In இருத்தலியநவீனம்

நான் கவிழ்த்த கோப்பைகள்

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.



ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

---------------------------------

தேவைப்பட்டால் முடிந்தால் தொடர்வேன்...

Related Articles

13 comments:

  1. எல்லாம் ஒரு ரெஞ்சாதான் இருக்கீங்க...

    ReplyDelete
  2. தம்பி மோகந்தாஸு மெய்யாலுமே இது நீ எழுதுனதுதானா? அப்பாலிக்கா இது இவுரு எழுதுனது அப்பிடின்னு போடமாட்டியில்ல.:-)))
    சூப்பரப்பூ.

    ReplyDelete
  3. pavan, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ;)

    ReplyDelete
  4. //தம்பி மோகந்தாஸு மெய்யாலுமே இது நீ எழுதுனதுதானா? //

    நான் எழுதினதுதான்

    //சூப்பரப்பூ.//

    நன்றி.

    ReplyDelete
  5. ஏன் கடைசியில் இப்படி இறங்கிட்டீங்க ;)

    ReplyDelete
  6. நான்கு வரிக்கு மேல் படிக்கவில்லை, உள்ளடக்கம் படிக்கும் வண்ணம் இருக்கிறதா என்பது வேறு, ஆனால் வரிவடிவமே எனக்கு தகறாறு செய்கிறது, கவிதை, கட்டுரை அல்லது கவிட்டுரையா இது? ஒன்னியும் பிரியலை!.

    ஆனால் பல கோப்பைகளும் ,புட்டிகளும் கவிழ்ந்த பிறகு எழுதப்பட்டது என்பது மட்டும் உண்மை!(இதில் வேறு ஒருவர் சூப்பர் என்கிறார், உண்மையில் அவர் தெய்வம்)

    ReplyDelete
  7. சரி, சரி, தீபாவளிக்கு வர்ற அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியதுதான், ரெம்ப maturity வந்துருச்சு.

    ReplyDelete
  8. அனானிமஸ் உங்களுக்கும் பவனுக்கு சொன்னப் பதில் தான். ;)

    ReplyDelete
  9. வவ்வால்,

    உண்மையில் நான் கோப்பைகளைக் கவிழ்த்த பிறகு எழுதியதுன்னு நீங்க நினைக்கிறீங்கன்னா நான் எழுதினது சரியா வந்திருக்குன்னு தான் அர்த்தம்.

    //நான்கு வரிக்கு மேல் படிக்கவில்லை, உள்ளடக்கம் படிக்கும் வண்ணம் இருக்கிறதா என்பது வேறு, ஆனால் வரிவடிவமே எனக்கு தகறாறு செய்கிறது,//

    அய்யா! நான் எளக்கியவாதி ஆய்டுவேன் போலிருக்கே!(ஆச்சர்யக்குறி)

    ReplyDelete
  10. //சரி, சரி, தீபாவளிக்கு வர்ற அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியதுதான், ரெம்ப maturity வந்துருச்சு.//

    நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் From/To விமானச்சீட்டு புக் செய்து தரப்படும்.

    நேரில் வந்து சொல்லிட்டுப் போங்க. ;)

    ReplyDelete
  11. பாசகாரபயபுள்ளைகளா இருக்கீகளேப்பா IT , ஒரு ரெண்டு வரி கமண்டுக்கு 999 யூரோ செலவழிச்சு டிக்கட் புக் பண்ணுரதுக்கு தயராகிட்டிரு !! வெட்டிக்கு ஒரு மெயில் அடிக்கனும் IT மக்கள் சம்பாரிக்கிறத பத்தி.

    ReplyDelete
  12. கொஞ்சம் கனவுகள்
    கொஞ்சம் கவிதைகள்
    கொஞ்சம் முலைகள்
    இதற்குமேல் பறக்க
    யாருக்குத்தான் சிறகுகள் இருக்கு...

    என்ற விக்ரமாதித்தியன் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  13. ஜமாலன் எப்படியோ நீங்கள் எழுதிய இந்தப்பின்னூட்டத்தை தொடராமல் விட்டுவிட்டேன்.

    சிறகு விரிக்க நினைக்கும் முயற்சிகள் தான் என்று வைத்துக்கொள்ளலாம் இந்தப் பதிவை. ஆசை இருக்கிறது என்றாலும் சிறகு விரியவேண்டுமல்லவா? ஆனால் அதற்காக முயற்சி செய்யாமலே இருக்கக்கூடாதென்பதற்காக என் சிறகு விரித்தல் முயற்சிகள் இவை.

    ReplyDelete

Popular Posts