In இருத்தலியநவீனம்

கிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்

காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத் தொக்கிக்கூட அவளுடைய புரிதல்கள் நிற்கலாம், எல்லாம் தெரிந்துமா என்ற கேள்விகளுக்கான பதில்களை நானே இன்னும் தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கான விடையின் தொலைவு எல்லைகளைக் கடந்திருந்ததில் ஆச்சர்யமெதுவில்லை. புரிதல்களுக்குப் பிறகான உறவுதான் அவளுக்கான நிம்மதி வெளியை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தாலும் உடலுக்கான வேட்கை தனக்கான வெளியில் எகிறிக்குதித்து அடங்கி நிற்க, பின்னிரவின் பொல்லாத கணத்தில் உடல்வலியுடனோ இல்லாமலோ எழுதிக்கொண்டேயிருக்கும் புத்தகமாக நீளும் மனதின் வலியை ஒரு பக்கமாவது கிழித்துப்போட முயல்வது போல அவள் அழும் சப்தம் செவிப்பறையை அறைந்தாலும் என் விழிப்பால் அவளடையப்போகும் பீதி கண்திறக்கவிடாமல் செய்கிறது.

ரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு. பிரச்சனைகளைக் கண்டு தெரிக்காமல் வாழப்பழகு என்றும் வாழ்தலும் காலமும் பிரச்சனையை இல்லாமல் செய்யும் என்று பிரச்சனைகளின் பாரத்தால் உறக்கம் தொலைத்த பௌர்னமி இரவொன்றில் தெருவோரச் சித்தர் சொன்ன இரண்டு மாதத்தில் நான் பிரச்சனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். திருமணம் என்ற கோட்டால் இணைந்த இரு புள்ளிகளில் ஒரு புள்ளி மற்றதிலிருந்துவிலகி கோட்டின் நீளத்தை அதிகரிக்கச்செய்த முயற்சிகளைத் என் மறுமுனையை நோக்கிய நகர்தலால் தடுமாறச் செய்துகொண்டிருந்தேன். அதற்கு பௌர்னமிச் சித்தர் சொன்ன பொன்மொழிகள் மட்டுமில்லாமல் கோடு மறைந்து இரண்டு புள்ளிகளும் ஒன்றாய் ஆகமுடியாத காரணமும் புரிந்ததால் தான். மற்ற புள்ளியின் தடுமாற்றமே ஒன்றாவதால் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயமே, ஆனால் சுயம் அதுவாகயில்லாமல் போலியான ஒன்றைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது.

மனமொருமிக்காமல் ஒத்திசைவில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்த இரவு நேரத்து நாடகம் ஓரங்க நாடகமாகவேத் தொடர என் பக்கத்து வருத்தத்தைவிடவும், அவள் பக்கத்து வேதனை புரிந்ததால் நான் மறுத்தளிக்க, அவள் கழிவிரக்கத்தால் சுமூகமாய் நகர்ந்துகொண்டிருந்த பகல் பொழுதுகள் மற்றதையின் வேதனையையும் சேர்த்து கூட்டிக்கொண்டிருந்தாள். ஏதேதோ இல்லாத காரணங்களைக் காட்டி நாடகத்துக்கான ஒத்திகையில் அவள் மீண்டும் இறங்க நான் அவள் சொல்லாத காரணமும் தெரிந்தவன் என்ற முறையில் அரிதாரம் தாங்கிய அகோர முகத்தை வெறுத்தாலும் சமாதானத்திற்கான வெளி என்பக்கத்தில் திறந்தேயிருந்தது, எப்பொழுதும் திறந்தேயிருக்கவேண்டும் என்ற ஆவலுடன். திரையரங்குகளின் கனத்த மௌனத்தில் அலைந்து செல்லும் ஒளி ஒலியினூடாகவும், கடற்கரையில் நுரைத்துக் கரையும் அலைகளினூடாகவும், உணவகத்தில் 'என்ன சாப்பிடுற' என்பன போன்ற மிதமான கேள்விகளினூடாகவும் அவள் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளுடைய தோல்வியை படம்பிடித்து என்னுள் மறைத்துக் கொண்டேன்.

"காதலைப் பற்றி என்ன நினைக்கிற சரோ?"

அவளைச் சுற்றி எப்பொழுதும் வண்ணத்துப்பூச்சிகளாய் கேள்விகள் பறப்பதாய் நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன். அவளாய் விருப்பப்பட்டே அனுமதித்ததாயும் விடைகளத்தேடியே அவள் வண்ணத்துப்பூச்சிகளுடனான உறவை தொடங்கினாள் என்றும் பட்டது எனக்கு. எங்கள் மனவாழ்வின் தொடக்கத்திலிருந்தே அவள் எதற்கான விடையையோ தேடிக்கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. ஆனால் விடைதெரியாத, ஒப்புக்கொள்ளமுடியாத கேள்விகள் புதிதுபுதியாய் வண்ணத்துப்பூச்சிகளாய் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று நினைத்தேன். எனக்குப் வண்ணத்துப்பூச்சிகளாய்த் தெரிவது அவளுக்கு கொடுக்குளுடன் கூடிய குளவிகளாய் இருந்திருக்கலாம், நான் இந்தக் கேள்வி குளவியாய் இருக்குமென்று உணர்ந்தே கேட்டேன். பதில் சொல்லும் முகமாய் அவளுடைய பரிமாணங்களைத் தரிசிக்கும் ஆவலுடன். பலசமயங்களில் நான் எதிர்பார்க்கும் கேட்டால் சொல்லிவிடலாம் மனநிலையை உணர்ந்தவன் என்பதால் அவளுக்கு ஒரு அத்தகைய வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கிக்கொண்டேன்.

கோயில் எனக்கான சூழலை இயல்பாய் உருவாக்கிக்கொடுத்தது, அவள் அன்று மனக்குழப்பங்களில் மூழ்காமல் அமைதியாய் இருந்தாள். பெரும்பாலும் நிறைய பேருக்கு கோயில் கொடுக்கும் அமைதி எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவளின் அமைதி எனக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது, சூழ்நிலையை அசௌகரியமாக்க விரும்பாவிட்டாலும் இதைவிட்டால் சந்தர்ப்பம் இப்படிப்பட்டாதாய் அமையாது என்று நினைத்தவனாய் கேட்டேன்.

முதலில் பதில் சொல்லவில்லை, நிமிர்ந்து பார்த்தவள் மென்மையாய்ச் சிரித்தாள். அவள் சிரித்து எப்பொழுது பார்த்தேன் நினைவில் இல்லை. பின்னர் குனிந்து கொண்டாள் சாய்ந்திருந்த தூணை சுரண்டியபடி,

"ஏன் கேக்குறீங்க!" கேள்விக்கான மறுகேள்விதான் என்றாலும் ஒரு உரையாடலைத் தொடங்கிவிட்ட சந்தோஷம் எனக்கு சட்டென்று என் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டும் என்ற பேராசையை ஓரங்கட்டி வைத்தவனாய், "இல்லை சும்மாதான்!" என்றவாரு அவள் மௌனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். வெகு அதிசயமாய் அந்தக் கோவில் பற்றியும் கோவிலின் சிறப்புகள் பற்றியும் சொன்னாள், அவளுடைய லாவகம் ஆச்சர்யமாகயிருந்தது மூடநம்பிக்கையில்லாமல் அவள் கோர்த்தாள், மூடநம்பிக்கையாக அவள் நினைக்கும் இடங்களில் அவளுடைய சொற்பிரயோகம் அருமையாக இருந்தது. அவள் இப்படியே எல்லா சமயங்களிலும் என்னிடம் சகஜமாகயிருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவளால் எப்படி என்னை வெகு எளிதாய் வசப்படுத்திவிடமுடிகிறது என்ற கேள்விக்கு, அவள் அவளுக்கு உண்மையாய் இருப்பதால் தான் என்ற பதிலே என்னால் ஒப்புக்கொள்ள முடிந்த ஒன்றாயிருந்தது.

கோயிலை விட்டு வெளியில் வந்து பூ வாங்கும் சமயத்திலேயே அவள் தன் கூட்டுக்குள் சென்றுவிட்டதாகப் பட்டதெனக்கு. மல்லிப்பூ பிடிக்கவில்லையென்றால் கனகாம்பரம் வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால் நினைவில் இருக்கும் அழிக்கமுடியாத நினைவுகளை மீண்டும் கிளம்பும் வன்மை கொண்டதாய் நீளும் ஒன்றாய் மல்லிப்பூ இருக்கலாம் என்று நினைத்தேன் நான். நான்கு சுவர்களுக்குள் அவள் உணர்வதாய் நினைக்கும் சுயத்தை வெளியில் அவள் இழப்பதைப் போல் காட்டிக்கொண்டதில்லை, வெளியில் அவளுடைய இயல்பான மனநிலை ஆச்சர்யமளிப்பதாயிருந்தாலும் என் பொருட்டு செய்துகொண்ட சமாதனமாய் நான் புரிந்துகொண்டேன்.

"நான் இங்க கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்னு இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?"

வற்புறுத்தல்கள் சீண்டத்தொடங்கிய பொழுதில், மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க மனம் வராத நெருக்கமுடியை உறவினர் வீட்டில் அவள் காதில் கிசுகிசுக்க, அப்பொழுதும் கோயில் பார்த்த அனுபவித்த ரசித்த அதே புன்னகை. தோளைக் குலுக்கியபடி "பிரச்சனையில்லை" என்று சொன்னவளின் கண்களின் உண்மையிலேயே பயம் இல்லை.

அவள் என்னிடம் தைரியமாகப்பேச தன் மனதில் இருப்பதைக் கொட்டிக்கவிழ்க்க இது போன்ற ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருந்தாள் என்று நினைக்காவிட்டாலும், அன்று அவள் தன் ரகசியக்கதவுகளை திறந்துகாட்டிவிட முடிவு செய்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. அன்றை விட கோப்பைகள் அதிகமான நாட்களில் உணராத போதை அன்று வெகுவிரைவாக வந்தது, என் கட்டுப்பாட்டில் இருந்து சுயம் வெளியில் குதித்ததை உணரமுடிந்தாலும் அடக்கமுடியவில்லை. பழக்கம் நிலை தடுமாறாமல் இருக்க உதவினாலும் மனம் வெகுவாகத் தடுமாறிக்கொண்டிருந்தது. பாதிவழியில் காரை நிறுத்தி அவள் கொடுத்த சந்தர்ப்பம் போதுமாயிருந்தது என்னைத் திறந்துகாட்ட, சில வரிகள் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்தன.

"நீயும் ரமேஷும் காதலிச்சது எல்லாம் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்று கொடுத்த 50 பக்க ரிப்போர்ட்டில் பார்த்திருக்கேன்"

அதற்கு மேல் சொல்ல எனக்கு எதுவுமில்லை, அவளுடைய ஆச்சர்யத்தை வெளிகாட்டாமல் இருக்க அவள் முயற்சி செய்யவில்லை. எனக்கு பதிலொன்றும் சொல்லாமல் வெகுநேரம் காரில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். வேதனையோ வருத்தமோ துக்கமோ நான் அவள் பக்கம் என்று சொல்ல அருகில் சென்று கட்டிக்கொண்ட மறுகணம் இருவரும் கோடானது அந்த இருட்டில் கரைந்து புள்ளியாய் மாறியதாய் உணர்ந்தேன் நான். அத்தனை நாளாய் பேசாமல் வைத்திருந்த அத்தனையையும் பேசிக் களைத்தது அவள் உதடு, எத்தனை சுலபமாய் முடிந்திருக்ககூடிய ஒன்றை இழுத்தடித்ததற்காய் மனம் குழம்பியது. சட்டென்று வெளியைக் குளிராக்கிய காற்றொன்று அடித்துச் சென்ற கண்ணீர்த்துளிகள் நான்கு இருளில் காணாமல் போனது.

Related Articles

29 comments:

  1. இப்பல்லாம் தலைப்ப வெச்சே எதிர்பார்ப்ப எதுவாயோ வெய்ச்சிடுறாங்கண்ணே

    ReplyDelete
  2. அனானி அப்படி நினைத்துச் செய்யலை. இந்தத் தலைப்பும் கதையும் ஒரே சமயத்தில் உருவாகியது தான். திசைதிருப்ப இந்தத் தலைப்பை வைக்கவில்லை. வைத்திருந்தால், தமிழ்மணத்தில் வரும் நான்கு லைன்களை மறைத்தோ இல்லை மாற்றியோயிருப்பேன். ;)

    ReplyDelete
  3. முற்றுப்புள்ளியே இல்லாத நீண்ட பத்திகள். எழுதுவது மிகக் கடினம். திறமைக்குப் பாராட்டுகள். படிப்பவர் மன நிலையைப் பொறுத்தது கதை பிடிப்பதும் பிடிக்காததும்.

    கணவன் திருமணத்திற்கு முன் மனைவியாக வரப் போகிறவளின் அந்தரங்கம் பற்றி அறிந்து கொண்ட பிறகும், அவளையே மண முடித்து, மன அழுத்தத்தை அடக்கிக் கொண்டு, மன வலியைப் பொறுத்துக் கொண்டு, தூங்காத இரவுகளில் பொருமிக் கொண்டு, கோவிலின் சூழ்நிலையில் மனம் தெளிவது கதையின் சாராம்சம். அருமை யான கதை.

    கதை ஒட்டம் நீர் ஓடை போலத் தெளிவாகச் செல்கிறது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மோகன்தாஸ்,
    நடை பிடித்திருக்கின்றது.
    கதை.. ப்ச்!
    ஏன் இப்படியான "பெரும்புரட்சிக்"கதைகளை மத்தியானம் லொக்கு லொக்கு என்று விகடன், கல்கிக்கு டைப்படிக்கும் மாமிகளுக்கும் தீபாவளி மலர்களுக்கு விஷயதானம் செய்யும் மாமாக்களுக்கும் ...... மெட்னி ஸோ மணிரத்தினங்களுக்கும் விட்டுவிட்டு, கொஞ்சம் உருப்படியான -தேடிப்போகாத, வந்து முகத்திலே மோதும் - கருவினைப் பற்றி விரித்துப் பதியக்கூடாது?

    -/.

    ReplyDelete
  5. நல்ல கதை. :))

    இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் இருக்கும் கோடு அழிந்து விடக்கூடியது அல்ல. அழிந்து விட்டதான தோற்ற மயக்கம் மட்டுமே என்பது புள்ளிகளுக்கு தெரியும்.

    இல்லாத காரணங்களைக் காட்டி நடத்தப்படும் நாடகங்கள் அவ்வளவு எளிதாய் முடிவன அல்ல. நாடகங்களால் நடத்தப்படும் வாழ்க்கையாய்த்தான் அது இருக்க முடியும்.

    ReplyDelete
  6. சீனா,

    நன்றி. முற்றுப்புள்ளியே இல்லாத நீண்டபத்திகள் எழுதணும் என்று வைத்துக்கொண்டு எழுதவில்லை. அமைந்துவிட்டது.

    ReplyDelete
  7. பெயரிலி,

    நன்றி.

    //தேடிப்போகாத, வந்து முகத்திலே மோதும் - கருவினைப் பற்றி விரித்துப் பதியக்கூடாது?//

    நிச்சயம் செய்யணும் பெயரிலி. பெரும்புரட்சிக் கதை சொல்லணும் என்றில்லை, அதை பெரிய புரட்சியாக நினைத்துக் கொண்டும் சொல்லலை. ஆனால் கதையின் போதாமை புரிகிறது.

    ReplyDelete
  8. அரைபிளேடு நன்றி,

    என்ன சொல்ல உங்களுக்கு கல்யாணம் நடந்துவிட்டதா? எக்ஸ்பீரியன்ஸ் பேசுதுன்னு எடுத்துக்கவா?

    ReplyDelete
  9. கதை நல்லாருக்கு மோகன்தாஸ்.

    ReplyDelete
  10. அருட்பெருங்கோ நன்றி!

    ReplyDelete
  11. மோகன்தாஸ்,

    நடை மோசம். எளிமையும் தெளிவும் மொழியிலும் நடையிலும் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பது நல்லது. தொடக்கூடாத கதைக்கரு என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கு வருகிற கருக்களைத் தொடர்ந்து புரிகிற மொழியில் எழுதுங்கள். பேசாமல் எளிமையான நடைக்கு உங்களுக்குப் பிடித்த வாத்தியார் சுஜாதாவின் சகவாசம் உங்களிடமிருக்கிற சில கெட்ட ஆவிகளை விரட்டியடிக்கும். - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  12. பிகேஎஸ்,

    இந்தக் கதைக்கு நேர் மறையான இருவித விமர்சனங்களையும் எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை ரீச் நான் எதிர்பாராதது 'சாட்'டிக் கொண்டிருக்கும் இணைய நண்பர்களாகட்டும், பதிவெழுதாத நல்ல நண்பர்களாகட்டும். இதைப் படித்து இரண்டு வார்த்தையாவது சொல்லியிருந்தார்கள்.

    சுஜாதா போல் எழுதி போரடித்துவிட்டது போல் எனக்கே ஒரு ஃபீலிங். ஆனால் இந்தக் கதையை எனக்குத் தெரிந்து அடித்து அடித்து ஆறு ஏழு முறையாவது எழுதியது இந்தப் பத்திகள்.

    ஒரு மாத காலமாக எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என்ன வழமையையோ ஃப்ரீ ப்ளோவா எழுதின கதைகளை எத்தனையோ முறை எடுத்துவைத்து திருத்தலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நடந்ததில்லை, அப்படியில்லாமல் இந்தக் கதையில் ஆரம்பத்தில் இருந்தே அடித்து அடித்து திருத்தி எழுதினேன். இந்த வழக்கத்தைக் கொண்டுவரவாவது நாலுக்கு ஒன்னுன்னு இதுமாதிரி எழுதணும்னு வைத்திருக்கிறேன்.

    ---------------------

    PS: எப்படா வாய்ப்பு கிடைக்கும் 'சுயசொறிதல்' செய்றதுக்கு காத்திருக்கிறான்னு என்னை தப்பா நீங்க நினைக்கக்கூடாது. ;)

    ReplyDelete
  13. அய்யா, சுஜாதா நடையைக் காப்பியடிக்கச் சொல்லவில்லை. உங்களுக்கான நடையை எப்படி எளிமையுடனும் தெளிவாகவும் அமைத்துக் கொள்வது என்பது பற்றி சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளலாம் என்பதே நான் சொல்ல வந்தது. - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  14. பிகேஎஸ்,

    உங்கள் முதல் பின்னூட்டத்திலேயே அதைப் புரிந்துகொண்டேன்.

    ;)

    ReplyDelete
  15. என்ன கொடுமைங்க இது சரவணன்.

    இது நீங்க எழுதினது தானா இல்லை மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததை வாங்கிட்டு வந்து போட்டிருக்கீங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்தக் கதை.

    இவ்வளவு நாளா எங்க வைச்சிருந்தீங்க இந்த திறமையை?

    ReplyDelete
  16. கலக்கிட்ட்டீங்க மோகந்தாஸ் ;-)

    /திருமணம் என்ற கோட்டால் இணைந்த இரு புள்ளிகளில் ஒரு புள்ளி மற்றதிலிருந்துவிலகி கோட்டின் நீளத்தை அதிகரிக்கச்செய்த முயற்சிகளைத் என் மறுமுனையை நோக்கிய நகர்தலால் தடுமாறச் செய்துகொண்டிருந்தேன்.//

    ஆனாலும் ஏதோ ஒன்னு குறையுறா மாதிரியே தோணுது தலைவா.. அதிக நீளமா இருக்குறதாலயான்னு தெரியல :-(

    இல்ல சரோன்னு பேர மாத்துனதாலயான்னு தெரியல :-)

    ReplyDelete
  17. \\காதல். .....
    என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. .....
    ரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை

    "காதலைப் பற்றி என்ன நினைக்கிற சரோ?"

    கோயில் எனக்கான சூழலை இயல்பாய் உருவாக்கிக்கொடுத்தது,
    "ஏன் கேக்குறீங்க!"
    "இல்லை சும்மாதான்!"

    "நான் இங்க கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்னு இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?"

    "பிரச்சனையில்லை" என்று சொன்னவளின் கண்களின் உண்மையிலேயே பயம் இல்லை.

    "நீயும் ரமேஷும் காதலிச்சது எல்லாம் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்று கொடுத்த 50 பக்க ரிப்போர்ட்டில் பார்த்திருக்கேன்"

    வேதனையோ வருத்தமோ துக்கமோ நான் அவள் பக்கம் என்று சொல்ல அருகில் சென்று கட்டிக்கொண்ட மறுகணம் இருவரும் கோடானது அந்த இருட்டில் கரைந்து புள்ளியாய் மாறியதாய் உணர்ந்தேன் நான்.
    \\

    இவ்வளவுக்காக எழுதின பிற எல்லாம் லேபிளுக்காகவே எழுதியது போல இருந்தது....

    ReplyDelete
  18. அனானிமஸ், நன்றி.

    சென்ஷி, என் அகிலாவிற்கான சில characteristics இல்லாத ஹிரோயின்களுக்கு அகிலான்னு நான் பெயர் வைப்பதில்லை.

    இங்கெயும் அப்படியே!

    ReplyDelete
  19. அறிவன்,

    நீங்க எழுதினதுக்கு எதுவும் பதில் சொல்லும் முடிவில் நான் இல்லை ;) மாப்பு.

    ReplyDelete
  20. மோகன்தாஸ் said...
    \\
    சென்ஷி, என் அகிலாவிற்கான சில characteristics இல்லாத ஹிரோயின்களுக்கு அகிலான்னு நான் பெயர் வைப்பதில்லை.

    இங்கெயும் அப்படியே!
    \\

    இது மோகன்தாஸ்...!
    :)

    ReplyDelete
  21. மோகன் கதை பழகின ஒண்ணுதான்னாலும் நடை நல்லா இருந்தது.ஒரு எழுத்து புரியலைங்கிறத என்னால வாசகனோட போதாமை அப்படிங்கிற பார்வையிலதான் அணுக முடியுது எலிமையாய் எழுதப் பழகு இல்லனா எழுதறத நிறுத்துன்னு ஆங்காரமா பிகேஎஸ் ஆல் எப்படி சொல்ல முடியுதுன்னு தெரில.சுஜாதா சவகாசத்த சீக்கிரம் விட்டொழிங்க :)

    ReplyDelete
  22. அய்யனாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்னு ஒரு வரில எழுதிருக்கலாம்...ப்ச்

    ReplyDelete
  23. செல்வா ஏனிந்த மர்டர் வெறி :)

    ReplyDelete
  24. எலிமையா எழுதுறதுன்னா என்னன்னு அய்யனார் கிட்ட கேட்டு சொல்லுங்கப்பா :-)

    கதை நல்லாவே இல்லன்னு சொலல மாட்டேன் நல்லா இருந்ததுன்னும் :-)

    'சுய சொறிதல்' இல்லாம வாழுறதுக்கு நாம என்ன சாதாரண மனிதர்களா? இலக்கிய வியாதிகளாச்சே?!

    நம்மை நாமே சொறிஞ்சுக்கலேன்னா எப்படி?

    ReplyDelete
  25. இந்தக் கதைல என்ன புரிஞ்சதுன்னு இப்படி அல்லாரும் கருவிப்பட்டைய குத்து குத்துன்னு குத்திருக்காங்கன்னு தெரியலையே..

    நானும் நாலுவாட்டி எழுத்துக் கூட்டிப் படிச்சுப் பார்த்தேன்.. கண்ணு வலிச்சதுதான் மிச்சம்..

    ஒரு வேளை தம்பி மோகன்தாஸு 3 மாசத்துக்கு சேர்த்து வைச்சு மொத்தமா கொட்டிருச்சு போலிருக்கு..

    ஏதோ அதுக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்தான்..

    ReplyDelete
  26. நானும் உங்களைப் புண்படுத்தனும்னு நினைச்சு எதுவும் எழுதல...
    தோன்றியத சொன்னேன்..
    :))

    டபுள் மாப்பு...

    ReplyDelete
  27. எனக்கு இந்த கதைக்கு சமந்தேமே இல்லாத... ஒரு சினிமா பாடல் நினைவு வருகிறது, ... அது ஒரு பாட்டு போட்டி போல, கதாநாயகி , ஒரு பாதி மேடையில் உட்கார்ந்து பாடிகிட்டுருப்பாங்க , கதாநாயகன் பார்வையாலர்ல , ரொம்ப சோகமா , ( காதல் தோல்வியினால் ) உட்கார்ந்து வேறு எதோ நினைவில் ( வேறு என்ன காதலியின் ) இருப்பவரை மேடைக்கு போட்டியில் தள்ளி விடுவார்கள், ( எஸ்.எஸ். ஆர்), அவர், ரொம்ப சோகமா, காதல் ரொம்ப புனிதமானது, அப்படி , இப்படின்னு, அது ஒரு முறை தான் வருமுன்னு சொல்வார். அதுக்கு அந்த பதில் பாருங்க, " அந்த ஒரு முறை இந்த முறையா கூட இருக்கலாம் இல்லவா " .... அப்பறம் என்ன கதாநாயகன் க்ளின் போல்டு . .... காதல் ஒரு முறை தான் வரும் என்ற நம்பிக்கையும் .

    ReplyDelete
  28. //ரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு.//

    இந்த வரிகள் கதைக்கு ரொம்ப முரணா படுதுங்க மோகன்தாஸ்... இப்படி ஒரு குணம் இருக்கறபட்சத்துல புரிதல்களுக்கு முற்பட்ட சம்பிரதாயமான இரவு நாடகங்களும், (அழறது தெரிஞ்சும்) இத்தனை மனபாரங்களும் அவசியம் தானா?

    வழமையான கதைய நடையால வித்தியாசப்படுத்த முயற்சி பண்ணிருக்கீங்கன்றது என் அபிப்ராயம். :)

    ReplyDelete
  29. காயத்ரி,

    கதையைப் புரிந்து கொள்ள முயற்சித்ததற்கு நன்றி. நடை காரணமாய் நிறைய பேருக்கு சில வரிகளில் சொல்லியிருக்கும் விஷயம் புரியாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் இருந்தது.

    //இப்படி ஒரு குணம் இருக்கறபட்சத்துல புரிதல்களுக்கு முற்பட்ட சம்பிரதாயமான இரவு நாடகங்களும், (அழறது தெரிஞ்சும்) இத்தனை மனபாரங்களும் அவசியம் தானா?//

    இதை முதலில் விளக்கணுமா? இல்லை நன்றி காயத்ரின்னு முடிக்கலாமான்னு நினைச்சேன் ;)

    சரி முயற்சிக்கலாம்னு எழுதுறேன், அவளைப் பற்றி தெரிந்திருந்தும் திருமணம் செய்துக்கிறான் அவன். அதற்கான காரணம் எதையும் நான் கதையில் சொல்லலை, ஆனால் மறைமுகமா சொல்ல வருவது இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று அவன் நினைக்கிறான்.

    அவனுக்கும் அவள் தன்னை ஏற்றுக்கொண்ட பிறகான தாம்பத்ய வாழ்க்கையில் தான் நம்பிக்கை இருக்கிறது என்றாலும்,

    //புரிதல்களுக்குப் பிறகான உறவுதான் அவளுக்கான நிம்மதி வெளியை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தாலும் உடலுக்கான வேட்கை தனக்கான வெளியில் எகிறிக்குதித்து அடங்கி நிற்க//

    அவனை நான் ஒரு அசாதரணமானவகாக் காட்டாமல் சாதாரணமானவனாக உடல் இச்சைகளுக்கு ஆட்பட்டவனாய்ப் காட்ட நினைக்கிறேன்.

    முக்கியமான ஒரு விஷயம் அவன் அவளுடன் வாழ விரும்புகிறான், அவள் இன்னமும் ரமேஷுடனான காதல் நினைவுகளில் புதைந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்க மாட்டான். அது தான் இப்போதைய பிரச்சனை.

    ஆனால் அவளுக்கு ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் அவளுடைய பழைய காதலை நினைவுக்கு கொண்டு வருகிறது, அவளுக்கு ரமேஷை விடவும் அவனை அதற்குள் அத்தனை பிடித்துவிடவில்லை என்றாலும் அந்த நினைவுகளில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவனிடம் எப்படியாவது விஷயத்தைச் சொல்லிவிடவேண்டும் என்று தான் நினைக்கிறாள்.

    //போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு//

    இது வாழ்க்கைக்கு உதவாது என்று அவன் நினைக்கிறான். அவனுக்கு மாற்றம் மீது நம்பிக்கை இருக்கிறது.

    அவ்வளவுதான்.

    ReplyDelete

Popular Posts