In வகைப்படுத்தப்படாதவை

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

ஈழப்பிரச்சனை பற்றி எழுதாமல் இருப்பது உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் என்ன எழுதி புண்ணியம் என்று எதையும் எழுதாமல் போய்க்கொண்டிருக்கிறேன். "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" பாடலில் நம்பிக்கை இருந்தாலும், எதையும் மாற்றுவதற்கு சக்தியில்லாதவனாய் ஆகிவிட்டதாய் ஒரு எண்ணம் ஒவ்வொரு முறையும் ஈழம் பற்றி நினைக்கும் பொழுது வந்துவிடுகிறது. தானாய் எதுவும் மாறப்போவதில்லை, அந்த மாற்றத்திற்கான ஒரு சிறிய பங்களிப்பைக் கூட செய்யமுடியவில்லை என்பது வருத்தமே. முத்துக்குமார் தீக்குளிப்பு பற்றிய இருவேறு மனநிலையில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேன். என்னால் எக்காரணம் கொண்டும் 'தற்கொலை' என்பதை கொள்கை அளவில் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. If you live long enough, you'll see that every victory turns into a defeat. Simone de Beauvoir சொன்னதைப் போல் நினைத்துக் கொண்டு காலம் வழங்கப்போகும் தோல்வியை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன். என் ஈழ ஆதரவைப் போல முத்துக்குமார் தீக்குளிப்பைப் பற்றி நான் சொல்லிக் கொள்ளும் காரணங்கள் விவாதத்திற்கு உட்படுத்த முடியாததாய் நான் நம்பும் விஷயத்தையே மறுக்கவேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சார்பு நிலை இல்லாமல் அணுக முடிந்திருக்கவில்லை, என்னுடைய ஈழ ஆதரவும் ஒரு பக்க சார்பு நிலை உடையதே. என்னுடைய ஆதரவிற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டேயிருப்பவனாகயிருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையிலே கூட பல கடுமையான சந்தர்ப்பங்களைத் தாண்டி வந்தவன் என்கிற முறையில் தற்கொலை என்பது தீர்வாகாது என்று மட்டும் என்னால் உணர்முடிகிறது. நாளொரு விதமாய் எம் தமிழர் செல்லடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பொழுதும் வாழ்க்கையை நகர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. எந்த விஷயமும் காலத்தின் கால்களை கட்டிப்போடும் வலிமை இல்லாதவையாகவே இருக்கிறன.

----------------------

அக்கா கல்யாணம் நல்லபடியாய் நடந்து முடிந்தது . இதைப்பற்றி விரிவாய் பின்பொறு முறை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

----------------------

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது//

என்று ராஜேந்திரன் பற்றியும் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைப்பற்றி எனக்கிருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டிருந்தேன். பதிலில்லை, சரி நம்மவர்கள் தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்கள் என்று ஒரு இங்கே வைக்கிறேன்.

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது.//

இப்படி எழுதியிருந்தீர்கள்.

நான் அறிந்த வரையில் சோழர்களின் கடைசி மன்னன் மூன்றாம் இராஜேந்திர சோழன் வரை தலைநகரமாக வைத்து அரசாண்டது - கங்கை கொண்ட சோழபுரத்தை தான்.

என்னிடம் இருக்கும் விவரங்களை மட்டும் வைத்து இந்த முடிவிற்கு வரக்கூடாது என்பதால் இந்தக் கேள்வி. நீங்கள் நேரடியாக எந்த மன்னன் என்று கூறாததால் நேரடி சோழ மன்னர்களுக்கு(குலோத்துங்க சோழன் அவனைத் தொடர்ந்தவர்களைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்) பிறகுவந்த மராட்டிய மன்னர்கள் வழியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றே கருதுகிறேன். சரிதானா?

இதை உங்கள் இணையத்தில் ஏற்றாமல் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோகன்தாஸ்



விவரம் அறிந்தவர்கள் பதில் சொன்னால் தேவலை.

-------------------------

எங்கள் கம்பெனி 2009ற்கான Salary Freeze அறிவித்திருக்கும் வேளையில் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது. சரி கம்பெனி சரியாய்ச் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, நல்லவிதமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பொழுதும் சிச்சுவேஷனை உபயோகித்துக் கொள்வதற்காய் இப்படி இறங்குவது வேடிக்கையாக இருந்தாலும். பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது என்பதால் பொறுத்துப் போகவேண்டியிருக்கிறது.

Related Articles

1 comments:

  1. ஈழத்தை பற்றி இன்றைக்கு யோசிக்கும் பலருக்கும் குற்றவுணர்வு தோன்றாமல் இல்லை. இது தனிமனித அளவிலானது என அப்போதைக்கு தோன்றினாலும், நம் சமூகம் சில வருடங்களாக ஈழத்தை பற்றி கொண்டிருந்த மௌனமே இதன் முக்கிய சூத்திரதாரியாக இருக்கலாம். குற்றவுணர்வை சிலர் பெருமூச்செறிப்போடு சொல்லி நகர்ந்து விடுகிறார்கள். சிலர் களத்தில் குதித்து கோஷமிடுகிறார்கள். இந்த உணர்வை தான் முத்துகுமரனின் தற்கொலை நிகழ்வு தூண்டிவிட்டது.

    ReplyDelete

Popular Posts