In சிறுகதை

தமிழீழக்காதல்

"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"

"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."

சில காலமாகவே எனக்கு இது வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,

"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.

சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க 'பெட்டை'ன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் வந்து என்னிடம் காசு கேட்பதும்.

"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒரு இடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இப்பொழுதெல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் என்றாலும் பெரும்பாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.

"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவள் பெயர் சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள் என்றாலும் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்ற நல்ல களையான முகம்.

சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.

என் அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் என்பதால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவி செய்து வந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு என் விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,

"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"

விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப தீவிரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு கணிணியின் 'C' மொழியைத் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குது என்று சொன்னால் அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.

சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். சொரூபன் புத்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை பாடம் சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன், சந்திரா லைலா போல் லூஸாக நிஜத்தில் இல்லாவிட்டாலும் கூட. இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.

படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"

"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இந்த விஷயம் ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,

"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."

என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறு விதமாய் இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள், அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.

அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை.

-------------------

சினேகிதி அவர்களுக்கு நன்றி, தமிழீழ உரையாடல்களை சரிபார்த்து தந்தமைக்கு. :-)

Related Articles

37 comments:

  1. //ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. //

    ஈழத்தமிழ் வழக்கில் பெண்களை'அவா..இவா..' என்பதும் பெட்டை என்பதும் மரியாதை குறைவானது (நம் வழக்கில் தோன்றுவது போல்) அல்ல என்றே அறிகிறேன். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.
    அதே நேரம் எங்கடை பெட்டையளை கட்டினாலும் அவஸ்தை கட்டாட்டாலும் அவஸ்தை யோசிச்சு செய்யுங்கோ..:)

    -theevu-
    ps
    பெட்டையள் என்பது இலங்கைத்தமிழில் மிகச சாதாரணமான வார்த்தைப் பிரயோகம்

    ReplyDelete
  3. நன்றாகவே தெரியும் ரோசா. இதே போல்(கதை அல்ல) சொரூபன் சொல்லிவிட (என் அக்காவை அல்ல) கர்னாடகாவில் பிரச்சனையானது. இது உண்மை. அதன் பிறகு கொஞ்சம் தன் வழக்கத்தை மாற்றிக்கொண்டான் சொரூபன்.

    ReplyDelete
  4. வருங்காலத்து தமிழீழத்தின் மருமகனே வருக வருக, உங்கள் வருகைக்காக எமது தேசம் விடிந்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
  5. கதையா...உண்மையா...என்னவென்றே தெரியிலை.
    வாழ்த்து சொல்லலாமா, கூடாதா என்பதும் தெரியவில்லையே!

    ReplyDelete
  6. அய்யோ திரும்பவும் ஒரு பிரச்சனை. அந்தக்காதல் உண்மை கிடையாது. எப்பொழுதையும் போல சந்திராவைத்தவிர மற்றது எல்லாம் உண்மையே. :-)

    ReplyDelete
  7. ராஜீவ் காந்தி பற்றியும் ஐ.பி.கே.எஃப் பற்றியும் என்ன சொன்னாள் உங்க சந்திரா?

    ReplyDelete
  8. ஈழத்தை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். கதை நன்று. குறிப்பு: முரளிதரனின் ரசிகர்களாகவும், கருணாவின் ஆதரவளர்களாகவும் பல ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். உங்களது ஒரு கதை மட்டுமெ, இப்படி பல கதைகள் பல கோணங்களில் உண்டு. கற்பனை நன்று.

    ReplyDelete
  9. முரளிதரன் என்பது கருணாவின் இயற்பெயராய் அமைந்துவிட்டது ஒரு மேலதிக தகவல்.

    இப்படி எழுதும்போது தயவுசெய்து புனைவா இல்லையா என்பதை அடியில் குறித்தால் நலம்.

