In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா(நிறைவு) - 6

அடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே சூப்பராகயிருந்தாள். நானும் போனிடைலை கட் செய்துவிட்டு, சாதாரணமான ஸ்டைலில் முடி வெட்டியிருந்தேன். பின்னர் அரண்மனை வழக்கப்படி, கோட், சூட் போட்டிருந்தேன். அருகில் வந்தவள், "ரவி, எனக்கு ஆரம்பத்தில் ஒரு எண்ணம் இருந்தது. நாம அழகா இருக்கிறதாலதான் உங்களுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னு, இங்க வந்து பார்த்தா உங்க அக்கா பெண்ணு என்னமா இருக்கா. அவளையே பார்த்துக்கிட்டிருக்கணும் போல இருக்கு." இன்னமும் அவளுக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.

"உனக்கு புடவையெல்லாம் கட்டத்தெரியுமா, நான் தெரியாதுன்னுல்ல நினைச்சேன். இப்ப ஒரு இருபது கிலோ கூடுனமாதிரி இருக்க, அப்பிடியே தூக்கிட்டு என் கட்டிலுக்கு போயிரலாம்னு பார்க்கிறேன், வேண்டாம் அக்கா சொல்லியிருக்காங்க, சரி உனக்கு பிரச்சனை ஒன்னும் இல்லையே?"

"பிரச்சனையில்லையா, உங்க வீட்டில சில கிழவிங்கல்லாம் இருக்காங்கல்ல, அவங்க என் ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்டிட்டு பார்க்கிறாங்க, கமெண்ட் வேற, பரவாயில்லைன்னு அப்புறம் உங்க அக்காபெண்ணுதான் வந்து அவங்களையெல்லாம் அதட்டி என்னை காப்பாத்தினா. நான் உண்மையிலே பயந்திட்டேன், பத்து பொம்பளங்க முன்னாடி ட்ரெஸ் இல்லாம. உண்மையிலே பயந்திட்டேன்."

"அவங்க எப்பவுமே அப்பிடித்தான். வானதி உன்கிட்ட தமிழில் தானே பேசுறா?"

"ஆமா ஆனால் வானதியும் உங்க அக்காவும் பேசிக்கும் போது காஷ்மீரியில் தான் பேசுறாங்க, ஒன்னுமே புரியமாட்டேங்குது. என்னாயிது ஆளே மாறியிருக்கீங்க, முடியெல்லாம் வெட்டிட்டு, ஒழுங்கா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ம்ம்ம் நீங்களும் சூப்பராத்தான் இருக்கீங்க."

அங்கே வந்த அக்கா, "என்னடா சொல்றா உன் பெண்டாட்டி?" காஷ்மீரியில் கேட்க.. "அக்கா தமிழ்..." சொன்னதும் திரும்பவும் அதே கேள்விளை தமிழில் கேட்க.. "ஒரே புலம்பல், பாட்டியெல்லாம் இப்பிடி பண்ணலாமா. நீங்க கேட்கக்கூடாதா. இந்த வானதிகிட்ட சொல்லித்தான் விட்டுட்டுப்போனேன். அப்பிடியும்னு" சொல்லி பக்கத்தில் நின்றிருந்த வானதியின் தலையில் குட்டினேன். அவள் ஒன்றுமே சொல்லவில்லை, ஆனால் அக்கா, "டேய் என் பொண்ணை அடிச்சே அவ்வளவுதான். நாங்க வெளியே போயிருக்கிற நேரமா பார்த்து அவங்க வந்துட்டாங்க. நாங்க என்ன பண்ணுறது. சரி இனிமேல் பத்திரமா பார்த்துக்கிறேன்."

அடுத்த ஒரு மாதத்தில் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது; எல்லா தொழில் அதிபர்களும் வந்திருந்தார்கள். சொல்லப்போனால் அரண்மனையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்யாணம், அப்பா நிறைய செலவு செய்திருந்தார். நான் அதில் தலையிடமுடியாது, மாமாவும் அக்காவும் தான் மதுமிதாவை கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள். மதுமிதா உடம்பு முழுவதும் வெறும் நகைகள் தான். அம்மாவிற்குப் பிறகு ராணிக்குரிய எல்லா நகைகளும் சும்மாதான் இருந்தன. அவள் கட்டியிருந்த அந்த கல்யாணப்புடவை மட்டுமே பத்து கிலோ இருக்கும். அன்று மிகவும் அழகாக இருந்தாள், அவளால் அவள் போட்டிருந்த சுமைகளை சுமக்கமுடிந்ததே எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, கல்யாணம் முடிந்து நாங்கள் மேடையில் உட்கார்ந்தோம். ஒவ்வொரு விருந்தாளியாக வந்து பரிசுப்பொருள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

