In முதலிரவு கதைகள்

முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்

“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?”

அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அக்கா கல்யாணம் செய்துகொண்டு போய்விட நான் வேலைக்காக வெளிநாட்டில் வாழ வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு மனநிலையைக் கொண்டுவந்திருந்தது. அக்கா அவள் பையனை நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே, இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை?”

ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான், ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் கிடையாது. என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது, அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக, கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கை உறுதி கொண்டு சரியென்று சொல்லியிருந்தேன்.

“ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு, எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா?” அம்மா, நான் லேப்டாப்பில் என் அமெரிக்க வீடு மற்றும் நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய், அக்காவிற்கும் பதிலளித்தார்.

“பின்ன, சும்மா கட்டி வைச்சிட முடியுமா? உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா, கஷ்டமாயிடாது, அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது.” அவளிடம் உண்மையான கரிசனம் இருந்தது.

“என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன்.” அக்கா மீண்டும் சீண்ட, நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள்,

“ஏண்டி இவ்வளவு பேசுற, எங்கடி உன் வீட்டுக்காரன், தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா, இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு, நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன?”

அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை, அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் “டேய் எனக்கும் வருத்தம் தான், என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின. இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை, சொல்லி சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள். அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது, மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு, வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது, இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு, சொப்பன ஸ்கலிதம், நரம்பத்தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது,

அலுவலக நண்பர்கள் வேறு என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை, ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர், பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது, அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும், படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது.

ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா, நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன், அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க, அப்புறம் ம்ம்ம்... ம்ம்ம்..., என்று ஏற்றிவிட, ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது, ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது, மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன, பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க, பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க, பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே,

கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே, பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது, பார்த்துக்கோங்கன்னு சொல்ல, பூனம் அழ அப்படியே அவள் அம்மா அழ என்று ஒரே அழுகை. எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது, அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை. ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை.

முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா, “டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன், அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ.” சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள். சொல்லப்போனால், நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆற அமரப் பார்க்கிறேன், அதற்கு முன் அப்படிப் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான், எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு. அழகாய்த்தான் இருந்தாள் அவள், தேவையான உயரம், வரையப்பட்டதைப் போன்ற கண்கள், அளவான உதடுகள், கண்களை உறுத்தாத மார், எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. பூனம்,

“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...”

“சொல்லு பூனம்...” நான் சொல்ல,

“இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை, இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.”

அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க, எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது. நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்லக்கூடிய நிலையில் இல்லாததால் அவளே தொடர்ந்தாள்.

“நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன், அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன். அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது, அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற, ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை.

எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை. எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும், இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை,

அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை, என்னை ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை...” சொன்னவள் அழத்தொடங்கினாள், எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது.

“எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க, ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை.”

சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும்.

“..., நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன், முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன், ஆனால் தப்பு பண்ணதில்லை...” சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம். சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது, இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது, ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலயிருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான்.”

கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக,

“நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன். அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். இனிமேல் உங்கவிருப்பம்.”

சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள், என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை, அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை, முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை, எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல், நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன். நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும், அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும், எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன. இதற்கு என்ன செய்யலாம், அவளிடம் என்ன பதில் சொல்லவது, என நினைக்க ஒன்றுமே புரியவில்லை. இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் சிகரெட் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.

ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன், ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன், கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள், இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன். கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி, காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய “குட் மார்னிங்” க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன்.

குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும், குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல, என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை, குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன்.

திரும்பி வந்ததும் வராததுமாய். அக்கா,

“என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா?” என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது, என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா,

“தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம், பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க. அவங்க போகட்டும் பார்த்துக்கலாம்.” ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும்,

“பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா, தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு, உங்கக்கா இருக்கா இங்க. அவ போகட்டும் நாம பேசிக்கலாம். இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க.” சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது, அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை.

ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது, அதுவரை சும்மாயிருந்த அப்பா, எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார், அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல, என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு. இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க, அவள் அத்தானை அழைக்க, பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம். எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க. அம்மா,

“டேய் இங்கப்பாரு, எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது.” இதுவேறு,

மணாலி வந்திறங்கியதும், எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை, அக்கா மாமாவிற்கு ஒரு அறையும், பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது, எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள், பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள். அங்கிருந்த குளிருக்கும், அவளுக்கு வெகுவாய் பொறுந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது. அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது.

கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால், அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது. பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர், நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு,

ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன், பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள், நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது, அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது. நான் சாதாரணமாய்க் கேட்க அவள், “இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு. கேட்டாங்க நான் புலம்பிட்டேன், அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும், உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க.” அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா, “யேய், அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச, அந்த முனையில் இருந்து அம்மா,

"இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன். அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி, இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா, நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா,

அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம். ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை. அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது. கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்.

நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன், உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும். நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும். ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான். எல்லாம் தெரிஞ்சும் உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை, இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன். நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா.

இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை."

அம்மா போனை வைத்துவிட, அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை. அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது.

Related Articles

17 comments:

  1. இரண்டுபேருக்கு நல்லது நடக்குமென்றால பொய்சொல்வது தப்பேயில்லை என்று அம்மா என்னிடம் இரகசியமாகச் சொன்னார்கள்.
    :-))

    ReplyDelete
  2. லதா அந்த விஷயத்தை நான் வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதுதான் சரி. :-)

    ReplyDelete
  3. மோகன் தாஸ், கதை நல்லா வந்திருக்கு. இன்னொரு கண்ணோட்டத்தில் வீட்டுக்கு வந்த மருமகள், பெரிய தவறு எதுவும்
    நடக்கவில்லை.அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடக்கூடாது என்று தாய் பொய் கூட சொல்லியிருக்கலாம்.
    லதா! நீங்களும் அதைதானே சொல்றீங்க?

    ReplyDelete
  4. //இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.//

    லாஜிக் உதைக்குதே... முதலிரவு அறைக்குள் சிகரெட் பாக்கெட் வந்தது எப்படி?

    மத்தபடி கதை நல்லா இருக்கு..

    ReplyDelete
  5. உஷா ரொம்ப நன்றி. லதாவிற்கு சொன்னது தான் உங்களுக்கும் உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி நினைத்துக்கொள்ளலாம். :-)

    ReplyDelete
  6. உதயகுமார் நான் வீட்டில் சாதரணமாக புழங்கும் அறையைத்தான் சொல்லியிருந்தேன், அதுவும் இந்த வரிகளுடன்.

    //நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன்.//

    எங்கள் வீட்டில் கல்யாணம் நடந்த பொழுது(எனக்கில்லை) நடந்த சம்பவங்களை(சூழ்நிலைக்காக மட்டும்) வைத்து எழுதியது. லாஜிக் உதைக்கிற மாதிரி தெரியலை. மற்றபடிக்கு நன்றி.

    ReplyDelete
  7. அதென்ன மோகன், அப்பா அம்மா அக்கா இல்லாம கதையே எழுத மாட்டேங்கிறிங்க. அதிலும் எல்லா கதையிலும் நீங்களே ஹீரோவா இருக்கிற மாதிரி எனக்கு ஃபீலிங் :-).

    சரி, வரப் போற மனைவி பத்தி ரொம்பல்லாம் பயப்படாதிங்க :-)

    ReplyDelete
  8. நன்றாக இருந்தது... கடைசியில் கொஞ்ஜம் யதார்த்தம் மீறி விட்டது போல் எனக்கு தோன்றுகிரது..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Can you please publish the contact details of the KERALA ASHRAM?

    ReplyDelete
  10. கதை நல்லா இருக்கு மோகன் தாஸ். பெண்கள் எல்லாம் அம்மா சொன்னது பொய் என்று சொல்வதைப் பார்த்தால் அதில் ஏதோ உண்மை இருக்கும் போல் இருக்கிறதே?! :-)

    ReplyDelete
  11. வாங்க வாங்க கேவிஆர், நீங்க சொன்னீங்கன்னு தான் தொடர்கதை எழுது எழுதுன்னு அரிச்சிக்கிட்டேயிருந்தாலும் வேண்டாம்னு நிறுத்தி வைச்சிருக்கேன். இப்ப இதுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கிறீங்களே இது நியாயமா?

    ReplyDelete
  12. மனதின் ஓசை நல்லதுங்க, அடுத்த தடவை இன்னும் யதார்த்தமா பின்னியிரலாமுங்க.

    ReplyDelete
  13. அன்னானிமஸ் அது கதை, அப்புறம் பேரைச் சொல்லலைங்களே?

    ReplyDelete
  14. டமிளா டமிளா எல்லா இடத்திலையும் சொல்லீட்டீங்க போலிருக்கே.

    நல்லதுங்க.

    ReplyDelete
  15. நானும் அந்த உள்குத்தைப்பற்றித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன் குமரன்.

    ReplyDelete
  16. கதையை எடுத்துச் சென்ற விதம் மிக நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete

Popular Posts