Showing posts with label இப்படியும் ஒரு தொடர்கதை. Show all posts
Showing posts with label இப்படியும் ஒரு தொடர்கதை. Show all posts

In இப்படியும் ஒரு தொடர்கதை

நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்

"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா"

பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.

"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற!" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.

"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் அதிகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, "போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா!" என்றதும் நழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.

ஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.

அகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட "ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்..." என்று பயப்பட,

"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது?" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.

தொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி "ஞைய்ய்ய்ய்ய்ய்" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. எனக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.

"ம்ம்ம் பொறாமை..." என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.

"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல..." என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.

"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், "சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை!" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.

"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்." அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. "நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத்தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க." என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, "பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்!" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.

எப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.

"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது!" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. "நைனா அது என்ன? நைனா இது என்ன? நைனா இது ஏன் நடக்குது? நைனா இதுக்கு பேர் என்ன?" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.

"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ..." பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிடம் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.

"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'" பின்பாட்டு பாடியவன்.

'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.

அகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.

"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா?"

அவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.

அன்றிரவு, "... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா?" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,

"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க!"

நான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.

"ஏங்க இப்படி செய்றீங்க!" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இருந்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் புரிந்தது.

"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு! இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு! அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.

"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா!" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.

"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது! இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது!" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.

தாவாங்கட்டையில் இடித்தபடி"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க!".

பவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்கியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதமாய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.

போட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.

அவன் காதில் மெதுவாய், "பயப்படாம போய்ச் செய்!" என்று சொல்லி மேடையேற்றினேன்.

பாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் "...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு..." என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.

அத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.

மற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,

"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல! அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்." அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.

அகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்

"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா?"

நான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.

"அகிலா நான் என்ன பவானியா? சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்..." என்னால் தொடரமுடியவில்லை.

அருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,

"என்ன பாவா இது! நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன?"

'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி! அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, "நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா!" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.

-------------------

Credits - Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்

பெண்ணியமும் சில புடலங்காய்களும்

ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே என்னைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி வரவில்லை, ஏனென்றால், என்னைவிட குறைவாய்ப் படித்த, தமிழ் மீடியத்தில் படித்தப் பெண் அதிக சம்பளம் வாங்கும் வாய்ப்பிருக்காது என்பதல்ல அதற்கு காரணம். அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பப்போவதில்லை என்பதுதான். ஆப்பியஸ்லி வேலைக்குப் போகாத பெண் என்னைவிட அதிக சம்பளம் வாங்க முடியாதில்லையா?

இதெல்லாம் சொல்லப்போனால் ரொம்பவும் சராசரியானவை. பின்நாட்களில் என் நண்பர்களுடைய திருமண விபத்திற்கு பிறகு இந்த பட்டியல் நீண்டது தான் ஆச்சர்யம், அதுவும் முந்தயதைவிடவும் நீளமாய். பொண்ணோட பேமிலி எங்க பேமிலியைவிட வசதியானதாய் இருக்கக்கூடாது. பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருக்க வேண்டும். நிச்சயமாய் ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே என்பது அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட அத்தனை நண்பர்களின் ஒட்டுமொத்த அறிவுரையாக இருந்தது. அதைப் போலவே பெண்ணிற்கு கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் டீபால்டாக சொல்லப்பட்டது. அப்படி ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு நிச்சயமாய் பெண்ணியம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் எதற்கெடுத்தாலும் பிறகு சண்டை வருமென்றும் சொல்லித்தரப்பட்டது. இப்படியாக பேச்சுப்போட்டியில் அந்தப் பெண் ஒருமுறை கலந்துகொண்டிருந்தால் கூட நிராகரிக்கும் படியாகக் ஒரு தண்ணீர்ப்பார்ட்டியில் அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட நண்பர் அழுதுகொண்டே கூற, சிறிது நேரத்தில்தான் தெரிந்தது. நண்பருடைய மனைவி சண்டை வந்துவிட்டால் நேரடியாக பாரதி, பாரதிதாசன் போன்ற இன்னபிற ஆட்களின் கவிதை வரிகளைப் பாடிக் காண்பித்து கடைசியில் நீங்களெல்லாம் எப்பத்தான் உருப்புடுவீங்களோ என்றுதான் முடிப்பார் என்பது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், பெண்ணுடைய சகோதரகள், பொண்ணுடைய சகோதரியுடைய கணவர்கள் இவர்களை விட நீ சம்பளம் அதிகம் வாங்கினால் மட்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்றுகூட அட்வைஸ் வழங்கப்பட்டது.

அதென்னமோ கல்யாணம் ஆகிவிட்ட அத்தனை நண்பர்களுக்கும் என்னுடன் தண்ணியடிப்பதில் ஒரு அலாதி திருப்தி, தங்களின் சோகங்களைச் சொல்லி விரைவில் திருமணம் ஆக இருக்கும் ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வீரர்கள் போன்ற ஒரு உணர்வு வரும்போலிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் இதற்கெல்லாம் வழியில்லாமல் அப்பாவிற்கு தெரிந்தவர் மகள் என்ற பெயரில் நான் அகிலாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். பொண்ணு பிராமணப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் எப்படியாவது இந்தக் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திவிட நான் செய்த அத்தனையும் தவிடுபொடியானது. இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் இதெல்லாம் நினைவில் வர. நான்கு ஆட்கள் தலைக்கு மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் போன்ற தலைவலி தானாய் வந்தது.

தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரிந்தது, ஆராம்ஸேயாய் கையில் காபித் தம்ளருடன் சோபாவில் உட்கார்ந்து, எதிரில் தேடித்தேடி கஷ்டப்பட்டு வாங்கிய டீப்பாயின் மீது வைத்துக்கொண்டிருந்த, அகிலாவின் கால்கள். அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்திருக்க டீவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலைப் பார்த்ததும் அதுவரை கஷ்டப்பட்டு பொத்திக்கொண்டிருந்த கோபம் வார்த்தைகளாய் சீறியது.

"யேய் எனக்கு இப்ப உடனேயே காப்பி வந்தாகணும்."

"ஏண்டா புள்ளத்தாச்சிப் பொம்பளைக்கிட்ட உன் ராங்கித்தனத்தைக் காட்டுற. ஒரு நிமிஷம் இரு போட்டுத் தர்றேன்." அம்மா எழுந்திருக்க, அந்த நொடியே அதுவரை டீப்பாயில் இருந்த ரிமோட் வேகவேகமாக அவள் முதுகிற்கும் அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கும் இடையில் சென்றது.

"அகிலா சொன்னா மரியாதையா கேளு. இப்ப ரிமோட் என்கிட்ட வந்தாகணும்."

அவளிடமிருந்து பதிலேதும் வராமல் உதட்டைச் சுழித்து பழிப்பு மட்டும்தான் வந்தது. எங்க வீட்டுப் பொண்ணுங்க இப்படிச் செய்து பார்த்ததேயில்லை. இதை ஒருநாள் இருவரும் சந்தோஷமாக இருந்த நாள் ஒன்றில் சொல்லிக்காட்ட, உங்க வீட்டுப் பொண்ணுங்களெல்லாம் பொண்ணுங்களே இல்லை என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் நான் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்து பிறகு அக்காவிடம் சொல்லி சமாதானம் ஆனது நினைவில் வந்தது. அவளுக்கு நன்றாகவேத் தெரியும் இந்தச் சமயத்தில் நான் அவளின் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று. ஏனென்றால் அவள் எங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.

மனதிற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்க, கண்களால் நான் கைகளால் செய்ய முடியாததை செய்துகொண்டிருக்க, கண்ணெதிரில் காபித் தம்ளர் நீட்டப்பட்டது, கூடவே தலையில் ஒரு கொட்டுடன்.

"வந்ததும் வராததுமா அவகிட்ட ஏண்டா வம்பு பண்ற? அவ ஒன்னும் சீரியல் பார்க்கலை, நான் தான் பார்த்துக்கிட்டிருந்தேன். போதுமா?"

இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது கடந்த நான்கைந்து மாதங்களாய், நாங்கள் மணாலியில் இருந்து திரும்பியதிலிருந்து அம்மாவின் புல் சப்போர்ட் அவளுக்குத்தான். இது என் கோபத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்றார்போல் அவள் திரும்பவும் பழிப்புக் காட்ட. அம்மா,

"ஏய் சும்மா இருடீ. நீயும் அவனுக்குச் சமமா வம்பிழுத்துக்கிட்டு." எனக்குச் சாதகமாய் பேசினாலும் கோபம் தலைக்கேற.

"இனிமேல் நான் வேலைக்குப் போக மாட்டேன். இவ குட்டிப் போட்டதும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டு வரட்டும் நான் வீட்டைப் பார்த்துக்கிறேன்."

"குட்டிப்போடுறன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன வேலைக்குப் போகணும் அவ்வளவு தானே போனாப்போகுது. என்ன பெரிய விஷயம்? புள்ளப் பெத்துக்கிறத விட பெரிய விஷயம்."

அம்மாவிற்கு இந்தச் சண்டை சின்னப்பிள்ளைத்தனமாய்த் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவில் இருந்து எழுந்தவர்.

"நான் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போகப்போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதுதான் நான் உங்க ரெண்டுபேருக்கும் கொடுக்குற டைம். அதுக்குள்ள சண்டபோடுவீங்களோ, இல்லை கத்தியை எடுத்து மாத்திமாத்திக் குத்திப்பீங்களோ தெரியாது ஆனா நான் வந்தப்புறம் வீடு அமைதியாகிடணும். அவ்வளவுதான்."

அம்மா அந்தப் பக்கம் சென்று ஒன்றிரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். என்னையே கண்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அருகில் வந்தாள். அவள் அப்படிப் பார்த்ததற்கான அர்த்தம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னை கணக்கிடும் கால்குலேட்டராய் கண்களை மாற்றிக்கொண்டு, வரப்போகும் பொய் மலையில் இருந்து அன்னமாய் உண்மையை கறக்கும் ஒரு நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிதான் அது.

"என்னாச்சு என் செல்லத்துக்கு ஏன் இப்படியொரு கோபம். ஆபிஸில் கோகிலா ஆண்ட்டி ஏதாவது வஞ்சாங்களா?"

இதுதான் எனக்கு அகிலாவிடம் அடியோடு பிடிக்காதது. நான் நடந்த பிரச்சனைய அடியோடு மறந்து வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி உண்மையான பிரச்சனையில் தெரிந்துவிட்டிருந்த என்னுடைய கையாலாகாத்தனத்தைக் கோபமாக வெளியிட்டுக் மறைக்கலாம் என்றால் அது என் செல்லப் பெண்டாட்டியிடம் நடக்காது. அதுவும் நிறைய பொய்களைச் சொல்லி அடுக்குவதற்கு முன்பே உண்மையான பிரச்சனை கண்டுபிடிக்கப்படும். என்னுடைய பொய்கள் செல்லுபடியாகாத ஒரே ஆள் அகிலாதான். சின்னவயதிலிருந்தே நம்பும்படியாய் பொய் சொல்லி வளர்ந்தவன் ஆதலால் அநாயாசமாய் வெளிப்படும் மூட்டையை அதைவிட அநாயாசமாய் புறந்தள்ளிவிடும் சாம்ர்த்தியம் அகிலாவிடம் நான் எப்போதும் மலைக்கும் ஒரு குணம்.

ஒரு விஷயம் ஒரு நபருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த விஷயத்தை எந்தவித பிரச்சனையுமில்லாமல் அந்த நபர் கண்டுபிடித்துவிடும் நேரத்தில் ஏற்படும் வாழ்க்கையின் மீதான விரக்தி எனக்கும் ஏற்பட்டது அவளுடைய அந்தக் கேள்வியால். அப்படியிருந்தும் உண்மைவெளிப்பட்டுவிடக்கூடாது என நினைத்து,

"எதுக்குத் தேவையில்லாம அவளை இழுக்குற இங்கே. என் கம்பெனிக்கும் இந்த முடிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தெரியுமா நான் வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு இருபது. இப்ப முப்பத்தி மூணாகுது. அக்காவிற்கு கல்யாணம் செய்து வச்சு, அம்மா அப்பாவிற்கு வீடு கட்டிக்கொடுத்து. உன்னைக் கல்யாணம் பண்ணி இப்ப குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.

ஏதாவது கேட்டா உடனே வீட்டைப் பார்த்துக்கிறதும் கஷ்டம் தான்னு ஒரே அலப்பற. அதனாலதான் இப்படி ஒரு முடிவு. இனிமேல் நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன். வேணுனா நீ பெத்துப்போடுற குட்டிப்பிசாச பார்த்துக்குறேன்.

நீயே சொல்லு என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம். நிம்மதியா உட்கார்ந்து ஒரு சீரியல் பார்க்கமுடியுதா, மனசவிட்டு ஒரு சீரியல் கேரக்டருக்காக அழ முடியுதா. என்ன வாழ்க்கை அதான் இப்படி ஒரு முடிவு. நீயும்தான் படிச்சிருக்கயில்லை, வேலைசெய்தா என்னவாம்."

நான் சொல்லிமுடிக்க அவள் நினைத்திருக்க வேண்டும், இப்ப பேசி தீர்க்கிற பிரச்சனையில்லை இது என்று அவளாய் நகர்ந்துபோய் பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கதில் கிடந்த கல்கியை புரட்டத் தொடங்கினாள். நானும் ஒருவாறு அவளை சமாளித்ததாய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கை, கால் அலம்பிக் கொண்டுவந்திருப்பேன் அம்மா கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். வந்ததும் வராததுமாய் புதுப்பிரச்சனை.

"டேய் இங்கப்பாரு எனக்கு காலெல்லாம் ஒரே வலியாயிருக்கு. இன்னிக்கு நீ அகிலாவை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு."

என்னுடைய வேலை காரணமாக ஒரு சமச்சீரான அலுவலக நேரங்கள் எனக்குக் கிடையாது. அதன் காரணத்தால் பொதுவாகவே நான் நடுஇரவில் ஆந்தை போல் உலாவிக் கொண்டிருந்ததால் அகிலாவை டாக்டரிடம் அழைத்துச் செல்வது, வாக்கிங் கொண்டு செல்வது என எல்லாச் சமாச்சாரங்களையும் அம்மாதான் செய்து வந்தார்கள். இதுவரை கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே அவள் என்னுடன் வந்திருப்பாள். இதில் இடையில் ஒரு மாதம் ஆன்சைட் வேறு. அம்மா என்னிடம் நேற்று அகிலாவிற்குத் தெரியாமல் கேட்டுக்கொண்டதற்காக மறுபேச்சுப் பேசாமல் அவளுடம் கிளம்பினேன். அகிலாவிற்கு ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும் என்னுடைய செயல்.

சாதாரணமாகவே வேகமாக நடக்கும் எனக்கு அவள் மெதுவாய் நடந்துவந்ததுதான் காரணமா தெரியாது ரொம்பவே மெதுவாய் நடப்பதாய்ப் பட்டது. பெங்களூர் பசுமையான ஊர், 100 மீட்டருக்குள் ஒரு பூங்காவைப் பார்த்துவிடலாம். அதுவும் நவம்பர் டிசம்பர் மாதத் தொடக்கம் என்பதால் பூங்காவெங்கும் விதவிதமான ரோஜாப்பூக்களைப் பார்க்கலாம். எனக்கும் ரோஜாப் பூக்கள் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சாப்ட்வேர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தில் மறைந்து போன ஒரு விஷயம் ரோஜாக்களுடன் நேரத்தை செலவிடுவது.

மௌனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் நடை, பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் பெஞ்சில் முடிவடைந்ததைப் போலவே எங்கள் மௌனமும் ஒரு முடிவிற்கு வந்தது. பூங்காவிற்குள் நுழையும் பொழுதே என்னுடைய கைகளை இருகப் பிடித்துக்கொண்டாள் அகிலா. அந்தத் தொடுதல் டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் இருந்தது.

"மோகன் நம்ம பையன் உதைக்குறான் பாருங்க." என்று சொல்லி அவள் கையோடு சேர்த்திருந்த என் கையை அவள் வயிற்றுப் பகுதிகுள் கொண்டுசெல்ல, அநிச்சையாய் என் கைகளை வெளியே உருவினேன். முதலில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் செய்தாலும் பிறகு செய்தது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் எனத் தெரிந்ததால் சமாதனப்படுத்தும் எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ சப்தமாய்ச் சிரித்தாள்.

"இத்தனை வருஷத்தில் நீங்க இன்னமும் மாறவேயில்லை. தாஸ்."

உண்மைதான், அந்த அந்நிச்சை செயல் அவள் மனதில் எந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியிருக்கும் என்று எனக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை நினைத்ததும் எனக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. எங்கள் திருமணம் முடிந்து அதாவது தாலி கட்டிமுடித்த பிறகு ஏதேதோ பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் என்னிடம், அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல நான் விழித்தேன்.

அதற்கு அவர் இது சாந்திமுகூர்த்த பூஜைக்காக, கல்யாணம் முடிந்ததும் ஐயர் அவர் வீட்டிற்கும் நாங்கள் எங்கள் வீட்டிற்கும் செல்வதாய் ப்ளான் அதனால் சாந்திமுகூர்த்தத்திற்கு முன்னர் செய்யவேண்டிய சடங்கை இங்கேயே செய்துவிடலாம் என்றே சொல்வதாகவும், சீக்கிரமாக அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல, அப்படியொரு சடங்கு எங்கள் பழக்கத்தில் கிடையாது என்பதால் என் துணைக்கு அக்காவையோ அம்மாவையோ தேட, பக்கத்தில் இருந்த ஒரே ஆள் அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ தான்.

நான் ஐயர் சொன்னதை மட்டும் செய்யாமல் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் பார்த்து திருதிருவென முழிக்க, ஐயர் 'ஓய் உம்ம அகமுடையாள் தப்பா நினைச்சுக்க மாட்ட. சும்மா தொடுங்க ஓய்' என்று சொல்ல. நடப்பதையெல்லாம் பார்த்து ஜெயஸ்ரீ சிரிக்க அகிலா என்னுடைய கையை எடுத்து அவள் வயிற்றுப்பக்கத்தில் கொண்டு சென்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று. அந்த நினைவுகள் பசுமையாக எழவும். வேகமாய் விலக்கிக் கொண்ட கையை நானாகவே அவள் வயிற்றுப்பக்கம் கொண்டு செல்ல, என் கைகளுக்குக் கீழ் எதுவோ ஒன்று அழகாய் புரள்வதாய்த் தோன்றியது, தொடர்ச்சியாய் அகிலா லேசாய் முனகினாள்.

நான், "நம்ம பொண்ணுக்கு அதுக்காட்டியும் அவசரம் பாரு..." சொல்ல அகிலா,

"வேண்டவே வேண்டாம், உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அப்புறம் பொறக்குறது பொண்ணா பொறந்துத் தொலைக்க என்னென்ன பிரச்சனை பண்ணுவீங்களோ." என்று சொல்லி அழகாய்ச் சிரிக்க, நான்.

"இங்கப்பாரு எதுக்கூட எதை கம்பேர் செய்யற. எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா. சொல்லப்போனா என்னை நான் பெண்ணியவாதின்னு கூட சொல்லிக்குவேன். ஒரு பெண்ணியவாதிக்கான கடமைகள் எதுஎதுன்னு யாருமே இதுவரை வரையறுத்துச் சொல்லலை. இதுவரைக்கும் நீ எதாவது சொல்லி நான் இல்லைன்னு சொல்லியிருக்கேனா? இப்பக்கூட பாரு உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டில் இருக்கேன்னு சொல்றேன். இதைவிட என்ன செய்துவிடமுடியும் ஒரு பெண்ணியவாதியாக. சொல்லப்போனால் இதுமட்டுமே போதும் என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்க." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"பெண்ணியவாதியாம் பெண்ணியவாதி, புடலங்காய் பெண்ணியவாதி. எனக்குத் தெரியாது உங்க லட்சணம். இன்னிக்கு கோகிலா எதுவும் வேலை கொடுத்திருக்கும். நீங்களும் செய்திருப்பீங்க, பார்த்துட்டு இதை இப்படி செய்றத விட இன்னொருமாதிரி செஞ்சா நல்லாவும் வேகமாகவும் வேலை செய்யும்னு சொல்லியிருக்கும். அங்க சரி சரின்னு சொல்லிட்டு வந்து உங்க கோபத்தை இங்க காட்டூறீங்க. சரிதானே?"

அவள் சொன்னதன் ஒரு பாதி சரிதான், கோகிலாவிற்கும் எனக்கும் இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இன்று நடந்தது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது. நான் வேலைக்குப் போகமாட்டென் என்று சொல்லியதற்கு அகிலாவும் ஒரு காரணம்.

நேற்று அம்மா வெளியில் ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி காரில் இறக்கிவிடச் சொன்ன பொழுது நான் ஒன்றும் யோசிக்கவேயில்லை, சாதாரண நிகழ்வுதானேயென்று. ஆனால் அம்மா வண்டியில் உட்கார்ந்து வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னது தான் நான் வேலையை சிறிது நாட்கள் விட்டுவிட நினைத்ததற்கு முக்கியக்காரணம்.

"தம்பி அகிலா ரொம்ப பயப்படறாடா! முதல் பிரசவம் வேற, அம்மா இருந்து பார்த்துகிற அளவுக்கு வசதி பத்தாது அப்படின்னு நிறைய பிரச்சனை. முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு செத்துப் பிழைக்கிறது மாதிரிடா. உனக்குப் புரியாது. கவலையேப்படாமல் நார்மலாகப் பெத்துப் போடுற பொண்ணுங்க இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.

உன்னை ஏன் இப்படி வளர்த்தேன்னு இப்ப வருத்தப்படுறேன். உங்க தாத்தா பாட்டிய ஏன் என்னைய உங்கப்பாவை கூட எப்படியிருக்கீங்க, உடம்பு நல்லாயிருக்கான்னு கேட்க மாட்ட நீ. நானும் அதை ஒரு பிரச்சனையா பார்க்கவேயில்லை. ஆனால் இதையே அகிலா இப்படி இருக்கிற நேரத்தில் அவள்கிட்ட செய்யக்கூடாதும்மா.

அவ கூட உட்கார்ந்திரு, உடம்பு எப்படியிருக்கு எதுவும் கஷ்டமாயிருக்கான்னு கேளு. அவ இத நேரா உன்கிட்ட சொல்லாட்டியும் நிச்சயமா இத உன்கிட்டேர்ந்து எதிர்பார்ப்பா. உன்னைய பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டேன்னா கொஞ்ச நாளைக்கு லீவைப் போட்டுட்டு அவக்கூட இரு.

உனக்கும் அவளுக்கும் முந்தி இருந்த பிரச்சனையை நீ முழுசா மறந்திட்டேன்னு எனக்குத் தெரியும் ஏன் அவளுக்கேக் கூடத் தெரியும். ஆனால் இந்த முழுகாம இருக்கிற நேரம் இருக்குப் பாரு எல்லாத்தையும் தப்பாவே நினைக்கச் சொல்லும், நான் சொன்னா நம்ப மாட்ட இதை எப்படி சொல்றதுன்னு கூட நான் நினைச்சேன் ஆனால் பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்குப் புரியணும்னா சொல்லித்தான் ஆகணும்னு சொல்றேன். இந்த ஐந்து மாசத்தில் அவளை தொட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீ இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவ நினைக்கிறா! அதுமட்டுமில்லாமல் நீ ஏதோ தப்பு பண்ணுறீயோன்னு பயப்படுறா, வேற பொண்ணொட தொடர்பு எதுவும் இருக்கும்னு நினைச்சு தினம் அழுகைதான். அதனால் தான் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு லீவைப் போடு அது முடியாதுன்னு வேலையை விட்டுறு கொஞ்ச நாளைக்கு."

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது அம்மா சொன்னது, அப்படியுமிருக்குமான்னு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அப்படின்னு தான் நான் அகிலாவை நினைத்தேன். வார்த்தைகளால் மட்டும் காண்பிக்கப்படுவதில்லை அன்புங்கிறது அவளுக்கு தெரியும் என்றும் நினைத்தேன். ஆனால் அம்மா சொன்னது ஆச்சர்யத்தை அளிப்பதாகயிருந்தாலும் என் செல்ல மனைவிக்காக இதைக்கூட செய்யாம எப்படியென்று தான் வேலையைவிட முடிவெடுத்தேன். அதைச் சொன்னால் ஒருவேளை ஏதாவது காம்ப்ளக்ஸ் வரலாம் என்பதால் கோகிலா மேட்டரையே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து அகிலா கேட்டதற்கு உண்மை என்பதைப் போல் சிரித்து வைத்தேன்.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

மச்சினிச்சி வந்த நேரம்

"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.

"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.

நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.

"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல

"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."

அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.

"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.

"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.

"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."

சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.

வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.

"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.

"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"

"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"

நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."

நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"

கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.

என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,

"என்னடா பிரச்சனை?"

சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,

"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"

"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.

"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."

அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,

"யோவ்..." என்றாள்.

நான் திடுக்கிட்டவனாய்,

"என்னாடி இது மரியாதை கொறையுது."

"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.

ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."

அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.

"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."

வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.

அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.

சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

நான் நுழைந்ததும்,

"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."

"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.

"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.

"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.

"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."

அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.

"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."

"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.

நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.

"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."

விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.

"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை."

நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.

"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.

இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"

ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."

"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.

"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."

அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.

"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.

"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"

"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.

"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.

"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.

ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.

"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"

பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.

"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"

நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"

மூச்சை இழுத்துவிட்டவள்,

"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"

சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.

பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."

"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."

சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு

"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.

அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.

"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"

"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.

"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.

"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"

நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.

"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."

அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.

"எங்க கிளம்புறீங்க?"

"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.

"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,

"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"

கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,

"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.

காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.

"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"

"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.

"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,

"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.

"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.

"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"

"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.

இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.

உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"

முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.

"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.

"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.

"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"

கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.

"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.

"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In இந்து இப்படியும் ஒரு தொடர்கதை சிஐஏ சிறுகதை

இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்

ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது, நாங்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியிருந்தது.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரும்மா, நாங்க அப்பவே முடிவெடுத்துட்டோம், மூணு நாலு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்குறதுன்னு. அதுமட்டுமில்லாம குழந்தையை சுமக்கப்போறது அவ. அதனால இதப்பத்தி அவதான் முதலில் முடிவெடுக்கணும்." அப்பொழுது தான் இருவரும் சேர்ந்திருந்ததால், மீண்டும் ஒரு பிரச்சனையை என்னிடம் உருவாக்கவேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும் அம்மா, ஆனால் அகிலாவிடம் என்ன சொன்னார்களென்றெல்லாம் தெரியாது. அந்த வாரக்கடைசியில் எங்களுக்கிடையில் இதைப்பற்றிய பேச்சு எழுந்தது.

"மோகன் நாம ஒரு விஷயத்தைப் பத்தி இப்பவே பேசி முடிவெடுத்துக்கணும்."

"எதைப்பத்தி?"

"நம்ம குழந்தையைப்பற்றி..." அவள் சொன்னதும்,

"அகிலா அம்மா எதுவும் சொன்னாங்களா?"

"அதை விடுங்க, அது இல்ல இப்ப முக்கியம். நம்ம குழந்தையைப் பற்றி நாம சில விஷயங்களை இப்பவே பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

எனக்கு எங்கம்மாவின் மீது கோபம் வந்தாலும், இவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாததால்,

"என்ன விஷயம்?"

"இல்லை நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டாலும், நம்மிடையே ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை நிறைய வேறுபாடுகள் உண்டு, நம்ம குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம். என்னென்ன கற்றுக்கொடுக்க போகிறோம் இதையெல்லாம் முன்னாடியே தீர்மானிச்சிற்றது பெட்டர். ஏன்னா நம்ம இரண்டு குடும்பங்களோட பழக்க வழக்கங்கள் கூட முழுவதும் வித்தியாசமானது. நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்க, நான் சாப்பிட மாட்டேன் இப்படி நிறைய விஷயங்கள். முட்டாள்தனமா ஒன்னுமே யோசிக்காம இந்த குளத்தில் விழ நான் விரும்பவில்லை..."

அவள் சொன்னதும், "இங்கப்பாரு அகிலா குழந்தை பெத்துக்கிறதைப் பத்தி தீர்மானிக்கிற மொத்த உரிமையையும் நான் உன்கிட்ட கொடுக்குறேன். ஆனால் நீதான் குழந்தை பெற்றாய் என்பதற்காக உன் பாணியிலோ, அல்லது குழந்தையில் வளர்ச்சியில் முழுபங்கையோ உனக்கு மட்டுமே விட்டுத்தர்றது என்னால முடியாது. இதுவரைக்கும் நான் உன்னை நான்வெஜ் சாப்பிடவோ இல்லை சமைக்கவோ கூட நான் வற்புறுத்தியதில்லை. சரியா?"

"மோகன் நானும் உங்கக்கிட்டேர்ந்து முழுஉரிமையை எதிர்பார்க்கவில்லை, ஏன் சொல்றேன்னா, நாளைக்கே அவனுக்கு பூணுல் போடணும்னு நினைத்தால், நான்வெஜ் சாப்பிட்டுக்கிட்டு பூணுல் போடறுதுங்கிறது தப்பு அதனால் தான். முதலில் நாம அவனுக்கு பூணுல் போடப்போறமா இல்லை உங்க வழக்கப்படி வளர்க்கப்போறமா அது தெரியணும்."

"அகிலா நான் ஒன்னு சொல்லட்டுமா. இதெல்லாம் இப்ப தீர்மானிச்சாலும் சரிவராதுங்கிறது என்னோட பாலிஸி. நம்மளோட வழக்கத்துக்கு குழந்தையை வளர்க்கிறதுக்கு பதிலா, குழந்தையை வளர்க்கும் பொழுது எது நல்ல வழக்கமா படுதோ அதை தேர்ந்தெடுப்போம். அவள் சங்கீதம் கத்துக்கப்போறேன்னா கத்துக்கட்டும், டான்ஸ் ஆடப்போறேன்னா செய்யட்டும், கம்ப்யூட்டரில் வாழ்வேன்னா வாழட்டும்..."

"எல்லா விஷயங்களும் அப்படி முடியாதுங்க, குழந்தைக்கு ஆரம்பத்தில் சிலவிஷயங்களை கத்துத்தரணும். அந்த அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் கடைசிகாலம் வரை மாறாமல் இருக்கும். குறிப்பா கடவுளைப்பற்றியது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒரு வழக்கம் இருக்கும். நம்ம வீட்டிலோ இரண்டு விஷயம். நீங்கள் கடவுளை நம்பமாட்டீங்க உங்களைத் தவிர்த்த அனைவரும் வீட்டில் கடவுளை நம்புவோம். ஆனால் உங்களுக்கு சரின்னு பட்ட சில விஷயங்ளை உங்கப் பிள்ளைக்கு சொல்லித்தர நான் எப்படி தடுக்க முடியும். ஒரே வீட்டில் இருந்துக்கிட்டு, நான் கடவுளை நம்புண்ணும் நீங்க நம்பாதேன்னும் சொன்னீங்கன்னா சரியா வராது இல்லையா."

எனக்கு இதைக் கேட்டதும் முதலில் சிரிப்புத்தான் வந்தது, இந்த விஷயத்தை பேசத்தான் அவள் இவ்வளவு இழுத்திருக்கிறாள். அதுவரை எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தவளை பக்கத்தில் இருந்த சேரில் வந்து உட்காரச்சொன்னேன் பிறகு,

"இங்கப்பாரு அகிலா இதுதான் உன்னோட பிரச்சனையா? அப்படின்னு நீ நினைச்சா இதுக்கான முழு உரிமையை நான் உனக்குத் தர்றேன். இது நீதான் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெத்த என்பதற்காக இல்லை. நம்ம குழந்தையை நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவே வளர்த்துக்கோ நான் ஒன்னும் சொல்லலை.

உனக்கே தெரியும் எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவங்கன்னு, ஆனால் நான் ஏன் இப்படி, பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது. அப்பெல்லாம் எங்கப்பா வருஷத்துக்கு இரண்டு முறை சபரிமலைக்கு வேற போய்க்கிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையின்மை மட்டும், தானே உணர்ந்துதான் வரணும். அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்துச்சுன்னா நாளைக்கு இன்னொருத்தன் சொன்னான்னு கருத்து மாறும். அது தேவையில்லை.

அவள் நம்பிக்கையோடவே வளரட்டும், படிச்சு பிற்காலத்தில் புரிஞ்சிப்பான் ஆனா நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். பிற்காலத்தில் அவள் கடவுள் மறுப்பை செய்தான்னா நீ ஒத்துக்கணும்." சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தி..."இதுதானே நீ முக்கியமா என்கிட்ட கேட்க நினைச்சது." சிரித்தேன். அவளும் சிரித்தவள்.

"அவ்வளவு முக்கியம் இல்லைன்னாலும் முக்கியம் தான், நீங்க பாட்டுக்கு இந்துங்கிறது ஒரு மதமேயில்லை, அப்படி இப்படின்னு சின்ன வயதிலேர்ந்தே அவனுக்கு சொல்லித்தந்து வளர்க்கணும் நினைக்கிறப்ப நான், வேதம் அது இதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்னா பிள்ளைக்கு கஷ்டமாப்போய்டும் இல்லையா அதான்." அவள் சொல்ல இன்னுமொறு தொடர்கதையை இழுத்தாள்.

"அகிலா அப்ப நீ என்ன சொல்ற, நாம இதப் பத்தி எவ்வளவு பேசினோம். வெள்ளக்காரன் தான் இதையெல்லாம் கொண்டுவந்தான். இந்துங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் கிடையாது இப்படியெல்லாம்..."

"அட நீங்க வேற, வெள்ளைக்காரன் கிறிஸ்துவன், முஸ்லீம் இடமிருந்து தனியே பிரித்துப்பார்க்குறதுக்காகத்தான் இந்தியாவில் இருந்த மற்ற மதத்தினரையெல்லாம் இந்துன்னு சொன்னான்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது சரியாப் படலைங்க.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தப்பையே பிரிச்சு பிரிச்சு, காஷ்மீருக்கு தனியா, ஹைதராபாத்துக்கு தனியா, செகந்திராபாத்துக்கு தனியான்னு சுதந்திரம் கொடுத்தவன் அவன்.

எப்பிடிடா இந்த நாட்டை துண்டாடலாம்னு நினைத்துக் கொண்டிருந்தவன். ஏற்கனவே பல பிரிவுகளால் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களை ஒரே கூட்டமா சாரி மதமா மாத்தணும்னு நினைச்சிருப்பானா அதெல்லாம் நடந்திருக்காதுங்க. லாஜிக் உதைக்கிறது உங்களுக்கே தெரியலை. இந்துயிஸம் அப்படிங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்திருக்கும். இடையில விட்டுப்போயிருக்கும், அதை நான்தான் கண்டுபிடிச்சேன்னு வெள்ளக்காரன் சொல்வதில் அவனுக்கு வேண்டுமானால் பெருமையா இருக்கலாம் ஆனால் உண்மையாயிருக்காது.

அதுமட்டுமில்லாம இதெல்லாமே அமேரிக்காவோட சிஐஏவின் சதி அப்படின்னு நேத்திக்கு ஆபிஸிற்கு ஒரு மெயில் ஃபார்வேடா வந்தது. உங்களுக்கு கூட சிசி இருந்ததே படிக்கலையா?"

அகிலா கேட்க, நான் "தேவுடா தேவடா" பாட்டை பாடிக்கொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?

சொந்தக்காரர்கள் முதற்கொண்டு எங்களைப் பார்க்கிறவர்களெல்லாம் எப்பொழுதும் சொல்லும் ஒன்று உண்டு, எங்கள் இருவருக்கும் சரியான ஜோடிப் பொருத்தம் என்று. ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் எல்லா விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துக்கள் தான், இருவருடைய அணுகுமுறையும் முற்றிலும் வேறுவேறாய் இருக்கும். நான் அகிலாவை பொண் பார்க்கப் போயிருந்த பொழுதில் நடந்தது இன்றைக்கு நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி.

அம்மா 'அகிலான்னு ஒரு பிராமணப் பொண்ணு இருக்கு, பாவம் கஷ்டப்படுற குடும்பம் அவங்க அப்பாவை உங்க நைனாவுக்கு ரொம்ப நாளாத் தெரியும், நம்ம பக்கத்தில் இப்படி பண்றதில்லைன்னாலும் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது' அப்படி இப்படி என்று சொல்லிப் பெண் பார்க்க இழுத்துச்சென்றார்கள். அப்பொழுது நான் இருந்த மனநிலையில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியே கூட எனக்கு நல்ல எண்ணம் கிடையாது. பாச்சுலராய் கணிணித் துறையில் அத்தனை நல்ல விஷயங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு, திருமணம் என்ற புதைகுழியில் தள்ள இவர்கள் நினைப்பதாகவேப்பட்டது. பெண்ணை பார்க்காமலே எப்படியாவது இந்த முயற்சியை தவிர்த்துவிட நினைத்தேன், அதையே செய்யவும் செய்தேன்.

"உங்களுக்கு கேயாஸ் தியரி தெரியுமா?" பார்க்கப் பதுமை போலவேயிருந்த அவளை பேசாமல் கல்யாணம் செய்து கொள் என்று இதயம் சொல்ல, இதயம் சொல்றதைக் கேட்டு வேலைசெய்ய ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு அவர் செய்வார் நாம மூளையைக் கேட்டு வேலைசெய்வோம் என்று நினைத்தவனாய் அவளிடம் தனியாய் பேசவேண்டும் என்று அழைத்து வந்து கேட்ட முதல் கேள்வி, அவள் திருதிருவென்று விழிக்க மனதிற்குள் சிரித்தவனாய்,

"ஆம்ப்ரோஸ் பியர்ஸ் தெரியுமா?" அவள் அதற்கும் விழிக்க, "அவர் விதி பத்தி என்ன சொல்றார்னா, ‘விதி என்பது சர்வாதிகாரிகள்...’" ஏதோ சொல்லவருவதைப் போல் ஆரம்பித்துவிட்டு, "பச்..." சொல்லி நிறுத்தினேன்.

பின்னர், "இங்கப்பாருங்க நான் கொஞ்சம் வித்தியாசமான ஆளு, கம்ப்யூட்டர்ஸில் இருந்தாலும், செகுவாரா, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஸ்டிரிங் தியரி, கொஞ்சமா கம்யூனிஸம், நிறைய கிரிக்கெட்னு இருக்கிற ஆளு. உங்களைப் பார்த்தா வித்தியாசமா இருக்கீங்க..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க, அவள் முதன் முறையாய் பேசினாள்.

"நான் உங்கக்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?" கொஞ்சம் வித்தியாசமாய் உணர்ந்தாலும், "பரவாயில்லை கேளுங்க" என்று சொன்னதும்.

"நான் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் உங்களால் அது சிம்மேந்திரமத்யமமா கீரவாணியான்னு சொல்ல முடியுமா?" அவள் எதிர்கேள்வி கேட்க, ராகம், ஆலாபனை, சிம்மேந்திரமத்யம், கீரவாணி போன்று சொற்களை முதல்முறையாக கேட்ட குழந்தையாக நான் திருதிருவென முழிக்க,

"அதை விடுங்க,

'பொரிவரித் தடக்கை வேதல் அஞ்சி
சிறுகண்யானை நிலம் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆர் இடையானும்
தண்மை செய்த இத்தகையோள் பண்பே' - இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுமா உங்களால?"

எனக்கு ஒருமாதிரி அம்மா மேல் கோபம் வந்தாலும், நல்ல வேளை இந்தப் பொண்ணுக்கும் நம்மளை பிடிக்கவில்லை போலிருக்கிறது, அம்மாதான் இந்தப் பொண்ணையும் வற்புறுத்தியிருக்கணும். இதுவும் நல்லதாப் போச்சு என்று நினைத்தவனாய்.

"நீங்க சொல்றதும் சரிதாங்க, நீங்க கேட்டது இரண்டுக்குமே என்னோட பதில் முடியாதுங்கிறதுதான். நம்ம இரண்டு பேரோட ஒப்பீனியனும் வித்தியாசமாயிருக்கு..." சொல்லிவிட்டு நான் முடிக்கமுடியாமல் திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

"ப்ளிஸ் கொஞ்சம் நில்லுங்க." அவள் சொல்ல திரும்பியவனிடம், "உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அப்படின்னா ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா நான் உங்களை கேள்வி கேட்டதனால தப்பா நினைச்சிட்டீங்கன்னா சில விஷயங்களை விளக்குறது என்கடமை."

சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தியவள்,

"நான் உங்கக்கிட்ட அந்த கேள்விகளை கேட்டதுக்கு காரணம் உங்களை விட நான் புத்திசாலின்னு நிரூபிக்கிறதுக்கோ இல்லை உங்களை தட்டிக்கழிக்கிறதோ நிச்சயமா காரணம் கிடையாது. நான் சொல்லவந்தது ஒன்னே ஒன்னுதான், எனக்கு தெரியாததை நீங்க சொல்லித்தாங்க, உங்களுக்கு தெரியாததை எனக்கிட்டேர்ந்து கத்துக்கோங்க. ஒரே மாதிரி ஒப்பீனியன் உள்ளவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே வாழ்க்கை போரடிச்சிடும்." ஒரே மூச்சாய் பேசிவிட்டு அவள் அழகாய் சிரிக்க ஒரு மாதத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது. முதலிரவில்,

"அகிலா நான் உன்னை பெண் பார்க்க வந்திருந்தப்ப ஒரு பாட்டு சொல்லி அதுக்கு அர்த்தம் கேட்டல்ல அதுக்கு என்ன அர்த்தம்?"

"அதுவந்து ஓதலாந்தையார் அப்படிங்கிறவர் எழுதின பாட்டு, ஐங்குறுநூறுல பாலை பிரிவில் வரும். அர்த்தம் என்னன்னா ‘மூங்கில் உலர்ந்து வாடும் கோடை கால வெயிலுக்கு அஞ்சி சிறிய கண் யானை தன் புள்ளிபோட்ட தும்பிக்கை தரையைத் தொடாமலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோடைகாலத்திலும் அவளை நினைத்தால் குளிர்ச்சி’ அப்படின்னு அர்த்தம் வரும் அந்தப்பாட்டுக்கு." அவள் சொல்லச் சொல்ல 'ஆ' என்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் வெறும் பாடல்களுடனே கழிந்தது. எனக்காக அகிலா தனக்கு மிகவும் பிடித்த சில சுசீலா பாடல்களை அன்றிரவு முழுவதும் பாடிக்கொண்டிருந்தாள்.

இன்றைக்கு என்னிடம் பேசவும் கூட மறுத்து திருப்பிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவளிடமிருந்து எதையுமே நான் மறைத்தது கிடையாது. இது நான் செய்ததற்கான தண்டனை தான். நாங்கள் போடாத சண்டையா, ஒரு வருடம் இருவரும் பேசிக்கொள்ளாமல் வேறுவேறு வீடுகளில் தனித்தனியாய், அய்யோ இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அந்த நாட்களை நல்லவேளையாய் எல்லாம் சரியாய்விட்டது.

பக்கத்து அறையில் பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த பவானி எழுந்துவந்து,

"நைனா தூக்கமே வரலை. ஏதாச்சும் கதைசொல்லு." என்று சொல்லி நச்சரிக்க, இருந்த வெறுப்பில் "டேய் மரியாதையாய் நீயே போய் படுத்து தூங்கிறு இல்லை அவ்வளவுதான்."

நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்தில் படுத்திருந்த அகிலா எழுந்து என்னை முறைத்துவிட்டு,

"எத்தனை தடவை சொல்லியிருக்கேன், குழந்தைக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு. எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா. நீவாடா செல்லாம் அம்மா கதை சொல்றேன். ஒரு ஊர்ல தம்புடு தம்புடுன்னு ஒரு முட்டாள் இருந்தானாம்..." அவள் சொல்லத்தொடங்க எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்துவந்தது. சின்னவயதில் வீட்டில் என்னை தம்புடுன்னு கூப்பிடுவது வழக்கம். இது அவளுக்கும் தெரியும் கொஞ்சம் மஜாவான நாட்களில் அவளும் அப்படித்தான் கூப்பிடுவாள். இன்னிக்கு கோபத்தில் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை கடப்பாரை கற்பு

கற்புங்கிறது ஒரு கடப்பாரை...

"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது.

"அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம்,

"டேய் உள்ளப்போய் விளையாடு. போ." அவனை மிரட்ட அவனும் இரு இரு உன்னை இன்னொரு நாள் பார்த்துக்குறேன்னு சொல்பவன் போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் போனதும்தான் தாமதம் அம்மா தன்னுடைய பாராயணத்தை மீண்டும் ஆரம்பிக்க,

"இங்கப்பாரு அவளை உன்னால கட்டுப்படுத்தி வைக்கமுடியும்னா வை. இல்லைனா அவளைத் தள்ளி வைச்சிட்டு வேறவொருத்தியை கல்யாணம் பண்ணிக்க. ஆயிரம் பேரு இருக்காளுங்க இவ திமிர் பிடிச்சி அலையறா."

அம்மாவின் இந்த பேச்சை திசைதிருப்ப நினைத்தவனாய்,

"நானா லவ் பண்ணி கட்டிக்கிட்டேன், நீதானே கட்டிவைச்ச. பொண்ணு லட்சணமா இருக்கா, அமைதியா பேசுறா அது இதுன்னு. இத்தனைக்கும் நம்ம பக்கம் வேற கிடையாது. எங்கேர்ந்தோ ஒரு பாப்பாத்திய வந்து கட்டி வைச்சிட்டு இப்ப அப்படி பண்றா இப்படி பண்றான்னா எப்படி."

"சரி நான் தான் கட்டிவைச்சேன் அதுக்கென்ன, சிலசமயங்கள்ல நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? இல்ல நீ கஷ்டப்படணும்னே கொண்டுவந்து கட்டிவைச்சேனா சொல்லு பார்ப்போம். ஒத்து வரலையா வெட்டி விட்டுறணும்."

"அம்மா திரும்ப திரும்ப அதையே பேசாதேம்மா, வேற எதாவது நடக்குறதா பேசு. எனக்கென்னமோ எல்லாமே சரியாயிறும்னு தோணுது. அதுமட்டுமில்லாம அவ்வளவு சுலபமா வெட்டிவிட்டுற முடியும் நம்ம பவானிக்கு ஆறு வயசாகுது. வேற ஏதாச்சும் தான் பண்ணனும்."

"ஆமாம்டா உம்பொண்டாட்டி, அழகிப்போட்டி அது இதுன்னு பாதி ட்ரெஸ் போடாம ஆட்டி ஆட்டி நடந்துக்கிட்டிருக்கா. இதை பார்க்கிறதுக்கு ஆயிரம் பேர் வேற. கர்மம் கர்மம். எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடி இதையெல்லாம் பண்ணாளா என்ன? இன்னிக்குப் பாரு நம்ம குடும்ப பேரையே கெடுக்குற மாதிரி இப்படி ஆயிருச்சு. நாளையும் மன்னியும் நீ வெளியில தெருவில போகவேணாம்.

இப்படி பாதியில ட்ரெஸ் அவுத்துக்கிட்டு நிக்குறா, வெளியில போனா செருப்பால அடிக்கப் போறாங்க போ உன்னை." அம்மாவின் முகத்தில் தெரியும் ஆத்திரத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன். பின்னாலிருந்து யாரோ தலையில் அடிப்பது போலிருந்ததால் திரும்பிப்பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள் அகிலா, கையில் வெளக்கமாறோட...


"என்ன காலங்காத்தாலேயே கனவா?" அவள் இன்னுமொறுமுறை தலையில் தட்ட, முழுதாய் முழிப்புவந்தவனாய்.

"ச்ச எல்லாம் கனவா?" எனக்கு நானே கேட்டுக்கொள்ள, சட்டையை பிடித்து பக்கத்தில் இழுத்தவள்.

"உண்மையை சொல்லுங்க, கனவுல மீரா ஜாஸ்மின் கூட கொஞ்சல்ஸ் தானே?" அகிலா கேட்க, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் யோசித்த எனக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது.

"ச்ச உனக்கு வேற வேலையேயில்லை, எப்பப்பாரு கொஞ்சல்ஸ், கொஞ்சல்ஸ்ன்னுக்கிட்டு..." சொல்லிக்கொண்டே அவளை பக்கத்தில் இழுக்க கையை தட்டிவிட்டவள்.

"தெரியுமே உங்க உள்குத்து அரசியல் நல்லாவே தெரியுமே எனக்கு. வேணாம்பா நீங்க பேசாம தூங்கி, கனவில மீரா ஜாஸ்மீன்கிட்ட கொஞ்சுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு." சொல்லிவிட்டு விறுவிறுன்னு நகர்ந்தவளை தடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். சிக்மண்ட் ப்ராய்டின் இன்டர்ப்ரட்டேஷன் ஆப் டீரீமஸ் படித்துவிட்டு இன்னும் குழம்பிப்போய் இருந்தவனுக்கு இன்றைக்கு வந்த கனவு ஏதோ பாடம் நடத்துவது போல் இருந்தது. நேற்றிரவு விடாப்பிடியாய், லேட்நைட் ஷோவும் பிகினி ஓப்பனும் பார்த்துக் கொண்டிருக்க, கோபம் வந்தவளாய் ரிமோட்டை பிடுங்கி உடைத்துவிட்டு,

"இங்கப்பாருங்க உங்களுக்கு கொஞ்சம் அதிகமாய் உரிமை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராய்த்தான் பண்றீங்க. திரும்பவும் இப்படி பண்ணீங்கன்னா நானும் கேட்வாக் பண்ண போய்டுவேன் பார்த்துக்கோங்க."

ஏதோ கோபத்தில் அவள் சொன்ன அந்த விஷயம் அப்படியே மனதில் பதிந்து இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்படியே அச்சுஅசலாய் நேரில் நடந்ததைப் போலிருந்தது, அதே ஆட்கள் அதே உருவம், அதே வயதில், அம்மா, பையன் பவானி ஆச்சர்யமாய் இருந்தது. இந்த கனவைப்பற்றி அவளிடம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டவனாய் இருமுறை உடம்பைக் குலுக்கிக்கொண்டேன்.

"பாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.

அப்படியே நான் மிஸஸ் வேர்ல்ட்ல் கலந்து கொண்டால் என்னை தள்ளி வைச்சிருவீங்களோ, என்ன அநியாயமாய் இருக்கு. நாளைக்கு நீங்க வேட்டிக்கட்டிக்கிட்டு கோயிலுக்கு போறீங்க ஏதோ தடங்கல்ல வேட்டி சிக்கி அவிழ்ந்திருது அதுக்காக உங்களை நான் டைவர்ஸா பண்ணுவேன். நல்ல வேடிக்கையாய் இருக்கு. பாதியை மட்டும் சொல்லிட்டு மீதியை மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அத்தம்மாவுக்கு நீங்களே எடுத்து கொடுத்திருப்பீங்க, ‘கற்புங்கிறது ஒரு கடப்பாரை...’ அது இதுன்னு"

அன்றிரவு கொஞ்சம் தனிமையாய் அழகாய் அமைந்த ஒரு இரவில் மெதுவாய் இந்த கனவு விஷயத்தை சொல்லப்போய் அது பிள்ளையாரைப் பிடிக்கப்போய் குரங்கான கதையாய் ஆகியது. இதை சரிகட்ட நினைத்தவனாய்,

"இங்கப்பாரு அகிலா, என் கனவில வந்ததுங்கிறதால அப்படித்தான் நான் நினைப்பேன்னு நீ நினைக்கிறியா. சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளை மூணுவிதமா பிரிக்கிறார் தெரியுமா. அதில் ஒரு விதத்தில் நாம் அதீதமாய் வெறுக்கும் விஷயங்கள் கனவில் வரும்னு சொல்றார். புரிஞ்சிக்கோம்மா நடந்தது நான் அதீதமாய் வெறுக்கும் விஷயத்தில் ஒன்று.

அதுமட்டுமில்லாமல் பாதியில கனவை கலச்சிட்டியா அதனால நான் அம்மாக்கிட்ட என்ன சொல்லவந்தேன்னே யோசிக்க முடியலை..." இப்படி நான் சிக்மண்ட் ப்ராய்டை எல்லாம் வம்புக்கிழுத்து சமாளித்துக் கொண்டிருக்க. அவளது கோபம் சிறிதும் குறைந்ததாய் தெரியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

நந்திகேஸ்வரரும் நச்சு ஐடியாவும்

பெண்கள் கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டலாமா கூடாதா என்ற விவாதம் பெரும்பான்மையான ஆண்களுக்கு சுவாரசியம் தருவதாகத்தான் இருக்கும் என்பது எனக்கு கடைசி தண்ணிப் பார்ட்டியின் பொழுதுதான் தெரியவந்தது. ஏறக்குறைய நான் சந்தித்த எல்லா ஆண்களுக்குமே ஏதாவது ஒரு வகையில் பெண்கள் வண்டி ஓட்டுவதால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிற விஷயமும் தான்.

“உனக்குத் தெரியாது கார்த்திக், இப்படித்தான் ஒரு தடவை இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு பன்னார்கெட்டா ரோட்டில் ஹனிவெல்லிற்கு கொஞ்சம் முன்னால் இருக்ற பிலேக்ஹல்லி பஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு ஆக்ஸிடென்ட்...”

“யாருக்கு...”

“வேற யாருக்கு எனக்குத்தான். அப்ப எல்லாம் நான் எஃப் 2 ஓட்டிக்கிட்டிருந்தேன். ரெட் சிக்னலுக்காக வண்டியை நிறுத்திட்டி; பச்சைக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். நச்சுன்னு யாரோ பின்னாடி இடிக்கிற மாதிரி இருந்ததால திரும்பிப் பார்த்தா ஒரு டாடா இண்டிகா பம்பரில் இடிச்சி நிக்குது. ‘கொய்யால’ அப்படின்னு சவுண்ட் உட்டுட்டு திரும்பிப் பார்த்தா டிரைவர் சீட்டில் ஒரு பிகரு..”

“அப்புறம்...”

“நான் சக்க கோபத்தில் ஸ்டாண்ட் போட ரெடியாகுறேன்; அந்தம்மா வேகவேகமா ரிவர்ஸ் எடுக்குறேன் பேர்வழியென்று ரிவர்ஸ் போட்டு ஆக்ஸிலேட்டர் கொடுக்க அது திரும்பவும் என் மேல வந்து முட்டி நான் நிலை தடுமாறி கீழே விழ வண்டி என் மேல் விழன்னு ஒரே காமெடியாப் போச்சு. அந்த பிகருக்கு ரிவர்ஸ் கியரே போடத்தெரியலை. பிரேக்கை அமுக்கிறேன்னு திரும்பத்திரும்ப ஆக்ஸிலேட்டரை அமுக்க; அன்னிக்கு ஒரே பக்வாஸா போச்சுது.”

ஆறு ஏழு பேரா தண்ணியடிக்க வந்திருந்த இடத்தில் ஏதோ ஞாபகமாய் இதைச் சொல்ல எல்லோரும் கபகபவென்று சிரிக்கத்தொடங்கினர்.

கார்த்திக் கொஞ்சம் சீரியஸாய், “கடைசியில் என்னதான் ஆச்சுது.”

“ஒரு வழியா ப்ரேக்கைப் போட்டு வண்டியை விட்டு இறங்கினா பாரு; ஒன்றரை அடிதான் இருக்கா. அவ சீட்டில் நிமிர்ந்து உக்கார்ந்து வண்டி ஓட்டினா ஆக்ஸிலேட்டருக்கு கால் எட்டாது பார்த்துக்க. அதனால கீழே குனிஞ்சு ஆக்ஸிலேட்டரை அமுக்குறது திரும்ப மேலவந்து ரோடு பாக்குறது பின்னாடி திரும்ப கீழிறங்கி...

கேட்டா லைசன்ஸும் இல்லையாம், வேறென்ன சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வர்ற காசை என்ன பண்றதுன்னு தெரியாம கார் வாங்கிட வேண்டியது. பின்னாடி இப்படித்தான்...”

நான் சைகை செய்து காண்பித்தேன் குனிந்து ஆக்ஸிலேட்டரை அமுக்கிவிட்டு, தலையை தூக்கு ரோடைப் பார்ப்பது போல. இப்படி ஆரம்பித்த அன்றிரவு ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொல்லப்போக கடைசியில் எந்தப் பொண்ணாவது ரோட்டில் ஆக்ஸிடெண்ட் பண்ணாம இருந்திருப்பாங்களா என்ற கேள்வியுடன் நான் இன்னொரு மாக்டெய்ல் ஆர்டர் செய்ய, அந்த ஏழு பேரிலேயே அதிக வயதுக்காரனான யோகேஷ் பர்தேஷி.

“டபுள் மைண்டட் ஆளுங்க மோகன், எப்பப்பாரு எதையாவது மனசுல நினைச்சிக்கிட்டே வண்டி ஓட்டினா பின்ன எப்படி.; கான்ஸண்ட்ரேஷன் இல்லாமப் போறதால இப்படியெல்லாம் ஆகுது. இந்த பொண்ணுங்களோட புருஷன்களுக்கும் இப்படி நடக்கும்னு தெரியும் அதை அவன் சொன்னா பிரச்சனையாகும் பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு விட்டுறானுங்க படுபாவிங்க.

தெரியுமா நான் கொஞ்ச நாளாவே கார் ஓட்டுறது ஆம்பிளையா பொம்பளையா அப்படின்னு பார்த்துட்டுத்தான் ஓட்டுறது. பொம்பளையா இருந்தான்னு வை. நாலடி அந்தப்பக்கம் தான் வண்டியை ஓட்டுவேன் தெரியுமா?

அதுசரி உன்னை இடிச்ச வண்டி எதுன்னு சொன்ன?”

“ஏன் கேக்குற யோகி? டாட்ட இண்டிகா...”

“இல்ல என் பொண்டாட்டிக்கிக் கூட அதுதான் ஒன்னு வாங்கிக் கொடுத்துறுக்கேன் அதான்...” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல எதிரெதிர் திசையில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்கள், சிரித்த சிரிப்பில் பிராந்தி, மாக்டெய்ல், சிக்கன் பீஸ், மசாலாக் கடலை என விதவிதமாய்ப் பறந்தது டேபிள் முழுவதும் எதிர் எதிர் திசைகளில்.

கடைசியில் போனவர்கள் போக மீதி இரண்டு பேர் டக்கீலா அடித்துக் கொண்டு எலுமிச்சை, உப்பை உறிஞ்சிக் கொண்டிருக்க எனக்கு அந்த ஆக்ஸிடென்ட்டிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கண்முன்னே தோன்றி மறைந்தது.

“இங்கப் பாருங்க உங்களுக்கு இப்ப நேரம் சரியில்லையாம், வாராவாரம் திங்கட் கிழமை சோமேஸ்வரர் கோவிலுக்குப் போய் நெய்விளக்குப் போடச்சொல்லி அத்தம்மா சொன்னாங்க.

நீங்கதான் என்னமோ பெரிஸா நாத்தீகம் பேசிக்கிட்டு வரமாட்டேன்னுட்டீங்க, இப்பப் பாருங்க இப்படி ஆய்டுச்சு.”

பெரும்பாலும் நாம் வாயை திறக்க முடியாத சூழ்நிலை இப்படித்தான் ஏற்படும். அக்கா வீட்டிற்குப் போயிருந்த அம்மா பக்கத்தில் இருந்த ஜோசியக்காரனைப் பார்க்கப் போக அவன், சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும். ஏதாவது சிவன் கோவிலுக்குப் போய் நெய் விளக்குப் போட்டா சரியாய்டும்னு சொல்லப்போக, பாவாவால், நானும் மாட்டினேன் ஒரே ராசி ஒரே நட்சத்திரம். பரிகாரம் சுலபமாய் அகிலாவிற்கு சொல்லப்பட்டது.

இப்பல்லாம் சாயந்திரம் சீரியல் பார்க்க உட்கார்ந்தா எழுந்திருக்கிறதே கிடையாது அப்படின்னாலும், பாவாவிற்காக அக்கா திங்கட் கிழமைகளில் நெய்விளக்குப் போடப்போய், அது என் தலையில் விடிந்தது. வேறென்ன அண்டர் கிரவுண்ட் பாலிடிக்ஸ். அகிலா திங்கள் கிழமை ஒரு நேரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். அவளுக்கு தான் பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் பட்டுப் புடவைகளை போட்டு உடுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு பவானிக்கு வீட்டுப் பாடம் செய்யாமல் இருக்க; இப்படி ஒரு க்ரூப்பாக் கிளம்ப கடைசியில் மாட்டிக்கொள்வது நான்.

‘பக்’ களின் தலைமேல் விழுந்து நான் புரண்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிலிருந்து தொலைபேசப்படும், ‘இன்னும் கிளம்பலையா?’ என்று. இப்பொழுதெல்லாம் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் வாயு கோளாறு வருவதால் வேறுவழியில்லாமல் கிளம்பிப் போனால். பட்டுப் புடவை, அதற்கு மேட்சிங்காக முத்தோ, பவளமோ, தங்கமோ உடம்பெல்லாம் புரள, அப்பொழுது தான் குளித்துவிட்டு நீண்ட கூந்தலின் நுனியில் மட்டும் முடிச்சுப் போட்டு தயாராக கிளம்பி நிற்கும் அகிலாவைப் பார்த்தால் அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலுக்குப் போகத்தான் மனம் வரும். திரும்பவும் ஹோட்டல் சாப்பாடு நினைவுக்கு வர ‘தேமே’ என்று இல்லை ‘ஞே’ என வண்டி சோமேஸ்வரர் கோவிலுக்குப் புறப்படும். அந்தப் பக்கம் ஒன்வே ஆதலால், அல்சூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு ஒரு நடை.

சொல்லப்போனால் எனக்கு நல்லது ஏற்படும் என்று நெய் விளக்கு போடப் புறப்படவில்லை என்றும் அங்கிருந்து கோவிலுக்கு இருக்கும் நூறு மீட்டர் தொலைவை நாங்கள் கடக்கும் பொழுது ரோடே திரும்பிப் பார்க்கும் சந்தோஷத்திற்காகத்தான் அகிலா நெய் விளக்குப் போடவருகிறாள் என்றும் என் மனதிற்கு பட்டது சாதாரண நிகழ்வாய் இருக்காது என்றே தோன்றிக் கொண்டிருந்தது அன்று.

நான் நந்திக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டு வரவில்லை என்பது போல் சைகைகாட்ட, எனக்கு மட்டும் தெரிவது போல், திருஷ்டி சுத்திப் போடும் பொழுது சம்பிரதாயத்திற்காக “தூ, தூ, தூ” என்று எச்சில் துப்புவதைப் போல் உதட்டைக் குவித்து ஒரு முறை துப்பிக் காண்பித்தாள். சாதாரணமாக என் பொண்டாட்டி அப்படி செய்பவள் இல்லை தான், பெரும்பாலும் ஊடல் பெருத்து அதன் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் பொழுதோ இல்லை நான் செய்த ஏதாவது ஒன்றிற்கு அவளால் செயலால் எதிர்க்கமுடியாத ஆனால் எதிர்ப்பை காட்டியே ஆகவேண்டிய நிலையில் இப்படிச் செய்வாள். இதுதான் முதன் முறையாக பொதுஇடத்தில் அதுவும் கோவிலில் செய்தாள்; அதனால் நான் அடைந்த ஆச்சர்யம் அவள் கண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணடித்துக் காண்பித்தாள், இந்தப் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம் தான் என்று நினைத்தவனாய் பவானியை என்னுடன் நிறுத்திக் கொள்ள,

“பாவா” என்று சொல்லி கண்களால் பயமுறுத்தினாள்.

நான் “சர்தான் போடி” என்பதைப் போல அவனை இழுத்துக் கொண்டு நந்திக்கு எதிரில் இருந்த மணல் பரப்பில் உட்கார்ந்தேன். இன்றைக்கு நைட் ரொம்பவும் கெஞ்ச வேண்டியிருக்காது என்று நினைத்தவனுக்கு பக்கத்தில் இருந்த நந்தி திரும்பிப் பார்ப்பதைப் போல் இருந்தது.

அகிலா நெய்விளக்கேற்றிவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வரும் பொழுது, பவானி நந்தியின் வாலைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனுக்கு நந்தியின் காது என்று உணர்த்தும் படியாக என் காதைத் தொட்டுக் காண்பிக்க. அவன் காலியாக இருந்த நந்தியின் இந்தப் பக்கத்து காதை விட்டுவிட்டு, இன்னொரு காதில் தன்னுடைய கஷ்டத்தையெல்லாம் ரொம்பவும் சீரியஸாய் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் காதை பிடித்து இழுக்க பிரச்சனை ஆகயிருந்தது. ஆனால் இப்படி வம்பு செய்தது சின்னப் பையன் என்பதால் அவரும் அவனை கொஞ்சி விட்டு என்னிடம் அனுப்பிவிட்டார். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அருகில் வந்த அகிலா,

“இதெல்லாம் உங்க வேலைதானா?” என்று கேட்க

“இல்லம்மா, நான் நந்திகேஸ்வரர் கதையைச் சொல்லி, உங்கம்மா ஈஸ்வரர் கிட்ட மனு போட போயிருக்கா, அவர் எந்த மூடில் இப்ப இருக்கிறாரோ தெரியாது. ஆனால் உனக்கு ஈஸ்வரர் கிட்ட என்ன நடக்கணும்னு வேண்டுறியோ அதை நந்திகேஸ்வரர் கிட்ட சொன்னா அவர் ஈஸ்வரர் நல்ல மூடில் இருக்கும் பொழுது சொல்லுவார், சீக்கிரம் நிறைவேறும்.

அதனால அவர் காதில் போய் விஷயத்தைச் சொல்லுன்னு சொன்னேன். அதுக்கு உன் மகன் பெரிய அறிவாளியாய் என்ன கேட்கன்னு கேட்டான். நான் உங்கப்பா நினைக்கிறது இன்னிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னு போய் வேண்டிக்கடான்னு சொன்னேன்...” என்று சொல்ல

முகமெல்லாம் சிவந்தவளாய், பக்கத்தில் உட்கார்ந்து தொடையைக் கிள்ளினாள்.

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. எதையெதை யார் யார் கிட்ட சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை வேண்டாம்.” அவள் பவானியை மடியில் இழுத்து வைத்துக் கொண்டு கிசுகிசுக்க.

நான் பாவமாய், “என்ன பண்ணுறது இப்ப இதுக்கெல்லாம் நந்தீஸ்வரர் சிபாரிசு வேண்டியிருக்குது” என்று சொல்ல கண்களை உருட்டி மிரட்டியவள். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.” என்னமோ சம்பிரதாயத்திற்கு கோவிலில் உட்காரவேண்டுமே என்று உட்கார்ந்தவள் போல் எழுந்து வேகமாய் நடையைக் கட்டினாள். நான் திரும்பி வெளியில் இருந்தே சோமேஸ்வரருக்கு ஒரு சல்யூட் போட்டுவிட்டு பின் தொடர்ந்தேன்.

வீட்டிற்கு வந்ததில் இருந்தே டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்து சீரியல் பார்ப்பதைத் தொடர்ந்தவள். சன் டீவி நியூஸ் இடைவெளியில் போய் பட்டுப்புடவை, நகைகளை கழட்டிவிட்டு வந்து மீண்டும் உட்கார்ந்தவளிடம் காபி, டின்னர் கேட்டு வாய் வலித்துப் போய் விட்டுவிட்டேன். கோவிலுக்குப் போய்விட்டு வரும்வழியில் வாங்கி வந்திருந்த பழம், மற்றும் ஏற்கனவே வீட்டில் இருந்த தீனியைத் தின்றுவிட்டு பவானி தூங்கிவிட. நான் பதினொன்னறை மணிக்குப் பாயைப் பிராண்டினேன்.

“இங்கப் பாருங்க, நேத்திக்கு அத்தம்மா வதனை வீட்டிலிருந்து போன் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேசின அரைமணிநேரத்தில ஒரு சீரியலை மிஸ் பண்ணிட்டேன். அதை இப்ப பன்னிரெண்டு மணிக்கு திரும்பப் போடுவான். எது பேசுறதா இருந்தாலும் அதுக்கப்புறம் பேசுங்க.” சொல்லிவிட்டு மீண்டும் டீவியில் ஐக்கியமாக, வந்த கோபத்தில் நான் தலையணையைத் தூக்கிக் கொண்டு பவானி ரூமிற்கு வந்தேன். தூங்கியது தெரியாமல் காலை எழுந்த பொழுது பக்கத்தில் படுத்திருந்தாள். நான் எதுவும் பேசாமல் எழுந்து பல்விளக்கிவிட்டு வந்துப் பார்த்தால், காபி கோப்பையுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

வந்த கோபத்தில் “இங்கப் பாரு அகிலா இது சரியில்லை, வந்த புதுசில் சரியாத்தான் இருந்த நீ. இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சு வீட்டில் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஒன்னும் தெரியாம இருக்கிற அளவுக்கு அடிக்ட் ஆய்ட்ட. இது சரியில்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

“ஒரு நாள் பன்னிரெண்டு மணிவரைக்கும் பாத்ததுக்கு என்ன கோபம் வருது உங்களுக்கு. நீங்க பதினொன்னரையிலிருந்து பன்னிரெண்டு மணி வரைக்கு எத்தனை நாள் மிட்நைட் மசாலா பார்க்குறேன். டிஸ்கவரி சேனல் பார்க்கிறேன்னு என் கோபத்தைக் கிளறியிருப்பீங்க...”

அவள் சொல்ல, அவள் எடுத்துக்கொண்ட உதாரணங்களால் அவள் கோபமாக இல்லாது தெரிந்தாலும் நான் மேல் பேச்சு பேசாமல் கிளம்பிப்போனேன். அன்று குளித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நந்தீஸ்வரர் என்னைப் பார்த்து சிரிப்பதைப் போல் தோன்றியது வெறும் மூடநம்பிக்கை என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளம்பினேன். அகிலாவுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் அவள் செய்துவைத்த டிபனையும் சாப்பிடாமல் வந்ததை நினைத்து அலுவலகத்தில் வருத்தமாகயிருந்தது.

“இங்கப் பாருய்யா உன் இஷ்டத்துக்கு மாசாமாசம் ஐம்பது ரூபாய் ஏத்திக் கிட்டே போற. இதுல தமிழ்நாட்டில் எதுவும் நடந்தா உடனே தமிழ் சேனலை எல்லாம் வேற நிறுத்திற்ற. நீ சொல்ற மாதிரியெல்லாம் ஆடமுடியாது தெரிஞ்சிக்கோ.”

அன்று மாலை கேபிள் டீவி ஆப்பரேட்டர் எப்பொழுதையும் விட ஐம்பது ரூபாய் அதிகம் கேட்டு வந்ததும் நான் கோபத்தில் கத்தியது அகிலாவிற்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். எப்பொழுதும் காசை ஒரு கன்செர்னாக பார்க்காத நான் ஐம்பது ரூபாய்க்கு கத்தியதை அவளால் புரிந்துகொள்ள முடியாதுதான்.

“இங்கப் பாரு சார். உனக்கு இப்ப கேபிள் கனெக்ஷன் வேணுமா வேணாமா? காசு கொடுப்பேன்னா கொடு இல்லாட்டி நான் கனெக்ஷனை எடுத்துற்றேன். சும்மா கூவாத”

“உன் கனெக்ஷன் வேணாம் நீ புடுங்கிக்க” நான் கோபத்தில் கத்த. அவன் கனெக்ஷனை எடுத்துவிட வீட்டிற்குள் வர, “வீட்டுக்குள்ள எல்லாம் விடமுடியாது உன்னால முடிஞ்சா வெளியில கட் பண்ணிக்க.”

அவன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தான். அகிலா என்னை ஆச்சர்யமாய் மேலும் கீழும் பார்க்க,

“இங்கப் பாரு அகிலா, இவன் மட்டுமா கேபிள் கனெக்ஷன் கொடுக்குறான் நாளைக்கு வேற ஒருத்தனை விட்டு கொடுக்கச் சொல்றேன். ஒரு நாள் தான. இவனுங்களுக்கெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும்.” என்று சொல்லிவிட்டு அகிலாவின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினேன்.

அடுத்தநாள் பழைய கேபிள்காரன் வீட்டின் முன்னால் வந்து கத்தினான்.

“யோவ் நினைச்சிக்கிட்டிருக்கிறியா. வேற ஒருத்தன் இந்த ஏரியாவுல வந்து உன்வீட்டுக்கு கனெக்ஷன் கொடுத்துறுவான்னு. கனவு தாண்டி மகனே.”

அவன் சொல்லிவிட்டு போனதும்தான், அகிலா கேபிள் காரர்களுக்கு இடையில் இருக்கும் அக்ரிமெண்ட் பத்தி சொல்லிவிட்டு,

“என்னயிருந்தாலும் நீங்க அன்னிக்கு அப்படி கோபமா பேசியிருக்கக்கூடாதுங்க. ஆனா அதுக்காக அந்த கேபிள்காரன் செஞ்சதும் சரிகிடையாது. நீங்க கவலைப் படாதீங்க கேபிள் ஒன்னுதான் வாழ்க்கையா? பொழுது போக்குறதுக்கு எத்தனையோ இருக்கு.”

அகிலா சமாதானம் சொன்னாள். நான் அவள் கண் முன்னாலேயே அந்த ஏரியாவில் இருக்கும் பல கேபிள் டீவி ஆப்பரேட்டர்களுக்கு போன் செய்து எவ்வளவு ஆனாலும் சரி என்று சொல்லியும் ஒருவரும் கனெக்ஷன் கொடுக்க வராததால் கோபமடைந்தவனைப் போல் இருக்க மீண்டும் சமாதானம் சொன்னாள்.

இப்படி கேபிள் கனெக்ஷன் பிரச்சனையால் சீரியல் பார்ப்பது நின்று போயிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் வேறு ஏரியாவிற்கு குடி போனதும் கூட அகிலா என்னிடம் கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. கேட்டால் அது ஒரு அடிக்ஷன் மாதிரிங்க அப்பப்பா எப்படி வெளிய வந்தேன்னு இருக்கு. நல்லவேளை அன்னிக்கு நீங்க அவனை அப்படிப் பேசி அனுப்பிட்டீங்க என்று சொல்ல. நானும் கேபிள் டீவி ஆப்பரேட்டரும் போட்ட சதி தான் அது என்று தெரிந்தால் என்ன செய்வாள் என்று யோசித்தேன்.

அந்த கேபிள்காரன் அன்று,

“சார் எனக்கு நல்லா புரியுது சார் உன் பீலிங். இவ்ளோ கனெக்ஷன் கொடுக்குறேனே என் வீட்டில் கேபிள் கிடையாது தெரியுமா?” என்று சொல்லி பிரம்மாதமாய் நடித்துக் கொடுக்க என் திட்டம் நிறைவேறியது நினனவில் வந்தது. எல்லாமே அந்த ஆக்ஸிடெண்டால் நடந்தது தானே! பின்னர் டக்கீலா அடித்துவிட்டு மல்லாந்த நண்பரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்குக் கிளம்பினேன்.

முந்தைய பாகங்கள்.

இப்படியும் ஒரு தொடர்கதை - கற்புங்கிறது ஒரு கடப்பாறை...
இப்படியும் ஒரு தொடர்கதை - சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?
இப்படியும் ஒரு தொடர்கதை - இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்
இப்படியும் ஒரு தொடர்கதை - பிரிவென்னும் மருந்து
இப்படியும் ஒரு தொடர்கதை - ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
இப்படியும் ஒரு தொடர்கதை - பெண்ணியமும் சில புடலங்காய்களும்
இப்படியும் ஒரு தொடர்கதை - நீ கட்டும் சேலை மட்டிப்பில நான் கசங்கிப் போனேண்டி

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி

நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள் என்பதுதான்.

பிக்கப் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும், இவளைப் பார்த்து அம்மா அடைந்த அதே ஆச்சர்யத்தை அகிலாவை காட்டினாள். நான் கண்களாலேயே இதற்கெல்லாம் நீதான் காரணமா என்று கேட்க மறுத்தவளின் கண்கள் நம்பத்தான் சொல்லின என்னிடம். ஆனால் மறுக்கச்சொல்லியது அக்காவின் அடுத்தக் கேள்வி, இந்தக் கேள்வியைத் தான் கேட்கப்போகிறாள் என்று ஊகித்திருந்தாலும் கேட்கும் பட்சத்தில் யார்சொல்லியது என்ற துணைக்கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"டேய் நீ அமேரிக்காப் போறியா?"

நான் திரும்பி அகிலாவை என்னயிது என்பதைப் போல் பார்க்க எனக்குத் தெரியாது என சத்தியம் செய்தன அவள் கண்கள்.

"ஆமாம் போறேன் அதுக்கென்ன இப்ப?"

"இந்தத் தடவையும் இவளைக் கூட்டிக்கிட்டு போகலைதானே நீ."

இந்த முறை நான் அகிலாவைப் பார்க்கவில்லை, ஒருவாறு அவள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அவள் கேட்கவில்லை இங்கே கேட்கப்படுகிறது. பதில் சொல்லவேண்டிய கடமையிருந்ததாலும் இவளுக்குச் சொன்னால் விஷயம் அகிலாவிற்கும் சொல்வதுபோலாகும் என்பதால் சொன்னேன்.

"இங்கப்பாரு, நான் ஊர் சுத்திப்பார்க்க அமேரிக்கா போலவில்லை, ப்ரொஜக்ட் ஊத்தி மூடிக்கிட்டிருக்கு வேற வழியில்லாமல் அங்கப்போறேன். சிகப்பில் இருக்கும் ஸ்டேட்டஸை பச்சையாக்கப் போகிறேன்.

அங்கே போனாலும் நான் எத்தனை மணிக்கு திரும்பிவருவேன்னு தெரியாது. இங்கயப் போலவே அங்கேயும் சனி, ஞாயிறு குப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதனால என்கூட வந்தா இவளுக்கு போரடிக்கும். எவ்வளவு நேரம் தான் இவளும் டீவியையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா. அதுமட்டுமில்லாம பேச்சுலர்னா பிரச்சனையே வேற, பேமிலியைக் கூட்டிட்டுப் போறதுன்னா பிரச்சனையே வேற. ஏகப்பட்ட செலவாகும்."

காரணங்களை அடுக்கிக்கொண்டே போனேன். அத்தனையையும் நிராகரித்தவளாய்,

"இல்லை நீ பொய் சொல்ற, அவளை அமேரிக்கா கூட்டிக்கொண்டு போவதற்கு ஏனோ பயப்படுற நீ. எனக்கு என்ன காரணம்னு தெரியாது. ஆனால் நீ பயப்படுறேன்னு தெரியும். எனக்குத் தெரியாது உன் மாமன், அவளை அமேரிக்கா கூட்டிக்கிட்டுப் போனா என்னன்ன பிரச்சனைவரும்னு சொன்னானா, இல்லை நீயே நினைச்சிக்கிட்டிருக்கிற விஷயங்களை மனசில வச்சிக்கிட்டு இவளை இங்கேயே கலட்டி விட்டுட்டுப்போறியா எனக்குத் தெரியாது. ஆனால் இது சரியில்லை, அதை மட்டும் நான் சொல்லிட்டேன்."

கடைசிவரை என்னுடைய காரணங்களை ஒப்புக்கொள்ளவேயில்லை, அம்மாவிடம் காப்பிவாங்கிக் குடித்துவிட்டு, என்னுடைய காரை அவளே டிரவ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனதும் வீடு ஏறியிறங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்ட நாளொன்றின் கடைசியில் அடுத்த நாளுக்காக காத்திருக்கும் லிப்டைப் போல் அமைதியாகயிருந்தது அடுத்தப் பிரச்சனையை நோக்கி. என்னுடைய பயமெல்லாம் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை நினைத்து பார்த்திராத அகிலா இதைப்பற்றி என்ன நினைப்பாள் என்றுதான்.

இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இல்லையா என்றால் சொல்லமுடியவில்லை என்றுதான் பதில் வந்தது. உண்மையில் கல்யாணவயதில் இந்தக் கேள்விகள் இருந்ததுண்டு. ஆனால் அகிலாவுடனான திருமண வாழ்க்கை அந்த பழைய எண்ணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது. இப்படியாக ஏகப்பட்ட எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அகிலா அருகில் வந்ததே தெரியவில்லை. தோளைத் தொட்டுத்திருப்பியவள்.

"என்ன ஒரே யோசனை, எந்தப் பொய்யைச் சொன்னால் இவளை வாகாய் கழட்டிவிட்டுட்டுப் போகலாம்னு யோசனை பண்ணுறீங்களோ."

ஆனால் நான் உண்மையில் அதை நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் பொய்யைப் பற்றிப் பேசியதும் சும்மாப் போட்டுப்பார்த்தேன் சில பொய்களை.

"இங்கப்பாரு அகிலா, உன்னை அமேரிக்கா கூட்டிட்டுப் போறதா பெரிய விஷயம். நாளைக்குச் சொன்னேன்னா உனக்கும் விசா ஏற்பாடு பண்ணிடுவாங்க. B1 தானே, ஆனால் நீ அங்கவந்தும் சேலையில்ல கட்டுவேன்னு ஒத்தக்காலில் நிப்ப?" உண்மையில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைப்பற்றித்தான் இத்தனை நேரமும் யோசித்ததாய் நம்பவைக்க என்னால் ஆன நடவடிக்கைகள் அத்தனையையும் செய்தேன்.

அகிலா ஏன் அந்த முடிவிற்கு வந்தாள் என்று தெரியாது ஆனால் அவள் சேலை மட்டும் தான் கட்டுவாள். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நைட்டி போடமாட்டேன் என்று அடம்பிடித்தவள் அவள். சில தடவைகள் வற்புறுத்திய பொழுது, நான் ட்ரெஸ் பண்ணிக்கிறதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லியிருந்தாள். உண்மையில் அவளுடைய உடை விஷயத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை, உனக்குப் பிடித்திருந்தால் உடுத்திக்கொள் அவ்வளவுதான் என்வரையில்.

"நான் அப்பவே நினைச்சேன் இப்படி உப்புச்சப்பு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி என்னை உங்கக்கூட வரவிடாம பண்ணிடுவீங்கன்னு?"

ஆக என்னுடன் அவள் அமேரிக்கா வரும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டுருந்தது. இதற்கு மேலேயும் நான் எதையாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையாக அவளாய் யோசிக்காவிட்டாலும், அக்கா சொல்லிக்கொடுத்திருந்தது நினைவில் வரலாம் என்பதால். கொஞ்சமாக அகிலாவை சேலையிலிருந்தாவது விடுவிக்கலாம் என்று நினைத்து.

"சரி நீ இப்பச் சொல்லு, சேலை தவிர ஏதாவது மாட்ர்ன் டிரெஸ் போட்டுக்கொள்ள சம்மதம் என்று. நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்."

அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனை சேலையில்லை என்று, ஆனாலும் நாங்கள் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தோம்.

"தெரியுமே நீங்க அமேரிக்காவைச் சாக்கா வைச்சு, என்னை டூ பீஸ் போட வைக்கலாம் என்று பாக்குறீங்க. ஆனா அதெல்லாம் நடக்காது."

உண்மையில் கல்யாணம் ஆவதற்கு முன் என் பெண்டாட்டியை எந்தெந்த உடைகளில் பார்க்கவேண்டும் என்ற கனவுகள் இருந்ததுண்டு ஆனால் அவையெதிலும் அவள் சொன்ன உடை கிடையாது. ஷேக்ஸ்பியர்ஸ் இன் லவ் படத்தில் அந்தக் கதாநாயகி அணிந்திருக்கும் பாரம்பரிய இங்கிலாந்து உடை பிடிக்கும் எனக்கு, அதே போல் த லாஸ்ட் சாமுராய் படத்தில் சாமுராயின் தங்கையான ஜப்பானியப் பெண் அணிந்திருக்கும் உடை, வெள்ளைப் பனியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்ற மேற்கத்தியப் பெண்மக்களின் கல்யாண உடைகூட நிறையப் பிடிக்கும். கடேசியாக எப்பொழுதாவது அகிலா அணியும் மடிசார். இவையெல்லாம் அகிலாவிற்கும் தெரிந்திருக்கும்.

"எனக்கு ஏம்மா உன்னை டூ பீஸில் பார்க்கணும் நான் தான் பீஸே இல்லாமல் பார்த்திருக்கேனே..." சொல்ல தலையில் கொட்டியவள்.

"சரி கொஞ்சம் சீரியஸாய் பேசுவோமா, உங்கக்கா சொன்னதுதான் பிரச்சனையா? நீங்க பயப்படுறீங்களா நான் அமேரிக்கா போனா மாறிருவேன்னு. இவ்வளவுதானா இத்தனை வருடங்களில் நீங்கள் என்னை புரிந்துகொண்டது.

சரி மாறிருறேன்னே வைச்சுக்கோங்களேன். அதுல என்ன தப்பு, புது ஊரு, புது கலாச்சாரம், புது மக்கள்ன்னு வாழ்ந்தா மென்ட்டாலிட்டி மாறித்தானே போகும். என்ன உங்களுக்கு என்னையக் கூட்டிக்கொண்டு போறதுக்கு முன்னாடி உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும், அப்படியில்லாட்டி இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அது உங்க பட்ஜெட்டுக்கு சரிவராது அவ்வளவுதானே. தாராளமாய் உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு போங்க.

இருபத்தைந்து வருடங்களாய் உங்களை வளர்த்தவங்க அவங்கதானே, அதுக்கப்புறம் ஒரு பத்துவருஷம். இல்லை அதுவும் தான் சொல்லமுடியாதே ஒன்பது வருஷம் தானே உங்களை எனக்குத் தெரியும். இடையில் வந்த எனக்கு அவங்களை விட அதிக உரிமையிருக்க முடியாது தான்."

உண்மையில் அக்கா சொன்ன காரணங்களைவிடவும், அகிலா சொன்னதுதான் சரியென்று மனதிற்குத் தோன்றியது. சரி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாகிவிட்டது பேசிமுடித்துவிடலாம் என்று நினைத்து அவளை அருகில் இழுத்து அமர்த்தினேன். ஆரம்பத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள பயந்தது எங்கே எனது மனைவி என்னைப் புரிந்து கொள்ளமுடியாதவளாய் போய்விடுவாளோ என்றுதான்.

எனக்கும் அக்காவிற்கும் பல விவாதங்கள் பறக்கும், நான் பள்ளியிறுதி கூட தாண்டியிறாத, கிராமத்துப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, ஏன் அப்படி நினைக்கிறாய் நகரத்துப் பெண்கள் சரியானவர்களாகவும் கிராமத்துப் பெண்கள் தவறானவர்களாகவும் இருந்துவிட்டால் என்று விவாதிப்பாள். நல்லவேளை அவள் சொன்னது போல் படித்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருந்தேன், அது இப்பொழுது உதவுவதாகப் பட்டது. ஆனால் கிராமத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் அக்காவின் கருத்தை தவறென்று ப்ரூப் பண்ணமுடிந்ததில்லை.

"உண்மைதான் அகிலா, ஆரம்பத்திலிருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் இது. இந்த பதினைந்தாண்டு சாப்ட்வேர் வாழ்க்கையில் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அம்மாவை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இன்று கூட்டிட்டுப்போவோம், நாளைக்குக் கூட்டிக்கொண்டு போவோம் என்று நினைத்து தட்டிக்கழிந்து கொண்டே வந்தது. இவையனைத்தும் என் மனதில் அடிஆழத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவே நான் நினைத்திருந்தேன். அம்மாவிற்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது உனக்கே தெரியும். ஆனால் இது நிச்சமயமான காரணமாகயிருக்கும் என்று நீ சொன்னதற்கு பிறகுதான் எனக்கேத் தோன்றுகிறது.

ஆனாலும் பரவாயில்லை, அம்மா ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் நீ தயாராயிரு நான் உன் விசாவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்கிறேன்."

அதுவரை நான் சொல்வதையே மிகக்கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அகிலா.

"எனக்கு இதுவும் தெரியும். எனக்காகவோ இல்லை உங்களுக்காகவோ நீங்கள் கூட்டிக்கொண்டு போகவில்லையென்றாலும். மோகனா அக்காவிற்காக நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போவீர்கள் என்று, ஆனால் அது தேவையில்லை. நான் வெயிட் பண்றேன், இன்னும் நிறைய நாட்கள் அங்கே தங்கியிருக்கும் அளவிற்கு ஒரு வாய்ப்பு வந்ததும் நானே புடுங்கி எடுத்து உங்களைக் கூட்டிப்போக வைக்கிறேன்.

நான் உங்கக்கிட்ட சொல்லவிரும்பியது, விரும்புவது, விரும்பப்போவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான், உங்கள் அக்காவைப் போல, அம்மாவைப் போல நானும் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லமாட்டேன். ஆனால் வெளியில் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் உள்மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்களை நன்கறிந்த மற்றவர்களைப் போல நானும் அறிந்து கொள்ள நிறைய முயற்சி செய்கிறேன் அவ்வளவுதான்."

லெக்சர் அடிக்கத்தொடங்கினாள், இது சிலசமயம் அகிலாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். புனிதபிம்பமாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பிரச்சனையை நான் கிளப்ப நினைக்காததால்.

"இங்கப்பாரு அகிலா இப்படி நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்ல, அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும். நீ என்கூட வந்தால் அமேரிக்காவில் டிவியில் பே சானலுக்கு நாளொரு மேனிக்கு டாலர் அழவேண்டியிருக்காதேன்னு யோச்சிச்சேன். நீயிருக்கிறப்ப டீவியில் தெரிகிற பொம்மை எதுக்குச் சொல்லு. அதனால நீ வந்துதான் ஆகணும்."

தன்னை என்னிடம் இருந்து விலக்கிக்கொண்டவள், இது திருந்தாத கேசு என்று சொல்லிக்கொண்டு, தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றாள். கனவில் நான் அமேரிக்காவில் பின்புறம் நீலக்கலர் பூக்களின் மத்தியில் ஜீன்ஸ் டீஷர்ட்டுடனும், என் மனைவி சேலையிலும் "நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேண்டி" பாட்டிற்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts