Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

In சினிமா சினிமா விமர்சனம்

காந்தாரா - மாயமந்திரம்


இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி எழுதவில்லை. பொன்னியின் செல்வன் எங்கே போகப்போகிறது எழுதிவிடுவோம்.காந்தாரா பற்றி அந்தப் படம் தியேட்டரில் வெளியாகியிருந்த பொழுதே அறிந்திருந்தேன். நானும் என் மனைவியும் பின்னர் மோசமான தியேட்டர் பிரின்ட் வந்த பொழுது பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். தமிழ்நாட்டில் இல்லாமல் போன சோகங்களில் ஒன்று இது. நான் அதற்குப்பின் ரிஷப் ஷெட்டி பற்றி வந்த யூடியூப் வீடியோக்கள், பின்னர் வராஹ ரூபம் பாட்டு பிரச்சனை, என்று ஏகப்பட்ட விஷயங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். எனக்கு அப்படி ஒரு விநோத வழக்கம், ஏறக்குறைய அந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த பொழுது எனக்கு காந்தாரா பற்றித் தெரிந்திருந்த ஒரே விஷயம், அது கன்னடத்தில் பெறுவெற்றி பெற்றப் படம். அவ்வளவுதான். 


பசுமரத்தாணி என்று நான் பள்ளியில் படித்த பொழுது சொல்வார்கள், அது போல் மனதில் பதிந்து போய்விட்டது இந்தப் படம். Spell boundஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி, கன்னட ராஜாவிடம் பஞ்சூர்லியை அவர் எடுத்துச் செல்வதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, சாமியாடிக் கொண்டே 'ஓவ்' என்று பெருங்குரலெடுத்து கூவி காடே அதிர்ந்த பொழுது, திரைப்படத்துடன் ஒன்றிய மனது, க்ளைமேக்ஸில் சிவா அவனது தந்தையுடன் சேர்ந்து மறைந்த பொழுதுதான் வெளியில் வந்தது. இப்படி ஒரு மனவெளுச்சியை நான் எப்பொழுதும் அடைவதேயில்லை. மொபைல் ஃபோன்களுடனான வாழ்க்கை இப்படியான பொழுதுகளை உருவாக்குவதில்லை. 


ஆரம்பம் மற்றும் முடிவு மட்டுமல்ல, ஏனைய மற்ற பொழுதுகளில் திரைக்கலை அதன் மையப்பகுதியில் இருந்து விலகிவிடவில்லை. வனமும் அதன் வளப்பும் பச்சையும் படம் முழுவதும் விரவியிருந்தது, அங்கிருந்து நீண்டு அப்படியே மனதில் அப்பிக்கொண்டது. பூதகோல அலங்காரத்துடன் கொண்ட ரிஷப் செட்டியின் உருவம் மனதில் இருந்து விலக கனகாலம் பிடித்தது. எத்தனை காலம் அவர் அந்த ஆட்டத்தை கற்றுக் கொண்டார் என்று தெரியாது, அந்த முகம் அளித்த சிறுசிறு நயனம் கூட மனதில் அப்படியே நின்றது, கடைசியில் கிஷோரை அழைத்து அணைத்துக் கொள்ளும் பகுதியெல்லாம் வசனமே தேவையில்லை திரைப்படங்களுக்கு என்பது எத்தனை உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தியது. அந்த க்ளைமேக்ஸ் ஒரு உச்சம். எப்பொழுதும் சினிமாக்களில் நடைபெறாக, அடைய முடியாத, ஏக்கம் கொள்ளத்தக்கதான ஒரு உச்சம். மனம் நெகிழ்ந்துபோயிருந்தது. 

எனக்கு கடவுள் மீதோ, மயானக் கொள்ளை மீதோ, சாமியாடுவதன் மீதோ நம்பிக்கை கிடையாது. ஆனால் கலை மீது உண்டு, அது ஒரு கலைப்படைப்பு என்றும் அதன் உச்சத்தை ஒரு கலைஞன் அடைய முடியும் என்றும் நம்புகிறேன், ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் நடிப்பு மூலம் அந்த உச்சத்தை நாமும் அதே நிலையில் பார்க்கும், உணரும், அனுபவிக்கும் ஒரு அதிசயம் காந்தாரா மூலம் நடந்தேறி இருக்கிறது. கலகலவென ஆபரணங்கள் ஒலிக்க படம் முழுவதும் வனத்திற்குள் அலையும் பன்றி ஒரு நல்ல உருவகம், செட்டுக்குள் இருந்து சினிமா கேமராவை வெளியில் எடுத்துவந்தது பாரதிராஜா என்று சொல்வார்கள். இப்படி ஒரு ப்ரேமிங், அகலமாகன வனத்தை அப்படியே வெளியில் இருந்து காட்டியிருக்கிறார்கள். கேமரா ஒரு அறைக்குள் இருக்கும் மொத்தக் காட்சிகளை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். 

ஆட்டக்குறை பற்றியும் அதில்லாமல் போகவதைப்பற்றியும் ஜெமோ லங்காதகனத்தில் சொல்லியிருந்த வரிகள் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. 


ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...


அதுதான் இல்லையா? சிவாவும் அவனது தகப்பனும் அடைவது. பூரணம், முக்தி, முற்றுப்புள்ளி. அவர்கள் திரும்பிவருவது இல்லை. இதே போல் வெறிபிடித்துதான் இருந்தது லங்காதகனம் படித்த பொழுது, வெறும் எழுத்து என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இயற்றலை விடவும் நாடகத்துக்கான வலிமை என்பதில் இருக்கும் வித்தியாசம் தான் லங்காதகனத்திற்கும் காந்தாராவுக்குமான வேறுபாடு. அடித்துப் போட்டது போலாகிவிட்டது. அது ஒரு ட்ரிக்-ஆக இருக்கலாம், என்னால் கண்களில் கண்ணீர் வராமல் அறம் நாவலின் எந்தக் கதையையும் படிக்க முடியாது. அது ட்ரிக் என்கிறார்கள், நானும் உணர்கிறேன் படிக்கும் பொழுது என் மூளைக்கு புரிவதில்லை. அப்படியானது தான் இந்தப்படமும், மயக்கம் ஏற்படுத்தும் அந்த இசை, அசைவுகள், ஒளி, நிறம் ஒரு ட்ரிக் ஆக இருக்கலாம், ஆனால் எத்தனை படத்தில் இப்படி ஒரு முழுமை கிடைக்கிறது. 


காந்தாரா ஒரு மாயமந்திரம். ஒரு சொடக்கு போட்டதும் மயங்கிப் போவதைப் போல் அந்த முதல் 'ஓவ்'ல் அந்தப் படம் என்னை உள்ளிழுத்துக்கொண்டு விட்டது. 


அவ்வளவுதான். 


பின்னர் தாழ்வுமனப்பான்மையில் திமிரும் தமிழ்நாட்டு மந்தைக்கூட்டம் ஒன்று இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றதென்றே தெரியவில்லை என்று டிவிட்டரில் பன்றிக்கூட்டமாய் சேற்றில் புரண்டுகொண்டிருந்தது. அவர்களுக்காக,


ஒரு கலைப்படைப்பு என்பது எல்லாருக்குமானது அல்ல. நீங்கள் ஒரு அளவு வளர்ந்தால் தான் ஒரு கலைப்படைப்பின் முழுமையை/உச்சத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது அல்ல. கலை கலைக்கானதே, மக்களுக்கானது அல்ல.

ஒரு பொழுதும் மொசார்ட்டின், பீத்தோவானின், பாக்-இன் இசையை என்னால் முழுவதுமாக உணர்ந்துகொள்ளவே முடியாது. அதன் பிரச்சனை என்னைச் சார்ந்ததே தவிர, மொசார்ட் - பீத்தோவான் - பாக், சார்ந்தது அல்ல. உணர்ந்துகொள்வதற்கான முயற்சி, படிப்பு, பயிற்சி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

ஒரு புயலிலே ஒரு தோனியை, ஜே. ஜே. சில குறிப்பை, சொல் என்றொரு சொல்லை நீங்கள் உங்களின் முதல் புத்தகமாக படிக்கவே முடியாது. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். உங்களின் தகுதிக்கு புத்தகம் எழுதுவது எழுத்தாளனின் வேலை இல்லை, அவன் புத்தகத்தை படிக்கும் தகுதியை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்

தனித்தீவு - Science Fiction




ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.

“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”

உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,

“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.

“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு,

“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”

“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.

“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.

“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,

ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,

“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”

பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன்.


ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு பட்டு மாங்கா விழல. அதுனால என்ன. தன்னோட திறமைய நல்லா வெளிக்காட்டியிருக்காரு. கதையெல்லாம் தேவையேயில்லைன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்காங்க. சின்ன கல்லு பெத்த லாபம் ஃபார்முலான்னு நினைக்கிறேன். காசு வந்துடுமாயிருக்கும்.


ரெமோ ஜெனியுனா நல்ல காமடியிருக்குற படம் வெடிச்சிரிப்பு நாலைந்து முறை வந்ததுன்னா படம் முழுக்க எல்லாவிதமான காமடியும் வைச்சிருக்காங்க. யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ்னு காமடி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு. இந்தப் படம் பார்க்கும் பொழுது ரெக்க படத்து லட்சுமி மேனன் கேரக்டர் பெரிய லூசா இல்லை ரெமோ படத்து கீர்த்தி சுரேஷ் பெரிய லூசான்னு ஒரு யோசனை. ஆனா நிச்சயமா கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தான் பெரிய லூசு. அமெரிக்கால சம்மர்ல இந்த மாதிரி ரொமான்டிக் காமடியெல்லாம் தொடர்ச்சியா வரும். ஸ்டாக்கிங் பத்தியெல்லாம் டிவிட்டரில் பெரிய ரெயில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இப்படியே டிரெயின் விட்டிக்கிட்டிருந்தா என்ன படம் தான் எடுக்கிறது. புள்ளைகள நீங்க ஒழுங்கா வளர்த்தா சினிமா பார்த்து கெட்டுப் போக மாட்டாங்க. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன் ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கலாம், போதும் காமடி ஓரியன்டட் மூவிஸ்.


தேவி படத்தோட ட்ரைலர பார்த்தாலே கதை இன்னதுன்னு தெரியும். அதே கதை தான். ஆனால் அந்தக் கதையில் ஸ்கோப் நிறைய இருந்தது. காமடிக்கு ஆக்டிங்கிற்கு என்று. எதையும் உபயோகிக்கவேயில்லை இவர்கள். பிரபு தேவா கேட்கவேவேண்டாம் இயல்பாய் இருக்கிறார், தமன்னா நடித்திருக்கிறார் ஆனாலும் ஒரு டச் மிஸ்ஸிங், அது கேரக்டர் குறைபாடு. தமன்னாவுடையது அல்ல. மூணு லாங்குவேஜில் படமெடுக்குறேன்னு கொலை செய்திருக்கிறார்கள். இந்த இழவை இந்தியிலேயே எடுத்திருக்கலாம். இதை தமிழ்ப்படம்னு சொல்லித்தொலையாதீங்கடா! மணிரத்னம் எடுக்கும் இந்தி/தமிழ் படத்தை விட மோசமாயிருக்கு. ஒரே நல்ல விஷயம் பிரபு தேவா தான். பெண்ணியவாதிகளுக்குப் பிடித்தப் படமாயிருக்கலாம் தேவி, ரெக்க ரெமோவைக் கன்ஸிடர் செய்தால் தேவியில் தமன்னாவின் கேரக்டர் ரொம்பவே தேவலை. கொடுமைக்கென்று ரெக்க ரெமோவை விட தேவி படம் தான். அதன் காரணம் தேவியில்லை, ரெக்கையும் ரெமோவும் தான்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவனின் சொந்த ஜானர். எழுத்து மட்டும் தான் செல்வராகவனாம், கீதாஞ்சலி இயக்குநர் என்றாலும் செல்வராகனின் இயக்க பாதிப்பு அதிகம் உண்டு, அல்லது முழுவதுமே அப்படித்தான். 3 படம் போல் இதுவும், எனக்குப் பிடித்திருந்தது. அதன்(3 படத்தின்) கிளைக்கதை அத்தனை வலியதில்லை. இந்தப் படம் அவர் பெயரில் வராமல் இருந்தது கூட நல்லதற்குத்தான்.  தமிழில் பெண் இயக்குநர்கள் பற்றி எனக்கிருந்த மூடநம்பிக்கையை நகர்த்தியது 3 படம், இது கீதாஞ்சலி இயக்கியிருந்தால் நான் இன்னும் நகர்ந்துவிட்டேன் என்றே அர்த்தம்.


கொஞ்சம் காமடி கலந்து செய்யாமல் விட்டதற்கே நன்றி சொல்லவேண்டும், மூன்று மணிநேர படமில்லை என்று நினைக்கிறேன், இப்பொழுதைய முதல் ஹாஃப் நீளம் பிந்தைய ஹாஃப் சின்னது டெக்னிக் என்று நினைக்கிறேன், படம் சட்டென்று முடிந்தது போலிருந்தது.

ஹீரோயின் பேசும் வழமை எங்கள் குடும்பத்தில் உள்ளது போல் இருந்ததால் இன்னும் என்னை நெருக்கியிருக்கக்கூடும். வலிந்து திணித்தது போலிருந்தது அந்த ஹோட்டல் சீன், இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கதையின் திரியே அங்கே தானே பிரிகிறது! ஹீரோ ஹீரோயின் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள். பெண்களை வசப்படுத்தும் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காய் ஆரம்பித்த தொடக்கம், அவர்கள் போக்கிரி பாடல் பாடும் பொழுது ஒட்டவில்லை. கீதாஞ்சலி இப்பொழுதுகளில் கருத்த - தென்தமிழக நிற - ஆண்கள் பிகர் மடிக்கிறார்கள். நீங்கள் கதையை ஹீரோவின் நிறத்திலிருந்து நகர்த்தியிருக்கலாம். பரவாயில்லை.

ஹீரோயின் முன்னமே செல்வராகவன் படத்தில் பார்த்தது போலிருந்தாலும், அடித்துச் சொல்வேன், 7Gயில் நடிக்கவைத்திருக்கலாம். சோனியாவை விட இந்த வகை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சீன் யோசிக்க முடியாத காரணத்தால் சட்டென்று கதாநாயகி கோபப்பட ஒரு காட்சி போதும் என்று நினைத்திருக்கலாம். பாத்ரூம் கிளின்னஸ் காட்சியின் இயல்பிற்காய்ப் பிடித்திருந்தாலும், ஒட்டவில்லை. இன்னும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் கதாநாயகி கதாநாயகனை வெறுத்த பின் வரும் காட்சிகள் இயல்பாய் இருப்பதாய்ப் பட்டது.

அட இப்படியெல்லாமா விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது வந்த ரேப் சீன் இதற்காகத்தான் விட்டார்கள் என்று உணர வைத்திருந்தது. ரொம்ப காலம் கழித்து தமிழ்ச்சினிமாவில் ஒரு ரேப் சீன், கதையை நகர்த்தியிருக்கிறது. துணிந்து இறங்கிய செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் பாராட்டுக்கள். ரேப் சீனுக்காக இல்லை, துணிச்சலுக்காக மட்டும், ரேப்கள் இல்லாமல் போகும் ஒரு காலத்தில் ரேப் சீன் வைக்காமல் இருக்கலாம். ”பெண்டாட்டியை ரேப்” என்கிற புள்ளியும் அதைத்தொடர்ந்த கோபமும் பயங்கர இயல்பு. ரேப் பண்ணினதும் அடுத்த நாள் குளித்து தலை துவட்டி வெட்கத்துடன் காப்பி கொடுக்கும் வழமை தான் தமிழ் சினிமா.

விவாகரத்துக்குச் செல்வதல்ல. Bravado.

மெச்சூரிட்டி காட்ட கண்ணாடி அணிவதை காண்பிப்பதை நிறுத்துங்கள், கதாநாயகி அந்தக் கண்ணாடியில் அழகாய் தெரிவது வேறு விஷயம். பொதுவாய் இவர்கள் மறந்துவிடும், கதாநாயகியின் அம்மா உருவ வேற்றுமை, பாராட்ட வேண்டியது. டிவிட்டரில் படித்தேன் கதாநாயகியின் அம்மா கதாநாயகியை விட அழகு என்பதை நான் மறுக்கிறேன், அவங்க அழகு தான் ஆனா கதாநாயகியை விட எல்லாம் இல்லை. இங்க வழிகிற ஸ்மைலி.

இதே ஜானரில் நிற்கச்சொல்லவில்லை, ஆனால் செல்வராகவன் அவ்வப்பொழுது இந்த ஜானரில் கதை செய்யணும். வேணும்னா கீதாஞ்சலிக்கோ இல்லை ஐஸ்வர்யாவுக்கோ தரலாம்.

அடல்ஸ் ஒன்லி படம் என்பதால் சொல்லவேண்டிய தேவையில்லை, குழந்தை குட்டியோட எல்லாம் பாக்கமுடியாது. :)

கல்யாணமாய்டுச்சு சொல்லக்கூடாது, ஆனாலும், ஹீரோயின் கொள்ளை அழகு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தபாங் 2 - கொண்டாட்டம்

ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.

ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.


ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.

சோனாக்‌ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்‌ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்‌ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)

கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.

மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.

மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Jack Reacher - தொடக்கம்


தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.

இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.

17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.



கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)

என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts