In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் சுய சொறிதல்

என்ன தவம் செய்தனை மோகனா?

ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது.

"நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள்
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து

ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் - பாரதி"


"கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத"(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் - பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்) பாரதியின் கவிதைகளுக்கு இடையில் வரும் இரண்டெழுத்து வரிகள் பெரும்பாலும் என்னைப் புரட்டிப்போட்டுவிடும் திறமை வாய்ந்தவையாகவேயிருந்திருக்கின்றன.

"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை..." என்று எழுதிய வரிகளுக்குப் பின் என்ன இருந்திருக்கலாம் என்று ப்ராக்டிகலாக நான் அதே போன்றதொறு சூழ்நிலையில் இருந்த பொழுது உணரத் தழைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே, "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தனையோ..." இந்த வரிகளும். பாரதியுடன் ஒப்பீட்டளவில் பேசவில்லையென்றாலும் என் அளவில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தது குறைவான சமயங்களில் அல்ல. வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்த வரிகள் பாடமான பிறகு வந்த சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நான் இந்த வரிகளைக் கூறி என்னைச் சமாதானம் செய்து கொண்டதாக.

ஆனால் இதைப் போலவெல்லாம் இல்லை, கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிய பாரதியின் வரிகள். (இலக்கிய)தமிழுடன் அவ்வளவாக பரிட்சையம் இல்லாமல் போனதால் கொஞ்ச காலத்திலேயே பாரதியை விட அவருடைய தாசனின் வரிகளில் பித்து தலைக்கேறியது; அவருடைய இயல்பான தமிழ் வரிகளால்.

"கல்யாணம் செய்து கொள்ளாதே!" என கல்யாணம் செய்த மற்ற ஆண்கள் சொல்வதைப் போல பாரதி சொன்னதை ஒப்பிடலாமா? இல்லை மற்ற கவிதைகளைப் போல மெஸேஜ் சொல்ல பாரதி இந்தக் கவிதையைச் எழுதவில்லை என்று ஓரம் கட்டிவிடலாமா? குடும்பம் பிள்ளைகள், என சாதாரண மனித சிக்கல்களில் விழுந்து புரளும் அளவிற்கு பாரதி மனதளவில் இல்லையென்றாலும்; தான் கவிதைகளில் எழுதிய விஷயங்களுக்கு எதிராகவே(சில சமயங்களில்) வாழமுடிந்ததையும் பற்றி வருத்தப்படும், அதை செய்யாதே என்று சொல்லும் ஒரு சாதாரண மனிதனாக பாரதியை ஒப்பிட முடியுமா? தெரியவில்லை.

வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை எப்படிப் பார்ப்பது கல்யாணம் ஆகாத நான் தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

"கஞ்சா" அடிச்சா மட்டும் தான் தலைவர் பிரகாசமா எழுதுவார்; அப்படி அடிக்காமல் போய் எழுதியதில் உண்மையைச் சொல்லிட்டாரோ என்னவோ என்று நண்பரொருவர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லிய நினைவு. அந்தாளைத் தூக்கி குப்பையில் போடுவோம், அதை விடுங்க.

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்", "நஞ்சை வாயிலே வந்து நண்பரூட்டும் போதிலும்", "இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்" எழுதியவருக்கு "கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்" பற்றி எழுத நேர்ந்தது ஏதோ வேறுவழியில்லாமல், மெட்டுப்போட்டாச்சு வார்த்தை இதுக்கு மேல உக்காரலை என்று ஹீராதி ஹீரோ என்று எழுதும் சுயநலக்கவிஞனாக என்னை பாரதியைப் பார்க்கமுடியவில்லை. இதில் என்னமோ விஷயம் இருக்கின்றது; பாரதியின் சுயவரலாறு போல் வரும் கவிதையொன்றில் வருவதைப் போல,

தான் காதலித்த பெண்ணை(???) திருமணம் செய்துகொள்ள முடியாமல் தந்தையின் சொல்லைக் கேட்டு சிறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததையும் பின்னர் தன் மகளுக்கும் சிறுவயதில் திருமணம் செய்துவைத்ததையும் வைத்து, அட்வைஸ் சொல்றவங்க அந்த அட்வைஸ் படி நடந்தார்களா இல்லையா என்ற கேள்வி தேவையில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? "நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனைக் கேட்பதுண்டோ..." எழுதிய பாரதி; தன் பெண்ணிடம் கேட்டிருப்பாரா? அவருக்கு தன் பெண்ணிடம் அந்த அளவிற்கு உரிமையிருந்திருக்குமா? பதின்மூன்று பதினாலு வயது பெண்ணுக்கு தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவு இருந்திருக்குமா? தெரியவில்லை.

ராமகிருஷ்னர், சக்கரை சாப்பிடும் வழக்கத்தை தன் பையனிடம் நிறுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு அம்மையார் வந்த பொழுது ஒரு வாரம் கழித்து வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியதாகவும். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அந்தப் பையனிடம் சக்கரை சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்லியதாகவும் ஏன் ஒரு வாரம் கழித்து இந்த அறிவுரையைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கே சக்கரை அதிகம் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகவும் அதை நிறுத்திவிட்டு தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதால் அப்படி செய்ததாகவும் படித்திருக்கிறேன். தானே தவறு செய்துகொண்டு அந்தத் தவறை இன்னொருவரை செய்யாதே என்று சொல்வது குற்றம் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன். (உண்மையா என்று தெரியாது!)

இப்பொழுது ராமகிருஷ்ணர் செய்தது சரியென்று பாரதி செய்தது தவறென்றும் சொல்லிவிடமுடியுமா? ராமகிருஷ்ணர் செய்தது தனிநபர் செய்யக்கூடியது. ஆனால் பாரதி பாடிய விஷயங்கள் சமுதாயத்தை திருத்தப் பாடியவை இல்லையா(இல்லாவிட்டால் சமுதாயம் இப்படி இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுகள்). சமுதாயத்தை தனி ஒருவனால் திருத்தி விடமுடியுமா? அப்படி திருத்த வேண்டுமானால் அந்த தனிமனிதனின் கடமைகள் என்னவாகயிருக்க முடியும் என ஏகப்பட்ட கேள்விகள் மனதிலே தொக்கி நிற்கின்றன.

----------------------------------

நான் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு திருச்சி சென்றதற்கு சில பல காரணங்கள் வீட்டில் உள்ளவர்களால் சொல்லப்பட்டது. அதில் முதலாவது போனமுறையும் அதற்கு முந்தைய முறையும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஜெயித்த பொழுது அங்கிருந்ததால் தான் நான் திருச்சிக்கு வந்தேன் என்று சொல்வது சுத்தப் பொய்.

இப்படித்தான் இனிமேலும் உலகக்கோப்பை போட்டிகள் இருக்குமென்றால் ஆஸ்திரேலியாவை டைரக்ட் செமி பைனல் அனுப்பிவிடலாம் ;). கில் கிறிஸ்டின் ருத்ர தாண்டவம் பார்க்க சூப்பராகயிருந்தது. எனக்குத் தெரிந்து கில்'லி செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா தோற்ற மாட்சுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த அற்புதமான ஆட்டத்தை பார்க்க என்ன தவம் செய்தேனோ??? வரும் நவம்பர் வரையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்தப் கிரிக்கெட் போட்டியும் கிடையாது :(.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கமாட்டார்கள் என்று நான் குருட்டாம் போக்கில்(வைச்சுக்கோங்களேன்...) நிறைவேற்றிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.



நான் திருச்சியிலும் பெங்களூரூவிலும் நண்பர்களிடம், பான்டிங் இன்னும் இரண்டு உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர்களோ ஒரேயடியாய் அதற்கு முன்பே பான்டிங் ரிட்டயர்ட் ஆகிவிடுவார் என்று ஒன்றுபோல் சொன்னது ஆச்சர்யம் அளிப்பதாகவேயிருந்தது.

இன்னும் ஒரு உலகக்கோப்பையாவது பான்டிங் விளையாட ACB பிரச்சனை ஒன்றும் செய்யாமல் இருக்கணும். அதே போல் சச்சினின் எல்லா ரெக்கார்டையும் போட்டு உடைக்கணும் ஏன் என்றால் ரெக்கார்டுகள் அதற்காக மட்டுமே விளையாடுபவர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

Go Aussie Go!!!

Related Articles

11 comments:

  1. //"கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்" பற்றி எழுத நேர்ந்தது // அப்படின்றதை
    //வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை// என்பதாகத்தான் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதென்றால், அடுத்த வரியை எப்படி புரிந்து கொள்வீர்கள்?

    நச்சைக்கொண்டு வாயிலே நண்பரூட்டு போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

    என்பதை நண்பர்களெல்லாம் எப்போதும் நமக்கு விஷத்தையே தருவார்கள் எனவே நண்பர்களெதுவும் கொடுத்தால் அதை சாப்பிடாதே என்று பாரதியே சொல்லிவிட்டான் என்பீர்கள் போலும்.

    பதிவில் நீங்கள் பாரதியை பற்றி எழுப்பியிருக்கும் எல்லா கேள்விக்கும் வரிக்கு வரி பதில் சொல்லலாம்தான், ஆனால் மேலே இருக்கும் வரிகளே உங்கள் புரிதல் அளவை சொல்லிவிடுவதால் இதற்கு மேலெல்லாம் உங்களுக்கு விளக்குவது வீண் என்பதால் இங்கேயே நிப்பாட்டிக்கறேன் சாமி.

    ஆனா மோகனா, சும்மா சொல்லக்கூடாது, கலக்கறீங்க போங்க.. எப்படிங்க? எப்படி இப்படியெல்லாம்? அதெல்லாம் அப்படியே தானா வர்ரதுதான் இல்ல???

    ReplyDelete
  2. கச்சையணிந்த கொங்கை மாதரைப்பற்றி பாரதி பாடிய வரிகளால் சொல்லவில்லை,

    "வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை" இந்த விஷயத்தை.

    பலசமயங்களில் படிப்பவர்கள் கொஞ்சம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து ஏமாந்துவிடுவதுண்டு. மன்னிக்கவும். அது All together வேற கவிதை. நேரமில்லாததாலும், மனப்பாடமாக தெரியாததாலும் போடவில்லை. டைம் கிடைத்தால் போடுகிறேன்.(இன்று)

    // மேலே இருக்கும் வரிகளே உங்கள் புரிதல் அளவை சொல்லிவிடுவதால் இதற்கு மேலெல்லாம் உங்களுக்கு விளக்குவது வீண் என்பதால் இங்கேயே நிப்பாட்டிக்கறேன் சாமி. //

    குத்தம் சொல்றதுக்கு முன் தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க; அப்படியில்லாட்டி அப்படித்தான் சொல்லவந்தீங்களான்னாவது கேளூங்க. அக்காச்சி.

    //பதிவில் நீங்கள் பாரதியை பற்றி எழுப்பியிருக்கும் எல்லா கேள்விக்கும் வரிக்கு வரி பதில் சொல்லலாம்தான், //

    நான் அந்தக் கவிதையைப் போட்டதற்குப் பிறகு வந்து வரிக்கு வரி பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  3. லஷ்மி அக்கா பாட்டு போட்டாச்சு, இப்ப வந்து பேசுங்க உங்க கதையை. கேக்குறேன்...

    ReplyDelete
  4. அடடடா.. மேலும் மேலும் உங்கள் புரிதலினாழத்தை புதிய புதிய பரிமாணங்களில் காமிச்சுகிட்டே போறீங்களே மோகனா.... இந்த கவிதை அவனோட சுய சரிதைல அவனுக்கு நடந்த விருப்பமில்லா,
    மனமறிந்துகொள்ளாத நிலையில் நடக்கும் திருமணத்தை பற்றி சொல்லும் வரிகள் சாமி. அதான் மொத ரெண்டு வரிலயே சொல்றாரே தெளிவா -

    நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
    நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்

    இத்தகைய மணத்தைத்தான் தான் தவிர்க்கச்சொல்வதாக மறுபடி 4வது வரில தெளிவா இம்மணம் - இத்தகைய மனப்பொருத்தத்தை அறிந்துகொள்ளாத திருமணத்தை தவிர் என்றுதான் சொல்கிறான்.

    //ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் - பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்// அவனோட கவிதை எக்குத்தப்பா சொல்லாதுங்க, உங்களோட ட்ரான்ஸிலேஷன் தான் எக்குத்தப்பா இருக்கு.

    காதலொருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்தலை சிறந்த வாழ்க்கை முறையாக கண்டவன் அவன். வாஞ்சி நாதன் ஆஷ் துரையை சுட்டதை கண்டித்து எழுதும் போது கூட தம்பதி சமேதராய் இருக்கும் போது எந்த ஜோடியுமே சிவ பார்வதியை போன்றவர்கள். அத்தகைய நிலையில் பயணித்துக்கொண்டிருந்தவரை வாஞ்சி சுட்டிருக்கக்கூடாது என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறான். அவன் திருமணமே செய்துகொள்ளாதே என்று எக்காலத்திலும் சொல்லியிருக்கப்போவதில்லை ஐயா.

    //இப்ப வந்து பேசுங்க உங்க கதையை. கேக்குறேன்// இதுக்கு மேல கதை பேச எனக்கு இன்னிக்கு நேரமில்லை தம்பி. இன்னும் எங்கனயாவது அவன் வேற அர்தத்துல சொன்னதையெல்லாம் கண்டுபிடிச்சு தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு
    எடுத்து வைங்க. நாளைக்கு வந்து இடம் சுட்டி பொருள் விளக்கறேன். சரியா மோகனா?

    ReplyDelete
  5. //நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
    நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
    //
    //யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் //

    ஆதலினால் காதல்செய்வீர்... மோகனரே!

    காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்;
    கானமுண்டாம்;
    சிற்பமுதற் கலைகளுண்டாம்;
    ஆதலினால் காதல்செய்வீர் மோகனரே!அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;

    ReplyDelete
  6. அக்காச்சி நல்லா சுலபமா பிரம்மச்சரியம், ஈடழிந்து நரக வழிச் செல்வாய், போன்ற விஷயங்களை கழட்டிவிட்டுட்டுப் போய்ட்டீங்க இல்லையா?

    என்னுடைய புரிதலின் ஆழத்தை தவறாகச் சொல்லும் உங்களின் புரிதலின் ஆழம் வியப்பளிக்கிறது. நான் முழுசா அந்த சுயசரிதை கவிதையைப் போட்டிருக்கணும் ;) தெரிஞ்சிருக்கும்.

    இது போன்றதொரு கவிதையை ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் பொருள் கொள்ள முடியும் தான்.

    எனக்கென்னமோ, உப்பு, புளி போன்ற வெங்காயப் பிரச்சனைகளால் நொந்து நூடுல்ஸாகிய ஒரு கவிஞனின் பொளம்பல் வரிகளாகத்தான் படுகிறது கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னது.

    நான் நிச்சயமாய் இப்படிச் சொல்லவில்லை எல்லா சமயங்களிலும் இப்படிப்பட்ட ஒரு மனநிலையில் பாரதி இருந்திருப்பான் என்று. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனநிலையிலும் இருந்திருக்கிறான் இல்லையா?

    ரொம்ப அழகா, நீங்க சொன்ன அந்த சுயசரிதையைப் பத்தி கீழே சொல்லியிருந்தேன்; அதுமட்டுமில்லாமல் காதல் செஞ்சு கல்யாணம் பண்ணிக்கொள்வதைக் கூட என்னால் பாரதி சொல்வதைப் போல சரியென்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. சரியாக இருக்குமென்று. ஏனென்றால் காதல் பற்றிய என்னுடைய அபிப்ராயம் அப்படி.

    நீங்க முன்னாடி நான் எதோயோ வைத்து எழுதியதாய் புலம்பிய பொழுது உங்களுக்குப் புரியவில்லையா நான் இந்தக் கவிதையைத்தான் சொல்கிறேன் என்று??

    PS: பின்னூட்டம் பெரிசாய்டுச்சு அடுத்ததில் வர்றேன்.

    ReplyDelete
  7. //அவனுக்கு நடந்த விருப்பமில்லா,
    மனமறிந்துகொள்ளாத நிலையில் நடக்கும் திருமணத்தை //

    இப்ப விருப்பம்னா எதைப் பார்க்கணும் பையனுக்கு பிடிச்சிருக்கிறதையா? இல்லை பொண்ணுக்கு பிடிச்சிருக்கிறதையா? இல்லை இரண்டு பேருக்குமா?

    இங்கே விருப்பம் என்பது பெரும்பான்மையான சமயங்களில் அப்பா அம்மா குடும்பம் போன்ற விஷயங்கள் உள்ளடக்கியது இல்லையா? நான் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது எங்கள் அப்பா, அம்மா, அக்காவையும் எல்லாம் கன்ஸிடர் செய்து தான் திருமணம் செய்வேன் அப்படிங்கிறப்ப! இங்க விருப்பமில்லாமல் என்பது ரொம்ப அப்ஸ்ட்ராக்ட் இல்லையா?

    நான் சொல்லவந்தது இங்கே நடக்கும் பெரும்பான்மையான கல்யாணங்கள் எதற்காகவோ சேக்ரஃபைஸ் செய்து கொண்டுதான் நடக்கின்றன எனும் பொழுது நான், பாரதி சொன்ன விருப்பமுடன், மனமறிந்து நடக்கும் கல்யாணங்களையும் விலக்கி வைக்கவில்லை அவ்வளவுதான்.

    ReplyDelete
  8. ஸ்ரீதர் என்னை நேரில் பார்த்திருந்தால் இதைப் போன்ற ஒரு பின்னூட்டத்தைப் போட்டிருக்கவே மாட்டீர். இருந்தும் இன்னொரு முறை சொல்கிறேன்.

    நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப நடந்த ஒரு சின்ன விஷயத்தைத் தான் இப்பவும் என் காதல் எக்ஸ்பீரியன்ஸா சொல்ல முடியும். பின்னாடி ஏன் அப்படி ஒன்னு வரலைங்கிறதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம். நான் யோசிக்க ஆரம்பிச்சது; எங்க வீட்டில் காதல் கல்யாணம் செய்யப்போகிறேன் என்று சொன்னால் அருவாள் பேசாது ஆனால் அப்பா அம்மா கஷ்டப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கு வரப்போகும் மனைவி இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சில விஷயங்கள் உண்டு.

    அதனால் காதல் எனக்கு ஏற்ற பெண்ணைத் தரமுடியாது என்று தீவிரமாக இன்று வரை நம்புகிறேன். கொஞ்சம் போல் கனவுலகில் வாழ்பவர்களுக்குத்தான் காதல் சரிப்படும். நாங்களெல்லாம் காலேஜ் சேரும் பொழுது நிகழ்காலத்தின் சூடுபட்டு கனவெல்லாம் காலியாய்டுச்சு.

    ReplyDelete
  9. //நான் யோசிக்க ஆரம்பிச்சது; //
    //எனக்கு வரப்போகும் மனைவி இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சில விஷயங்கள் உண்டு//
    //நாங்களெல்லாம் காலேஜ் சேரும் பொழுது நிகழ்காலத்தின் சூடுபட்டு கனவெல்லாம் காலியாய்டுச்சு//

    எனக்கு என்னமோ நீங்க சீக்கிரமே காதலிச்சுடுவீங்கன்னு தோனுது! :-))))

    ஹி... ஹி... சும்மா தமாசு! தமாசு!

    ReplyDelete
  10. //அக்காச்சி நல்லா சுலபமா பிரம்மச்சரியம், ஈடழிந்து நரக வழிச் செல்வாய், போன்ற விஷயங்களை கழட்டிவிட்டுட்டுப் போய்ட்டீங்க இல்லையா?//
    தம்பி, எங்க நான் கழட்டி விட்டிருக்கேன் இதையெல்லாம்? சரி, ரொம்ப தெளிவாவே பாயின்ட் பாயின்ட்டாவே சொல்லிடறேன்.
    நீங்க எடுத்து போட்ட வரிகளில் 3 விஷயம் இருக்கு.

    1. மனமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என் நாட்டுவார் - மன பொருத்தமற்ற திருமணத்தை போய் நல்ல மணம் அப்படின்னு சொல்றாங்களே(இரண்டு பேர்ல ஒருத்தருக்கு பிடிக்கலைனாலும் பொருந்தா மணம்தான் அது)

    2. யாது செய்யினும் - எக்கேடு கெட்டு போனாலும் போ (இந்த எக்கேடுல உங்களோட பிரம்மச்சரியம், விபச்சாரம், வப்பாட்டி வச்சுக்கறது எல்லாம் கவர் ஆயிடும். சரியா? நடுவுல அத கொஞ்சம் விவரிச்சு சொல்றார் தலைவர். நான் அதை திரும்ப திரும்ப சொல்ல விரும்பலை. அவ்ளோதான்.)

    3. இம்மணம் செய்யல்காண் - #1 ல சொல்லியிருக்கற திருமணத்தை மட்டும் செய்யவே செய்யாதே.

    இதுக்கப்புறமும் நீங்க பிடிச்ச முயலுக்கு 3 கால்தான்னு சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தா ஒன்னும் செய்யறதுக்கில்லை.

    இலக்கியத்துல எந்த வரியையும் எங்கேர்ந்தாவது உருவி அதுக்கு ஏதாவது பொருள் சொல்ல முடியும் குதர்க்கமா. ஆனா ஒரு கருத்தை எடுத்துக்கணும்னா, முதலில் அதை சொன்னது யார், எந்த சூழ்நிலைல சொல்லியிருக்காங்கன்றதையெல்லாம் பாக்கணும். அதையெல்லாம் விட்டு விட்டு வரியை மட்டும் எடுத்துகிட்டு குதிச்சால் என்ன பண்ண முடியும் சொல்லுங்க? அதுலயும் இங்க அவன் எங்கயும் நீங்க சொல்ற அந்த தீமைகளை பட்டியலிடலை. பிரம்மச்சாரியா வாழ். இல்லைன்னா எக்கேடும் கெட்டுப்போ அப்படின்னு மட்டுந்தான் சொல்றான்.

    கூடு மாயிற் பிரமச்சரியங்கொள்; கூடுகின்றலதென்னிற் பிழைகள் செய்து
    ஈடழிந்து நரகவழிச் செல்வாய்; யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.

    அதுல இருக்கற ஒரு வார்த்தை - பிழைகள் செய்து - இதுக்கு இவ்வளவு பில்டப்பா? ஒருத்தன் வெறுப்புல இதை மட்டும் செய்யாதேப்பா, வேற எக்கேடும் கெட்டுப்போன்னு சொல்லும்போது அவந்தான் என்னை கெட்டுபோகச்சொன்னன்னு சொல்றது எவ்வளவு அபத்தம்னு யோசிச்சுப்பார்த்தா உங்களுக்கே புரியும். புரிஞ்சாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.

    பாரதி தன்னோட சொந்த வாழ்க்கைல எவ்வளவு அருமையான குடித்தன செஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்க சில எடுத்துக்காட்டுக்களை இங்கே தரேன்.

    செல்லம்மாள் பாரதி தன்னோட சுய சரிதைல சொல்றாங்க, பல பாடல்களை எழுதி முடித்ததும் வீட்டில்லிருக்கும் எல்லோரையும்(மனைவி செல்லம்மாள், அவருடைய இரு மகள்கள், அவரோட வளர்ப்பு பெண்ணாவே கருதப்பட்ட மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரின் பெண் யதுகிரி) எல்லோரையும் சுத்தி உட்கார வைத்து பாடிக்காட்டுவானாம். இந்த சம்பவம் செல்லம்மாளின் வாழ்க்கை குறிப்பில் மட்டுமல்ல, யதுகிரியம்மா அவங்களோட புத்தகங்களிலும் இருக்கு. எப்போ பார்த்தாலும் உப்பு புளி மொளகாய்க்காக சண்டை போடற பொண்டாட்டிகிட்டயா எழுதின கவிதைய பாடிக்காட்டுவான் ஒருத்தன்? துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு இதோ வரேன்னு எழுந்து வெளில போய் ரசிச்சு கேட்கற ஒருத்தன் கிட்ட இல்ல பாடிக்காமிக்க ஒடுவான்?

    இப்ப நாம படிக்கற கண்ணம்மா கவிதைகள் எல்லாமே கண்ணனை நாயகி பாவத்துல பாடினது அப்படின்னு நாம நினைச்சுகிட்டிருக்கோம் இல்லையா? அதுல கண்ணன் பாட்டுல வர பாடல்கள் மட்டும் தான் அப்படி பாடியது. தனிப்பாடல்களில் வரும் கண்ணம்மா பாட்டெல்லாம் செல்லம்மான்னுதான் பாரதி எழுதியிருந்திருக்கான். அவனது மறைவிற்கு பிறகு பாடல்களை பதிப்பிக்கும் போது காதல் பாடல்களில் தன் சகோதரி பெயர் இருக்கக்கூடாதுன்னு செல்லம்மாளின் சகோதரர்தான் எல்லாத்தையுமே கண்ணம்மாவாக்கினாராம். இப்பவும் நீங்க கண்ணம்மாவை செல்லம்மாவாக்கி பாடிப்பார்த்தால் மிகச்சரியா பொருந்தும்.

    மேற்சொன்ன இரு சம்பவங்களையுமே நான் படித்தது திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களது வலைத்தளத்துல்தான். பேசாம சுட்டி கொடுத்துடலாம்னு பார்த்தால் அந்த வலைத்தளம் புதுப்பிக்கப்படாமல் இப்போ வேற எங்கியோ இழுத்துகிட்டு போகுது. மரத்தடியில் நீங்களும் எழுதியதாக அறிகிறேன். அவரை தொடர்பு கொள்ள முடியுமெனில் அவரிடமே கேட்டுப்பாருங்கள். அவர் இன்னும் எவ்வளவோ விஷயங்களைச்சொல்வார்.

    //நீங்க முன்னாடி நான் எதோயோ வைத்து எழுதியதாய் புலம்பிய பொழுது உங்களுக்குப் புரியவில்லையா நான் இந்தக் கவிதையைத்தான் சொல்கிறேன் என்று?? //

    முதல் விஷயம் நான் புலம்பலை. அது என்னால முடியாத ஒன்னும் கூட. அதெப்படி மோகனா, நீங்க ஒரு பாட்டை போடுவீங்க. அப்புறமா வேற ஒரு பாட்டை மனசுல நினைச்சுகிட்டு ஒரு கருத்தை எழுதுவீங்க. அதுவும் எப்படி? அந்த பாட்டை எப்படி படிச்சாலும் அப்படி ஒரு பொருள் உங்களைத்தவிர வேற யாருக்கும் வராது. அப்படி ஒரு அர்த்தத்தை எழுதுவீங்க. நீங்க எந்த பாட்டை நினைச்சுகிட்டு உளறியிருக்கீங்கன்றதை நாங்க கண்டுபிடிக்கணுமாக்கும். மன்னிக்கணும் தம்பி, எனக்கு ஞானதிருஷ்டியெதும் இல்லை.

    அப்புறம் ஒரு விஷயம் - விவாதங்களுக்கு எப்பவுமே ஒரு திறந்த மனநிலை வேணும். இது வரை உங்களோட வாதங்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சில இடங்களில் வாதிட்டுமிருக்கிறேன். நான் பார்த்த வரை அந்த மனநிலை உங்களுக்கு சுத்தமா கிடையாதுன்றதுதான் என்னோட அபிப்ராயம். நீங்க சொல்றதுதான் சரி. அது நீங்க சொல்றீங்கன்ற காரணத்துனாலேயே சரியாதான் இருக்கணும். இப்படி சில முன் முடிவுகளோடதான் நீங்க விவாதத்துல ஈடுபடவே ஆரம்பிக்கிறீங்க. அதுனாலயே உங்க பதிவுக்கு வந்தெல்லாம் நான் கருத்து சொல்றதில்லை. நீங்களா கேட்கும்போது மட்டுமே விளக்கம் கொடுத்துட்டு போறதுன்னு இருந்தேன். நீங்க காதலிக்கறதோ/காதலிக்காம போறதோ, கல்யாணம் பண்ணிக்கறதோ/பண்ணிக்காம போறதோ, விபச்சாரம் பண்றதோ இல்லை வப்பாட்டி வச்சுக்க்றதோ உங்க தனிப்பட்ட விஷயம். அதை உங்க பதிவுல போட்டு அதுக்கு கரெக்டா சுய சொறிதல்னு லேபிள் கொடுத்துக்கறதும் சரிதான். ஆனா அப்படியெல்லாம் செய்யச்சொன்னான்னு பாரதி மேல பழிய போட்டீங்க பாருங்க. அதான் எனக்கு தாங்கலை. அதுனாலதான் என் எதிர்வினையை இங்கே பதிவு செஞ்சிருக்கேன் பின்னூட்டம் மூலமா. இன்னும் எவ்வளவு நேரம் செலவழிச்சு விவாதிச்சாலும் உங்களுக்கு எதையும் புரிய வச்சுட முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா உங்க பதிவை படிச்சு நாலு பேர் இப்படிக்கூட பாரதி சொல்லியிருக்கான் போலன்னு நினைச்சுடக்கூடாது பாருங்க. என்னோட எல்லா விளக்கமும் அவங்களுக்குத்தான். அவங்களுக்கு நிச்சயம் இந்த விளக்கங்களே போதும் என்று எண்ணுவதால் இந்த விவாதத்துல இதுதான் என்னுடைய கடைசீப்பின்னூட்டம்.

    அவன் காதலை பற்றியும் இல்லறமென்னும் நல்லறம் பற்றியும் சொல்லியிருப்பதையும் நேரம் கிடைக்கும்போது ஒரு தனி பதிவு போடறேன். அங்க தொடரலாம் நம் விவாதத்தை. கடைசி பின்னூட்டம் அப்படிங்கறதால ரொம்பவே நீண்டு விட்டது. பொறுத்தருளவும்.

    ReplyDelete
  11. நான் முன்னமே எப்பொழுதோ ஒரு முறை சொல்லியிருந்தது போல், ஒரு பிரச்சனையை ஒருவர் அணுகும் பொழுது பல விஷயங்கள் அந்த விஷயத்தை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை தீர்மானிக்கும். படிப்பு, பணம், குடும்ப சூழ்நிலை இப்படி நிறைய விஷயங்கள். அதுவும் இல்லாமல் இது ஈராக்கில் நடக்கும் ஒரு பிரச்சனை கிடையாது எனக்கென்ற ஒரு அபிப்ராயம் இல்லாமல் இருப்பதற்கு; என்னுடைய அபிப்ராயம் நான் அந்தப் பிரச்சனையைப் பார்க்கத் தொடங்கும் பொழுது நிச்சயமாகயிருக்கும்.

    திறந்த மனநிலை என்னைப் பொறுத்தவரை யாருக்குமே வராது; இதுக்கு முன்னாடி இந்த விஷயத்தைப் பத்தி என்ன எழுதியிருக்கோம் இனிமேல் என்ன எழுதப்போகிறோம் என்று யோசிக்காமல் பேசமுடியாது. இது அனைவருக்கும் பொருந்தும்.

    -------------------

    ஹரியண்ணாவுடைய வலைத்தளத்தையும் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருந்ததையும் இன்னும் நிறைய விஷயங்களையும் அந்த வலைத்தளத்திலேயே படித்திருக்கிறேன்.

    --------------------

    //அந்த பாட்டை எப்படி படிச்சாலும் அப்படி ஒரு பொருள் உங்களைத்தவிர வேற யாருக்கும் வராது.//

    இதற்கு மட்டும் பதில் சொல்லிக்கொள்கிறேன்; சுஜாதா கணையாழி கடைசிப் பக்கங்களில் இதே கவிதையைப் போட்டுவிட்டு, கீழே சொல்லியிருப்பார்;

    "திருமணத்தின் மேல் ஏன் இத்தனை வெறுப்போ?" என்று. அது பொதுவா திருமணத்தைச் சொல்வது தான். அம்'மணத்தை' சொல்லலை. படித்துப் பாருங்கள் இன்னமும் நிறையச் சொல்லியிருப்பார்.

    -------------------

    பிழைகள் செய்தை நான், நான் எழுதியது போல் தான் பார்க்கிறேன் இப்பவும். பிரம்மசரியமும் செய்ய முடியலைன்னா(அதாவது நீங்க சொன்னமாதிரி வைச்சிக்கிடணும்னா இருமனமும் ஒத்து கல்யாணமும் செய்ய முடியாம) பிழைகள் செய்து ஈடழிந்து நரகத்திற்குப் போவாய்,

    அப்படிங்கிற வார்த்தைக்கு எனக்குப் புரியும் விளக்கம் அவ்வளவுதான். இதுக்கு மேலையும் பாரதி நேரடியா விபச்சாரம் செய்துக்கோன்னு கவிதை வரியில் எழுதணும்னு நான் எதிர்பார்க்கலை.

    ---------------------
    //அதுனாலயே உங்க பதிவுக்கு வந்தெல்லாம் நான் கருத்து சொல்றதில்லை. நீங்களா கேட்கும்போது மட்டுமே விளக்கம் கொடுத்துட்டு போறதுன்னு இருந்தேன். //

    இது எனக்கும் பொருந்தும்; பல சமயங்களில் பெண்ணியம் என்கிற பேரில் இந்த வலையுலகில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு பதில் சொல்றேன் பேர்வழியென்று நான் இறங்குவதில்லை.

    ஏன்னா எனக்கு நல்லாவேத் தெரியும் ஒரு முன்முடிவோடத்தான் பல சமயங்களில் எல்லோரும் இறங்குவது. இப்ப பாரதியை குறை சொன்னதும் உங்களுக்கு கோபம் வந்தது போல் எனக்கும் பதிவைப் படித்ததும் கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால் மட்டுமே பதில் எழுதுவது.

    இது உங்களுடைய "சில" பதிவுகளுக்கும் பொருந்தும்.

    --------------------

    இதையெல்லாம் சொல்லி பாரதியை எனக்குப் பிடிக்காது என்ற பிம்பம் போல் ஒன்று உருவாவதை நான் உணர்கிறேன்.

    எல்லோரையும் அவரவர்களுடைய பாஸிடிவ், நெகட்டிவ்களுடன் தான் பார்க்கிறோம், ஏற்றுக்கொள்கிறேம் என்று 100% உணர்ந்திருப்பதால் எனக்குப் பிரச்சனையில்லை.

    பாரதி அவர் மனைவியுடன் சுகமாக வாழ்ந்தானா இல்லையா என்ற பேச்சுக்கே நான்வரவில்லை. இந்தக் கவிதையை எழுதியக் காலம் வரை, "நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொண்டாலும்" தான் செய்து கொண்டதைப் போன்ற கல்யாணத்தைச் செய்து கொள்ளாதீர்கள் என்று சொல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று உங்கள் "திறந்த மனநிலையில்" சொல்லுங்களேன் பார்ப்போம்.

    நீங்கள் பலசமயம் விவாதத்திற்கு ஒப்பனா கூப்பிட்டாலுமே கூட நான் வரமாட்டேன்; ஏனென்றால் எனக்கு அந்தப் பதிவில் சொல்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரிந்தால் மட்டுமே என் மறுமொழி உங்கள் பதிவில் வைக்கப்படும்.

    ஏற்கனவே "சாப்ட்வேர் துறையில் பெண்கள்" அப்படின்னு எழுதுறேன்னு சொல்லி அதைக் காணோம். இப்ப இது.

    ReplyDelete

Popular Posts