In கன்னடப் பைங்கிளி காவிரி சிறுகதை

கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி

“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”

தோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.

“என்னம்மா சொல்ற! யாரு அந்தப் பொண்ணு?”

அம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற கவனம் மட்டும் இருந்தது.

“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு! நேத்ரா…”

“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா! ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே!”

“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”

அம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.

ஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,

“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா?” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே! என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.

“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க?” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.

“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா?” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.

சிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.

“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”

காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.

“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே!”

உன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது?” கேட்டாலும் பதில் நேராய் வராது.

“அஷ்டேன்னா? நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா! நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே! அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.

நான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவிடு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.

மொபைல் “எடுறா டேய்!” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.

“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே?”

ரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.

“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.

“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே! அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”

நான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.

“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,

“I know you are too busy, but today no excuses..."

அவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,

“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.

மதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹேகிதே இது!” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,

“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா? ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க! இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின!”

அவள் தலையில் அடித்துக் கொண்டாள்,

“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.

“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”

காதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது அதனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.

நைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,

“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”

அவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.

நேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற?” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

மனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா? கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,

“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

நெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”

என்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,

“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்?!” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.

“ஏன் கேக்குற நேத்ரா! அதுதான் உன் பேரு.”

“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ!” அவள் தலைகீழ் நின்றதால்,

என்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.

…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா
இனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா
பூர்ண சந்திர ரஜா ஹாகிதா
நின்னய முகவனு கண்டக்ஷணா
நா கைதி நீனே செரெமனெ
டப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…

கன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி!

Related Articles

19 comments:

  1. இது கதையா, உண்மையா, ஒன்னுமே புரியலையே...கொடுமையே !!!

    ReplyDelete
  2. மகா,

    சத்திய ஹேலுத்தியா...இல்லா..சுள்ளா

    நன்கே மட்டு ஹேலிபிடா... :)

    ReplyDelete
  3. திராவிட மொழிகளெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு மொழி தெரிந்தால் மற்ற மொழிகளெல்லாம் கொஞ்சமாகவாவது புரியும் என்று யாரோ சொன்னார்கள். நீங்கள் கன்னடமாக எழுதியவற்றில் எனக்கெதுவும் புரியவில்லை.

    ReplyDelete
  4. எப்படியெல்லாம் கனா காண வேண்டியதிருக்கு :)

    ReplyDelete
  5. நடத்து ராசா.. கல்யாணம் இப்போ இல்லைன்னு சொன்ன மாதிரி ஞாபகம்..

    ReplyDelete
  6. புரியுது..ஆனா புரியல..;)

    ReplyDelete
  7. ooo ஜாவா தெரிஞ்சா கன்னடத்துப் பைங்கிளி தன்னாலே காதல் மொழி பேசுமா - பரவாஇல்லையே - வாழ்த்துகள். அதான் எல்லாப் பசங்களும் ஜாவா ஜாவான்னு அலையுரானுங்களா

    ReplyDelete
  8. கல்யாணம் எப்போ ? இன்விடேஷன் எல்லாருக்கும் உண்டா இல்லை வெறும் சில பேருக்கு தானா ?

    ReplyDelete
  9. ஏனு மாவா,
    நம்ம மனெ கதே இவருகே யாக்கே ஹேளுதாயிதியா ?

    மனெகெ பா ஒடித்தினி...

    ReplyDelete
  10. ஜாவான்ன கலுசி கரெக்ட் மாடுபிட்டியா ?

    கேளிர பிரஷ்னகே மொதல்லி உத்திரா கொடு...!!!!

    நன்ன ஏமாற்சக்க முடிது...!!!

    ***நாந்தான்**

    ReplyDelete
  11. I feel this story is not as good as your other stories. Theme is very little. And Kannada dialogs without tamil translation annoyed bit.

    ReplyDelete
  12. செந்தில் இந்தக் கதை முன்னமே எழுதியது. இதில் கதை வேகமாக கட் செய்யப்பட்டு அடுத்த பகுதிச் செல்லும் அதுமட்டுமல்லாமல் விளக்கம் கொடுக்காமலே புரிந்து கொள்ளக்கூடிய அளவில் கன்னட வசனங்கள் இருக்கும் என்று நினைத்தேன். எனக்கு அதற்கான தமிழ் அர்த்தங்கள் தருவதில் பிரச்சனை எதுவும் இல்லை.

    இது என் சொந்தக் கதை கிடையாது கற்பனையே - இதைச் சொல்லவேற வேணுமா என்று தான் இதுவரை சொல்லலை.

    ReplyDelete
  13. Yaaruppa Aathu Nithra-nu Comment panni errukeenga.

    Avalukku Tamil Pesavae thriyatham ethula Tamil-la comment Type adichirukka

    Remba Overba!!!!!!!!!!

    ReplyDelete
  14. அகிலா போய் நேத்ரா வந்தாச்சா.

    இது ரீல இல்ல ரியலா !

    ReplyDelete
  15. //மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்//

    :)

    //எடுறா டேய்!” ///

    இது நொம்ப்ப புதுசா இருக்கே!

    ReplyDelete
  16. செந்தழல் ரவி, TBCD, சுல்தான், பாரி. அரசு, இளா, கோபிநாத், சீனா, அனானிகள், வெட்டிப்பயல், கார்த்திக், ஆயில்யன் - நன்றிகள்

    மொத்தமான கற்பனைக் கதை என்று எதுவும் இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன், கற்பனையும் உண்மையும் கலந்து தான் கதைகள் அமைகின்றன.

    ஆனால் உண்மை எது கற்பனை எது என்று தெரியாத பொழுது கதை சுவாரசியமாக இருக்கும். அதனால் சுவாரசியத்தை நான் குறைக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  17. Anony,

    நன்றிகள்

    ReplyDelete
  18. வெகு சுவாரஸ்யம். உண்மையும் கற்பனையும் கலந்து எழுதுவதில்தான் எனக்கும் விருப்பம். எவ்வளவு உண்மை என்பது எழுதுபவருக்குத் தெரிந்தால் போதும். மற்றவை படிப்பவரின் மன பிம்பங்களைப் பொறுத்து உருக்கொள்ளும். அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete

Popular Posts