In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் 'லெக்' சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் 'விக்கி' பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே "நேரு ஸ்டேடிய"த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 - 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

Related Articles

2 comments:

  1. அதெல்லாம் கிடக்கட்டும் மோகனா. அதென்ன புளிநகக் கொன்றை? புளிக்கு ஏதுய்யா நகம்? ;-) :-) நல்லா இருங்கடே!!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  2. மாத்திடுறேன் அண்ணாச்சி. தப்பு நடந்துடுச்சு.

    ReplyDelete

Popular Posts