நான் ஒவ்வொரு தொழில் அதிபர் பக்கத்தில் வரும் பொழுதும் அவள் காதருகில் அவரைப் பற்றி சொல்வதை போல் ஏ ஜோக் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளால் தாங்க முடியவில்லை, சிரிக்கவும் முடியாமல், என்னைக் கண்டிக்கவும் முடியாமல், தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். நான் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன். அக்கா இந்த விஷயங்களை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு என் கழுத்தில் உள்ள மாலையை சரிசெய்வதுபோல் பக்கத்தில் வந்து யாருக்கும் தெரியாமல் என் தலையில் கொட்டிவிட்டு, "என்ன விளையாட்டு இது, என்னடா சொல்லிக்கிட்ருக்க அவகிட்ட, நெளியிறா?"

"அண்ணி தப்பு, தப்பா பேசுறாரு. ரொம்ப கஷ்டமாயிருக்கு. நீங்களே சொல்லுங்கண்ணி..." அக்காவிடம் சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி பழிப்பு காட்டினாள்.

அக்கா என் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு, வானதியைக் கூப்பிட்டு எங்களுக்கு இடையில் நிற்க வைத்துவிட்டார்கள்.

இப்படி ஒருவாறு எங்கள் கல்யாணம் முடிந்தது, அன்றிரவு எங்களுக்கு முதலிரவு. ஆனால் உண்மையில் மூன்றாம் இரவு.

கல்யாணம் முடிந்ததும் அன்று மாலை ரிஷப்ஷன் இருந்தது; இரண்டு மணிநேர ரிஷப்ஷனுக்குப் பிறகு, நான் என் படுக்கையறையில் அவளுக்காகக் காத்திருந்தேன். என் தாத்தா பரிசளித்த காஷ்மீரத்து பட்டுபுடவையணிந்து வந்தாள். கையில் பால் டம்ளரும் வைத்திருந்தாள். நேராக என் அருகில் வந்தவள். பக்கத்தில் இருந்த மேஜையில் பால் டம்ளரை வைத்துவிட்டு, என் அருகில் வந்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்; கொடுத்துவிட்டு, "ம்ம்ம், இங்கப் பாருங்க நல்லப்புள்ளையாம் பாலை குடிச்சிட்டு தூங்குவீங்களாம். எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு, அதனால நான் தூங்குறேன்." சொல்லிவிட்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.

"ஏய் என்னாடி இது, முதலிரவு அதுவுமா தூங்குறேன்னு" நான் கத்தினேன்.

கண்ணை கூடத் திறக்காமல், "முதலிரவா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருச்சு, அன்னிக்கு படம் வரையரேன்னு சொல்லிவிட்டு, படம் மட்டும்தான் வரையலை. நானா சொன்னேன், இவ்வளவு நகை போட்டுக்கிறேன்னு, இவ்வளவு வெயிட்டான புடவை கட்டிக்கிறேன்னு... எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான் தூங்குறேன்." சொல்லிவிட்டு ஐந்து நிமிடத்தில் தூங்கிப்போனாள்.

நான் அவள் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டேன், அவளிடமிருந்து ஒரு அற்புதமான வாசனை வந்து கொண்டிருந்தது, எனக்கு ஆச்சர்யமாயிருந்தது இவளை முதல் முதலில் ஆஸ்பிடலில் பார்க்கும் போது நான் நிச்சயமாக நினைத்திருக்கவில்லை, எங்களுக்கு கல்யாணமாகும், இவள் முதலிரவில் எனக்கு தூக்கம்வருது நான் தூங்குறேன்னு சொல்லி தூங்குவான்னு. ஆனால் எனக்கு அதனால் தான் அவளைப் பிடித்திருந்தது. நான் சொல்வதையும் மறுத்துப் பேச ஒரு ஆள் இருக்கவேண்டும் என நினைக்கும் எனக்கு அவளைப் பிடித்திருந்ததில் அர்த்தம் இருந்ததாகபட்டது எனக்கு. சிறிது நேரத்தில் நானும் தூங்கிவிட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ எழுப்பவது போல் இருந்ததால் திடுக்கென்று எழுந்தேன்.

"சே, நான் அப்பவே நினைத்தேன் நீங்க இப்பிடித்தான் எழுந்திருப்பீங்கன்னு; அதனாலத்தான் எழுப்பாம இருந்தேன். ஏன் ரவி, இப்பிடி திடுக்கினு எழுந்திருக்கிறீங்க, நான் பயந்திட்டேன் தெரியுமா?"

"என்னடி விளையாட்டா, யாராவது தொட்டா எழுந்திருக்க மாட்டாங்களா? ஆமா மணியென்ன ஆகுது. நீ தூங்கலை?"

"நாலு இருக்கும்னு நினைக்கிறேன். என்னடா இது முதலிரவுல போய் இப்பிடி தூங்கிட்டமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், அதுவும் நான் சொன்னதும் ஒன்றும் சொல்லாம அழகா தூங்குற உங்களைப்பார்த்தா பாவமா இருந்தது. அதான் எழுப்பலாம்னு பார்த்தா, இப்பிடி பயமுறுத்துறீங்க." சொன்னவுடன் நான் அவளை இழுத்து பக்கத்தில் இறுக்கிக் கொண்டேன். பிறகு, "இங்கப்பாரு நானே உனக்கு சொல்லணும்னு நினைச்சேன்; நமக்கு கல்யாணம் ஆனாலும் உன்னுடைய உரிமைகள் எதையும் நீ இழந்திடலை, இதுக்காக மட்டும் இல்லை. உன்னுடைய வேறு எந்த விஷயத்திலும் உன் விருப்பம் இல்லாம நான் நடந்துக்கமாட்டேன்னு. ஆனா அதுக்கு முன்னாடி நீயே எடுத்துக்கிட்ட அந்த உரிமையை, அதில் சந்தோஷம் தான். ஆனா முதலிரவில நீ இந்த உரிமையை கேட்பேன்னு நினைக்கலை; இருந்தாலும் சந்தோஷம் தான்."

"ரவி உங்களைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்; இருந்தாலும் என்னடா இது ராணி மாதிரி இல்லை ராணியாவே வாழ்க்கை கொடுத்திருக்கோம்; இருந்தாலும் நமக்காக இவ இதைக் கூட பண்ண மாட்டேங்கிறாளேன்னு நினைச்சிருவீங்களோன்னு பயந்தேன். பரவாயில்லை நீங்க நான் நினைச்சமாதிரியே தான் நினைக்கிறீங்க."

"சரி நிம்மதியா தூங்கினியா?"

"ம்ஹூம் தூக்கமே வரைலை, ஒரு நல்ல பையனை பட்டினி போட்டுட்டு தூங்குறமேன்னு நினைச்சிக்கிட்டே தூங்கினேனா, ஒரே கெட்ட கெட்ட கனவா வருது. நீங்க நிஜத்தில தான் நல்லவரு, கனவிலே ம்ஹூம் ரொம்ப மோசம். எந்திருச்சி பார்த்தா ஜோரா தூங்குறீங்க, என்னையத் தூங்கவிடாம பண்ணிட்டு நீங்க தூங்குறதப் பார்த்ததும்தான் எழுப்பினேன்."

"ஏய் கனவிலே நான் என்னா பண்ணினேன் சொல்லு, சொல்லு?"

"சீய், அதெல்லாம் சொல்ல முடியாது. வெக்கமா இருக்கு..."

அதற்கு பிறகு எங்கள் வாழ்க்கை திரும்பவும் பழைய நிலைக்கே வந்துவிட்டது. அதாவது சரியான நிலைக்கே, நான் அப்பாவின் கம்பெனியை பார்க்கத் தொடங்கியிருந்தேன். சில நாட்களிலேயே கம்பெனிக்கு ஒரு ஃபோன், மதுமிதா மயக்கம் போட்டு விழுந்திட்டான்னு. நான் நேரா வீட்டுக்கு வந்து டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனேன். அன்றைக்கு முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்ததாக சொன்ன டாக்டர் ஒரு குண்டையும் வேறு தூக்கி என் தலையில் போட்டார். மதுமிதாவிற்கு ஆன ஆக்ஸிடெண்டால் அவள் கர்ப்பப்பை கொஞ்சம் வீக்காயிருக்கு, அதனால் கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடுங்கன்னு சொன்னார்.

நான் டாக்டரிடம், "கொஞ்ச நாளெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாக்டர், அவளுக்கு பிரச்சனைன்னா குழந்தையே வேண்டாம் எங்களுக்கு..."

"ரவி, நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பிரச்சனையில்லை. ரெண்டு மாசம் நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாங்கன்னா எல்லாம் சரியா போயிடும். ஒரு முக்கியமான விஷயம், இதைப்பத்தி அவங்ககிட்ட சொல்லாதீங்க, என்னதான் பெண்ணு கொஞ்சம் தைரியமானதா இருந்தாலும் குழந்தை சம்மந்தப்பட்ட விஷயத்தை தாங்க மாட்டாங்க. அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா, கவனமா இருங்க அதுபோதும்!" டாக்டர் சொல்லவந்தது புரிந்தது எனக்கு. நான் ஜாக்கிரதையா இருக்கத் தொடங்கினேன். அவளிடம், "என்னம்மா இது, டாக்டர் என்னைத் திட்டுறார். உங்களை பிடிச்சித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அவங்கன்னு கேட்கிறார். ஏம்மா சாப்பிடாம இருந்த?"

"என்ன ரவி இதுமாதிரியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்துறீங்க, உண்மையிலேயே ஞாபகமே வரைலை, எதையெதையோ யோசித்துக்கிட்டே இருந்துட்டேன், வானதிகூட இரண்டு முறை வந்து கூப்பிட்டா. மறந்திட்டேன். இனிமே கவலைப்படாதீங்க நிறைய சாப்பிட்டு, வானதி மாதிரி அழகா ஆகாட்டியும் பரவாயில்லை, உடம்பையாவது அவளை மாதிரி கொண்டுவந்திர்றேன்."

நான் சிரித்துக்கொண்டே, "உனக்கு வானதிய பார்த்து பொறாமையா இருக்குள்ள?" திரும்பி என்னைப் பார்த்தாள்.

"உண்மையை சொல்லணும்னா ஆமாம், என்னா அழகா, அம்சமா இருக்கா. நீங்கதான் அடிக்கடி என்னை கேட்பீங்களே என்னாடி ஒன்னையுமே காணோம்னு, சொல்லப்போனா அதில் தான் பொறாமையேன்னு வைச்சுக்கோங்களேன்." சிறிது இடைவெளி விட்டு, "அப்பிடியே உங்களோட ட்வின் மாதிரியே வேற இருக்காளா, நான் அவளையே சிலதடவை பார்த்துக்கிட்டிருப்பேன், உடனே பக்கத்தில் வந்து, உங்காளு கம்பெனியல் இருக்காரு; நான் வானதி, விட்டாக் கடிச்சி தின்னுடுவீங்க போலிருக்குன்னு ஒரு தடவை கேட்டா. நான் பெரும்பாலும் பெண்கள் கூட பழகவேமாட்டேன் எப்பப் பார்த்தாலும் புடவை, நகைன்னு தான் பேசுவாங்க, ஆனா அப்பிடியில்லாம அவ வேற மாதிரி இருக்கா; ம்ஹும், ஆனா எனக்குத்தானே நீங்க கிடைச்சிருக்கீங்க, அதுவே போதும் எனக்கு. ரவி, ஒரு சந்தேகம் நீங்க ஏன் உங்க அக்கா பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலை?" நான் சிறிது நேரம் யோசித்தேன்.

"அதுக்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். நான் உன்கிட்ட முன்னையே சொல்லியிருக்கேன், நான் பிறந்த ஒரு மாதத்திலேயே எங்கம்மா செத்து போயிட்டாங்கன்னு, அதுனால என்னைய வளர்த்தது எல்லாம் அக்காதான்னு. அக்காவுக்கு ஒரு மாசத்தில குழந்தை பிறந்ததால எனக்கும் வானதிக்கும் சேர்த்துதான் அக்கா பால் கொடுத்து வளர்த்தாங்களாம். நான் இதை நினைவு தெரிஞ்ச கொஞ்ச நாள்களில் தெரிந்து கொண்டேன். அதற்குபிறகு கூப்பிடுறதுதான் அக்காவே தவிர, அவங்க என்னோட அம்மாதான். என்னால வானதிய, பெண்டாட்டியா கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது."

"ஏன் இன்னும் வானதிக்கு கல்யாணம் பண்ணாம இருக்காங்க?"

"எங்க வழக்கப்படி சொந்தத்தில் மாப்பிள்ளை இருந்தால் அவனுக்கு குடுக்காம கல்யாணம் பண்ணக்கூடாது. அதான் இதுவரை ஏற்பாடு பண்ணலை, இனிமே பண்ணீருவாங்க."

அதன் பிறகு நான் அவளை நெருங்கும் பொழுதெல்லாம் ஒரு நாள்கணக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சாமியாராக இருந்தவன்தான் என்றாலும் அப்பொழுது உள்ளதுக்கும் இப்பொழுது உள்ளதுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. அது எனக்கு முன்பு கல்யாணம் ஆகியிருக்கவில்லை, முன்பு நான் பெண் இன்பத்தை உணர்ந்ததில்லை. இதனால் சிலசமயம் நாள்கணக்கு கூடாது என்று சொன்னாலும் மனம் கூடு என்று சொல்லிக்கொண்டிருந்தது. இதனால் நான் என் குரு சொல்லித்தந்திருந்த யோகக் கலைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தேன்.

ஆனால் இந்தக் கலைகளை குறிப்பாக, பிராணயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யும் பொழுது ஏற்படும் ஒரு மன நெகிழ்வு, மனிதனை அவனுடைய இல்லறப் பாதையை விட்டு அகலும்படி செய்துவிடும். அதற்குத்தான் நான் பயந்தேன். அதாவது இந்த விஷயங்களை செய்வதன் காரணமாக எங்கே நான் மீண்டும் இமயமலைக்குப் போய்விடுவேனோ என்ற பயம் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன பெண்டாட்டியை விட்டுவிட்டுப் போகமாட்டோம் என்ற ஒரு நம்பிக்கையும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தது.

நான் என்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கு முயன்றாலும், மதுமிதாவின் செயல்கள் என்னைக் கட்டுப்பாட்டை மீறச்செய்துவிடும் என்று எண்ணம் இப்பொழுது மேலோங்கி வரத்தொடங்கியது. அன்றைக்கு மதுமிதா பாத்ரூமிலிருந்து, "ரவி இங்க வாங்களேன்..." நான் உள்ளே சென்றேன். பாதி உடுத்தி நின்றிருந்தாள்.

"என்னம்மா இது இப்பிடி நின்னுட்டு கூப்பிடுற?"

"ஏன் நின்னா என்னா, நீங்க புருஷன் தானே, சரி அதெல்லாம் இருக்கட்டும். மார்ல கட்டிமாதிரி இருக்கு ரவி, ஆனா வலியே இல்லை. ஒரே பயமா இருக்கு. இந்த மாதிரி கட்டியிருந்தா கேன்ஸர் வரும்னு சொல்றாங்க..."

"பார்த்தா அப்பிடித் தெரியலையே?"

"பார்த்தா எப்பிடி தெரியும், தொட்டுப்பாருங்கன்னா..."

பார்த்துவிட்டு, "அதெல்லாம் ஒன்னும் இல்லை, எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது." தலையில் லேசாய் கொட்டிவிட்டு வந்தேன்.

மனதுக்குள் டைம்ஷீட் ஓடிக்கொண்டிருந்ததால், வேறு எதுவும் பண்ணமுடியாத சூழ்நிலை. மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதுபோன்று அடிக்கடி நிகழத் தொடங்கியிருந்ததால்தான் நான் மிகத் தீவிரமாக யோகம் செய்ய ஆரம்பித்தேன். இப்படியே ஒரு இரண்டு மூன்று மாதம் போயிருக்கும், அந்த நாலுநாட்கள், முன்னால் மூன்று பின்னால் மூன்று, மற்றும் ஒரு மூன்று நாட்கள். இப்படி கணக்கு போய்க் கொண்டிருந்ததால்,. எங்களுக்குள் இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

இந்த இரண்டு மாதங்களில் சிறிது சண்டை கூட நடந்தது.

"ரவி நீங்க சரியில்லை, என்னமோ நினைச்சிக்கிட்டேயிருக்கீங்க. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்."

