In அக்கா பெண் சிறுகதை

அக்கா பெண்ணே அழகே!!!

“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”

கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.

அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எனது அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் மிகவும் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.

பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வரும் பொண்ணுக்கு இன்றைக்கு என்னவாயிற்று என்று யோசித்துக் கொண்டிருந்தேன்; ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை தான். சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுற்றாத இடங்களையும் பேசாத விசஷயங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். நாங்கள் கொடுத்த வாங்காத முத்தங்களா முத்தங்களா?

அவள் வயதுக்கு வந்திருந்த சமயம், நான் தான் வேலி கட்டணும் எங்கம்மா ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும், என்று ஏதேதோ விஷயம் ஓடிக்கொண்டிருந்த சமயம் நான் உன்னை மொத்தமா பார்த்தே ஆகணும் எப்படி வயசுக்கு வந்தன்னு சொல்லிப் பார்த்ததும் கை வைத்ததும்; இன்று என்னவாயிற்று.

யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் கோபமாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,

“டேய்.”

“என்னது டேய்யா?”

“ஆமாண்டா...”

“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா? என்னாடி ஆச்சு உனக்கு.”

நான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து முன்னிரவு பெய்த பனியினால் கருவாகி, காலைப் பொழுதின் இளம் சூட்டில் உருகி ரோஜாவில் வழிந்தோடும் ஒற்றைத் துளியாய் கண்ணீர் கன்னத்தில் வழிய நான் பயந்தே போனேன். அப்படியொன்றும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில் எங்களைத் தெரியாதவர் யாருமே கிடையாது என்றாலும் அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது என்பதால் வந்த பயம். அழைத்து வந்திருக்கும் பெண் எப்படா அழுவாள் என்று காத்திருப்பதைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் சமூகக் காவலர்களின் தர்ம அடியில் இருந்து தப்பிக்க நினைத்தவனாய் அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள். அவளின் நகர்வு உச்சிப் பிள்ளையார்க்கோவிலை நோக்கியிருந்தது புரிந்ததும் இன்றைக்கு மாட்டினேன் என்றே நினைத்தேன். மொட்டை வெய்யலில் உச்சிப்பிள்ளையார் கோவில் படிக்கட்டொன்றில் அவள் உட்கார பக்கத்தில் இருந்த கடையில் இருந்து பூஜைக்கு என்று சொல்லி தேங்காய் பழம் வாங்கிவந்து அவள் அருகில் உட்கார்ந்தேன். பெண்களுக்கு எங்கிருந்து தான் வருமே, சலசலவென்று கண்கள் சிவக்க அடுத்த நொடி நீர்வீழ்ச்சி புறப்பட்டுவிடும் அபாயம் தெரிந்தது.

“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க?”

அவள் கேட்டதும் எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஓஹோ இதுதான் விஷயமா? அதான் பொண்ணு பிலிம் காட்டுது என்று நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,

“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு?” நான் அவளைச் சீண்ட.

“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”

என்னிடம் எதையும் சொல்ல பயந்து மாமா அக்காவையும், இவளையும் தான் திட்டும் என்று எனக்கு தெரிந்துதான் இருந்தது. அக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்; இந்த மூடத்திற்கு தெரியவில்லை என்னைப் பற்றி என்று நினைத்தேன். அவள் என்னிடம் காலையிலிருந்து நடந்துகொண்ட முறையை நினைத்ததும் சிரிப்பாய் வந்தது. ஆனால் வெளியில் கோபப்பட்டவனாய்,

“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாளுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்கோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, இந்த சூட்டுல மலைக்கோட்டை பாறையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.

“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன?”

ஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,

“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா? இல்லையா?” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,

“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,

“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”

“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”

நான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,

“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா?” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.

“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ?” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.

“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.

அப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.

இத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.

அவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.


நானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,

“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.

ஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.

“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”

“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.

அவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,

“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,

“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”

முன்னயே எழுதினது தான் - இப்ப சும்மா மறு ஒளிபரப்பு

Related Articles

21 comments:

  1. யெய்யா...
    ஏன்யா இப்டி கொல்றிங்க?

    இந்த மீள்பதிவுக்கு எதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே!

    ReplyDelete
  2. நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  3. enna thala..sontha kathaiya...!!
    nalla irunthathu...

    ReplyDelete
  4. உள்குத்தோ, வெளிகுத்தோ... நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. தம்பி,

    இந்தப் பதிவில் எந்த உள்குத்தும் கிடையாது. இம்சைஅரசியின் பதிவைப் படித்ததும் சட்டென்று இந்தக் கதை நினைவில் வந்தது. தெரியுமா நான் நட்சத்திரமாக இருந்த பொழுது நேயர் விருப்பமாக எழுதிய கதை இதுவென்று.

    ReplyDelete
  6. அநானிமஸ், சென், நந்தா நன்றிகள்.

    ReplyDelete
  7. ஆமாமாம் நல்லாயிருக்கு

    ReplyDelete
  8. //பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன//

    ஓ இது தான் பாவானு வலைப்பதிவு வைக்க காரணமா???

    சுயசரிதை எழுத ஆரம்பிச்சாச்சி போல ;)

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு மோகன் :)))

    ReplyDelete
  10. பாலாஜி சொல்லப்போனா குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு எழுதியக் கதை தான். ஆனால் மையமாக நான் இருப்பதைப் போலுள்ள தோற்றம் பொய்யானது.

    இதிலெல்லாம் எனக்கு சுஜாதா தான் நிஜ குரு.

    ReplyDelete
  11. இம்சையக்கா ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டதுக்கு நன்றிகள். இங்கே பலர் வேணும்னே சண்டையைக் கிளப்பி விடுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க ;-).

    ReplyDelete
  12. மோகனா,

    கதை நல்லாயிருக்கு... :)

    //இம்சையக்கா ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டதுக்கு நன்றிகள். இங்கே பலர் வேணும்னே சண்டையைக் கிளப்பி விடுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க ;-).//

    ஹி ஹி... :))

    ReplyDelete
  13. ராம் என்ன சிரிப்பு. போட்டுக் கொடுக்குறீங்களோ :(

    ReplyDelete
  14. அண்ணே,

    உங்க கதை நல்ல இருக்கு..

    என் கதையையும் படித்து விட்டு.. உங்களுடைய அபிப்பிராயத்தை சொலுங்க..

    ReplyDelete
  15. நல்லா இருக்கு தல... சில இடங்களில் வார்த்தைகளோடு விளையாடுகிறேன் பேர்வழி என்று என்னைப் போன்ற beginnersகளை கஷ்டப்படுத்தியிருக்கிறீர்கள்.... ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் புரியுது...

    ReplyDelete
  16. பிலாசபி பிரபாகரன்,

    வேறென்ன சொல்ல நன்றி.

    ReplyDelete
  17. மதுரை சரவணன்.

    நன்றிகள்.

    ReplyDelete
  18. நல்ல எழுத்து நடை,அருமை---தி.செழியன்

    ReplyDelete
  19. இந்த அத்தை பொண்ணுங்களே இப்படிதான் அண்ணே............

    ReplyDelete

Popular Posts