In மோகனீயம்

மோகனீயம்

மெல்லியதாய் கிஷோர் குமாரின் பாடலொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த பொழுதொன்றில் சட்டென்று மின்சாரம் தடைபெற்று பரவிய மௌனத்தின் வழியே அவளைப் பற்றிய வித்தியாசமான அறிமுகம் கிடைத்தது. "விசு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீங்க!" அறைத் தோழன் அந்தச் சமயத்தை உதவி கேட்க பயன்படுத்தியக் காரணம் பின்னர் எனக்குப் புரிந்ததும் மெல்லிய புன்னகை என் முகத்தில் பரவியதை அவன் உணர்ந்திருக்க முடியாது சொல்லப்போனால் அது தான் அவன் எதிர்பார்த்ததுமாயிருக்கும். சொற்களைக் கோர்ப்பது எத்தனை சிரமமானது என்று அன்று உணர்ந்தேன், அவன் தனக்கும் எங்கள் வீட்டு உரிமையாளரின் மனைவிக்கும் இருந்த தொடர்பை என்னிடம் சொல்லிவிட அமைத்த சொற்கூட்டுகள் முடிவதற்கு முன்னமேயே அவிழ்ந்து கொண்டிருந்தன. ஒரு வழியாய் தன் திருமணத்தைக் காரணம் காட்டி அவள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாய் மிரட்டுவதாகச் சொல்லி உதவி கேட்டு விட்ட பெருமூச்சு அலைகளாய்ப் பரவி என்னைத் தீண்டி அறை முழுவதும் பரவியிருந்தது. அந்த அறையை அவனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய இந்த ஓராண்டு காலத்தில் என் சந்தேகத்தின் எல்லைக் கோடுகளைத் தீண்டாதவாறு இந்த உறவு அமைந்திருப்பதற்கான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்த்தேன், ஆச்சர்யம் என்ற சொல்லின் போதாமை மீது கோபம் வந்தது. என் சுயபச்சாதாபத்தின் எல்லை வரை என்னை விரட்டிக் கொண்டுவந்து நிறுத்தியது அவர்கள் உறவைப் பற்றிய என் அறியாமை, வருடங்களை மீளப்பொருத்தி நாட்களை, வாரங்களை ஓட்டிப் பார்த்ததில் என்னால் கற்பனை வெளியின் நீள அகலத்திற்கு நகர்ந்து கையும் களவுமாய் அவர்களைப் பிடிக்க முடிந்திருந்தது.

உமையாள் நாச்சி பழமையான பெயர் தான், தங்கள் வீட்டில் குடியிருக்கும் ஒரு அன்னியனிடம் காட்டும் பரிவுடன் தொடங்கிய அவள் சுந்தர் விஷயமாய் பேச வந்திருப்பதை உணர்ந்து சட்டென்று காட்டிய நெருக்கம் ஒருநாள் என்னிடம் இதைப்பற்றி பேசவேண்டிவரும் என்று அவள் ஊகித்திருந்ததும் அந்த பொழுதிற்காக தன்னை தயார்ப்படுத்தியிருந்ததும் தெரிந்ததும் என் கூட்டிலிருந்து என்னை இயல்பாய் வெளியில் வரச்செய்திருந்தது. வெகுநேர்த்தியாக அவள் மீது பரவியிருந்த சேலையின் இடைவெளிகளைத் தேடியலைந்த கண்கள் தன்னால் உணரப்பட்டதை நம்பமுடியாமல் தவித்ததற்கு காரணம் அவள் வயதைப் பற்றிய அறிமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும் பெண்ணொருத்தி மனக்கண்ணில் வந்து நம்பவிடாமல் செய்தாலும் உடற்கட்டு துருத்திக் கொண்டேயிருந்தது அவளிடம் இருந்து மாற்றிய பார்வை பட்ட அந்த அறை முழுவதுமே நேர்த்தி என்ற சொல்லுக்குள் அடக்கிவிடக்கூடியதாகயிருந்தது, அவள் கணவரது காவல்துறை உடுப்பில் எடுத்த புகைப்படத்தின் மீது இயல்பாய் நகர்ந்த விழிகள் கூர்மையடைந்து நின்றது தெரிந்ததும் சட்டென்று சிரித்து இயல்பு நிலைக்கு அவள் கொண்டுவர வேண்டியதாயிருந்தது. அத்தனை சுவாரசியமாய் அந்தப் பொழுதை விரிக்காமல் அவள் "ஒன்றும் பிரச்சனையில்லைங்க நான் தற்கொலை எல்லாம் செய்துக்க மாட்டேன், அவனைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லுங்க" சொல்லிவிட்டு திரும்பி என்னைப் பார்த்த அவள் பார்வையைச் சந்தித்து தொடராமல் தவிர்த்து நழுவவிட்டேன்.

மனம் விசித்திரமானது கற்பனையின் சாத்தியக்கூறுகளை கையகப்படுத்தியபடி விரிந்து கொண்டே செல்லும் வலிவு பெற்றது. ஒரே இரவில் எண்ணில் அடங்காத இரவுகளுக்கான படுக்கைகளை விரித்தபடி சென்ற எண்ணங்கள் சிக்கலான சூட்சமங்களால் உருவாக்கப்படக்கூடிய சமன்பாட்டின் ஒரு பக்கத்து விடையாய் உட்கார்ந்து கொண்டதும் நான் என் அறைத்தோழன் விட்டுச்செல்லும் வெளியை நிரப்பும் சந்தர்ப்பங்களை எனக்கு நானே உருவாக்குவதும் பின்னர் நிராகரிப்பதுமாய் முந்தைய இரவின் பொழுதை உறக்கமில்லாமல் தொலைத்துவிட்டு விடியற்காலையில் சிரித்துக் கொண்டிருந்தேன். சிறுகுழந்தையொன்று ஆசையாசையாய் வாங்கி ஆசைதீர ஊதி பெரிதாக்கிய பலூன் சட்டென்று வெடித்து ஏற்படுத்தும் வெறுமையால் அழும் குழந்தையை வேடிக்கைப் பார்க்கும் நபர்கள் சிரிப்பதைப் போல். "பிரச்சனை எதுவும் இல்லை சுந்தர், பேசியிருக்கேன். அவங்களும் உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சொன்னாங்க. தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டாங்களாம்." சொல்லி அவனை வாழ்த்துக்களுடன் அனுப்பிய இரண்டாம் நாள் உமையாள் நாச்சியின் மகள் வந்து சொல்லப்போய் தான் தெரியும் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தி.

ஆண்டாளின் யமள மொஞ்சிகள் தங்களுக்குள்ளே உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டதாக நம்பப்படும் சித்தர் ஒருவர் சொல்லி தானறிந்ததாக துங்கபத்திரா அணைக்கட்டின் மேல் நின்று கொண்டிருந்த சூரியன் அந்திசாயும் பொழுதில் அவன் சொன்ன விஷயங்கள் நம்பக்கூடியதாக இல்லாமல் மனதில் நித்தமும் குடைந்து கொண்டேயிருந்தாலும் ஆண்டாளின் அழகியலை நிராகரித்து புனைவெழுதிய சித்தரை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன் உமையாள் நாச்சியை மருத்துவமனையில் கண்டுவந்த அன்று. பல்வலிக்காரனின் இரவைப் போல் அவஸ்தையுடன் நகர்ந்தது இரவு. அவைகள் ஒரு கோடைக்கால மத்தியான வேளையில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும் என்றே எப்பொழுதும் நினைத்து வந்திருக்கிறேன். பதின்மத்தின் தொடக்கத்தில் அறிமுகமான முலைகள் ஏற்படுத்திய மூர்த்தன்னியம், பின்னர் அடையவே முடியாததாய் இருந்தது. அவைகளும் அவைகளைக் கட்டுக்காப்பதற்காய் அந்தச் சமயத்திலேயே புதிதாய் அறிமுகமாகியிருந்தவற்றின் தோள்பட்டை வழியாய் தென்பட்டு முதுகிற்கு நீளும் நாடாவும், முதுகுப்புற ஹூக்குகளும் மிகவும் ரகசியமானதாக இருந்த பள்ளிப்பருவமும், தாவணி இடுக்குகளிலும் சுடிதார் துருத்தல்களிலும் கொஞ்சம் அறிமுகமாகி பதின்மத்தின் பருவக் காதலின் சாத்தியங்களாய் கைகளுக்கு நடுக்கத்துடன் அறிமுகமாகி பின்னர் கண்களுக்கு வெட்கத்துடன் நீண்டு தொடர்ச்சியாய் கண்ணீருடனும் உறுதிமொழிகளுடனுமே முடிந்தாலும் சுவைத்தலுக்கான அனுமதியை மறுக்காத கல்லூரிக்காலம். எதிர்காலத்தின் பயம் மறுத்தளித்த காதல் கொண்டுவந்து தள்ளிய நீலப்படங்களும், பத்திரிக்கைகளும் தொடர்ச்சியாய்க் கொண்டு வந்து தள்ளிய அவைகள் ஏற்படுத்தியிருந்த ஒரு வித சலிப்பையும், புறக்கணித்தல்களையும் பிடித்துக் கொண்டு கண்களைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மாய கட்டுக்களை பொசுக்கித் தள்ளும் வலிமையான அசைவுகளுடன் அவள் மருத்துவமனை படுக்கை புரள்தல்கள் இருந்தன.

தொடர்பில்லாதது பறக்கக்கூடியது

சிறகுகளுடன் கூடிய பெண்ணை மட்டுமே மணம் செய்துகொள்வேன் என்ற எண்ணம் உருவான நாள் நினைவில் இல்லை என்றாலும் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கிய பிறகுதான் அந்த எண்ணம் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது என்பது தெரியும். தேவதைக் கதையொன்றை பின் தொடர்ந்து சென்று, அரக்கு மாளிகையின் பதினேழாம் மாடியில் சிறகுகளை அறுத்தெரிந்த ரத்தம், சொட்ட சொட்ட எனக்காகக் காத்திருந்த தேவதையை அரக்கனை கொன்று மாளிகையை எரித்து காப்பாற்றிக் கொண்டு வந்ததை என் பாட்டியிடம் மட்டும் சொல்லியிருந்தேன். என்னைப் பாராட்டியதுடன் விடாமல் தேவதையின் சிறகுகள் மீண்டும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்க சொன்ன நாள் முதல் என் பிரார்த்தனையில் தேவதையின் சிறகுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் வளரத்தொடங்கியதும், வளர்ந்துமுடித்ததும் என்னிடம் சொல்லாமல் தேவதை பறந்து போனதும் எனக்கான சிறகுகளுக்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கியிருந்தேன். தேவதைக்கான வேண்டுதலைப் போலில்லாமல் எனக்கானது என்பதால் உண்டான தாமதம் என்னை மனப்பிறழ்வில் தள்ளியதாக என் சுற்றத்தில் பேசிக் கொண்டனர், ஆனால் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கியதும் அவர்கள் மனப்பிறழ்வு நோய் அதிகமாகி என் முதுகையே வந்து பார்த்த பேசிய வண்ணம் இருந்தனர்.

சிறகுகள் கொண்டுவந்த தனிமை என்னை காட்டிற்குள் செலுத்தியது, காடு என்னை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்த பொழுதுகளில் நான் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். மேலெழும்புவதையும் அலைவதையும் இறங்கி அமர்வதையும் மற்ற பறவைகளுடன் உறையாடுவதையும் அந்த உரையாடல் மொழியை அறிந்து கொள்வதிலுமே என் இளமைப் பருவத்தில் பாதி கழிந்தது. நான் பறவைகளின் மொழியினை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்ட பொழுது மனிதர்களின் மொழி என்னிடம் இருந்து விலகிவிட்டதாக உணர்ந்தேன். வளர்ந்துவிட்ட அடர்ந்த சிறகுகளுடன் என்னைப் பார்த்த காட்டில் புலி பார்க்கவந்த பயணி ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது என் மொழி இயலாமை அவனை பயமுறுத்தியிருக்கவேண்டும், முகம் வெளிறியவனாய் ஓடத்தொடங்கிய அவன் இன்னும் சில மனிதர்களை அழைத்து வந்து என்னைத் துரத்திய பொழுது காடு என்னை அதனுடன் அணைத்துக் கொண்டது. அன்றிலிருந்து காட்டு மனிதனாய் நான் அலையத் தொடங்கிய நான்காம் வருடம் எனக்கு பறக்கும் சாகசம் புரிபடத்தொடங்கியது இளமையில் பாதியை இழந்து கற்ற பறவையியல் நிகழ்வுகள் அதில் பெரும் உதவி செய்தன.

தொடர்புடையது

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.

ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கறுப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

Related Articles

17 comments:

  1. //ஆண்டாளின் யமள மொஞ்சிகள் தங்களுக்குள்ளே உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டதாக நம்பப்படும் சித்தர் ஒருவர் சொல்லி தானறிந்ததாக துங்கபத்திரா அணைக்கட்டின் மேல் நின்று கொண்டிருந்த சூரியன் அந்திசாயும் பொழுதில் அவன் சொன்ன விஷயங்கள் நம்பக்கூடியதாக இல்லாமல் மனதில் நித்தமும் குடைந்து கொண்டேயிருந்தாலும் ஆண்டாளின் அழகியலை நிராகரித்து புனைவெழுதிய சித்தரை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன் உமையாள் நாச்சியை மருத்துவமனையில் கண்டுவந்த அன்று.//

    எப்படி இப்படி எல்லாம்!! நல்லா இருங்கடே!!

    ReplyDelete
  2. தம்பி..

    வார்த்தை ஜாலத்தில் அசந்து போயிருக்கிறேன்..

    உனது பின்நவீனத்துவத்தின் வார்த்தைக் கோட்பாடுகள், மிக எளிமையாக இருப்பதுதான் உனது சிறப்பு என்று நினைக்கிறேன்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. // பின்நவீனத்துவத்தின் வார்த்தைக் கோட்பாடுகள், மிக எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நினைக்கிறேன்..//

    ஆமாங்க ஓரளவுக்கு புரியற மாதிரியே இருக்கு.

    நல்லாருக்குங்க.

    ReplyDelete
  4. சரியாக சொல்ல தெரியல....ஆனா நல்லாயிருக்கு தாஸ் ;))

    ReplyDelete
  5. இ.கொ.

    நன்றி.

    உண்மைத்தமிழன்,

    ஆச்சர்யப்படுத்துகிறீர்கள் நன்றிகள்.

    கார்த்திக், கோபிநாத் - நன்றிகள்.

    ReplyDelete
  6. அச‌த்த‌ல் மோக‌ன்.,

    //தேவதைக்கான வேண்டுதலைப் போலில்லாமல் எனக்கானது என்பதால் உண்டான தாமதம் என்னை மனப்பிறழ்வில் தள்ளியதாக என் சுற்றத்தில் பேசிக் கொண்டனர், ஆனால் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கியதும் அவர்கள் மனப்பிறழ்வு நோய் அதிகமாகி என் முதுகையே வந்து பார்த்த பேசிய வண்ணம் இருந்தனர்.//

    எழுத்துவன்மையை பாராட்டுவ‌த‌ற்கு வார்த்தைக‌ள் வ‌ர‌வில்லை..

    ReplyDelete
  7. சென்ஷி,

    உங்கள் பதிலால் என்னைக் கலவரப்படுத்துகிறீர்கள். ஏனென்று தெரியவில்லை. :)

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. உங்களை இன்ஸ்ப்ரேஷனா வெச்சு நான் ப்ராஜக்ட் மேனேஜர் கதை என்று ஒரு ஆறு பாகம் எழுதிட்டேன்...

    ஆனா இந்த பதிவை படிச்சது தலை கிறுகிறுங்கிது...!!!

    ஏதோ ரோபாட் பதிவு எழுதினமாதிரி வார்த்தைகள் விளையாடுகின்றன...!!!

    சுஜாதா இருந்தால் படித்து பின்னூட்டம் கூட போட்டிருப்பார்...

    ReplyDelete
  10. indian, ரவி,

    நன்றிகள்.

    ரவி என்னை இன்ஸ்பிரேஷனா வைத்தா? எதுக்கு கதை எழுதுறதுக்கா?

    சந்தோஷம் மற்றும் நன்றிகள்.

    ReplyDelete
  11. //நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது//

    ;-)

    ReplyDelete
  12. ஙொய்யால‌ ...

    நாங்கல்லாம் பாராட்டவும், திட்டவும் ஒரே வார்த்தைதான் :-)

    -Anony

    ReplyDelete
  13. புரியலையே அனானி,

    இப்ப திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா?

    ReplyDelete
  14. Interesting to know.

    ReplyDelete
  15. நல்லாருக்கு...

    ReplyDelete

Popular Posts