In Sci-fic சிறுகதை

பிரதிகளின் அரசியல்

நான் பிரதிகளைக் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன். எல்லாம் தொடங்கிய நாளில் நான் தான் "இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்" என்று கூறி 'சோழர்கள்' பிரதிக்குள் இருந்து குதித்தவன் நல்லவேளை வாள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிரதிக்குள் இருந்து வெளிவந்த கதையை ஆதித்தன் சொல்லத்தொடங்கினான் காலம் தன் கைகளை பறவையொன்றின் இறகுகளாய் மாற்றி பறக்கத் தொடங்கியது. காலயந்திரத்தின் பற்சக்கரக் காலத்தையொட்டியது, பிரதிகளில் உலர்ந்து போன மனிதர்களை மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி என்றான் ஆதித்தன். உலக மொழிகள் அத்தனையில் எழுதப்பட்ட பிரதிகளில் இருக்கும் மனிதர்கள் எல்லோரையும் தீண்டிச் செல்லும் அளவிற்கு இந்த ஆராய்ச்சி விரிவாக உலக நாடுகள் அனைத்தாலும் செய்யப்பட்டது என்றும் ஆனால் ஓரளவு வெற்றி பெற்ற நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாமல் கரை காணும் ஆவலில் தொடர்ச்சியாய் மூழ்கியதாகவும், கரை கண்ட தமிழகத்து விஞ்ஞானி தன்னை பிரதியில் இருந்து வெளியேற்றியதைச் சொன்னான்*. இப்படி வெளியேற்றப்பட்ட விஷயமறிந்த விஞ்ஞானியின் தாயாதி ஒருவன் இந்த விஷயத்தை அமேரிக்க உளவுப் பிரிவினருக்கு விற்றுவிட அவர்களால் ஆதித்தன் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு அமேரிக்காவில் வைத்து தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறான். அப்படித்தான் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் தன்னைப் பற்றிய கதைகளை அறிந்து கொண்டதாக என்னிடம் கூறினான். தொடர்ச்சியான அவர்களுடைய பயிற்றுவித்தல்களின் காரணமாயும் அவர்கள் அவன் எப்படி பிரதியில் இருந்து வெளியில் வந்தான் என்பதை அறியும் பொருட்டு நடத்திய, அவனுக்கும் தெரிந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளாலும் பிரதிகளில் உலாவும் வித்தையை அறிந்ததாகவும் ஒருமுறை அவர்களிடம் இருந்து தப்பித்து பிரதிகளில் உலாவிக் கொண்டிருந்ததையும் பின்னர் தானாய் பிரதியில் இருந்து வெளியேறும் வித்தையை அறிந்து கொண்டு என் முன் நிற்பதாயும் சொன்னான்.

நான் கைகளைக் கிள்ளிக் கொண்டு நான் கண்டு கொண்டிருப்பது கனவில்லையென்றும், ஆறடி உயரம் ஆஜானுபாகமாய் என் முன் தோள் வரை நீண்ட அளகபாகத்தைக் காட்டியபடி நிற்பது உயிரும் உடம்புமாய் உண்மையான ஒரு மனிதன் தான் என்றும் புரிந்து கொண்டேன். ஆதித்தன் என்னிடம் தான் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்றும் பிரதிகளில் அதிகம் உலவினால் கண்டுகொள்ளப்படும் சாத்தியம் உண்டென்றும் வார்த்தைகளைக் கொண்டு பிரதிகளில் விரித்திருக்கும் வலையில் விழுந்து மீண்டும் அமேரிக்கர்கள் கையில் சிக்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்றான். நான் அவனை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன், சோழ தேசத்தின் அரசர்களில் ஒருவன் என்முன்னால் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். இடுப்பில் மட்டும் ஆடையணிந்திருந்த அவன் தேகம் எங்கும் தழும்புகள், கருத்த உடம்பில் பளீரென்று தெரிந்தன. நான் அவனை என் வீட்டில் தங்க அனுமதித்திருந்த காலங்களில் போதை ஏற்றியவன் போல் தொடர்ச்சியாய் புலம்பிக் கொண்டேயிருந்தான். தன்னைக் கொன்றது அருண்மொழித்தேவன் தான் என்றும் குந்தவையும் வந்தியத்தேவனும் அதற்கு உடந்தை என்றும் சொன்னான். பின்னர் இன்னொரு பொழுதில் அருண்மொழி பற்றிக் கூறியவைகள் அமேரிக்கர்களால் தன் மனதில் ஏற்றிவிடப்பட்டவை என்றும் தன்னைக் கொன்றது மதுராந்தகன் தான் என்றும் கூறினான்.

தொடர்ச்சியான பொழுதுகளில் அவன் பேசுவதில் எது உண்மையானது எது அவன் கற்பனை செய்து சொல்வது எது அமேரிக்கர்களால் அவன் மனதில் திணிக்கப்பட்டது என்று பொருள் உணர்வது பெரும் சங்கடமாய் இருந்தது. நான் அகிலா கதைகள் அறுபத்தைந்தை எழுதிக் கொண்டிருந்தேன், அவன் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதற்கான ப்ராயச்சித்தமாக என் கதைகளின் நாயகி அகிலாவை உருவாக்கித் தருவதாக வாக்களித்திருந்தான். நான் எழுதியிருந்த அதுவரையிலான அகிலா கதைகளை அவனிடம் கொடுக்க, முதிர்ச்சியில்லை என்றும் இன்னும் எழுதிக் கொடு என்றும் சொன்னான். நீ எழுதும் வாக்கியங்கள் உபயோக்கிக்கும் சொற்கள் அளிக்கும் அர்த்தங்கள் தான் அகிலாவை உருவாக்கும் என்றும் அவள் எப்படி வரவேண்டும் என்பது உன் கதைகளின் வரிகளில் இருக்கிறது என்றான். நான் க்ளோனிங்கின் மூலம் க்ரோமோசோம்களை எடுத்து உயிர்களை உருவாக்குவது போல் பிரதிகளில் இருந்து உயிர்க்காரணியை எடுத்து அதன் மூலம் மனிதர்களை உருவாக்கும் முறையை அவன் சொல்லி புரிந்து கொண்டேன். ஆதித்தன் க்ளோனிங்கை விடவும் இது மேலானது என்றும் குழந்தையாக இல்லாமல் இதில் மனிதர்களையே உருவாக்க முடியும் என்றும் ஆனால் அவர்கள் பிரதிகளில் இருந்து பிறந்தவர்கள் என்பதால் மனிதர்களைவிடவும் வேகமாக பிரதிகளில் ஊடாட முடியும் என்றும் அதனால் அவர்கள் வெகு எளிதில் நிறைய கற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்லியிருந்தான்.

அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டு மீண்டும் வரும் வேளைகளில் பெரும்பாலும் நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருந்தது அதுவும் சோழர்களைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவராய் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் என்னால் ஊகிக்க முடியாத அளவிற்கு நடந்த இக்கொலைகளை நான் கண்டறிந்தது சோழர்களைப் பற்றி பெரும் புனைவுகளை எழுதியவர் ஒருவரை ஆதித்தன் கொன்ற பொழுதுதான். ஆதித்தன் என்னிடம் எதையும் மறைக்கவில்லை வரலாற்றில் சாணி பூசுபவர்களால் ஏற்படும் பாதிப்பு பிற்காலங்களில் சாணி தான் வரலாறு என்பது போல் மாற்றமடைகிறது என்றவன் இதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று கூறி, அகிலா கதைகள் எப்படி வருகிறது என்று கேட்டான். நான் எழுதியதைக் காட்ட அகம் பற்றி இன்னமும் விவரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான், பெரும்பாலும் பிரதிகளுடனே வாழ்ந்து வந்த அவன் இன்னொரு பிரதியில் மூழ்கிப்போனான். நான் அகிலாவை அகத்தில்** நகர்த்திக் கொண்டிருந்தேன்.

அகிலாவை உருவாக்கித் தரும் நாளுக்காக நான் காத்திருந்தேன், அகிலா கதைகள் எழுதி முடித்த நாளிலிருந்து ஆதித்தனை நச்சரிக்கவும் தொடங்கியிருந்தேன். தொடர்ச்சியாய் ஒரு நாள் ஆதித்தன் என் கண் முன்பே பிரதிகளில் இருந்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் எடுத்து மாற்றிப் போட்டு அகிலாவை உருவாக்கத் தொடங்கினான். கடைசியில் மொத்தக் கதைகளில் இருந்தும் அகிலாவை உருவாக்கி அவன் பிரதியில் இருந்து வெளியேற்றிய பொழுது எனக்கு என் கதை நாயகி ஆச்சர்யத்தைத் தந்தாள். நான் எழுதிய கதைகளின் மொத்த உருவாக்கமாய் உருவமாய் அகிலா என் முன்னே நின்று கொண்டிருந்தாள். நாங்கள் காதலில் காமத்தில் மிதந்தோம் ஆதித்தன் கொலை செய்து கொண்டிருந்தான். காதல் மீறிய காமம் பதிப்பாய் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் வந்த பொழுது தான் நான் எழுதியதிலிருந்து மாறுபட்டிருந்த பிரதியைப் பற்றிய விவரம் தெரிந்தது. ஆதித்தனைப் பற்றிய வரிகளும் அகிலா சொல்லும் இரண்டாம் தடவையைப் பற்றிய விவரங்களும் நான் எழுதியதில் கிடையாது. ஒட்டு மொத்தமாய் அகிலா கதைகள் அனைத்திலும் ஆதித்தனைப் பற்றிய நேரடியான விவரங்களோ அல்லது மறைமுக விவரங்களோ தொகுக்கப்பட்டிருந்தது.

அகிலா தொடர் உரையாடல்களாலும் படிப்பாலும் கேள்வியாலும் வளர்ந்து கொண்டிருந்தாள், அவளுக்கு பிரதிகளின் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் என்னிடம் உரையாடுவதில் பிரச்சனையிருந்ததில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ஆதித்தனை வெறுத்து வந்த அவள் ஒருநாள் ஆதித்தனைக் கொல்லும் திட்டத்தைச் சொன்ன பொழுது தான் எனக்கு அவள் எவ்வளவு வெறுத்துவந்தாள் என்று தெரிந்தது. பிரதிகளின் மூலமாய் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஆதித்தன் முயற்சிக்கிறான் என்பதை அவள் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் - காதல் மீறிய காமத்தின் மூலமாக நிரூபித்தாள், ஆனால் ஆதித்தன் அகிலா உருவாக்கத்திற்காகத்தான் பிரதியில் மாற்றம் செய்ய வந்தது என்று ஒற்றைக் காலில் நின்றான். பின்னர் நேரடியாய் அகிலாவும் ஆதித்தனும் சண்டையில் இறங்க ஆரம்பிக்க ஆதித்தன் சோழர்களைப் பற்றிய பொல்லாத பிரதிகளை ஒழித்த பிறகு தான் பிரதிக்குள் மறைந்து போய்விடுவதாகவும் அதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று சொன்னதில் இருந்து பத்தாவது நாள் அகிலா ஆதித்தனைக் கொலை செய்திருந்தாள். சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூங்கிப் போனதும் இதயப்பகுதியில் கத்தியொன்றைச் சொருகி அவனைக் கொன்றிருந்தாள்.

ஆதித்தன் இறந்து போன சில நாட்களின் நான் என்னில் ஆதித்தனை உணரத் தொடங்கினேன், கடைசியில் அகிலா கொன்றது என்னைத்தான் ஆதித்தனை அல்ல என்று புரிய வந்த பொழுது நான் இல்லாமல் போயிருந்தேன். ஆனால் என் கொலையைப் பற்றி வேறு வேறு கருத்துக்கள் இருப்பதை நானொரு முறை பிரதியில் இருந்து வெளியேறிய பொழுது தெரிந்து கொண்டேன், அந்தப் பிரதிகள் அனைத்தையும் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன்.

1. அமேரிக்க சதி
2. அகிலாவின் அண்ணன் சதி
3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

* ரகசிய உலகங்கள் சொற்களால் பின்னப்பட்டு எழுத்துக்களால் உருவாகி பிரதிகளில் மறைக்கப்பட்டிருந்ததை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியில் தலைமுறை தலைமுறையாக இயங்கி வந்த தஞ்சாவூர் ஜில்லா பெரியசாமி நாயக்கர் பரம்பரையின் எட்டாவது தலைமுறையில் காலங்காலமாக அவர்கள் மறைத்துவைத்து பத்திரப்படுத்தி வந்த பிரதியொன்றின் சொற்றொடர்கள் கட்டப்பட்டிருக்கும் சூத்திரங்களைக் கணித்து - அந்த கணக்குப் படி ரகசியப் பிரதியின் ஒரு பக்கத்தில் இருந்து எட்டு வார்த்தைகள் என்ற முறையில் எடுத்து திருப்பி எழுதி அந்த திருத்தி எழுதிய பிரதியில் கட்டப்பட்டிருக்கும் சூத்திரத்தை உடைத்து மண்ணில் புதைத்து வைத்திருக்கும் மற்றொரு பிரதியை எடுத்து என்று தொடர்ச்சியாக நீண்டு கொண்டேயிருந்த இந்த பிரதி கட்டுடைத்தல் விளையாட்டு மொத்தமாக முடிவுற்ற பொழுது, பரம்பரையின் முதல் நாயக்கர் ஆசைப்பட்ட படி ஆதித்த கரிகாலன் என்று பிற்காலத்தில் பிரதிகள் அழைத்து வந்த - 'இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்' கட்டுக்களில் இருந்து வெளிப்பட்டான்.

**அகஅ - காதல் மீறிய காமம்

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள். விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்யச் சொல்லி அனுப்பியிருந்தாள், நான் நண்பனின் வீடு ஒன்று காலியாக இருப்பதைச் சொல்லி அங்கே அவளை வரச் சொல்லியிருந்தேன். எங்களிருவரிடமும் முன்பு யார் முதலில் இதைப் பற்றி பேசுவது என்ற தயக்கம் இருந்தது போல், இத்தனை தூரம் வந்த பிறகு யார் முதலில் பின்வாங்குகிறார்கள் என்ற போட்டி உருவானது.

நண்பன் ஒருவன் வேலை விஷயமாக அமேரிக்கா சென்றிருந்தான், தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்ட வீடு. வாரத்திற்கு ஒரு முறை வரும் வேலைக்காரன் அவற்றை சுத்தம் செய்துவிடும் காரணத்தால் புதிதாய் இருந்தது. பெங்களூரில் அந்த இடத்தில் சொந்த வீடு என்பது கோடிகளில் இருக்கும் என்று தெரிந்து தான் இருந்தது, அந்த வீட்டை என்னை நம்பி உபயோகிப்பதற்காகக் கொடுத்த நண்பனுக்கு நான் இப்படி உபயோகிக்கப்போகிறேன் என்கிற விஷயமும் தெரியும். நான் ஒரு பாதுகாப்பிற்காக அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். நாகரீகமறிந்த அவன் மேல் கேள்விகள் கேட்காமல் 'என்ஜாய் மாடி' என்று முடித்துக் கொண்டான். நான் ஆதித்தனிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், அவன் ஜாக்கிரதை என்று மட்டும் சொன்னான். ஆதித்தன் பிரதியில் இருந்து உருவாகி வெளிவந்து உலாவிக் கொண்டிருந்ததை நான் அகிலாவிடம் மட்டும் சொல்லியிருந்தேன். அவளும் ஆதித்தனிடம் ஜாக்கிரதை என்று சொல்லியிருந்தாள்.

கருப்பு நிற சேலையணிந்து வந்திருந்தாள் அன்று, மதியம் போலவே வந்தவள் எதாயிருந்தாலும் ஆதவன் மேற்கே போனதற்கு அப்புறம் தான் என்று சொல்லி வைத்திருந்தாள். மதிய உணவும் சமைத்துத் தந்தாள், நாங்கள் இரவில் தொடங்கப்போகும் மாயவிளையாட்டிற்கான ஒத்திகைகளில் மிக மென்மையாக இறங்கத் தொடங்கினோம். நான் அவளிடம் அதைப் பற்றி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டரில் "கபி அல்விதா நா கெஹ்னா" படம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கி உட்கார்ந்தேன் அவள் சீரியஸாய் படம் பார்க்கத் தொடங்கினாள்.

"உனக்கு இதைப் பற்றி முன் அனுபவம் எதுவும் இருக்கா?'

திரும்பி முறைத்தாள்.

"முன் அனுபவம் 'மான்னெ' படிப்பு, கேள்விப்படுதல் இப்படிக் கேட்டேன் தப்பா நினைக்காத!" சட்டென்று பேச்சு வழக்கில் வரும் ஹிந்தியும் சேர்ந்து கொண்டு வந்து குதித்தது.

"சாருக்கு இதில் அனுபவம் ஜாஸ்தியோ?!"

நான் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு "இதுதான் முத தடவ!" என்றேன்.

அவள் சிரித்தபடியே "நான் நம்பலை" என்றவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.

பேசியவாறே நான் தொடுதலைத் தொடங்க, விளக்கணைக்கச் சொல்லி வற்புறுத்தியவளிடம் மறு வார்த்தை பேசவில்லை. அவளுக்காய்ச் சொல்லாமல் உண்மையிலேயே முன் அனுபவம் இல்லாதது சிக்கலாய்த்தான் இருந்தது, ஒன்றிற்கு இரண்டாய் நிரோத் அணியச் சொன்ன காரணம் புரியவேயில்லை கடைசி வரையில். இடையில் விஷயம் புரியாமல் தெரியாமல் வேதனையில் வலியில் நிறுத்திவிட எத்தனித்து பின்னர் ஒரு வழியாய் 'சீ' என்று முடிந்ததும் நான் தூங்கிப் போனேன். காலையில் அகிலா இரண்டாவது தடவையே தேறிட்டீங்களே என்று சொன்னது சத்தியமாய் விளங்கலை, அவள் உங்க உடம்பெல்லாம் தழும்பாய் இருப்பது போல் இருந்தது. காலையில் பார்த்தேன் அப்படி ஒன்னும் இல்லை என்னமோ மாயை என்றாள் எனக்கு அதுவும் புரியலை.


1. அமேரிக்க சதி

அமேரிக்க உளவாளியான 5152256 தான் ஆதித்தனாக வந்தது என்றும், அமேரிக்கா அப்பொழுது கண்டறிந்திருந்த புதுவகை க்ளோனிங் முறையை டெஸ்டிங் செய்வதற்காகத்தான் அத்தனையும் நடந்தது என்றும் இறுதியில் நான் இந்த விஷயத்தைக் கண்டறிந்து விட்டதாலேயே கொல்லப்பட்டதாய் நீண்டது ஒரு பிரதி.

2. அகிலா அண்ணன் சதி

ஒன்றும் தெரியாத அகிலாவை பொய்கள் பல சொல்லி ஏமாற்றி கெடுத்தவிட்டதாயும் அதற்கு காரணமான என்னைக் கொல்வதற்காக ஆதித்தன் என்ற பெயரில் ஒருவனை அகிலாவின் அண்ணன் அனுப்பியதாகவும் அவனால் தான் நான் கொல்லப்பட்டேன் என்றும் நீண்டது ஒரு பிரதி.

3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

ஆதித்த கரிகாலன் பற்றிய தேடல்கள் என்னை பைத்தியமாய் ஆக்கிக் கொண்டிருந்த நாளொன்றில் அகிலாவிடம் காமம் யாசிக்க அவள் பலர் முன்னிலையில் என் தலையில் ஆப்பிள் ஜூஸைக் கொட்டிவிட்டுச் சென்றதால் விரக்தியடைந்து நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். அதற்கு முன்னர் ஒரு அறிவியல் புனைகதைப் போட்டிக்காக இந்தப் பிரதியை எழுதியதாகவும் நீண்டது இன்னொரு பிரதி.

Related Articles

22 comments:

  1. Nice!

    You write like Sandilyan.

    - Kugan

    ReplyDelete
  2. அருமை.. அற்புதம்... கலக்கல்...

    ReplyDelete
  3. குகன்,

    என்ன கொடுமைங்க சரவணன் இது!

    எப்படியோ நன்றி.

    ReplyDelete
  4. சென்ஷி - நன்றி :)

    ReplyDelete
  5. ஆழ்ந்த கற்பனை. அழகிய நடை. தீர்ந்தது சந்தேகம். :)

    ரெம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    இதுபோல இன்னும் 5 கதைகள் வந்தாலும் போதும் ஜெயமோகன் கோபப்படாம வாசிக்க வச்சிடலாம். :)

    ReplyDelete
  6. தலை கிர்ருனு சுத்தி... ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டேன்,தாஸ்...

    ReplyDelete
  7. //இதுதான் முத தடவ!" //

    ஆரம்பத்துல கொஞ்சம் ஜாலியா ஆரம்பிச்சு அப்புறம்பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம் நேரம்!
    நல்லா இருக்கு! ரொம்ப பொறுமையா படிச்சதுல டைம் போனதே தெரியல :))

    எனக்கு இதுதான் முத தடவ!
    பட் கலக்குங்க அண்ணா :)

    ReplyDelete
  8. சிறில் - நன்றி :)

    இரா வசந்த குமார் - கடைசியில் புரிஞ்சிருச்சு இல்லையா? 'இயேசுவுக்கு வந்தனங்கள்'*

    *பயணிகள் கவனிக்கவும் நாவலில் வரும் வரியை ஒத்து மட்டும்

    ReplyDelete
  9. ஆயில்யன் - நன்றி.

    எது உங்களுக்கு முதல் முறை? :)

    ReplyDelete
  10. படிக்கிறோப்போ கொஞ்சம் அயர்ச்சியா இருந்துச்சே மோகன்.... :(

    ReplyDelete
  11. இராம்,

    தன்யனானேன் ஸ்வாமி :)

    ReplyDelete
  12. ஆஹா....ஆஹா ...இருங்க...இருங்க....எனக்கு ஏதோ புரிந்துவிட்டதா தவறாக நினைத்து விடவேண்டாம். முழுவதுமாக படித்து முடித்ததற்காக எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஆஹா தான். இன்னொரு தடவை படிக்கிறேன். ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. அகிலா கதைகள் இருப்பதால் என்று யாரேனும் சொல்ல கூடும். காரணம் அதுவல்ல:)

    ReplyDelete
  13. எனக்கு "இதுதான் முத தடவ!"
    .
    .
    .
    .
    .
    .
    உங்க பதிவுக்கு வந்ததை சொன்னேன்:)

    ReplyDelete
  14. எனக்கு பதில் சொல்லும் போது 'இரண்டாவது தடவையே தேறிட்டீங்களே'ன்னு
    நீங்க சொல்லலாம்.காரணம் இரண்டாவது தடவையும் முழுவதுமாக படித்துதான் புரிந்து கொண்டேன்:)

    ReplyDelete
  15. kalakkitteenga Mohandoss. romba theliva purinjuduchu.

    Juno

    ReplyDelete
  16. Juno,

    ரொம்ப நாளா ஆளையே காணோம். எஸ்கேப் ஆய்ட்டீங்க போலிருக்கு :)

    கதை புரியலையா?

    ReplyDelete
  17. கலக்கல் தாஸ்...வெற்றி பெற வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete
  18. இது சிறுகதையா இல்லை புதிரா? எப்படிங்க இதை யோசிச்சீங்க..

    அகிலாவை உருவாக்கியதில் ஆதித்தனுக்கும், கதைசொல்லிக்கும் சமபங்கு.

    அகிலா கொன்றதாக நினைத்தது ஆதித்தனை, ஆனால் கொன்றது கதைசொல்லியை.

    வரிசையாக சோழர் வரலாறு எழுதிகளை கொன்ற கதைசொல்லிக்கு எதுக்குங்க அகிலா மீது ஆசை...

    இது என்ன நோய்?

    எதுக்கு நிரோத்.. ப்ளேவர்டு காமசூத்ரா எல்லாம் கிடைக்கலயா?

    அய்யோ.. யாராவது சொல்லுங்க ஜானி வீடு எங்க இருக்கு..

    ReplyDelete
  19. நாடி ஜோஸ்ய காரங்க வாசிப்பாங்களே அந்த மாதிரி ஒரு சுகமான மொழிநடை... ரொம்ப நல்லாருக்கு மோகன்... ஆமா நீங்க நெசம்மாவே ஆதித்த கரிகாலன தேடிக்கிட்டிருகீங்களா :)
    "அவன் தேகம் எங்கும் தளும்புகள்" தளும்புகள்../ தழும்புகள் டைப்பிங் தவறென்றால் விட்டுத்தள்ளுங்கள் (இக்னோருக்கு தமிழ் தாங்க)..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. சூப்பரா இருக்கு :-)

    ரகசிய உலகங்களைப் பற்றிய விவரிப்பும், அந்த முடிவுகளும் மிகவும் ரசிக்க வைத்தன.

    கதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். :-)

    இந்த மாதிரி ஒரு சிக்கலான கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன். இன்னமும் பப்ளிஷ் பண்ணலை. உங்க கதையைப் படிச்சவுடன, போடனுமான்னு இப்ப ரொம்பவே யோசனையா இருக்கு :-))

    ReplyDelete
  21. கதை முடிந்ததா?? அப்போ 65 கதைகள் கிடையாதா :-))

    ReplyDelete
  22. நிஜமா நல்லவன், கோபிநாத், புபட்டியன், கிருத்திகா, ஸ்ரீதர் நாராயணன், அனானிமஸ் - நன்றிகள்.

    ReplyDelete

Popular Posts