In Only ஜல்லிஸ்

இளவரசிகளுக்கு கண்டணங்கள்

வலைபதிவுகளில் எழுதுவது எப்படி என்று அவ்வப்பொழுது மக்கள் வகுப்புகள் எடுப்பது உண்டு அப்படி ஒரு வகுப்பு என்று இதை வைத்துக்கொள்ளலாம். கீழிருப்பது பொன்னியின் செல்வனின் இருந்து சுடப்பட்ட ஒரு பகுதி. ஐந்தாம் பாகம் - எண்பதாம் அத்தியாயம் - நிலமகள்காதலன். நீங்களே பாருங்கள் இந்த இளவரசிகளுக்கு இருக்கும் கொழுப்பை. அருள்மொழித்தேவரின் முடிசூட்டு விழாவிற்குக் கூட வராமல் இவர்கள் ஜோசியக்காரர்களைக் காணச் செல்கிறார்கள். அவர்களுக்கு எனது கண்டனங்கள்!!!

இளவரசிகள் வீற்றிருந்த பல்லக்கைப் பொன்னியின் செல்வரின் குதிரை நெருங்கியது. சற்று பின்னால் குதிரையை நிறுத்திய வந்தியத்தேவன், "ஜாக்கிரதை! இளவரசிகளின் அந்தப் பொல்லாத பல்லக்கு நம் சாது குதிரையை மோதிவிடப் போகிறது!" என்றான். கிட்டத்தட்ட அதே இடத்தில் முன்னொரு தடவை நந்தினியின் மூடுபல்லக்கின் மீது அவன் குதிரையைக் கொண்டு போய் மோதிவிட்டுக் "குதிரையைப் பல்லக்கு மோதுகிறது!" என்று கூக்குரலிட்டது அவனுக்கு நினைவு வந்தது. அச்சம்பவம் நடந்து ஆறு மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. ஆனால் இந்தச் சிறிய காலத்துக்குள் எத்தனை எத்தனை முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன!

குந்தவை வந்தியத்தேவனுடைய வார்த்தைகளினால் ஏற்பட்ட பூரிப்பை அடக்கிக் கொண்டு, "தம்பி! உங்களைப் பார்த்தால் ஏதோ குதூகலமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வருவதாகத் தோன்றுகிறதே! உங்களுடைய திருமுகங்கள் அவ்வளவு மலர்ச்சியுடன் விளங்குகின்றன!" என்றாள்.

"ஆம், அக்கா! குதூகலமான விஷயம் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தோம். ஆனால் அது உன் தோழி வானதிக்கு அவ்வளவு குதூகலம் தராது. என்னுடைய திருமண நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதல்லவா? நான் காதல் கொண்டு மணந்து கொள்ளப்போகும் மங்கையைப் பார்த்து மகிழ்ந்தோம். அவளுடைய ரூப லாவண்யங்களை பற்றிப் பேசிக் கொண்டு வருகிறோம்!" என்றார் பொன்னியின் செல்வர்.

சற்றுமுன் பிரகாசமாக விளங்கிய இரு பெண்களின் முகங்களும் உடனே வாட்டமுற்றன. வானதி தலையைக் குனிந்து கொண்டாள். குந்தவையின் முகத்தில் கோபம், வியப்பு, ஐயம், ஆத்திரம் முதலிய வெவ்வேறு பாவங்கள் தோன்றி மறைந்தன. "இது என்ன வெட்கமற்ற பேச்சு? இந்தப் பெண்ணின் மனத்தை வருத்தப்படுத்துவதில் உனக்கு என்ன சந்தோஷம்?" என்றாள்.

வானதி குனிந்த தலையை நிமிர்த்திக் குந்தவையைப் பார்த்து, "அக்கா! இது என்ன வார்த்தை? எனக்கு எதற்காக வருத்தம்?" என்றாள்.

ஒன்றுக்கும் மறுமொழி சொல்லாமல் பொன்னியின் செல்வர் புன்னகை பூத்த முகத்துடன் நிற்பதைக் கண்ட இளையபிராட்டி "கொள்ளிடக்கரைக்கல்லவா போய்த் திரும்புகிறீர்கள்? அங்கே எந்தப் பெண்ணைப் பார்த்தீர்கள்? எந்த ஊர்? என்ன பேர்? என்ன குலம்?" என்று கேட்டுக் கொண்டே போனாள்.

இப்போது வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "தேவி! இளவரசர் மணக்கப்போகும் குலமகள் யாரையும் நாங்கள் பார்த்துவிட்டு வரவில்லை. இந்தப் பஞ்சநதி தீரத்தில் பொலிந்து விளங்கும் நிலமாமகளைத்தான் நெடுகிலும் பார்த்து வியந்துகொண்டு வந்தோம். சோழ வளநாட்டின் இயற்கை அழகுகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். இளவரசர் இந்த அழகிய நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளும் நாள் நெருங்கி வருகிறதல்லவா? இவர் இந்த இரு நிலமடந்தையின் பேரில் கொண்ட காதலைப் பற்றித்தான் குறிப்பிட்டார்!" என்றான்.

"ஆகா! என் சகோதரனுக்கு இப்படியெல்லாம் விகசிதமாகப் பேச முன்னெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தாங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!" என்றாள்.

அருள்மொழிவர்மர் சிரித்துவிட்டு, "நண்பரே! தங்களுக்கு நன்றாக வேண்டும்! தங்களுடைய சிநேகத்துக்குப் பிறகு எனக்குத் தந்திர மந்திரமெல்லாம் வந்திருக்கிறது என்று முன்னமே நான் சொல்லவில்லையா? என் தமக்கையாருக்கும் அவ்விதமே தோன்றியிருக்கிறது, பாருங்கள்!" என்றார்.

"இது என்ன வீண் பழி! தமக்கையும், தம்பியும் ஒத்துப் பேசிக் கொண்டதுபோல் ஒரே மாதிரி என் பேரில் குற்றம் சுமத்துகிறீர்களே?" என்றான் வந்தியத்தேவன்.

"இன்னும் தங்கள் பேரில் பல குற்றங்கள் இருக்கின்றன. என் தம்பி சொல்லியிருக்க முடியாத குற்றங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நடுச் சாலையில் நின்று சொல்ல முடியாது!" என்றாள் குந்தவை.

வந்தியத்தேவன், "நான் சந்தேகித்தது சரியாய்ப் போய் விட்டது!" என்றான்.

"என்ன சந்தேகித்தீர்கள்?"

"என்னை ஈழ நாட்டுப் படைக்குச் சேனாதிபதியாக்கி அனுப்புவது என் குற்றங்களுக்காக எனக்குத் தீவாந்தர சிட்சை விதிப்பதேயாகும் என்று சந்தேகித்தேன்."

"பார்த்தீர்களா, அக்கா! சோழ குலத்தாரின் நன்றியறிதலில் இவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?"

"நமக்கு இவரிடம் நன்றி சிறிதும் இல்லை என்பது உண்மை தான்!"

"இது என்ன, நீங்களும் இப்படிச் சொல்லுகிறீர்களே?"

"அன்னியர்கள் செய்யும் உதவிக்கு நன்றி செலுத்தலாம். நண்பர்களுக்குள் நன்றி எப்படி ஏற்படும்? திருவள்ளுவர் சொல்லியிருப்பது ஞாபமில்லையா?
'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு!'
நழுவிய உடையை எடுத்துக் கட்டிவிட்டதற்காக இடை கைக்கு நன்றி செலுத்த வேணுமா?" என்றாள் குந்தவை.

"தேவி! நன்றி செலுத்த வேண்டியதேயில்லை. தண்டனை விதிக்காமலிருந்தால், அதுவே பெரிய நன்றியாகும்!"

"தம்பி! நீயும் சரி, இவரும் சரி, ஒன்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இவரை எனக்கு உதவியாயிருக்கும்படியாக நம் தமையன், வீர சொர்க்கம் எய்திய கரிகாலன், அனுப்பி வைத்தான். அந்தக் கடமையிலிருந்து இவரை நான் விடுதலை செய்து விடவில்லை!" என்றாள் குந்தவை.

"இவருக்கு விடுதலை தரவே வேண்டாம், அக்கா! ஆயுள் தண்டனையாகவே அளித்தாலும் எனக்குச் சம்மதந்தான்!" என்றார் இளவரசர்.

"இலங்கையில் இவரால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன" என்றாள் குந்தவை.

"போவதற்கு முன்னால் தங்களிடம் விடைபெற்றுச் செல்வேன், தேவி!" என்றான் வந்தியத்தேவன்.


"அப்படியானால், பழையாறைக்குத் தாங்கள் வந்து என்னிடம் விடைபெறும்படி இருக்கும்" என்றாள் குந்தவைப் பிராட்டி.

"அக்கா! இப்போது எங்கே புறப்பட்டீர்கள்?" என்று அருள்மொழிவர்மர் சிறிது வியப்புடன் கேட்டார்.

"திருவையாறுக்குப் போகிறோம் இன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள் அல்லவா? செம்பியன்மாதேவியும் மதுராந்தகரும் பூங்குழலியும் காலையிலேயே சென்றார்கள் நீங்களும் வருகிறீர்களா?" என்றாள் குந்தவை.

"இல்லை; நாங்கள் இப்போது வரவில்லை திருவையாறு நகருக்குள் போகக் கூடாதென்றுதான் ஆற்றங்கரையோடு மேற்கே சென்று திரும்பி வந்தோம்."

"அப்பர் பெருமான் திருவையாற்றில் கைலாசத்தையே கண்டு பரவசமடைந்தார். உங்களுக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை போலிருக்கிறது. ஒருவேளை நீங்களும் வீர வைஷ்ணவர்கள் ஆகி விட்டீர்களா என்ன?"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; திருவையாறு சென்றால், அப்பர் பெருமானைப்போல், அங்கே போக வேண்டுமென்பது என் எண்ணம்."

"அப்பர் எப்படிச் சென்றார்?"

"அவருடைய பாடலிலேயே சொல்லியிருக்கிறாரே! 'யாதும் சுவடு படாமல்' சென்றார். ஆடம்பரம் எதுவுமில்லாமல், தாம் திருநாவுக்கரசர் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், பூஜைக்காகப் புஷ்பமும் நீரும் கொண்டு சென்ற அடியார் கூட்டத்தின் பின்னால் சென்றார். அதனால் திருவையாற்றில் கைலாசத்தையே அவர் காண முடிந்தது. நாம் அங்கே இந்த ராஜரீக ஆடம்பரங்களுடன் சென்றால், நாமும் இறைவனைத் தரிசிக்க முடியாது; ஜனங்களும் சுவாமி தரிசனத்தை மறந்துவிட்டு நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு நிற்பார்கள்!..."

"ஆமாம், ஆமாம்! உன்னுடைய ஜாதக விசேஷம் அப்படி! உன்னைக் கண்டதும் மக்கள் சூழ்ந்து கொண்டு 'மன்னர் மன்னருக்கு ஜே! பொன்னியின் செல்வருக்கு ஜே!' என்று கோஷமிடத் தொடங்குவார்கள். ஆனால் எங்களுக்கு அவ்வளவு அபாயம் இல்லை. மேலும் நாங்கள் ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் போகவும் மாட்டோம். திருவாதிரைத் திருநாளுக்காகச் சுவாமி எழுந்தருளல் நடக்கும்போது, திருவையாற்றிலுள்ள நம் அரண்மனை மேல் மாடத்திலிருந்து ஐயாறுடை இறைவனைத் தரிசித்துக் கொள்வோம்."

"அக்கா! ஒரு பழம் பாடல் நினைவு இருக்கிறதா? அண்ட சராசரங்களையும், அகில புவனங்களையும், ஆகாச வெளியிலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் படைத்தவர் இறைவன்; அவரை 'ஆதிரையான்' என்றும், 'திருவாதிரை நட்சத்திரத்துக்கு மட்டும் உரியவன்' என்றும், மக்கள் கருதுவது என்ன பேதைமை? இப்படிப்பட்ட கருத்துள்ள அந்தப் பாடல் தங்களுக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவிருக்கிறது, தம்பி! ஆனால் எல்லா நட்சத்திரங்களுக்கும் உரியவன் திருவாதிரைக்கும் உரியவன்தானே?"

"சரி, நீங்கள் போய் வாருங்கள்! எப்போது தஞ்சைக்குத் திரும்பி வருவீர்கள்?"

"தஞ்சைக்கு இப்போது நாங்கள் திரும்பப் போவதில்லை திருவையாற்றிலிருந்து பழையாறை போகிறோம்."

"என்ன, என்ன? என்னுடைய மகுடாபிஷேகத்துக்கு இல்லாமலா போகிறீர்கள்?" என்றார் இளவரசர்.

"ஆம், ஆம்! உன்னுடைய மகுடாபிஷேக வைபவத்தில் எனக்கும், வானதிக்கும் என்ன வேலை?"

"ஆகா! தாங்கள் இல்லாமல் என்னுடைய பட்டாபிஷேகம் நடைபெறாது!"

"எல்லாம் நடைபெறும், ஏன் நடைபெறாது? பட்டாபிஷேகத்துக்கு நாள் வைத்துக் கொடுத்தவர் யார்? இராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்த்துச் சொன்னவரின் சந்ததியில் வந்தவர் அல்லவே?"

"எனக்கு நாள் நட்சத்திரம், சோதிடம் ஆருடம் எதிலும் நம்பிக்கை இல்லை, அக்கா! நம் கடமையைச் செய்யும் எல்லா நாளும் நல்ல நாள்தான்! சோம்பியிருக்கும் நாட்களே கெட்ட நாட்கள்!" என்றார் பொன்னியின் செல்வர்.

"உன்னுடைய வாழ் நாட்கள் எல்லாம் அத்தகைய நல்ல நாட்களாகவே இருக்கட்டும், தம்பி! நாங்கள் சென்று ஐயாறப்பரிடமும் அறம் வளர்த்த நாயகியிடமும் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்!" என்றாள் குந்தவை.

"எனக்காக என்ன பிரார்த்தனை செய்யப் போகிறீர்கள்?"

"நிலமகள் மேல் நீ கொண்டிருக்கும் காதல் பூர்த்தி ஆகட்டும்; உன் மகுடாபிஷேகம் விக்கினமின்றி நடைபெறட்டும்" என்று ஐயாறுடைய இறைவரிடம் பிரார்த்திக்கிறோம். உன் உள்ளம் சோழர் தொல்குடிக்கு உரிய அற வழியிலிருந்து விலகாமலிருக்கட்டும் என்று அறம் வளர்த்த நாயகியின் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்."

"அப்படியானால், நீங்கள் எனது பட்டாபிஷேகத்துக்கு நிச்சயமாக இருக்கப் போவதில்லையா?"

"பழையாறையிலிருந்து அகக்கண்ணால் கண்டு மகிழ்கிறோம்."

"அக்கா! தாங்கள் இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் பிடிவாதத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். இவள் என்னுடன் சோழ சிங்காதனம் ஏறுவதற்கு மறுத்தால், உலகமே அஸ்தமித்து விடும் என்று எண்ணுகிறாள்! இவளுடைய வீண் பிடிவாதம் விபரீதத்தில் முடியப்போகிறது. இவளுக்குப் பதிலாகச் சோழரின் சிங்காதனத்தில் வேறொரு பெண் அமர்ந்து விடப் போகிறாள்! அப்புறம் என் பேரில் குற்றம் சொல்லிப் பயன் ஒன்றுமில்லை" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"நான் இவர் மீது என்றும் குற்றம் சொன்னதில்லை; இனிமேலும் குற்றம் சொல்லப் போவதில்லை, அக்கா!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

"நீ சொன்னாலும் பயனில்லை, வானதி! மண்ணாசை கொண்டவர்களின் காதில் வேறு எதுவும் ஏறாது!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

"இந்த மண்ணாசையை என் மனதில் உண்டாக்கியவர் தாங்கள்தான் என்பதை மறந்து விடவேண்டாம். பெண்ணாய்ப் பிறந்த தாங்களே இந்த அழகிய சோழ நாட்டை விட்டுப் போக மனம் வரவில்லையென்றும், அதற்காகவே கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லையென்றும் பலமுறை என்னிடம் சொன்னதில்லையா?" என்றார் அருள்மொழி.

"அப்போதெல்லாம் என் வார்த்தைகள் உன் காதில் ஏறவே இல்லை. உலகத்தில் இன்னும் எத்தனையோ அழகிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லி வந்தாய்! இந்த வாணர் குலத்து வீரரின் போதனைதான் உன்னை இப்படி நிலமடந்தையின் காதலன் ஆக்கிவிட்டது!" என்றாள் குந்தவைப்பிராட்டி.

"தெய்வமே! அந்தப் பழியும் என் பேரிலேதானா வந்து விழ வேண்டும்?" என்றான் வந்தியத்தேவன்.

"எவ்வளவோ பெரிய பயங்கரமான பழியைச் சுமந்தீர்களே? இந்தச் சிறிய பழிகளுக்கா பயந்துவிடப் போகிறீர்கள்? தம்பி! வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோம்! சுவாமி எழுந்தருளும் நேரம் நெருங்கி விட்டது, போகிறோம்!" என்று கூறிக் குந்தவை சிவிகையாளருக்குச் சமிக்ஞை செய்தாள். பல்லக்கு மேலே சென்றது.

சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு பொன்னியின் செல்வரும் தஞ்சையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.

PS: கடைசியில் அருள்மொழித்தேவனுக்கு பட்டமளிப்பு விழா நடக்காதென்பதும் இப்ப ரொம்ப முக்கியமான குறிப்பா.

Related Articles

15 comments:

  1. ayyo ummai pola vakkiram pudicha aalai ennaseyyiradhu
    gadhaikkum thalaippukkum ennayya sammantham

    ReplyDelete
  2. அனானி பெயருடன் வாருங்கள் பதில் சொல்கிறேன்!

    ReplyDelete
  3. தனது தோழி வானதி செய்த சத்தியத்தைக் காப்பாற்றவே குந்தவை அந்த முடிவை எடுப்பார். மேலும் தீர்க்க தரிசனத்தில் பட்டமளிப்பு நடக்காது என்று கூட தெரிந்திருக்கலாம் இல்லையா? இது தோழிக்கு உதவும் நட்பு தான். இது கூட உங்களுக்கு திமிராகத் தெரிகிறதா?
    (15 ஆண்டுகளுக்குப் பிறகு இராஜ இராஜ சோழன் மன்னனாவான்.)

    ReplyDelete
  4. வித்யா கலைவாணி நன்றிங்க - எனக்கு சோழர் வரலாறு சொல்லித்தந்ததுக்கு(ஸ்மைலி போடலை பார்த்துக்கோங்கப்பா...)

    இலவசக் கொத்தனார் ;-)

    ReplyDelete
  5. ம்ம்.... விவகாரமான தலைப்பு வைக்கிறதுக்கே ஒனக்கு மேட்டரு கிடைக்குதுய்யா... :)

    ReplyDelete
  6. //வித்யா கலைவாணி நன்றிங்க - எனக்கு சோழர் வரலாறு சொல்லித்தந்ததுக்கு(ஸ்மைலி போடலை பார்த்துக்கோங்கப்பா...)///
    மன்னிக்கவும். சோழ வரலாறு வேறு, பொன்னியின் செல்வன் வேறு. உங்களுக்கு சொல்லித்தரும் அளவுக்கு நான் இல்லை என்பது இதில் உள்ள டிஸ்கியை பார்த்தால் தெரியும்.
    http://kalavani.blogspot.com/2007/10/68-5.html

    ReplyDelete
  7. வித்யா - உங்களை நான் நிச்சயமாய் வம்பிற்கு இழுக்கவில்லை அந்தப் பின்னூட்டத்தில் அப்படித் தோன்றியிருந்தால் அது என்னுடைய மொழியின்(தமிழினுடைய அல்ல) பிரச்சனை.

    //உங்களுக்கு சொல்லித்தரும் அளவுக்கு நான் இல்லை//

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு சாலமன் பாப்பய்யா சொல்லியிருக்காருங்க! அதனால் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித்தரலாம். தவறில்லை!!!

    சாணக்கியனைப்பற்றி ஒரிரு வரிகள் - எனக்கு சாணக்கியனைப் பற்றி எழுதுவதில் விருப்பம் இல்லைங்க. எழுதவேண்டிய தமிழ் மன்னர்கள் ஏகமாய் இருக்கிறார்கள் அதைக் கிழிக்கிறேன் முதலில். என்ன சொல்றீங்க!

    வேற யாராவது தமிழ் அரசர்களைப் பற்றிக் கேளுங்க தலையை உடைச்சிக்கிட்டாவது எழுத முயற்சிக்கிறேன் - இந்த விஷயத்தில் தவறா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. நானும் விளையாட்டாக எழுதவில்லை. குரு. சிஷ்யர்கள் இருவரின் எழுத்துக்கள் மீதும் அளவுகடந்த நம்பிக்கையும், விருப்பும் இருப்பதால் தான்.
    ///எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு சாலமன் பாப்பய்யா சொல்லியிருக்காருங்க!///
    அதுக்காக சகோதரியை இப்படியா குழப்புறது?

    ReplyDelete
  9. //நானும் விளையாட்டாக எழுதவில்லை. குரு. சிஷ்யர்கள் இருவரின் எழுத்துக்கள் மீதும் அளவுகடந்த நம்பிக்கையும், விருப்பும் இருப்பதால் தான்.//

    அச்சா நீங்க ஆசிப் அண்ணாச்சியையும் என்னையும் குரு - சிஷ்யன்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். சரியா?

    ஆசிப் கேட்டுக்கோங்க உங்களுக்கு நல்ல பேரு வாங்கித் தந்திருக்கேனாக்கும் ;)

    //அதுக்காக சகோதரியை இப்படியா குழப்புறது?//

    அய்யய்யோ அப்ப அவர் பேரு அது இல்லையா? காலங்கார்த்தலை கொஞ்சம் கருப்பா சன் டீவியில் வந்து சொல்லுவாரே அவர் பேரு சாலமன் பாப்பையா இல்லையா? இந்த சிவாஜி படத்திலெல்லாம் நடிச்சிருந்தாரே!

    பாருங்க இப்படித்தான் எனக்குச் சொல்லாமலே பேரை மாத்தி வைச்சிக்கிறாங்க - உங்க பேரைச் சொல்லி - அதுக்கும் ஒரு கண்டணம் போட்டுக்கிறேன். ;)

    PS: சாலமன் பாப்பையா மேட்டரை கண்டுக்காதீங்க...

    ReplyDelete
  10. நன்றி, மீண்டும் பொன்னியின் செல்வனை நினைவூட்டியதர்க்கு

    ReplyDelete
  11. இராம் - தலைப்பிற்காக பதிவா? பதிவிற்காக தலைப்பா என்ற கேள்வி எனக்கு இப்பொழுது உங்களால் எழுந்துள்ளது.

    ReplyDelete
  12. செல்வம் வாங்க,

    உங்களுக்கு மீண்டும் பொன்னியின் செல்வனை நினைவுபடுத்த முடிந்ததற்கு நன்றிகள்.

    நிறைய பதிவுகள் எழுதுங்க!

    ReplyDelete
  13. இளவரசிகள் பொ.செ கதையில் பட்டமளிப்பு விழாவிற்கு வருவதாக இருந்திருந்தால் இந்த தலைப்பில் நீங்கள் பதிவு போடாமல் இர்ந்திருப்பீர்களோ...? அப்ப்டி தோணலையே... :)

    ReplyDelete
  14. யோவ்...இந்தா பிடி...81-ம் அத்தியாயம். இதை 100 முறை படிக்கவும். படித்து 100 பேருக்கு ஃபார்வேர்டு செய்யவும். இல்லையென்றால் இரத்தம் கக்கி சாவீற்கள்.

    81. பூனையும் கிளியும்

    பொன்னியின் செல்வர் ஊகித்து ஆருடம் கூறிய வண்ணமே நடந்தது. குந்தவை தேவியும், வானதியும் திருவையாற்றில் இருந்த சோழ மாளிகை போய்ச் சேர்ந்ததும், அங்கேயே பல்லக்கையும் பரிவாரங்களையும் நிறுத்தினார்கள். செம்பியன் மாதேவியும், அவருடைய மகனும், மருமகளும் கோவிலுக்குச் சென்றிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். தாங்களும் கோயிலுக்குப் போவதாக மாளிகைக் காவலர்களிடம் சொல்லி விட்டு, ஒரே ஒரு வீரனை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு சோதிடர் வீட்டைத் தேடிச் சென்றார்கள்.

    ஆம்; குடந்தை சோதிடர் அங்கே வெள்ளத்தில் தமது வீடு அடித்துக் கொண்டு போகப்பட்ட பிறகு திருவையாற்றுக்கு வந்து விட்டார். நகரில் கிழக்கு ஓரத்தில் காவேரிக் கரையில் சிறிய வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கே குடியிருக்கத் தொடங்கினார்.

    இனிமேல் பழையாறை நகரைக் காட்டிலும் தஞ்சாவூர் அதிக முக்கியத்துவம் பெறலாம் என்று அவர் ஜோசியத்தின் மூலம் அறிந்து கொண்டதும், ஒருவேளை அவர் திருவையாற்றுக்கு வந்து குடியேறியதற்குக் காரணமாயிருக்கலாம்.

    ஜோசியர் வீட்டின் வாசற்படியில் அவர்கள் பிரவேசிக்கும் போதே உள்ளேயிருந்து மிக இனிய மழலைக் குரலில், "வாருங்கள், ஆடலரசிகளே வாருங்கள்! நடன ராணிகளே, வாருங்கள்!" என்று யாரோ வரவேற்றதைக் கேட்டுத் தேவிமார்கள் இருவரும் வியப்படைந்தார்கள். முன்னே ஒரு முரட்டுச் சீடனைக் காவற்காரனாக வைத்திருந்தவர் இப்போது இப்படி பரிந்து உபசரித்து அழைப்பதற்கு யாரை அமர்த்தியிருக்கிறார் என்ற எண்ணத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள்.

    கூரையிலிருந்து தொங்கிய கூண்டில் அழகிய பச்சைக் கிளி ஒன்றைக் கண்டதும் அவர்களுடைய வியப்பு நீங்கியது. அந்த பச்சைக் கிளியும் தலையை இப்படியும் அப்படியும் அசைத்து, குன்றி மணி போன்ற அதன் சிறிய கண்களால் அவர்களை உற்றுப் பார்த்து விட்டு, மறுபடியும் "வாருங்கள், ஆடல் அரசிகளே, வாருங்கள்!" என்றது.

    கிளியின் குரலையும், பெண்மணிகளின் பாதச் சிலம்பின் ஒலியையும் கேட்டு விட்டுச் சோதிடரும் உள்ளேயிருந்து கூடத்துக்கு வந்தார்.

    தேவிமார்களைப் பார்த்துத் திடுக்கிட்டவராய், "வாருங்கள்! தேவிமார்களே! வாருங்கள்! இந்தக் குடிசை இன்றைக்குத்தான் பாக்கியம் செய்தது!" என்றார்.

    பச்சைக் கிளியும் தன் பவளவாயைத் திறந்து, "இந்தக் குடிசை இன்றைக்குத் தான் பாக்கியம் செய்தது!" என்றது.

    ஜோதிடர் அதைப் பார்த்து, "சீச்சீ! சற்று நேரம் சும்மா இரு! வாயை மூடிக் கொள்!" என்றார்.

    "ஐயா! அதை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்? வருகிறவர்களுக்கு நல்ல முறையில்தான் வரவேற்பு அளிக்கிறது. தினந்தினம் இங்கு பலர் வந்து இந்தக் குடிசையை 'இன்றைக்குத்தான் பாக்கியம் செய்த குடிசை'யாகச் செய்வார்கள் போலிருக்கிறது. அதிலும் இங்கே ராணிகளும் அரசிகளும் ஓயாமல் வந்து கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

    "வாருங்கள்! நடன ராணிகளே! வாருங்கள்!" என்றது கிளி.







    ஜோதிடர் மறுபடியும் அதை அதட்டிவிட்டு, "தேவிமார்களே! மன்னிக்க வேண்டும்! திருஞான சம்பந்தப் பெருமான் இந்த திருவையாற்றுக்கு வந்திருந்த போது வீதிதோறும் ஆடல் அரங்குகளைக் கண்டார். அவற்றில் மங்கைமார்கள் நடனம் பயிலும்போது பாதச் சதங்கைகள் 'கலீர் கலீர்' என்று ஒலிப்பதையும் கேட்டார். அவருடைய தெய்வீகப் பாசுரங்களிலும் பாடியிருக்கிறார். அந்த நாளில் போலவே இன்றைக்கும் இந்தத் திருவையாற்றில் நடனக்கலை பயிலும் நங்கைமார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி சோதிடம் கேட்க இந்தக் குடிசையைத் தேடி வருகிறார்கள்! அவர்களுக்கு உகப்பாக இருக்கட்டும் என்று இந்தக் கிளிக்கு இவ்வாறு சொல்லப் பழக்கி வைத்தேன்! தயவு செய்து மன்னிக்க வேண்டும்!" என்றார்.

    "இன்றைக்கு அந்த ஆடல் அரசிகள், நடன ராணிகள் யாரையும் இங்கே காணவில்லையே?" என்றாள் குந்தவை.

    "தேவி! இன்றைக்குத் திருவாதிரைத் திருநாள். ஆகையால் ஆடலரசிகளும் நடன ராணிகளும் ஐயாற்று இறைவன் சந்நிதியில் சேவை செய்யப் போயிருப்பார்கள். ஆனால் உண்மை அரசிகளாகிய நீங்களே வந்து விட்டீர்கள். இந்தக் குடிசை பாக்கியம் செய்தது. நான் பாக்கியம் செய்தவன்!" என்று பரவசமாகக் கூறினார் ஜோதிடர்.

    பிறகு, "தயவு செய்து அமருங்கள்! இந்த ஏழையிடம் என்ன கேட்க வந்தீர்களோ, அதைக் கேளுங்கள்! தெரிந்த வரையில் சொல்லுகிறேன்!" என்றார்.

    இளவரசிகள் இருவரும் உட்கார்ந்தார்கள். குந்தவை ஒரு முறை பெருமூச்சுவிட்டு, "ஜோதிடரே! என்னத்தைக் கேட்பது? இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கத் தோன்றுகிறது!" என்றாள்.

    "தேவி! தாங்கள் இப்படிக் கேட்டால், நான் என்ன சொல்லட்டும்? நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் உண்மை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது பொய்தான்!" என்று சொன்னார் ஜோதிடர்.

    "நான் ஜோதிட சாஸ்திரத்தில் பூரண நம்பிக்கை வைத்துத்தான் இருந்தேன். ஆனால் அந்த சாஸ்திரம்தான் என்னைக் கைவிட்டு விட்டதே!"

    "எந்த விதத்தில் தங்களைக் கைவிட்டு விட்டது, அம்மணி?"

    "தாங்கள் ஜோதிடம் பார்த்துச் சொன்னபடி எது நடந்திருக்கிறது? என் தமையன் இப்படி அகால மரணம் அடைவான் என்று நீர் எப்போதாவது என்னிடம் சொன்னீரா?"

    "நான் சொல்லலாமா, தேவி. தெரிந்திருந்தாலும் என் வாயைத் திறந்து சொல்லலாமா? சொல்லியிருந்தால், என்னையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனே சேர்த்திருக்க மாட்டார்களா? இராஜ குடும்பங்களையும் இராஜாங்க காரியங்களையும் பற்றி ஏதோ பொதுப்படையாகத்தான் சொல்லலாம். 'கண்டம் இருக்கிறது, இடையூறு வருகிறது, கெட்ட கிரஹம் பார்க்கிறது' என்று சொல்வதே ஆபத்தானது. மேலும் ஆதித்த கரிகாலரின் ஜாதகம் என்னிடம் இல்லவும் இல்லை. அதை நான் பார்த்ததும் இல்லை!" என்றார் ஜோதிடர்.

    "நீங்கள் பார்த்திருந்தாலும் சொல்லியிருக்க மாட்டீர்கள். சொல்லியிருந்தாலும் அந்த விபத்தைத் தடுத்திருக்க முடியாது அல்லவா?"

    "அது எப்படி முடியும், தாயே! நான் என்ன பிரம்மாவா? எழுதின எழுத்தைப் பிரம்மாவினால்தான் அழித்து எழுத முடியுமா?"

    "அப்படியென்றால், ஜோதிடம் பார்ப்பதில் என்ன பயன், ஜோதிடரே!"

    "தாயே! இது என்ன இப்படிக் கேட்டீர்கள்? தங்களைப் போன்றவர்கள் ஜோதிடம் பார்க்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பிழைப்பது எப்படி? இந்த ஏழையின் குடிசையில் இராஜ குமாரிகளின் பாதங்கள் படுவதுதான் எப்படி?" என்றார் ஜோதிடர்.

    இதைக் கேட்டுக் குந்தவை கலகலவென்று சிரித்து விட்டாள். வானதியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

    "ஜோதிடரே! இங்கே ஜோதிடம் கேட்க வருகிறவர்கள் எல்லாரிடமும் இப்படித்தான் சொல்லுவீர்களா?" என்று இளைய பிராட்டி கேட்டாள்.

    "எல்லாரிடமும் இப்படிச் சொல்லுவேனா? கலைமகளும், திருமகளும் ஓர் உருக்கொண்டு அவதரித்திருப்பதாகத் தங்களைப் பற்றி உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது. அத்தகைய தங்களிடம் விவாதம் செய்து என்னால் சமாளிக்க முடியுமா? அதனாலே அவ்வாறு சொன்னேன். ஆனாலும் தாயே! நான் ஜோதிடம் பார்த்துச் சொல்லாததை வைத்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைத் தாங்கள் முடிவு கட்டலாமா? சொன்னதை வைத்துக்கொண்டு அல்லவா முடிவு கட்டவேண்டும்? பொன்னியின் செல்வரின் அதிர்ஷ்ட ஜாதகத்தைப் பற்றிச் சொன்னேன். இடையில் என்னென்னமோ நேர்ந்தது, கடைசியில் இந்தப் பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாகும் கட்டம் நெருங்கி விட்டதல்லவா? பட்டாபிஷேகத்துக்குக் கூட நாள் வைத்தாகிவிட்டதாமே?" என்றார் ஜோதிடர்.

    "ஐயா! பொன்னியின் செல்வரின் பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்ப்பதற்குத் தங்களிடம் யாரும் வரவில்லையா?"

    "இல்லை, தேவி! அதற்கு அரண்மனைப் புரோகிதர்கள் இருக்கிறார்களே! முதன்மந்திரி அநிருத்தரே ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர் ஆயிற்றே!"

    "ஆம்; தை மாதம் ஏழாம் தேதி நாள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது நல்ல நாள்தானா ஜோதிடரே!"

    "ரொம்ப நல்ல நாள், அம்மா! மிக நன்றாக ஆலோசித்துப் பார்த்துத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

    "பட்டாபிஷேகத்துக்கு உகந்த நல்ல நாளாக இருக்கலாம். ஆனால் பட்டாபிஷேகம் அன்று நிச்சயம் நடக்குமா என்று பார்த்துச் சொல்லுங்கள்!"

    "இது என்ன கேள்வி, தேவி ஏன் நடக்காமற் போக வேண்டும்?"

    "ஸ்ரீ ராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நல்ல நாளாகத்தான் பார்த்துக் குறிப்பிட்டார்கள். ஆனால் அன்று அவருக்குப் பட்டாபிஷேகம் நடக்காமற் போய்விடவில்லையா?"

    "தேவி! வெறும் பட்டாபிஷேகம் செய்து கொள்வதைக் காட்டிலும் கோடி மடங்கு பெருமை அன்று ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்டது. அதனாலேயே இராமாயணம் பிறந்தது! அது போகட்டும்! அம்மாதிரி சந்தேகம் தங்களுக்கு ஏன் இப்போது ஏற்பட வேண்டும்? தாங்களே பட்டாபிஷேகம் அன்று நடைபெறக்கூடாது என்று விரும்புவதாகக் காண்கிறதே!"

    "தங்கள் ஊகம் உண்மைதான்!"
    "பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுவதில் தங்களைக் காட்டிலும் ஆனந்தமடையக் கூடியவர் வேறு யாருமில்லை என்று அல்லவா உலகம் கருதுகிறது?"

    "நியாயமாக நான் அத்தகைய ஆனந்தம் அடைய வேண்டியவள்தான். ஆனால் இந்தக் கொடும்பாளூர்ப் பெண்ணின் மூடப் பிடிவாதம் எனக்கு அதில் சந்தோஷம் இல்லாமற் செய்துவிட்டது. குடந்தையில் தங்கள் வீட்டில் இவள் செய்த சபதம் நினைவிருக்கிறதா?"

    "சபதமா? அன்று பல விபரீத சம்பவங்கள் நிகழ்ந்தன ஒன்றும் சரியாக நினைவில் இல்லை!" என்றார் ஜோதிடர்.

    "இவளிடம் அசூயை கொண்ட ஓடக்காரப் பெண் பூங்குழலி ஏதோ சொன்னாள் என்பதற்காக இவள் ஒரு சபதம் செய்தாள். தன் உயிர் உள்ள வரையில் சிங்காதனம் ஏறுவதில்லையென்று கூறினாள்! உயிர் போனபிறகு சிங்காதனம் ஏற முடியுமா, ஜோதிடரே!"

    "முடியாதுதான்!"

    "அத்தகைய விபரீதமான சபதத்தைக் கேட்டு விட்டுத்தான் காவேரித்தாய் கோபங்கொண்டு பொங்கி வந்து இவனை வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பார்த்தாள்!"

    "ஆமாம்; எனக்குகூட நினைவு வருகிறது. அந்தச் சபதம் ஏதோ விளையாட்டு என்றல்லவா நினைத்தேன்?"







    "அதுதான் இப்போது வினையாக முடிந்திருக்கிறது! இவள் சிங்காதனம் ஏற மாட்டாளாம். என் சகோதரனுடன் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாக விளங்குவதற்கு வேறு யாரையாவது அவன் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இவள் அவனுடைய அரண்மனையில் தாதிகளோடு தாதியாக இருந்து தொண்டு செய்து வருவாளாம்! இதையெல்லாம் கேட்பதற்கே எனக்குச் சகிக்கவில்லை, ஜோதிடரே! தாங்கள் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறியது எல்லாம் நினைவிருக்கிறதா?"

    ஜோதிடர் முகமலர்ச்சியுடன் "நன்றாக நினைவிருகிறது. தேவி! நான் சேர்த்து வைத்திருந்த ஜோதிட நூல்களுடன் பற்பல தேசங்களின் இராஜகுமாரர்கள் இராஜகுமாரிகளின் ஜாதகங்களையும் காவேரித்தாய் கொண்டு போய் விட்டாள். ஆனால் இந்தப் பெண்ணரசியின் ஜாதகம் மட்டும் என் மனச் சுவடியில் படிந்திருக்கிறது. இவருடைய கையில் உள்ள ரேகைகள் என் கண் முன்னாலேயே நிற்கின்றன. அம்மணி! நான் கூறிய ஜோதிடத்தில் வேறு எது பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இவரைப் பற்றி நான் கூறியது பலிக்காமல் போகாது!"

    "இந்தப் பெண்ணைப் பற்றி என்ன சொன்னீர்கள் என்பது தங்களுக்கு இப்போது நினைவிருக்கிறதா?"

    "நன்றாக நினைவிருக்கிறது இவரை மணந்து கொள்ளும் பாக்கியசாலி திருமடந்தையையும் நில மடந்தையையும் ஓருருவத்தில் மணந்து கொண்டவனாவான் என்று சொன்னேன். இந்த மாதரசியைப் பார்க்கும் பாக்கியத்துக்காகத் தேச தேசாந்தரங்களில் உள்ள பேரரசிமார்கள் தவங்கிடப்பார்கள் என்று கூறினேன். இவருடைய திருவயிற்றில் உதிக்கப் போகும் புதல்வன் பிறக்கும் போதே ஜயக்கொடி நாட்டிக் கொண்டு பிறப்பான். அவன் போகுமிடமெல்லாம், அவன் பார்க்குமிடமெல்லாம் வெற்றி என்று சொன்னேன்."

    "ஐயா! நீங்கள் இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என்னுடைய கவலைதான் அதிகமாகிறது!"

    ஜோதிடர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, "தேவி! கவலையா? எதற்குக் கவலை? சோழ சாம்ராஜ்யத்துக்கும் சோழர் குலத்துக்கும் கவலைப்படவேண்டிய காலமெல்லாம் போய்விட்டது. இன்றைக்கு ஒரு விசேஷ நாள் என்பது நினைவிருக்கிறதா?"

    "ஆம்; இன்றைக்கு மார்கழித் திருவாதிரை நாள்! சிவனுக்கு உகந்த நாள்!"

    "இது சோழர் குலத்துக்கும் உகந்த நாள். தெய்வத் தமிழகத்துக்கும் உகந்த நாள், தேவி! கேளுங்கள்! இதே மார்கழித் திருவாதிரையில் வருகிற ஆண்டுகளிலே ஒன்றில் ஓர் அற்புதம் நடக்கப் போகிறது! சங்கு சக்கரம் கையில் ஏந்தாமலே திருமாலின் பூரண அம்சமான குழந்தை ஒன்று உதிக்கப் போகிறது! அந்தக் குழந்தையின் மூலம் இந்தச் சோழ நாடு இதற்குமுன் என்றும் கண்டிராத மகோந்நதத்தை அடையப் போகிறது! ஆகா! என்னென்ன அதிசயங்கள் நடக்கப் போகின்றன! அவற்றைப் பார்க்க நான் ஒருவேளை உயிரோடு இருக்க மாட்டேன். தாங்கள் பார்த்து மகிழ்வதற்கு நீண்ட காலம் வாழ்வீர்கள்!"

    இப்படி ஜோதிடர் ஆவேசம் வந்தவர்போல் பேசி வருகையில் குந்தவையும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

    கூண்டிலிருந்த கிளி சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. அதன் மேல் தாவ முயன்றுகொண்டிருந்த பூனையின் மீது வானதி ஓர் ஓலைச்சுவடியை எடுத்து எறிந்தாள்!

    எறிந்து விட்டு, "அக்கா! ஜோதிட சாஸ்திரம் பயனுள்ளது தான். ஜோதிடர் சுவடியைக் கொண்டுதான் இந்த அழகான இனிய வார்த்தை பேசும் கிளியைக் காப்பாற்ற முடிந்தது! இல்லாவிட்டால் அதன் சிறகுகளைப் பூனை இத்தனை நேரம் பிய்த்துப் போட்டிருக்கும்!" என்றாள்.

    ----------------------------------------------------------------------

    இருந்தாலும்,

    //நன்றி, மீண்டும் பொன்னியின் செல்வனை நினைவூட்டியதர்க்கு//

    ஆமாம்...

    ReplyDelete

Popular Posts