    பெட்டை, பொடிச்சி, பெண்டுகள் என்பவை எப்படிப் பயன்படுத்துகிறோமென்பதைப் பொறுத்ததே. என்னைப் பொறுத்தவரை பலசந்தர்ப்பங்களில் செல்லமாகக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன. பல இளம்பெண்கள் இவற்றை விரும்புகிறார்களென்பதும் உண்மை. இவை யாரிடமிருந்து எச்சந்தர்ப்பத்தில் வருகிறதென்பதைப் பொறுத்தே இச்சொற்களுக்கான எதிர்வினை. 'பொடிச்சி அல்லது பெட்டை" என்று வலைப்பதிவர் ஒருவரும் இருக்கிறா. இளைஞர்களையும் சிறுவர்களையும் குறிக்கப் பெருமளவில் பயன்படுத்தப்படும் "பெடியன்" என்ற சொல்லுக்குரிய பெண்பால்தான் இவை. ஆனால் பெடியன் என்பது எப்போதுமே கீழ்த்தரமானதாகவோ அருவருப்பானதாகவோ பார்க்கப்பட்டதில்லை.

    உண்டியல் பற்றி மாயவரத்தான் ஒரு பதிவு போட்டிருந்தார்.

    ReplyDelete
  10. இலங்கை மருமகனாகிவிடுவீங்கன்னு நினைக்கிறேன். ம் வாழ்த்துக்கள் மோகன்தாஸ்

    ஆமா இப்ப அந்த சந்திரா எங்க இருக்காங்க..என்ன ஏதுன்னு விசாரிச்சு கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதுதானே..?

    ReplyDelete
  11. ஆஹா btamil, பிருந்தன் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. தருமி தான் கரெக்ட்-ஆ பார்த்திருக்கிறார்.

    முத்து ராஜீவ் பற்றியும், ஐபிகேஎப் பற்றியும் சொரூபன் நிறைய சொல்லியிருக்கிறான் ஆனால் அது எனக்கும் அவனுக்குமான் புரிதல் இதை நான் விளக்கயியலாது.

    உண்மைதான் நற்கீரன் இது ஒருபக்கத்து கதை மட்டுமே. ஆனால் நான் ஈழா உரையாடலாக சொன்ன அனைத்துமே எனக்கும் சொரூபனுக்கும் நிகழ்ந்ததே.

    ReplyDelete
  12. கொழுவி தற்சமயம் நன்றாகவே தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் பெண்களை பெட்டைன்னு சொல்றது தப்பான ஒரு சொல். அதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். மற்றபடி புனைவா, இல்லை உண்மையா என்று வேண்டுமென்றேத்தான் கூறிப்பிடவில்லை, அதை வாசிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன்.

    உண்டியல் பற்றி மாயவரத்தானின் வலைப்பூவில் தேடிப்பார்க்கிறேன். நன்றி.

    ரசிகவ் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.

    ReplyDelete
  13. //சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. //
    ரோசா சொன்ன மாதிரி ,இது சரியாக படவில்லை .'பெட்டை' -ன்னு சொல்லுறது 'பெண்' -னு சொல்லுறது தான் .இதுல என்ன மரியாதை குறைவு ? அது புரியாதது உங்க கெட்ட பழக்கம் ,அவனுடையது அல்ல. (புனையாயிருந்தாலும்..கருத்து சரியில்லை)

    ReplyDelete
  14. மோகன் தாஸ், தமிழகத்தில் பெண்ணை பெட்டை என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. பெட்டை கோழி உண்டு. பொட்டச்சி என்று பெண்ணையும், பொட்டை என்று ஆணை திட்டுவதும் உண்டு

    ReplyDelete
  15. உஷா நல்ல நேரத்தில உதவுனீங்க, சொல்லுங்கப்பா இவங்களுக்கு, தமிழ்நாட்டில பொண்ணுங்களை பெட்டை(பொட்டை) அப்படிங்கறது தப்பு அதைத்தான் சொல்லவந்தவன். ஜோ புரிஞ்சிக்கோங்கப்பா.

    ReplyDelete
  16. மோகன் தாஸ்,
    நீங்கள் தான் நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை .தமிழகத்தில் பெட்டை என்றால் ஏதோ தவறாகத் தான் நினைப்பார்கள் என்று எனக்கும் தெரியும்.

    ஆனால் நீங்கள் உங்கள் பார்வையில் குறிப்பிட்டது
    //சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. //

    அவனுடைய வழக்கப்படி அது கெட்ட பழக்கமல்ல..ஏக வசனத்தில் பேசுவதும் அல்ல.உங்கள் புரிதல் தான் தவறு .அதற்கு அவனை குறை சொல்லுவது தான் புரியவில்லை.

    ReplyDelete
  17. \\அவள் நேரடியாக பதிளலிக்காமல்\\

    *பதிலளிக்காமல்*

    aiyaiyoo nan ondum sari parkella ithila eathvathu pillaikal iruntha mohandoss than ellathukum porupu:-)

    ReplyDelete
  18. அவையைள்ல *ஒருவரை* கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க:-)

    ReplyDelete
  19. கலாநிதி நீங்க கொஞ்சம் கதையை நல்லா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    /* //சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள்.//

    தனியே இருந்த பெட்டைகளிடம் ஈPKF விட்ட சேட்டை நினைத்து சிரித்திருப்பா
    */

    அதே எண்ணத்தை தான் கொடுக்க நினைத்திருந்தேன்.

    /*
    ஜெயமோகன் ஒரு முறை தன் நாவலில் கூறியது "ஈழ தமிழர் இருக்கும் போது புத்தகம் விற்பதற்கு என்ன கவலை"

    நீங்களும் அதே நோக்கில்தான் செயற்படுகிறீர்கள்
    */

    ஆனா இது புரியலைங்கோ. மற்றபடி என் (கதைப்படி) ஒருதலைக்காதல் தமிழீழக்காதல் ஆகாதுன்னு சொல்றீங்க, ஆனால் கதைப்படி சந்திரா என் காதலை மறுக்காததையும் எழுதியிருந்தேன் அப்புறம் எப்படி ஒருதலைக்காதல் ஆகும்.

    ReplyDelete
  20. ஜோ உங்கள் கருத்துக்கு நன்றி.

    என்னுடைய தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது சினேகிதி. :-)

    //அவையைள்ல *ஒருவரை* கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க:-) //

    ஆகா சினேகிதி, நான் நிச்சயமாய் ஏகபத்தினிவிரதன் ஆக இருக்கத்தான் உத்தேசம்.

    ReplyDelete
  21. கதையாக நீங்கள் வடித்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது.
    முதற் கண் வாழ்த்துகளள்.

    அடுத்து.............
    [quote]"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

    முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.[/quote]

    ReplyDelete
  22. "அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

    முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

    உங்களால் மட்டுமல்ல பலரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயத்தை பார்த்து அச்சமடைந்தீருக்கிறீர்கள்.

    உண்டியல் என்பது
    ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு ஊருக்கோ நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வழி பணம் அனுப்புவது.

    அதாவது
    உங்கள் கதைப்படியே பார்த்தால்
    ஜேர்மனியில் இருக்கும் சொருபனின் உறவினர் ஒருவர் ஜேர்மனியில் இருக்கும்
    ஒரு இந்திய நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ 500 டாலர் அல்லது யூரோ கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதே பணத்துக்கான இந்திய மதிப்பீட்டுத் தொகையான 27122/- ரூபா பணத்தை ஜேர்மனியில் இருக்கும்
    இந்திய நண்பரின் உறவினர் ஒருவர் மூலமாகவோ அல்லது நண்பர் மூலமாகவோ கொடுப்பார்கள்.

    அதாவது (இன்றைய ரேட் 1 = 54.24 படி 500 = 27122 ரூபா -
    http://www.oanda.com/convert/cheatsheet ல் பார்க்கவும்)

    இப்படியான பணமாற்று முறைகளை அதிகமாக மேலத்தேய நாடுகளில் இருக்கும் ஆசிய வியாபார நிறுவனங்களே செய்கின்றன. பல நாடுகளில் ஒரே நிறுவனத்தின் கிளைகள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தில் கொடுக்கும் பணத்தை மற்றொரு நாட்டு நிறுவனத்தில் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்........
    புரியாதவனுக்கு சிம்ம சொப்பனம்தான்.

    இது ஒன்றும் பெரிய ஹவாலாப் பணம் கிடையாது.(திருட்டு பணம் கிடையாது.)

    இதை அனுப்ப கடைக்காரர்கள் கொஞ்சம் பணம் அறவிடுகிறார்கள்.

    வங்கியில் பணம் அனுப்பினால் ஒரு வாரம் பத்து நாள் என இழுபடும்.

    இப்படி அனுப்பும் போது ஒரே நாளில் இவர்களால் இந்தியாவில் உள்ள கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம்.

    சிலரால் வங்கிக் கணக்குகளை திறக்க முடியாமல் இருக்கும் போது யாராவது ஒரு நண்பர்கள் மூலமாக அவர்கள் வங்கிக்கு பணம் அனுப்புவதுண்டு.

    உங்கள் கதையில் இப்படியான விளக்கங்கள் இல்லாமை ஏதோ கிரிமினல் குற்றவாளிகளாக அப்பாவிகள் உங்கள் மனதுக்குள் தெரிந்திருக்கிறார்கள்.

    மேலதிமாக விபரம் தேவைப்படின் எழுதுங்கள்.
    பதில் தரக் காத்திருக்கிறேன்.
    மீண்டும் வாழ்த்துகள்...........

    அன்புடன்
    அஜீவன்
    Switzerland
    www.ajeevan.com

    கீழேயுள்ள கதை கூட உங்களை சிந்திக்க வைக்க உதவலாம்.
    http://ajeevan.blogspot.com/2004/12/blog-post.html

    ReplyDelete
  23. ஹவாலாப் பணம் patri appavidam kedu vaithirunthen doss iku solvathrku neengale solitingal ajeevan.ungada link ku vanthu kathai vasichen ala vaichitinga idayila.

    ReplyDelete
  24. நன்றி சினேகிதி

    இது கூட எமக்கு தெரிந்ததை சொல்வதற்காக எழுதியதே............
    இந்தக் கதை யாழ் களத்துக்குள் வந்த போது பல இலங்கை நண்பர்களால் கதையாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதை உணர்ந்தேன்.

    அங்கே சில கருத்துகளை முன் வைக்கவும் எழுதவும் மோகன்தாஸ் எனும் படைப்பாளியை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

    http://www.yarl.com/forum/viewtopic.php?t=7936&postdays=0&postorder=asc&start=0

    http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918&postdays=0&postorder=asc&start=0

    முதலில் உங்கள் படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    அடுத்து
    நீங்கள் அந்த சம்பவங்களை உங்கள் நிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.
    இலங்கையை அல்லது இலங்கை தமிழரைத் தெரியாத ஒரு இந்திய குடிமகனின் மனோ நிலையை அங்கே பார்க்கிறேன்.
    அங்கே பொய் இல்லை.
    மனதுக்கு பட்டது எழுத்தால் ஒரு படைப்பாகியுள்ளது.

    நாங்கள் ஐரோப்பாவுக்கு வரு முன் வெள்ளைக்காரர்கள் எல்லோருமே ஆங்கிலம் பேசுபவர்கள் என்றே கருதினோம்.
    வெள்ளைக்காரங்கண்ணா இங்கிலீஸ்காரங்க.
    ஆனால் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்த போது எல்லோரும் வெள்ளையர்கள்தான்.
    ஆனால் அவர்கள் எந்த நாடு என்று புரிந்து கொள்ளவே எமக்கு பல வருடங்கள் ஆகின.

    நான் வாழ்வது சுவிஸ் நாட்டில்............
    நான் வாழும் பகுதியின் மக்கள் ஜேர்மன் மொழி பேசுகிறார்கள்.
    அந்த ஜேர்மன் மொழி கூட அசல் ஜேர்மன் மொழி அல்ல.
    சுவிஸ் ஜேர்மன் மொழி.
    நான் மொழி புரியாத நிலையில் இருந்த போது ஒரு வேலைக்கு போனேன்.
    அங்கே இருந்த வெள்ளை நிறத்தவர்கள் என்னோடு பேசியது ஜேர்மன் மொழியில் என எண்ணினேன்.

    சில வாரங்களுக்கு பின்தான் தெரிந்தது
    அவர்கள் பேசியது ஜேர்மன் மட்டுமல்ல இத்தாலி பிரெஞ்சு ரொமானிஸ் போர்த்துகல் துருக்கி யூகோஸ்லாவிய ................என பல மொழிகள் என.........

    அவை மாத்திரமல்ல .
    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    எனவே உங்கள் மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறீர்கள்.
    அது முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர் கடமை.
    இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரை கிடையாது.
    உங்கள் வாழ்வோடு நெருங்கிய இதயத்தில் உறைந்து விட்ட ஒரு அன்பு நினைவு............
    ஆட்டோ கிராப்

    நானும் பெங்களூரில் வாழ்ந்தவன் எனும் நிலையில்
    ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி மோகன்தாஸ்.
    இது ஒரு வகையில் அடுத்த உறவுகளையும்
    உங்களையும் யாழ் களத்தையும் இணைக்க நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

    பெங்களூர் சிவாஜி நகரில் 1987-1990கள் வரை தமிழ் ஈழ ஆதரவு மையமொன்று இருந்தது.
    அதன் முகப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெரிய கட்அவுட் ஒன்று இருக்கும்.
    அங்கே ஈழ விடுதலை சம்பந்தமான அனைத்து புகைப்படங்களும் புத்தகங்களும் இருந்தன.
    அந்த மையத்தில் எப்போதும் இளைஞர்களை பார்ப்பேன்.
    இது போதும்...............
    சிவாஜி நகர் என்பது ஒரு குட்டித் தமிழ்நாடுதான்.

    நான் இக் கால கட்டத்தில் கன்னடப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
    அதனாலேயே அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன்.
    லாட்ஜில் பல தமிழர்கள் வேலை செய்தார்கள்.

    அக்காலத்தில் இலங்கை இராணுவத்துடன்
    இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் யாழ் கோட்டையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
    சுடச் சுடச் செய்திகள் பத்திரிகைகளில்...........
    பத்திரிகையைத் தூக்கிக் கொண்டு ஓடி வரும் தமிழர்கள்
    உணர்ச்சி பொங்க அவற்றை வாசித்து மகிழ்வார்கள்.

    அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
    புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?
    இவர்களது கேள்விக்குள் இருந்த தாகத்தை
    என்னால் அன்று உணர முடியவில்லை.

    ஒருநாள் அதிகாலை என் லாட்ஜ் முன்னால் வெடி கொழுத்தும் சத்தம்.
    எழுந்து கதைவைத் திறந்தால்
    தமிழர்கள் ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
    என்ன விசேசம் என்று கேட்டேன்.
    சார்.......விடுதலைப் புலிகள் கோட்டையை புடிச்சிட்டாங்க சார்.
    கொடி நாட்டியாச்சு.
    தமிழனுக்கு ஒரு நாடு கிடைச்சுட்டுது சார்.
    என்று மாதவன் என்ற தொழிலாளி
    என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.

    என் கண்கள் குளமாகின.
    ........................................

    எம்.ஜீ.ஆர் படங்களில்
    கோட்டையில் கொடி நாட்டினால் அந்த நாடே நமக்கு சொந்தம்
    என்ற மனக்கணக்குடன் இவர்கள் வாழ்ந்திருந்தது மாதவனது பேச்சு எனக்கு உணர்த்தியது.

    அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
    என் மனக் கண்ணில் வந்து போனது........
    புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?

    அதற்கான அரசியல் சித்தாந்தங்களையோ
    பிரச்சனைகளையோ அறியாதவர்கள் இம் மக்கள்............
    அது அவர்களது வாழ்கை பிரச்சனையல்ல.

    நட்புடன்
    அஜீவன்

    ReplyDelete
  25. அஜீவன் நான் உண்டியில் பற்றி எழுதியது கூட ஒரு சாதாரணமான உலகத்திற்கு, பக்கத்துவீட்டில் வாழும் மக்களுக்கு பயப்படும் ஒரு ஐடி(IT)யில் வேலை பார்க்கும் மனிதனின் வரிகள்தான். நான் இந்த வரிகளை மாற்றி எழுதவில்லை, சொரூப என்னிடம் உண்டியல் பற்றி சொல்லிவிட்டு, என் பேங்க் விவரங்கள் கேட்டவுடன் எழுந்த எண்ணத்தை எழுதியிருக்கிறேன்.

    இன்டர்நெட்டிலோ இல்லை வலையுலகிலோ உள்ள மக்களிடம் கேட்டு விளக்கம் பெற்று உதவுமளவிற்கு மனம் இல்லாதஒருவனைப்பற்றிய உண்மையே அவை. ஆனால் அவன் பணம் கேட்டபொழுதெல்லாம் நானோ இல்லை என் மாமாவோ தந்திருக்கிறோம். திரும்பித்தருவான் என்ற ஒரே நம்பிக்கையில் மட்டும்தான். சந்திராவைத்தவிர சொரூபனுடன் நடந்ததாக சொல்லும் அனைத்துமே சற்றேரக்குறைய உண்மையே(100% என்று போட்டால் உங்கள் ஆட்கள் உதைக்கவரலாம்.).

    உங்கள் கதை படித்தேன். வாழ்த்துசொல்ல வார்த்தைகளில்லை. பலசமயம் வார்த்தைகள் நம் நிலையை விளக்கயியலாதவை. மீதியை எதிர்பார்க்கிறேன்.

    உங்கள் உரல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. நன்றி மோகன்தாஸ்.
    அனைத்து இலங்கை தமிழரும் நீங்கள் நினைப்பது போன்றவர்கள் அல்ல.

    பலருக்கு
    பலர் சொல்லக் கேட்ட அல்லது பத்திரிகைகளில் படித்த
    ஒரு சில நிகழ்வுகளை வைத்து அதே மாதிரியாக எடைபோடுவதும் எழுதுவதுண்டு.

    ஒருவரைத் தெரிந்து கொள்ளு முன் அவனை திருடன் என்று அறிமுகம் செய்து விட்டால்
    அந்த மனிதன் மிக நல்லவனாக இருந்தால் கூட
    ஆரம்பத்திலிருந்தே திருடனாக அவனைப் பார்ப்பது மனித மனத்தின் இயல்பு.

    ஹவாலாப் பணம் என்பது பிளாக் மணி.

    இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருப்பது போல
    அரசுக்கு கணக்கு காட்டாமல் மேலை நாடுகளில் பணம் யாருக்கும் வராது.
    சம்பளம் கூட வங்கி வழிதான் கொடுப்பார்கள்.

    உண்டியல் என்பதும் அது போலத்தான்.

    இதைத் தெளிவு படுத்தவே எழுதினேன்.
    மற்றப் படி வேறு எதுவுமில்லை.

    இலங்கை தமிழர் கூட
    அரசியல் தலையீடுகள் காரணமாக எழுந்த
    அரசியல் முரண்பாடுகளை இந்தியர் என்று எழுதுவது
    வேதனைக்குரியது.

    இந்திய அரச முடிவுகள் தில்லியில் எடுக்கப்படுகிறது
    என்பது கூட புரியாமல்
    இந்திய தமிழர் மேல் விசனப்படுவதும் எழுதுவதும்
    என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

    இவை பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்ள
    வேண்டியிருக்கும்.............

    இது அதற்கான இடமல்ல.
    இருப்பினும் நல்லதொரு வாய்ப்பை
    உங்கள் கதை கொடுத்தது என நம்புகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  27. அட... எப்படி உங்கள் வலைப்பக்கம் இதுவரை வராமற் போனேன் வந்து வாசிக்க நிறைய இருக்கிறது. நண்பர் றோசாவசந்த் குறிப்பிட்டிருப்பதுபோல 'பெட்டை'என்றால் குறைத்துச் சொல்வது அல்ல. உங்கள் ஊரில்'பொண்ணு' என்பது போல அவ்வளவுதான். நல்ல சுவாரசியமான விடயங்கள் இருக்கும்போலிருக்கிறது எதற்கும் நேரம் ஒதுக்கிக்கொண்டு வருகிறேன் வாசிக்க.

    ReplyDelete
  28. யதார்த்தமான பதிவும் பின்னூட்டங்களும் இயல்பாக இருந்தது.வேறு என்ன சொல்ல?சிந்திக்கும் போது பெருமூச்சுதான் முட்டுகிறது.

    ReplyDelete
  29. ஆஹா அருமை!!!

    சில சில இடங்களில் சில கருத்துகளைச் சொல்ல நினைக்கிறேன்... வேண்டாம் அப்படியே போகட்டும்!

    வாழ்த்துக்கள்.. அத்தனையும் கற்பனை என்று முடித்து விடுவீர்களோ!!!

    ReplyDelete
  30. தமிழ்நதி, ராஜ நடராஜன் - நன்றிகள்.

    ReplyDelete
  31. மயூரேசன்,

    இந்தக் கதை ஏற்கனவே விமர்சனங்கள் ஏகப்பட்டது கண்டு கிழித்தெறியப்பட்டது தான்.

    உங்களுடையதையும் சொல்லுங்கள் நான் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன். :)

    ReplyDelete
  32. நான் சொல்ல நினைத்ததை பலரும் சொல்லி விட்டனர்! ;)

    ReplyDelete
  33. மயூரேசன் கூறியதுபோல் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரம் பல தமிழகத் தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது போல் ஒரு நிலைமை இருக்கின்றது. எத்தனையோ ஆங்கில விற்பன்னர்கள் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். எமக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம், நாம் பெரும்பாலும் தமிழில் தான் உரையாடுவோம் நீங்களோ தமிங்கிலத்தில் உரையாடுவீர்கள். அண்மையில் விஜய் தொலைக்காட்சி தமிழா நீ பேசுவது தமிழா என்ற நிகழ்ச்சியில்(தமிழ்பேச்சு எங்கள் மூச்சு) பலர் தமிங்கிலத்தை தூய தமிழுக்கு மொழி பெயர்க்க மிகவும் கஸ்டப்பட்டார்கள். அந்தக் கஸ்டம் எமக்கில்லை.

    ReplyDelete
  34. ஆங்கிலம் தெரிந்தால் தான் அறிவாளியா? இந்த மாயை பல தமிழகத் தமிழர்களிடம் இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு(இங்கிலாந்து தவிர) சென்றுபாருங்கள் புரியும் ஆங்கிலத்தின் மகிமை. சீனக்காரன் சீனமொழியில் படிக்கின்றான். பிரெஞ்ச்சுக்காரன் பிரெஞ்சில் படிக்கின்றான். ஆனால் தமிழன் மட்டும் தான் தாய் மொழியில் படிக்க விரும்புவதில்லை. நல்ல காலம் கலைஞர் இந்த கொடுமையை நீக்கிவிட்டார்.

    ReplyDelete
  35. மயூரேசன், வந்தியத்தேவன் - நன்றிகள்.

    வந்தியத்தேவன், நான் ஈழத்தமிழர்களைத் ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல வில்லை, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்கிற கதை இங்க உதவவே உதவாது என்று நன்றாய்த் தெரியும்.

    ஆனால் சொரூபன் நான் சொன்னபடி இருந்தவன் தான். சந்திராவைத் தவிர்த்து இதில் கற்பனையான விஷயங்கள் ரொம்பவும் கம்மி.

    FYI நான் தமிழ் மீடியத்தில் படித்தவன், என்னிடம் ஆங்கில மோகம் அதிகம் இருந்ததில்லை. :)

    ReplyDelete
  36. இந்த கதையில வாற பொடியன் அந்த பெட்டையிட்டை தனது காதலை அழுத்தமாக சொல்லத் தெரியாத பொட்டையனாக இருக்கிறானே...-))

    (இது புனைவு என்று நீங்களே சொல்லி விட்டதால் உங்களை சொன்னதாக கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

    ReplyDelete
  37. சின்னக்குட்டி,

    புனைவு தான் கதாப்பாத்திரம் அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். :)

    பிரச்சனையில்லை.

    ReplyDelete

Popular Posts