"என்ன சரியில்லை?"

"சரியில்லைன்னா சரியில்லை, காரணம் சொல்லணுமா?"

"இங்கப்பாரு சுத்தி வளைச்சு பேசாம விஷயத்துக்கு வா..."

"சரி நேராவே வர்றேன். நமக்குள் உறவுங்கிறதே இல்லாம போச்சு, நான் நெருங்கி வந்தாக்கூட நீங்க விலகி போயிருறீங்க. ஒன்னுமே புரியலை. ஆபிஸில் இருந்து வருவதே லேட்டாத்தான். வந்தவுடனே நேரா ரூமிற்குள் வந்து கதவை மூடிட்டி தியானம் பண்ண ஆரம்பிச்சிர்றீங்க. வீட்டில் எல்லோரும் நாம ரூமிற்குள் சந்தோஷமாய் இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா எனக்குத்தானே தெரியும் என்னா நடக்குதுன்னு,

நான் இந்த விஷயத்தை உங்க அக்காகிட்டக் கூட சொல்லலை, நீங்க தியானம் பண்ணுறேன்னு கண்ணை மூடிக்கிட்டு உட்கார்ந்திருப்பதை. ஆனா இனிமேல் தாங்காது திரும்பவும் இப்படியே பண்ணீங்கன்னா, அக்காகிட்ட சொல்லவேண்டியது வரும்." சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

அன்று டைம்டேபிள் அனுமதித்ததால் தாஜா பண்ணி, அன்று இரவு சுகமாய் முடிந்தது. அதன் பிறகு அவள் என்னை எதுவும் கேட்கவில்லை, நானும் சரிதான் என்று அப்பிடியே விட்டுவிட்டேன். சிலநாட்கள் அவள் அக்காவுடனும், வானதியுடனும் கூட போய்ப் படுத்துக்கொண்டாள். அடுத்த இரண்டு மாதத்தில் சொல்லப்போனால் நாங்கள் ஒழுங்காக பேசிக்கொள்வது கூட குறையத்தொடங்கியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவள் வேண்டுமென்றே சில விஷயங்கள் செய்தாலும் என்னால் என்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளை என் பெண்டாட்டி என்பதிலிருந்து ஒரு சாதாராணமான பெண்ணாய்ப் பார்க்க முடிந்தது.

மனது முழுவதும் முழுக்கட்டுப்பாடுடன் செயல்பட்டது. நான் முன்பொருமுறை இமயமலையில் இருந்ததை போன்ற அனுபவம் வரத்தொடங்கியிருந்தது. அந்த சூழ்நிலையில் மதுமிதாவின் முகம் வாடத்தொடங்கியிருந்தது, ஆளும் கொஞ்சம் கொஞ்சமாய் களையை இழக்கத் தொடங்கியிருந்தாள். ஆனால் உடல் கொஞ்சம் பெருத்திருந்தாள். பெருத்திருந்தால் என்றால் ஒல்லியாய் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் உப்பியிருந்தாள்; அவ்வளவுதான்.

இப்படியே இன்னும் ஒரு மாதம் சென்றது, நான் கம்பெனிக்குக் கூட செல்லாமல் தியானம் செய்யத் தொடங்கினேன். என் வீடு கவலையில் ஆழ்ந்தது. அப்பாவும் அக்காவும் வந்து என்னிடம் பேசினார்கள். இந்தச் சமயம் பார்த்து என் குரு எங்கள் அரண்மனைக்கு வந்திருந்தார்.

நான் வாழ்நாளிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், அவர் முன்பு என்னிடம் சொல்லியிருந்ததுதான் ஞாபகம் வந்தது. இனிமேல் கடவுள் நினைத்தால் நாம் சந்திக்கலாம்னு சொல்லிவிட்டு போயிருந்தார். இப்பொழுது வந்திருக்கிறார் என்றால் கடவுள் அனுமதி கொடுத்துவிட்டார் என்றுதானே அர்த்தம். நான் குருவிடம் பேசினேன்; அவர் நான் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லையென்று சொன்னார். ஆனால் நான் யோக வித்தையைப் பயன்படுத்திவருவதை சொன்னவுடன் சந்தோஷமடைந்தார். நான் அவரிடம், "சாமி நான் உங்க கூடவே மலைக்கு வந்திர்றேன்."

"ரவி, அது கூடாது; இப்பொழுது நீ கல்யாணம் ஆனவன். உன்னுடைய நடவடிக்கைகள் ஒரு பெண்ணை பாதிக்கும். ஒரு பெண்ணைப் பாதிக்கும் எந்தச் செயலையும் நான் செய்ய முடியாது."

"சாமி நான் மதுமிதாவிடம் அனுமதி வாங்கி வருகிறேன். அப்பொழுது சம்மதமா?"

"ரவி, ஒரு மனைவி தன் கணவன் தன்னை விட்டுப் போவதை எப்படித்தான் ஏற்றுக்கொள்வாள். இருந்தாலும் நீ கேட்டுப்பார். ஆனாலும் உனக்குக் கல்யாணம் ஆன காரணத்தால், உனக்கு மீண்டும் ஒரு பரிட்சை வைப்பேன். நீ தேறினால் தான், கூட்டிக்கொண்டு போவேன்."

நான் மதுமிதாவிடம் போய் சொன்னேன். முதலில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள், பிறகு சொன்னாள், "நீங்க வருவீங்க ரவி, உங்களால என்னைப் பார்க்காம இருக்க முடியாது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க வருவீங்க?"

அழுது கொண்டே விடைதந்தாள்; அக்காவுக்கும் அப்பாவிற்கும் என்மேல் மிகவும் கோபம். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்; மிகவும்.

என்னுடைய பயிற்சி தொடங்கியது, மிகக் கடுமையான பயிற்சி. மனதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல். நான் வென்று கொண்டேயிருந்தேன். என் நினைவுகள் குடும்பத்தின் பக்கமோ, மதுவின் பக்கமோ திரும்பவேயில்லை. இப்படியே ஆறு மாதம் முடிந்திருக்கும் ஒரு நாள், குரு கூப்பிட்டார், "ரவி உனக்கு ஒரு சோகமான செய்தி..."

மனதை திடப்படுத்திக் கொண்டேன், தந்தையின் மரணத்தை பற்றிய செய்திதான் சொல்லப்போகிறார் என்று.

"மதுமிதா இறந்துவிட்டாள்..."

மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

மயக்கம் தெளிந்தபொழுது நான் குருவின் மடியில் இருந்தேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை, இதில் தான் எனக்கு புரிந்தது நான் மதுவை மறக்கவேயில்லை, எனக்கு நானே நாடகமாடிக் கொண்டிருந்தேன் என்று. அவளை நினைக்கும் பொழுதெல்லாம் சோகம் நெஞ்சை அடைத்தது. எனக்காக, ஒன்றுமே கேட்காமல் என்னுடன் வந்தவள். எனக்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவள். நான் இமயமலைக்கு போகிறேன்னு சொன்னவுடன் அழுதாலும் அனுமதித்தவள்.

நான் ஒவ்வொரு விஷயமாய் குருவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நாங்கள் சந்தித்தது, காதலித்தது, கல்யாணம் செய்து கொண்டது, பிறகு டாக்டர் சொன்னது, அதனால் நான் அவளிடம் இருந்து விலகியது. சொல்லிவிட்டு அழுதேன். பிறகு, "சாமி, மது எப்படி இறந்தாள்?"

"கர்ப்பமாய் இருந்திருக்கிறாள், கர்ப்பப்பை கோளாறு காரணமாய் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்."

"கர்ப்பமாகவா, ம்ம்ம் நான் கவனமாகத்தானே இருந்தேன்." நான் சிறிது நேரம் யோசித்தேன் விளங்கியது "இருக்கும் சாமி, அவள் என்னை ஏமாற்றியிருக்கலாம், மாத்திரை எதுவும் போட்டு அவள் மாதவிடாய்க் கணக்கை மாற்றியிருக்கலாம். அய்யோ கடைசியில் நானே காரணமாய் விட்டேனே. அவளுக்காகத்தானே இவ்வளவும் செய்தேன்..." சொல்லிவிட்டு நான் அழுதேன்.

