சனிக்கிழமை அகிலாவும் கனிமொழியும் மோகன் வீட்டிற்கு வந்திருந்தார்கள், முதல் முறை இப்பொழுது தான் அவளைக் கவனித்தான். அழகாகத்தான் இருந்தாள், வெளிர் நிறம், வட்டமான முகம், நடுவில் வாகெடுத்து தலை சீவியிருந்தாள். சிறிய நெற்றியில் சந்தனத்தீற்றும் ஒரு குட்டி கறுப்புப் பொட்டும். அன்றும் எப்பொழுதும் போல பாந்தமான நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தாள், தோள்களின் இரண்டு பக்கமும் பின் குத்தி துப்பட்டா போட்டிருந்தாள், அவள் அப்படி துப்பட்டா போடாமல் அவன் பார்த்ததேயில்லை, அந்தத் துப்பட்டா அலை அலையாய்ப் பரவி அவளுடைய மேல்பாதி உடலை சுத்தமாக மறைத்திருந்தது. எப்பொழுதுமே நேர்த்தியாகவே அவள் உடை அணிந்திருந்திருக்கிறாள். கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தங்க வளையல், கழுத்தில் ஒரு சின்னச் சங்கிலி, காதில் தோடென்று இரு வளையங்கள் என்று அதிகமாக அலங்காரம் செய்து கொள்ளவில்லை. முகத்திற்கு பவுடர் போடுவதில்லை போலிருக்கிறது. மிகவும் நல்ல பழக்கம், பத்து வயதிலிருந்து அவனும் பவுடர் போட்டதில்லை, ஆகா இவளை ரசிக்க ஆரம்பித்து விட்டோம், இது தவறு என்று நினைத்தவனாய் சார்லசுக்கு போன் செய்து அவனை விளையாட வரச்சொன்னான்.
போகும் பொழுது அகிலாவை கூப்பிட்டு, "அகிலா அம்மாகிட்ட ரொம்ப பேசாதே அம்மாவுக்கு பிடிக்காது, அப்பாகிட்ட பேசிடவே பேசிடாதே சொல்லிட்டேன்," சொன்னதும் அகிலா ஆச்சர்யமாகப் பார்த்தாள். "உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், பேசணும்னா அக்காகிட்ட பேசு என்னோட பொம்பள உருவம் தான் என் அக்கா, ஜாக்கிரதை, வாயைப் புடுங்குவா மாட்டிக்காதே!" அவள் சரி என்று தலையசைத்தாள். ஆனால் அவனுக்கு ஒன்று புரியவில்லை, எதற்காக இதையெல்லாம் இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று.
சார்லஸ் வந்தான், அவர்கள் பக்கத்தில் இருந்த ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தார்கள். மூன்று மணி நேர விளையாட்டிற்குப் பிறகு வீடு வந்தபொழுது பூஜை முடிந்திருந்தது, மோகன் அக்கா, கனிமொழி, அகிலா மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் நேராக உள்ளே புகுந்து, "மோனா, நான் சொன்னேன்ல அந்தப் பொண்ணு இதுதான்" கனிமொழியும் அகிலாவும் ஒருவரையொருவர் ஒன்றும் புரியாமல் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தார்கள்.
"டேய், நீ வந்தவுடனே சொல்றதில்லையா? நான் ஏதோ நம்ம கனியோட வேற ஃப்ரெண்ட்னு நினைச்சேன். இப்ப சைட் அடிக்க உரிமையா வீட்டுக்கே வர ஆரம்பிச்சாச்சா, முன்னையே சொல்லியிருந்தா இந்நேரம் அழவைச்சிருப்பேன்ல, சின்ன பொண்ணுன்னு சொன்ன, பார்த்தா அப்படித் தெரியலையே?" அவள் இன்னொமொருமுறை அகிலாவை மேலும் கீழும் பார்த்தாள்.
"அக்கா, அண்ணே உங்ககிட்ட சொல்லிட்டாரா, எனக்கு உண்மையிலே தெரியாது. இவளை அழவைக்க நீங்க ரொம்ப சிரமப்படவேண்டாம். அண்ணே முறைச்சு ஒரு தடவை பார்த்தாலே அழுதுறுவா. அதுமட்டுமில்லாமல் இவ சிரிச்சா தான் அதிசயம். அண்ணனைப் பார்த்ததில் இருந்து தினமும் அழுகை தான்" கனிமொழி கண்களில் கலவரம் தெரிந்தது. அகிலா எதுவும் பேசவில்லை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"மோனா எனக்குத் தெரியாது, நீதான் இவகிட்டையும் இவ தங்கச்சி கிட்டையும் எப்பிடியாவது சொல்லணும், கனியும் சேர்ந்துக்கிட்டு விளையாடுறா, இதெல்லாம் ரொம்ப டிஸ்டர்பென்ஸா இருக்கு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். நீ பேசி வச்சிறு."
அக்கா எப்படியும் இவர்கள் இருவரையும் சமாளித்து அகிலாவிற்கு வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பாள் என்று நினைத்திருந்தான். அரைமணிநேரம் கழித்து வெளியே ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து பார்த்த பொழுது, மோகனாவும் அகிலாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கனிமொழி சமையல் கட்டில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"என்ன மோனா, என்ன சொல்றா?"
"பேசினேன், உங்கிட்ட சில கேள்வி கேக்கணும்?" அவள் அவனைக் கூர்மையாகக் கவனித்தப் படியே கேட்டாள்.
"ம்ம்ம் கேளு..."
"இவளை உனக்குப் பிடிக்குமா?"
"என்ன கேள்வியிது?"
"பதில் சொல்லு..."
"இங்கப்பாரு எனக்கு கனிமொழியைக் கூட பிடிக்கும் அந்த மாதிரிதான் கேட்கிறேன்னா, இவளையும் பிடிக்கும். ஏன் கேட்கிற?" ஒரு தேவையில்லாத ஒரு சூழலில் சிக்கிக்கொள்ளத் தொடங்கியதாகப்பட்டது அவனுக்கு.
"இல்லை, என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான். நான் நினைச்சேன் எல்லா பெண்ணுங்க கூட உனக்கு இருக்கிற மாதிரி எதுவும் ஈகோ பிரச்சனையோன்னு, ஏன்னா உனக்குத்தான் யாரும் உன் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா ஒத்துக்க மாட்டே, இந்தப் பொண்ணு முதல் நாளே உன்னை திட்டியிருக்கு, அதனால ஏதும் ஈகோ பிராப்ளமான்னு கேட்டேன்." மோகனாவிடமும் இப்பொழுது விளையாட்டுத்தனம் தெரிந்ததாய்ப்பட்டது அவனுக்கு.
"இல்லை, நிச்சயமா இல்லை, உங்கூட கூடத்தான் பாதி நேரம் சண்டை போடுவேன் அதுக்கா உன்கூட ஈகோ பிரச்சனையா, சின்ன பொண்ணு, பதினேழு, பதினெட்டு வயதிருக்கும். இந்த வயதிலேயே காதல்னா கோபம்தான் வருது. அவங்கப்பா படிக்கிறதுக்கு அனுப்பினா, இவ இங்க வந்து காதல் பண்ணுறா. இப்பவாவது பரவாயில்லை, முன்னாடி எங்க போனாலும் பின்னாலையே வர்றது, வந்து என்னையே பார்த்துக்கிட்டிருக்கிறதுன்னு ஒரே ப்ராப்ளம். இப்ப திட்டினது பிறகு பரவாயில்லை, நான் அவளைப் பார்க்கிறது இல்லை, நல்லா நோட் பண்ணிக்கோ; நான்தான் அவளைப் பார்க்கிறதில்லை. அவள் என்பின்னாடி தான் சுத்துறான்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு அகிலாவைப் பார்த்தான். அவள் தலையைக் குனிந்திருந்தாள்.
"அப்ப உன் பிராப்ளம் அவ வயது, அவ படிப்பு, உன் கான்ஸன்டிரேஷன் அப்பிடித்தானே, அவளை உனக்கு பிடிக்கலை, அழகாயில்லை, எதிர்த்து பேசுறா இதுமாதிரியெல்லாம் ஒன்னுமில்லையே?"
"மோனா என்னயிது?" இது எங்கே போகிறது என்று பாதை தெரியாமல் குழம்பினான்.
"கேட்ட கேள்விக்கு பதில்"
"மேலோட்டமா பார்த்தா ஆமாம், ஆனா இந்தக் காரணங்களுக்காக எல்லாம் நான் அவளைக் காதலிக்க முடியாது. எனக்கு அந்த கான்ஸப்டிலேயே நம்பிக்கையில்லை."
"இங்கப்பாரு உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ சொன்ன இதையேத்தான் நான் அவகிட்ட சொன்னேன். முதல்ல ஒழுங்கா படி, இன்னும் இரண்டு மூணு வயசு ஆகட்டும். அவனைத் தொந்தரவு பண்ணாதே, அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு அப்பிடின்னு தான் சொன்னேன்." கட் அண்ட் ரைட்டாக அவள் சொன்னாள்.
"மோனா இது வீண் பேச்சு, நாளைக்கு இவளை விட அழகா ஒரு பொண்ணை பார்த்து நான் அவளைக் காதலிச்சா என்ன பண்ணுவ?" கேட்டுவிட்டு பயத்துடன் அகிலாவைப் பார்த்தான், அழுது தொலைக்கப் போகிறாளோ என்று. அப்படியொன்றும் நடக்கவில்லை.
"இங்கப் பாரு, நான் ஒன்னு சொல்லவா. நீ இவளை காதலிக்கிறன்னு சொல்லமாட்டேன், ஆனா இவளை உனக்கு ரொம்ப பிடித்திருக்கு. அதனாலத்தான் நீ இவளை இங்க வரவைச்சு என்கூட பேசவைச்சிருக்கே, நான் இவகிட்ட என்ன சொல்லுவேண்ணும் உனக்கு தெரியும். அது தான் உன் விருப்பமும். நீ வேலை வாங்கணும். அவளுக்கும் இருபதுக்கு மேல வயசாகணும். ஆனா உனக்கென்னன்னா, எங்க யாராவது மோகன் சின்ன பெண்ணை ஏமாத்திட்டான்னு சொல்லிடுவானோன்னு பயம். அதான் வீட்டுக்கு வரவைச்சு என்ன வச்சு பேசவைச்சு, உன் விருப்பத்தை சொல்லிட்ட, நானும் அம்மாவும் கனியும் பூஜையும் ஒரு கருவி உனக்கு."
"சரி நான் இப்ப என்ன பண்ணனுங்ற?" அப்படியொன்று அவன் மனதில் இல்லாவிட்டாலும் இருந்திருக்க முடியுமோ என்ற கேள்வி அவள் சொன்ன பிறகு வந்தது.
"ஒன்னும் பண்ணவேணாம், ஏற்கனவே இவ உன் முன்னாடி வர்றதில்லை, நான் சொல்லிட்டேன் இனிமே உனக்குத் தெரியாம கூட உன் பின்னாடி சுத்தமாட்டா; ஆனா ஒன்னு, நீ கனிமொழிகிட்டையோ, இல்லை என்கிட்டையோ பேசுற மாதிரி கூட வேணாம். சாதாரணமா ஒரு பெண்ணுகிட்ட பேசுற மாதிரி அவகிட்டையும் பேசு, முக்கியமா பயமுறுத்தாதே. என்ன புரியுதா" கண்டிப்புடன் சொன்னாள்.
"மோனா உன்கிட்ட பிரச்சனையை சால்வ் பண்ண சொன்னா, நீ இன்னும் பெரிசாக்குற?" உண்மையிலேயே புலம்பினான்.
"நீ ஏன் இப்பிடி நினைக்கிற, எப்பிடியிருந்தாலும் ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போற, அந்தப் பொண்ணு ஏன் இவளா இருக்கக்கூடாதுன்னு தான் கேட்கிறேன்."
"மோனா அது அவ்வளவு சுலபமில்லை, அது அய்யர் பெண்ணு, நைனாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். அது மட்டுமில்லாம எனக்கு அவளைப் பத்தி எதுவுமே தெரியாது." அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாதென்பது எவ்வளவு உண்மை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.
"அதைப் பத்தியெல்லாம் இப்பவே எதுக்கு நினைக்கிற, பிரச்சனைதான் சால்வ் பண்ணுவோம். நான் பேசின வரை உனக்கு ரொம்ப மேட்ச்சான பெண்ணு, அவளைப்பத்தி என்னல்லாம் தெரியணுமோ பேசித் தெரிஞ்சிக்கோ."
"ம்ம்ம்ஹூம், இது சரியாப் படலை. சரி இப்ப என்ன, எனக்கு வேலை கிடைச்சு, இவளுக்கு இன்னும் கொஞ்சம் வயசாகி, நான் கல்யாணத்த பத்தி யோசிக்கும் போதுதானே பிரச்சனையில்லை அதுவரைக்கும் என் மனசு மாறலைன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுவரைக்கும் இவ என்னை தொந்தரவு பண்ணாமலிருந்தால்."
அகிலா முகத்தில் ஒரு சாந்தமான புன்னகை அரும்பியது, காலையிலிருந்தே அவளை அவன் ஜீனியர் என்கிற விதத்தில் இல்லாமல் ஒரு தோழி என்று பின்னர் என்னைக் காதலிப்பவள் என்று பார்க்கத் தொடங்கியிருந்தான். அதுவரை அவன் கண்களில் படாத அவளுடைய பயம் கொள்ளவைக்காத அழகு அவனைக் கட்டிப்போடத் தொடங்கியது.
அதன் பிறகு அவன் அகிலா அழுது பார்த்ததே கிடையாது. இன்னொரு புது புரோஜக்ட் எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கல்லூரிக்கும் வரவேண்டும் ப்ராஜக்ட்டும் பண்ணனும், இதனால் நிறைய நேரம் ட்ராவலுக்கே செலவளிக்க விருப்பமில்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு வீடு எடுத்துக்கொண்டான். ஒரு பழைய கம்ப்யூட்டரும், இன்னொரு கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்து அவனும் சார்லசும் அந்தப் புரோஜக்ட்ல் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்சம் பெரிய புரோஜக்ட், வெற்றிகரமாக முடித்த புரோஜக்ட் ரெஃபரென்ஸுடன் சென்றதால் கிடைத்தது. இரண்டு மாசம் டெட்லைன் ஐம்பதாயிரம் ரூபாய். சார்லசுக்கு பதினைந்தாயிரம், அவனுக்கு முப்பந்தைந்தாயிரம் என்று டீல்.
பத்து நாள்களில் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரை விற்றுவிட்டு இன்னும் கொஞ்சம் பணம் போட்டு ஒரு லாப்டாப் வாங்கினான். புரோஜக்டுக்கு முக்கியமாக இருந்தது. கல்லூரியில் வகுப்புகள் சீரியஸாய் நடக்கத் தொடங்கியருந்த நேரம் அது. அன்றும் காலேஜ் முடிந்த மாலை நேரத்தில் லாப்டாப்பில் டாக்குமென்ட்ஸ் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அகிலா வந்து நின்றாள். மனம் ஒருபக்கம் அகிலாவைப் பார்க்க வேண்டும் என்று அரித்துக் கொண்டிருந்தாலும் அவனாய் அவளைப் பார்க்காமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
"ம்ம்ம் சொல்லு..."
"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்... அதான்!" அமைதியாகச் சொன்னாள், அகிலா என்றில்லாமல் பொதுவாய் யாருக்கும் பிறந்தநாள் என்றால் சின்னது முதல் பெரியது வரை ஏதாவது ஒரு பரிசு கொடுப்பது அவனது வழக்கம்.
"ரொம்ப சந்தோஷம், விஷ் யூ அ வெரி ஹாப்பி பர்த்டே, முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல, நான் ஏதாவது ப்ரஸென்டேஷன் வாங்கி வைத்திருப்பேனே?"
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஒரு சின்ன பார்ட்டி. நீங்க, நான், கனி அக்கா மூணுபேரும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் வரீங்களா?"
"ம்ம்ம் போகலாமே, எப்ப?"
"இப்பவே..."
பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு வந்தார்கள்.
அவனும் கனிமொழியும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள அகிலா எதிரில் உட்கார்ந்தாள். புதுத்துணி போலிருந்தது அவள் அணிந்திருந்த ஊதா நிற சுடிதார். வழமையான அவள் நேர்த்தியுடன் தலையில் ஒரு மஞ்சள் ரோஜாப்பூ பூத்திருந்தது. நினைத்துக் கொண்டான், ‘எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்குமென்று இவளுக்குத் தெரியுமா’ என்று.
"ஆமா அகிலா உன்னை இப்பெல்லாம் பார்க்கவே முடியறதில்லை, முன்னமாதிரி தானா இல்லை, உண்மையிலேயே படிக்கிறியா?"
"இல்லை உண்மையிலேயே டைம் கிடைப்பதேயில்லை, நிறைய படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடிவதில்லை, காலேஜூக்கு வரீங்களான்னே தெரியலை" அவனைப் பார்க்க முடியாத வருத்தம் தெரிந்தது அகிலாவிடம்.
"ஆமாம் உண்மைதான், அண்ணே நிறைய சம்பாதிக்கிறீங்க ஆனா செலவு செய்து பார்க்கவேயில்லை, சரியான கஞ்சன் நீங்க." என்றாள் கனிமொழி.
"இல்லைம்மா நான் புரோஜக்ட் முடிஞ்சவுடனேயே ஒரு பார்ட்டி தரணும்னு ஆசை. அதுக்குள்ள இவ புகுந்து குட்டையைக் குழப்பிட்டா. அதான் முடியலை. இப்ப சுத்தமா டயமே இல்லை. ரொம்ப பிஸி. ஆமா ரெண்டுபேருக்குமே இந்த செமஸ்டர் சி லேங்குவேஜ் இல்லையா."
"ஆமா, எனக்கு எப்பொழுதையும் போல, ஆனா இவளுக்கு சிலபஸ் மாறியதால் இப்பவே." என்றால் கனிமொழி.
"யார் எடுக்குறா உங்களுக்கு, ஏதாவது புரியுதா?"
"மாணிக்கவாசகம் எடுக்கிறார், ஒரளவுக்கு புரியது, டவுட் கேட்கலாம்னா உங்களைக் காணோம். ஆளை பிடிக்கவே முடியறதில்லை." என்றாள் கனிமொழி.
"என்னாதிது, நான் தங்கியிருக்கிற வீடு தெரியுமில்லை, வரவேண்டியது தானே. ஆமா ரெண்டுபேரும் ஹாஸ்டலில் தானே இருக்கிறீங்க?"
"ஆமா இவளால ஹாஸ்டலில் தான் இருக்கிறோம். ஒரே பயம் அங்க வருவதற்கு, எங்க கடிச்சுடுவீங்களோன்னு? அதுவும் இவளோட மேட்டருக்கு பிறகு நாம பழகின மோகன் அண்ணனான்னு சந்தேகமா இருக்கு."
"இந்த வாரம் சனிக்கிழமை வாங்க, பார்க்கலாம். சீக்கிரமா படிங்கடி எனக்கு புரோஜக்ட்ல ஹெல்ப் பண்ணலாம்ல?"
"உங்களுக்கா? நாங்களா? என்ன விளையாட்டா. சரி எதுல பண்ணுவீங்க நீங்க புரோஜக்ட்." - அகிலா கேட்டாள் சுட்டித்தனமாய்.
"ஜாவாதான் வேறென்ன" பின்னர் கனிமொழி கைகழுவ சென்றிருந்த நேரம்.
“அகிலா எனக்கு உண்மையிலேயே வருத்தமாய் இருக்கு நீ இன்னிக்கு உனக்கு பிறந்தநாள்னு சொல்லியிருக்கலாம். உனக்கு எதுவும் கொடுக்க முடியலையே...” அதுதான் உண்மையில் அகிலாவிடம் அவன் மனம்விட்டு பேசிய முதல் வரிகளாகயிருக்கும். அவளிடம் அப்படி பேசியதே ஆச்சர்யத்தை அளித்திருக்க வேண்டும். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதையாவது அவளிடம் பேசவேண்டும் என்று மனம் அரித்தது.
“எனக்கு மஞ்சள் நிறம்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் மஞ்ச ரோஸ்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்” மோகனாவிற்கு அடுத்து தன் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களை சொல்லிக் கொண்டிருந்தான் அவளிடம்.
சிரித்தாள், “தெரியும். அன்னிக்கு உங்க வீட்டில் அக்கா சொன்னாங்க.” அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது கனிமொழி வந்தாள்.
“சரி நேரமாச்சு, கொஞ்சம் வேலையிருக்கு. வரேன் அப்புறம் பார்ப்போம்." சொல்லிவிட்டு அவர்களைப் பிரிந்தான்.
வெள்ளிக்கிழமை இரவு அவனுக்கு நிறைய வேலை இருந்தது, காலை நாலு மணி வரைக்கும் வேலை பார்த்ததால் ஒன்பது மணி வரைக்கும் தூங்கிக்கொண்டிருந்தான். காலிங்பெல் அடித்தது. திறந்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.
"ம்ம்ம்... வா அகிலா, கனி வரலை."
"இல்லை, உடம்புக்கு சரியில்லை, பொம்பளங்க சமாச்சாரம், சொல்லிட்டமே அதான் பார்த்துட்டு வந்திரலாம்னு வந்தேன்"
"படிக்கிற ஐடியாவில் தானே வந்திருக்க?" என்னவோ கேட்கவேணும் போலிருந்ததால் கேட்டான்.
சிரித்தாள், "வேற எதுக்குன்னு நினைச்சீங்க?"
"இல்ல அதுக்குத்தான், சும்மா கேட்டேன். புக் வைச்சிருக்கிறியா."
"ம்ம்ம், பாலகுருசாமி புக் வைச்சிருக்கேன். உங்க கம்ப்யூட்டர்ல கம்பைலர் இருக்குள்ள?"
"ம்ம்ம் இருக்கு, சொல்லு எங்க ப்ராப்ளம்?"
"சரி ஒரு விஷயம், பாச்சுலர் ரூம் மாதிரியே இல்லையே, பொம்பளைங்க சுத்தம் செய்யுற ரூம் மாதிரியில்ல இருக்கு."
"ஏன் நாங்கல்லாம் சுத்தமா வைச்சிருக்க கூடாதா, சரி இரு குளிச்சிட்டு வந்திர்றேன், அதுவரைக்கும் வேண்டுமானால் கம்ப்யூட்டரை நோண்டிட்டு இரு." குளிக்காமல் ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு.
"சரி பாஸ்வேர்ட் சொல்லுங்க?"
"எங்க நீ சொல்லு பார்க்கலாம்?"
"செகுவாரா?"
"சரிதான் நீ சொன்னது; ஆனா இப்ப மாத்திட்டேன், அகிலாண்டேஸ்வரி தான் பாஸ்வேர்ட்" சொல்லிவிட்டு குளிக்கக் கிளம்பினான்.
(தொடரும்...)
உள்ளம் உடைக்கும் காதல் 6
Mohandoss
Thursday, July 06, 2017
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
-
Amidst the scorching days of an unremarkable summer, a single day emerged that would shatter the ordinary rhythms of my life, forever alteri...
Boss .. அது என்ன "உள்ளம் உடைக்கும் காதல்" இப்ப "உள்ளம் வெட்டும் காதல்" அப்படி மாறிருச்சு? கதையோட போக்குல இருந்து special reason ஏதும் எனக்கு தெரியல... சும்மா ஒரு ஆர்வ கோளாறு தான்.. அப்புறம்... வாழ்த்துக்கள்!! உங்கள் படைப்புகளுக்காக... நீங்க 3 வருசமா எழுதியதை 3 வாரமா படிச்சு முடிச்சுட்டேன்.. அகிலா கதைகள் என்னோட favorite !!!
ReplyDeleteRegards
Arun ( நானும் பொட்டி தான் தட்டுறேன்)
இல்லை உள்ளம் உடைக்கும் காதலே தான். தவறு என்னுடையது.
ReplyDeleteஅப்புறம் ஒரு நன்றி கதைகளைப் படித்ததற்காக.
கலக்கலாக போய்க்கொண்டிருக்கிறது இந்தத் தொடர்!
ReplyDeleteநன்றி மோகன்.
ReplyDelete