In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 2

அடுத்த நாள் சனிக்கிழமையாதலால், நான் அந்தப் புத்தகத்தை லைப்ரரியனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டுச் சென்று விட்டேன். பிறகு வந்த நாள்களில் கொஞ்சம் வேலையிருந்ததால் லைப்ரரி பக்கம் போகவில்லை. வெள்ளிக்கிழமை, பக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன்.

அரைமணி நேரம் கழித்து கண்ணைத் திறந்தால், எதிரில் மதுமிதா உட்கார்ந்திருந்தாள். ம்ம்ம்.. பெயர் ஞாபகம் இருக்கிறது.

"எப்பிடிங்க! அரைமணி நேரம் கண்ணை மூடிக்கிட்டு உட்காரந்துக்கிட்டு இருக்கீங்க? என்னால பத்து நிமிஷம் உட்காரமுடியாது. எதாவது ஞாபகத்துக்கு வந்துடும் முழிச்சிடுவேன். அன்னிக்கு லைப்ரரியில் உங்க மேல் எனக்குக் கோபம். நான் பேசிக்கிட்டிருக்கும் போதே நீங்க உங்க வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதனால் தான் உடனே கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் புத்தகம் கொடுக்க வருவீர்கள், திட்டலாம்னு பார்த்தால் ஒரு வாரமாய் ஆளையே காணோம். இங்க பார்த்தா சாமியார் மாதிரி உட்கார்ந்துகிட்டிருக்கீங்க."

இவ்வளவு வேகமா என்னிடம் பேசும் முதல் பெண் இவள்தான். எப்பிடித்தான் இவ்வளவு கோர்வையாய் பேசுவாளோ தெரியாது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்வதே எனக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

"அன்னிக்கு புத்தகத்தை எல்லாம் அடுக்கிவைத்துவிட்டு உங்களிடம் பேசலாம்னு நினைச்சேன். நீங்க அப்புறம் பார்க்கலாம்னு சொன்னதும், உங்களுக்கு ஏதோ அவசர வேலையிருப்பதாகத்தான் நினைத்தேன்." நான் வெளிப்படையாகச் சொன்னேன்.


"பரவாயில்லை, உங்களை நான் மன்னிச்சிட்டேன்," சொல்லிவிட்டு விகல்ப்பமில்லாமல் சிரித்தாள்.

"நான் உங்களை இந்தக் கோவிலில் இதற்கு முன் பார்த்தது இல்லையே?" சந்தேகமாய்க் கேட்டேன்.


"நான் இந்த இடத்துக்குக் கொஞ்சம் புதுசு, சரி தப்பா நினைச்சிக்காதீங்க கொஞ்சம் வேலையிருக்கு, அப்புறம் பார்க்கலாம்" சொல்லிவிட்டு எழுந்தாள்.

நான் உடனே "இப்ப நான் எதுவும் தவறு செய்துவிடவில்லையே" என்றேன்.


"இல்லை உண்மையாகவே கொஞ்சம் வேலையிருக்கு, உங்களுக்காக ஏற்கனவே அரைமணிநேரம் செலவழித்தாகிவிட்டது. சமயமிருந்தால் பிறகு சந்திப்போம்". சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதற்குப் பிறகும் சுமார் ஒருமாதம் நான் அவளை பார்க்கவேயில்லை, மாதக்கடைசி எப்பொழுதும் போல ஃபாதரைப் பார்க்க சர்ச்சுக்குச் சென்றிருந்தேன். அங்கே நடந்துகொண்டிருந்த ப்ரேயரில் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள் மதுமிதா, எனக்கு ஆச்சர்யம். ஆகக்கடைசியாய் அவளை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை நிச்சயமாய்.

நான் அவளை கவனிக்காததை போல் நேராகப் போய் ஃபாதரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பின்னால் வந்தவள் நேராக ஃபாதரிடம், "ப்ரைஸ் த லார்ட் ஃபாதர்!"

"ப்ரைஸ் த லார்ட் மை சைல்ட்!" என்றார்.

என்னிடம் திரும்பி, "ரவி, நான் உங்களிடம் சொன்னேனே, புதுசா ஒரு பெண்ணு பசங்களுக்கு உதவுறேன்னு சொன்னிச்சுன்னு. அது இந்தப் பொண்ணுதான், பேரு மதுமிதா."

"தெரியும் ஃபாதர், முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம்." நான் அவளைப் பார்த்தபடியே சொன்னேன்.


"ஆமாம் ஃபாதர் முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம், ஆனா எதிரில் பார்த்தால், பார்க்காதது போல் வந்துவிடுவார்." என்று மதுமிதா என்னைச் சீண்டினாள்.


"அப்பிடியா, ரவி அப்பிடிப்பட்ட பையன் இல்லையேம்மா, நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்தான் இரண்டு வருடமாய் பாடம் சொல்லித் தருகிறார். ரொம்ப நல்ல பையனாச்சே, ஏன் ரவி மதுமிதா சொல்வது உண்மையா?" ஃபாதர் உண்மையான அக்கறையுடன் கேட்டார்.


"ஆமாம் ஃபாதர், ஒரு விதத்தில் உண்மை தான். மதுமிதா ப்ரேயர் செய்து கொண்டிருந்தால் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு..." நான் இழுத்தேன்.

"ஒரு மாதத்திற்கு முன் இவரை கோயிலில் பார்த்த பொழுது தியானம் பண்ணிக்கிட்டிருந்தார். அப்ப நான் இவர் முடிக்கும் வரைக்கும் காத்திருந்து பார்த்து பேசிவிட்டுதான் வந்தேன். ஆனா பாருங்க இவரை, சாக்கு சொல்றார், ப்ரேயர் பண்ணிக்கிட்டிருந்தேன்னு..." அவள் கண்களில் உண்மையிலேயே கோபம் இருந்தது.


நானும் ஃபாதரும் பதில் ஒன்றும் சொல்லாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க...

"சரி நீங்க ஃபாதர்கிட்ட பேசிட்டு வாங்க, தனியா வைச்சி பேசிக்கிறேன் உங்ககிட்ட." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.


ஃபாதர் என்னிடம், "ப்ரைட் சைல்ட், அப்பா அம்மா கிடையாது, நம்ம சர்ச்சில் தான் வளர்ந்தாள், ஆனால் இங்கேயில்லை, வேறு ஒரு இடத்தில். இப்பத்தான் கல்லூரி படிப்பு முடித்தாள். சர்ச் ரூல்படி இப்ப வெளியில் வந்து ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். ஏதோ வேலை பார்ப்பதாக சொன்னாள் ஜீஸஸ் தான் காப்பாதணும்."

நான் கேட்காமலே விவரங்கள் சொன்னார் ஃபாதர். நான் அவர் சொன்னதை கவனிக்காதது போல் விட்டுவிட்டேன். பிறகு குழந்தைகளின் முன்னேற்றம் பற்றியும் வேறு என்ன செய்யலாம் என்றும் பேசிவிட்டு வந்தேன். வெளியில் அவள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

"என்னங்க இது, எப்பப் பார்த்தாலும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கீங்க. சினிமா மாதிரி இருக்கு, ப்ளெட் டொனேட் பண்றீங்க, லைப்ரரியனுக்கு உதவி பண்றீங்க, ஆர்பன் சைல்டுங்களுக்கு படிப்பு சொல்லித்தரீங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா, நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?" தீவிரமாகக் கேட்டாள்.


"வேலைன்னு ஒன்னும் பிரமாதமா செய்யலைங்க, தேவைப்படுற காசுக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை பார்ப்பேன். மற்றபடிக்கு என்னுடைய மிச்சமான நேரங்களை பிறருக்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்வேன். அவ்வளவுதான்"

"ரொம்ப சுலபமா சொல்லீட்டீங்க, ம்ம்ம், என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பீங்க?"

"படம் வரைவேன், பாடம் சொல்லித்தருவேன், கணக்கு எழுதித்தருவேன், தோட்டம் போட்டுத்தருவேன். ஒரு சிலசமயம் பரோட்டாக்கடையில் பரோட்டா கூட போட்டிருக்கேன்."

"இவ்ளோ நைஸ் லுக்கிங், உங்களுக்கு யார் பரோட்டா போடுற வேலை தருவா? சும்மா கதைதானே சொல்றீங்க?" அவள் உண்மையிலேயே நம்பவில்லை என்று தெரிந்தது.

"உண்மைதாங்க, நான் குட் லுக்கிங்கா இருப்பதால் இன்னும் இந்த மாதிரி மக்களிடம் நன்றாக பழகமுடியலை. நீங்க சொல்வது மாதிரி இந்த வேலையெல்லாம் தரவே மாட்டாங்க, ஆனா அன்று பரோட்டா கடைக்கு சாப்பிட போயிருந்தேன். ஹோட்டல் முதலாளியிடம் புரோட்டா வேண்டுமென்று கேட்க, மாஸ்டர் வரலை அதனால் கிடைக்காதுன்னு சொல்லிட்டார். நான் அவரிடம், நான் போட்டுக்கொள்ளவான்னு கேட்க, ஒருமாதிரி என்னைப் பார்த்தார். பின்னர் நான் பரோட்டா போட்டதைப் பார்த்து அன்றைக்கு மட்டும் போட்டுத்தரச் சொன்னார். வருமானம் ஐந்நூறு ரூபாய்." சொல்லிச் சிரித்தேன்.

அவள் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தாள், என் குடும்பத்தை பற்றி கேட்கப்போகிறாள் என்று நினைத்தேன். நல்லவேளை கேட்கவில்லை. பின்னர் எதையெதையோ பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் அவள் கேட்டாள்.

"ஃபாதர் என்னைப்பத்தி எதுவும் சொன்னாரா?"

"ஆமாம், நானாகக் கேட்கவில்லை, அவராகத்தான் சொன்னார்." சொல்லிவிட்டு நான் தலையைக் குனிந்துகொண்டேன்.

"நீங்க ஏங்க தலையை குனியிறீங்க, சொல்லப்போனால் என்னைப் பற்றி யாரோ சொல்லக் கேள்விப்பட்டவர்கள். என்னிடம் என் குடும்பத்தை பற்றியும் என் வாழ்க்கையை பற்றியும் கேள்விகேட்டுக் கொன்றிருக்கிறார்கள். என் பர்ஸனல் விஷயங்களில் தலையிடுபவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. நீங்கள்தான் என்னைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாலும், அதைப்பற்றி கேட்காமல் இருந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு யூ." சொல்லிவிட்டு திரும்பி நடந்துகொண்டேயிருந்தாள்.

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, என்னடா இந்தப்பெண் இப்படி நடந்துகொள்கிறதே என்று. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு அவளை நான் பார்க்கவே இல்லை. முதல் இரண்டு நாள்கள் போய்வரும் இடங்களில் எல்லாம் தேடினேன் பிறகு சிறிது மறக்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் மதியம் என் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தால் மதுமிதா நின்று கொண்டிருந்தாள்.

"வாங்க மதுமிதா."

"உள்ள வரலாம்ல?"

"தாராளமாய். சின்ன ரூம்தான் ஆனால் இன்னொரு நபர் உட்கார நிச்சயம் இடம் இருக்கும்."

"அதற்குக் கேட்கவில்லை, பாச்சுலர் ரூம். பெண்ணு பார்க்கிற மாதிரியிருக்குமான்னு தான்?"

நான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், சமையல் அறைக்குச் சென்று அவளுக்கு டீ தயார் செய்ய ஆரம்பித்தேன். என்னால் ஊகிக்க முடியும் அவள் என் ரூமில் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று. நிறைய ஓவியங்களும், நிறைய புத்தகங்களும் இருக்கும் என் அறையில். அவள் ஓவியங்களைப் பார்த்து முடிப்பதற்கும், புத்தகத்தின் தலைப்புக்களை படித்து முடிப்பதற்குமே ரொம்ப நேரம் பிடிக்கும். இரண்டு டம்ளர்களில் டீ எடுத்துக்கொண்டு போய், அவளிடம் ஒரு டம்ளரை நீட்டினேன்.

"என்ன ஆளுங்க நீங்க, நிறைய தடவை மீட் பண்ணியிருக்கோம். இங்கத்தான் எங்கையோ பக்கத்தில் இருப்பேன்னு தெரியும். ஒரு வாரமா பார்க்கலை, அன்னிக்கு கோபமா வேற பேசிட்டு போனேன். என்னைத் தேடுவீங்கன்னு பார்த்தா. ம்ஹூம் ஒரு ரியாக்ஷனும் இல்லை; அதான் இன்னிக்கு நானே வீட்டைத் தேடிட்டு வந்திட்டேன்."

நான் பதில் சொல்லாமல் டீயைக் குடித்துக்கொண்டிருந்தேன்.

"பதில் சொல்லுங்க!"

"என்ன சொல்ல, ஏன் உங்களைத் தேடலைன்னா?"

"டீ ரொம்ப நல்லாயிருக்கு, அன்னிக்கு எனக்கு ஃபாதர் மேல கொஞ்சம் கோபம். என்னைப்பத்தி தெரிஞ்சவங்க எல்லாருமே என்கிட்ட ஒரு சிம்பதி காட்டுவாங்க, அது எனக்குச் சுத்தமா பிடிக்காது. உங்ககிட்ட ஃபாதர் சொல்லிட்டார்னவுடனே எனக்கு ரொம்ப கோபம் வந்தது. ஆனால் அதைப்பற்றி நீங்க கேட்காததால பரவாயில்லை, ஆனா நீங்க எதுவும் கேட்டுறுவீங்களோன்னு பயம் அதனால் தான் உங்களை பார்க்காமல் தவிர்த்தேன். நீங்க ஓவியம் வரைவீங்கன்னு சொல்லவே இல்லை?"

"நீங்க கேட்கவேயில்லை?"

"இல்லை அன்னிக்கு நான் கேட்டேன், ஹாஸ்பிடலில், ரவிவர்மன்னா ஓவியம் கூட வரைவீங்களான்னு?"

"ஆமாம் ஆனால் நீங்க அன்னிக்கு நக்கலா கேட்டீங்க, நான் ஆமாம் பதில் சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டீங்க அதான் சொல்லலை."

"ம்ம்ம், சூப்பரா வரையிறீங்க, அதென்னங்க இவ்வளவு புத்தகம் வைச்சிருக்கீங்க, வாங்கிற காசெல்லாம் புத்தகத்துகே சரியாயிறும் போலிருக்கு?"

"ஆமாம் கேன்வாஸ் வாங்கிறதுக்கும் புத்தகம் வாங்குறதுக்கும்தான் சரியா இருக்கும்." அதற்குப் பிறகு அவள் என் தினசரி வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கினாள். என் நேரங்கள் பலவற்றை வீணாக்கினாள். நானும் அவளும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கத் தொடங்கினோம். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவள் பேச நான் கேட்டுக் கொண்டிருக்கத் தொடங்கினேன்.

எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். ஆட்டம் பாமில் ஆரம்பித்து தெருமுனையில் விற்க்கும் மல்லிகைப்பூ வரை பேசுவாள். பெரும்பாலும் நான் பதில் சொல்வது கிடையாது. ஆனால் சிலசமயங்களில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டு பதில் வாங்கிக் கொள்வாள். நான், அவள் என்னை எடைபோடுகிறாள் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் அவளைப்பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டிருந்தாள். அவளுடைய உள்ளாடை சைஸ் உட்பட.

ஒரு நாள் இப்படித்தான் ஏதோ ஒரு படம் பார்த்திருப்பாள் போலிருக்கிறது. நேராக என்னிடம் வந்தவள், "பாஸ்டர்ட்ஸ்..."

"என்னங்க ஆச்சு..."

"சினிமாவுல ஒருத்தன் ஒரு பெண்ணைக் கெடுத்து குழந்தை கொடுத்துட்டு, விட்டுட்டு போயிருறான். பிற்காலத்துல அவனை காட்டுறப்போ பெரிய தியாகி மாதிரி காட்டுறாங்க. புல்ஷிட்."

"சினிமாதானே, உங்களை யாரு அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்கச் சொன்னது?" நான் புரியாமல் கேட்டேன்.


"என்னங்க சினிமா, சினிமான்னா பொம்பளங்கள எப்பிடி வேணா காட்டலாமா. மேல் சாவனிஸ்ட் சைக்கோ, அந்த டைரக்டர பார்த்து கன்னத்தில் அறைஞ்சாத்தான் என் கோபம் அடங்கும்." அவள் கண்களில் அந்த கோபம் தெரிந்தது. எங்கே என்னை அடித்துவிடுவாளோ என்ற பயம் கொஞ்சம் போல் வந்தது.


நான் பதில் பேசாமல் இருந்தேன்.

"உங்களுக்கு தெரியுமா எங்கம்மாவும் இது மாதிரிதான். ஒருத்தன் சும்மா பம்மாத்து வேலை காமிச்சிருக்கான்; அதை நம்பி ஏமாந்து நாலுமாசம்; போய் அவன்கிட்ட கேட்டா, செருப்பால அடிப்பேங்கிறான்; எனக்குத்தான் முந்தானை விரிச்சன்னு என்ன நிச்சயம்னு கேட்கிறான். எங்கம்மா ஒன்னுமே பேசாம என்னைய பெத்து சர்ச்சில் போட்டுட்டு, போய் ட்ரெயின் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிக்கிச்சு, சொல்லாமலாவது செத்துப் போயிருக்கலாம் இதையெல்லாம். லெட்டர் எழுதிவைச்சிட்டு போயிருக்கு. நான் பதினாறு வயசில எங்கம்மா, அப்பாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வத்தில் ரிக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்து கடைசியில் இந்தக் கடிதம் படிச்சி, சீன்னு ஆயிருச்சு."

எப்பொழுதும் போல் நான் பதில் பேசவில்லை, அவளே தொடர்ந்தாள்.

"வாழவே பிடிக்கலை, சந்நியாசம் வாங்கிரலாம்னு நினைச்சேன். இருபது வயது நான் காலேஜ் முடிக்கிறப்ப, முதல் முதலா சர்ச்சை விட்டு வெளியே வர்றேன், அசிங்கமாப் போச்சு, அழகா வேற இருக்கனா. எல்லாரும் மாரையே பார்க்கிறாங்க..." முகம் சிவந்து போயிருந்தது.

நான் பேச்சை மாற்றவிரும்பி, "நான் கூட சாமியாராகிரலாம்னு மொட்டையெல்லாம் போட்டுட்டு, இமயமலை பக்கம் போய் ஒரு வருஷம் ஒரு சாமியார் கிட்ட சிஷ்யனா இருந்தேன்."

அவள் நம்பாமல் என்னைப் பார்த்தாள். சொல்லப்போனால் இதுதான் நான் என்னைப்பற்றி அவளிடம் சொல்லும் முதல் பர்ஸனல் விஷயம். அவளும் கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை.

"ரொம்ப நல்ல சாமியார். அங்கதான் நான் தியானம் பண்ண, மத்தவங்களுக்கு உதவி பண்ண, எல்லாம் கத்துக்கிட்டது. கடைசியில் சாமியார் உனக்கு இன்னும் வயசாகவில்லை, உனக்கு சில விஷயங்கள் கத்துக்கொடுக்கணும்னு நினைச்சேன். கத்துக் கொடுத்துட்டேன். இனிமேல் ஆண்டவன் நினைத்தால் நீ என்னைப் பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போய்ட்டார்."

நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இமயமலையில் இருக்கும் போது, யாரிடமும் பேசக்கூடாது. என் குரு பேசினால் மறுமொழி கூறவேண்டும், நானாக பேசக்கூடாது. இதனால் பல மாதங்கள் பேசாமலேயே இருந்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்ததும் அது சிறிது மாறிவிட்டது."

"தாங்ஸ்..." என்றாள் அவள்.

"எதற்கு?"

"இல்லை என்னை நம்பியும் உங்கள் பர்ஸனல் விஷயங்களை சொல்லலாம்னு தோணிச்சே அதுக்குத்தான்."

நான் அதற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை.

(தொடரும்...)

Related Articles

6 comments:

  1. your writing rocks please continue

    ReplyDelete
  2. தாஸ் & அகிலாவோட impact இல்லாம இந்த 2 characters different -ஆ இருக்கு.. Good ..
    அதே மாதிரி போன கதையோட tragic end also a surprise !!! எங்களுக்கு இன்னும் நிறைய surprise இருக்குனு சொல்லுங்க!!!

    ReplyDelete
  3. இந்த தொடர்கதையும் மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  4. Anony,

    நன்றிகள்.

    ReplyDelete
  5. ArunKumar, Mohan,

    நன்றிகள்.

    ReplyDelete
  6. மூன்றாம் பாகம் படித்து விட்டு மற்றது படித்தேன்....மேலே இருக்கும் படம் என்னது... நம்மிடம் பேசுவதைபோலவே இருக்கிறது...கண்களைப் பார்த்தால்..உதடு அசைவதைப் போல இருக்கிறது..உதடுகளைப் பார்த்தால் கண்களில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை போல எனக்கு படுகிறது....

    ReplyDelete

Popular Posts