Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

In BHEL கதை சிறுகதை திருச்சி

காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை



"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்னு நினைப்பு, படிக்கிறது பன்னிரெண்டாவது. அப்பா BHEL எம்ப்ளாய், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரே ஒரு தங்கச்சி பேரு ரமா பத்தாவது படிக்கிறாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

இது நம்ம ஹீரொயின், பேர் ரேஷ்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பார்க்கச் சகிக்காது, இப்ப என்னடான்னா 'B' செக்டர் பசங்கள்ள பாதி பேரு இவ பின்னாடி தான் சுத்தராங்ய, மீதி பாதி நம்ம ஹீரோவின் தங்கச்சி ரமா பின்னாடி. படிப்பில பூஜ்யம், வருஷாவருஷம் அவங்கப்பா சிபாரிசில மேலத்தூக்கிப் போட்டே பத்தாவது வந்துட்டா. சரி இப்ப மேற்சொன்ன சிச்சுவேஷனுக்கு.

பேக்ரவுண்ட் என்னான்னா, இப்படிப்பட்ட நம்ம ஹீரோயினி ரேஷ்மா பத்தாவது வந்துட்டாலும், பாஸாக அப்பா சிபாரிசு உதவாதுன்னு டியூஷன் படிக்கப்போக. 'B' செக்டரின் ரவுடி வேறயாரு நம்ம ஹீரோ, ஒரு கிரிக்கெட் மேட்சில் கிடைத்த கேப்பில், ஸ்டம்ப்பை உருவி, ரேஷ்மாவை ரூட்டுக் கட்டிக் கொண்டிருந்த சங்கரையும், பிரசன்னாவையும் அடித்து ரத்தம் பார்த்துவிட்டு, ரேஷ்மாவை பின் தொடரும் முழு உரிமையையும் நிலைநாட்டிய பிறகுவந்த ஒரு வெள்ளிக்கிழமை தான் மேற்சொன்ன சம்பவம் நடந்தது.

அதாவது 'B' செக்டர் ஹீரோயினி 'C' செக்டர் டியூஷன் மாஸ்டரிடம் பாடம் படிக்க, நம்ம ஹீரோவுக்கு காவல்காரன் பொறுப்பு தானா வந்திருச்சு, 'C' செக்டர் மன்மதன்களிடமிருந்து ரதி தேவதையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். சிகப்பு கலர் BSA SLR லேடீஸ் ஸ்பெஷல், பச்சை கலர் யூனிபாரம், வெள்ளை ரிப்பன் தேவதை 'B'யையும் 'C'யையும் ரெட்டைச் சடை பட்டாம்பூச்சியாய்க் கடக்க பாவம் நம்ம ஹீரோ; அவனிடம் இருந்ததோ இன்னொரு BSA SLR, வெய்ட் அ மினிட் அது பொண்ணுங்க வண்டியாச்சே. ஆமாம் உண்மைதான் பொண்ணுங்க வண்டிதான் அது, நம்ம ஹீரோவோட அப்பா சார், பரிட்சையில் பாஸானாத்தான் 'அட்லஸ்' வண்டின்னு சொல்லிட்டார். பொம்பளை புள்ள வண்டியேதுன்னு கேக்குறீங்களா? நான் ரமா பரிட்சையில் பெயிலாகும்னு சொல்லையே?

இதனால் தனக்கு ஆமாம் சாமி போடும் இரண்டு பச்சை பிள்ளைகளில் ஒருநாள் மாற்றி ஒரு அட்லஸ் இரவல். பரிகாரமாய் ஒருத்தனுக்கு கிரிக்கெட் மேட்சில் ஓப்பனிங்கும் இன்னொருத்தனுக்கு பத்து ஓவர் மேட்சில் கிடைக்கிற ஒரே ஒரு மூணு ஓவர் போடும் வாய்ப்பும் கொடுங்க வேண்டும். காதலுக்குத்தான் கண்ணில்லையே கிரிக்கெட்டும் மறைக்கலை. இதனால் நம்ம ஹீரோவோட கேப்டன்ஷிப்பை மாத்தணும்னு ஏற்கனவே ரத்த அடிப்பட்ட, பிரசன்னாவும் சங்கரும் எட்டப்பனாகியிருந்தார்கள் 'B' செக்டர் கிரிக்கெட் டீமிற்கு.


ஒருவாரமாய் நன்றாக சிச்சுவேஷனை அனலைஸ் பண்ணி வந்த நம்ம ஹீரோ வெள்ளிக்கிழமை, முன்னாடியே ப்ளான் செய்திருந்தது போல டியூஷன் மாஸ்டர் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் நாற்பத்தம்பது ஐம்பது சைக்கிள்களில் சரியாய் நம்ம ஹீரோயின் சைக்கிள் முன்னால் நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு நிமிஷத்தில் அவளுடைய சைக்கிளின் வால்டியூபை பிடிங்கிவிட்டான். பிறகென்ன தன்னோட ப்ளான் படி காக்கா'பீ' ரோட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திவிட்டு தேவதைக்காகக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல், ரேஷ்மா வண்டியைத் தள்ளிக்கொண்டே காக்கா'பீ' ரோட்டில் நுழைந்ததும், வேறெங்கிருந்தோ வருவதைப் போல் வந்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தினான்.
இப்ப இன்னொரு பேக்ரவுண்ட், இந்த காக்கா'பீ' ரோடு என்பது இந்த மாதிரி காதல் வயப்பட்டவர்களின் சொர்க்கபுரி. ஒரு பக்கம் அவள் படிக்கும் RSK ஸ்கூல், இன்னொரு பக்கம் அவன் YWCA ஸ்கூல். இரண்டு ஸ்கூலுக்குமான பொதுவான ரோடு. ரோட்டோரத்தில் அடர்த்தியான மரங்களுடன் சாதாரணமாக பத்தடிக்கு ஒரு ஸ்ட்ரீட் லைட் இருக்கும் BHELல் இந்த ரோட்டில் மட்டும் இருபத்தைந்தடிக்கு ஒரு லைட் போஸ்ட் வீதத்தில் நான்கு. இயற்கை வெளிச்சம் சுத்தமாயிருக்காத ஒரு ரோடு.

அந்த மாதிரியான மரங்களில் காக்காய்களின் கூடுகள், எவ்வளவு வேகமாக வண்டியில் போனாலும் மாலை வேளைகளில் அவைகள் போடும் எச்சத்திலிருந்து தப்பவேமுடியாது. காதலர்களின் சொர்க்கபுரியாக காக்கா'பீ' ரோடு பேமஸானதற்கு இதுவும் ஒரு காரணம். நைட் நேரத்தில் குளிக்க விரும்பாதவர்கள் அந்தப் பக்கம் வருவதில்லை. அதுமட்டுமில்லாமல் மரங்களில் இருந்து காக்கைகள் போடும் எச்சம் 10% மக்கள் மீது விழுந்தாலும் 90% ரோட்டில் விழுவதால் வரும் ஒருவித நாற்றம் காரணமாயும் அந்த ரோட்டை உபயோகிப்பது குறைவு. ஆனால் காக்கா'பீ' ரோட்டை உபயோக்கிக்காமல் போக வேண்டுமானால், ரொம்பவும் சுற்றிக் கொண்டு போகவேண்டும். பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக மற்ற ரோட்டை உபயோகிக்க மாட்டாள் என்றும்; அந்த ரோட்டில் தான் தள்ளிக் கொண்டு வருவாள் என ஹீரோ நினைத்தது அப்படியே நடந்தது.

"என்ன ரேஷ்மா பஞ்சராயிடுச்சா?"

ஹீரோவின் தங்கச்சியும் ஹீரோயினும் ஒரே கிளாசில் படித்ததால் கொஞ்சம் பழக்கம் உண்டு, அதுமட்டுமில்லாமல் ரேஷ்மாவிற்கு கோக்குமாக்காக அவன் அவள் பின்னால் சுற்றுவது தெரியும்.

"ஆமாம். நீ எங்க இங்க?"

"இல்லை சும்மா கிரிக்கெட் விளையாட வந்தேன்..." சற்று நிறுத்தியவன், "...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா எப்படி சொல்லறதுன்னே தெரியலை!"

மனசென்னமோ ரேஷ்மாவிடமும் அவன் சொல்லப்போகும் விஷயத்திலும் இருந்தாலும் காக்கா அசிங்கம் செய்திடுமோ என்ற பயம் இருந்தது. 'ஏன் அந்த ரோட்டில் போனே?' என்ற கேள்வி மிகச் சுலபமாய் வீட்டில் கேட்கப்படலாம்.

"அப்பச் சொல்லாத!" சொல்லிவிட்டு வேகமாய் நடையைக் கட்டினாள் நம்ம ஹீரோயின்.

சுதாரித்தவனாய், தானும் வேகமாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவனாய் முன்னேறியவன். அவள் வண்டிக்கெதிராய் இவன் வண்டியை நிறுத்தி, சைக்கிள் ஹேண்டில்பாரில் இருந்த அவள் கையைத் தொட்டு,

"I Love You!!!" சொல்ல,

அந்தக் இருட்டு ரோட்டிலும் கூட ரேஷ்மாவின் கன்னமெல்லாம் சிவந்து அழத் தயாரானது தெரிந்தது.

"செருப்பால அடிவாங்கப்போற. வழிய விடுடா" அவனுடைய வண்டியைத் தள்ளிவிட்டு வேகமாக நடந்தாள்.

பின்னாலிருந்து,

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

அவன் கத்த, அவளும் கத்தினாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

மேகத்திலிருந்து ததாஸ்து தேவதைகள் "ததாஸ்து" சொல்லியிருக்க வேண்டும். தொப்பையை தள்ளிக்கொண்டு பத்தடி தூரத்தில் போலீஸ் மாமா இருவருக்கும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார்.


ஆனால் அந்த இருட்டில் வந்த போலீஸ்காரருக்கு ஹீரோவின் முகத்தில் படர்ந்த பயரேகைகள் தெரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் காக்கா'பீ' ரோட்டில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆணைப் பார்த்தால் BHELல் எல்லா போலீஸ்காரர்களுக்கும் வரும் டவுட் அவருக்கும் வந்தது.

"என்னாம்மா வண்டியைத் தள்ளிக்கிட்டு வர்ற இந்தப் பய ஏதாவது பிரச்சனை பண்றானா?"

நம்ம ஹீரோ அதான் சுந்தரப் பாண்டியன் இதயத்திலிருந்து வந்த இதயத்துடிப்பொலியை 'பீட்'டா வைத்து எமினெம் ராப் பாடலொன்றே கூட பாடிவிடலாம், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இரண்டு காதுகளையும் தீட்டிக் கொண்டிருப்பது அவனுடைய சிவக்கும் காதுகளைப் பார்த்தாலே நன்றாகத் தெரிந்தது.

"இல்லை மாமா! இது எனக்கு தெரிந்த பையன் தான், இப்படி கிராஸ் பண்ணிப் போய்க்கிட்டிருந்தான். நான் தான் இந்த ரோட்டை கிராஸ் பண்ண பயந்துக்கிட்டு என்கூட கூட்டிக்கிட்டு போறேன்."

ஹீரோவுக்கு முதலில் ஹீரோயின் இவ்வளவு பேசுவாள் என்றே தெரியாது. அவள் அப்படிப் பேசியதும், அவன் வயிற்றுக்குள் பட்டாப்பூச்சி பறக்கத்தொடங்கியது அவன் கண்களின் கிறக்கத்திலேயே தெரிந்தது. ஜொள்ளு வழிய அவன் ஹீரோயினை கண்களாலேயே சாப்பிட்டு விடுபவனைப்போல் பார்த்துகொண்டிருந்தான், பெருமிதம் வழிந்தோடியது அவன் கண்களில். அவள் தன்னைப் போட்டுக்கொடுக்கவில்லை அந்தப் போலீஸ்காரரிடம் என்னதான் தன்னிடம் அதட்டி, திட்டிப் பேசினாலும் அவள் தன்னைக் காதலிக்கிறாள் அதனால் தான் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தனக்குத்தானே கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனையிலும் போலீஸ்காரர் அவனைக் கவனிப்பதைக் கூட இவன் உணரவில்லை, அவருக்கு நம்ம ஹீரோவிடம் ஏதோ தப்பிருப்பதைப் போல் பட்டிருக்க வேண்டும்,

"வேணும்னா நான் உன் வீடுவரைக்கும் வரட்டுமா பாப்பா?" கேட்க நம்ம ஹீரோயினி, "இல்ல மாமா ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க போய்ட்டுவாங்க."

அவருக்கும் நம்ம ஹீரோ மேல சுத்தமா நம்பிக்கையில்லாவிட்டாலு, நம்ம ஹீரோயின் ரொம்பவும் தெளிவா பேசினதால மனது எதோ தப்பு நடக்குதுன்னு சொன்னாலும் தேத்திக்கிட்டு நடையைக் கட்டியதும்தான் தாமதம். ஹீரோயினி,

"இங்கப்பாருடா, நான் மட்டும் அந்தப் போலீஸ்கிட்ட சொல்லியிருந்தேன்னா, உங்க குடும்பத்துக்கே ரொம்ப அவமானமாப் போயிருக்கும். இத நான் உனக்காக செஞ்சேன்னு நினைக்காத, அங்கிள் ஆண்ட்டிக்காகத் தான் அப்படி சொன்னேன்.

மரியாதையா சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போயிரு அவ்வளவுதான் சொல்வேன்." கத்தியது.

போய்க் கொண்டிருக்கும் போலீஸ் காதில் விழுந்திடுமோ என்று பயந்தவனைப் போல் வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தேவிட்டான் நம்ம ஹீரோ. கதை இதோட முடிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே, கதையை நேரில் பார்த்தவன்ங்கிற முறையில் இந்தக் கதையை இங்கயே நிறுத்திறலாம்னு தோன்றினாலும். உண்மையை மறைப்பதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளதால் தொடர்கிறேன்.

அடுத்த நாள் நம்ம ஹீரோவோட அப்பா எழுப்ப எழுந்தவனுக்கு தன்னைச் சுற்றிலும் நின்று எதோ எக்ஸிபிஷனைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் பார்த்து ஒன்றும் புரியாதது நியாயம் தான் இல்லையா? அவன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ரேஷ்மாவின் அப்பா வந்து நேற்று காக்கா'பீ' ரோட்டில் நடந்ததையெல்லாம் சொல்லி கண்டித்து வைக்குமாறு சொல்லியதும். அவங்கப்பா தர்மசங்கடமா கையைக் பிசைந்து கொண்டு நின்றதையும்.

"யேய் இங்கப் பாரு, இன்னிக்கு சாயந்திரம் உன்னை தபோவனத்தில் சேர்த்துவிடப் போறேன். உன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாய்டே போகுது. இனிமேல் பொறுக்க முடியாது. ஒரு வருஷமாவது நீ அங்கப் படிச்சாத்தான் திருந்துவ." சொல்லிவிட்டு ஹீரோவின் அப்பா நகர, அம்மா தங்கை கண்களில் கண்ணீர். ஆனால் யாருடைய கண்ணீரும் அவருடைய முடிவை மாற்றமுடியாது என்று தெரிந்துதான் இருந்திருக்க வேண்டும் ஹீரோவிற்கு.

உண்மையில் நம்ம ஹீரோவிற்கு அந்தச் சமயத்தில் தபோவனம் போய் படிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, அவனால் ரேஷ்மா அவன் விரும்பாமல் போனதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் திருப்பராய்த்துரை தபோவனத்தில் போய்ப் படிப்பதைப் பற்றி எந்த அபிப்பிராயபேதமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கே சேர்ந்த முதல் வாரத்திலேயே தான் அனுபவித்துவந்த சவுகரியங்கள், தான் செய்துவந்த மூடத்தனங்கள் எல்லாம் பிரகாசமாப் புரிந்துவிட்டது என்றாலும்...

நான் பார்த்தவன் என்பதால் நிச்சயமாய்ச் சொல்லலாம்,

அப்பா, அம்மா, தங்கச்சியைப் பார்க்காமல், படு ஸ்டிரிக்ட்டான ஒரு இடத்தில் இருப்பது அவனுக்கு ஆறுமாதங்கள் வரை பெரும் பிரச்சனையாகத்தான் இருந்தது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை அம்மா அப்பா வரலாம் என்றாலும் அவனை பார்க்காமல் இருந்தால் தான் திருந்துவான் என்று ஹீரோவின் அப்பா அவனைப் பார்க்கவே வராமல் இருக்க. ஐந்துமணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பஜனைகள் முடித்துவிட்டு, வீட்டுப்பாடம் படித்து, மணிக்கு சாப்பிடப்போய், மாதத்திற்கு ஒரு முறை சாப்பாடு பரிமாறி என ஒழுக்கமே வாழ்க்கையாய் இருக்கும் ஒரு இடம் அவனுக்கு முதலில் பிரச்சனையாய் இருந்தது ஆச்சர்யமே கிடையாது. ஆனால் தன்னையெல்லாம் விடவும் மோசமானவர்களும், பணக்காரர்களும் அந்த இடத்தில் அப்படி படித்துவந்ததையும் பார்த்தவனுக்கு, கிடைத்த நல்ல சாமியார் ஆசிரியர்கள் நிறைய நல்ல விஷயங்கள் நல்ல விதமாய்ச் சொல்லித் தந்ததையும் வைத்து அவன் அடுத்த ஆறுமாதத்தில் நல்லவனாய் மாறியதைத்தான் நம்பவேமுடியவில்லை.

சொல்லப்போனால் ஹீரோவின் அப்பாவாலும் தான், எப்படியிருந்தாலும் அந்த வருஷம் +2 வில் கோட்டடிச்சிருவான் என பயந்துகொண்டிந்தவர். அவன் மீது ரேஷ்மாவின் அப்பா கம்ப்ளெய்ன்ட் செய்ததும் இதுதான் சாக்கு, ஒருவருஷம் தபோவனத்தில் போட்டால் ஒழுக்கம்னா என்னான்னாவது கற்றுக்கொண்டுவருவான் என மனதைத் தேற்றிக் கொண்டு போட்டவருக்கு. பிள்ளை பன்னிரெண்டாவதில் அந்த பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாவது இடமும், அவங்கப்பா நினைக்கவே நினைக்காத மார்க்கும் வாங்கிவிட இன்னொரு பிரச்சனை தோன்றியது.

சாமியார் கால்களிலெல்லாம் விழுந்து பவ்யமாய் தன்னுடன் வீட்டிற்குக் கிளம்பிய பையனை பார்த்தால் பாதிச் சாமியார் போலத்தான் இருந்தது. நெற்றி முழுக்க வைக்கப் பட்டிருந்த திருநீரும் புருவங்களுக்கிடையில் சாந்தமாய் இடப்பட்டிருந்த சந்தன குங்குமமும். அழுக்கிலாமல் துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டிருந்த காக்கி பேண்ட் வெள்ளைச் சட்டையில் அவன் முகம் தேஜஸ் கிளம்பும் ஒன்றாய் ஹீரோவின் தந்தைக்குப் பட்டது சரிதான் என்பதைப் போலிருந்தது அவனுடைய சைகைகள். வீட்டிற்கு வந்த பிறகும் ஐந்து மணிக்கு எழுவது யாரையும் தொந்தரவு செய்யாமல் குளித்துமுடித்து பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு நேரங்கழித்து வருவது. அவசியம் இருந்தால் மட்டும் பேசுவது என ஹீரோ வீட்டில் அவர்கள் எதிர்பார்த்ததற்கெல்லாம் நல்லவனாய் இருந்தது ஒரு வித பீதியையே ஏற்படுத்தியது. அதைவிட அவன் அடுத்துச் சொன்னது,

அதே சாமியார் மேனேஜ்மெண்ட் நடத்தும் கல்லூரியில் படிக்கப்போவதாய்ச் சொன்னதும் ஹீரோவினுடைய அப்பாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது வாஸ்தவம்தானே.

"ஒன்னு முழுக்க ஒழுங்கீனமாயிரு இல்லைன்னா இப்படியிரு. சாதாரணமா ஏண்டா இருக்க மாட்டேங்கிற, நீ மாறிட்ட உன்னைய அன்னைக்கு தபோவனத்துக்கு அனுப்பியிருக்க கூடாது தான். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுக்கோ. அதை விட்டுட்டு இனிமேலும் அங்கத்தான் படிப்பேன்னா என்ன. சரியில்லை, நீ பேசாமயிரு உனக்கு நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு பீஇ கம்ப்யூட்டர் சைன்ஸ் ஸீட் நான் வாங்கித்தர்றேன்.

அதை விட்டுட்டு பிஎஸ்ஸி படிப்பேன், அதுவும் சாமியார்க் காலேஜில் தான் படிப்பேன்னு நிக்காத அவ்வளவுதான் சொல்லிட்டேன்."

நம்ம ஹீரோ அம்மா, அப்பா வெளியில் போயிருந்த ஒரு நேரத்தில் தன்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு நகர்ந்ததை மட்டுமல்ல, அதன் பிறகு அவன் அப்பா ஊரே தேடியதையும் பின்னர் என்னமோ நினைத்துக் கொண்டவராய் தபோவனத்திற்கு வர அங்கே இருந்துகொண்டு அவர் என்ன சொல்லியும் வரமாட்டேன் என்று திடமாய்ச் சொன்னதையும் பார்த்தவன் என்ற முறையில் அன்று அவன் மீது எனக்கு கொஞ்சம் கோபம் கூட வந்தது.

ஹீரோவின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வேண்டும், அப்படியே பிடிவாதத்தில் தன்னை உரித்துக்கொண்டு பிறந்தான் என்பது மனைவியையும் பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போனவர் சரியாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த மூன்றாண்டுகள் 18 முறை அவனை பார்க்க வந்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவன் அவர்களை விட்டு வெளியே போய்க் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார் என அவருடனே பயணித்த அந்த பஸ் பயணங்கள் உணர்ந்திருக்கிறேன். 36 மாதங்கள் மெழுகுவர்த்தியாய்க் கரைய ஹீரோ வாழ்க்கையென்ற பயணத்திற்கு பிரம்மாதமாய்த் தயாராகியிருந்தான்.

இங்கேயும் முடித்துவிட வேண்டும் எனதான் நினைக்கிறேன், மீண்டும் உண்மையை மறைப்பதில்லை என்பதால் தொடர்கிறேன்.

அவனுடைய வாத்தியார்கள் சாமியார்களாகயிருந்த போதிலும், அவனை இன்னொரு சாமியாராக ஆக்கிவிடாமல் இருந்ததற்காக ஹீரோவின் அப்பா உடைத்த தேங்காய்கள் சிதறியதை பார்த்து சிரித்த எனக்குக்கூட ஹீரோவின் மனநிலை புரியவில்லை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால் அவன் ஆசிரியர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக மாற்றிவிட்டதாகவும், நல்ல மனிதர்கள் ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய சமூகத்தைப் புறக்கணித்து சாமியாராவது சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் என்று சொல்லி அனுப்பிவைத்த நாள் மழை பெய்யவில்லை.

அவனாய் திரும்பவும் வீட்டிற்கு வந்தவனைப் பார்த்து BHEL முழுக்கவே வியந்தது என்றால் அது மிகையல்ல, வேலை வாங்கித் தருவதாய்ச் சொன்ன தந்தையை தடுத்து நிறுத்தி தானாய் சுயமாய் வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் முதலில் கிடைக்காவிட்டால் உங்களிடம் சொல்கிறேன் என்றவனை இன்று நீங்கள் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் நான்கு வருடத்திற்கு முன்பு இவன் தான் ஒரு பெண்ணிடம் அவள் சைக்கிளை நிறுத்து தன்னுடைய காதலைச் சொன்னவன் என்றால். திரும்ப ஹீரோ ஹீரோயினைப் பார்க்கவேயில்லையா என்றால் பார்த்தார்கள் ஏறக்குறைய அதே காக்கா'பீ' ரோட்டில்.

காலாற நடந்துவரக் கிளம்பியவனின் கால்கள் தானாக காக்கா'பீ' ரோட்டில் தடம்பதிக்க, நான்காண்டு நினைவுகள் கரையும் பனிமலையால் உருகி ஓடத்தொடங்கியது. அதன் பின் நடந்ததை என்னவென்று சொல்வது, அவனருகில் சைக்கிள் வந்து 'சலீரென்று' பிரேக் போட்டு நிற்க நினைவு திரும்பியவனாய் நிமிர்ந்து பார்த்தவனுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை தான். வேறயார் நம்ம ஹீரோயினி ரேஷ்மா தான்.

"ஹேய் நீங்க சுந்தர் தானே. என்னைய ஞாபகம் இருக்கா? இதே ரோட்டில் வச்சு என்கிட்ட I Love You சொன்னீங்களே! ஏதும் ஞாபகம் இருக்கா?"

அவள் பேச அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனி உதடுகளில் அசைவில்லை.

"அன்னைக்கு எங்கப்பாக் கிட்ட சொன்னப்ப, உங்கப்பா இவ்வளவு சீரியஸாய் எல்லாம் எடுத்துப்பார்னு நினைக்கலை. ஏதோ உங்களை திட்டுவிடுவார், நீங்க என் பின்னாடி சுத்த மாட்டீங்கன்னு தான் நினைச்சேன். பச், என்னென்னமோ நடந்திருச்சு. உங்கம்மாவையும், உங்கத் தங்கச்சியையும் பார்த்தாத்தான் பாவமாயிருக்கும். என்னாலத்தானே இவங்க பையனையும், அண்ணனையும் விட்டுட்டு இருக்காங்கன்னு.

ம்ம்ம் என்ன நினைச்சு என்ன ப்ரயோஜனம். நடந்தத மாத்த முடியுமா என்ன?

சரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க ஒன்னுமே சொல்லலை. என்ன நான் பேசுறது காதில் கேக்குதா?"

நான்காண்டுகளுக்கு முன் இந்தக் குரல் கேட்டால் பாலாறும் தேனாறும் பாய்ந்த காதுகளில் அந்தச் சமயத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லையென்று அவன் கண்கள் சொன்னது, கண்கள் சொல்வதை மட்டும் நம்பும் நான் முழுதாய் நம்பினேன்.

"ம்ம்ம் என்ன கேட்டீங்க..."

"என்னது கேட்டீங்களா? சரியாப் போச்சு. ஹலோ நான் உங்களை விட சின்னப் பொண்ணு. சரிதான் ரமா சொல்லிக்கிட்டிருந்தா எங்க அண்ணன் பாதி சாமியாரா ஆய்ட்டான்னு. அவ சொன்னப்ப நான் நம்பலை இப்ப நம்பித்தான் ஆகணும் போலிருக்கு. " நிறுத்தியவள்

"வாங்களேன் நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இப்படி மீண்டும் ஆரம்பித்த இன்னொரு பக்க காதல், கொஞ்சம் கொஞ்சமாய் சாமியாராய்ப் போய்க்கொண்டிருந்தவனை சாதாரணமானவனாய் மாற்றத் தொடங்கியது. ரேஷ்மாவின் வீட்டிலும் தங்களால் தான் ஹீரோவின் குடும்பம் ஹீரோவை பிரிந்திருந்ததாக ஒரு மனநிலை நிலவியதால், ரேஷ்மாவிற்கு பிடித்திருந்தால் சரியென்று விட்டுவிட்டார்கள்.

இது இப்படியே போய் இரண்டாவது வருடத்தில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டவரை நான் அவர்களுடனேயே இருந்தேன் ஆனால் அவர்களுக்கு கலியாணம் ஆன பின்னால் இருவரின் வாழ்க்கையில் எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று அவர்களின் காதலுடன், காதலித்த நாட்களின் நினைவுகளுடன், காக்கா'பீ' ரோட்டுடன் மட்டும் இப்பொழுது நிற்கிறேன். இன்னொரு முறை வேறொரு ஹீரோ, ஹீரோயினியிடம்.

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கத்துடன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கதை காதல்

நீராக நீளும் காதல்


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

திருக்குறள் - காமத்துப்பால், நாணுத்துறவுரைத்தல், 1135.

“நேத்து அவங்க நம்ம இரண்டு பேரையும் பாத்துட்டாங்க” 

ஸஸ்மிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசல் கதவின் அழைப்பு மணி தன் ரீங்காரத்தைத் தொடங்கியது. இளமாறனின் சோம்பலின் தீவிரம் தெரிந்தவள் என்பதால் சற்றும் யோசிக்காமல் போர்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். இரவு படுக்கையில் விழுந்தபின் இப்பொழுதுதான் எழுந்திருக்கிறாள் என்பதால் நெட்டிமுறித்தவாறு அவள் சுற்றும் முற்றும் பார்த்ததில் இருந்து நேற்றிரவு கழற்றி வீசிய இரவு உடையைத்தான் அவள் தேடுகிறாள் என்று தெரிந்தது. அவர்களுக்கிடையில் உடையின் அவசியம் பெரும்பாலும் இருந்ததில்லை. கட்டிலின் கீழிருந்த ஆடையை கால் விரல்களின் சாமர்த்தியத்தால் பின்பக்கமாக எடுத்து ஒருமுறை உதறிவிட்டு, தலையின் மேல்வழியாக உள்நுழைத்துக் கொண்டவள், அதன் காரணமாக உள்ளே சென்றுவிட்ட தன்னுடைய கூந்தலை, புறங்கையை கழுத்திற்கும் கூந்தலுக்கும் இடையில் விட்டு இழுத்து வெளியில் விட்டுக் கொண்டு, அவனைத் திரும்பிப் பார்த்தாள்; ஒன்றும் பிரச்சனையில்லையே என்பதைப் போல். அவன் பதில் எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக்காட்ட, அதற்குள் இன்னொருமுறை தன்னுடைய வசீகரமான இசையை வழங்கத்தொடங்கிய அழைப்பு மணியின் சப்தம் தேய்ந்து அடங்குவதற்குள்.

“ம்ம்ம், மீ யெத் ஆஹே.” 

சொல்லிக்கொண்டே கதவைத்திறந்தாள். இளமாறனுக்கு இதுவும் ஒரு பிரச்சனை மராத்தி மட்டுமே தெரிந்த அந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் பேசுவதற்கு அவனுடைய உடைந்த இந்தி கூட உதவாது.

“நமஸ்தே ஸாப்.” இது அவனுக்கு, அவன் முகத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பை அலட்சியப்படுத்தியவனாய்க் காலியாய்க் கிடந்த பியர் பாட்டில்களையும் சிகரெட் ஆஸ்ரேவையும் எடுத்துக்கொண்டு, ஐந்து நிமிடத்தில் அவ்வளவாக குப்பைகள் இல்லாத அந்த அறையை சுத்தம் செய்வதான முயற்சியில் கீழே விழுந்துகிடந்த சில பட்ஸ்களைப் பொறுக்கிக்கொண்டு அவனைப் பார்த்து தலையைச் சொறிந்தான். அவன் ஸஸ்மிதாவைப் பார்க்க, அவள் நகர்ந்து வந்து தலைமாட்டில் இருந்து பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய்த்தாளை சிப்பந்தியிடம் நீட்டினாள், அவன் சந்தோஷமாய் இன்னுமொறு தரம் “நமஸ்தே ஸாப்” சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

ஸஸ்மிதா திறந்திருந்த வாசற்கதவை அடித்துச் சாத்திவிட்டு, கட்டில் போடப்பட்டிருந்த அந்த அறையின் மையப் பகுதியில் இருந்து விலகி, வலதுபக்கமாய் ஜன்னலின் பக்கம் நகர்ந்தாள். மெதுவாக கர்ட்டனை விலக்கியவள் ஜன்னல்கதவையும் திறக்க, அதுவரை செயற்கையான காற்றைச் சுவாசித்தவளின் முகத்தில் சிலீரென்று பட்ட, நேற்றிரவு மழையினால் இன்றும் ஈரப்பதத்துடன் இருந்த காற்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை மாறிமாறி வழங்கியது. வெளியில் மழை பெய்கிறதா என பார்க்கும் பாவத்தில் அவள் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு பக்கமாய்த் திரும்பி என்னைப் பார்த்தவள்,

“தாஸ் மழை விட்டிருச்சி.”

ஜன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சூரியனின் கதிரொளிகள், உள்ளாடை எதுவும் அணிந்திராத அவளின் உடலில் நேராய்ப் பட்டு இன்னொரு பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் கட்டிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் இயற்கையாய் அவள் முகத்தின் வலது பக்கத்தில் விழுந்து கதிரொளியும் இந்தப் பக்கம் அறையில் விளக்குகள் எரியாததால் முகத்தின் இன்னொரு பக்கத்தில் படர்ந்த இருளும். அவளை அப்படியே நிற்கவைத்து அந்த இடத்திலேயே ஒரு ஓவியம் வரையவேண்டும் என்ற மனநிலையை உண்டாக்கியது. அதை உடைத்தே தீருவேன் என்பதைப் போல், கர்ட்டனை மட்டும் மீண்டும் இழுத்துவிட்டுடவள், கண்மூடி கண் திறப்பதற்குள் ஆடைகளற்றவளாய் மாறிவிட்டிருந்தாள். அவனுக்கென்னமோ இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் உடலைவிடவும் முன்பு பார்த்ததுதான் இச்சையை அதிகப்படுத்தியது.

ஒரு வார்த்தை அவளிடம் சொன்னால் போதும், இப்படி உன்னை அந்த இடத்தில் வைத்து அந்த பொஸிஷனில் வரைய யோசித்தான் என்று, மிகவும் சந்தோஷப்படுவாள். பாரம்பரிய குஜராத்தி நடனத்தை ஆடிக்காட்டினாலும் காட்டுவாள். ஒருமுறை அவள் தாண்டியா ஆடப் பார்த்திருக்கிறேன் அத்தனை லாவகமாக இடுப்பை வளைத்து அவள் ஆடும் அந்த ஆட்டத்தின் அழகில் மெய்மறந்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான விஷயம் அந்த நடனத்தின் பொழுது உடுத்தும் ஆடை தான். அவன் கேட்காமலேயே அது இல்லாமல் அவள் ஆடுவாள்தான் என்றாலும், அப்படி செய்வது அந்த நடனத்தைப் பாழ்படுத்துவதற்குச் சமானம் என்பதால் ஒரு முறை அவளை அந்தச் செய்கையிலிருந்து தடுத்திருக்கிறான். இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் விதவிதமான முகமாற்றங்களைக் காட்டி மனதை கொள்ளை கொள்ளும் உடல் அசைவுகளைச் செய்து, இப்படி நிற்கவா அப்படி நிற்கவா என்று கேட்டிருப்பாள். இதுவெல்லாம் இல்லையென்றாலும் நிச்சயமாய்,

“உங்களுக்கு என்னை வரையணும்னு தோணிச்சா? ஆச்சர்யம் தான், ப்ளிஸ் பளிஸ் வரைஞ்சுக் கொடுங்களேன்.” ஒன்றிரண்டு முறை கெஞ்சியிருப்பாள், அவள் முகத்தில் படரும் குழந்தைத் தனத்திற்காகவாவது அதைச் செய்துவிடலாம் என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும். அப்படி இரண்டு முறை கேட்டும் அவன் மறுத்துவிடும் நிலையில் அவள் அடையும் மனவேதனையை அனுபவித்தவன் என்பதால் என் மனதில் அந்த சில விநாடிகள் அனுபவித்த சந்தோஷத்தை அப்படியே மூடிமறைத்துவிட்டான்.

நகர்ந்து வந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள், பக்கத்தில் இருந்த ஸிட்னி ஷெல்டனின் “மாஸ்டர் ஆப் த கேம்” நாவலை எடுத்து படிக்கத் தொடங்கினாள். இரவு அவள் தூங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான், என்பதால் தூக்கம் வருவதற்காகத்தான் அந்த நாவலை எடுத்தாள் என்பது புரிந்தது. கடைசி ஆண்டு கல்லூரித் தேர்வுகள் நெருங்கி வரும் வேலையில் அவளை வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தான். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வருகிறேன் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

அவனுக்கு ஸஸ்மிதாவை மூன்று ஆண்டுகளாகத் தெரியும். முதன் முறை கோவாவில் புத்தாண்டு அன்று பார்த்த நினைவு அவன் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. அயோக்கியத்தனத்திற்கு பெயர் பெற்ற அந்த ஹோட்டலில் மழுங்கமழுங்க விழித்தவாறு இவள் நின்று கொண்டிருக்க. அவனும் தனக்கேற்றமாதிரியான பார்ட்டி கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவளையும் ஒரு கண்ணால் அளந்து கொண்டுதான் இருந்தான். அவளின் சாந்தமான முகத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல், டைட் டிஷர்டும், அதைவிட இறுக்கமான ஜீன்ஸூம் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உடனே நினைத்தான். பதினெட்டு வயசுதான் இருக்கும் என்று. புத்தாண்டுக்கு முந்தய இரவு பதினொரு மணி ஆகிவிட்டிருந்த வேளையில், கையில் சிகரெட்டுடன் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அவளுக்கு அருகில் இவளைப் போலவே நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அவளுக்கு கிடைத்துவிட்ட ஜோடியுடன் கிளம்பும் முன்னர், இவளிடம் ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, கேட்டுவிட்டு அவன்பக்கம் திரும்பிப் பார்த்த அவள் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தது. எல்லோரும் டான்ஸ் ப்ளோர் சென்றுவிட அங்கிருந்து ஹோட்டல் ஊழியர்கள் தவிர்த்து அவனும் ஒன்றிரண்டு வெளிநாட்டுக்காரர்களும்தான் மீதி. அந்த அறையின் பரவியிருந்த மங்கிய இருளும், அதிர்வை ஏற்படுத்தும் இசையும் அவனுக்கு எந்த அளவிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது என பின்நாட்களில் அவள் சொல்லக் கேட்டிருக்கிறான். அரைமணிநேரத்தில் மற்ற எல்லோரும் கிளம்பிவிட மெதுவாக அவன் அருகில் வந்தவள். உடைந்த ஆங்கிலத்தில்,

“பிஃப்டீன் தௌசண்ட் சார்.” என்று தயங்கித்தயங்கி அவள் சொல்ல, முதலில் அவன் பயந்தது, இது இவளுக்கு முதல் முறையாய் இருந்துவிடப் போகிறது என்பதை நினைத்துத்தான். பின்னிரவில் இப்பொழுதைப் போல், போர்வையையே ஆடையாயிருந்த மற்றுமொரு தருணத்தில், சிறிது நேரத்திற்கு முன்னர் அவள் உடலில் இருந்த பதட்டம் அவன் நினைத்ததை உறுதிப்படுத்த, கேள்விக் கேட்ட அவனுக்கு பதிலாய் அவள் சொன்னது ஒரு சோகக்கதை. அவளுடைய தூரத்து சொந்தமான அக்காள் சொல்லியிருந்தது போல வன்புணர்ச்சி செய்து அவள் குதத்தை கிழித்துவிடாமல் ஆராதனை செய்து கொண்டிருந்த அவனிடம் அன்று அவள் சொல்லியிருந்திராவிட்டால் தான் ஆச்சர்யமே.

அவளுடைய தாயை குஜராத்திலிருந்து ஒருவன் காதலித்துக் கலியாணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி, மும்பைக்கு அழைத்து வந்திருக்கிறான். முதல் ஒருவருடம் பிரச்சனை எதுவும் செய்யாமலிருந்தவன். ஸஸ்மிதா பிறந்த இரண்டாவது மாதத்திலேயே அவள் அம்மாவை விபச்சாரம் செய்யுமாறு வற்புறுத்த அவள் அம்மா முடியவேமுடியாது எனச் சொல்லியும் தொடர்ந்து படுத்தியவனை ஒருநாள் இரவில் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு, அவள் அம்மா புனேவிற்கு வந்துவிட்டதாகவும். பிச்சையெடுத்து, பத்துப்பாத்திரம் தேய்த்து, ஆரம்பத்தில் ஸஸ்மிதாவை வளர்த்ததாகவும் பின்னர் கையில் சேர்ந்த பணத்தில் ரோட்டில் தள்ளுவண்டி ஒன்றில் சாமான்களை வாங்கி விற்றும் வளர்த்திருக்கிறாள்.

படிக்காமல் இருந்ததால் தான் தன்னை ஒருவன் ஏமாற்றிவிட்டதால் ஸஸ்மிதாவின் படிப்பு எக்காரணம் கொண்டும் பாதிப்படையக் கூடாதென்பதில் அவளுடைய அம்மா கருத்தாக இருந்ததால் அவளும் கஷ்டப்பட்டு படித்து அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிவந்திருக்கிறாள். ஒருவாறு அவனுக்கு இது தெரிந்திருந்தது, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது புனேவின் மிகப் பிரபலமான ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர்ஸ் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் ஸஸ்மிதா. பின்னர் ஒருவாறு சுமூகமாச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மீண்டும் புயலாய் ஸஸ்மிதாவின் தகப்பன் நுழைந்தததாகவும். கத்திக் குத்தில் இறந்துபோகாத அவன் பின்னர் தன் தாயைத் தேடிவந்து அவள் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை மிரட்டிக் கொண்டுபோய் விட்டதாகவும் பின்னர் அவன் தொல்லை இரண்டாண்களுக்குத் தொடர்ந்து என்றும் ஒரு ரயில்விபத்தில் அவன் இறந்து போனதையும் கூறினாள். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்த பொழுதும் மேல்படிப்பு படிக்க பணமில்லாத நிலையில் அவளுடைய தூரத்துச் சொந்தக்காரியான ஒரு அக்கா, தான் அவளை படிக்க வைப்பதாகச் சொல்லி புனே சிட்டிக்கு அழைத்து வந்ததாகவும் முதல் வருடப்பணம் முழுவதையும் அவள் செலவிட்டதையும் பின்னர் தான் அந்த அக்கா பணம் சம்பாதிப்பதற்கான வழியாக இதை அறிமுகம் செய்துவைத்தாள் என்று கூற, அவன் அவளிடம் இதுதான் உன் முதல் அனுபவமா என்று கேட்டேன்.

அதற்கு அவள், இல்லை கல்லூரி முதல் ஆண்டு படித்த பொழுது இடையில் வேலைசெய்யலாம் என்று ஒரு சேட்டிடம் வேலை கேட்க, சேட் வீட்டிற்கு இவளை வரவழைத்து முடித்துவிட்டதாகவும். பின்னர் அவன் கொடுத்த பணக்கத்தையை அவன் முகத்திலேயே வீசிவிட்டு வந்ததையும் சொன்னாள். அப்ப இரண்டாவது அனுபவமா என்றதற்கு அதையும் மறுத்தவளாய், அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனை அவள் காதலித்ததாகவும், ஒருநாள் அவன் வீட்டு கார்ஷெட்டில் உறவு கொண்டதைச் சொன்னவள், எதையோ நினைத்து சிரிக்கத் தொடங்கினாள், நான் என்ன விஷயம் என்று கேட்டதற்கு அதை ஒருமுறை என்று கணக்கு சொல்லமுடியாதென்றும் அந்தப்பையன் இன்னும் அந்த அளவிற்கு விஷயம் தெரியாதவன் என்றும் சொல்லிச் சிரித்தாள், இளமாறன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறான் சில நாட்கள் நான் தீபிகாவுடன் ஐநாக்ஸ் தியேட்டருக்கு வரும் பொழுது ஸஸ்மிதாவுடன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறேன். அவனும் ஒரு குஜராத்தி, அதற்குப் பிறகு அவன் அவளை மிகவும் நெக்குருகி காதலிப்பதாகவும் தன்னை மற்றொருமுறைத் தொடக்கூட முயற்சிசெய்யவில்லையென்றும் கூறினாள். தீபிகா பற்றிய நினைவு வந்ததால் மீண்டும் நிலைக்கு வந்தவனாய்.

“ஸஸ் தீபியையா பார்த்ததா சொன்ன?” அவள் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றில் கைவைத்தவனாய்க் கேட்க, அதற்குரிய பதிலைச் சொல்லாமல்,

“நீங்க அவங்களைக் காதலிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நீ நினைக்கிறியா யாரையும் என்னால் காதலிக்க முடியும்னு.”

“ஆரம்பத்தில் எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்ததுதான், பெண்களின் மீதான உணர்வுகள் செத்துப் போய்விட்ட காதலின்றி பெண்ணின் உடலை அணுகும் ஒருவனாய்த்தான் உங்களைப் பார்த்தேன்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களைப் பற்றிய என் எல்லாவிதமான எண்ணங்களையும் மாற்றிக்கொண்டேன்.” சொல்லிவிட்டு அவளும் அவன் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்தாள்.

“நீங்க தீபிகாவைக் காதலிக்கிறீங்க அப்படின்னா அவங்க ரொம்பக் கொடுத்து வைச்சவங்க.”

என்னவோ அன்று இந்த வார்த்தைக்களுக்காகத்தான் காத்துக் கிடந்தவனைப் போல சட்டென்று எழுந்து வெற்றுடம்புடன் குளிக்கக் கிளம்ப, பின்னாலேயே ஸஸ்மிதாவும் வர யத்தனித்தாள். மறுத்தவனாய்,

“ஸஸ் நான் தமிழ்நாடு போறேன்.” அவள் முகத்தைப் பார்த்துச் சொல்ல,

“என்னாச்சு?” முன்பெல்லாம் இதைப் போன்ற தகவல்களை நான் சொல்வதும் இல்லை அவள் இப்பொழுது கேட்டது போல் கேள்விகளைக் கேட்பதுமில்லை, மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் எங்களை எங்கள் உறவை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.

“அம்மா சூஸைட் அட்டம்ட் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பா உடனே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தார்.” அவன் சொல்ல அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அவளுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்ததைப் பற்றி நினைத்திருப்பாள்.

குளித்துவிட்டு வந்தவன்,

“ஸஸ் வர்றதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆனாலும் ஆகும். வேணுங்கிற பணத்தை எடுத்துக்க. காரை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோ.” சொல்லிவிட்டு புனே பெங்களூர் விமானத்தைப் பிடிக்கப் பறந்தான்.

விமானப்பயணம் அவனுக்கு அவ்வளவாக பிடித்ததில்லை, ஆனாலும் புனேவிலிருந்து விமானத்தில் பெங்களூர்க்குப் பறந்து வந்ததற்கான காரணங்கள் இரண்டு, ஒன்று ஏற்கனவே தகவல் சொல்லிய பிறகும் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு ஹோட்டலில் காத்திருக்கும் ஸஸ்மிதாவைப் பார்க்கச் சென்றதால் நேர்ந்த நேரத்தட்டுப்பாடு, மற்றது முந்தையதை விட அவனுக்கு விருப்பமானது, பெங்களூரில் இருந்து அவன் ஊருக்கு செய்யப் போகும் பஸ் பயணம். அந்தப் பயணத்தை நினைத்தவாரே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்க, இடையில் வந்து சாக்லேட் கொடுத்த விமானப் பணிப்பெண்ணை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

விமானநிலையத்தில் இருந்து கெம்பகௌடா பஸ்நிலையத்திற்கு வந்தவன், அங்கே நின்றிருந்த பெங்களூர் டு ஓசூர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டான். ஆரம்பக்காலங்களில் இந்தப் பயணத்தைப் பற்றி அவன் அம்மாவிடம் விவரிக்க, என்னவோ பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தது நினைவில் வந்தது. அம்மாவிற்கு புரிவதில்லை, கேபிஎன் போன்ற பேருந்துகளில் பயணம் செய்வதில் அவனுக்கு இருக்கும் ஒவ்வாமை. அத்துணுண்டு பேருந்தில் தனித்தனித் துருவங்களாய் மக்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சொந்தக்காரனிடம் கூட பேசுவதற்குக் காசு கேட்டும் ஆட்களுடன் பயணம் செய்வதில் அவனுக்கு சுத்தமாய் ஆர்வம் இல்லை.

இதே தற்சமயம் உட்கார்ந்திருக்கும் பேருந்தில் நடக்கும் களேபரங்களால், அப்படியென்பதற்குள் ஓசூர் வந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு ஏற்படும். எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான பேச்சுவழக்கங்கள். வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருப்பான். அவனைப் பார்த்தால் அந்த மனிதர்களுக்கெல்லாம் ஏன் தான் என்னிடம் பேசவேண்டும் என்று தோன்றுமோ தெரியவில்லை. எல்லாப் பயணங்களிலுமே ஏதாவது ஒரு கதை எனக்குச் சொல்லப்படுகிறது. சின்னவயதில் அவன் பாச்சம்மா - அப்பாவின் அம்மா - சொன்ன கதைகளைப் போல், மகாபாரதக் கதைகளை அவன் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டான், மனப்பாடமாக திருஷ்ட்ராஷ்டிரனின் நூறு பையன் பெயர்களைச் அநாயாசமாகச் சொல்லுவார் அவர். கதை கேட்கும் ஆர்வம் அப்படி ஏற்பட்டதுதான்.

ஒருமுறை பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வயதான மனிதரின் உடலில் வரும் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்ப, அதைப் புரிந்து கொண்டவர் போல் தன் சரித்திரத்தையே சொல்லி முடித்திருந்தார் அந்த பழங்கால சினிமா இயக்குநர், பிரபலமான சினிமா இயக்குநரிடம் உதவியாளராக இருந்தது, பின்னர் சினிமாவில் இயங்கும் அரசியல்களையெல்லாம் தாண்டித்தான் எடுத்த முதல் படம் நூறுநாட்கள் ஓட, அடுத்தடுத்து ஐந்து படங்களுக்கான பூஜைகளைப் போட்டது, தன் படத்தில் நடிப்பதற்காக தன் வீட்டில் வந்து போட்டிப்போட்டுக்கொண்டு படுத்துறங்கிய நடிகைகள் என. புதுக்கோட்டை வந்து சேர்வதற்குள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பத்தாண்டுகளை அவர் அவனுக்குச் சொல்லியிருந்தார்.

----------------------------------------------------------------------------

நாமக்கல் டீக்கடையில் என் கையைப் பிடித்தவாறு தெரியுமா தம்பி இந்தக் கையை இதேபோல் பிடித்துக் கெஞ்சி நடித்த பல நடிகை, நடிகர்கள் இன்று தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். நான் போய் நின்றால் நிச்சயம் செய்வார்கள்தான், ஈகோ தம்பி ஈகோ, அந்தக் காலத்திலேயே ராஜா மாதிரி ப்ளெசர் காரில் போவேன் நான். இப்ப அவங்க காலில் போய் விழவிருப்பமில்லை. என்று சொல்லிக்கொண்டே போன அந்த நபரின் முகம் மறந்துபோய்விட்டாலும், அந்த டீக்கடையை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் நாற்றத்தால் நான் முகம்திருப்பியதுதான் நினைவில் வரும்.

ஈகோவைப் பற்றி ஆரம்பக்காலத்தில் சினிமாக்கள் பார்த்தும் கதைகளைப் படித்தும் காதலர்களுக்கு இடையில் பெரும்பாலும் வருவது என்பதாக உணர்ந்திருந்தேன். ஆனால் அது அப்படியில்லை என்பதை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஸஸ்மிதா நினைத்திருக்கலாம் அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறேன் என்று. ஆனால் அது அப்படியில்லை என்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. தற்கொலை, கொலை என்பதெல்லாம் சாதாரணமாகப் போய்விட்ட வீட்டில் பிறந்தவன் நான். இது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம். இது ஒரு பக்கப்போர். என் அப்பாவின் பக்கத்தில் இருந்து இதற்கு எதிர்வினை நிகழ்ந்ததேயில்லை, ஒரே ஒரு முறையைத் தவிர்த்து.

எங்கப்பாவிற்கு எங்கம்மா இரண்டாவது மனைவி, முதல் மனைவியை அப்பா சுட்டுவிட்டார் என்றும் இல்லை பெரியம்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் வதந்திகள் எங்கள் ஊரில் உண்டு. ஒட்டுமொத்தமாக பண்ணையங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டிய பொழுது பண்ணையார்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பிடுங்கிவிட்டதாக அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை பாச்சம்மா தான் எங்கள் வீட்டைச் சுற்றியும் குழிபறித்து பாலிதீன் உறைபோட்டு நிறைய துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் முதலில் இதெல்லாம் மகாபாரதக் கதைபோல பாட்டியின் கற்பனைக் கதைகளெனத்தான் நினைத்திருந்தேன். பின்னர் எனக்கு வயது வந்துவிட்ட பிறகு, அந்தத் துப்பாக்கிகள் துருப்பிடித்துவிடாமல் இருக்க ஆறுமாதத்திற்கு ஒருமுறை எண்ணெய்ப் போட்டு சுத்தமாய்த் துடைத்து பின்னர் திரும்பவும் மண்ணுக்குள் மறைத்து வைக்கும் பழக்கத்தை அப்பா கற்றுக் கொடுத்த பொழுதுதான் உண்மையென புரிந்துகொண்டேன்.

நானும் அப்பாவுமாய் மொத்த துப்பாக்கிகளையும் எண்ணெய் போட்டு துடைத்து வைத்த ஒரு இரவில், ஒரு குறிப்பிட்ட துப்பாக்கியைப் பார்த்து அப்பா அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. அதுதான் அப்பா என் பெரியம்மாவை சுட்டுக்கொன்றது என பெரியம்மாவின் பூஜைக்கான ஒரு நாளில் அம்மா சொன்னாள். அம்மா பெரியம்மாவின் சொந்த சகோதரிதானாம். இது பாட்டி சொல்லித்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும் பாட்டி பல இரவுகளில் மகாபாரதக் கதைகளோடு எங்கள் குடும்பக் கதைகளையும் சொல்வதுண்டு. அது உண்மையா கற்பனையா உண்மை கலந்த கற்பனையா என்பது வாழ்வில் நான் பட்டு தெரிந்து கொண்டபிறகுதான் புரிந்திருக்கிறது.

பெரியம்மாவிற்கு அப்பாவுடன் கலியாணம் ஆவதற்கு முன்பே, வேறு யாருடனோ தொடுப்பு இருந்ததாகவும். சாதாரணமாக பண்ணைக்கு மருமகளாக வரும் எவருக்கும் பலவிதமான சோதனைகளை அவர்களுக்கு தெரியாமல் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி செய்யப்பட்ட முதல் சோதனையிலேயே இது தெரிந்து பாட்டி அதிகமாய்ச் சப்தமிட, அப்பாதான் அடக்கி அப்படியிருக்காது என்று சொன்னதாகவும். பின்னர் உண்மை தெரிந்துபோய் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து பெரியம்மாவைச் சுட்டுவிட்டதாகவும் சொல்லி அழும் பாட்டியை நான் சமாதானப்படுத்த முயன்றதில்லை, இப்பொழுதெல்லாம் பெரியம்மாவை அப்பா சுட்டதற்கு பாட்டியும் ஒரு காரணமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடிவதில்லை. இதற்கெல்லாம் கூட கூட அம்மாதான் காரணம்.

பின்னர் வயிற்றுவலி காரணமாய் பெரியம்மா சுட்டுக்கொண்டு செத்ததாய்ச் சொல்லி விஷயத்தை மூடிவிட்டார்கள் வீட்டில். இந்தக் கதையைத்தான் பெரியம்மாவைப் பெற்றவர்கள் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பண்ணைக்கு மருமகளாய் அனுப்பியவள் இப்படி சோரம் போய்விட்டாளே என்ற வருத்தம். இதுதான் சாக்கென்று பன்னிரெண்டு வயதில் அம்மாவை அப்பாவிற்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிவைக்க, முதல் குழந்தையாய் நான் பிறந்தவரை அம்மாவிற்கு, தன் அக்கா இறந்தது கணவனால் தான் என்று தெரியாதாம்.

அப்பாவிற்கும் கொழுப்புத்தான், அம்மா வந்த ராசிதான் தலைவர் தொகுதியில் தன்னை எம்எல்ஏ சீட்டுக்கு நிறுத்தினார் என்றும், அம்மாவின் ராசியால் தான் எம்எல்ஏ ஆனோம் என்றும் இன்றுவரை முழுமனதாக நம்பிவருகிறார். இப்படித்தான் அவர் சிட்டிங் எம்எல்ஏ இருந்த ஒரு நாளில் அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு உடம்பில் கத்திரி வைச்சி நான் பிறந்த சந்தோஷத்தில் முதன் முறையாய் குடித்திருந்த போதையில் அம்மாவிடம் உண்மையை உளறிவிட்டிருந்தார். அங்கே ஆரம்பித்தது சனியன் எங்கள் வீட்டிற்கு.

என் குழந்தைப் பருவத்திலிருந்தே அம்மாவும் அப்பாவும் பேசிச் சிரித்து நான் பார்த்ததில்லை, இருந்தும் இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது, எனக்குப்பிறகு சரியாய் இரண்டாண்டு, இரண்டாண்டு இடைவெளியில் தங்கையும் தம்பியும் பிறந்தது. பாட்டி இருந்தவரை வீட்டின் உரிமை, கட்டுப்பாடு முழுவதும் பாட்டியிடம் தான் இருந்தது. நான் நினைத்திருக்கிறேன், கிழவி தான் தன் கணவனிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் இன்னொருத்தியை அவருக்கு கட்டிவைத்துவிடும் சாமர்த்தியம் படைத்தது என்பதால் அம்மா தான் விருப்பமில்லாமல் தம்பி தங்கைகளை பெற்றிருக்க வேண்டும் என்று. ஆனால் பாட்டி நினைத்திருந்தால் கூட என்னைப் பொறுத்தவரை அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை தான். இதை ஒருமுறை அம்மா வாயாலேயே கேட்டிருக்கிறேன்.

தன் தந்தையிடம் அம்மா, அப்பாவைப் பற்றி குறைக்கூறிக் கொண்டிருந்த ஒரு நாள், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன். நான் அம்மாவிடம் நேராய்ச் சென்று,

“அம்மா அப்பாவிற்கு கூத்தியா இருக்கிறதா நீ நினைக்கிறியா” என்று கேட்டிருக்கிறேன். சர்வசாதாரணமாய் கூத்தியா என்ற வார்த்தையை அம்மாவிடம் பிரயோகித்திருந்தாலும், அம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்துவிட்டு,

“தம்பி, இருக்கவே முடியாதுன்னு எனக்குத் தெரியும், தங்கூட படுத்தெந்திரிக்கிற பொம்பளைக்கு இன்னொருத்தன் கூட தொடுப்பு இருந்துச்சுங்கிறதாலத்தான் உங்க பெரியம்மாவை சுட்டாரு உங்கப்பாரு. அவரு கூத்தியா வைச்சிக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது. இவருக்கு ஒழுக்கமா அவளுக இருக்கமாட்டாளுங்கன்னு உங்கப்பாவுக்கு நல்லாவேத் தெரியும்.

இருந்தாலும் உங்கம்மா இந்தவீட்டில் சந்தோஷமா இல்லைன்னு உங்க பாட்டனுக்கெல்லாம் தெரியணும்னுதான் அப்படிச் சொன்னேன்.”

அம்மா என்னை தன் பக்கத்துக்கு இழுக்க செய்த இம்முயற்சியில் நான் அவரைவிட்டு விலகி வெகுதூரம் வந்திருந்தேன். அப்பா எனக்கு ஹீரோ ஆகியிருந்தார். ஆனால் அப்பாவுடனான பழக்கம் அவ்வளவு இல்லாத தம்பி, தங்கைகள் அம்மாவின் போதனைகளால் அப்பாவிற்கு எதிராக வளர்க்கப்பட்டிருந்தார்கள்.

எனக்குத் தெரியும், நான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செஞ்ச கார் ஒன்றை அப்பாவிற்கு அனுப்பும் பொழுதே இதனால் அம்மா நிச்சயமாய்ப் பிரச்சனையை எழுப்புவார் என்று. தம்பியை அப்பாவிற்கு எதிராக தூண்டிவிடும் முயற்சிதான் இந்த தற்கொலை நாடகம். அரசியலில் குப்பைக் கொட்டியிருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் அம்மா அளவிற்கு சாமர்த்தியம் போதாது. அதனால் விஷயம் என் காதுவரை வந்திருக்கிறது அதுவும் அவரின் வாய்வழியாய்.

கண்டக்டர் “நாமக்கல்லில் இறங்கிறவங்கல்லாம் இறங்குங்க” என்று சப்தம் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது போல் இருந்தது. மணி எத்தனை என்று மொபைலை உயிரூட்டிப் பார்க்க, பன்னிரெண்டரையக் காட்டியது. இன்னும் நான்கைந்து மணிநேரம் பிடிக்கலாம் திருச்சியை சென்றடைய, அங்கிருந்து ஒரு மணிநேர பயணம் புதுக்கோட்டைக்கு, சொல்லியிருந்தால் அப்பா வண்டி அனுப்பியிருப்பார் திருச்சிக்கு, ஏன் பெங்களூருக்கே கூட ஆனால் அப்பாதான் எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். மக்களிடம் பழகும் குணத்தை. நான் உட்கார்ந்திருந்த மூன்று நபர்களுக்கான சீட்டில் இரண்டு காலியாய் இருந்தது; வண்டி கிளம்பும் நேரத்தில் ஆக்கிரமிக்கப் பட்டது உட்கார்ந்தவர்களைப் பார்த்தால் இளம் காதலர்களைப் போலிருந்தது. அந்தப் பெண் விசும்பலாய் அழுது கொண்டிருந்தாள்.

இந்தப் பெண்களுக்கெல்லாம் தைரியம் ஜாஸ்தியென்று நினைத்தவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தது ஸஸ்மிதாவைப் பார்த்ததைப் போலிருந்தது. ஒரேயொரு முறை அவளுடன் பஸ் பயணம் செய்திருக்கிறேன். புனேவிலிருந்து குஜராத் வரை சென்ற அந்தப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாதென்று நினைக்கிறேன். அந்தப் பயணம் மட்டுமல்ல, மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒட்டுமொத்தமான நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான்.

ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது ஸஸ்மிதாவின் செல்லிடைபேசியில் அழைப்பு வந்திருந்தது. அது ஆச்சர்யமான ஒன்று எக்காரணம் கொண்டும் அவள் என்னுடன் போனில் பேசமாட்டாள் அதுவரை. நான் அவளை அழைக்கவேண்டுமென்றால் அந்தப் போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு வைத்துவிடுவேன் அவ்வளவுதான் அவள் நாங்கள் எப்பொழுதும் தங்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுவாள். அன்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. நான் அட்டெண்ட் செய்ய எதிர்ப்பக்கத்தில் இருந்து ஸஸ்மிதாவின் அழுகைக் குரல். அவளுடனான மூன்றரை வருட பழக்கத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை; கேட்டால் நான் வேண்டியமட்டும் சின்னவயதிலேயே அழுதுவிட்டேன் இனிமேல் அழுவதற்கு ஒன்றுமில்லையென்பதான பதிலை எனக்குத் தந்திருந்தாள்.

அவளை நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் வழக்கமான ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். வந்தவளின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது. அப்படியொரு நிலையில் ஸஸ்மிதாவை பார்க்கவேண்டி வந்ததேயென நினைத்து நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். மாலைநேர சூரியனின் வண்ணக்குழப்பங்களை நான் அந்த அறையின் ஜன்னலின் வழியே தரிசித்துக் கொண்டிருந்தேன். அந்த இக்கட்டான சமயத்தில் கூட என்னால் இந்த விஷயத்தை கவனிக்க முடிந்திருந்தது, என்னயிருந்தாலும் அவள் என் மனைவியில்லையே என்ற நினைப்புவேறு வந்தது. வந்து அரைமணிநேரம் ஆகியிருந்தும் அவளிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, அவள் நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் ஆரம்பிக்காததால் அவளே ஆரம்பித்தாள்.

மோகன் அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லையாம், டாக்டரிடம் காட்டியிருக்கிறார்கள். சீரியஸான பிரச்சனைன்னும் உடனே ஆப்பரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்றாங்களாம். இரண்டு லட்சம் தேவைப்படும்னு அம்மாவை பார்த்துக்கிட்டவங்க சொல்றாங்க...” நிறுத்தியவள் உங்களுக்கே தெரியும் எங்க நிலைமை நான் எங்க போவேன் இரண்டு லட்சத்துக்கு...” சுயபச்சாதாபம் ஊறிய கண்கள் கலங்கத் தொடங்கின. “நான் என் வாழ்கையிலேயே கடைசியாய் ஆசைப்பட்டது நானா உழைச்சு சம்பாரிச்சு அம்மாவுக்கு சாப்பாடு போடணும்னு... இப்படி ஊரெல்லாம் படுத்து நான் படிச்சதெல்லாம் வீணாய்டும் போலிருக்கே!” என்று சொல்லியவள் முடிக்கக்கூட இல்லை, கண்களில் இருந்து நீர் பொலபொலவென கொட்டத் தொடங்கியது.

அவளுடனான என்னுடைய இந்த மூன்றாண்டு கால உறவில் அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் இடையேயான உறவு நன்றாய்த் தெரியும். சொல்லப்போனால் ஸஸ்மிதா உயிர் வாழ்வதே கூட அவள் அம்மாவிற்காகத்தான் என்று நான் முழுமனாதாக நம்பினேன். காசு பணம் இருந்தாலும், நல்ல உடை உடுத்தினாலும், ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும் ஒரு மெல்லிய சோகம் அவள் மனதில் இழையோடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அந்த சோகம் அவள் கண்களிலோ இல்லை முகத்திலோ தென்படாத அளவிற்கு வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது. இன்றும் அதே வாழ்க்கை அவளை ஒரேயடியாகத் தூக்கியடிக்க முயன்றிருக்கிறது. எனக்குப் புரிந்தது பிச்சையெடுத்து தன்னை படிக்க வைத்த அம்மாவைக் கூட காப்பாற்ற முடியாத நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது.

நான் அவளைச் சமாதானப்படுத்த முயலவில்லை, எனக்கு அந்தத் திறமை கிடையாதென்று முழுமனதாய் நம்பினேன். என்னிடம் இருந்து அவள் அந்தச் சமயத்தில் எதிர்பார்த்ததும் அதுவாய் இருக்கமுடியாது. அவளை அழைத்து இரண்டு லட்சத்திற்கான செக் ஒன்றைக் கொடுத்தேன், இவள் இங்கே செய்து கொண்டிருக்கும் வேலை காரணமாய் அவள் அம்மாவை குஜராத்தில் குடிவைத்திருந்தாள் என்பதால் குஜராத்திற்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும்; என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் சந்தித்திராத சந்தோஷத்தை எனக்கு அள்ளித் தந்தவள் ஸஸ்மிதா. என் அப்பா அடிக்கடி சொல்வார் “தம்பி பணத்தை பேப்பரா மதிக்கணும் அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு மதிப்பு கொடுத்தேன்னு வை. அது உன்னைத் தூக்கி சாப்டுடும். உன் மனசுக்கு சரின்னு பட்டுச்சா; எதுக்கு யோசிக்காத, அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்வான் அப்படின்னெல்லாம். செஞ்சுடு.” அன்று செய்தேன்.

அவள் இருந்த விரக்தியில் ஒரு நன்றியைக் கூட அவள் எனக்குச் சொல்லவில்லை உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அவள் நான் செய்ததற்கான நன்றியை அற்புதமாகச் சொன்னாள். நாமக்கல்லில் இருந்து வேகமாய் திருச்சியை நோக்கி நகரத் தொடங்கியது பேருந்து. ஆரம்பத்தில் விசும்பலாய் இருந்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அழுகை சிறிது தூரம் தாண்டியது வேகமெடுத்தது பேருந்தைப் போலவே. அந்தப் பெண்ணின் கிராமத்தை தாண்டியிருக்க வேண்டும் என்று நானாய் நினைத்துக் கொண்டேன். கூடவந்த பையன் அந்தப் பெண்ணின் கையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவளும் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

ஸஸ்மிதாவிற்கு நான் தீபிகாவுடன் பழகுவது எப்பொழுது ஆச்சர்யமான விஷயம் தான். ஆரம்ப காலத்தில் இதைப் பற்றிய பேச்சு எங்களுக்குள் இருந்ததில்லை. ஆனால் ஒருமுறை எங்கள் இருவரையும் ஐநாக்ஸ் தியேட்டரில் வைத்து ஸஸ்மிதா பார்த்துவிட அடுத்த வெள்ளிக்கிழமை என்னிடம் உரிமையாக யாரென்று கேட்டாள். நான் ஃப்ரெண்ட் என்று சொல்லி வைத்திருந்தேன் பின்னர் வந்த ஏதோ ஒரு நாளில் வெள்ளிக்கிழமை இரவு தீபிகா தொலைபேசப்போக நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவள், அவளுக்குத் தமிழ் புரியாது ஆனால் நான் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது, வழிந்தது எல்லாம் புரிந்திருக்கும். அதற்குப் பிறகு நச்சரிக்கக் தொடங்கினாள் தீபிகாவைப் பற்றி சொல்லுங்கள் என்று.

என்கிட்ட சொல்றதுக்கு என்ன மோகன், நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதுமட்டுமில்லாம உங்களை தப்பா நினைச்சிக்கிறதுக்கு நான் யார்?

அவளுக்கு நன்றாய்த் தெரியும் அந்த வார்த்தையை சொன்னாள் என்றால் நான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்று. அதனால் அந்த கடைசி வரியை இணைத்துக் கொண்டாள். ஆனால் அந்த வார்த்தையை நான் எவ்வளவு சீரியஸாய் எடுத்துக்கொள்வேன் என்று தெரிந்ததால் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே சொல்வாள். அவளைப் பொறுத்தவரை தீபிகா பெரிய விஷயம்.

சரி நான் தீபிகாவைப் பத்தி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி நீ அந்த காலேஜ் பையனைப் பத்தி சொல்லணும்.” நான் கேட்க, அவள் என்ன நினைத்தால் என்று தெரியாது.

தாஸ் நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். என்னிக்கு நீங்க இல்லாத இன்னொருத்தன் கூட படுக்குறனோ அதற்கு அப்புறம் நீங்க என்னைப் பார்க்கவே முடியாது. உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம் ஏன்னா நான் பணத்துக்கு படுக்குறவ தானே, யார் கூட வேணும்னாலும் படுத்திருப்பா படுப்பான்னு. நான் காசுக்காக படுக்கிறவ தான் ஆனா இந்த மூணு வருஷமா உங்களைத் தவிர யார் கூடவும் நான் படுக்கலை. ஏன்னா எனக்கு பணம் காலேஜ் பீஸ் கட்ட மட்டும் தான் தேவை. அதை நீங்க தந்துற்றீங்க; அதனால எனக்கு அந்த தேவை ஏற்படலை.

ஒரு நல்ல மாலைப் பொழுதை தீபிகாவைப் பற்றிய பேச்சை எடுத்து அன்று அப்படி ஸஸ்மிதா கலைத்துப் போட்டிருந்தாள். அவள் சாதாரணமாகவே நல்ல பெண் என்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை அந்த நிலைக்கு தள்ளின என்றும் நன்றாகத் தெரியும். இந்த மூன்று வருடகாலத்தில் அவள் வேறு யாருடனும் சென்றிருக்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும் நானும் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவளும் சொல்லியதில்லை. ஆனால் அன்று அவளாய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு எப்படியோ வந்திருந்தாள்.

நான் அவளைப் பார்த்து முறைத்தேன்.

நான் உன்கிட்ட என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற. நீ வரவர லாஜிக்கலா யோசிக்கிறதையே மறந்துட்டு வர்ற. நான் அந்தப் பையன் பத்தி கேட்டது ரொம்ப சாதாரணமா!” தொடரும் முன் இடைமறித்தவள்.

தாஸ் உண்மையில் நான் உங்க பொண்டாட்டியோ காதலியோ கிடையாது, நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் என்னை உங்க காதலியா, பொண்டாட்டியாத்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா உங்கக் கிட்ட ஒவ்வொரு தடவையும் காசு வாங்கிறப்பையும் என் மனசை கொன்னுட்டுதான் வாங்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கிட்டு கொடுக்கிறதில்லைன்னாலும், அப்படி நான் நினைச்சிடக்கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செய்தாலும் என்னால் அப்படி மறக்கமுடியலை.

அதனால தான் நீங்க அந்தப் பையனைப் பத்தி கேட்டதும் இத்தனையும் சொல்றேன். நீங்க இதுவரைக்கும் என்கிட்ட என் வாழ்க்கையை லைஃப் ஸ்டைலை, என்னுடைய நடவடிக்கையைப் பத்தி கேள்வி கேட்டதில்லை. நீங்க கேட்காததால நானும் சொன்னதில்லை ஆனால் இப்ப கேட்டீங்க பாருங்க, அதை நீங்க ஒரு கேள்வியா நினைச்சுக் கேட்கலைன்னாலும் எனக்கு நானே உங்க மூலமா சமாதானம் சொல்லிக்கிறேன். என்னமோ கேட்டீங்க நான் எங்கேயோ போய்ட்டேன்.

அந்தப் பையனைப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அவன் என்னை தீவிரமா காதலிக்கிறான். இந்த உலகத்திலேயே என் மேல இருக்கும் அன்பை வெளிப்படையாச் சொன்னவன் அவன் தான். நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி என் மேல இருக்கிற அன்பை பாசத்தை வெளிப்படையா சொல்லமாட்டீங்க. நான் உங்களையோ எங்கம்மாவையோ அந்தப் பையன் கூட கம்பேர் செய்யக்கூட மாட்டேன்; ஆனா நானும் சின்னப் பொண்ணு தானே? என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா?

நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள லைட்டரை அவளிடம் நீட்டினேன்.

ஸஸ், நான் அந்தப் பையன் பத்தி உன்கிட்ட கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம். ஏறக்குறைய தீபிகாவிற்கும் அந்தப் பையனுக்கும் நிறைய ஸிமிலாரிட்டீஸ் இருக்குமென்று தான். நீ சொன்னத வச்சுப் பார்த்தா அது உண்மைன்னும் தெரியுது.

நான் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு வந்து உட்கார்ந்தேன். கூடவே வந்தவள் எதிரில் உட்கார்ந்தாள். நான் அவள் ஆழமாய் சிகரெட் இழுத்து புகை விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாஸ் நீங்க வேணாம்னு சொன்னா நான் தம் அடிக்கிறதை, பியர் அடிக்கிறதை எல்லாம் நிறுத்திருவேன். இப்பவே கூட ஒன்னும் பெரிசா விரும்பி செய்யலை கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருப்பேன். அதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் இதெல்லாம்.

நீங்க ஒரு வார்த்தை பண்ணாதன்னு சொல்லுங்க நிறுத்திற்றேன்.

ஸஸ் உனக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு.” நானும் ஆழமாய் இழுத்து புகைவிட்டபடி வேடிக்கையாச் சொல்ல, அவள் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது. முகத்தில் லேசாய் சோகப் புன்னகை பரவியது.

ச்ச நான் ஒரு லூசு உங்கக்கிட்ட என்னவெல்லாமோ புலம்பிக்கிட்டிருக்கேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts