Showing posts with label நாட்குறிப்பு. Show all posts
Showing posts with label நாட்குறிப்பு. Show all posts

In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

------------------------------


இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை  கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்



Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johny



மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.

Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's Appassionata Gorky wrote:
I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In நாட்குறிப்பு

Big Boss




அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு போரடிக்கும் காலத்தில் ஏதாவது தமிழ்ப்படம் பார்ப்பது தான் வழமை. பெரும்பாலும் வியாழக்கிழமை வெளியாகும் படங்கள், வெள்ளிக்கிழமை டிவிப்பெட்டியில் பார்த்துவிட்டு. அடுத்து வெள்ளிக்காக காத்திருப்பது வழமை. அதாவது ஒரு நாளை ஒரு மணிநேரமாவது குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும். மனைவிக்குப் பாடல்கள் எனக்கு நகைச்சுவை என தனி ரசனைக்காக தமிழில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும்.

வாராது வந்த மாமணியாய் பிக் பாஸ். கமலுக்காகத்தான் பார்க்கத் தொடங்கியது. பின்னர் ஜூலிப் புள்ளையை கொடுமை பண்ணுகிறார்களே என்று நீண்டு, ஓவியாவின் மீது காதல் கொண்டு, பின்னர் பரணிக்காய் அழுது என்று இப்பொழுது கஞ்சா கருப்பை வெளியேற்றியது கொஞ்சம் மன நிம்மதியுடன் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் பரணியை ரவுண்டு கட்டுவது பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் கஞ்சா கருப்பைத்தான் தூக்குவானுங்கன்னு ஊகிச்சோம்.

பரணி: பயபுள்ள என்ன பண்ணான்னு தெரியலை நாடோடிகள் ஷூட்டிங்கில். ஆனா கஞ்சா கருப்பு மாதிரி ஊர் நாட்டானுங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பைத்தியம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
கஞ்சா கருப்பு: பரணிப்பய இல்லாட்டி இந்தாள ரொம்ப நாள் வைச்சிருந்துருப்பானுங்க. ஆனா மொத்தக் கூட்டத்திலும் லூசு இந்தாளு தான். பாலா ஒரு திரைப்பட விழாவில் திட்டின பொழுது. சட்டென்று மனசுக்கு வலித்தது. ஆனா பாலா சொன்னது தான் சரி. ச்சை முட்டாப் பய.
ஆர்த்தி: இவ ஐஏஎஸ் படிக்கப்போறேன்னு விகடன்ல சொல்லியிருந்தா. ஞாபகமிருக்கு. குண்டாயிருந்து கஷ்டப்படுறாளேனு மனசுல எப்பவும் ஓடும். பொறாமைன்னா இந்த பதினைஞ்சி பேத்தில பொறாமை இவளுக்குத் தான் அதிகம். காரியக்காரி. ஆனா சக்தி கூடயெல்லாம் சண்டை போடுவதில் தெரிகிறது இவளுக்கு ஸ்ட்ராடஜி இல்லைன்னு.
ஜூலி: வாயி வாயி வாயி. என்னா வாயி. பச்சோந்தி. ஜல்லிக்கட்டு சமயத்தில் அத்தனை பெரிய இமேஜ் எல்லாம் என் மனதில் உருவாகாததால், குறையறதுக்குன்னு பெரிசா இல்லை. ஆனா ஆரம்பத்தில இவளை ஆர்த்தியும், காயத்ரியும் வம்பிழுக்க கடுப்பானது உண்மை. இவளோட பச்சோந்தித்தனம் கடுப்பையே வரவழைக்கிறது.
நமீதா: இவளைப் பத்தி மக்கள் பொதுவா என்ன நினைக்கிறாங்கன்னு கூடவா தெரியாது இவளுக்கு. ஜூலிக்கு மேக்கப்போட்டது இவ சிரிச்ச மாதிரி தான் பிக்பாஸு ஆரம்பத்தில் இவ போட்ட ஆட்டத்துக்கு மக்கள் சிரிச்சதும். வேஸ்ட். கமல்ஹாசன் அங்கிள் சரியா அசிங்கப்படுத்துனாரு, கடவுள் உங்கக் கூட பேசினா அது உங்களுக்கு பைத்தியம்னு. ஆளும் இவளும்.
சக்தி: இந்தப் பயலுக்கு என்னவோ பிரச்சனையிருக்கு, ஏன் இப்புடி மூச்சிறைக்குது இவனுக்கு? ஹை பிபி போல. இவனை ப்ரொமோட் பண்ணுவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருப்பானுங்க போலிருக்கு. விஜய் டிவி, தேவையில்லாம இவனை ப்ரொமோட் செய்யறானுங்க பிக் பாஸுக்குள்ளயே.
ரைஸா: இந்த மாதிரி மூளைக்கே வேலையில்லாத ஆள் கொஞ்ச காலம் பிக் பாஸில் தாக்குப் பிடிப்பாள். கஞ்சா கருப்பு வெளியே போனதுக்கெல்லாம் அழுவுற ஆள் கஷ்டம் தான்.
வையாபுரி: எனக்கென்னாமோ இந்த பிக் பாஸில் கொஞ்சம் நியாயமா நடுத்துக்குற ஆள் இந்தாளு தான்னு தோணுது. நல்ல மனுஷன். பரணி விஷயத்துல கொஞ்சம் தவறு இருக்குதுன்னாலும் அது கஞ்சா கருப்பால.
சினேகன்: இவன் சக்க மொக்க. ஃபேக். இந்த மொத்த கூட்டத்துலயும் ஃபேக் இந்தப் பய தான்.
கணேஷ்: தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான். ஆளுகிட்ட தெரியும் பெண் தன்மை, அவன் லேங்க்வேஜ் இஷ்யூ இல்லையென்றே நினைக்கிறேன். நியாயமாவும் நடந்துக்குறான்.
ஆரவ்: காதல் படத்து பரத் மாதிரி, ஞெய் ஞெய்ன்னு மண்டையில அடிச்சிக்கிட்டு அலையப்போறான்னு தோணுது. நியாயமா பேசுறான், ஆர்த்திக்கு ஆப்பு வைச்சிருவான்னு தோணுது.
காயத்ரி: பொய் புழுவி. நல்லா ஆர்த்தி திருப்பிவிடுற பக்கமெல்லாம் ஆடுறா. ஆட்டக்காரி. சொல்புத்திக்காரி. டைவோர்ஸி, குழந்தை குட்டியில்லையாட்டிருக்கு. வீட்டில் என்ன வேலை, பிக் பாஸில் பெஞ்ச் தேச்சிக்கிட்டிருக்கா. இப்போதைக்கு போகமாட்டா. யாரையும் மிஸ் செய்ய மாட்டான்னு ஊகிக்கிறேன்.
அனுயா: எவனாவது அந்த சுசிலீக்ஸ் வீடியோ உன்னுதான்னு கேப்பானுங்கன்னு நினைச்சேன். ச்சை முதல்லயே வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.
ஸ்ரீ: இவனுக்கு சைக்கலாஜிக்கல் பிரச்சனை என்னமோ இருக்கு. பாவமாயிருந்தது என்னமோ உண்மை.
ஓவியா: இது டார்லிங். இவளை பிக்பாஸுக்கு முன்னமே பிடிக்கும் இப்ப ரொம்பவும் பிடிக்குது. பயபுள்ள சிகரெட் அடிக்கும் போலிருக்கு. சிகரெட் எல்லாம் லக்சுரி பட்ஜெட்டில் வராதா. ஸ்ட்ராடஜியான்னு தெரியலை, ஆனா இவ நடந்து கொள்ளும் விதத்தில் ஸ்ட்ராடஜி இருக்கு என்று ஊகிக்கிறேன்.



இந்த வாரம், ஆர்த்தி ரைசா மற்றும் வையாபுரி எலிமினேஷனுக்கு நாமினே செய்யப்படுவாங்கன்னு ஊகிக்கிறேன். வையாபுரிக்குத் தான் எலிமினேஷன்.

- வாரத்திற்கு ஒன்று இப்படி எழுதப்படும்.

PS: நான் சின்னக் குழந்தையா இருக்கச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச டிவி ஷோ. WWE.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In சினிமா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

கம்மாட்டிப்பாடம் பார்த்தேன்.

துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும்.

மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.



---------------------------------------------

அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன்.

இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம்.

பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன்.

பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு.

-----------------------------------

இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து.

பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான்.

சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான். 

------------------------------------

கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது.

அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால்.

கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ. 



------------------------------------

சில பாடல்கள்

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது.

கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன்.

நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது.

புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா.

ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான். 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

பெங்களூரில் மழை சீசன் என்பதால், எங்கள் கம்பெனியின் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் தற்போதைக்கும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கேப்டனாக விருப்பப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, பெட்டிங் முறையில் கேப்டன்கள், தங்கள் வீரர்களை சேர்த்துக் கொண்டு ஒருவாறு அணிகள் முடிவாகிவிட்டது. இனி ஆட வேண்டியது தான் பாக்கி.

இனிமேல் பெண்ணியம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய்டும். மொக்கைப் பெண்ணியைப் பதிவுகள் பெருக்கெடுக்கும். #ஜோசியம்

என்று நான் எழுதிய டிவிட்டைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே வலையுலக மீடியேட்டர்களைப் பற்றி எழுதியதையும்.

# @peyarili இந்த மீடியேட்டர் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனை. நானறியாத ஒன்றும் இல்லை, போலி டோண்டு விஷயத்தில் -நபர்- மீடியேட் செய்து கொண்டு இருந்த பொழுது இது எதிலுமே சம்மந்தப்படமால் நான் போட்ட பதிவிற்கு பிரச்சனை மீடியேட்டரிடம் இருந்த வந்தது. உண்மையிலேயே சம்மந்தம் இல்லாவிட்டாலும் கூட, நான் எதை எழுத எதை கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அன்று அந்த மீடியேட்டரின் தொடர்பைத் துண்டித்தேன். பிரச்சனை ஒரு பக்கம் இருக்க மீடியேட்டர்களின் அலப்பறை ரொம்ப ஜாஸ்தி. இதுதான் பிரச்சனை. இவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, நான் தான் சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறேனே. நீயேன் இடையில் என. வலையுலக பஞ்சாயத்துக்காரர்கள், உண்மையில் சினிமாவில் பத்திரிக்கைகளில் படிக்கும் பஞ்சாயத்துக்காரர்களின் அலும்பிற்கு குறையாயது. 7:18 PM Jun 3rd via web in reply to peyarili

வளமையாகவே திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு வருகிறேன், மொக்கையாக இருந்தாலும் வேறு வழியின்றி உடன் வரும் மனைவி இதுவரை க்ம்ப்ளெய்ண்ட் செய்யவில்லை. சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் தமிழில் ஆங்கிலத்தில் வரவில்லை. ராஜ்நீதி நன்றாக இருப்பதாக மசந்த் சொல்லி அறிகிறேன், போய் வரவும் ஆசை. Karate Kid படமும் பார்க்கவேண்டும், ட்ரைலர் நன்றாக இருக்கிறது, என் மனைவிக்கு பிடித்த படமாய் இருக்கலாம்.

ப்ரெஞ்ச் ஓபனில் ஃபெடரரையும் அதற்குப் பின் சோடர்லிங்கையும் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். பைனல்ஸ் ஸ்டெரெய்ட் செட்களில் முடிந்ததில் வருத்தம். விம்பிள்டன்னில் மீண்டும் ஃபெடரரின் க்ளாசிக் ஆட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

உலகக் கோப்பை கால்பந்தில் ஆரம்பத்தில் இருந்தே, ஜெர்மனிக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, Miroslav Klose எனக்குப் பிடித்த ஆட்டக்காரர். பார்கலாம் இந்த முறை என்னாகிறது என்று. அர்ஜெண்டினா வரும் போலிருக்கிறது, ப்ரெசில் Vs அர்ஜெண்டினாவோ இல்லை ஜெர்மனி Vs அர்ஜெண்டினாவோ எனக்குப் பிடித்த பைனல்ஸாக இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In நாட்குறிப்பு

ட்விட்டிய எண்ணங்கள்

Pride and Prejudice நாவலின் ஒரு டெலிவிஷன் அடாப்டேஷன்(BBC) பார்த்தேன். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு கதை, பெருமையும் முன்முடிவுகளும் எனக்குத் தெரிந்து இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பேயில்லை. Jane Austenன் நாவல் இன்னும் முழுவதும் படிக்கவில்லை என்றாலும் எனக்குப் பிடித்த காட்சிகளின் எழுத்து வடிவத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். நாவல் சிறந்ததாய் இருந்ததா அடாப்டேஷன் சிறந்ததாய் இருந்ததா என்று சொல்ல முடியவில்லை. நன்றாகச் செய்திருக்கிறார்கள். நடிக / நடிகையர் தெரிவும் கூட அற்புதமாக இருந்தது. Youtubeல் பார்க்கப் பிடிக்காமல் தரவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதால் ஆறு எபிசோட்களும் ஒரேயடியாய் பார்க்க முடியவில்லை, என்னை நானே வற்புறுத்திக் கொண்டு என்றாலுமே கூட அடுத்து என்ன நடக்கும் என்கிற ஒரு விதமான ஏக்கத்தில் இருந்த அந்த நேரங்களை ரொம்பக் காலம் கழித்து மீண்டும் அனுபவித்தேன். நிச்சயமாய் இதைப் பற்றி தனியாய் ஒரு பதிவெழுத வேண்டும் என்று நினைத்திருப்பதால் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.





குந்தவையைப் போல் மனதில் பதிந்து போய்விட்ட இன்னொரு கதாப்பாத்திரம் எலிஸபெத் பென்னட் என்பது மட்டும் உண்மை.

----------------------------------

ட்விட்டிய எண்ணங்கள் எப்படி செயல்படும்னா, ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு. அந்த வாரம் முழுதும் ட்விட்டியதைக் கொண்டு எழுதலாம்னு நினைக்கிறேன். ஏற்கனவே எழுதி வந்த ‘தொடர்ச்சியற்ற எண்ணங்கள்’இன் தொடர்ச்சியாக இது இருக்கும். இருக்கணும்.

----------------------------------

நடிக - நடிகைகள் எதிர் தினமலர் விஷயம் போன வாரம் முழுதும் போய்க்கொண்டிருந்தது, கொஞ்சம் கொடுமையாய்ப் போய் தினமலர் செய்தி ஆசிரியர் கைதில் முடிவடைந்தது. நடிகைகள் பற்றி எனக்குப் பெரிய நல்லபிப்ராயம் கிடையாது. நானும் இளவஞ்சியும் பேசிக்கொள்ளும் எல்லா சமயங்களிலும் இதைப் பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அவருக்கு ‘நடிகைகள் பாவம்’ என்று சொல்வது கூட ஆகாது. நடிகைகள் பற்றிய என் கருத்தைச் சொல்லி Misogynist என்ற திட்டு வாங்கிய அனுபவமும் நினைவில் வருகிறது.

குஷ்பு இதைப் பற்றி எதுவும் வாயைத் திறக்கலை என்று ட்விட்டிய நினைவு, பாவம் அவர் மலேசியாவில் தண்ணீரில் கவிழ்ந்து போனதால், தப்பியது ப்ளாக்டோம்.

----------------------------------

ஆஸ்திரேலியாவின் ரெக்கார்ட் எல்லாம் அவ்வளவு தான். ஹைடன், கில்லி, மெக்கிராத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அவ்வளவு தான் என்று பேசிய அனைவரும் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அணியையும் பாண்டிங் தலைமையிலான முன்னாள் அணிக்கும் இந்நாள் அணிக்கும் ஒப்பீடு செய்தால் தற்போதையஆஸ்திரேலிய அணி 70% கூட பக்கத்தில் வராது. ஆனால் விஷயம் அது கிடையாது அந்த ஆஸ்திரேலிய அணி அருகில் வரக்கூட யாரும் இல்லை என்பது தான் உண்மை.

அது நிரூபணம் ஆகியிருக்கிறது, ICC Championship போட்டி முடிவுகளினால். இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிப் பேச எனக்கு எதுவும் இல்லை, என்வரையிலான பெஸ்ட் ‘Choker' சச்சின் தன்னை மீண்டும் அப்படியே நிரூபித்திருக்கிறார். அவ்வளவுதான்.

----------------------------------

‘மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ பாடல் வரிகளைத்தான் இப்பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘விடைகொடு எங்கள் நாடே’ வை விடவும் இந்தப்பாடல் நன்றாய் வந்திருப்பதாய் மனதில் படுகிறது - அந்த வைரமுத்துவின் வரிகளில் விஜ்ய் யேசுதாசின் குரலில் ஏதோ உடைகிறது உள்ளில். ரொம்ப நாளாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்’.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts