In சிறுகதை நட்சத்திரம்

நட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்

“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”

கௌசல்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்க எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.

அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எங்க அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.

பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுத்தாத இடமா, பேசாத பேச்சா, கொடுத்துக்காத முத்தங்களா?

மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,

“டேய்.”

“என்னது டேய்யா?”

“ஆமாண்டா...”

“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா? என்னாடி ஆச்சு உனக்கு.”

நான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். எனக்கோ பயமாகிப்போய்விட்டது, அப்படியொன்றும் மைக்கேல் ஐஸ்கிரீமில் எங்களைத் தெரியாதவர் கிடையாது. குடும்பத்துடன் வந்தும் சாப்பிட்டிருக்கிறோம், தனியாகவும் வந்திருக்கிறோம். இருந்தாலும் கூடவந்திருக்கும் பொண்ணு அழுதுச்சுன்னா அவ்வளவுதான் நம்மளை போட்டுத்தள்ளிருவாங்கன்னு நினைச்சிக்கிட்டே, அவளை வெளியே தள்ளிக்கொண்டுவந்தேன்.

வெளியே வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள், மொட்டைவெய்யலில் உச்சிப்பிள்ளையார் படிக்கட்டொன்றில் உட்கார்ந்தாள், நானும் அருகில் உட்கார்ந்ததும். அழுத மேனியாய்,

“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க?”

அவள் கேட்டதும் தான் எனக்கு விஷயமே புரிந்தது. ஆகா இதுதான் மேட்டரா, அதான் பொண்ணு பிலிம் காட்டுதுன்னு நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,

“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு?” நான் அவளைச் சீண்ட.

“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”

மனதிற்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியில் கோபப்பட்டவனாய்,

“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாலுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்குறோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, மொட்டை வெய்யலில் மலைக்கோட்டையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.

“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன?”

ஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,

“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா? இல்லையா?” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,

“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,

“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”

“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”

நான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,

“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா?” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.

“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ?” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.

“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.

அப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.

இத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.

அவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.


நானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,

“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.

ஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.

“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”

“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.

அவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,

“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,

“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”

இப்படியாக இன்னுமொறு காதல் கதை சுகமாக முடிக்கப்பட்டது.

PS: இந்தக் கதையில் கருப்பி, வெள்ளைக்காரி என்று நான் குறிப்பிட்டிருப்பது ஒரு சகஜமான உரையாடலை கொடுக்கவே. யாரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

Related Articles

4 comments:

  1. அன்பு மோகந்தாஸ்,

    காதலர் தின சிறப்பு கதை அழகாய் அமைந்திருக்கிறது.

    காதல் இரு உள்ளங்களை மட்டும் இணைக்கும்;
    கல்யாணம் இரு குடும்பங்களின் உறவை
    இணைக்கும்.

    நகைச்சுவை இழையோட அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

    வாழ்த்துக்களுடன்,
    எல்.ஏ.வாசுதேவன்,
    மலேசியா.

    ReplyDelete
  2. நன்றிங்க வாசுதேவன். உங்களின் விமர்சனத்திற்கு.

    உண்மை தான் வாசுதேவன், கல்யாணம் இரண்டு குடும்பங்களின் உறவை இனிய வழிக்கு அழைத்துசெல்லும் திறமை பெற்றதுதான்.

    ReplyDelete
  3. பாரதி, உண்மையை சொன்னதிற்காக பாராட்டுக்கள். நன்றிகள் பல.

    ReplyDelete
  4. //என் தாயாரை இது போல எழுத வைக்க வேண்டுமென்று நினைப்பேன்.//

    மோகன் தாஸ்,

    நான் நிலாச்சாரல் நடத்துவதில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய நிறைவு இதுதான். என் தாயை மட்டுமல்ல, அவரைப் போல எத்தனையோ பெண்களை எழுதத் தூண்டி பிரசுரித்தது. அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில் அவர்கள் அடையும் பூரிப்பு ஒன்று போதும், சிரமங்களெல்லாம் மறந்தே போகும்.

    ReplyDelete

Popular Posts