In பயணம்

குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்



சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள்.
அப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது கல்லணை, முக்கொம்பு மலைக்கோட்டை எல்லாம் விடுத்து இப்ப சித்தன்னவாசல் தான் காதலர் ஸ்பாட் ஆகயிருக்கிறது, அதைப்பற்றிய வரிகள் தேவையில்லாதவை. சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.) 
அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு சரியான விளக்கங்கள் தெரியாததால் தவறுதலாய் நிறைய விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்க முடியாது என்று குறைந்த விவரம் கொண்டவர்களாலேயே உணர முடியும். அந்தக் கோவில் இரண்டாயிரம் வருடம் புராதனம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மிக அற்புதமான கலைத்தன்மை உடைய "finishing" கொண்ட சிலைகளைப் பற்றியும் சரியான விவரங்களை அவர்கள் சொல்லவில்லை. அதைப்போலவே அங்கேயே இருந்த தொல்பொருள்துறை ஊழியரை அறிமுகம் செய்துவைக்காதது மட்டுமல்லாமல் அவர் அங்கேயில்லை என்றும் சொன்னார்கள். நாங்கள் பிறகு வெளியில் சிலரிடம் கேட்டு அவரை அறிமுகம் செய்து கொண்டு பழங்கால 'சங்கீத கல்வெட்டு' 'குடைவரைக் கோயில்' போன்றவற்றைப் பார்த்தோம்.
அர்ச்சகர்களின் வேலை அது இல்லை தான் மறுக்கவில்லை. ஆனால் சாதாரண விவரங்களைக் கூட அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அதனாலுமே கூட இந்தக் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகம் விரும்பினேன். அதற்காகவாவது அவர்களுக்கு என் நன்றிகள், இன்னொருமுறை விவரங்களுடன் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அதற்கு காரணம் அங்கேயிருக்கும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோவில் ஒருமுறைக்கு மேல் பார்த்தவன் என்ற முறையில் குடுமியான் மலைச் சிற்பங்கள் அற்புதமான "Finishing" கொண்டவை. ஆனால் காலத்தால் பின் தங்கியவை இவை என்ற விஷயம் இருக்கிறது.
ஆனால் குடுமியான்மலை எத்தனை தூரம் மக்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இங்கிருக்கும் கோவில் திருச்சியில் நல்ல ஃபேமஸ் என்று அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன். கோவிலைப் பற்றி தேடிய பொழுது "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ. ராஜாமுகமது"வில் கொஞ்சம் விவரம் கிடைத்தது கொடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் என்னுடையவை.

குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என்று வரும். இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோயில் ஸ்தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும் முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 - 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு 'நள' என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை "தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்" எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது "சிகரநல்லூர்" என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று - மலை - ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.

குடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 - 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.

அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.

புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.

குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் - வாயிற்காப்போர் - சிற்பங்கள் உள்ளன.





கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.





குகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13'x14' அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.

'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே 'பரிவாதினி' என்று ஒரு கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் - மத்யம் - சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது - சட்ஜக்ரம - கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது - ஷடப - நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது - சதாரி - பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது - பஞ்சமம் - அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் 'பரிவாதினி' என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.

மேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். "சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா - குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு - கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).

குகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.







சிகாநாதர் - அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.




இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.







இதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.





இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 - 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக  பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது! இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.



காதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).



வினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.

















தீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் - இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.

இந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.

அம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12'x18' அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.

குடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

2. குடுமியான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.



இவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 - 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 - 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.

3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.

4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 - 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 - 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.

5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.

6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

7. குணசேனா என்கிற புனைப்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.

8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.

ஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.

இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.

Related Articles

15 comments:

  1. அப்பா! என்னஒரு விரிவன, விளக்கமான பதிவு. பதிவுகளும், படங்களும் மிக மிக அருமை.

    புதுகையை சேர்ந்தவள் என்பதால் சொல்கிறேன். தங்கள் கொடுத்துள்ள விரிவான பதிவு அனைவருக்கும் குடுமியானமலையை குறித்த தேவையான விவரங்களை அறியத் தரும் அற்புதமான பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னது போல் எந்தக் கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அந்த இடத்தின் வரலாற்றின் பரிணாமங்கள் தெரிந்து இருப்பது இல்லை.

    தமிழ் நாட்டுக் கலைகள்/சிற்பக்கூடங்கள் எல்லாம் , வழிபாடு (கோவில்) என்ற அளவில் , வரலாறுகள் மறைக்க்கப்பட்ட (மறக்கப்பட்ட) தல புராணமாகவே கதை சொல்லப்பட்டு வருகிறது.

    **

    குடுமியான்மலை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. புதுகைத் தென்றல், பலூன் மாமா நன்றி.

    பலூன் மாமா - வருத்தத்திற்குரிய விஷயம் தான். அன்று எங்களுடன் வந்திருந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிலின் பின்னால் இருக்கும் குடைவரை கோவிலைப் பற்றியும் சங்கீதக் கல்வெட்டைப் பற்றியும் தெரியவில்லை.

    அன்று எங்களிடம் உங்களால் தான் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது என்று சொன்னது வருத்தத்திற்குரிய விஷயமே!

    தேடினால் கிடைக்காது என்றில்லை ஆனால் தேடுதல் பலருக்கு சௌகரியமான ஒன்றாகயிருப்பதில்லை.

    ReplyDelete
  4. மோஹன்,
    அருமையாகப்பதிவு செய்துள்ளீர்கள், இந்த வரலாறு நானும் படித்துள்ளேன், அதே போல இதற்கு எதிரான ஒன்றும் படித்தேன், அதையும் சொல்லி வைக்கிறேன்.

    முற்கால சோழர்கள் சாம்ராஜ்யம் நலிவுற்றப்போது , சோழ சாம்ராஜ்யத்தை பாண்டியர்களும் , பல்லவர்களும் பாதியாக பிரித்து ஆண்டர்கள்.இது பிற்கால சோழர்கள் தலை எடுக்கும் காலம் வரை தொடர்ந்தது.

    இடையில் சோழ நாட்டை முழுவதும் யார் ஆள்வது என பாண்டியர்களும், பல்லவர்களும் சண்டைக்கூட போட்டுக்கொண்டார்கள்.அதற்கும் கல்வெட்டுகள் உள்ளது. நீங்கள் சொல்லும் பாண்டியர்கள் பல்லவர்களுடன் சோழநாட்டுக்காக சண்டையிட்டார்கள்.

    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மாறவர்மன் என்று ஆரம்பிக்கும் பெயர்கள் உள்ளப்பாண்டியர்கள் மிகவும் பிற்காலத்தை சேர்ந்தவர்கள் ஆச்சே(12-13 ஆம் நூற்றாண்டு). வரகுணன் என்பது நந்திவர்மன் காலத்துக்கு ஒத்து வருகிறது, ஆனால் அதில் மாறவர்மன் எல்லாம் வராது, இரண்டுப்பெயர்களை மிக்ஸ் செய்து விட்டீர்களா?

    பல்லவராயர்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள் கூட பல்லவர்கள் வழி வந்த சிற்றரசர்கள் ஆவார்கள்.

    பிற்கால சோழ மன்னன் விக்கிரம சோழனிடம் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் ஒரு பல்லவ வழி வந்த குறுநில மன்னர்.அவரது சொந்த ஊர் சென்னை அருகே உள்ள குன்றத்தூர்.

    பல்லவர்களே கருங்கற்கலால், அல்லது கல்லில் செதுக்கி , குடவரைக்கோவில்கள், சிற்பங்கள் செய்வதை தமிழகத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர்கள்.

    பல்லவர்களுக்கு முன்னர் கருங்கல்லில் கோவில் கட்டும் வழக்கமே தமிழகத்தில் இல்லை.

    இக்கலையை துங்கபத்திர மேற்கு கரையில் அப்போது ஆண்ட சாளுக்கியர்கள் வசம் இருந்து பல்லவர்கள் கற்றுக்கொண்டு இங்கே வந்து செயல்படுத்திப்பார்த்தார்கள் என்று சொல்கிறார்கள்.

    மஹேந்திர வர்மன் பரிட்சார்த்த ரீதியாக சில கோயில்கள் ,சிற்பங்களை குடுமியான் மலையில் செய்து பார்த்து அது சாத்தியம் என தெரிந்து பின்னர் மாகாபலிபுரத்தில் பெரிய அளவில் செய்ததாக சொல்வார்கள்.அதனாலேயே குடுமியான் மலைப்பகுதியில் இருக்கும் சிற்பங்களும், ஓவியங்களும் கொஞ்சம் மாறுப்பட்டு இருக்கிறது என சொல்கிறார்கள்.

    மகேஸ்வரன் எனப்பெயர் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ரெல்லாம் இல்லை நந்திவர்மன், மகேஸ்வரன் என்றெல்லாம் பல்லவர்களிலும் பெயர் உண்டு.ஒரு மன்னர் சைவராக , மற்றவர் வைணவராக இருப்பார், சமயத்தில் சமணம் ,,புத்தம் எனப்போய் கூட திரும்புவர்.

    //தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள்.//

    தொண்டைமான்கள் அரச பரம்பரையே கிடையாது அவர்கள் காலத்தால் முற்பட்டவர்களும் அல்ல, கிழவன் சேது பதி என்ற ராமநாதபுர மன்னனின் ஆசைநாயகியின் தம்பிக்கு ஒரு பங்காக கொடுக்கப்பட்டது தான் புதுக்கோட்டை சமஸ்தானம்.

    இவர்களின் காலம் திருமலை நாயக்கர் காலத்திற்கு பிறகே.

    ReplyDelete
  5. வவ்வால் வரலாற்று ரீதியாகச் சொல்லப்பட்ட அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு புத்தகத்திலிருந்து எடுத்தது தான்.

    புதுக்கோட்டை பற்றி விரிவாக இன்னொரு முறை நிச்சயம் எழுதுகிறேன். அப்படியே தொண்டைமான்களைப் பற்றியும்.

    பெயர்கள் மிக்ஸ் ஆகவில்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. பெரும்பாலான வரலாறு புராணத்தின் அடிப்படையில் எழுதப்படுவதால், ஒதுக்கக் கூடிய ஆதாரமற்ற கதைகளே அதிகம் இடம்பெற வாய்ப்புகளுண்டு. 12நூற்றாண்டு என கொண்டால், சிற்பக்கலை மிகவும் அடிப்படி நிலையில் உள்ளது. உடை நெகிழும் காந்தார கலையின் கூறுகள், வடக்கிலிருந்து தெற்கே பரவியது என கொள்ளவே வாய்ப்புகள் அதிகம் என்றாலும், 12-ம் நூற்றாண்டு கோயிலான பேளூர் காட்டும் கலைநயமும், சிலைகளின் வடிவழகும் இந்த கோயில் சிலைகளில் இல்லை.

    ஆடைகள் வரிகளால் செதுக்கப்படாமல், மடிப்புகளாக மிகவும் உயர்ந்த நிலையில் முடிவு பெற்று விளங்குவது பேளூர். சோழர்களின் சிற்பிகள் பேளூர் வந்து செதுக்கினர் என அறியப்படும் அல்லது திரிக்கப்பட்ட வரலாற்றின் பல்லிளிப்பை இந்த சிலைகளை கண்டாலே தெரிகிறது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று.

    அல்லது இப்படி கொள்ளவும் வாய்ப்புள்ளது, சிறப்புற்று விளங்கும் அரசாங்கங்களுக்கு குடிபெயர்ந்து மேலதிக வசதிகளையும் கொடைகளையும் சிற்பிகள் பெற வாய்ப்புள்ளது என்பதால், 12-ம் நூற்றாண்டு சிற்பிகள் புலம்பெயர்ந்திருக்கலாம். செலவிடப்படும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே கலையும் அமைய வாய்ப்பிருக்கிறது அல்லவா??

    கதைகளைத்தாண்டி, சிற்பங்களின் அமைப்பு, தெளிவு உணர்த்துவது -

    1. சிற்பத்திறன் மிகவும் அடிப்படி நிலையிலேயே இருந்திருக்கிறது.
    2. அல்லது திறன் வறட்சி ஏற்பட்டிருக்க வாய்புகள் அதிகம் உள்ளது, ஒய்சாலர்களின் எழுச்சியால், சிற்பிகள் பேளூருக்கு குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பேளூரில், சோழ நாட்டு சிற்பிகள் வடிவமைத்தது என கருவறை வேலைப்பாடுகளை விவரிக்கின்றனர். (காண்க: என் பேளூர் குறித்த பதிவு
    http://aatrangaraininaivugal.blogspot.com/2007/11/blog-post_14.html) எனவே, சிற்பிகள் குடிபெயர்ந்த கூற்று தமிழக சிலைகளின் குறைதிறனிலும், பேளூர் - விசயநகர சிற்பங்களின் மேலதிக அழகிலும் தெரிகிறது.

    10ம் நூற்றாண்டு சிலைகளான, சரவணபெலகோலா சிற்பங்களுடன் இச்சிற்பங்கள் ஓரளவு ஒத்துப்போகிறது, எனவே 8- 10 நூற்றாண்டு எனக் கொள்வது சரி என நினைக்கிறேன் (குறிப்பாக ஆடை அணியும் அல்லது களையும் அச்சிலை பெலகோலாவில் இருக்கும் ஒரு பெண்தெயிவத்தின் சிலையை 90 சதவிதம் ஒத்திருக்கிறது- முகம், மார்பழகு மற்றும் முத்திரைகள்- அது சமணக்கோயில் என்பதால் பெண் தெய்வம் முழு ஆடைகளுடன் உள்ளது.http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL/photo#5126739250679283986

    . கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட தமிழை க்ளிக்கியிருந்தால், அக்காலத்திய தமிழை ஒப்பிட்டு பார்த்திருக்கலாம். சிரவண பெலகோலாவில் அக்காலத்திய தமிழ் செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் இடதுபுறம் இருப்பது 10 நூற்றாண்டூ தமிழ். http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL/photo#5126739229204447490

    துவார பாலகர் சிலையும் அங்கனமே ஒத்திசைவை பெற்றிருக்கிறது. எனவே பத்தாம் நூற்றாண்டு எனக்கொள்வது சாலத் தகும்.

    http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL/photo#5126739186254774498

    http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL

    ReplyDelete
  7. விளக்கமான பதிவு. பதிவும், படங்களும் மிக மிக அருமை.

    இதற்காக நீங்கள் உழைத்த உழைப்புக்கு தலை வணங்குகிறேன் !

    ReplyDelete
  8. இலங்கையில் திருகோணமலை நகரத்தில் உள்ள திருக்கோணேஸ்வர ஆலயம் குறித்த தகவல் குடுமியான்மலைக் கல்வெட்டில் உண்டு. கிழக்கிலங்கையில் குடுமியான் மலை என்னும் ஒரு இடம் உண்டு. இராச ராச சோழன் காலத்தில் இலங்கையில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது.சோழரின் தொடர்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.


    இது குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் எழுத‌வும்.

    ReplyDelete
  9. பாலா,

    நன்றிகள் - உழைப்பென்று சொல்லவதைப் பற்றி என்ன சொல்ல தெரியலை.

    என்னால் முடிந்தது கொஞ்சம் விவரங்கள் கொடுப்பது அதைச் செய்கிறேன். அஷ்டே!

    ReplyDelete
  10. ஈழத்தமிழன் - அந்தக் கல்வெட்டு பற்றிய தனிக்குறிப்பு எதுவும் நான் பார்த்தவரை கிடைக்கவில்லை.

    ஆனால் இன்னும் நன்றாகத் தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். ஒரு தனி மெயில் எழுதி இன்னார் என்று சொன்னால் அதற்கு உதவியாயிருக்கும்.

    mohandoss.i@gmail.com

    ReplyDelete
  11. அன்பு நண்பரே!

    ஜடவர்மன் வீரபாண்டியன் (கி.பி 1251‍-1281) இலங்கை மீது படையெடுத்து இலங்கை மன்னனைத் தோற்கடித்து திருகோணமலையில் பாண்டியச் சின்னத்தைப் (இரு கயல் மீன்கள்)
    பொறித்துச் சென்றதாக குடுகியான் மலைக் கல்வெட்டுக் கூறுகின்றது.

    "அரசை கெழுதாயம் அடைய வாரி
    கானா மன்னவர் கண்டு கண்டேங்க‌
    கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
    உருகெழு கொடிமிசை இருகயலெதி
    ஏனைய வேந்தனை ஆணை திறைகொண்டு"

    இந்தக் கல்வெட்டு ஜடவர்மன் வீரபாண்டியனின் பதினொராம் ஆண்டு ஆட்சியில் பொறிக்கப்பட்டதாகும.

    ஒரு ஈழத் தமிழன்‌

    vks346@yahoo.de

    ReplyDelete
  12. உங்களின் ஒவ்வொரு பதிவும் நல்ல தகவல் சுரங்கமாக இருக்கிறது.குடுமியான்மலை பற்றிய செய்திகள்,புகைப்படம் எனக்கு புதிது.
    நன்றி.

    ReplyDelete
  13. என்ன சொல்லி பாராட்டுவதென்று தெரிய வில்லை மோகன்தாஸ்....

    வெகு நிச்சயம் இதற்கு பின்பு பெரிய்ய உழைப்பு இருக்கிறது. ஹேட்ஸ் ஆஃப்

    ReplyDelete
  14. ஈழ நண்பரே,

    நீங்கள் சொன்ன கல்வெட்டைப் பற்றித் தேடிப்பார்க்கிறேன்.

    கோவை சிபி, நந்தா - நன்றிகள்.

    நந்தா,

    முன்பே சொன்னது தான், உழைப்பென்று எல்லாம் சொல்ல முடியலை. ஆனால் நான் தேடிய பொழுது இணையத்தில் கிடைக்காத விஷயங்களை என்னால் உள்ளிட முடியுமென்றால் நேரம் கிடைத்தால் செய்கிறேன். அவ்வளவே அதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  15. ஊர் சுற்றலாம் வாங்க என்ற தலைப்பில் ஒரு புதிய பயணக்கட்டுரை ஒன்ற எமது வான்மதி சிற்றிதழில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். வான்மதி மாத இதழ் மாணவர்களுக்கான பயனுள்ள விசயங்களைத் தந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து வெளியாகிறது. எனது வரலாற்றுத் துறை நண்பர் வேலாயுதராஜா புதுக்கோட்டையில் உள்ள சித்தன்னவாசல் மற்றும் அதன் அருகில் உள்ள குடுமியான் மலைக்கு சென்று வரலாம் என்று கூறியதன்பேரில் விக்கிபீடியா மூலம் தங்கள் வலைப் பூவை அடைந்தேன். மிக்க அருமையான தகவல். நானும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க விரும்புகிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete

Popular Posts