In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 3

அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தான். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. கனிமொழி தூரத்தில் இருந்து அவனை கோபத்துடன் பார்த்தாள். ஆனால் கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டான்.

கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். மனம் பதற்றப்படத் தொடங்கியது.

"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" அவனே ஆரம்பித்தேன்.

"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"

"எதைச் சொல்ற?..."

"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"

"இதென்னாடி வம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"

"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே." அவள் உண்மையில் கோபத்துடன் கேட்டாள்.

"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"

"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி என்கிட்ட சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.

"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"

"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.

அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சே என்று நினைத்துக்கொண்டே மோகன் கண்களை மூடினான்.

அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை அவனுக்கு. சாப்பிடும் நேரத்தில் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவளும் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே யாரோ கூப்பிடுவது போல் சப்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"அத்தே..."

தன் அம்மாவையா கூப்பிடுறாள் பாவி என்று நினைத்து, உடனே வெளியில் வரலாம் என்று நினைத்தால் அவன் அணிந்திருந்த உடுப்பு பத்தலை, அதனால் மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அவன் அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.

"யாரும்மா நீ?"

"அத்தே, இது மோகன் வீடு தானே, எனக்கு அவரைப் பார்க்கணும்..."

"அவன் வீடுதான் நீயாரும்மா?"

"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று சட்டென்று அவங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.

அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து அவனிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" என்று சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் போய்விட்டார்கள்.

நேராய் அவளிடம் சென்று, "ஏய், இங்க எதுக்கு வந்த?" அவன் கேட்க

"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு" வீட்டுச் சுவற்றில் சாக்பீஸ் கொண்டு வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து தான் கேட்டாள்.

"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?" ஏறக்குறைய கத்தினான்.

"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."

அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா" அவளிடம் நீட்டினார்கள்.

"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"

"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"

அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"

"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது அவளிடம்.

"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது" நழுவத் தயாரானான்.

"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..." புலம்பினாள்.

"சரி, என்னாத்தான் பண்ணனும்"

"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்." என்னவோ ப்ளான் போட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தான்.

"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?" அம்மா திரும்ப வருவதற்குள் அவளை அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தான்.

"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்" பிடிவாதம் செய்தாள்.

இன்றைக்கு உதை வாங்கித்தராம போக மாட்டாள் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகியது அவனுக்கு.

அம்மா வந்தவுடன் முதல் வேலையா அவனிடம் வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" என்று ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்க.

"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினான். அவன் வீடு கொடுத்திருந்த சுதந்திரத்தை அவன் உபயோகித்ததில்லை. மோகன் அப்பா இருந்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும் கூட ஆனால் அவர் அந்தச் சமயம் வீட்டில் இல்லை.

(தொடரும்...)

Related Articles

2 comments:

  1. இந்தமாதிரி கதை எழுதவாவது காலேஜ் போயிருக்கோனும்ணே :-))

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க......பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Popular Posts