Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப் பிறகும் கூட ஜெயமோகனின் எழுத்து அறிமுகமாகவில்லை.

மரத்தடியில் சேர்ந்த பொழுது எல்லா ஆர்ட்டிக்கிள்களையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய ஆர்வம் இருந்து. மீனாக்ஸின் கதைகள், நண்பனின் கவிதைகள், மீரானின் நக்கல் தொனிக்கும் எழுத்து, பிரசன்னாவின் கவிதைகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அறிமுகமான பொழுதில் தான் ஜெயமோகனின் பதில்களைப் படித்தேன் மரத்தடியில். அதுவரை இல்லாத ஆர்வமாய் அந்த நீண்ண்ட்ட பதில்களை சீக்கிரமாகவே படித்து முடித்தேன். அங்கேயே பிடித்துப் போனது அவருடைய நடை. பின்னர் "நிழல்கள்" பிரசன்னாவை மரத்தடியில் ஜெயமோகனின் பெயர் சொல்லி வம்பிழுக்கப்போய் சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று தான் ஆரம்பித்தேன்.

எனக்கு இப்படியாய் முதன் முதலில் அறிமுகமான ஜெயமோகனின் புத்தகம் "ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு" உயிர்மை பதிப்பகம். இந்தச் சமயத்தில் எல்லாம் ஒரு மாதிரி இலக்கியத் தரமுள்ள புத்தகங்களின் அறிமுகம் வந்திருந்தது. ஆனால் புத்தகமாய் இதுதான் முதலாவது ஜெயமோகனுடையது ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏகமாய் ஏகமாய் திண்ணை, மரத்தடி மற்றும் வேறு இடங்களிலும் படித்திருந்தேன். சரி இனி புத்தகத்திற்கு.

இந்தப் புத்தகத்தில் மொத்தம், "கிளிக்காலம்" "பூமியின் முத்திரைகள்" "மடம்" "பரிணாமம்" "லங்கா தகனம்" "அம்மன் மரம்" "டார்த்தீனியம்" "மண்" "நிழலாட்டம்" "பத்ம வியூகம்" "இறுதி விஷம்" என பதினோறு குறுநாவல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பற்றிய என்னுடைய "2 Cent" எழுதணும் போலிருந்தாலும். படிப்பவர்களையும் மனதில் நினைத்துக் கொண்டு(இதுதான் முதன் முறைன்னு வேணும்னாலும் நினைச்சிக்கலாம் - நன்றி சென்ஷி) மூன்று நான்கை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் "என் சொற்களில்" ஜெ.மோ சொல்வது போல், "...நாவலுக்குரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம். நல்ல குறுநாவலில் சிறுகதைக்குரிய இறுதிமுடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்க்கும்..." நீங்கள் புத்தகத்தில் உள்ள குறுநாவல்களைப் படித்து முடித்துவிட்டு வந்ததும் உங்களால் இதை நிச்சயமாய் உணரமுடியும். அவரே சொன்னது போல் "மண்" நிச்சயமாய் குறுநாவலுக்குரிய சிறப்பான இலக்கண அமைதி கூடிய ஆக்கம் தான்.

முதலில் "டார்த்தீனியம்" ஒரு நல்ல நாவலைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்துவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் டார்த்தீனியம் படித்துப் பாருங்கள், உங்கள் அறைகள் கருமையாவதைப் போலவும் உங்களைச் சுற்றி கருநாகப் பாம்புகள் தாண்டவமாடுவதைப் போலவும் உணர்வீர்கள். மேஜிக் ஷோ பார்ப்பதைப் பற்றி எனக்கு இன்னமும் தெளிவான அறிவு கிடையாது, கண்களைக் கட்டுவார்கள் என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதை படித்த பொழுது அப்படித்தான் உணர்ந்தேன்; மக்ரூணி, கனகு, கருப்பன் என விலங்கினங்கள் இறக்கும் என்னவோ நாம் வளர்த்தவைகள் நிஜமாகவே இறந்துவிட்டால் வரும் வேதனையைப் போல் உணர்ந்தேன். இந்த மேஜிக்கல் ரியலிஸிகக் கதை நிற்கவிடாமல் ஓட ஓட என்னைப் படிக்க வைத்தது. ஒரு கதையைப் படித்துவிட்டு என்னமோ 1500 மீட்டர் ஓடியதைப் போல் களைப்படைந்தேன். சொல்லப்போனால் இவை நம்புவதற்கு கடினமாகயிருந்தாலும் உண்மை என்னவோ அதற்குப் பிறகு அந்த டார்த்தீனியம் கதை பக்கம் கூட போக மனம் பயப்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிக அற்புதமான கதை, இது போன்ற ஒரு உண்மையாய் இருக்க முடியாத கதையைச் சொல்லும் பொழுது என்னைப் போன்ற ஒருவனை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்வதென்பது அவரால் முடிந்திருக்கிறது. இன்றைக்கு ரிவ்யூ எழுத புரட்டிய பொழுதும் என்னால் ஒரு ஆறுமாத காலத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறமுடிகிறது.

அடுத்தது, லங்கா தகனம் (இதைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் இந்தக் கதை படித்த பொழுது என்னவோ எஸ்.ராவின் ஒரு குறுநாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.) ஆனந்தன் என்ற கதகளி ஆட்டக் காரரைப் பற்றிய கதை, சின்ன வயதில் நல்ல ஆசிரியர்களிடம் கதகளி படித்து பாண்டியத்துவம் பெற்றவர். கதகளிக்கான உண்மையான மதிப்பும் மரியாதையும் இப்பொழுது இல்லை என வருத்தப் படுபவர். அவருடைய மிகவும் தேர்ந்த பயிற்சியான "லங்கா தகனத்தை" பூரணமாக ஆடிவிடவேண்டும் என்று நினைப்பவர் அவர். பூரணம் என்றால் முக்தி என்று பொருள் முற்றுப் புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புவது இல்லை.

என்னால் ஆனவரை இந்த விஷயத்தை புரியவைக்க முயல்கிறேன்.

"கதகளி தெய்வீகமான ஆட்டம். ஆடி ஆடி மனித உடம்பிலேயே பஞ்ச பூதங்களின் அத்தனை அசைவுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நீரின் சுழிப்பு, நதியின் வேகம், கடலலைகளின் எழுச்சி, தீயின் தகதகப்பு, இடி மின்னல் உக்கிரம், மரங்களின் அசைவு, மிருகங்களின் பாய்ச்சல்... சலன வடிவான்ன அன்னமய்யோகத்தின் அடிப்படைச் சாரம் முழுக்க மனிதனின் உடம்பின் அசைவால்ல் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்திகளின் மீட்டலுக்கு மனித உடம்பு விட்டுத்தரப்படுகிறது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு மூர்த்தி உண்டு. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதற்குரிய மூர்த்தி உண்டு. நாம் மூர்த்திகளின் வேடம் போட்டு ஆடுகிறோம். அப்போது அம்மூர்த்தியின் சான்னியத்தியம் மேடையில் வருகிறது. மனம் தொட்டு ஆடினவர்களுக்குத் தெரியும் நான் சொல்வது..."

"உண்மை" என்றார் ஒருவர்.. "நானே பலமுறை அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன்."

"ஆனால் மேடையில் கண்காணாதபடி நம்முடன் இருக்கும் மூர்த்திக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு தூரம் இருக்கிறது அதுதான் நம் சுய ஞாபகம். நான் யார், நான் பாலேடாத்து குட்டப்பன் பிள்ளை, ஆளூர் அச்சன் மடத்தில் ராவண வேஷம் போட்டு ஆடுகிறேன் என்கிற ஒரு உள் ஞாபகம். இது நடிப்பு இது நடிப்பு என்று நம் உள்மனம் சொல்லியபடியே இருக்கும் நிலை. எத்தனை ரௌத்திரமாக ஆடினாலும், கருணைரசத்தில் மெய்மறந்து உருகினாலும், இந்த சுய உணர்வின் ஒரு சொட்டு நமக்குள் எப்போது இருக்கிறது. அது ஏன்?"

"ஆட்டக்குறை" என்றார் ராமன் பிள்ளை.

"அதே தான். ஒருபோதும் நம் ஆட்டம் பூரண வடிவம் பெறுவது இல்லை. அடவுகளில் ஒரு மயிரிழையளவு தாளம் தவறுகிறது. முத்திரையில் ஒரு தளிரின், ஒரு ரோமத்தின் அசைவளவிற்கு லயம் தவறுகிறது. உடல் சொல்வதைக் கண் சொல்ல ஒரு வினாடி பிந்திவிடுகிறது. கண்ணும் உடலும் சொல்வதுடன் மனம் ஒன்ற ஒரு சிறு ஞாபகம் தடையாக இருந்துவிடுகிறது. ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...
"

இதுதான் மேட்டர், ஆனந்தனுக்கு ஆட்டக்குறை இல்லாமல் ஒரு முறை "லங்கா தகனம்" ஆடிவிட வேண்டும் என்றும் அப்படியே அனுமனிடம் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதும் ஆசை.

இப்படிப்பட்ட ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய வரிகள் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கின்றன.

"...ஆசானும் சிரிப்பு ஏற்படுத்துபவராகவே இருந்தார். பொதுவாக மைதானத்தில் விடப்பட்ட எலி போல ஒரு தத்தளிப்பு அவரிடம் இருந்தது. கைகளைக் கட்டியபடி, முகம் கலங்கியிருக்க, உதடுகள் சிரிக்க அவர்களை அணுகினார்.

"யார் இவர்?" என்றார் ஒல்லியான வழுக்கைத்தலை ஆள்.

"நடிகன்" என்றார் தம்புரான். "நன்றாகக் கதகளி ஆடுவான். நம்முடைய மடத்தச் சார்ந்து இருக்கிறான். அவனாஇ உற்றுப் பாருங்கள், அவனுடைய வேடிக்கையான உடல் அசைவுகளை டேய் ஆசானே, எங்கே போய் அந்தச் செம்பை எடுத்துவா பார்ப்போம்..."

ஆசான் சட்டென்று என்னைப் பார்த்தார். பிறகு சங்கடமாக நடந்து போனார். அவருடைய நளினமான காலசைவும், தோள்களின் சங்கடமான ஒடுக்கமூம் இணைந்து விபரீதமான ஒரு விளைவு ஏற்பட்டது. குண்டான கண்ணாடிக்காரர் "பர்ர்ர்" என்று சிரித்துவிட்டார். ஆசான் செம்பைக் கையில் தாமரை போலவோ, நெருப்புக் குண்டம் போலவோ, ஏந்தியபடி வந்து நின்று தயங்கினார். தம்புரானும் மற்றவர்களூம் சிரிக்க காரியஸ்தனும் சிரிப்பை அடக்கியபடி "போய் திரும்ப அங்கேயே வையும் அதை ஆசானே" என்றார். ஆசான் அதைத் திரும்ப வைத்த பின்பு வந்து, தூனோரமாக ஒதுங்கி நின்றார். சட்டென்று திரும்பியவர் என்னைப் பார்த்தார். சிரிக்க முயன்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"

இந்த வரிகள் நாம் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் ஒருவரை, இன்னொருவர் தாழ்மைப் படுத்திவிடும் சூழ்நிலையை கச்சிதமாக விளக்குகிறது. நான் என்னுடைய வாழ்நாளில் பலமுறை அந்தப் பையனின் நிலையில் இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய விளக்கம் நம்மை தானாகவே, அவர் லங்கா தகனம் நடனத்தை பூரணமாக ஆடி பெரிய பேர் பெறவேண்டும் என்று எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் மேடை நோக்க்கி வருவதுடன் ஜெ.மோ கதையை முடித்துவிட்டார். அவருக்கான அரசியல் அவருக்கு பாவம். ஒரு வார்த்தை சொல்லவில்லை அவ்வளவே பூரண ஆட்டதை ஆசான் ஆடியதாக.

மற்ற கதை பத்மவியூகம், இது எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு கதை தான் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு புனைவு. மஹாபாரதத்தில் அபிமன்யூவின் அத்யாயங்கள் சில பக்கங்களே என்றாலும் அவனுக்கென்று தனியான ஒரு மதிப்பு உண்டு மஹாபாரதத்தில். இந்தக் கதை அபிமன்யூவின் தாய் சுபத்திரை உடைய மனநிலையை படம் பிடித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாக சுபத்திரையை அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, அபிமன்யூவின் மரணத்திற்குப் பிறகு நீர்க்கடன் செலுத்தும் வரை நீள்கிறது கதை.

கடவுள் பற்றிய கதையாகச் சொல்லாமல் மஹாபாரத கதாப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களாகக் காட்டியிருப்பார். என்னவோ சின்ன வயதில் இருந்தே மஹாபாரதக் கதைகளின் மீதான காதல் உண்டு. வெவ்வேறு கதையாடல்களுடன் நான் மஹாபாரதத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று, இந்த குறுநாவல் தொகுப்பில் இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இந்த பத்மவியூகம்.

உண்மையில், இந்த மூன்று கதைகளையும் பற்றி எழுத வேண்டாமென்றே நினைத்திருந்தேன் மடம் மற்றும் மண் பற்றி எழுத நினைத்திருந்தேன் ஆனால் இதை எழுதியிருக்கிறேன்.

--பின்னொரு காலம் ஜெமோவுடன் தொடர்பில் இருந்த பொழுது, அவர் இந்தப் பதிவை படித்திருப்பதாகச் சொன்னார். அவர் படிக்கும் அளளளவிற்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் Black Swan படம் பார்த்து முடித்ததும் ஜெமோவை அழைத்து எனக்கு ப்ளாக் ஸ்வான் படம் லங்காதகனம் போல் இருந்ததாகச் சொல்லியிருந்தேன், அதன் பிறகான ஒரு காலத்தில் Swan song பற்றி தெரிந்து கொண்டேன். ஆசானின் ஸ்வான் சாங்கே லங்காதகனம்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In புத்தகங்கள்

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Read More

Share Tweet Pin It +1

30 Comments

In புத்தகங்கள்

என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்தி தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை...” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி...” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்...” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்... அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்...” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்...” இது மூர்த்திக்கானது.

...நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு... ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது...


இது மாலாவைப் பற்றிய ஒன்று.

...ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் ...எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை... அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்...

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்...” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

...ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்...


...அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’...


வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.


...உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது... என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி...’


இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

...அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்...

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In சிறுகதை புத்தகங்கள் மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி


"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.

ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,

"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.

'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.

உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.

ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.

ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.

அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.

கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.

அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.

அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.

ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.

அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.

அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.

தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.

அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.

அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.

'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.

அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.

அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள்

நித்ய கன்னி

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்திருந்த எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவலைப் புரட்டிப் பார்த்த பொழுது ஜே.பி சாணக்யாவும் தி.ஜாவும் எழுதியிருந்த முன்னுரை பிடித்திருந்ததால் வாங்கிவந்திருந்தேன். பெரும்பாலும் இதைச் செய்ய மாட்டேன், புத்தகத்தின் முன்னுரையானாலும் காசு கொடுத்து வாங்கிவிட்டுத்தான் படிப்பது முறை என்று நினைப்பேன். ஆனால் அப்படியும் வாங்கிவிட்டதால் பெரிய அரிப்பு இல்லை. நாவல் மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான மாதவியை அச்சாகக் கொண்டு சுழல்கிறது. மகாபாரதத்தில் ஐந்து ஆறு பக்கங்கள் நீளும் மாதவியின் கதையை விரித்து நாவலாய் எழுதியதாக எம்.வி.வி தன் 'தம்மைப் பற்றி'யில் சொல்கிறார்.

மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.

மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,


மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.

காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.

மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.

மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.

காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.

அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.

அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.

கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.

மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.

மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.

"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."

என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.

"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"

மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.

மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.

"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.

அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?

மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.

மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!

காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.

"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"

இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.

PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Read More

Share Tweet Pin It +1

2 Comments

Popular Posts