Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

In சினிமா சினிமா விமர்சனம்

காந்தாரா - மாயமந்திரம்


இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி எழுதவில்லை. பொன்னியின் செல்வன் எங்கே போகப்போகிறது எழுதிவிடுவோம்.காந்தாரா பற்றி அந்தப் படம் தியேட்டரில் வெளியாகியிருந்த பொழுதே அறிந்திருந்தேன். நானும் என் மனைவியும் பின்னர் மோசமான தியேட்டர் பிரின்ட் வந்த பொழுது பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். தமிழ்நாட்டில் இல்லாமல் போன சோகங்களில் ஒன்று இது. நான் அதற்குப்பின் ரிஷப் ஷெட்டி பற்றி வந்த யூடியூப் வீடியோக்கள், பின்னர் வராஹ ரூபம் பாட்டு பிரச்சனை, என்று ஏகப்பட்ட விஷயங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். எனக்கு அப்படி ஒரு விநோத வழக்கம், ஏறக்குறைய அந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த பொழுது எனக்கு காந்தாரா பற்றித் தெரிந்திருந்த ஒரே விஷயம், அது கன்னடத்தில் பெறுவெற்றி பெற்றப் படம். அவ்வளவுதான். 


பசுமரத்தாணி என்று நான் பள்ளியில் படித்த பொழுது சொல்வார்கள், அது போல் மனதில் பதிந்து போய்விட்டது இந்தப் படம். Spell boundஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி, கன்னட ராஜாவிடம் பஞ்சூர்லியை அவர் எடுத்துச் செல்வதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, சாமியாடிக் கொண்டே 'ஓவ்' என்று பெருங்குரலெடுத்து கூவி காடே அதிர்ந்த பொழுது, திரைப்படத்துடன் ஒன்றிய மனது, க்ளைமேக்ஸில் சிவா அவனது தந்தையுடன் சேர்ந்து மறைந்த பொழுதுதான் வெளியில் வந்தது. இப்படி ஒரு மனவெளுச்சியை நான் எப்பொழுதும் அடைவதேயில்லை. மொபைல் ஃபோன்களுடனான வாழ்க்கை இப்படியான பொழுதுகளை உருவாக்குவதில்லை. 


ஆரம்பம் மற்றும் முடிவு மட்டுமல்ல, ஏனைய மற்ற பொழுதுகளில் திரைக்கலை அதன் மையப்பகுதியில் இருந்து விலகிவிடவில்லை. வனமும் அதன் வளப்பும் பச்சையும் படம் முழுவதும் விரவியிருந்தது, அங்கிருந்து நீண்டு அப்படியே மனதில் அப்பிக்கொண்டது. பூதகோல அலங்காரத்துடன் கொண்ட ரிஷப் செட்டியின் உருவம் மனதில் இருந்து விலக கனகாலம் பிடித்தது. எத்தனை காலம் அவர் அந்த ஆட்டத்தை கற்றுக் கொண்டார் என்று தெரியாது, அந்த முகம் அளித்த சிறுசிறு நயனம் கூட மனதில் அப்படியே நின்றது, கடைசியில் கிஷோரை அழைத்து அணைத்துக் கொள்ளும் பகுதியெல்லாம் வசனமே தேவையில்லை திரைப்படங்களுக்கு என்பது எத்தனை உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தியது. அந்த க்ளைமேக்ஸ் ஒரு உச்சம். எப்பொழுதும் சினிமாக்களில் நடைபெறாக, அடைய முடியாத, ஏக்கம் கொள்ளத்தக்கதான ஒரு உச்சம். மனம் நெகிழ்ந்துபோயிருந்தது. 

எனக்கு கடவுள் மீதோ, மயானக் கொள்ளை மீதோ, சாமியாடுவதன் மீதோ நம்பிக்கை கிடையாது. ஆனால் கலை மீது உண்டு, அது ஒரு கலைப்படைப்பு என்றும் அதன் உச்சத்தை ஒரு கலைஞன் அடைய முடியும் என்றும் நம்புகிறேன், ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் நடிப்பு மூலம் அந்த உச்சத்தை நாமும் அதே நிலையில் பார்க்கும், உணரும், அனுபவிக்கும் ஒரு அதிசயம் காந்தாரா மூலம் நடந்தேறி இருக்கிறது. கலகலவென ஆபரணங்கள் ஒலிக்க படம் முழுவதும் வனத்திற்குள் அலையும் பன்றி ஒரு நல்ல உருவகம், செட்டுக்குள் இருந்து சினிமா கேமராவை வெளியில் எடுத்துவந்தது பாரதிராஜா என்று சொல்வார்கள். இப்படி ஒரு ப்ரேமிங், அகலமாகன வனத்தை அப்படியே வெளியில் இருந்து காட்டியிருக்கிறார்கள். கேமரா ஒரு அறைக்குள் இருக்கும் மொத்தக் காட்சிகளை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். 

ஆட்டக்குறை பற்றியும் அதில்லாமல் போகவதைப்பற்றியும் ஜெமோ லங்காதகனத்தில் சொல்லியிருந்த வரிகள் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. 


ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...


அதுதான் இல்லையா? சிவாவும் அவனது தகப்பனும் அடைவது. பூரணம், முக்தி, முற்றுப்புள்ளி. அவர்கள் திரும்பிவருவது இல்லை. இதே போல் வெறிபிடித்துதான் இருந்தது லங்காதகனம் படித்த பொழுது, வெறும் எழுத்து என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இயற்றலை விடவும் நாடகத்துக்கான வலிமை என்பதில் இருக்கும் வித்தியாசம் தான் லங்காதகனத்திற்கும் காந்தாராவுக்குமான வேறுபாடு. அடித்துப் போட்டது போலாகிவிட்டது. அது ஒரு ட்ரிக்-ஆக இருக்கலாம், என்னால் கண்களில் கண்ணீர் வராமல் அறம் நாவலின் எந்தக் கதையையும் படிக்க முடியாது. அது ட்ரிக் என்கிறார்கள், நானும் உணர்கிறேன் படிக்கும் பொழுது என் மூளைக்கு புரிவதில்லை. அப்படியானது தான் இந்தப்படமும், மயக்கம் ஏற்படுத்தும் அந்த இசை, அசைவுகள், ஒளி, நிறம் ஒரு ட்ரிக் ஆக இருக்கலாம், ஆனால் எத்தனை படத்தில் இப்படி ஒரு முழுமை கிடைக்கிறது. 


காந்தாரா ஒரு மாயமந்திரம். ஒரு சொடக்கு போட்டதும் மயங்கிப் போவதைப் போல் அந்த முதல் 'ஓவ்'ல் அந்தப் படம் என்னை உள்ளிழுத்துக்கொண்டு விட்டது. 


அவ்வளவுதான். 


பின்னர் தாழ்வுமனப்பான்மையில் திமிரும் தமிழ்நாட்டு மந்தைக்கூட்டம் ஒன்று இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றதென்றே தெரியவில்லை என்று டிவிட்டரில் பன்றிக்கூட்டமாய் சேற்றில் புரண்டுகொண்டிருந்தது. அவர்களுக்காக,


ஒரு கலைப்படைப்பு என்பது எல்லாருக்குமானது அல்ல. நீங்கள் ஒரு அளவு வளர்ந்தால் தான் ஒரு கலைப்படைப்பின் முழுமையை/உச்சத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது அல்ல. கலை கலைக்கானதே, மக்களுக்கானது அல்ல.

ஒரு பொழுதும் மொசார்ட்டின், பீத்தோவானின், பாக்-இன் இசையை என்னால் முழுவதுமாக உணர்ந்துகொள்ளவே முடியாது. அதன் பிரச்சனை என்னைச் சார்ந்ததே தவிர, மொசார்ட் - பீத்தோவான் - பாக், சார்ந்தது அல்ல. உணர்ந்துகொள்வதற்கான முயற்சி, படிப்பு, பயிற்சி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

ஒரு புயலிலே ஒரு தோனியை, ஜே. ஜே. சில குறிப்பை, சொல் என்றொரு சொல்லை நீங்கள் உங்களின் முதல் புத்தகமாக படிக்கவே முடியாது. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். உங்களின் தகுதிக்கு புத்தகம் எழுதுவது எழுத்தாளனின் வேலை இல்லை, அவன் புத்தகத்தை படிக்கும் தகுதியை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்

தனித்தீவு - Science Fiction




ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.

“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”

உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,

“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.

“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு,

“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”

“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.

“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.

“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,

ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,

“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”

பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன்.


ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு பட்டு மாங்கா விழல. அதுனால என்ன. தன்னோட திறமைய நல்லா வெளிக்காட்டியிருக்காரு. கதையெல்லாம் தேவையேயில்லைன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்காங்க. சின்ன கல்லு பெத்த லாபம் ஃபார்முலான்னு நினைக்கிறேன். காசு வந்துடுமாயிருக்கும்.


ரெமோ ஜெனியுனா நல்ல காமடியிருக்குற படம் வெடிச்சிரிப்பு நாலைந்து முறை வந்ததுன்னா படம் முழுக்க எல்லாவிதமான காமடியும் வைச்சிருக்காங்க. யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ்னு காமடி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு. இந்தப் படம் பார்க்கும் பொழுது ரெக்க படத்து லட்சுமி மேனன் கேரக்டர் பெரிய லூசா இல்லை ரெமோ படத்து கீர்த்தி சுரேஷ் பெரிய லூசான்னு ஒரு யோசனை. ஆனா நிச்சயமா கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தான் பெரிய லூசு. அமெரிக்கால சம்மர்ல இந்த மாதிரி ரொமான்டிக் காமடியெல்லாம் தொடர்ச்சியா வரும். ஸ்டாக்கிங் பத்தியெல்லாம் டிவிட்டரில் பெரிய ரெயில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இப்படியே டிரெயின் விட்டிக்கிட்டிருந்தா என்ன படம் தான் எடுக்கிறது. புள்ளைகள நீங்க ஒழுங்கா வளர்த்தா சினிமா பார்த்து கெட்டுப் போக மாட்டாங்க. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன் ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கலாம், போதும் காமடி ஓரியன்டட் மூவிஸ்.


தேவி படத்தோட ட்ரைலர பார்த்தாலே கதை இன்னதுன்னு தெரியும். அதே கதை தான். ஆனால் அந்தக் கதையில் ஸ்கோப் நிறைய இருந்தது. காமடிக்கு ஆக்டிங்கிற்கு என்று. எதையும் உபயோகிக்கவேயில்லை இவர்கள். பிரபு தேவா கேட்கவேவேண்டாம் இயல்பாய் இருக்கிறார், தமன்னா நடித்திருக்கிறார் ஆனாலும் ஒரு டச் மிஸ்ஸிங், அது கேரக்டர் குறைபாடு. தமன்னாவுடையது அல்ல. மூணு லாங்குவேஜில் படமெடுக்குறேன்னு கொலை செய்திருக்கிறார்கள். இந்த இழவை இந்தியிலேயே எடுத்திருக்கலாம். இதை தமிழ்ப்படம்னு சொல்லித்தொலையாதீங்கடா! மணிரத்னம் எடுக்கும் இந்தி/தமிழ் படத்தை விட மோசமாயிருக்கு. ஒரே நல்ல விஷயம் பிரபு தேவா தான். பெண்ணியவாதிகளுக்குப் பிடித்தப் படமாயிருக்கலாம் தேவி, ரெக்க ரெமோவைக் கன்ஸிடர் செய்தால் தேவியில் தமன்னாவின் கேரக்டர் ரொம்பவே தேவலை. கொடுமைக்கென்று ரெக்க ரெமோவை விட தேவி படம் தான். அதன் காரணம் தேவியில்லை, ரெக்கையும் ரெமோவும் தான்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவனின் சொந்த ஜானர். எழுத்து மட்டும் தான் செல்வராகவனாம், கீதாஞ்சலி இயக்குநர் என்றாலும் செல்வராகனின் இயக்க பாதிப்பு அதிகம் உண்டு, அல்லது முழுவதுமே அப்படித்தான். 3 படம் போல் இதுவும், எனக்குப் பிடித்திருந்தது. அதன்(3 படத்தின்) கிளைக்கதை அத்தனை வலியதில்லை. இந்தப் படம் அவர் பெயரில் வராமல் இருந்தது கூட நல்லதற்குத்தான்.  தமிழில் பெண் இயக்குநர்கள் பற்றி எனக்கிருந்த மூடநம்பிக்கையை நகர்த்தியது 3 படம், இது கீதாஞ்சலி இயக்கியிருந்தால் நான் இன்னும் நகர்ந்துவிட்டேன் என்றே அர்த்தம்.


கொஞ்சம் காமடி கலந்து செய்யாமல் விட்டதற்கே நன்றி சொல்லவேண்டும், மூன்று மணிநேர படமில்லை என்று நினைக்கிறேன், இப்பொழுதைய முதல் ஹாஃப் நீளம் பிந்தைய ஹாஃப் சின்னது டெக்னிக் என்று நினைக்கிறேன், படம் சட்டென்று முடிந்தது போலிருந்தது.

ஹீரோயின் பேசும் வழமை எங்கள் குடும்பத்தில் உள்ளது போல் இருந்ததால் இன்னும் என்னை நெருக்கியிருக்கக்கூடும். வலிந்து திணித்தது போலிருந்தது அந்த ஹோட்டல் சீன், இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கதையின் திரியே அங்கே தானே பிரிகிறது! ஹீரோ ஹீரோயின் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள். பெண்களை வசப்படுத்தும் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காய் ஆரம்பித்த தொடக்கம், அவர்கள் போக்கிரி பாடல் பாடும் பொழுது ஒட்டவில்லை. கீதாஞ்சலி இப்பொழுதுகளில் கருத்த - தென்தமிழக நிற - ஆண்கள் பிகர் மடிக்கிறார்கள். நீங்கள் கதையை ஹீரோவின் நிறத்திலிருந்து நகர்த்தியிருக்கலாம். பரவாயில்லை.

ஹீரோயின் முன்னமே செல்வராகவன் படத்தில் பார்த்தது போலிருந்தாலும், அடித்துச் சொல்வேன், 7Gயில் நடிக்கவைத்திருக்கலாம். சோனியாவை விட இந்த வகை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சீன் யோசிக்க முடியாத காரணத்தால் சட்டென்று கதாநாயகி கோபப்பட ஒரு காட்சி போதும் என்று நினைத்திருக்கலாம். பாத்ரூம் கிளின்னஸ் காட்சியின் இயல்பிற்காய்ப் பிடித்திருந்தாலும், ஒட்டவில்லை. இன்னும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் கதாநாயகி கதாநாயகனை வெறுத்த பின் வரும் காட்சிகள் இயல்பாய் இருப்பதாய்ப் பட்டது.

அட இப்படியெல்லாமா விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது வந்த ரேப் சீன் இதற்காகத்தான் விட்டார்கள் என்று உணர வைத்திருந்தது. ரொம்ப காலம் கழித்து தமிழ்ச்சினிமாவில் ஒரு ரேப் சீன், கதையை நகர்த்தியிருக்கிறது. துணிந்து இறங்கிய செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் பாராட்டுக்கள். ரேப் சீனுக்காக இல்லை, துணிச்சலுக்காக மட்டும், ரேப்கள் இல்லாமல் போகும் ஒரு காலத்தில் ரேப் சீன் வைக்காமல் இருக்கலாம். ”பெண்டாட்டியை ரேப்” என்கிற புள்ளியும் அதைத்தொடர்ந்த கோபமும் பயங்கர இயல்பு. ரேப் பண்ணினதும் அடுத்த நாள் குளித்து தலை துவட்டி வெட்கத்துடன் காப்பி கொடுக்கும் வழமை தான் தமிழ் சினிமா.

விவாகரத்துக்குச் செல்வதல்ல. Bravado.

மெச்சூரிட்டி காட்ட கண்ணாடி அணிவதை காண்பிப்பதை நிறுத்துங்கள், கதாநாயகி அந்தக் கண்ணாடியில் அழகாய் தெரிவது வேறு விஷயம். பொதுவாய் இவர்கள் மறந்துவிடும், கதாநாயகியின் அம்மா உருவ வேற்றுமை, பாராட்ட வேண்டியது. டிவிட்டரில் படித்தேன் கதாநாயகியின் அம்மா கதாநாயகியை விட அழகு என்பதை நான் மறுக்கிறேன், அவங்க அழகு தான் ஆனா கதாநாயகியை விட எல்லாம் இல்லை. இங்க வழிகிற ஸ்மைலி.

இதே ஜானரில் நிற்கச்சொல்லவில்லை, ஆனால் செல்வராகவன் அவ்வப்பொழுது இந்த ஜானரில் கதை செய்யணும். வேணும்னா கீதாஞ்சலிக்கோ இல்லை ஐஸ்வர்யாவுக்கோ தரலாம்.

அடல்ஸ் ஒன்லி படம் என்பதால் சொல்லவேண்டிய தேவையில்லை, குழந்தை குட்டியோட எல்லாம் பாக்கமுடியாது. :)

கல்யாணமாய்டுச்சு சொல்லக்கூடாது, ஆனாலும், ஹீரோயின் கொள்ளை அழகு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தபாங் 2 - கொண்டாட்டம்

ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.

ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.


ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.

சோனாக்‌ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்‌ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்‌ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)

கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.

மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.

மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Jack Reacher - தொடக்கம்


தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.

இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.

17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.



கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)

என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கௌதம் சினிமா சினிமா விமர்சனம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்

ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.

ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.

கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.

இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.

படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.

இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.

தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது

1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

இராணுவத்தினருக்கான பாலியல் சேவை

நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.

எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.

படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.

சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.

ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.

பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.

கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.

படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.

எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)


ஹீரோயின் பற்றி
படம் பற்றி

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In Autism சினிமா விமர்சனம் மதியிறக்கம்

Rain Man


 


ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம் தெரியாவிட்டாலும், ஜீன்களின் கோளாறுகள்தான் இதன் காரணம் என்று உணரப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த குறைபாடு உள்ளவர்களிடம், சாதாரணமாக உள்ளவர்களின் ஜீன்களில் ஏறக்குறைய ஏழு வித்தியாசமான நிலைப்பாடுகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.

பலசமயங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களை உருவத்தோற்றத்தின் படி வேறுபடுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். தற்சமயத்தில் இதன் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு ஏற்றபடியான சிகிச்சைமுறைகள் கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குழந்தைகளின் வயது மூன்றிற்கு குறைவாக இருக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த நோய் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா எனக் கண்டறியலாம்.

இந்தக் குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரணமாக சமூகத்தில் பங்குபெறமுடியும். கல்வி நிறுவனங்களில் படிக்க, வேலை பார்க்கும் அலுவலகங்களில். ஆனால் இந்த நோய்க்கான முழுமையான தீர்வு என்பது இதுவரை சாத்தியப்படாமலே இருக்கிறது.

எனக்கும் இதைப்பற்றி நேரடியாகவே தெரியும், எப்படியென்றால் நான் பிறந்து வளர்ந்த இடத்தில், அறிவாலயம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஒரு பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியின் பேருந்து எங்கள் வீட்டை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு நான் டாட்டா காட்டுவேன். அதைப்போலவே அவர்களும். கோயிலுக்கு செல்லும் பொழுதும் அவர்கள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதும் டாட்டா காண்பிப்பதுண்டு. அதில் அவர்கள் அடையும் சந்தோஷம் சொல்லிப்புரியாது. இதே போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணுக்கும் இந்த நோய் இருந்தது. அந்தப்பெண்ணை பார்க்க பாவமாக இருக்கும் எனக்கு. ஆனால் அந்தக் குடும்பத்தின் மனநிலை சற்று வித்தியாசமாக இருக்கும்.

அதாவது உலக அளவிலேயே இந்த மாதிரியான ஆட்டிஸம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம், குணப்படுத்த வேண்டாம் என்பதற்கான இரண்டு வகையான மனநிலைகள் இது சம்மந்தப்பட்ட குடும்பங்களிடம் நிலவுகின்றன. இதில் குணப்படுத்த வேண்டாம் என்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சிகிச்கையளிக்கவில்லை என கட்டுரைகள் சொல்கின்றன. இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன அந்த வீட்டினரிடம் இந்த மனநிலையை பார்த்துள்ளேன். அவர்களைப் பொறுத்தவரை இந்த நோயுடன் இருந்தாலும் அவர்களுடைய பிள்ளையே அந்தப் பெண் என்றும் அதற்கான சிகிச்சை தேவையில்லையென்றும் அவர்கள் என் பெற்றோரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதில் சாவன்ட்(The autistic savant phenomenon is sometimes seen in autistic people. The term is used to describe a person who is autistic and has extreme talent in a certain area of study) என்றொரு வகையுண்டு அவர்களுக்கு, இந்த நோய் இருந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதைகளாக, சிலசமயம் நாம் நினைக்க முடியாத அளவில் மேதைகளாக இருப்பார்கள். சாவன்ட் என்பதற்கு அறிவாளிகள் அல்லது தெரிந்துகொள்பவர்கள் என்ற பொருள்வரும்(The word comes from the French word savant, meaning scientist (literally, knowing)). டானியல் டெம்மெட் என்ற ஒரு இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அற்புதமான திறமையுண்டு அது, அவன் மனனம் செய்யும் திறமை. அவன் பை என்றழைக்கப்படும் கணித மாறிலியின் 25514ம் இலக்கம் வரை கணக்கிட்டு அதற்கான ஐரோப்பிய சாதனை விருதைப் பெற்றவன். பையின் மதிப்பு 3.14 இது 14க்கு பிறகு முடிவில்லாதது, இந்த தொடர்ச்சியையே அந்த சிறுவன் கணக்கிட்டு சொல்லியது. இது போன்ற திறமையிருக்கும் பலருக்கு அவர்கள் அதை எவ்வாறு கணக்கிட்டார்கள் எனச் சொல்லத் தெரியாது ஆனால் இந்த சிறுவனுக்கு அவன் கணக்கிட்ட உத்தியையும் சொல்லத்தெரிந்தது ஒரு அற்புதமான விஷயம்.

ஆனால் மற்ற சில பாதிக்கப்பட்டவர்களைப்போல இந்த சிறுவனால், மற்றவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது துரதிஷ்டமே.

இந்த வகையான பாதிப்புள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது, இது ரெய்ன் மேன்(Rain Man) என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திரைப்படத்தைப்பற்றியும் கொஞ்சம்.


தமிழ் மசாலாப்படத்துக்கான அத்துனை விஷயமும் உள்ள ஒரு படம் தான் ரெய்ன்மேன், ரொனால்ட் பாஸ்(Ronald Bass), மற்றும் பாரி மோரோவ்(Barry Morrow) எழுதி, பாரி லெவின்ஸன்(Barry Levinson) இயக்க கிம் பீக்(Kim Peek) என்ற ஒரு மூளைவளர்ச்சி தவறிய(மேக்ரோசெப்பாலி) ஆட்டிஸ்டிக் சேவன்ட் கிடையாது, வேறுவகையானது, ஒரு உண்மையான கதாப்பாத்திரத்தைப்பற்றிய படம் இது.

அந்த வருடத்திற்கான, சிறந்த கதாநாயகன், சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதைக்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் இது. (முழுவிவரம் கடைசியில்). நான் முதலில் இந்தப்படத்தைப் பார்த்தது அதில் நடித்து ஆஸ்கார் பெற்ற டஸ்டின் ஹாப்மென்னுக்காக(Dustion Hoffman) இல்லை. ஒரு இடத்தில் டாம் குருயிஸ்(Tom Cruise மிகவும் பிடித்த நடிகர்) உடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்ற காரணத்தால் சொந்தமாக வாங்கி பார்த்து வியந்துபோன படம் இந்த ரெய்ன் மேன்.

பணக்கார அப்பாவின் மகன் சார்லி பப்பிட்(Charlie Babbitt), ஒரு முறை அப்பாவிற்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போக, அப்பா கோபமாகி தன் கார் திருட்டுபோய்விட்டதாக போலிஸில் சொல்லிவிட. இரண்டுநாள் ஜெயிலில் இருந்த சார்லி கோபமாகி அப்பாவிடம் திரும்பாமல் வேறு இடத்திற்கு போய்விடுகிறார். பின்னர் வாகனங்களை விற்பவராக மாறிவிட்ட சார்லிக்கு அவன் தந்தை இறந்து போன விஷயம் தெரியவர இறுதிமரியாதை செலுத்த வருகிறான். அப்பொழுதுதான் தன் தந்தை மூன்று மில்லியன் சொத்துக்களையும் ஒரு ட்ரெஸ்டி பெயரில் எழுதுவைத்துவிட்டு, அதன் பெனிபிஷியரியாக(உபயோகப்படுத்துபவராக) யாரையோ வைத்துவிட்டு போய்விட்டதாகவும் இவனுக்கு தன் தந்தையின் ரோஜாப்பூத்தோட்டம் மட்டுமே கொடுத்ததும் தெரியவரும்.

பின்னர் யார் அந்த உபயோகப்படுத்தும் ஆள் எனத்தேடி சார்லி நகரும் பொழுது சூடுபிடிக்கத்தொடங்கும் எக்ஸ்ப்ரஸ், இங்கேதான் வருவார் ரெய்மண்ட் பப்பிட்(Raymond Babbitt - Dustion Hoffman) என்ற சார்லியின் சகோதரர். இவர் ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். இவர் பெயரில் தான் சார்லியின் தந்தை மொத்த சொத்தையும் ட்ரெஸ்டி வழியாக எழுதுவைத்திருப்பார். அதற்கு காரணம் ரெய்மண்டிற்கு பணம் என்ற ஒரு விஷயமே தெரியாது. பின்னர் சார்லி தன் சகோதரனை கடத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து அந்த ட்ரெஸ்டியை மிரட்டுவது என பக்காவான மசாலாப்படம். ரெய்மண்ட் விமானத்தில் ஏறமாட்டேன் எனபயந்து பயணச்சீட்டு எடுத்த விமானத்தை மறுக்க. சகோதரர்களின் சாலைவழிப்பயணம் தொடங்கும்.

ரெய்மண்ட் பற்றி, ரெய்மண்டின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை, யாரையும் அவர்கள் கண்களை நோக்கிப்பார்க்காமல், தனக்கென்ற வாழ்க்கையை வாழும் ஒரு திறமையான, மனனம் செய்வதில் மிகத்திறமையான ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். அதாவது முட்டாள் விஞ்ஞானி. தான் படிக்கும் பார்க்கும் அத்துனை விஷயங்களையும் மனனம் செய்யும் திறமையுள்ள ரெய்மண்டை அவருடைய பழக்கவழக்கங்களிலில் இருந்து மாற்றினாலோ இல்லை, வேறுஒன்றை செய்ய கட்டாயப்படுத்தினாலோ தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு கத்துவார்.

இப்படியாக செல்லும் இந்தப்பயணத்தில் முதலில் தன் சகோதரனின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சார்லி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை கண்டுகொள்ளும் படி சொல்லியிருப்பார் இயக்குநர். முன்பே சொன்னதுபோல் ஒரு அச்சுஅசல் மசாலாப்படம். ஆனால் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார்கள் அனைவரும்.

தன்னுடைய கடன் செலுத்தமுடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு சகோதரனுக்கு மொத்த பணத்தை எழுதிவைத்துவிட்டாரே எனக்கோபப்படும் இடங்களிலும் விமானத்தில் பயணம் செய்ய பயந்து ரெய்மண்ட் கத்தும் இடத்தில் இயலாமையையும் பின்னர் தன் சகோதரனால் சீட்டுக்கட்டில் அதிக பணம் கிடைத்ததும் சந்தோஷப்படும் இடத்திலும் வெகு அழகாக நடித்திருப்பார் டாம் குருஸ்.

படத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாரென்றால் அது டஸ்டின் ஹாப்மென்தான். தான் முதலில் தோன்றும் இடத்திலிருந்து முடிவு வரை அந்த கதாப்பாத்திரத்தின் ஆளுமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். நடை உடை பாவனைகளில் பிரமாதப்படுத்தியிருப்பார். தன் சகோதரனும் அவன் காதலியும் இணைந்திருக்கும் ஒரு தர்மசங்கடமான நேரத்தில் அங்கு வந்து அவர் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் வெளிப்படுத்தும் ஒரு மௌனம் அற்புதமோ அற்புதம், காட்சி அமைப்பும் பிரமாதமாகயிருக்கும்.

தன் புத்தகத்தை எடுத்த சார்லி படிப்பதை பிடிக்காமல் காட்டும் முகபாவத்தில் ஆகட்டும், ஒவ்வொரு விஷயமாக தன் ஞாபகத்திலிருந்து அவர் சொல்லும்பொழுது அவருடை சலனமற்ற கர்வமற்ற முகத்திலாகட்டும், ஒரே இரவில் டெலிபோன் டிக்ஷ்னரியிலிருந்து ஏ முதல் ஜி பாதி வரை மனப்பாடம் செய்துவிட்டு பின்னர் அடுத்தநாள் பார்க்கும் அட்டன்டர் பெண்ணின் தொலைபேசி நம்பரை சொல்லவதிலாகட்டும், பின்னர் கொட்டப்பட்ட டூத்பிக்கின் எண்ணிக்கையை சில வினாடிகளில் சொல்வதிலாகட்டும் படம் காண்பித்திருப்பார் மனுஷன்.


