In வகைப்படுத்தப்படாதவை

சில கேள்விகளுக்கான என் பதில்கள்

காசியண்ணன் என்னிடம் அனுப்பியிருந்த கேள்விகளுக்கான பதில்கள்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

நிச்சயமாக இல்லை, நிறைய செய்யலாம். நிறைய விஷயங்களை தமிழில் எழுதலாம். தற்சமயங்களில் எல்லாம் எப்பொழுது ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைத் தேடினாலும் தமிழிலும் தேட்ப்பார்ப்பதுண்டு, 1% வரை கூட என் தேடல்களுக்கு தமிழில் கட்டுரைகள் இல்லை. கண்டெண்ட் இன்னும் நிறைய செய்யணும், தமிழில், விக்கிபீடியாவிற்கோ இல்லை அதைப் போன்ற ஒன்றிற்கோ என்றில்லாமல் பொதுவாக தமிழில் தரமுள்ள கட்டுரைகளை எழுதினால் கூட போதும்; அது வலைத்தளமாகக் கூட இருக்கலாம். கூகுளாண்டவருக்கு அந்த வேறுபாடு கிடையாது. விக்கியின் பேஜ் ராங்கிற்கு நீங்கள் விக்கியில் எழுதினால் மக்களுக்கு சுலபமாக போய்ச்சேரும் உங்களுக்கான கிரடிட் இல்லாமல். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரடிடி பற்றி யோசிக்காமல் தமிழில் கண்டெண்ட் கொண்டுவருவதைப் பற்றி மட்டும் நினைக்க வேண்டும் என்று கருதுகிறேன். என்னிடம் ஐஎஸ்ஐ எதுவும் இல்லை தரத்திற்கு, நான் சொல்லவரும் தரமென்பது கருத்துப் பிழைகள் குறைந்த ஒன்றைப் பற்றி மட்டுமே. இது பொதுவிற்கு எனக்கு நானே வைத்துக் கொண்ட இன்னொரு தர மதிப்பீடு எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு ஆதரவாய் எழுதாமல் இருப்பதென்று.

இதுதான் என்றில்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், தமிழில் எழுதப்படும் அனைத்துமே முக்கியம் என்று தான் நான் நினைக்கிறேன்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

மின்னஞ்சல், மின்னரட்டை தமிழில் பொதுவாக அதிகம் தற்சமயம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி பற்றி எனக்குத் தெரியாது. மின் வணிகம், அரசாளுமை பற்றியும் எனக்கு அத்தனை அறிவு கிடையாது. கிழக்குப் பதிப்பகத்தில் இணையப்பக்கத்தில் தமிழில் பார்த்த நினைவுண்டு, இன்னும் வரலாம். இதழ்கள் தற்சமயம் பொதுவாக நிறைய மக்களைச் சென்றடைந்திருக்கிறது என்றாலும், தமிழ் பேசும் தமிழறிந்த இணையத்தமிழ் மக்களில் 30% மக்கள் தான் தமிழை இணையத்தில் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த நிலை இன்னும் வளரவேண்டும்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

இணையத் தன்னார்வலர்களின் பங்களிப்பு இணையத் தமிழுக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். தமிழ்மணத்தை தனிநபரின் தன்னார்வலத்தால் தொடங்கப்பட்டது என்று கொண்டால், நான் இன்று தமிழில் எழுதிக் கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக தமிழ்மணம் இருந்திருக்கிறது என்றே சொல்வேன். நான் மட்டுமல்ல இன்னும் பலர் இப்படிச் சொல்வார்களாயிருக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ் விக்கி, நூலகம், மதுரைத் திட்டம் போன்ற பல விஷயங்களை தனி நபர்களாலும் குழுக்களாலும் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

எனக்கு அந்த அளவிற்கெல்லாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிருந்ததில்லை, இது ஒரு கற்பனை சார்ந்ததாய் இருப்பதால் சாய்ஸில் விட்டுடுறேன்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிய என் பொதுவான கருத்து அத்தனை ஏற்புடையதாக இருக்காது. இன்னும் தமிழ் பதிவுலகம் நிறைய செய்யலாம் செய்ய வேண்டும். இதையே தான் யோசனையாகவும் கூறுவேன். நல்ல கட்டுரைகள் பல இன்னும் தமிழில் எழுதப்பட வேண்டும்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் பதிவுகளுக்கு நிறைய செய்திருக்கிறது, செய்து கொண்டும் வருகிறது. பதிவுகளை பலருக்கும் சுலபமாக சென்று சேர்க்கிறது என்பதே பெரிய விஷயம் தான். உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் தமிழ்மணத்தில் இப்பொழுது கொஞ்சம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்மணம் தொடர்ந்து செய்கிறது. இப்படியே தொடர வேண்டும்.

தமிழில் நல்ல கட்டுரைகள் எழுதப்படும் பொழுது அதை ஊக்குவித்து இணையப்பக்கத்தில் தகுந்த இடத்தில் இருத்தலாம். ஆனால் நல்ல கட்டுரைகள் என்பது சப்ஜெக்டிவ்வான விஷயம் என்பதால் இப்பொழுது இருந்து கொண்டிருக்கும் முறை கூட பரவாயில்லை தான். இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts