Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப் பிறகும் கூட ஜெயமோகனின் எழுத்து அறிமுகமாகவில்லை.

மரத்தடியில் சேர்ந்த பொழுது எல்லா ஆர்ட்டிக்கிள்களையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய ஆர்வம் இருந்து. மீனாக்ஸின் கதைகள், நண்பனின் கவிதைகள், மீரானின் நக்கல் தொனிக்கும் எழுத்து, பிரசன்னாவின் கவிதைகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அறிமுகமான பொழுதில் தான் ஜெயமோகனின் பதில்களைப் படித்தேன் மரத்தடியில். அதுவரை இல்லாத ஆர்வமாய் அந்த நீண்ண்ட்ட பதில்களை சீக்கிரமாகவே படித்து முடித்தேன். அங்கேயே பிடித்துப் போனது அவருடைய நடை. பின்னர் "நிழல்கள்" பிரசன்னாவை மரத்தடியில் ஜெயமோகனின் பெயர் சொல்லி வம்பிழுக்கப்போய் சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று தான் ஆரம்பித்தேன்.

எனக்கு இப்படியாய் முதன் முதலில் அறிமுகமான ஜெயமோகனின் புத்தகம் "ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு" உயிர்மை பதிப்பகம். இந்தச் சமயத்தில் எல்லாம் ஒரு மாதிரி இலக்கியத் தரமுள்ள புத்தகங்களின் அறிமுகம் வந்திருந்தது. ஆனால் புத்தகமாய் இதுதான் முதலாவது ஜெயமோகனுடையது ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏகமாய் ஏகமாய் திண்ணை, மரத்தடி மற்றும் வேறு இடங்களிலும் படித்திருந்தேன். சரி இனி புத்தகத்திற்கு.

இந்தப் புத்தகத்தில் மொத்தம், "கிளிக்காலம்" "பூமியின் முத்திரைகள்" "மடம்" "பரிணாமம்" "லங்கா தகனம்" "அம்மன் மரம்" "டார்த்தீனியம்" "மண்" "நிழலாட்டம்" "பத்ம வியூகம்" "இறுதி விஷம்" என பதினோறு குறுநாவல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பற்றிய என்னுடைய "2 Cent" எழுதணும் போலிருந்தாலும். படிப்பவர்களையும் மனதில் நினைத்துக் கொண்டு(இதுதான் முதன் முறைன்னு வேணும்னாலும் நினைச்சிக்கலாம் - நன்றி சென்ஷி) மூன்று நான்கை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் "என் சொற்களில்" ஜெ.மோ சொல்வது போல், "...நாவலுக்குரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம். நல்ல குறுநாவலில் சிறுகதைக்குரிய இறுதிமுடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்க்கும்..." நீங்கள் புத்தகத்தில் உள்ள குறுநாவல்களைப் படித்து முடித்துவிட்டு வந்ததும் உங்களால் இதை நிச்சயமாய் உணரமுடியும். அவரே சொன்னது போல் "மண்" நிச்சயமாய் குறுநாவலுக்குரிய சிறப்பான இலக்கண அமைதி கூடிய ஆக்கம் தான்.

முதலில் "டார்த்தீனியம்" ஒரு நல்ல நாவலைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்துவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் டார்த்தீனியம் படித்துப் பாருங்கள், உங்கள் அறைகள் கருமையாவதைப் போலவும் உங்களைச் சுற்றி கருநாகப் பாம்புகள் தாண்டவமாடுவதைப் போலவும் உணர்வீர்கள். மேஜிக் ஷோ பார்ப்பதைப் பற்றி எனக்கு இன்னமும் தெளிவான அறிவு கிடையாது, கண்களைக் கட்டுவார்கள் என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதை படித்த பொழுது அப்படித்தான் உணர்ந்தேன்; மக்ரூணி, கனகு, கருப்பன் என விலங்கினங்கள் இறக்கும் என்னவோ நாம் வளர்த்தவைகள் நிஜமாகவே இறந்துவிட்டால் வரும் வேதனையைப் போல் உணர்ந்தேன். இந்த மேஜிக்கல் ரியலிஸிகக் கதை நிற்கவிடாமல் ஓட ஓட என்னைப் படிக்க வைத்தது. ஒரு கதையைப் படித்துவிட்டு என்னமோ 1500 மீட்டர் ஓடியதைப் போல் களைப்படைந்தேன். சொல்லப்போனால் இவை நம்புவதற்கு கடினமாகயிருந்தாலும் உண்மை என்னவோ அதற்குப் பிறகு அந்த டார்த்தீனியம் கதை பக்கம் கூட போக மனம் பயப்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிக அற்புதமான கதை, இது போன்ற ஒரு உண்மையாய் இருக்க முடியாத கதையைச் சொல்லும் பொழுது என்னைப் போன்ற ஒருவனை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்வதென்பது அவரால் முடிந்திருக்கிறது. இன்றைக்கு ரிவ்யூ எழுத புரட்டிய பொழுதும் என்னால் ஒரு ஆறுமாத காலத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறமுடிகிறது.

அடுத்தது, லங்கா தகனம் (இதைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் இந்தக் கதை படித்த பொழுது என்னவோ எஸ்.ராவின் ஒரு குறுநாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.) ஆனந்தன் என்ற கதகளி ஆட்டக் காரரைப் பற்றிய கதை, சின்ன வயதில் நல்ல ஆசிரியர்களிடம் கதகளி படித்து பாண்டியத்துவம் பெற்றவர். கதகளிக்கான உண்மையான மதிப்பும் மரியாதையும் இப்பொழுது இல்லை என வருத்தப் படுபவர். அவருடைய மிகவும் தேர்ந்த பயிற்சியான "லங்கா தகனத்தை" பூரணமாக ஆடிவிடவேண்டும் என்று நினைப்பவர் அவர். பூரணம் என்றால் முக்தி என்று பொருள் முற்றுப் புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புவது இல்லை.

என்னால் ஆனவரை இந்த விஷயத்தை புரியவைக்க முயல்கிறேன்.

"கதகளி தெய்வீகமான ஆட்டம். ஆடி ஆடி மனித உடம்பிலேயே பஞ்ச பூதங்களின் அத்தனை அசைவுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நீரின் சுழிப்பு, நதியின் வேகம், கடலலைகளின் எழுச்சி, தீயின் தகதகப்பு, இடி மின்னல் உக்கிரம், மரங்களின் அசைவு, மிருகங்களின் பாய்ச்சல்... சலன வடிவான்ன அன்னமய்யோகத்தின் அடிப்படைச் சாரம் முழுக்க மனிதனின் உடம்பின் அசைவால்ல் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்திகளின் மீட்டலுக்கு மனித உடம்பு விட்டுத்தரப்படுகிறது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு மூர்த்தி உண்டு. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதற்குரிய மூர்த்தி உண்டு. நாம் மூர்த்திகளின் வேடம் போட்டு ஆடுகிறோம். அப்போது அம்மூர்த்தியின் சான்னியத்தியம் மேடையில் வருகிறது. மனம் தொட்டு ஆடினவர்களுக்குத் தெரியும் நான் சொல்வது..."

"உண்மை" என்றார் ஒருவர்.. "நானே பலமுறை அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன்."

"ஆனால் மேடையில் கண்காணாதபடி நம்முடன் இருக்கும் மூர்த்திக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு தூரம் இருக்கிறது அதுதான் நம் சுய ஞாபகம். நான் யார், நான் பாலேடாத்து குட்டப்பன் பிள்ளை, ஆளூர் அச்சன் மடத்தில் ராவண வேஷம் போட்டு ஆடுகிறேன் என்கிற ஒரு உள் ஞாபகம். இது நடிப்பு இது நடிப்பு என்று நம் உள்மனம் சொல்லியபடியே இருக்கும் நிலை. எத்தனை ரௌத்திரமாக ஆடினாலும், கருணைரசத்தில் மெய்மறந்து உருகினாலும், இந்த சுய உணர்வின் ஒரு சொட்டு நமக்குள் எப்போது இருக்கிறது. அது ஏன்?"

"ஆட்டக்குறை" என்றார் ராமன் பிள்ளை.

"அதே தான். ஒருபோதும் நம் ஆட்டம் பூரண வடிவம் பெறுவது இல்லை. அடவுகளில் ஒரு மயிரிழையளவு தாளம் தவறுகிறது. முத்திரையில் ஒரு தளிரின், ஒரு ரோமத்தின் அசைவளவிற்கு லயம் தவறுகிறது. உடல் சொல்வதைக் கண் சொல்ல ஒரு வினாடி பிந்திவிடுகிறது. கண்ணும் உடலும் சொல்வதுடன் மனம் ஒன்ற ஒரு சிறு ஞாபகம் தடையாக இருந்துவிடுகிறது. ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...
"

இதுதான் மேட்டர், ஆனந்தனுக்கு ஆட்டக்குறை இல்லாமல் ஒரு முறை "லங்கா தகனம்" ஆடிவிட வேண்டும் என்றும் அப்படியே அனுமனிடம் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதும் ஆசை.

இப்படிப்பட்ட ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய வரிகள் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கின்றன.

"...ஆசானும் சிரிப்பு ஏற்படுத்துபவராகவே இருந்தார். பொதுவாக மைதானத்தில் விடப்பட்ட எலி போல ஒரு தத்தளிப்பு அவரிடம் இருந்தது. கைகளைக் கட்டியபடி, முகம் கலங்கியிருக்க, உதடுகள் சிரிக்க அவர்களை அணுகினார்.

"யார் இவர்?" என்றார் ஒல்லியான வழுக்கைத்தலை ஆள்.

"நடிகன்" என்றார் தம்புரான். "நன்றாகக் கதகளி ஆடுவான். நம்முடைய மடத்தச் சார்ந்து இருக்கிறான். அவனாஇ உற்றுப் பாருங்கள், அவனுடைய வேடிக்கையான உடல் அசைவுகளை டேய் ஆசானே, எங்கே போய் அந்தச் செம்பை எடுத்துவா பார்ப்போம்..."

ஆசான் சட்டென்று என்னைப் பார்த்தார். பிறகு சங்கடமாக நடந்து போனார். அவருடைய நளினமான காலசைவும், தோள்களின் சங்கடமான ஒடுக்கமூம் இணைந்து விபரீதமான ஒரு விளைவு ஏற்பட்டது. குண்டான கண்ணாடிக்காரர் "பர்ர்ர்" என்று சிரித்துவிட்டார். ஆசான் செம்பைக் கையில் தாமரை போலவோ, நெருப்புக் குண்டம் போலவோ, ஏந்தியபடி வந்து நின்று தயங்கினார். தம்புரானும் மற்றவர்களூம் சிரிக்க காரியஸ்தனும் சிரிப்பை அடக்கியபடி "போய் திரும்ப அங்கேயே வையும் அதை ஆசானே" என்றார். ஆசான் அதைத் திரும்ப வைத்த பின்பு வந்து, தூனோரமாக ஒதுங்கி நின்றார். சட்டென்று திரும்பியவர் என்னைப் பார்த்தார். சிரிக்க முயன்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"

இந்த வரிகள் நாம் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் ஒருவரை, இன்னொருவர் தாழ்மைப் படுத்திவிடும் சூழ்நிலையை கச்சிதமாக விளக்குகிறது. நான் என்னுடைய வாழ்நாளில் பலமுறை அந்தப் பையனின் நிலையில் இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய விளக்கம் நம்மை தானாகவே, அவர் லங்கா தகனம் நடனத்தை பூரணமாக ஆடி பெரிய பேர் பெறவேண்டும் என்று எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் மேடை நோக்க்கி வருவதுடன் ஜெ.மோ கதையை முடித்துவிட்டார். அவருக்கான அரசியல் அவருக்கு பாவம். ஒரு வார்த்தை சொல்லவில்லை அவ்வளவே பூரண ஆட்டதை ஆசான் ஆடியதாக.

மற்ற கதை பத்மவியூகம், இது எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு கதை தான் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு புனைவு. மஹாபாரதத்தில் அபிமன்யூவின் அத்யாயங்கள் சில பக்கங்களே என்றாலும் அவனுக்கென்று தனியான ஒரு மதிப்பு உண்டு மஹாபாரதத்தில். இந்தக் கதை அபிமன்யூவின் தாய் சுபத்திரை உடைய மனநிலையை படம் பிடித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாக சுபத்திரையை அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, அபிமன்யூவின் மரணத்திற்குப் பிறகு நீர்க்கடன் செலுத்தும் வரை நீள்கிறது கதை.

கடவுள் பற்றிய கதையாகச் சொல்லாமல் மஹாபாரத கதாப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களாகக் காட்டியிருப்பார். என்னவோ சின்ன வயதில் இருந்தே மஹாபாரதக் கதைகளின் மீதான காதல் உண்டு. வெவ்வேறு கதையாடல்களுடன் நான் மஹாபாரதத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று, இந்த குறுநாவல் தொகுப்பில் இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இந்த பத்மவியூகம்.

உண்மையில், இந்த மூன்று கதைகளையும் பற்றி எழுத வேண்டாமென்றே நினைத்திருந்தேன் மடம் மற்றும் மண் பற்றி எழுத நினைத்திருந்தேன் ஆனால் இதை எழுதியிருக்கிறேன்.

--பின்னொரு காலம் ஜெமோவுடன் தொடர்பில் இருந்த பொழுது, அவர் இந்தப் பதிவை படித்திருப்பதாகச் சொன்னார். அவர் படிக்கும் அளளளவிற்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் Black Swan படம் பார்த்து முடித்ததும் ஜெமோவை அழைத்து எனக்கு ப்ளாக் ஸ்வான் படம் லங்காதகனம் போல் இருந்ததாகச் சொல்லியிருந்தேன், அதன் பிறகான ஒரு காலத்தில் Swan song பற்றி தெரிந்து கொண்டேன். ஆசானின் ஸ்வான் சாங்கே லங்காதகனம்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In புத்தகங்கள்

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Read More

Share Tweet Pin It +1

30 Comments

In புத்தகங்கள்

என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்தி தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை...” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி...” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்...” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்... அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்...” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்...” இது மூர்த்திக்கானது.

...நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு... ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது...


இது மாலாவைப் பற்றிய ஒன்று.

...ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் ...எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை... அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்...

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்...” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

...ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்...


...அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’...


வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.


...உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது... என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி...’


இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

...அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்...

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In சிறுகதை புத்தகங்கள் மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி


"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.

ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,

"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.

'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.

உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.

ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.

ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.

அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.

கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.

அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.

அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.

ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.

அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.

அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.

தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.

அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.

அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.

'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.

அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.

அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள்

நித்ய கன்னி

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்திருந்த எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவலைப் புரட்டிப் பார்த்த பொழுது ஜே.பி சாணக்யாவும் தி.ஜாவும் எழுதியிருந்த முன்னுரை பிடித்திருந்ததால் வாங்கிவந்திருந்தேன். பெரும்பாலும் இதைச் செய்ய மாட்டேன், புத்தகத்தின் முன்னுரையானாலும் காசு கொடுத்து வாங்கிவிட்டுத்தான் படிப்பது முறை என்று நினைப்பேன். ஆனால் அப்படியும் வாங்கிவிட்டதால் பெரிய அரிப்பு இல்லை. நாவல் மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான மாதவியை அச்சாகக் கொண்டு சுழல்கிறது. மகாபாரதத்தில் ஐந்து ஆறு பக்கங்கள் நீளும் மாதவியின் கதையை விரித்து நாவலாய் எழுதியதாக எம்.வி.வி தன் 'தம்மைப் பற்றி'யில் சொல்கிறார்.

மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.

மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,


மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.

காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.

மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.

மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.

காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.

அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.

அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.

கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.

மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.

மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.

"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."

என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.

"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"

மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.

மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.

"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.

அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?

மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.

மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!

காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.

"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"

இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.

PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Read More

Share Tweet Pin It +1

2 Comments

In புத்தகங்கள்

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

“... தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது...” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

“...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி...”

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

“...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்...”

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் - ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுந்தர ராமசாமி பிரமிள் புத்தகங்கள்

பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்

இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,

"ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்."

என்ற கவிதை வரிகளும் "சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது." பிகேஎஸ்ஸின் இந்த வரிகளும் என்னை வெகுவிரைவாக சுந்தர ராமசாமி - பிரமிள் - இலக்கிய சர்ச்சையை நோக்கி இழுத்தது.

இடையில் ஜெயமோகன், "...ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத்தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்..." மரத்தடியில் எழுதியதைப் படித்திருந்தேன் - இதை ஜெ.மோ எழுதிய பொழுது சு.ரா உயிருடன் இருந்தாரா எனக்குத் தெரியாது ஆனால் நான் படிக்கும் பொழுது அவர் இல்லை. மேலும் ஜெ.மோ நினைவின் நதியில் என்ற சுந்தர ராமசாமியின் நினைவுகளைப் பற்றி எழுதியிருந்த சமயம். பெரிய உரையாடல் - கருத்துப் பரிமாற்றம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நடந்துகொண்டிருந்தது.

நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும் காலச்சுவட்டிற்கும் காண்டு என்று இதற்கு முன்னமே கூட படித்திருந்தேன். ஜெயமோகனின் "தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று" வரிகள் மற்றும் மேற்சொன்னவையெல்லாம் சேர்த்து என்னை இதைப்பற்றி நிறைய படிக்கவைத்தது.

இதற்குப்பின் நேரடியாக புத்தகத்தில் இருந்து படிக்காமல் இணைய நண்பர்கள் கிடைக்கும் தகவல்கள் என்று பிரமிள் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் நடந்த பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகமும் சுந்தர ராமசாமியின் "நினைவோடை - பிரமிள்" புத்தகமும் வாங்கினேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் முதலில் எடுத்தது பிரமிள் நினைவோடை - சுந்தர ராமசாமிதான்.

சொல்லப்போனால் இந்தப் பதிவை - நினைவோடை பிரமிள் - சுந்தர ராமசாமியின் புத்தக விமர்சனமாக பார்க்கலாம் தான்; பிரமீளைப் பற்றி நிறையப் படிக்காததாலும் புத்தகம் சுந்தர ராமசாமியினுடையது என்பதாலும் ஒருபக்கச் சார்பு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.



"பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்."

- புத்தகத்தின் பின்பக்க வரிகள்.

இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இது இலக்கியச் சண்டையைப் பற்றியதாக இருந்ததாலும் இதைப் பற்றி வெகுகாலமாக நான் தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்ததாலும் சுவாரசியமாகப் பட்டதா தெரியவில்லை. முன்னமே கூட ரமேஷ் - பிரேம்ன் பேச்சும் - மறுபேச்சுமில் வந்த உரையாடல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி, பிரமிளை சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சந்தித்து உரையாடி இரண்டு ஆண்டு ஒன்றாய் இருந்தது பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டின் பொழுதான காலங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

"சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ்.பொவின் 'தீ' பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயதில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம் தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. 'தீ' என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை..." இப்படித்தான் சு.ரா. பிரமிளைப் பற்றிய தன்னுடைய நினைவோடையைத் துவங்குகிறார்.

பிரமிளுக்கு எண்கணிதத்தின் மீது நம்பிக்கையிருந்ததால் அவருடைய பெயர் அவ்வப்பொழுது மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிறது. தருமூ அரூப் சிவராமூ என்பது தான் அவருடைய பெயர், அவர் இதை பெரும்பான்மையான சமயங்களில் வெவ்வேறான ஸ்பெல்லிங்கில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். ஏன் சட்டென்று எண் கணிதத்தில் நுழைந்தேன் என்றால் இதில் ஒரு பெரிய மேட்டர் உண்டு; வருகிறேன்.

சின்ன ப்ளாஷ்பேக் உடன், அதாவது பிரமிள் சுந்தர ராமசாமியுடன் தங்கியிருந்த பொழுதுகளில் அவருடைய பணத்தை சு.ராவிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். அதைப் பற்றி சு.ராவின் வார்த்தைகளில்...

"...நான் கடைக் கணக்குப் புத்தகத்தில் அவருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி அதில் அந்தத் தொகையைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு நாள் அந்தப் பேரேட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். கணக்குகளைச் சரிபார்க்க அல்ல. அன்று காலையில் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட்டிருக்கிறார். பழைய பெயரை மாற்றிவிட்டுப் புதிய பெயரில் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் 'ஒரு தடவை என்றால் செய்யலாம். நீங்கள் வாரத்திற்கு ஒரு பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களுக்கு எழுதும் போது, பிறக் பத்திரிகைகளுக்கு எழுதும்போது வேண்டுமானால் அந்தப் புதிய பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'அப்படியில்லை. எனக்கு ஒரு பெயரை மாற்றுவதானால் என் சம்மந்தப்பட்ட எல்லாப் பதிவேடுகளிலும் அதை மாற்றிவிட வேண்டும்' என்று சொன்னார்..."

அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லும் முன்னால், பெயரிலியின் இந்தப் பதிவு நினைவில் வந்தது. இதுவும் சொல்லப்போனால் பிரமிளின் இந்த பெயர் மாற்றும் வழக்கத்தை நையாண்டி செய்து வந்ததுதான்.

ஏன் நான் பிரமிளின் இந்த எண்கணித ஆர்வத்தை முதலில் எடுத்தேன் என்றால், பிற்பாடு சுராவுக்கும் பிரமிளுக்கும் பிரச்சனை வந்த பிறகு பிரமிள் சுராவின் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டில் ஒன்று சுரா தனக்கு பணம் பாக்கி தரவேண்டும் என்பது, இதில் எண்கணிதம் எங்கே வந்தது என்றால்; எண்கணித முறைப்படி சுராவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெயர் மாற்றம் செய்து தந்ததற்காகத்தான் அந்தப் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரமிள் சொன்னதுதான் அது. சு.ராவின் வார்த்தைகளில்,

"...ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம் தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும் இருந்தாலும் அப்படி எழுதினார்..."

இதே போன்ற கடிதத்தை பிரமிள் சுராவையும் பிரமிளையும் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறார். சுரா பணம் தரவேண்டிய பாக்கி இருக்கிறது என்று சொல்லி...

"...அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தெரிந்து ஒருவர்கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பல எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார். ஒரு நாள் கூட நானோ நம்பியோ அவருக்குச் செய்த நல்ல காரியங்களில் ஒன்றைக்கூட யாரிடமும் சொன்னது கிடையாது. நாங்கள் அவரைக் கவனித்துக்கொண்ட நாட்களில் சின்னச்சின்ன குறைகள், தவறுகள் நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. முழுத்தவறும் அவர் பக்கம்தான் இருக்கிறது; எங்கள் பக்கம் தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு மனித உறவில் அடிப்படையாகச் சில விஷயங்கள் இருக்குமே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்துவந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது..."

சுராவுக்கும் பிரமிளுக்குமான பிரச்சனை நடந்துகொண்டிருந்த பொழுது சுரா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. இன்றும் கூட மக்கள் சுராவின் மோனநிலை என்று நக்கல் செய்வதைப் பார்க்கமுடியும். அதற்கான விளக்கம் கூட இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

"...அவர் பலரைப் பற்றித் திட்டி நிறைய எழுதியிருக்கிறார். செல்லப்பா பற்றி, சாமிநாதன் பற்றி, ஞானக்கூத்தன் பற்றி, என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நானொரு முடிவு செய்திருந்தேன். அவர் என்ன சொன்னாலும் நாம் அதற்குப் பதில் எழுதக்கூடாது என்று. அதற்கான சக்தி எனக்குக் கிடையாது. நான் ஏதாவது பதில் எழுதினால் அதை வைத்துக்கொண்டு இன்னும் பல அஸ்திரங்களை அவர் பிரயோகிக்க ஆரம்பிப்பார். எனக்கு மட்டும் புரியும்படியாகச் சில விஷயங்களைச் செய்வார். அதன் பின் எல்லோருக்கும் புரியும்படியாக ஒன்றைச் செய்வார். 'அவர் ரொம்பவும் அழுகியவர், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள்' என்று சொல்ல ஆரம்பிப்பார். எனவே நான் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். அவர் இந்தியாவுக்கு வந்து தங்கி அவர் கடைசியில் மறையும் வரை அவரைப்பற்றி ஒரே ஒரு நெகட்டிவ்வான வாக்கியம்தான் நான் எழுதியிருக்கிறேன். யாத்ராவில் வெங்கட் சாமிநாதனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு இடத்தில் குழந்தைகளைக் கள்ளம் கபடமற்றவர்களாகச் சித்தரிப்பது பற்றி எழுதியிருந்தேன். அதில் குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்று சொல்வதானால் யாத்ரா இதழை எடிட் செய்யும் பொறுப்பை என் குழந்தை தங்குவிடம் தந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு சிவராமூவைப் பற்றி அதில் இணைத்துப் பேசியிருந்தேன். அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இருநூறு பேரிடமிடமாவது சிவராமூ சொல்லிக் காட்டியிருப்பார். ஏதோ நான் கத்தியால் குத்தியதுபோல் அதை ஆக்கிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் பலருக்கும் நான் சொன்னது தவறு என்றுதான் பட்டிருக்கும். நான் அவர் சொன்ன விஷயங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. ஜெயமோகன் என்னுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்..."

நகுலனைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார் சு.ரா.

"...நகுலனுடைய படைப்புக்கள் சிவராமூவின் உலகத்தோடு நெருக்கமுடையவையாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பொதுவான பார்வை, அக்கறைகள் இருப்பது போலாத்தான் எனக்குப் படுகிறது. என்ன காரணத்தினாலோ சிவராமூவுக்கு நகுலனின் கவிதைகள் பேரிலும் சரி, கதைகளின் பேரிலும் சரி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவேயில்லை. நகுலனுக்கு சிவராமூ பேரில் ஆர்வம் இருந்தது..."

நகுலன், பிரமிளைச் சந்திக்க விருப்பமுடன் இருந்ததாக சு.ரா. சொல்கிறார் அப்படி ஒரு சமயம் பிரமிள் சு.ராவின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நகுலன் பிரமிளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். சுராவும் பிரமிளின் பெயரில் உரிமையெடுத்து அவரை பார்க்க வரச்சொல்லி நகுலனுக்கு கடிதம் அனுப்ப பிரமிளுக்கு கோபம் வந்திருக்கிறது.

"...'நீங்கள் எப்படி என்னைக் கேட்காமல் எழுதிப் போடலாம்' என்று கேட்டார் அவர் வந்து உங்களைப்ப் பார்த்துவிட்டுப் போகப்போகிறார் அவ்வளவுதானே என்று சொன்னேன். 'அவரைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் தானே தவிர நீங்கள் அல்ல. நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், சிவராமூவுக்கு உங்களைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று எழுதிப்போடுங்கள்' என்றார் நான் சொன்னேன், 'வேண்டாம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் உங்களைக் கேட்காமல் எழுதிப் போட்டது தவறுதான். அந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதிப்போட்டுவிட்டேன். அவர் வரட்டும். நீங்கள் ஒரு அரைமணிநேரம்ம் இருந்து பேசிவிட்டுப் போங்கள். வரவேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுத என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னேன்'...

நகுலன் ரொம்பவும் பிரயாசைப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரமிள் அந்த முறை நகுலனைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டாராம். இதனால் நகுலனுக்கு சுராவின் பெயரில் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்தான் ஏதோ விளையாடுகிறார் என்று. இப்படியே விரிகிறது இந்தப் புத்தகம் வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான உறவைப் பற்றிக் கூட இந்தப் புத்தகம் பேசுகிறது.

பிரமிளைப் பற்றிய வேறு சில நல்ல விஷயங்களையும் பேசுகிறது.

"...ஒருதடவை அவர் டெல்லியில் இருந்தபோது க.நா.சுவைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார். அந்தப் பேட்டியை அருமையக எடுத்திருந்தார். அந்தப் பிரதியை என்னிடம் தந்து வைத்திருந்தார். நான் எங்கேயோ கை தவறி வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அவர் அந்தப் பேட்டியைத் தாருங்கள் என்று கேட்டபோது, இரண்டு நாட்களில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தததோ அப்போதெல்லாம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொல்லலாம்; அல்லது கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொல்லலாம்; அது வெளிவரவிடாமல் தடுக்க முயல்வதாகச் சொல்லலாம் என்று எனக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவரிடம் தயங்கியபடி, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். 'கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நானாக இருந்தால் 'எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருந்தேன், இப்படிக் கவனக் குறைவாக இருந்துவிட்டீர்களே' என்று கேட்டிருக்கத்தான் செய்திருப்பேன். ஆனால் அவர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டார். அந்தக் கட்டுரை அதன் பின் கிடைக்கவேயில்லை. நிச்சயமாக அது ஒரு இழப்புதான். அவரும் க.நா.சுவை அதன் பின் பேட்டி கண்டு எதுவும் வெளிவிட்டிருக்கவும் இல்லை. நான் என் கைவசம் இருக்கும் பொருட்களைப் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒரு தடவை அலசிப் பார்த்து வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். அப்படி எத்தனையோ தடவை தேடிப் பார்த்தபோதும் அந்தக் கட்டுரை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அவர் என்னிடம் கொடுத்த ஆங்கில நாவலை அவரிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலை நான் படுத்துப்படித்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான் அந்த நாவலே ஆரம்பமானது. அப்போது அந்த விதமான நாவல்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கவில்லை. ஹென்றி மில்லர் போன்றோரின் படைப்புகளை எல்லாம் அதன் பின் தான் படித்தேன். மேற்கத்திய படைப்பாளிகள் பலர் ஆபாசத்திலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து உயர்ந்த ஒரு தளத்திற்கு நகர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் பெரும்பாலும் அப்படியான ஒன்று நடக்கவில்லை. வெறும் ஆபாசத்தைத் தூண்டுவது என்பதாகவே அது முடிந்திருக்கும். சிவராமூவின்ன் அந்த நாவல் அப்படியான வேறொரு தளத்திற்கு நகர்ந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் அந்த நாவலை முழுவதுமாகப் படிக்க முடிந்திருக்கவில்லை..."

இப்படி அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் நிறையவற்றை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்தான்.

"அதிகம் அவரைப் பற்றி எதிர்மறையான அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொன்னதுபோல் தெரிகிறது. அவருடனான உறவில் இருந்த சாதகமான அம்சங்கள் ஏதாவது சொல்லமுடியாமா?" என்ற கேள்விக்கு

"நான் திட்டமிட்டு அவர் மீதான எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை. அவருடனான என் உறவு அப்படியான சம்பவங்களால்தான் நிறைந்திருக்கிறது. இது ஏதோ என் அனுபவம் மட்டுமல்ல. பெரும்பாலோனோருக்கு அப்படியான அனுபவங்கள் தான் இருந்திருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். வெங்கட் சாமிநாதன் பேரிலும் சிவராமூவுக்கு ஏகதேசம் இதே அளவு வெறுப்பு இருந்தது. நாங்கள் இருவர் மட்டும்தான் அவரை நம்பி ஏமாந்திருந்தோம். மற்றவர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருந்திருக்கவில்லை. மற்றவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், அதில் முறிவு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவு தான். நாங்கள் இருவர்தான் சிவராமூவை நாம் பாதுகாத்து வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான செயல்களைச் செய்தும் வந்தோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எனவே ஏமாற்றமும் வருத்தமும் எங்களுக்கு அதிகமாக இருந்தது..." என்று பதில் சொல்கிறார் சு.ரா.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய overall opinion ஆக இதையே சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் என்னுடைய விருப்பு வெறுப்பு காரணமாக அமைந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் புத்தகத்தைப் பற்றியோ சு.ரா. & பிரமிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டுகிறேன். வெட்டி ஒட்டும் பகுதிகள் பல சமயங்கள் தவறான பொருளைக் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால் இந்த டிஸ்கி.

பிரமிளின் கவிதை ஆளுமை பற்றி பெரிய அளவில் இந்த புத்தகம் விவரிக்கவில்லை, ஆனால் அங்கங்கே பிரமிளின் திறமையைப் பற்றி சுரா சொல்லி வந்திருக்கிறார் தான். பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாகவே பிரமிளின் கவிதைகள் இருந்திருக்கின்றன என்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரமிளின் திறமையில் கவரப்பட்டவராகவே சு.ரா இருந்திருக்கிறார். ஆனால் அவருடனான நேரடிப்பழக்கம் அந்தத் திறமையை கருத்தில் கொள்ள முடியாத அளவிற்குச் செய்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் கொஞ்சம் பதிவுகள் பிரமிளைப் பற்றி...

ரோசா வசந்தின்
மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.
அறைகூவல்

மு. சுந்தரமூர்த்தியின்
பிரமிள் கவிதைகள் - 1
பிரமிள் கவிதைகள் - 2
பிரமிள் கவிதைகள் - 3
பிரமிள் மேலும் சில குறிப்புகள்

PS: வலையுலகிலும் பிரமிள் - சுரா சார்ந்து காலச்சுவடு - எதிர் அரசியல் உண்டு. எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல் புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி

நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான்.

"...பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்" நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை..."

என்று கோவை வலைபதிவர் சந்திப்பின் பின் எழுதி நான்கு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அள்ள அள்ளப் பணத்தை கைகளில் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதற்கு நானொருவனே தனிப்பட்டமுறையில் காரணமாகயிருக்கமுடியும். பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்டென்று சனியனாய் முளைத்த இன்னொரு பிரச்சனை. பிரச்சனைகள் முடிந்து ஆராம்சேயாய் உட்கார்ந்த நேரம் பங்குச்சந்தை மீண்டும் இன்னொரு உச்சத்தை எட்டியிருந்தத்து 19,000 BSE.

என் கியூபிக்கில் அமர்ந்திருக்கும் மற்ற இரு நபர்களுமே பங்குச்சந்தையில் கொட்டை போட்டவர்கள் என்று சொல்லலாம் - ஒரு நபர் ஏறக்குறைய 5 லட்சங்களுக்கு இன்வெஸ்ட் செய்துவிட்டு எப்பொழுதும் ICICI Directன் பக்கத்தை திறந்து உட்கார்ந்திருப்பார்(10.30 - 3.30) பின்னர் அன்றைய நாளுக்கான Analysis நடக்கும் 3.30க்குப் பின்னர். இப்படி நாளொன்றுக்கு சரியான அளவிளான நேரத்தை பங்குவணிகத்தில் செலவிட்டால் மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரார்களா என்று கொஞ்சம் சுயநேர்மையைக் கேள்வி கேட்கும் புண்ணியவான்களுக்கு(!!!) பதில் என்னிடம் இல்லை வேண்டுமானால் உண்மையில் எங்கள் முதலாளியிடம் இருக்கலாம். ஆனால் எங்கள் வேலையில் மீது திருப்தி இல்லாவிட்டால் மாதாமாதம் சம்பளமும் கொடுத்து வருடக்கடைசியில் போனஸும்/அப்ரைசலும் கொடுப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை 'கோடி'களில் புலங்குபவர்கள் முட்டாள்களாக இருப்பார்களோ! ம்ம்ம் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் பதிவெழுதுவதில்லையே!

அப்படிப்பட்ட ஒரு நல்லநாளில் தான் நானும் ICICIல் Demat அக்கவுன்ட்டும் ட்ரேடிங் அக்கவுன்ட்டும் தேவைகளுக்காக ஒரு சேவிங் அக்கவுன்ட்டும்(Shaving இல்லை saving) திறந்தேன். அதற்கு நாட்கள் அதிகமானதாலும் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யும் நிலையில் இருந்ததாலும் நண்பருக்கு 10,000 ரூபாய் அனுப்பி ஷேர் வாங்கச் சொல்லி என்னுடைய ட்ரேடிங் வாழ்க்கையைத் தொடங்கினேன். உண்மையில் ரிஸ்க் எடுப்பதில் எனக்கிருக்கும் இயல்பான விருப்பம் தான் என்னை இதில் இறங்கச் சொன்னாலும் சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் I & II அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது என்று சொல்லலாம்.

உண்மையில் நான் என்ன விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேனோ அதைத் தெளிவாக விளக்கியது அள்ள அள்ளப் பணம் புத்தகம். ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரைகளாகவும் நண்பர்களுடன் இந்தி/ஆங்கிலத்தில் உரையாடல்களாகவும் என் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியிருந்தேன் என்பதால் என்னுடைய தேடல் எது என்று எனக்குச் சரியாகத் தெரிந்திருந்தது ஆனால் இப்படி புதிதாய் ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்போகும் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிந்து எழுதப்பட்டிருப்பது அதிசயம் என்று தான் சொல்வேன் நான்.

ஓவராய் தியரியாகச் சொல்லி போரடிக்காமல் அதே சமயம் வெறும் ப்ராக்டிக்கல் அப்ரோச்சாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் முக்கிய காரணம். கூட வேலை செய்யும் டிரேடிங் புலிகளிடம் இப்படி ஒரு விஷயம் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்படி ஒன்றும் ஆதரவு அலைகள் எதுவும் எழவில்லைதான். சொல்லப்போனால் மிரட்டியவர்கள் தான் அதிகம் - அதிலும் இன்வெஸ்ட் செய்யும் நண்பர்களே கூட! ஆச்சர்யமாயிருக்கிறதா - எனக்கு இல்லை.

சரிதான் என்று நினைத்தவனாய் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி Reliance Energy ஒரு ஷேர் 1475 க்கு என்று 10,000 ரூபாய்க்கு 6 ஷேர் வாங்கிப் போட்டேன் வெள்ளிக்கிழமை(19/10/2007). சாயங்காலம் 1350ல் நின்றுகொண்டிருந்தது. சோம.வள்ளியப்பன் புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் இரவு - பகல் லாஜிக் என்று நினைத்து நான் ஒன்றும் பெரிசாய் கவலைப்படவில்லை. என் மனதில் ஒரு கணக்கு இருந்தது 20% அதிகம் அவ்வளவே. அது இரண்டு நாளில் கிடைத்தாலும் சரி - ஒரு வருடத்தில் கிடைத்தாலும் சரி என்று. மார்கெட், நண்பர் சொன்னது போலவே அடுத்த ட்ரேடிங் நாள் முன்னோக்கி நகர நான் காத்திருந்தேன் அடுத்த செவ்வாய் கழிந்து புதன்(24/10/2007) வரை என் கணக்கு 20% க்கு மேல் வந்த நிலையில் 1670 ரூபாய்க்கு சட்டென்று அவரிடம் விற்கச் சொல்லிவிட்டேன். மூன்று நாட்களில் 20% லாபம் சொல்லப்போனால் 2000 ரூபாய். இதை இங்கே சொல்ல வந்ததன் காரணம் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் மாமா என்னிடம் ஷேர் மார்கெட்டைப் பற்றி படித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டோ இரு என்று சொன்ன பொழுது என் வயது 16 - 17 இருக்கும். நான் உண்மையில் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது வயது 24 சொல்லப்போனால் 7 ஆண்டுகள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆனால் என்னுடைய பைனான்சியல் பொஸிஷன் அப்படி என்று வைத்துக் கொண்டாலும் பைனான்ஸியலி நான் ஸ்ட்ராங்கான கடைசி மூன்று வருடங்களில் கூட நான் அதைச் செய்யவில்லை. இப்பொழுது தான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். இன்று நான் லாபம் சம்பாதித்ததைப் பற்றி பெருமை பேச இதைச் சொல்லவில்லை, பணம் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாய் டிரேடிங்க் செய்யச் சொல்லவும் இதை எழுதவில்லை. எனக்குத் தெரிந்து அள்ள அள்ளப் பணம் புத்தகத்தை வாங்கி ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அவ்வளவே.

ஏன் என்றால் ட்ரேடிங்க் செய்வதென்பது பணத்துடன் சம்மந்தப்பட்டது இன்னமும் பணத்தை லக்ஷ்மிகரமான விஷயமாக நினைத்து வேடிக்கைக்கான ஒன்றாக விளையாட்டாக பயன்படுத்த நிறைய பேருக்கு பயம் இருக்கும். என் அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் ஒரு மணி நேரம் வேறெதாவது விஷயத்தைச் சுத்திச் சுத்தி பேசி கடைசி ஐந்தாவது நிமிடத்தில் இங்கே வந்து நின்று கேட்பார் இது தேவையா என்று! ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒருமுறை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

----------------------------------

இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் - கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் - சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.

வழக்கம் போல் காலச்சுவடு - உயிர்மை - கிழக்கு தான் என் நோக்கமாகயிருந்தது. மூன்றிலும் இந்த முறை கொஞ்சம் அதிக புத்தகம் அள்ளினேன் என்று நினைக்கிறேன். ஆனால் வாரநாட்களில் மழை பெய்ததால் இரண்டாம் நாள் சனிக்கிழமையும் ஒன்பதாம் நாள் சனிக்கிழமை மட்டுமே புத்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கிழக்கில் ரெகுலர் கஸ்டமர்னு சொல்லி 15% டிஸ்கவுண்ட் கொடுத்ததை இங்கே குறிப்பிட வேண்டும் என்னை மீண்டும் நினைவில் வைத்திருந்தவரின் பெயர் நினைவில் இல்லை; போன தடவை பெங்களூர் புத்தகச் சந்தைக்கு வந்திருந்தீங்க இல்லையா என்று கேட்டார்! என்னை சென்னை புத்தக சந்தையிலும் அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. போன தடவை போல் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தோ என்னமோ இந்த முறை கிழக்கே கிரடிட் கார்ட் ட்ரான்ஷாக்ஷன் செய்யும் வசதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவரிடம் இந்த முறையும் அதே கி.மு - கி.பி மதன் புத்தகத்தைக் காண்பித்து அருமையான புத்தகம் சார் வாங்கிக்கோங்க என்று மற்றொரு விற்பனைப் பிரெதிநிதி சொன்னார். மதன் எதுவும் காசுகொடுத்து ஆள் செட்டப் பண்ணியிருக்காரா கிழக்கில் தெரியாது!

ஜெயமோகனின் காடு, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே Anyindian.comன் ஷாப்பிங்க் கார்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. சரி இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆட்டையைப்(காசு கொடுத்துத்தாம்ப்பே) போட்டுடலாம்னு நினைச்சேன் ஆனால் ஜெமோவை யாருமே எடுத்துவரலை(சில புத்தகங்கள் உயிர்மையில் இருந்ததுன்னு நினைக்கிறேன் - அங்கே தான் நினைவின் நதியில் வாங்கினேன்). வேறென்ன செய்ய ஷாப்பிங் கார்ட் காலியாய்டுச்சு இப்ப ;-). காலச்சுவடில் பிரமீள் நினைவோடை - சுந்தர ராமசாமி வாங்கினேன், ஒரே இரவில் அதுவும், நினைவின் நதியில் - ஜெயமோகனும் தொடர்ச்சியாகப் படித்தேன் கொடுத்து வைச்சிருக்கணும் நான்; இப்படி ஒரு காம்பினேஷன் கெடச்சதுக்கு. விமர்சனம் வருது வருது.

பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக - இந்துமதி - லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).

என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீயும் என்கூட வாயேன் கொஞ்சம் புஸ்தகம் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் முதல் வாரத்தில் இருந்து முதல் வாரம் எஸ்கேப் ஆகியிருந்தேன். அடுத்தவாரம் மாட்டிக்கொண்டேன்(ஹாஹா) அவர் மனைவி மற்றும் மாமியார் உடன் புஸ்தகம் வாங்க வந்திருந்தார் - ஜாவாவில் Head First Java வாங்கிக்கச் சொல்லிவிட்டு தமிழில் தாயுமானவன் - பாலகுமாரன் மட்டும் சஜஸ்ட் பண்ணினேன்.(பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது). அவர் விகடனில் நுழைந்து 'இவன் தான் பாலா' வாங்கினார் அங்கே அவரைத் திட்டினேன் அதை வாங்குவதற்காக. நான் வாலியின் கிருஷ்ண விஜயம் 1 & 2 வாங்கினேன்(வெறும் மணியம் செல்வம் ஓவியத்திற்காக).

நான் வாங்கிக் குமிப்பதைப் பார்த்த நண்பரின் மாமியார் "தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலிருக்கே" என்று கேட்டார் எனக்கு முதலில் உள்குத்து புரியலை. நானும் எப்பவும் சொல்றதைப் போல், "இல்லம்மா எனக்கு இன்னும் கல்யாண வயசாகலை, 24 தான் ரன்னிங்..." பாவமேன்னு சொன்னேன். அப்புறம் அந்தப்பக்கமா திரும்பி அவங்க பொண்ணுக்கிட்ட "பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு" சொல்ல எனக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. ஆனால் இதெல்லாம் நடந்த உண்மை பதிவு செய்து வைக்கிறேன்(ஹாஹா).

பின்னர் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட நண்பர் கால்டாக்ஸி அரேன்ஞ் செய்துகொண்டார். நான் கீர போண்டாவில் புத்தககுவியலுடன் அல்ஸூரை நோக்கிப் பயணித்தேன். என் கம்பெனி கொடுத்த மிக அருமையான ப்ரொடக்ட்டான(என் கம்பெனி ஒரு ப்ரொடக்ட் ஓரியண்ட்டட் கம்பெனி - ஆனால் Bag தயாரிப்பில் இல்லை) Bagன் மீதான நம்பிக்கையில் அடாத மழையிலும் கிளம்பினேன். சுமார் 10 கிலோமீட்டர் இருக்கணும்(கூடவும் இருக்கலாம்) ஒரு சொட்டு தண்ணி கூட பைக்குள்ள வரலை!!!. அருமையான பை ஒன்றைக் கொடுத்த எங்க கம்பெனிக்கு ஒரு ஓ!!!

நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சிக்கு போவதுவும் புத்தகம் வாங்வதும் அதைப் புகைப்படமாய் போடுவதும் விமர்சனம் எழுதுவதும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளத்தான் ஆனால் அப்படியெல்லாம் செய்தால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்று சொன்னார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். கீழிருக்கும் புகைப்படங்களும் ;-)


பெரிதாய் தெரிய புகைப்படத்தின் மேல் கிளிக்கவும்...

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In புத்தகங்கள்

அரசூர் வம்சம்

முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற விஷயம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின் இந்தப் புத்தகம் கூட அப்படித்தான். நான் இணைய உலகில் பரவலாக நடமாடத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தைப் பற்றிய பெயரளவிலான அறிமுகம் கிடைத்திருந்தது. அது ஒரு சுவாரசியமானக் கதை என்பதால் அதை முன்னே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாய் ஒரு தாத்தா, காரைக்காலைச் சேர்ந்தவர் அவரிடம் இன்னமும் இருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தும். Dictionary of Contemporary English என்ற புத்தகத்தைத் தேடி அவர் டெல்லியின் புத்தக சந்துகளைத் துளைத்தெடுத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான சில துப்பாக்கிகளைப் பற்றிய புத்தகத்தையும் அவர் தேடி வாங்கிக் கொண்டு போனார். அப்படி அவருக்கு எங்கேயோ எவராலோ சொல்லப்பட்ட புத்தகம் தான் அரசூர் வம்சம்.

நான் இதைப் பற்றி இரா.முருகனுக்கு ஒரு மெய்ல் அனுப்பியதாக நினைவு.(முதலில் தவறுதலாக அந்த விஷயத்தை இராம.கி.க்கு பின்னூட்டமாக அனுப்பினேன் ;)) எனக்குத் தெரிந்து திருக்கடையூர், தில்லையாடி பக்கத்தில் ஒரு அரசூர் உண்டு. கொஞ்சம் போல் காரைக்கால் பக்கம் வரும், முதலில் தாத்தா அந்த ஊரைப் பற்றித்தான் கதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவர் இந்தப் புத்தகத்தைத் தேடினார். ஏனென்றால் அந்த அரசூரைப் பற்றி எழுதியிருந்தால் தன்னைப் பற்றி(அல்லது அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி) நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்லித்தான் தேடினார்.

அவருடைய தேடுதலுக்கு கிடைக்காத அளவிற்குத்தான் அந்தச் சமயத்தில் அரசூர் வம்சம் இருந்தது. நானும் ஹிக்கின் பாத்தம்ஸில் தேடியிருக்கிறேன் சில சமயம்; ஆனால் அகப்படவில்லை. இப்படியாகக் கிடைத்த அறிமுகம் சிறிது நாளில் மறந்து போக, பிரகாஷ் ஏதோ ஒரு இடத்தில் உலக அளவில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் என்றோ இல்லை அதைப் போன்ற ஒன்றையோ சொல்ல அங்கிருந்துதான் கிளம்பியது அரசூர் வம்சம் இரண்டாவது தேடல். ஆனால் மிகச்சரியாக கூகுள் மூலமாக நான் திண்ணை நோக்கி வந்து சேர்ந்தேன். திண்ணையில் மின்னிதழாக கதையின் பாதி வரை முடித்திருந்தேன், ஆனாலும் என்னவோ ஒன்று குறைவது போலவேயிருந்ததால் புத்தகமாகவே வாங்கியதைப் பற்றி முன்பே சொல்லியிருந்தேன்.

நாவலைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை திரும்பத்திரும்ப புரட்டி இதை எழுதுகிறேன்.

"நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா?"

இந்த வசனம் நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் வருவது(280 பக்கம் வேண்டுமானால்). எனக்குத் தெரியவில்லை இதன் பின்னால் இருக்கும் "அரசியல்" எத்தனை பேருக்கு சுலபமாகப் புரியும் என்று. அரசியல் என்று குறிப்பிட்டது அதன் பின்னர் இருக்கும் விஷயத்தைப் பற்றி குறிப்பிடவே.

எங்கள் வீட்டிலெல்லாம் ஒரு பழமொழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னவென்றால் "முட்டாத் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் சேர்ந்தா வேலைக்காகாது" என்பதுதான். வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும் அது முட்டா துலுக்கனா, முட்டா நாயக்கனா என்பதைப் பற்றி. அவர் சொல்லியிருக்கும் அந்த மேற்கூரிய வசனத்திலும் கூட இந்த பழமொழியை அடிப்படையாக வைத்தே எழுதியிருக்கிறார். எங்கள் பக்கத்தைச் சேர்ந்த பழமொழி என்பதாலும் அடிக்கடி, "எங்க வீட்டாளுக(ஆம்பளை) டிஸிஷன் மேக்கிங்கில் தவறு செய்யும் பொழுதெல்லாம்", எப்படியென்றால் பழமொழி மாற்றப்பட்டு; முட்டா நாயக்கனாகவும், முரட்டு துலுக்கனாகவும்.

நான் ஏன் இதை சொல்ல வருகிறேன் என்றால் இந்த பழமொழியைப் பற்றித் தெரியாத ஒருவர் நாவலைப் படிக்கும் பொழுது இந்த இரண்டு வரிகளை கடந்து போய்விடுவது எளிது; அதாவது விஷயம் புரியாமல். இப்படி நிறைய விஷயங்களை நுண்ணிப்பாக கவனித்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் இரா.முருகன். இந்த நாவலைப் படித்தவுடனேயே ரிவ்யூ போன்ற ஒன்றை எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஒன்றை எழுதுவதற்கு முன்பு அதை இன்னும் இன்னும் மீள்வாசிப்பு செய்யப்படவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

நாவலின் உரையாடல் மொழி இடத்திற்கு இடம் மாறுபடுவதும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் எழுதுவது போன்ற நடையில் அந்தப் பாகம் இருப்பதும் படிக்கப்போய் இந்த ஆளால் எப்படி மூன்று வித்தியாசமான உரையாடல் மொழிகளில் தேர்ச்சி பெற்று இருந்திருக்க முடியும் என்ற வியப்பே எழுகிறது. தமிழ்நாட்டு பிராமணர் பாஷை, கேரளாவை மையமாகக் கொண்ட பிராமணர்களின் பாஷை; பிறகு அந்தக் கால ஜமீன்களின் பாஷை கைவந்திருக்கிறது லாவகமாய். மூன்று வித்தியாசமான்ன கதைகளையும் கதைக்களன்களையும் பாத்திரங்களையும் அவர் தனித்தனியே எழுதியிருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலுமே வியப்பே மிஞ்சியிருக்கிறது.

பிறகு நாவலின் அடிப்படை நாதமாக இருக்கும் மேஜிக்கல் ரியலிஸம்; ராஜாவுடன்(ஜமீன்தார்) அவருடைய இறந்து போன முன்னோர்கள் பேசுவது, மூன்று தலைமுறைக்கு முன்னர் இறந்து போன ஒரு பெண்ணுடன் நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவன் கூடுவது இப்படி உதாரணத்திற்காக இரண்டு சொல்கிறேன். நாவல் பின்னப்பட்டிருக்கும் கதையில் மாந்தரீக யதார்த்தம் தான் மிகமுக்கியமான விஷயம்.

எங்கள் வீட்டில் என்னை வளர்த்த என் அப்பாவின் அம்மா இருந்தார்கள். நாங்கள் எங்கள் பாஷையில் "பாச்சம்மா" என்றுதான் அழைப்போம். எனக்கு அதற்கான அர்த்தம் அவ்வளவு எக்ஸாக்ட்டா தெரியாவிட்டாலும் ஒரு வகையில் பாட்டி என்று தான் வரும். அம்மா சின்ன வயதில் என்னை பாட்டியிடம் விட்டுவிட்டு டீச்சர் டிரைனிங் படிக்கப் போய்விட்டதால் என்னை வளர்த்தது எல்லாமே பாட்டி தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கெல்லாம் ரொம்பவும் முந்தைய ஜெனரேஷன் என்பதால் அந்தக் கால வழக்கப்படி ஆண் பிள்ளைக்குத் தான் அதிக சப்போர்ட் கிடைக்கும்; அவருடைய செல்லம் நான். எனக்குத் தெரிந்தே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு என் சப்போர்ட்டாக வரும் ஆள்(ஒரே) அவர்தான். அந்தக் காலத்திலிருந்து அம்மா அப்பா இருவரும் அக்கா சப்போர்ட்.

அவருக்கு கடைசி காலங்களில் மனநிலை கொஞ்சம் தடுமாறியிருந்தது. அவருடைய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்தவன் என்ற முறையில் நிறைய விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதாவது அவர் தன்னுடைய காலத்து மக்களிடம்(அனைவரும் இறந்தவர்கள்) பேசிக்கொண்டிருப்பது; எப்படி என்னிடம் அப்பா அம்மாவிடம் பேசுவாரோ அப்படி. உன்னிப்பாகக் கவனித்தால் அவரை சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து கொண்டோ இல்லை நின்று கொண்டோ, சுவற்றில் சாய்ந்து கொண்டோ பேசுவதைப் போல ஒவ்வொரு பக்கமும் திரும்பி அந்தந்த நபர்களின் பெயர்களைச் சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார்.

என்னால் கதையுடன் ஒன்றி படிக்க முடிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்க முடியும். வேண்டுமானால் எங்கள் குடும்ப பின்னணி என ஒருவாறு கதை என் கண்முன்னே நடப்பதைப் போன்ற பிம்பம் உருவானது என்றே சொல்லலாம். மந்திரம் வைப்பது, அதை எதிர்க்க தகடு வைப்பது, சாப்பாட்டில் மருந்து போடுவது, குடும்பத்திற்கே சூனியம் வைப்பது போன்ற "டெர்ம்"கள் எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக புலங்கும் விஷயங்கள் தான். இதன் காரணமாக என்னால் இந்தக் கதையைப் பற்றிய கேள்விகளை விடவும் ஒன்றத்தான் சுலபமாக முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றிய விமர்சனத்தை எப்படி வித்தியாசமாக(என்ன கொஞ்சம் "A"த்தனமாக, சுத்திச் சுத்தி, கொஞ்சம் சுயத்தைச் சொறிந்து கொண்டு) எழுத முடியும் என்று தான் யோசிக்கிறேன்(;-)). ஆனால் இந்தக் கதையில் அப்படி எழுத முடியாத அளவிற்கு விஷயம்; என்னவென்றால் இந்த நாவல் முழுவதுமே கதையுடன் பின்னிப்பிணைந்து இருப்பது அடல்ஸ் ஒன்லி கண்டெண்ட் தான். கதையையும் இந்த விஷயத்தையும் தனித்தனியே பிரித்தறிவதென்பது ரொம்பக் கடினமான விஷயம்.(இதுவும் நான் இந்த நாவலை படிக்க ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை :)).

கதையென்ற ஒன்று பெரிதாகக் கிடையாதென்றாலும் நாவலை நகர்த்திக் கொண்டு போவதற்கான கதை நிச்சயமாய் நாவலில் உண்டு. நாவலில் இருந்து பிடித்த வரிகளை பிடித்துப் போட்டு அது சொல்லும் விஷயங்களை விளக்க எனக்கும் விருப்பம் தான். ஆனால் இந்த நாவலில் வரும் எனக்குப் பிடித்த வரிகளையோ வாக்கியங்களையோ எடுத்துப் போட நான் நினைத்தால் அது வம்பாகிவிடும் எப்படியென்றால் அப்புறம் திண்ணை ஆட்களும் இரா.முருகனும் உதைக்கவருவார்கள் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆனால் எக்ஸாம்புள்காக இரண்டு விஷயங்கள்.

"குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ"

"முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்"

இவையெல்லாம் நாவலின் இடையில் வரும் சில பாடல் வரிகள். சில படங்களைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற வியப்பு ஏற்படும். அதைப் போல இந்தக் கதையை எப்படி எழுதியிருக்க முடியும் என்ற வியப்புத்தான் மேலெளுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லாம் கற்பனையாக இல்லாமல், எல்லாம் நிஜமாகவும் இல்லாமல் ஒரு எப்படி எழுதியிருக்க முடியும் என்று நாவலின் இரண்டு பக்கங்களை படிக்கும் பொழுது வியப்பளிப்பதாக இருக்கிறது.

"காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.

இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச்செய்ய, காலம் காலமாகப் படைபாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள் 'அரசூர் வம்சம்' நாவலும் அப்படி ஒரு முயற்சியே" என்ற பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை வரிகள் தான் மனதில் ஓடுகிறது கதைக்கான விமர்சனம் எழுதவேண்டும் என்று உட்காரும் பொழுது. காலத்தை நிறுத்தி, தட்டு, ஒடுக்கி முன்னும் பின்னுமாக எழுதியிருக்கும் இரா.முருகனின் எழுத்துக்களோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.

ஜமீந்தார் உப்பை தன் மடியில் கட்டிக்கொள்ளும் பொழுது நாம் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். சுப்பம்மா கிழவி "அடல்ஸ் ஒன்லி" பாட்டு பாடும் பொழுது ஆரம்பத்தில் கேட்கத் தொடங்கி பின்னர் காதை பொத்திக் கொள்கிறோம். சாமிநாதனும் வசுமதியும் அறைக்குள்ளே "மேட்டர்" செய்யும் பொழுது கதவருகில் நின்று பார்க்கிறோம் பின்னர் சாமிநாதனோடு வீடு எரியூட்டப்பட்டதும் வெக்கையில் நிற்கமுடியாமல் "ஐயோ பாவம்" என்று அலறியடித்து வெளியேறுகிறோம். "உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது" என்று கிட்டாவய்யனைப் பார்த்து பைராகி சொல்லும் பொழுது மனம் பதறுகிறது.

"ஆமா அப்பு, என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதப் பத்தி வக்கணையாத் தெரியும். இப்பப் பார்த்ததோட வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்ல சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல." என்று ஒரு கிழவி, புஸ்திமீசைக் கிழவனைப் பற்றி நக்கல் அடிக்க நாமும் சிரித்துக் கொள்கிறோம் இப்படி கதையினூடே நம்மையும் அழைத்துச் செல்லும் எழுத்து நடை இரா.முருகனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கும், என் பெயர் ராமசேஷனுக்கும் பிறகு புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் பிரித்து படிக்கும் மற்றொரு புத்தகமாக எனக்கு அரசூர் வம்சம் கிடைத்திருக்கிறது.

நிச்சயமாக எழுத்துத் துறையில் கால் பதிக்கவோ இல்லை அதை நோக்கியோ நகரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறவர்கள் நிச்சயமாய் பலமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அரசூர் வம்சம் என்றால் அது மிகையாகாது.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

Popular Posts