Kim Peek

கடைசியில் தமிழ்ப்படம் போல் முடிக்காமல் ரெய்மண்ட் பப்பிட் தான் இருக்கும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவதாக முடித்திருப்பார் இயக்குநர். அந்த ரெய்மண்ட் பப்பிட் என்ற கதாப்பாத்திரம் முன்பே சொன்னதைப்போல் ஒரு உண்மைக் கதாப்பாத்திரம். கிம் பீக், சுமார் 9600 புத்தகங்களை மொத்தமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார். அந்த நபரின் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருப்பார்கள் படத்தில். நிச்சயமாக படத்தில் கலந்திருக்கும் நகைச்சுவை உணர்வுக்கும், டஸ்டின் ஹாப்மென், மற்றும் டாம் குருஸ்ஸின் நடிப்பிற்கும் சேர்த்து ஒருமுறை பார்க்கலாம்.

Academy - 1988
Best Actor Dustin Hoffman - Win
Best Director Barry Levinson - Win
Best Original Screenplay Ronald Bass, Barry Morrow - Win
Best Picture - Win

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Talaash சினிமா சினிமா விமர்சனம்

Talaash - one stupid movie

அமீர் கான் படம் என்றால் வரும் இயல்பான ஆசை இந்தப் படத்தின் ட்ரைலரை முதன் முறை பார்த்ததுமே வந்தது. என் வரையில் கரீனா கபூர் ஒரு நல்ல நடிகை, என் A-Listல் நிச்சயம் உள்ளவர். ராணி முகர்ஜியை ‘தில் சே’ காலத்திலிருந்தே பிடிக்கும். இந்தப் படத்தை நான் இதற்கு மேலும் பார்க்காமல் இருந்திருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது தான். இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு பெண். ஆனால் ஐஸ்வர்யா(தனுஷ்)ன் 3 படம் என்னில் ஏற்படுத்திய மாற்றம் பெண் இயக்குநர் என்பதற்காக ஒரு படத்தைத் தவிர்க்கக் கூடாது என்பது.

 படத்தைப் பற்றிய விமர்சனம் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்று பொதுவாய்த் தவிர்த்து வந்தேன், தமிழ் ஆங்கிலப் படங்களைப் போலில்லாமல் என் நேரக்கோட்டில் - Facebook, Twitter - இந்திப் படங்களான ரிவ்யூக்கள் கொஞ்சம் லேட்டாய்த் தான் வரும். ஆனாலும் அருகில் உட்கார்ந்திருந்த நண்பன் ‘I am hearing mixed reviews Mohan’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். இந்திய அமெரிக்க நேர இடைவெளியில் இத்தனையும் நடந்தது. இங்கே ப்ரிவ்யூ ஷோ போடவில்லை என்பதால் வெள்ளி 7.00 மணி ஷோவிற்கு டிக்கட் புக் செய்திருந்தேன்.


படம் என்னை ஆரம்பத்தில் ஏமாற்றவில்லை தான். Layered neo-noir படத்தை எடுக்க வேண்டிய விதத்தில் தான் எடுத்திருந்தார் இயக்குநர். வலுவான நடிகர்கள், கடினமான கதாப்பாத்திரங்களை உள்வாங்கிச் செய்யும் அமீர் கானுக்கும் சவாலான கதாப்பாத்திரம் தான். சட்டென்று அமீர் கானின் பத்தாண்டுகால மனைவி கதாப்பாத்திரமாக அறிமுகமாகும் ராணி முகர்ஜியின் நடிப்பிலும் பிசிர் இல்லை, அவர் குரலும் கூட பொருந்தியிருந்தது. மகனைப் பறிகொடுத்த தம்பதியின் ஏக்கம், நிராசை, கோபம், அழுகை, சங்கடம் எல்லாம் விவரப்படுத்தப் பட்டுள்ளது. எனக்கு இதில் ராணி முகர்ஜி ‘ஆவியிடம் பேசுபவரிடம்’ சென்று பேசுவது கூட இயல்பாக இருந்தது, சங்கடம் இல்லை, இழப்பு ஏற்படுத்தும் தாக்கம் அதைச் செய்து பார்க்கச் சொல்லும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

கரீனா கபூர் அறிமுகமான இரண்டாவது சீனிலேயே அவர் மானுடர் இல்லை என்பதற்கான துண்டு விரிக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண சினிமா ரசிகர் கூட இதை உணர்ந்து கொள்ள முடியும் தான். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாய் அமீர் கான் பாத்திரம் மூலமாய் இல்லை அது அப்படியிருக்க முடியாது என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களின் மனதில் திணிக்கப்படுகிறது. இங்கே தான் படத்தின் cheap trick தொடங்குகிறது. ஒரு பேய்ப்படத்தில் நடிக்க அமீர்கான் எதற்கு வேறொதுவும் காரணம் இருக்கும் எல்லாவற்றையும் லாஜிக்கலாக இணைக்கும் ஒரு புள்ளி என்று மனம் தேடத் தொடங்குகிறது. இது இப்படியில்லாமல் செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் ஒரு சீரியஸ் க்ரைம் சஸ்பென்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் பேய் உதவுகிறது என்பது, முட்டாள்த்தனமானது. யோசிக்கத் துப்பில்லாமல், கதையை இணைக்க முடியாமல் விட்டது போல் உள்ளது.

நவாஸுதீன் இயல்பான நடிப்பை வெளிக்காட்டுகிறார் தொடர்ச்சியாக. விபச்சாரிகள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் க்ளாமரைஸ் செய்திருப்பதைப் போல் பட்டதெனக்கு. அந்தப் புள்ளியும் கூட ரொம்பவும் இயல்பை விட்டு நகரவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் வைக்கும் கருத்து, இத்தனை லேயர்களையும் தாண்டி பேய் பூதம் பிசாசு என்றால் இது கண்டிப்பாய்த் தவிர்க்கவேண்டிய படம். இயல்பில்லாதப் படமாக இருந்திருந்தால் பேயையும் அப்படியே விட்டுவிடலாம் தான், ஆனால் அது தவிர்த்து இயல்பான படமாக இருப்பதால் இந்தப் படம் இல்லாஜிக்கல் விஷயத்தை நம் மீது திணிக்கிறது. இந்தப் படத்தை அமீர் கான் தேர்ந்தெடுத்திருக்கக் காரணம் புரியவில்லை.

ஏன் இப்படி ஒரு படத்திற்குப் போனேன் என்று கடைசியாக நினைத்தப் படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ அதற்கடுத்து அப்படி உணர்ந்த அடுத்தப் படம் ‘தலாஷ்’. ஆனால் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கான்செஃப்ட் மோசமானது. இந்தப் படம் வெற்றியடையக் கூடாது. நான் பேய் பூதம் இவற்றை நம்பி எடுக்கும் படங்களைக் கூட சொல்லவில்லை. அது பரவாயில்லை ஆனால் இந்தப் படம் அமைத்துத்தரும் அடித்தளம் என்பது மிகவும் மோசமானது. ஒரு முட்டாள்த்தனமான படம் எப்படி எடுப்பது என்பதைப் பார்க்கவேண்டுமானால் தயவு செய்து இந்தப் படத்தைப் பாருங்கள்.

இன்னமும் கூட ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் பற்றி நினைத்தால் வாந்தி வருகிறது, தெரியவில்லை இந்தப் படம் எப்பொழுது என் நினைவுகளை விட்டு நீங்கும் என்று.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Baise Moi - Kiss Me

முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு செய்தார்.



அவரிடம்(மட்டும்) நான் பெண்ணியத்தைப் பற்றிய விவாதத்தை செய்ய மாட்டேன்; கிழித்தெரிந்துவிடுவார் என்று தெரியும். ஆனாலும் சுத்திச் சுத்தி பேசுவேன்.

"இங்கப்பாருங்க எந்த ஒரு விஷயமும் இந்தியாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இந்தியனைஸ்ட் செய்யப்பட வேண்டும். நாம இந்தியாவில் சாப்பிடும் பீட்ஸா இருக்கே அதை அமேரிக்காவிலோ இல்லை அதன் தாயகமான இத்தாலியிலோ கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் ஏன் தெரியுமா? நாம் சாப்பிடும் பீட்ஸா இந்தியாவிற்காக செய்யப்பட்டது நம்முடைய மசாலாக்கள் போடப்பட்டு செய்யப்பட்டது. அவன் லத்தின் அமேரிக்காவிலோ, அமேரிக்காவிலோ செல்லுபடியாகும் பீட்ஸாவை அப்படியே இந்தியாவில் கொண்டுவந்தால் அது ஊத்தி மூடியிருக்கும்.

அதைப் போலத்தான் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற கொள்கைகளும் கட்டுமானங்களும். இந்தியனைஸ்ட் செய்யாமல் இங்கே ஒன்றுமே வெற்றி பெற முடியாது. அப்படி செய்தீர்களேயானால் அது படுதோல்வியில் முடியும். அது புரட்சியாக இருந்தாலும் சரி பெண்ணியமானாலும் சரி." நான் வைத்த இந்த பாய்ன்ட்டை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் பல சமயம் இந்தியனைஸ்ட் செய்யும் பொழுது அந்தக் கொள்கை அப்படியே மாறிவிடுகிறது என்றும் புலம்பினார்.

ஏன் இதைப் பற்றி Baise-Moi பற்றி எழுதும் பொழுது சொல்கிறேன் என்றால், நான் பெண்ணியம் பற்றிய விமர்சனங்களை வைத்திருக்கும் பொழுது எனக்கு இந்தப் படத்தை அந்த நபர் அறிமுகப்படுத்தியிருந்தார். படம் பார்த்ததும் எனக்கு வந்த உணர்வுகளைத்தான் நான் சொல்லியிருந்தேன் அதனால் தான் அந்த வரிகள்.

சரி படத்தைப் பற்றி, ஏற்கனவே டிசே தமிழன் இந்த நாவலைப் பற்றி(இந்த படம் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது நாவலை எழுதியவர் துணை இயக்குநராய் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது) எழுதியிருந்தார். இந்தப் படம் 1973க்குப் பிறகு ப்ரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஏனென்றால் உலகின் கலாச்சார தலைநகரம் என்று பெயர் பெற்ற ப்ரான்ஸைப் பற்றிச் சொல்லும் பொழுது அதனுடைய சுதந்திரம் மிக முக்கியமான ஒன்றாக வைக்கப்படுகிறது அதாவது எழுத்து, பேச்சு சுதந்திரங்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு படம் என்ற Tag உடன் என்னிடம் அறிமுகம் ஆனது இப்படம்.

விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கையை காட்டுவதாக படம் அமைந்திருக்கிறது, நாவலை எழுதியவர்(இயக்குநர்) மற்றும் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் இந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆதலால் தத்ரூபமாக அம்மக்களைப் படம் பிடிப்பதாய் இருக்கிறது படம். இந்தப் படத்தை நாம் எந்த முறையில அணுகுகிறோம் என்பது மிகமுக்கியமான ஒரு விஷயமாகயிருக்கிறது. ஏனென்றால் இன்னமுமே கூட இது போன்ற ஒரு சூழ்நிலையை படமெடுக்க ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மறுக்கிறார்கள் எனும் பொழுது, நம் நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்தப் பிரச்சனைகள் இல்லையா நம் நாட்டில் என்றால் - இருக்கிறது சொல்லப்போனால் நிறையவே என்ற பதில் தான் வரும்.

எழுத்து வடிவத்தில் நம்மூர் ஆட்களில் இதைப் பற்றி எழுதுபவர்கள் இன்று இருக்கிறார்கள். ஜே.பி. சாணக்யா எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த விதத்தில்; ஆனால் பாலியல் விவகாரங்களை விளிம்பு நிலை மக்கள் துடைத்துப் போட்டுவிட்டுப் போகும் ஒரு விஷயமாகப் பார்ப்பதை நீங்கள் சாணக்யாவின் எழுத்துக்களில் பார்க்கலாம். (ஆனால் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு நபர் - சாணக்யாவின் எழுத்துக்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய விஷயங்கள் மிகைப்படுத்தலானதும் கொஞ்சம் போல் போலியானதாகவும் இருப்பதாக சொல்லிக் கேள்விப்பட்டேன்.) ஆனால் 'ரா'வாக விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் விவரிக்கிறது.

Baise Moi க்கு டிசே சொல்லியிருப்பதைப் போல் Rape Me நேரடியான அர்த்தமாக இருக்காதெனவும் Kiss Me தான் அர்த்தம் என்றும் இயக்குநரின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.(ஆனால் தற்சமயங்களில் F*** Me என்ற அர்த்தமும் வருமாம்).

நடீன் என்ற பகுதிநேர விலைமாதுவிற்கும், மனு என்ற தன்னுடைய வாழ்விற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு பெண்ணிற்கும் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. இருவருமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைச் சேர்ந்தவர்களையே கொன்றுவிடும் நிலை. நடீன் தன்னுடைய அறைத் தோழியையும் மனு தன்னுடைய சகோதரனையும் கொன்றுவிட்டு செல்லும் வழியில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் இருக்கும் ஒத்த பின்னணியால் சேர்கிறவர்கள். பணத்திற்காகக் கொள்ளையடிக்கிறார்கள், தேவைகளுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், பின்னர் வெறிக்காக(சமுதாயத்தின் மேல்) கொலை செய்கிறார்கள். இப்படியே நீளும் கதையில் கடைசியில் ஒரு கடையில் கொள்ளையடிக்கும் பொழுது மனு கொல்லப்பட, மற்றவர்(நடீன்) தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் பொழுது பிடிபடுகிறார்.

இவ்வளவு தான் படம் படமாக்கியிருக்கும் விதம் உண்மையிலேயே அதிர வைக்கிறது. அவர்களின் 'ரா'வான தன்மை. எந்த நோக்கமும் இல்லாமல் இயங்குவது, கொலை செய்வது என்று ஆச்சர்யப்படவைக்கிறது படம். இந்த வகையான எடிட்டிங் முன்பே பார்த்திருக்கிறேன்; தனித்தனியாய் இருவரைப் பற்றியும் ஆரம்பிக்கும் படம். இருவரும் சேர்ந்ததும் ஒன்றாய் பயணிக்கிறது. படத்தில் இருக்கும் ஒரு ரேப் சீன் பெரும்பான்மையான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று. உலகத்தின் பல பாகங்களில் இந்தப் படம் இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது; இந்தியாவிலெல்லாம் கேட்காதீர்கள்.

படம் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான நேரத்தில் ஒரு படம் பார்ப்பதைப் போன்ற உணர்வே எழுவதில்லை. இதற்கு இந்தப் படத்தை எடுத்த முறையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன் - இயற்கையான வெளிச்சத்திலேயே இந்தப் படத்தை எடுத்தார்களாம். இதைப் போலவே முன்பே நினைத்த ஒரு படம் Battle of Algiers's. நாம் எவ்வளவு செக்யூர்டான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு இதைப் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கிறது.

இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது எதற்காக இப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலாக இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை உலகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்ய என்று கூறலாம்; இயக்குநர் Virginie Despentes சொல்கிறார் படத்தில் காண்பிப்பதை விடவும் வன்முறையா ஒரு உலகம் இருப்பதாகவும் அதில் அவர் வாழ்ந்ததாகவும். விக்கிபீடியாவில் தேடிக்கொண்டிருந்த பொழுது தான் தெரியவந்தது இந்தப் படத்தில் நடீனாக நடித்த நடிகை Karen Bach சிறிது காலத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய கடைசி Note ஆக "Too Painful" என்று எழுதி வைத்திருந்ததாகவும். Karen Bach ஒரு போர்ன் ஸ்டாராக இருந்தவர் தான்.


Karen Bach

இந்தியாவில் இந்தப் படம் கிடைக்கிறதா தெரியவில்லை, படத்தில் செக்ஸ் சீன்களும் வன்முறையும் அதிகம் இருக்கும். இதை ஒரு ரிவ்யூ போல் எல்லாம் எழுதாமல் இந்தப் படம் பார்த்ததால் நான் உணர்ந்ததை எழுதியிருக்கிறேன்.

Written & Directed by - Virginie Despentes, Coralie Trinh Thi
Starring - Karen Lancaume, Raffaëla Anderson

http://en.wikipedia.org/wiki/Baise_moi
http://en.wikipedia.org/wiki/Virginie_Despentes
http://en.wikipedia.org/wiki/Karen_Lancaume

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In எமினெம் சினிமா சினிமா விமர்சனம்

8 Mile - எமினெம்

நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம்.

சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதுதான் கதை. ஹாலிவுட்டில் நம்ப ஊரு தாலி செண்டிமெண்ட் மாதிரி பிரபலமான கான்செப்ட். ஆனால் எனக்கு சிண்ட்ரெல்லா மேன் பிடித்துப் போனதற்கும் இந்தப் படம் பிடித்துப் போனதற்கும் காரணம் இந்தப் படங்கள் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட கதைகள்.(சிண்ட்ரெல்லா மேன் உண்மைக் கதை என்றே சொல்லி எடுக்கப்பட்டது, ஆனால் 8 மைல் அப்படிக் கிடையாது பார்ட்ஷியல் பயோகிராபி தான்.(சொல்லப்படுகிறது))

இதெல்லாம் இருந்தும் படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய, முதலில் எமினம் நடித்தது. வாழ்க்கையில் நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று, "தூள்" படம் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன், அதில் ஒரு வயதான அம்மா நடித்திருக்குமே(வேறவழி). அந்தம்மா ஸ்கிரீனில் சும்மா நிக்கிறதையும், டயலாக் டெலிவரியின் போது கூட முகத்தில் ஒரு ரியாக்ஷனுமே இல்லாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு, அம்மாடி நடிக்கிறது பெரிய வேலைதான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏன் இங்கே இதைச் சொல்கிறேன் என்றால் எமினம்-ன் முதல் படமாகயிருந்தாலும் இந்தப் பிரச்சனைகள் தெரியவில்லையென்றே சொல்லவேண்டும்.

ஒரு நடிகரைப் போட்டு எடுத்திருக்கலாம் தான் ஆனால் இந்த ரியாலிட்டி வந்திருக்காது, அதுவும் படத்தில் பெரும்பங்குவகிக்கும் ராப் பாடல்கள் இத்தனை நன்றாக வந்திருக்காது. சரி ராப் பாடல்களுக்கு, எனக்கு மிகச்சரியாய் ராப்பாடல்கள் அறிமுகம் ஆனது டிசேவின் பதிவில், அவர் ராப் பாடல்களைப் பற்றிய பதிவெழுதியிருந்தார். முன்பே கேட்டிருக்கிறேன் டூபாக், ஸ்னூப்பி டி ஓ டபுள் ஜி, எமினெம் என்று என்றாலும் வெறும் சப்தத்திற்காக பிடித்திருந்த பாடல்கள். அதே சமயத்தில் இல்லை இன்னும் கொஞ்ச காலம் கழித்து சாருவின் கோனல்பக்கங்களில் எமினம் பற்றி எழுதும் பொழுது நினைத்திருக்கிறேன், ஆஹா மனுஷன் இப்பத்தான் முதல் முறையா நமக்குத் தெரிந்த ஒருத்தரைப் பற்றி சொல்றார் என்று. ஏன் என்றால் எனக்கும் விளிம்பிற்குமான தொலைவு அதிகம். பெரும்பாலான நியூட்ரல் ஜல்லிகளுக்கு இதுதான் காரணம்.

அந்தச் சமயங்களில் தான் ரொம்பவும் சீரியஸாய் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கத் தொடங்கியது. எப்படி இங்கிலிபீஷ்ஷில் இருந்து இங்கிலீஷ்ற்கு வர ஆங்கிலப் படங்கள் உதவியதோ அப்படி இங்கிலீஷ்லிருந்து English வர இந்த வகையறா பாடல்கள் உதவின. ஜான் லெனன், பேக் ஸ்டீர்ட் பாய்ஸ்(I Really Miss them), U2 என பாப் இசைப் பாடல்களில் விழுந்து பொரண்டிக் கொண்டிருந்த பொழுது கிடைத்த அறிமுகம் தான் ராப் பாடல்களினுடையது.

ஒரு மிகச் சிக்கலான விஷயத்தை, தன்னுடைய ஏற்கனவே பிரபலமான ஸ்டைல் பாடல் வரிகளினிடையே எப்படி எமினமால் தரமுடிகிறது என்று வியந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும்(அமேரிக்க விளிம்புப் பிரச்சனைகள்) பற்றியும் எமினம்-ன் வரிகள் பிடித்திருந்திருக்கிறது. நான் எனக்கு எமினம்-ஐ மிகவும் பிடிக்கும் என்று பக்கத்தில் ஒரு ப்ளாக்கரிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவர் "உனக்கு அவனை பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்" என்று சொல்ல, முதலில் புரியாமல் விழித்தேன் பிறகு அவரே, உன்னை மாதிரி MCPக்கெல்லாம் அவனைத்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல, ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டேன்.(சாரு நிவேதிதா கேட்டிருக்கணும் முன்பே ஒருமுறை சொன்ன மாதிரி அவுத்துப்போட்டு ஆடியிருப்பார் ;).)

ஆனால் அது அப்படியல்ல, என்னுடைய அறிப்பை நான் மற்றவர்களின் மேல் சொறிந்துவிட முடிவதில்லை பெரும்பாலும் என்னுடைய சுயசொறிதல்களே எனக்கு போதுமானவையாக இருக்கின்றன.

சரி படத்திற்கு, கறுப்பர்களால் டாமினேட் செய்யப்படும் ராப் பாடல் உலகில் ஒரு வெள்ளையரான எமினெம்-ன் ஆரம்பம் வளர்ச்சியைப் பற்றியதுதான் இந்தப் படம். 8 மைல் என்று கவிதைத்துவமான தலைப்பு, அதாவது படம் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப்(வேண்டுமானால் பணக்காரர்கள் ஏழைகள்) பிரிப்பது இந்த 8 மைல் தூரம். அந்த 8 மைல் தூரத்தை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

மியூசிக் சம்மந்தப்பட்ட படம் என்பதால், படம் முழுவதும் ரசிக்கக்கூடிய இசை காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எனக்கு எமினம்-ன் பாடல்கள் பிடித்துப் போன பிறகு அவருடைய கதையை(அதாவது உண்மை வரலாற்றை) தேடிப் படித்திருக்கிறேன் என்பதால், இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயம் ஏற்கனவே நானறிந்த ஒன்றுதான்.

படத்தில் ராப் பாடல்களுக்கான போட்டிகள் நடைபெறுவது முக்கிய விஷயமாகப் பேசப்படுகிறது சொல்லப்போனால் இந்த ராப் போட்டிகள் குத்துச் சண்டை போட்டிகளை ஒத்துக் காணப்படுகிறது. 8 மைல் படத்தைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு இதைப் பற்றி எழுதாமல் போகக்கூடாது என்பதால் எழுதுகிறேன். எமினெம்-ன் வாழ்க்கை தொடக்கத்தில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ரொம்ப எளிமையா சொல்லணுனா இரண்டு பேர் பங்குபெரும் பேச்சுப் போட்டிகளைச் சொல்லலாம். இங்கே பேசுவது போல் அங்கே பாடுவார்கள், ஆனால் அங்கே வாசிக்கப்படும் மெட்டிற்கு ஏற்றபடி சொற்களைக் கட்டிப் பாடுவது. இதையும் பேச்சுப் போட்டிகளுடன் சொல்லலாம், ஐந்து நிமிடத்திற்கு முன் டாபிக் கொடுத்தெல்லாம் நானே பேசியிருக்கிறேன். ஆனால் முன்னர் சொன்னது போல் ஏற்கனவே பெரும்பாலும் மனதில் உருப்போட்ட வரிகளைத்தான் உபயோகிப்போம் தலைப்பு என்ற விதத்தில் வேண்டுமானால் இதை(ராப் போட்டிகளை, ஆனால் இதிலும் எமினெம் முன்பாகவே பிரிபேர் செய்வதைப் போல் இருக்கும்) வேறாகச் சொல்லலாம்.

இன்றுவரை ராப் ஒலிம்பிக்ஸ் நடந்துவருகிறது. 2001லோ இல்லை 2002லோ தெரியாது எமினெம் ரன்னர் அப்பாக வந்தார் என்று நினைவில் இருக்கிறது. இது உண்மையில் நடந்தது. ஆனால் உண்மையில் ராப் பாடல்களை, ராப் பாடகர்களை, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்திருந்தீர்கள் என்றால் இந்தப்படம் அவ்வளவு இயல்பாக ராப் உலகைக் காண்பிப்பதாகச் சொல்லமுடியாதென்றாலும். ஒரு நல்லமுயற்சி இந்தப்படம்.



இந்தப் படத்தில் வரும் "Lose Yourself" பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருது பெற்றது. ஆனால் இந்தப்பாடலை அவர் செரிமெனியில் பாடவில்லை, ஏனென்றால் American Broadcasting Company இந்தப் பாடலை எடிட் செய்து பாடச் சொன்னதால் பாடவில்லை. அந்தப் பாடல்வரிகள் மற்றும் படக் காட்சியுடன் நிறைவு செய்கிறேன்.

"Lose Yourself"

Look, if you had one shot, or one opportunity
To seize everything you ever wanted-One moment
Would you capture it or just let it slip?

His palms are sweaty, knees weak, arms are heavy
There's vomit on his sweater already, mom's spaghetti
He's nervous, but on the surface he looks calm and ready
To drop bombs, but he keeps on forgettin
What he wrote down, the whole crowd goes so loud
He opens his mouth, but the words won't come out
He's chokin, how everybody's jokin now
The clock's run out, time's up over, bloah!
Snap back to reality, Oh there goes gravity
Oh, there goes Rabbit, he choked
He's so mad, but he won't give up that
Easy, no
He won't have it , he knows his whole back's to these ropes
It don't matter, he's dope
He knows that, but he's broke
He's so stagnant that he knows
When he goes back to his mobile home, that's when it's
Back to the lab again yo
This whole rap shit
He better go capture this moment and hope it don't pass him

[Hook:]
You better lose yourself in the music, the moment
You own it, you better never let it go
You only get one shot, do not miss your chance to blow
This opportunity comes once in a lifetime yo

The soul's escaping, through this hole that it's gaping
This world is mine for the taking
Make me king, as we move toward a, new world order
A normal life is borin, but superstardom's close to post mortem
It only grows harder, only grows hotter
He blows us all over these hoes is all on him
Coast to coast shows, he's know as the globetrotter
Lonely roads, God only knows
He's grown farther from home, he's no father
He goes home and barely knows his own daughter
But hold your nose cuz here goes the cold water
His hoes don't want him no mo, he's cold product
They moved on to the next schmoe who flows
He nose dove and sold nada
So the soap opera is told and unfolds
I suppose it's old partna', but the beat goes on
Da da dum da dum da da

[Hook]

No more games, I'ma change what you call rage
Tear this mothafuckin roof off like 2 dogs caged
I was playin in the beginnin, the mood all changed
I been chewed up and spit out and booed off stage
But I kept rhymin and stepwritin the next cypher
Best believe somebody's payin the pied piper
All the pain inside amplified by the fact
That I can't get by with my 9 to 5
And I can't provide the right type of life for my family
Cuz man, these goddam food stamps don't buy diapers
And it's no movie, there's no Mekhi Phifer, this is my life
And these times are so hard and it's getting even harder
Tryin to feed and water my seed, plus
Teeter totter caught up between being a father and a prima donna
Baby mama drama's screamin on and
Too much for me to wanna
Stay in one spot, another day of monotony
Has gotten me to the point, I'm like a snail
I've got to formulate a plot fore I end up in jail or shot
Success is my only mothafuckin option, failure's not
Mom, I love you, but this trailer's got to go
I cannot grow old in Salem's lot
So here I go is my shot.
Feet fail me not cuz maybe the only opportunity that I got

[Hook]

You can do anything you set your mind to, man.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ராவன்

எனக்குப் பிறக்கப்போகும் பையனுக்கு ராவணன்னு பெயர் வைப்பேன்னு தலைகீழா நிற்கிற ஆள் ராவணன் படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம், ஆனால் நான் ராவனுக்குப் போனேன். எல்லாம் பெங்களூர் மல்டி ப்ளக்ஸுகள் செய்து சோதனை.

படம் நடக்கிற சூழல் இந்திக்கு பிரச்சனையில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சனை ஐஸ்வர்யா ராய், இந்த அத்தைக்கு நடிக்கத் தெரியாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், மணிரத்னம் போன்றவர்கள் விளம்பர அடையாளத்திற்காக இவர் பின் தொங்குவது கொடுமை.

படத்தில் இவருடைய க்ளோசப்பு காட்சிகள் நம்மை அப்புகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கு தகுதியான படம் எந்திரனாகத்தான் இருக்க முடியும், இரண்டு சாங், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் காதல் வகையறா தான் ஐஸ்வர்யா ராய் செய்ய முடியும். உணர்ச்சியற்ற இவர் முகம் படத்தில் தேவைப்படும் subtle ஆன எதையும் செய்ய இயலவில்லை.

இந்திப் படத்தில் நன்றாய் பெயர் வாங்குவது ரவி கிஷனும், கோவிந்தாவும் தமிழில் கோவிந்தா கதாப்பாத்திரத்தை கார்த்திக் செய்வதாக அறிகிறேன். பாவம்.

படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது, மணிரத்தினத்தின் இராமாயண interpretation ஆனால் அப்படி ஒன்று மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது என்று முந்தைய பிரதிகளில் இருந்து எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கொடுமைக்கு நாம் விஜய் இடமே கூட சரி இந்தப் படத்தில் ஏதாவது இருக்கும் என்று ஒவ்வொரு படத்திற்கும் செல்பவர்கள், மணிரத்தினத்திடம் எதிர்பார்க்கக்கூடாது என்று ஒன்றும் இல்லை.

இராமாயணத்திலிருந்து மொத்தமாக பிறழாமல் ஆனால் இராவன் சீதைக்காக இராமனை விட்டுவிடுவது போலவும், சீதைக்கான இராவன் மீதான பிடிப்பு மட்டும் மணிரத்தினத்தின் interpretation ஆக ஒப்புக்கொள்ள முடியவில்லை, Mr. and Mrs. Iyer படம் இப்படியான ஒன்றை முதலிலேயே அளித்திருக்கிறது. கடைசி வரையிலும் சீதையை இராவன் தொடவேயில்லை என்பது கம்பனுடைய interpretationன் பாதிப்பு என்று நினைக்கிறேன். Mr. and Mrs. Iyer லெவலையே இன்னும் இராவன் தாண்டலை இந்த விதத்தில் என்று நினைக்கிறேன். Dev D அளவிற்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.

நான் தேவ் டி பாணி படங்களையே இந்த விதத்தில் விரும்புகிறேன். இதன் காரணமாகவே எனக்கு ஓம்காராவும் ராஜ்நீதியும் பிடிக்காமல் போனது.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா விமர்சனம் பெண்ணியம்

கபி அல்விதா நா கெஹ்னா, கட்டுடைத்தல், கரண்ஜோஹர் மற்றும் ஜல்லி

கட்டுடைத்தல் அப்படின்னு சொன்னதும் உங்களுக்கெல்லாம் யார் யார் நினைவுக்கு வருவாங்கன்னு தெரியாது எனக்கு ஆசிப் அண்ணாச்சியும் 'நண்பன்' பீர் முகமது அண்ணாச்சியும் தான் நினைவுக்கு வருவாங்க, குஷ்பு மேட்டர் வந்திருந்தப்ப கட்டுடைத்தலை படம் போட்டு விளக்கினவரு ஆசிப்புன்னா, பின்நவீனத்துவ கவிதை எழுதி விளக்கினவரு பீர் முகமது. சுட்டிகள் தேடிப்போட்டு மீண்டும் உதைவாங்க நான் தயாராயில்லை. இணைய உலகில் வலம் வரும் சில பெயர்களுக்காக கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதுண்டு, இந்தப் பழக்கம் கவிதைக்கு கிடையவே கிடையாது என்ற நிலையிலிருந்து ஒரு அடி பின்வாங்கினேன் என்றால் அது நண்பனின் கவிதை வரிகளுக்காக மட்டும் தான்.

முதலில் இந்தக் கட்டுரையை அல்லது டைரிக்குறிப்பை அல்லது திரை விமரிசனத்தை 'கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்திருந்தேன், அதுவும் ஒருவாரத்திற்கு முன்பே பலருக்கு நான் எழுத நினைத்த காரணம் தெரிந்திருக்கும். பின்னர் இன்று காலை படம் பார்த்துவிட்டு வந்ததும் 'கட்டுடைத்தலும் சில பக்வாஸ் ஆத்மிக்களும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்தேன். கடைசியில் எழுத உட்காரும் பொழுது அதையும் மாற்றி தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் 'கட்டுடைத்தலும் கரண் ஜோஹரும்' என்ற தலைப்பில் எழுதுகிறேன். என் பல சிறுகதைகளை அதன் ஒருவரி முடிவை நோக்கி கொண்டுசெல்ல முயலாததைப்/இயலாததைப் போல், தலைப்பை தேர்ந்தெடுப்பதிலும் சில காலமாக நான் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிவருகிறேன்.

உலகம் மாறுகிறது, நான் திருச்சியில் சினிமா பார்த்த நாட்கள் இன்று நினைவில் வந்தன, மாரிஸில் முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க நான் படாதபாடு பட்டிருக்கிறேன். அமர்க்களம் மாரிஸில் ரிலீஸ், நான் காலேஜில் படித்தக் காலம் அது, என்னமோ அஜித் மேல ஒரு கிரேஸ் இருந்தது. சுதந்திர தின ரிலீஸ் என்று நினைக்கினே, மாரிஸ் தியேட்டர் காம்பளக்ஸில் ரசிகர் ஷோ கிடையாது, ஆனால் கிளம்பி வந்து வம்பிழுக்கும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரௌடிகளை விட்டுவிட்டு எங்களைப் போட்டுக் காச்சியெடுத்தது நினைவில் வந்தது. இங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு ஃபேம் சினிமாஸில், இரண்டு நாட்களில் ரிலீஸ் ஆகப்போகும் கரண்ஜோஹரின், கபி அல்விடா நா கெஹனா(Kabhi Alvida Na Kehna - Dont say Good Bye) படத்திற்கு உட்காரும் ஸீட் முதற்கொண்டு இன்டர்நெட்டில் புக்செய்து, கிரெடிட்கார்டை ஸ்வைப்(இன்டர்நெட்டில்-ங்க) செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு போகும் அளவிற்கு முன்னேற்றம்.












முதல் நாள் முதல் ஷோ, அமிதான் பச்சன், ஷாரூக்கான், அபிஷேக்பச்சன், ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா என் ஓரளவு இல்லாமல் நன்றாகவே அறிமுகம் ஆன முகங்கள், அப்படித்தான் கரண் ஜோஹரும், குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம் போன்ற நான் பார்த்த மிகச்சில இந்திப்படங்களின் இயக்குநர் இவர்தான். இப்படியாக இயல்பாகவே ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துத்தான் போயிருந்தோம்.

இன்டர்நெட்டில் தியேட்டரில் கடைசி வரிசையில், நடுவாக புக் செய்ததாக நினைத்துப் போக, நாங்கள் தவறுதலாக இன்டர்நெட்டில் கொஞ்சம் நடுவரிசையில் ஆனால் திரையின் நடுவாக புக் செய்திருந்தது தெரிந்தது. ஆனால் கொடுமையிலும் ஒரு நன்மையாக, மொத்த வரிசையிலேயே நாங்கள் நால்வர் மட்டும் தான் ஆண்கள். இப்படியாக 35 ரூபாய் பெப்ஸி கப்புக்களுடன், பாப்கார்களுடனும் தொடங்கியது சினிமா.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குடும்பங்களை மையமாக கொண்டு கதை வளர்ந்து வந்தது, அதாவது, அமிதாப், அபிஷேக், ராணிமுகர்ஜி ஒரு குடும்பம், ஷாரூக், பீரித்தி ஜிந்தா, கிரண் கெர் இவர்கள் ஒரு குடும்பம்.

கதை இவ்வளவுதான், ஷாரூக் ஒரு கால்பந்தாட்ட வீரர் (ஒரே ஒரு ஷாட்டோடு நிறுத்திவிட்டார்கள் பரவாயில்லை), அவரது மனைவி ஒரு மாடல் மேகஸினுக்காக வேலை பார்ப்பவர், அவரது இருபத்திநாலு மணிநேர வேலை சம்மந்தமாக கணவனுடனான உறவு அவ்வளவு இனிமையாக இல்லை. ஆனால் இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு பெயர் அர்ஜூன்.

இதேபோல், அமிதாப் குடும்பம், மனைவியற்ற அமிதாப் ஒரு ஜாலிப்பேர்வழி, மகனுக்கு அவர் அப்பாவின் தொழில்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராணி முகர்ஜி, அபிஷேக்கின் மனைவி. எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் பார்ட்டி போன்ற லேட்நைட் விஷயங்களில் விருப்பமில்லாத கொஞ்சம் சராசரி இந்திய மனைவி. இவருக்கும் இவர் கணவருக்கும் அவ்வளவு கொஞ்சிக்கொள்ளும் படியான உறவில்லை.

இவர்களுக்கிடையில் சூழழும் கதையின் போக்கில் ஷாரூக்கிற்கும், ராணி முகர்ஜிக்கும் இடையில் ஒரு அஃபயர் வந்து விடுகிறது, இந்தக் காட்சிகள் மிகவும் அருமையானவை, படத்தில் முக்கியமான கதைத்திருப்பதிற்கு காரணமான விஷயங்கள் என்பதால் நுணுக்கமாக எடுத்திருப்பார் கரண். நிறைய விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் போல் இருக்கிறது இந்தப் படத்தில்.

ஷாரூக்கின் குறும்புகள், அமிதாப்பின் ஆளுமை, கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தாலும் ராணி, மற்றும் பிரீத்தி ஜிந்தாவின் அழகு என்று இதெல்லாம் மேலோட்டமானவை, கதை சொல்லும் பாணியும் நன்றாக இருந்தது. ஷாரூக்கிற்கும், ராணிக்கும் இடையில் வந்துவிட்ட ஆனால் சொல்லப்படாத அஃபயர் காலத்தில் அவர்கள் நாடகத்தனமாக மீண்டும் தன் கணவன் மனைவிகளுடன் சேர போடும் திட்டம் வேடிக்கையாவதும். ஆனால் உண்மையில் இந்தப் பிரிவை விரும்பாத அபிஷேக் மற்றும் பிரீத்தி போடும் திட்டம் சக்ஸஸ்புல்லாகவும் அமைவதைக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ். உண்மையில் நன்றாக யோசித்து கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

தமிழின் மீதிருந்த காதலால், எனக்கு அமிதாப்பைப் பற்றிய ஒரு தவறான முன்முடிவிருந்தது, ஆனால் அவருடைய ஸ்கிரீன் பிரஸன்ஸ் அருமையிலும் அருமை. அதுவும் ஷாரூக்கும் அமிதாப்பும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழியென குடும்பத்தினரை வம்பிழுக்கும் நேரத்தில் உண்மையில் அவரின் ஆளுமையை உணர்ந்தேன். “குட் ஜோக்” என்று அமிதாப் ஷாரூக் தன்னை ஏமாற்றுவதாய் நினைத்துக்கொண்டு சொல்லும் நேரத்தில் சொல்லும் பொழுது தலைவர் பின்னியிருக்கிறார். எப்பொழுதும் போல் ஷாரூக்கின் திறமை படம் முழுதும் வெளிப்படுகிறது, கையில் இருக்கும் விக்டரி பச்சையை நன்றாக கன்டின்யூ பண்ணியிருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு ஒரு தவறை நான் செய்தேன், அதாவது பெரும்பாலான நேரத்தில் படத்தின் முடிவை ஊகிக்கிறேன் பேர்வழி என்று யோசித்துக் கொண்டு தமிழ்ப்பட பாணியில் நானாய் ஒரு முடிவைக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். பரவாயில்லை ஓரளவிற்கு நான் ஒத்துக்கொள்ளும் முடிவைத்தான் இயக்குநர் தந்திருக்கிறார். ஆனால் தமிழ்ப்பட பாதிப்பால் எதிர்பார்த்தது வேறு. நல்ல முடிவிற்கு நன்றி இயக்குநரே. கட்டுடைத்தலைப்பற்றி பின்னால் வரப்போகும் பத்திக்கு முன் இதை எழுதி விடுகிறேன். கட்டுடைத்தலை மிக அழகாக அவர்கள் இருக்கும் வாழ்வுமுறையில் சொல்லியிருக்கிறார், ஆனால் நிறைய மசாலாத்தடவி. என்னுடன் வந்த மூன்று பேருமே பக்வாஸ் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல பாலச்சந்தர், ராம நாராயணன், ஷங்கர் கடேசியாக செல்வராகவன் எல்லோரும் சேர்ந்து இயக்கிய படம் போலிருந்தது. காமெடியும் அருமை. கட்டுடைத்தலை மசாலாத் தடவி சொல்லியிருக்கிறார்கள், இந்தி வசனங்கள் அதிகம், மீண்டும் ஒருமுறை நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மூன்றரை மணிநேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் டீக்கே, ஆசாத்பாய் பாணியில் சல்தா ஹை. இப்போ கொஞ்சம் பழைய கணக்கு...


----------------------------------


ஆரம்பக்காலத்தில் என் மாமாக்கள்(இரண்டுபேர்) சொல்வது தான் வேதவாக்காக இருந்த காலத்தில், அவர்களுடைய கருத்துக்ளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன் பெரும்பாலும், வரதட்சணை வாங்கக்கூடாது என்பது அதில் மிகமுக்கியமான ஒன்று, இதில் பெரியவருக்கு அப்படியே தான் நடந்தது திருமணம், தன் பெயருக்குப் பின்னால் டிகிரியைப் போட்டுக்கொள்ள விரும்பாத அவருடைய போக்கை அப்படியே கடைபிடிக்கும் கிளிக்குட்டியாக நான் இருந்தேன், ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தது. அம்மாவிடம்,

“கோடிஸ்வர வீட்டுப்பொண்ணை பாருங்கம்மா, வேலை செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு, (மொத்தமாக மூன்றே வருடங்கள்) கல்யாணம் பண்ணினமா, வீட்டோ மாப்பிள்ளையா செட்டில் ஆனமான்னு இருந்திடலாம்னு நினைக்கிறேன், மாமனார் எதாவது பிஸினஸ் வைச்சிருந்தாருன்னா அப்படியே பார்த்துக்கிட்டு... வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்”னு சொல்ல வைத்தது.

ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு வந்த பையன் சொல்வதைக் கேட்ட பழங்காலத்து அம்மா, என் தலைக்கு எலுமிச்சைப் பழத்தால் குளிப்பாட்டி விட்டால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைத்ததில் தவறில்லையென்று நினைக்கிறேன். பாவம் அம்மாவிற்கு கட்டுடைத்தலைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா, வேலை விஷயமாக டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றி ஒரு செஷன் எடுக்கிறேன்னு மூன்று மாசமா டிமிக்கு கொடுக்கும் எனக்கு, ஒன்றுமே தெரியாத கட்டுடைத்தல் பற்றி அம்மாவிற்கு சொல்லிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை.

சரி அம்மாவிற்கு கட்டுடைத்தலைப் பற்றித் தெரியாதா? நல்ல கேள்வி, கட்டுடைத்தல் என்ற வார்த்தையில் பின்னால் கோர்க்கப்டும் நிகழ்வுகளைப் பற்றி அந்த வார்த்தையால் தெரிந்திருக்க நிச்சயம் நியாயமில்லை, ஆனால் உண்மை விஷயம், நன்றாகத் தெரியும். மிக நன்றாக, சிதம்பரம், மதுரை என்று சொன்னால் புரிந்துவிடுமா என்று யோசித்தேன், பின்னர் ஏதோ நம்பிக்கை வந்தவன் போல், நம்ம சொந்தக்கார மாமாவைப் பற்றிச் சொன்னால் தெரிந்து கொண்டு போகிறார்கள் என்று நினைத்தேன். தூரத்துச் சொந்தத்தில் உள்ள மாமா ஒருத்தர் இப்படித்தான், அவருக்கு இங்கே அம்மாவும் நைனாவும் வேலை பார்க்கும் பிஎச்யிஎல் ஸ்கூலில் பெல் ஸ்கீமில் வேலை, ஆரம்பச் சம்பளம் 1500 பின்னர் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1800 ஆக உயர்ந்ததாகக் கேள்வி, ஆனால் அவர் கல்யாணம் செய்து கொண்ட அத்தைக்கு கவர்மெண்ட் உத்தியோகம் அதும் தஞ்சாவூரில் நம்ம மாமாவுக்கு வீடும் அங்கதான், காலையில் கிளம்பி திருச்சி வந்து வேலைசெய்துவிட்டு சாயங்காலம் திரும்பவும் பஸ் பிடித்து திரும்பப் போய்க்கொண்டிருந்தார்.

எங்கக் குடும்பத்தைப் பிடித்த சாபமோ என்னவோ தெரியலை ஏகப்பட்ட சொந்தக்காரங்க டீச்சராவேயிருந்துத் தொலைச்சிருறாங்க. இப்படி இவரு 1800க்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு ஆடி ஓடி தெருவில் நின்னப்பத்தான் அவரு சம்சாரம் அதான் எங்க அத்த, ஓய் நீரு இப்படி கிழிச்சது போதும், (இதில மாசச்சம்பளத்தில் பாதி திருச்சி – தஞ்சாவூர்) டிக்கெட் சார்ஜூக்கு சரியா இருந்தது.) அந்த 1800 ரூபாய்க்கு நான் டியூசன் எடுத்து உனக்குத் தந்திர்றேன், வேலைக்கும் போய்கிட்டு, சமையலும் செய்துக்கிட்டு, புள்ளையையும் பார்த்துக்க முடியலை, நீ ஒழுங்கு மரியாதையா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வீட்டோ வந்து சேருன்னு சொல்லிடுச்சு, மாமனாரும்(மாமாவோட) வீட்டுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடை போட்டுக்கொடுத்திட்டாரு, இவருக்கு இப்ப பொழுது போக்கு, பொழப்பெல்லாம் அவரோட பொண்ணை கண்ணும் கருத்துமா, (பொட்டிக்கடையுமா?) வளர்த்துக்கிட்டு வர்றாரு, மக்களே பொறாமைப் படாதீங்க எங்க இரண்டு பேருக்கும் வயது வித்தியாசம் பதினைந்திற்கு மேலிருக்கும்.

ஆனால் பாவம் அவருக்கு அவர் பண்ணினது கட்டுடைத்தல்னு தெரியாது, எங்கம்மாவிற்கும் தான். பின்ன ஒரு பேட்டி உண்டா, போட்டாகிராப் தான் உண்டா, அச்சு இதழ் வேண்டாம் சார், ஒரு இணைய இதழ், இல்லாட்டி போனா நட்சத்திர வாரத்தில் இலவச இணைப்பு, ஓஹோ அவரு அம்மேரிக்காவில் போய் இந்த ஊழியம் செய்யலையே, தமிழ்நாட்டில் இல்லடா செய்யறாரு அதுவேணும்னா ஒரு காரணமா இருக்கலாம் இல்லையா? ஆனா அம்மாவிற்குத்தான் தன் தூரத்துத் சொந்தக்காரத் தம்பி இப்படி பொண்டாட்டி தாசனா(அவங்களோட வார்த்தை) இருக்கிறதைப் பார்த்தா பிடிக்கிறதில்லை, அடிக்கடி தம்பி இந்த சி, சி++, ஜாவான்னு என்னென்னமா சொல்றியே அவனுக்கும் ஏதாவது இப்படிச் சொல்லித்தந்து, இந்தக் கண்ணாடிக்கிட்டேர்ந்து(அத்தை அந்தக் கால ஆசிரியர் மாதிரி கண்ணாடியெல்லாம் போட்டிருப்பாங்க) காப்பாத்தேம்பான்னு புலம்பிக்கிட்டேயிருப்பாங்க,

நானும் ஒருநாள் எக்குத்தப்பா, மாம்ஸ் நான் வேணும்னா ஏதாவது நல்ல சென்டரில் சேர்த்துவிடுறனே, ஈகாமர்ஸ் அது இதுன்னு இப்ப ஏகப்பட்டது இருக்கு என்ன சொல்றீங்கன்னு கேட்க, அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை நான் நல்லா சந்தோஷமாத்தான் இருக்கேன், செல்வியை நினைச்சாத்தான் பயமா இருக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறமோன்னு இருக்குன்னு சொல்ல நான் கிரேட் எஸ்கேப் ஆகி அம்மாவிடம், மம்மி, அந்தாளு சந்தோஷமாத்தான் மம்மி இருக்கிறாரு நீதான் தேவையில்லாம கவலைப்படுற, அதெல்லாம் சரி, நம்ம சொந்தத்தில் இந்த மாதிரி, சாப்ட்வேரில் லண்டன், பிரான்ஸ், ஜெர்மன்ல ஏதாவது பொண்ணுங்க இருந்தாங்கன்னா, சமைக்க துணிவைச்சிப் போட்டு, பிள்ளைகளை வளர்க்க நல்ல கணவனா ஒருத்தன் (நான்) இருக்கான்னு சொல்லி கேட்டுப்பாரேன்னு சொன்னேன், அவர் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் எலுமிச்சை செடியில் பத்து பதினைந்தாய் காய் பறிக்கச் செல்லும் நேரத்தில் ஒரேயடியாய் பழங்கால தமிழ்நாட்டிற்கு பைபை சொல்லிவிட்டு பின்நவீனத்துவ புனேவிற்கு ரயில் ஏறினேன்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

Popular Posts