In இப்படியும் ஒரு தொடர்கதை

நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்

"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா"

பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.

"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற!" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.

"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் அதிகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, "போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா!" என்றதும் நழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.

ஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.

அகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட "ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்..." என்று பயப்பட,

"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது?" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.

தொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி "ஞைய்ய்ய்ய்ய்ய்" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. எனக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.

"ம்ம்ம் பொறாமை..." என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.

"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல..." என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.

"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், "சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை!" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.

"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்." அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. "நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத்தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க." என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, "பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்!" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.

எப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.

"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது!" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. "நைனா அது என்ன? நைனா இது என்ன? நைனா இது ஏன் நடக்குது? நைனா இதுக்கு பேர் என்ன?" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.

"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ..." பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிடம் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.

"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'" பின்பாட்டு பாடியவன்.

'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.

அகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.

"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா?"

அவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.

அன்றிரவு, "... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா?" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,

"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க!"

நான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.

"ஏங்க இப்படி செய்றீங்க!" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இருந்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் புரிந்தது.

"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு! இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு! அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.

"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா!" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.

"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது! இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது!" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.

தாவாங்கட்டையில் இடித்தபடி"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க!".

பவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்கியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதமாய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.

போட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.

அவன் காதில் மெதுவாய், "பயப்படாம போய்ச் செய்!" என்று சொல்லி மேடையேற்றினேன்.

பாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் "...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு..." என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.

அத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.

மற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,

"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல! அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்." அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.

அகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்

"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா?"

நான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.

"அகிலா நான் என்ன பவானியா? சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்..." என்னால் தொடரமுடியவில்லை.

அருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,

"என்ன பாவா இது! நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன?"

'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி! அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, "நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா!" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.

-------------------

Credits - Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In கன்னடப் பைங்கிளி காவிரி சிறுகதை

கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி

“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”

தோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.

“என்னம்மா சொல்ற! யாரு அந்தப் பொண்ணு?”

அம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற கவனம் மட்டும் இருந்தது.

“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு! நேத்ரா…”

“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா! ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே!”

“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”

அம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.

ஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,

“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா?” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே! என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.

“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க?” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.

“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா?” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.

சிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.

“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”

காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.

“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே!”

உன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது?” கேட்டாலும் பதில் நேராய் வராது.

“அஷ்டேன்னா? நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா! நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே! அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.

நான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவிடு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.

மொபைல் “எடுறா டேய்!” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.

“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே?”

ரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.

“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.

“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே! அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”

நான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.

“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,

“I know you are too busy, but today no excuses..."

அவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,

“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.

மதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹேகிதே இது!” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,

“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா? ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க! இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின!”

அவள் தலையில் அடித்துக் கொண்டாள்,

“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.

“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”

காதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது அதனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.

நைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,

“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”

அவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.

நேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற?” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

மனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா? கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,

“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

நெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”

என்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,

“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்?!” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.

“ஏன் கேக்குற நேத்ரா! அதுதான் உன் பேரு.”

“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ!” அவள் தலைகீழ் நின்றதால்,

என்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.

…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா
இனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா
பூர்ண சந்திர ரஜா ஹாகிதா
நின்னய முகவனு கண்டக்ஷணா
நா கைதி நீனே செரெமனெ
டப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…

கன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி!

Read More

Share Tweet Pin It +1

19 Comments

Popular Posts