Wednesday, May 14 2025

In சினிமா சினிமா விமர்சனம்

பீமா

விமர்சனம் எழுதுவதற்காகவே சிலர் படம் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எப்பொழுதுமே வரும்; சில பேருடைய திரைப்பட விமர்சனம் செய்யும் பதிவுகள் படிக்கும் பொழுது. பீமா படத்தைப் பார்த்த பிறகு அக்காவிடம் அரைமணிநேரம் அட்வைஸ் செய்துகொண்டிருந்தேன்; தமிழ்ப்படத்திற்கு தமிழ்ப்பதிவுகள் தரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வது என்று. அதை திரும்பவும் இன்னொருமுறை சொல்லி போரடிக்க விரும்பவில்லை அதைவிட நாலுவரி கூடுதலாக பீமா பற்றி எழுதிவிடலாம்.

வருடக்கணக்கில் எடுத்து வந்திருக்கும் படம், விக்ரமுடைய உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் கொடுத்தக் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநரின் தைரியம் பாராட்டுதலுக்குரியது, இது போன்ற க்ளைமாக்ஸ் வைக்கப்போகிறார் என்றால் இடைவேளையில் ஒரு சின்ன க்ரிப் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லைதான். படம் க்ளாமாக்ஸ் காட்சியை நோக்கி அழகாக நகர்த்தப்படுகிறது. சண்டைக்காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன, மற்றவர்களைப் பற்றித் தெரியாது சண்டைக்காட்சிக்காக, அதுவும் ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால் நான் மாட்ரிக்ஸ் 1ம், த லாஸ்ட் சாமுராய் படமும் இப்படி ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக, அந்த சண்டைக்காட்சி வரப்போகிற தருணத்திற்காகக் காத்திருந்து பார்த்திருக்கிறேன்.

மாட்ரிக்ஸில் முதன் முதலில் கியானோ ரீவ்ஸ், தனக்கு சண்டை போடத்தெரியும் என்று சொல்ல அதைப் பார்க்கலாம் என்று சொல்லி Laurence Fishburneவும் கியானோ ரீவ்ஸும் இறங்கும் சண்டைக்காட்சி அருமையாக இருக்கும் அதைப் போலவே. லாஸ்ட் சாமுராயிலும் டாம் க்ரூயூஸ் கத்திச் சண்டையைக் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டிருக்கும் பொழுது சாமுராயைக் கொல்லவரும் ஆட்களுடன் சண்டை போடுவது பிரம்மாதமாக அமைந்திருக்கும். இந்த இரண்டு காட்சிகளுக்காக நிறைய முறை இந்தப் படங்களைப் பார்த்திருப்பேன். நீண்ட நாள் கழித்து அது போல் என்று ஒப்பீட்டு அளவில் சொல்லாவிட்டாலும் ரசித்துப் பார்த்த சண்டைக்காட்சி படம் 'பீமா'.

சும்மா வன்முறை அதிகமாயிருக்கு என்று சொல்பவர்கள், லிங்குசாமியின் விக்ரமிற்கான படத்தில் "A" சர்டிபிகேட் எதற்காகத் தந்திருப்பார்கள் என்று தெரியாமல் படம் பார்க்கச் சென்றார்கள் என்றால் ஆச்சர்யமே. கனல் கண்ணன் என்று நினைக்கிறேன் சண்டைப் பயிற்சி பாராட்டுக்கள், சண்டையின் பொழுது லைட்டிங் அருமை - ஒளிப்பதிவாளர் விளையாடியிருந்தார். பாடல்கள் அனைத்தும் முன்னமே வெளிவந்து ரசிக்கவைத்தவை தான். பாடல்காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன, பாடல்காட்சிகளின் ஹீரோ ஹீரோயின் உடைகள் அழகாக தேர்வுசெய்யப்பட்டு ஏற்கனவே இருக்கும் விக்ரம்-த்ரிஷா கெமிஸ்ட்ரியில், பிஸிக்ஸ், ஸூவாலஜி எல்லாம் சேர்த்து டோட்டல் சயின்ஸே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஹீரோயினின் வேலை என்னவோ அதை மட்டும் த்ரிஷா செய்திருக்கிறார் சும்மா மொட்டைமாடியில் இருந்து திருடன் துப்பாக்கியுடன் கீழே குதித்தால் காதல் வருமா என்றால் இந்தக் காலப்பெண்களுக்கு வந்தாலும் வருமாயிருக்கும் :). நான் காலேஜ் முடித்து ஐந்தாண்டு ஆகிவிட்டது, அப்பொழுது என்னுடம் படித்த பெண்களே கூட இப்படி சிகரெட் குடிக்கிறான், பாத்ரூமில் வைத்து இரண்டு பேரை அடிக்கிறான் என்று காதலித்தப் பெண்ணைத் தெரியும் கடைசியில் "இந்த ஆம்பளைங்களே மோசம்" என்ற ஒரு வரியில் முடிந்துவிட்டது அத்தனையும் மூன்றாண்டிற்குப் பிறகு. பெண்களை முட்டாள் என்று சொல்லவில்லை ;) ரௌடியோ என்ன எழவோ அவர்களுக்குப் பிடித்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் அஷ்டே!

பிரகாஷ்ராஜ் - ஒரு அருமையான நடிகன் என்பது எல்லாருக்கும் நன்றாகவேத் தெரியும். இயக்குநர் அவரிடம் இருந்து நல்ல பெர்ஃபார்மென்ஸைக் கொண்டுவந்திருக்கிறார். "பத்மா" பெயரைக் கேட்டதும் வழியிறது, இடையில் தன்னை மீறி விக்ரம் நகரும் பொழுது மிதமான அதிர்ச்சியை வெளிக்காட்டுவது என தன்னுடைய பங்கிற்கு பீமனின் ஒரு கையாக அவரும் இருக்கிறார்.

இயக்குநர் மனதில் க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். படம் பார்த்து முடித்த பின்னால் அதை நோக்கி காட்சிகளை இயக்குநர் நகர்த்தியிருப்பது தெரியவரும். மையக் கருவை நோக்கி நகரும் காட்சிகள் அவர் சொல்ல வந்த மையக் கருவை தீர்மானிக்கும் நிறுவும் அனுபவங்கள் என்று அருமையாக நகர்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த கட்டுரைக்கான அம்சமாகச் சொன்ன "ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்" வரிகள் நினைவில் வருகின்றன. இது திரைப்படத்திற்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு உடைவாக இந்த பீமா படம் க்ளைமாக்ஸ் காட்சியை முன்வைக்கிறது எனவே வேறு இடைவேளை உடைதல்கள் அநாவசியமே.

கதாநாயகன் காதல் வசப்படும் காட்சியும், தடுமாறுவதும், முக்கியமான தீர்மானத்தை முன்னெடுக்கும் காட்சிகளும் நெருடாமல் படத்தின் ஓட்டத்துடனேயே அமைகின்றன.

சுஜாதா எப்பொழுதும் திரைப்படத்திற்கான க்ளைமாக்ஸ் does matters என்று சொல்வார். ஒரு தேர்ந்த சிறுகதை எப்படி அதன் முடிவை நோக்கிச் செல்கிறதோ அப்படி ஒரு தேர்ந்த திரைக்கதை க்ளைமாக்ஸை நோக்கிச் செல்ல வேண்டும்.

முதலில் இந்தப் படம் எந்தப் படத்தைப் போலவும் இல்லை என்பதைச் சொல்லவேண்டும், சும்மா நாயகன் போல், தளபதி போல் இருக்கிறது என்பதெல்லாம் காமெடியாயிருக்கிறது. இனிமேல் காதல் கதை ஒன்றை எடுத்தீர்கள் என்றால் உள்ளூர் சினிமாவோ வெளிநாட்டு சினிமாவிலோ இருப்பதைப் போன்ற காட்சிகள் இல்லாமல் ஒரு கதையை எடுக்க முடியுமா? இயக்குநர் மற்ற படங்களின் பாதிப்பு இருக்கக்கூடாது என்று கவலைப்பட்டிருப்பதும் அக்கறை எடுத்திருப்பதும் தெரிகிறது.

த்ரிஷா வரும் காட்சிகளில் வரும் மெல்லிய நகைச்சுவை படத்தை தொந்தரவு செய்யவில்லை, முன்பே சிவாஜியின் பொழுது சொன்னதுதான் கதாநாயகிகள் ஆறாம் விரல் தான் பாடல்காட்சிகள் ஆறாம் விரலின் நகங்கள் தான். இவை தமிழ்சினிமாவின் நகச்சுத்திகள் போலத்தான் என்றாலும் இதிலிருந்து மீறிவர அதிக துணிவு தேவைப்படுகிறது. "பணம்" முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்ச்சினிமாவில் பாலாக்களே சிம்ரனின் மூடப்பட்ட தொப்புள்களை நம்பவேண்டியிருப்பது நிச்சயமாய் ஆரோக்கியமானது இல்லைதான் ஆனால் தொடர்ச்சியாக வந்த ஒரு விஷயம் சட்டென்று நிறுத்திவிட முடியாதது.

இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல் க்ளவேஜ் காண்பிப்பது தற்போதைய தமிழ்சினிமாவின் பேஷன் போலிருக்கிறது :) பீமாவும் த்ரிஷாவும் விதிவிலக்கல்ல. லாஜிக்களை மூட்டைகட்டிவிட்டல்ல லாஜிக்குகளை எடுத்துக் கொண்டு போய் கூட பீமாவைப் பார்க்கலாம். படம் நன்றாகத்தான் இருக்கிறது - முன்னர் வந்த ரௌடி கதைகள் போலில்லாமல்.

Related Articles

17 comments:

  1. //A" சர்டிபிகேட் எதற்காகத் தந்திருப்பார்கள் என்று தெரியாமல் படம் பார்க்கச் சென்றார்கள் என்றால் ஆச்சர்யமே.//


    ஒரு வேளை ஏ.. எனச் சந்தோசத்துடன் போயிருப்பார்களோ :)

    ReplyDelete
  2. இருக்கலாங்க! ஒருவேளை பில்லா படம் வந்தபிறகு வரும் படமென்பதால் வேறு நினைப்புக்களுடன் சென்றிருக்கலாம் தான்.

    ReplyDelete
  3. "இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல்" I havent seen such. I request you to post some of the similar pictures.

    ReplyDelete
  4. அட பட விமர்சனத்தை விடுங்க. உங்க வழிதான் ஊருக்கே தெரியுமே :-)

    //இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல் //

    இது சூப்பரா இருக்கே. ஒரு 'வீக் ஸ்டார்ட் ஜொள்ளு' பதிவு போடறது

    ReplyDelete
  5. மோஹன்,

    பீமா படம் சராசரிக்கும் கீழே என்பது எனது எண்ணம், ஆனால் அடுத்தவர்கள் எண்ணத்தை பிரதிப்பலிப்பது போல தான் அடுத்தவர்கள் எழுத வேண்டும் எனில் சொந்த கருத்து என்பதே இல்லாது போய்விடும்.

    உங்கள் ரசிப்பு தன்மைக்கு ஏற்றார்ப்போல தெரிந்தால் படத்தின் வெற்றி அது.(பாக்ஸ் ஆபிசில் தோல்வி என்றாலும்)

    எனக்கும் சண்டைக்காட்சிகளில் நேர்த்தியாக இருப்பது போல தெரிந்தது, ஆனால் சண்டைக்காட்சிகளை கொண்டு வர ஒரு "tempo" ஒரு ஆழ்ந்த காரணம் கொடுக்க வேண்டும்(உ.ம்:எம்ஜிஆர் படங்களில் கோவிலுக்கு வரும் பெண்ணை /தங்கையை கிண்டல் செய்த பிறகு அடிப்பார், அதனை பின் பற்றி எல்லா ஹீரோவும் அதையே செய்தார்கள் என்பது வேற)), படத்தில் காட்சிகள் வரும் போதே இப்போ சண்டை தான்னு தெரியும்.

    ஒரு மனிதன் சீண்டப்பட்ட பிறகே அடிக்கிறான் என்றால் அது கவரும் , எப்போதும் அப்படி இருப்பதாக வந்தால் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து விடும். அது தான் பீமாவில் ஆச்சு.

    படத்தில் எந்த காட்சியும் புதிதாகவே இல்லை என்பதும் பெரிய குறை, கற்பனை வரட்சி! வழக்கம் போல ஹீரோவை தவிர மற்றவர்கள் எல்லாம் சப்பையாக காட்டுகிறார்கள்.

    பிரகாஷ் ராஜ் அறிந்தும் அறியாமலும் பார்ட் -2 வாக இதில் வருகிறார்.

    ReplyDelete
  6. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை மோகனா? :-)

    ReplyDelete
  7. வவ்வால்,

    //படத்தில் எந்த காட்சியும் புதிதாகவே இல்லை என்பதும் பெரிய குறை, கற்பனை வரட்சி! //

    ஒட்டுமொத்தமாய் இப்படி ஒரு முடிவிற்கு வருவது சரியாய்ப் படவில்லை. இது நிச்சயமாய் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்று நினைக்கிறேன்.

    நானும் எல்லா காட்சிகளும் புதிதாய் இருக்கின்றன என்று சொல்லவில்லை, ஆனால் தேவையான அளவு இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. என் விமர்சனத்தைதான் துவைச்சு காயப்போட்டிருக்கீங்கன்னு எனக்குத் தோணுது, (மேபி, மத்த விமர்சனம் எழுதினவங்களுக்கும் தோணலாம் :-))

    முடிவை நோக்கி கதை பயணிக்கறதெல்லாம் சரிதான், அதுவரைக்கும் என்னாட்டம் ஒரு மசாலா ரசிகனை ரீட்டெயின் பண்ண எந்த முயற்சியுமே இல்லையே!

    ReplyDelete
  9. பிரகாஷ் நீங்கள் என் முந்தைய பதிவு படித்தீர்கள் என்றால் அதில் நான் புலிவருது படம் பற்றி எழுதியதைப் படிக்கலாம்.

    சினிமா பார்ப்பது என் வரையில் மொத்தமாக வித்தியாசமான ஒன்றாக நினைக்கிறேன் ;)

    ReplyDelete
  10. This movie and the climax somthing different....

    100% I agree with your review, well done !!!!!!!

    ReplyDelete
  11. //விமர்சனம் எழுதுவதற்காகவே சிலர் படம் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எப்பொழுதுமே வரும்;//

    இந்த பதிவுக்கு கச்சிதமாக பொருந்தும் வார்த்தைகள் இது :-)

    ReplyDelete
  12. அனானிமஸா பின்னூட்டம் போட்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. சுரேஷ், அத்தனை தூரம் உங்களைத் தாக்கணும் என்று நினைத்து செய்ததில்லை.

    ஆனால் படம் பார்த்து முடித்ததும் படித்த விமர்சனங்கள் எல்லாம் பொதுவாகச் சொல்லியிருந்ததை மறுத்துச் சொல்லியிருந்தேன் அஷ்டே!!!

    ReplyDelete
  14. //லாஜிக்களை மூட்டைகட்டிவிட்டல்ல லாஜிக்குகளை எடுத்துக் கொண்டு போய் கூட பீமாவைப் பார்க்கலாம்//

    எனக்கு ஒரு லாஜிக் புரியவில்லை மோஹன்,பிரகாஷ்ராஜ் மட்டும் திருமணம் செய்து கொண்டு ரவுடியிசம் செய்ய வேண்டுமாம்.ஆனால் விக்ரம் கல்யாணம் செய்து கொண்டு தனியே போக நினைப்பாராம்.இது என்ன லாஜிக்.

    லிங்குசாமியும் பேரரசு வரிசையில் சேர்ந்துவிட்டாரே என்ற ஆதங்கம் தான்.ரன் படத்தில் சிறுவனான மாதவனுக்கு,ரகுவரனைப் பிடிக்காது(காரணமேயில்லாமல்..)அது பெரியவனானவுடனும் தொடரும்...என்று அருமையான ஒரு எபிசோட் காட்டியிருப்பார்.

    இந்தப் படத்தில் அந்த ஊறுகாயை சாதமாகப் பரிமாறி விட்டார்.

    மற்றொரு விசயம் ரகுவரனை வீணடித்தியிருப்பது.ஒரு நல்ல கலைஞனுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் கதாபாத்திரம்...கொடுமை


    மற்றபடி சண்டைக்காட்சிகள் மட்டும் அருமை.அதற்காக எப்படி முழுப்படத்தையும் பார்ப்பது மோஹன்.

    ReplyDelete
  15. செல்வம்,

    படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்வது போல் ஒரு வசனம் வரும் கவனித்தீர்களா தெரியாது!

    பிரகாஷ்ராஜ் பத்மா என்ற அவர் மனைவியிடம் நீ மட்டும் நான் சொன்னப்பவே படிதாண்டி வந்திருந்தா இந்நேரம் நான் எப்படியிருந்திருப்பேன் தெரியாது என்பார். சொல்லப்போனால் நீங்கள் சொன்ன மாதவனுடைய ரன் படத்துக் குட்டிக்கதையை ஒத்தது தான் மேற்சொன்னதும்.

    ரகுவரனை வீணடித்திருக்கிறார்கள் தான் ஆனால் அவர் இப்பொழுது மெயின் வில்லன் இல்லை என்பதால் இது போன்ற படங்களில் அத்தனை பெரிய இடம் தரமுடியாதுதான்.

    மற்றபடிக்கு மசாலா தடவியிருக்கிறார் எல்லாம் ஓக்கே தான் ஆனால் படம் நிச்சயமாய் ஒருமுறை பார்க்கக்கூடிய அளவில் தான் இருக்கிறது.

    ReplyDelete
  16. //ஆனால் அவர் இப்பொழுது மெயின் வில்லன் இல்லை என்பதால் இது போன்ற படங்களில் அத்தனை பெரிய இடம் தரமுடியாதுதான்//

    இப்படத்தில் இவர் தானே மெயின் வில்லன்.சொத்தை வில்லனுடன் என்னதான் புஜபலபராக்கிரமத்தோடு சண்டை போட்டாலும் எப்படி பார்ப்பது?மோகன்..

    ReplyDelete
  17. சரியான விமர்சனம். இது ஒரு சாதாரண படமல்ல. விக்ரமின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவுக்கே புதிய விஷயம். மற்றபடி இது அந்த படம் போல இருக்கிறது, இந்த படம் போல இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சும்மா ஜல்லியடிப்பு.

    ReplyDelete

Popular Posts