு அரியர்’னு சொல்றான். நான் ரொம்பவே பயந்திட்டேன். இடையில நீ வேற கனவுல வந்து சிரிக்கிற. முதல் நாள் சமாளிச்சிட்டு காலேஜ் வந்தேன். நீ வேற விடாம திரும்பத் திரும்ப வந்து என்னைப் பார்த்துக்கிட்டிருந்தியா… அதான் அடுத்த நாள் நேரா போய் அம்மாகிட்ட சொன்னேன்.”

“என்னன்னு சொன்னீங்க?”

“அம்மாவுக்கு ஏற்கனவே இதப்பத்தி தெரியும், நானும் அம்மாவும் பேசிவச்சிட்டுத்தான் அன்னிக்கு உன்னைய பூஜைக்கே வரச்சொல்லியிருந்தோம். அதனால நான் அம்மாகிட்ட நேராப் போய், ‘நைனாகிட்ட பேசு’ ன்னு சொன்னேன். அம்மா அதுக்கு என்னடா அவசரம்னு கேட்டாங்க; நான் அவசரம் தான்னு சொல்லிட்டு தலையை குனிஞ்சுகிட்டேன். அம்மாவுக்குப் புரிந்துவிட்டது…”

“அத்தே என்ன சொன்னாங்க?”

“நான் அப்பவே நினைச்சேன்னு சொன்னாங்க”. அவன் சொல்லிவிட்டு சிரித்தான். பக்கத்தில் வந்து தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு, “பண்ணியதெல்லாம் நீங்க, கெட்டபேரு மட்டும் எனக்கா? அத்தே என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பாங்க. சரி அது என்னா கையில, என்னவோ வைச்சிருக்கீங்க?”

“உனக்குத்தான்” சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தான்.

“ஐ, எனக்கா சூப்பராயிருக்கு. உண்மையை சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தோணாதே, யார் சொன்னாங்க வாங்கிக்கொடுக்கச் சொல்லி?”

“யாரும் சொல்லலை, அம்மாதான் இதை கொடுத்து, அகிலாகிட்ட கொடுன்னு சொன்னாங்க.”

அவன் சொன்னதும், அதுவரை அவள் கையில் வைத்திருந்த லாப்டாப்பை அவன் கையில் திணித்து, “நீங்க இதையே கட்டிக்கிட்டு அழுங்க, உங்களையெல்லாம் நான் கல்யாணம் செய்துக்க முடியாது.”

அவன் அப்பா முன்னாடி நின்றுகொண்டிருந்தான் அகிலாவுடன்.

"நைனா நான் இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்". சொன்னவுடன் நெருங்கி வந்து பளீரென அறைந்தார்.

"ஏண்டா நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்ததும். உனக்கு கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா?"

உடனே அம்மா தலையிட்டு, "என்ன பாவா இது, சின்னப்பிள்ளைங்க கிட்ட இப்பிடியா பேசுறது" என்று கேட்டவுடன்.

அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார்.

அம்மா அவனை அழைத்து, "டேய், நீ போய் கனிமொழியைக் கூப்பிட்டுட்டு வா"

அவன் கனிமொழியை கூப்பிட்டு வரவும் அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அப்பா கனிமொழியிடம், "ஏய் உனக்கும் இதெல்லாம் தெரியுமா?"

"இல்லைப்பா, எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. அண்ணே இப்பத்தான் சொன்னாரு," ஒரு குண்டை போட்டாள்.

"சரி பெண்ணு எப்பிடி, அவங்க குடும்பம் எப்பிடி?"

"அப்பா, பெண்ணு ரொம்ப நல்ல பெண்ணு, அவங்க அப்பா புரோகிதர், அம்மா கிடையாது. மற்றபடிக்கு நல்ல குடும்பம்தாம்பா.."

"ஏண்டி அந்த பொண்ணு எங்க?" இது அம்மாவிடம்.

"அகிலா, இங்க வந்து மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க!" அம்மா சொன்னதும் அகிலா வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். அம்மாவுடைய கல்யாணப் புடவை, அம்மாவுடைய நகைகள் எல்லாம் போட்டுக்கிட்டு, கல்யாண பெண்ணு மாதிரி இருந்தாள்.

"என்னங்க அப்பிடியே, குலதெய்வம் கோயிலுக்கு போய்ட்டு வந்திரலாம், அப்புறம் நீங்க அவங்க அப்பாகிட்ட பேசுங்க. ஆறு மாதம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்."

மோகன் அப்பாவும் ஒத்துக்கொள்ள, ஆறுமாதத்திற்குப் பிறகு அவர்கள் திருமணம் நடந்தது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து...

அன்புள்ள பாவாவுக்கு,

நல்லாயிருக்கீங்களா, உங்களுக்கென்ன, ஆண்டவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். ஆனால் என்னைத்தான் இப்படி பழிவாங்கிட்டான் பாவி. உங்களை மாதிரி ஒரு கணவனை கொடுத்துட்டு பாதியிலேயே புடுங்கிக்கிட்டான்.

ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும் பாவா, நீங்கமட்டும் அன்னிக்கு அப்பிடி கேட்கலைன்னா. இன்னிக்கு உயிரோட இருப்பேனான்னா தெரியாது. ஒருநாள் ராத்திரி நான் புரண்டு படுக்கும் போது முழிச்சிக்கிட்டு இருந்தீங்க. நான் உங்களை தொட்டதும், 'அகிலா நான் ஏதாவது காரணத்தால, செத்துட்டாலும் நீ உயிரோடயிருக்கணும். நம்ம புள்ளையை வளர்க்கணும்'னு சொன்னீங்க. நான் தூக்கக் கலக்கத்துல, 'அப்பிடியெல்லாம் பேசக்கூடாது..' னு சொல்லிவிட்டு இன்னும் இறுக்கமா உங்களை கட்டிக்கிட்டு படுத்துட்டேன்.

அன்னிக்கு உங்களுக்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும் நானும் உங்கம்மாவும் நம்பவே இல்லை, உயிரும் உடம்புமா இருந்த உங்களை அப்பிடிப் பார்க்கவே மாட்டோம்னு சொல்லிட்டோம். உங்கப்பாவை பார்த்து நான் ரொம்ப பயந்திருக்கேன். அதுவும், 'கையில நாலு காசு வந்ததும் கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா'ன்னு கேட்டாருல்ல, அதுல ரொம்பவும் பயந்துதான் போயிருந்தேன். அன்னிக்கு ஒரு பக்கம் நான் மயக்கமாக விழ, இன்னொருபக்கம் அத்தை மயக்கமாகி விழ, பாவம் அவரோட சோகத்தையும் மறைச்சிக்கிட்டு, அப்பப்பா உங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். மோகனா அக்காவும் பரவாயில்லை சமாளிச்சிட்டாங்க.

உங்கம்மாவும், மோகனாவும் அவ்வளவு சோகத்திலையும் நான் பாத்ரூம் பக்கமோ, இல்லை வேறு எங்கேயாவதோ போனா பின்னாலையே வந்து நான் ஏதும் பண்ணிக்க போறேன்னு என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாங்க. நான் கூப்பிட்டு சொல்லிட்டேன். உங்க பையன் அன்னிக்கு கேட்டுக்கிட்டார். அதனால பயப்படாதீங்க. ஆனா எனக்கு உங்கம்மா மேல ரொம்ப பொறாமையாப் போச்சு, மாஞ்சு மாஞ்சு அழறாங்க. எனக்கு ஒன்னுதான்; எப்பிடி என்கிட்ட சொல்லாம போகமுடியும்; இனிமே உங்கிட்ட பேசமாட்டேன், உன்னைப் பார்க்க மாட்டேன், உன்னைத் தீண்டமாட்டேன்னு எப்பிடி சொல்லாம போகமுடியும்னு தான் அழுகையே.

பாவா, உங்க பையன் அப்பிடியே உங்களை மாதிரிதான். எங்கிட்டையும், அத்தைகிட்டையும் தான் இருப்பான். இதில் உங்கப்பாவுக்கு சிறிது வருத்தம் தான். அவன் அத்தைகிட்ட போனாலும் போவான். உங்கப்பாகிட்ட வரமாட்டான். இரண்டு வயசுதானே ஆகுது. சரியாயிரும்.

அன்னிக்கு உங்கக்காவும், அத்தையும் என்கிட்ட வந்து எதுவும் பேசாமல் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் என்னன்னு கேட்டேன். அதுக்கு அத்தை, 'மாமா ரொம்ப வருத்தப்படறார். சின்ன வயசுதானே உனக்கு, இதே மோனாவுக்கு ஆயிருந்தா சும்மா விட்டிருப்போமா வேறு எதைப்பத்தியும் யோசிக்க மாட்டோம். அதானால... ' அப்பிடின்னு என்னன்வோ சொன்னாங்க. நான் நேரா மாமாவிடம் போய், "நான் இங்க இருக்குறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?" னு கேட்டேன்.

"என்னம்மா இது, இப்பிடியா பேசுறது. உனக்கென்ன சின்ன வயசுதானே?"

"மாமா, நானும் அவரும் வாழ்ந்த ரெண்டு வருடம் ரொம்ப சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். அவரு பையனோடயே நான் வாழ்ந்திருறேன். கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் இனிமே இதப்பத்தி பேசாதீங்கன்னு" சொல்லிட்டேன்.

தாஸ் ஆரம்பத்திலேர்ந்தே நீங்க என்னிடம் ஒன்னும் கேட்டதில்லை, உங்களோட நான் சந்தோஷமாத்தான் இருந்தேன். ஆனா நீங்க என்கூட சந்தோஷமா இருந்தீங்களான்னு தெரியலை. ஆனா உங்கம்மாவும் அக்காவும் நீங்க சந்தோஷமாத்தான் இருந்ததா சொல்றாங்க. அதே போல் இப்பவும் ஒரு வேண்டுகோள். நீங்க எனக்காகக் காத்திருக்கணும், அடுத்த பிறவியிலும் நீங்கத்தான் எனக்கு புருஷனா வரணும். இது பேராசைன்னாலும் வேறு வழியில்லை, இன்னொருத்தரை புருஷனா என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியலை.

இப்படிக்கு உங்கள்
அகிலா.

(முடிந்தது.)

0 comments:

Post a Comment

Popular Posts