என்னைத் தேற்றிய குரு, "ரவி, நீ உன் பெண்டாட்டியப் பார்க்கிறதுன்னா இப்ப போகலாம். ஆனா திரும்ப என்கிட்ட வரமுடியாது. பார்க்காமல் இங்கிருப்பதென்றால் உன் பயிற்சி முடிந்துவிட்டது, நாம் இமயமலைச்சாரலுக்கு கிளம்பலாம்..." சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

எனக்கு திரும்ப திரும்ப, அவள் நீங்க என்னை பார்க்க வருவீங்கன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. நான் குருவிடம் போய், "இல்லை சாமி, நான் போய் மதுமிதாவைப் பார்க்கணும். அவள் முகத்தையாவது நிச்சயமாய் பார்க்கணும்." நான் சொன்னதும், அருகில் வந்தவர் என் தலையில் தொட்டு ஆசிர்வதித்தார். பிறகு என்னிடம், "சரி வா போகலாம்." சொல்லி அவரும் என்னுடன் வந்தார் அரண்மனைக்கு.

அரண்மனைக்கு வந்தால், வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் மதுமிதா, அவள் கையில் அழகான ஒரு ஆண் குழந்தை அப்படியே எங்கள் காஷ்மீரத்து சாயலில்; என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. நான் குருவைப் பார்த்தேன். அவர் சிரித்தார் பிறகு, "நான் தான் இதைச் செய்யச்சொன்னேன். முதலில் நான் உன்னைப் பார்க்க வந்தபொழுது நீ அங்குயில்லை. அப்பொழுதுதான் உன் மனைவியைப் பார்க்க நேர்ந்தது. அவளைப் பார்த்ததுமே எனக்கு அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என்று தெரிந்தது. ஆனால் முகத்தில் சந்தோஷமில்லை. அதனால் நான் என்ன காரணமென்று கேட்க, அவள் மொத்த விஷயத்தையும் சொன்னாள்.

நீ டாக்டர் சொன்ன காரணத்தால் இப்படி ஆனதாகவும், ஒரு முறை அவள் குழந்தைக்கான அறிகுறியே தெரியாததால், உன் அக்காவும், உன் மனைவியும் வேறு ஒரு டாக்டரைப் பார்க்க நேர்ந்ததாகவும் அப்பொழுது அந்த டாக்டர் சொல்ல, விஷயத்தைத் தெரிந்து கொண்டவர்கள், இதனால்தான் நீ இவ்வாறு நடந்துகொள்கிறாய் என்று புரிந்துகொண்டார்கள்.

இடையில் இன்னும் சில டாக்டர்களைப் பார்த்து, கலந்தாலோசித்து விட்டுத்தான், அன்று உன்னை ஏமாற்றி உறவு கொண்டிருக்கிறாள் உன் மனைவி. கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும் சரி செய்து கொள்ளலாம் என்று டாக்டர் சொன்னாலும் உயிர்பயம் கடைசி வரையிலும் இருந்தது. அதனால் உன்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்கள்.

எங்கே நீ இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, என்னையும் மீறிவிடுவாயோன்னுதான் நான் வந்ததும், என்னிடம் விஷயத்தைச் சொன்னார்கள். என் அன்பு சிஷ்யனுக்காக நான் ஒரு பொய் சொன்னேன் அவ்வளவுதான்."

என்னால் நம்பவே முடியவில்லை, அவர் சுலபமாகச் சொல்லிவிட்டார். குரு பொய் சொல்லவே மாட்டார். உயிரே போவதாக இருந்தாலும், போகட்டும் என்று பொய் சொல்லாதவர் எனக்காகப் பொய் சொன்னார் என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமாய் இருந்தது. நான் யோசிப்பதை உணர்ந்தவர், "ரவி, நீ சாமியாராகவும் இல்லாமல், சம்சாரியாகவும் இல்லாமல், உன் மனது அலைபாய்ந்தது. முன்பிருந்ததை விட நீ இப்பொழுது பயிற்சியில் தேறியிருந்தாலும், முன்பிருந்ததை போல் சுயமாய் இல்லை. நீ உன்னை இந்த சூழ்நிலைக்கு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாய். இனிமேல் உன்னால் சம்சாரியாக இல்லாமல் இருக்கவே முடியாதென்பதை நிரூபிக்கத்தான் இதைச் செய்தேன்."

பிறகு நானும் மதுமிதாவும், ஸ்ரீலஸ்ரீ கீர்த்திவர்ம மகேந்திர பூபதியும் குருவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.

கீர்த்திவர்மன் யாருன்னு கேக்குறீங்களா, வேறு யாரு பையன்தான்.

முற்றும்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts