In

சில விளக்கங்கள்

உண்மையில் செல்வநாயகியின் கடைசி பதிவு படிக்கும் பொழுதுதான் தெரிந்தது அவர் மனதளவில் என்னுடைய கதைகளாலோ, கதைத் தலைப்புக்களாலோ, பின்னூட்டங்களாலோ வருத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சில தடவைகள் அவருடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்கவேண்டுமே என்று கதையெழுதியிருக்கிறேன் உண்மை.

ஆனால் அவர் நினைப்பது போல் தெய்வநாயகி நிச்சயமாக அவரை வம்பிழுக்க வேண்டும் என்றோ மற்றும் இன்னபிற விஷயங்களை நினைத்தோ எழுதுப்படவில்லை. அந்தக் கதை இந்தப் பிரச்சனைகள் எல்லாம் எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது. அந்தப் பெயரும் ஒரு உண்மையான நபரின் பெயர் தான். என்னுடைய நண்பர்கள் சிலர் தேன்கூடு போட்டிக்கு அனுப்பும் முன்னரே அந்தக் கதையைப் படித்திருக்கலாம். மரத்தடியில் பயின்றதுக்கு பிறகு கதைகளை எழுதியதும் போடும் பழக்கம் கிடையாது. அதுவும் அந்தக் கதை இருபது தடவைகளுக்கு மேல் திருத்தி எழுதப்பட்ட ஒன்று.

நான் கதையெழுத சுஜாதாவைத் தான் குருவாகத் தீர்மானித்திருந்தேன். அதனால் சில நடைமுறையில் நடக்கும் விஷயங்களை, மாற்றி, என்னுடன் சேர்த்து கதையெழுதும் பொழுது அட்வாண்டேஜ்கள் என்னை அந்த வகையான எழுத்துடன் தொடரச் செய்தன.

உண்மையில் அந்தத் தண்ணிப்பார்ட்டி எல்லாம் உண்மையே, பேச்சுலர் ஆண்களிடம் கல்யாணத்தைப் பற்றியும், வரப்போகும் பெண்களைப் பற்றியதுமான சிந்தனைகள் பெரும்பாலும் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னிடமும் அப்படியே. கல்யாணம் ஆன ஆண்கள் என்னிடம் அவர்களுடைய கல்யாண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள்.

நான் பேச்சுப்போட்டியைப் பற்றிச் சொன்னது நிச்சயம் அவரைக் குறித்தல்ல, நானும் என் அக்காவும் உண்மையில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது அக்கா சொன்ன விஷயம் அது. நான் அவளை பேசிப்பேசி ஜெயிப்பதாக நினைத்தவள் உனக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் பெண்ணைத்தான் கட்டிவைப்பேன் என்று சொல்ல எழுதியது.

ஒற்றைப் பெண் விஷயமும் அப்படியே, எனது நெருங்கிய சொல்லப்போனால் ரொம்பவும் நெருங்கிய உறவினரொருவருக்கு அப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்க அவர் ஒரு தண்ணிப் பார்ட்டியில் புலம்பியது தான் அந்த விஷயம்(செல்வநாயகியைப் பற்றி யாரிடமும் இதுவரை விசாரித்ததில்லை, அவர் நினைப்பது போல் வேறெந்த வெரிபிகேஷனும் இதைப் பற்றிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவருடைய பதிவுகளில் பலவற்றைக் கூட இன்னும் நான் படித்திருக்கவில்லை என்பதே உண்மை.)

மற்றபடிக்கு அவர் சொன்ன சில கருத்துக்களை மறுத்து அதற்கு கதையெழுதினேன் என்பது உண்மை ஆனால் அவரை பர்ஸனலாக தாக்கி எழுத வேண்டுமென்று மனதால் கூட நினைக்கவில்லை. என்னை நன்கறிந்த நண்பர்களுக்குத் தெரியுமது. எங்கள் குடும்பம் முழுவதும், பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், நாடகம் போன்ற விஷயங்கள் இன்வால்வ் செய்யும் ஒன்று. அதனால் நான் என் குடும்பத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதியது அவருக்குத் தவறாகத் தன்னை சொல்லியதாக உணரலாம்.

மற்றபடிக்கு அவர் அப்படி நினைக்கும் படி இருந்தது முற்றிலுமாக தற்செயல் நடவடிக்கையே. அதற்காக அவர் மனம் வருந்துவாராயின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்பது இல்லை என்றாலும் விளக்க வேண்டியது என் கடமை செய்கிறேன் அவ்வளவே. வேறெதும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

Related Articles

6 comments:

  1. கதையில் வரும் கதை மாந்தருக்கு எல்லாம் விளக்கம் வைக்கத்தேவை இல்லை என்பது என் கருத்து...

    அதை படித்து மனம் புண்படுவது சிறுபிள்ளைத்தனமானது...

    மேலும் அவர் உங்களிடம் நேரிடையாக என் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லியிருந்து, நீங்கள் தொடர்ந்து செய்திருந்தீர்கள் என்றால் அது முறையல்ல...

    "இது என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு" ????

    வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட பதிவர் அமெரிக்க ஜனாதிபதி ஆகுற மாதிரி ஒரு கதை எழுதி பப்ளிஷ் செய்து பாவத்தை உடனே தீர்க்கவும்.

    ReplyDelete
  2. செல்வநாயகியின் பதிவு நானும் படித்தேன்.நீங்களே அப்படி செய்திருந்தாலும் உங்கள் பின்னூட்டம் போடாமல் விட்டிருக்கலாம்.அதைத் தனி பதிவாகப் போட்டு அனுதாபம் தேடும் செயல்,நாய் கடித்தால் நாமும் கடிப்பது போன்றது.
    விமரர்சனத்திற்கு பயந்தால் பதிவு எழுதக்கூடாது இல்லை கமெண்ட் பாக்ஸ் பூட்டி சீல் வைக்க வேண்டும்

    ReplyDelete
  3. அன்புள்ள மோகன்தாஸ்,

    மரத்தடியில் அறிமுகமானீர்கள். தினமும் உற்சாகத்துடன் புதிது புதிதாய் எழுதி விமர்சனங்கள் வேண்டும் என்று மரத்தடி நண்பர்களை கேட்டீர்கள். யாரும் விமர்சனம் வைக்காதபோது குறைபட்டுக் கொண்டீர்கள். என்னடா, இவர் வெளிச்சத்திற்கு அலைபவர் போல இருக்கிறாரே என்று நான் அப்போது நினைத்ததுண்டு. விமர்சனம் வராவிட்டாலும் படிப்பார்கள் என்று சொல்லப்பட்டபோது அந்தக் குறையையும் களைந்து கொண்டீர்கள். ஆனால், விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டபோதும் அவற்றைச் சுலபமாகவும் ஸ்போர்ட்டிவாகவும் ஏற்றுக் கொண்டீர்கள். உங்களின் விளையாட்டுத்தனமான, என் பார்வையில் முதிர்ச்சி தேவைப்படும் புனைகதைகளுக்கிடையே (எழுத்துக்கிடையே) உங்களின் இந்த மெச்சூரிட்டியே உங்களை என்னைக் கவனிக்க வைத்தது.

    அதற்கப்புறம் தனிமடல், தனியுரையாடல் என்று பேசியிருக்கிறோம். ஒருகாலத்தில் தினமும்கூட பேசியது உண்டு. எப்போதுமே வலைப்பதிவு/இணைய பாலிடிக்ஸ், வலைப்பதிவு/இணைய குரூப்பிஸம் ஆகியவற்றைப் பற்றி என்னிடம் பேசியதும் கிடையாது, ஆர்வம் காட்டியதும் கிடையாது. அவற்றிலிருந்து விலகி நிற்க விரும்புவதாகவே சொல்லியிருக்கிறீர்கள். அதற்கேற்பவே, பல விவாதங்களில்/சண்டைகளில் யார் பக்கம் நியாயம் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்தபோதும் விலகியும் மௌனமாகவுமே நின்றிருக்கிறீர்கள். இது குறித்து உங்கள்மேல் எனக்கு வருத்தம் உண்டு. இப்படிப் பிரச்னைக்கு வெளியே இருப்பவர்கள் வாய்மூடி இருப்பதால்தான் அடிப்பொடிகளும் ஜால்ராக்களும் மாய-ஆதரவு வலையை உருவாக்கிக் கொண்டு இணையத்தில் அலைகின்றன என்பது என் வருத்தம். இப்போது இந்தப் பிரச்னையில் உங்களுக்காக எழுதுவதற்குமுன் நானும் உங்களைப் போலவே வாய்மூடி இருந்துவிடலாமா என்று நெடுநேரம் யோசித்தேன். :-)) ஏனோ என்னால் அது முடிவதில்லை. தெரிந்ததைச் சொல்லி, வம்பை விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறேன்.

    உங்கள் எழுத்துகளைப் பற்றி எனக்குக் கருத்துகள் உண்டு. உங்கள்மீது இருக்கிற அக்கறையால் பாராட்டத்தக்க அம்சங்களைப் பொதுவில், காட்டமான கருத்துகளைத் தனியாகவும் சொல்லியிருக்கிறேன். பொதுவாகவே, எழுத்தைப் பற்றிய குறைகளைப் பொதுவில் சொன்னாலும் மென்மையாகச் சொல்ல முயல்வதே என் வழக்கம். பரபரப்பிற்காகத் தலைப்புகளும், படிக்க வைப்பதற்கான எத்தனங்களும் கூடிய வார்த்தைகளும் உங்கள் எழுத்தின் ஆழத்தைக் கெடுக்கின்றன என்பதும் அவற்றில் ஒன்று. அந்தத் தலைப்புகளும் வார்த்தைகளும் யாரையும் குறிவைத்து எழுதப்பட்டவை என்று என்னால் நினைக்க முடியவில்லை. இனியும் அப்படி நினைக்கத் தோன்றவில்லை. நான் வலைப்பதிவுகள் அனைத்தையும் படிப்பதில்லை, செலக்டிவாகப் படிக்கிறேன் என்றும் இங்கே சொல்ல வேண்டும்.

    தெய்வநாயகி பெயர் பிரச்னையை அறிந்தபோது misunderstanding என்றுதான் எனக்குத் தோன்றியது. குட்டி ரேவதி - எஸ். ராமகிருஷ்ணன் பிரச்னை நினைவுக்கு வந்தது. அந்தப் பிரச்னையிலாவது பாத்திரத்தின் பெயர் ரேவதி என்று இருந்தது. இந்த இடத்தில் அப்படிக்கூட இல்லையே என்று என் சிற்றறிவு ஏனோ கேள்வி கேட்கிறது. பிடிக்காமல் போய்விட்டால் குற்றம்தான். அப்படி நினைக்க வைத்ததில் உங்களுக்கும் சிறுபங்கு இருக்கலாம். விவாதங்களுக்கான பதிலை உடனடியாகக் கதையாக எழுதியது தவறு. உங்கள் குரு சுஜாதாவோ யாரோ எப்போதோ ஒருமுறை, current events-ஐ கதையாக எழுதுவதற்குமுன் நிறைய யோசிக்க வேண்டும். ஒரு பத்து வருடம் இடைவெளி தர வேண்டும் என்று சொன்ன ஞாபகம். இனியாவது அதைக் கைக்கொள்ளுங்கள்.

    உங்களின் இலக்கியம், பெண்ணியம், விடுதலைப் புலிகள் ஆதரவு, முதலிய பலவற்றில் நான் கருத்து முரண்படலாம். ஆனால், நான் அறிந்த அளவில் நீங்கள் வஞ்சமோ, வக்கிரமோ நிறைந்தவராகவோ, மற்றவர்களைப் பற்றிக் கதையெழுதி அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறவராகவோ இல்லை. என்னுடைய இந்த வாக்குமூலம் உங்களுக்கு ஒரு liability தான். இதனாலேயே உங்களை மோசம் என்று சொல்பவர்கள் நிறைய உருவாகலாம். ஆனாலும், எனக்குச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.

    பி.கு.: இதற்குப் பதில் சொல்லும் முகமாக பல அனாமதேயங்கள், நான், என் குடும்பம் என்று இழுத்துத் தாக்கிப் பின்னூட்டம் இடலாம். அவற்றை அங்கீகரித்து நீங்கள் உங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம். எனக்கு அதில் பிரச்னையில்லை. :-))

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  4. ஆகா!, இதென்ன பெரிய அண்டர் கிரவுண்ட் பாலிடிக்ஸா இருக்கும் போல?.....

    புரந்தள்ளிட்டு போயிகிட்டே இருப்பீங்களா?....

    ReplyDelete
  5. ரவி, பிகேஎஸ், மாலி, அனானிமஸ் என்ன சொல்வேன் உங்களுக்கெல்லாம். நன்றியைத் தவிர.

    சங்கடமான சமயத்தில் கைகொடுத்து உதவினீர்கள்.

    அனானி, பிகேஎஸ் சொன்னது போல் இதைப்பற்றிய கதை பின்நாட்களில், ஒன்றிரண்டு வருடங்களில் இல்லை இன்னும் அதிக வருடங்கள் கழித்து எழுதப்படும். அப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். அட்ரஸ் கொடுத்தீங்கன்னா சொல்லுறேன் எழுதினதுக்கப்புறம்.

    ReplyDelete
  6. என்னய்யா அந்தப் பதிவில 'லூசு' 'அனாதை' அப்படியெல்லாம் எழுதியிருக்கும் ஒன்னும் பதில் கிடையாதா?

    உலகம் புரியாதவன்

    ReplyDelete

Popular Posts