In சினிமா சினிமா விமர்சனம்

சர்க்கார் ராஜ் - திரைப்படம்

அதிக நாட்கள் கழித்து ஒரு இந்திப்படம் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியதும், சரி செய்து பார்த்திடுவோம் என்று சர்க்கார் ராஜ்ஜிற்கு முன்பதிவு செய்தேன். நல்லவேளை செய்தேன், இல்லாவிட்டால் 'கதை தெரிந்துவிட்டது', 'முதல் நாள் பார்க்கவில்லை' என்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தப் படத்தை பார்க்காமலேயே இருந்திருப்பேன். அப்படி பார்க்காமல் போன இந்திப் படங்கள் நிறைய இருக்கும்.



இதன் முந்தைய வரிசைப் படமான 'சர்க்கார்' பார்த்திருக்கவில்லை, இன்று மதியம் நண்பர்களிடம் கதை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை, God Father பார்த்திருக்கிறாயில்லையா? அதில் Marlon Brando நடித்த கதாப்பாத்திரம் தான் அமிதாப் பச்சன், Al Pacino நடித்த கதாப்பாத்திரம் தான் அபிஷேக் பச்சன் என்றார்கள். அதில் இருக்கும் நிறைய காட்சிகள் பழைய படத்திலும் இருந்தது என்றும் சொன்னார்கள். God Father பார்த்தவர்கள் யாருக்கும் அதன் காப்பியைப் பார்ப்பதில் அத்தனை விருப்பம் இருக்காது தான், Francis Ford Coppolo வின் இயக்கத்தில் மூன்று படங்களையும் பார்த்தவன்ன் என்ற முறையில் எனக்கும் ஒரு அலட்சியம் இருந்தது சர்க்கார் ராஜ் பற்றி. சரி பார்த்துவிடுவோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது, நாளை(இன்று) அதிகாலை வேறு பயணம் இருக்கிறது என்று பார்க்கத் துணிந்தேன்.

படம் பிரம்மாதமாக இருக்கிறது, ஏன் இதை முதலில் சொல்கிறேன் என்றால் பிற்பாடு சொல்லப்போகும் விஷயங்களை வைத்து படம் நன்றாகயில்லையோ என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா அதனால் தான்.

என்னால் God Father I, II, III ற்கும் இந்தப் படத்திற்கும் சில ஒற்றுமைகள் சொல்லமுடியும் நிச்சயமாய், அபிஷேக் பச்சனின் முதல் மனைவி இறந்து போவது அதுவும் God Fatherல் வெடித்தது போலவே கார் குண்டு. பின்னர் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் தன் சகோதரனைக் கொன்ற விஷயம், God Father III ல், Freddoவைக் கொன்றதற்காக இன்னமும் வருத்தப்படும் Micheal Corleone போலவே பட்டது. அதைப் போல் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் "மே சம்பாலூங்கா பாபா" வும் God Father Iல் மர்லான் ப்ராண்டோவிடம் அல்பாசினோ சொல்லுவதோடு ஒப்பிட முடியும். இந்த மாதிரி படங்களுக்கேயான பிரத்யேகமான டயலாக் எனக்கு God Fatherல் புரிந்த அளவு இந்தியில் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் என்னால் ரிலேட் செய்ய முடியும், சூழலோடு பொருத்தி வசனத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் எனக்கு God Father வசனங்கள் மிகவும் பிடித்தவை, நான் க்ளாசிக் என்று நினைக்கும் சில உதாரணங்கள். "Never hate your enemies. It affects your judgement", "Your enemies always get strong on what you leave behind.", "Never let anyone know what you are thinking." சொல்லப்போனால் இவை தாதா உலகத்திற்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் கூட பொருந்தக் கூடியவை தான். சரி திரும்பவும் படத்திற்கு.

நான் இந்தியில் மதிக்கும் இன்னொரு விஷயம் ஹீரோ தவிர்த்தும் எல்லோருக்கும் முக்கியத்துவம் தருவது. படத்தில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ரவி காலே, சாயாஜி ஷிண்டே என அவரவர்க்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தனிஷா முகர்ஜிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வருத்தம் லேசாக(ஹிஹி) மனதிற்குள் இருந்தாலுமே கூட என்னைக்கேட்டால் God Father IIIல் Coppola, தன் மகளை Mary Corleone நடிக்கவைத்ததில் எத்தனை பேருக்கு கடுப்பு இருந்ததோ அந்த அளவு கடுப்பு எனக்கு இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்ததில் எனக்கு இருந்தது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவுடன் பேசும் பொழுது சுவரு ஒன்றுடன் பேசுவது போல் இருந்தது எனக்கு. எக்ஸ்ப்ரஷன் கிலோ என்ன விலைன்னு கேட்கிறார். அபிஷேக் பச்சனும் இன்னமும் கொஞ்சம் நிறைய செய்திருக்கலாம், அல் பாசினோ அளவிற்கு ஒட்டவில்லை, அல் பாசினோ உடன் ஒப்பிடுகிறேன் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா, படத்தில் Sepia Effect உபயோகித்திருக்கிறார்கள், அளவு கொஞ்சம் முன்ன பின்ன மாறினாலும் படம் முழுவதும் அந்த எஃபெக்ட் இருக்கிறது. ஒளிப்பதிவும், காமெரா வைக்கும் ஆங்கிளும் ரொம்ப அழகாக இருக்கிறது. அதிகம் சில்லவுட்வும் பயன்படுத்தியிருக்கிறார்கள், இதுவும் கூட படத்திற்கு தனி அழகைத் தருகிறது. முகத்திற்கு க்ளோசப் வைக்கும் பொழுது அவர் எத்தனையை ப்ரேமிற்குள் கொண்டு வருகிறார் என்று கவனித்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஒளிப்பதிவு பிரம்மாதம். அமிட் ராயாமாம், பிரம்மாதம். ஆனால் ஒரு முறை ஆட்டோ ஃபோகஸ் போட்டுவிட்டு பின்னர் சூம் இன் செய்யும் பொழுது ஸ்கிரீன் கொஞ்சம் shake ஆனது போல் இருக்கிறது. உதாரணம் க்ளைமாக்ஸ் காட்சி, அதில் அமிதாப்பிற்கு அப்படித்தான் ஆகிறது. இது வேண்டுமென்றே செய்ததா தெரியவில்லை. படத்தில் அபிஷேக்கிற்கு ஆரம்பத்தில் இருந்து இந்த எஃபெக்ட் இருந்தது.

கதை நன்றாக அமைந்திருக்கிறது. உண்மையில் கடைசியில் க்ளைமாக்ஸில் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சியை நான் ஊகித்திருக்கவேயில்லை. என்னைப் புரட்டிப்போட்டது அங்கே தான். அதற்கு நிச்சயம் லஹே ரஹோ முன்னா பாய் தான் காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்த பாதிப்பு இந்தப்படத்தில் நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன். படத்தின் கதை பற்றி பேச விருப்பமில்லை, ஆட்டத்தோடு பாடல்கள் இல்லை, ஐட்டம் நம்பர்கள் இல்லை, தமிழில் இந்த அளவிற்கு நிச்சயம் துணிந்து பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம். ஹாலிவுட் போல் படத்தின் இடையில் காட்சிகளுக்கு பின்னணியாக பாடல்கள் உண்டு, ஹாலிவுட்டிலிருந்து வித்தியாசம் என்னவென்றால் கொஞ்சம் சவுண்ட் கூட இருக்கிறது அஷ்டே.

ராம் கோபால் வர்மா இன்னொரு அருமையான படம் கொடுத்திருக்கிறார். அமிதாப் பச்சன் பற்றி, 'கபி அல்விதா நா கெய்க்னா' படம் பற்றி எழுதியபொழுது எழுதியது தான் நினைவில் வருகிறது, அவருடைய Screen presence அருமையாக இருக்கிறது. மற்றபடிக்கு வேறு என்ன சொல்ல, படத்தில் ஒரு பெரிய தூண் அமிதாப் பச்சன். நிச்சயம் எல்லோரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான். இந்தி தெரியணும் என்பது ஒரு டிஸ்கிதானென்றாலும் கொஞ்சம் தெரிந்தவர்களும் பார்க்கலாம்.

Related Articles

11 comments:

  1. நான் ராம்கோபால் வர்மா படங்களை விரும்பி பார்ப்பேன். அவருடைய சத்யா, கம்பெனி, பூத், சர்கார், நாச் என்று எனக்கு பிடித்த படங்கள் பல. அதில் சர்கார் எனக்கு மிக பிடித்த படம். அதில் வரும் பின்னணி இசை ரொம்ப பிடிக்கும். ராம்கோபால் வர்மா படத்தில் எப்போது ஒரு இசை வரும், அது அட்டகாசமாக இருக்கும். இவருடைய படங்கள் நிழல் வாழ்க்கை தாதாக்கள் படமாகவே இருக்கும், எனக்கும் அவ்வகை படங்கள் ரொம்ப பிடிக்கும். சர்கார் ல் வரும் கோவிந்தா கோவிந்தா பாடல் எனக்கு மிக பிடிக்கும். அதில் கடைசியில் அபிஷேக் அலட்டி கொள்ளாமல் அனைவரையும் போட்டு தள்ளுவது விறுவிறுப்பாக இருக்கும். இதில் பாடல்கள் இல்லாதது ஒரு விசேஷம்.

    இந்த படமும் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன், நீங்களும் கூறி இருக்கிறீர்கள். கண்டிப்பாக திரை அரங்கில் சென்று பார்க்க வேண்டும்.

    ராம்கோபால் வர்மா படங்களில் வில்லனாக வருபவர்கள் நிஜ வில்லனை போலவே தத்ரூபமாக இருப்பார்கள், அது மட்டும் அல்லாது பொது மக்கள் பயன்படுத்தும் இடங்கள் அதிகளவில் வருவது நமக்கு ஒரு அன்னியோன்யத்தை கொடுக்கும்.

    எனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் படத்தை ரசித்து பார்ப்பேன் :-)

    ReplyDelete
  2. //தமிழில் இந்த அளவிற்கு நிச்சயம் துணிந்து பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம். //

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வண்ணக் கனவுகள் போன்ற படங்கள் பார்த்ததுண்டா?

    ReplyDelete
  3. நண்பர் கோகன்தாஸுக்கு,

    சர்க்கார் ராஜ் - திரைப்படம் குறித்த தங்கள் பார்வைக்கு நன்றி. நானும் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். இன்று செல்ல வேண்டும்.

    ‘காட் ஃபாதர்' படங்களுடன் இதை ஒப்பிட்டிருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால், இதன் முந்தைய படமான ‘சர்கார்' படத்தின் ஆரம்பத்தில் ராம்கோபால் வர்மா கபோலாவுக்கு நன்றி தெரிவித்திருப்பார்.

    ராம்கோபால் வர்மாவை ஓயாமல் துரத்துவது இரண்டே புத்தகங்கள்தான். ஒன்று மரியோ புஸோ எழுதிய ‘கார் ஃபாதர்', இன்னொன்று, அயன்ராண்ட் எழுதிய ‘பவுண்டன் ஹெட்'. அவரது அனைத்து படங்களிலும் இந்த இரு நாவல்களின் சாயல்களும் இருக்கும்.

    அவரது பதிவுகளிலேயே இதை சொல்லியிருக்கிறார். பார்க்க ராம்கோபால் வர்மாவின் வலைப்பூ.

    http://rgvarma.spaces.live.com/blog/

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம், நான் இன்னும் பாக்கவில்லை,

    ஒரு சிறிய குறை கண்டேன்:

    "ஆனால் ஒரு முறை ##ஆட்டோ ஃபோகஸ்## போட்டுவிட்டு பின்னர் சூம் இன் செய்யும் பொழுது ஸ்கிரீன் கொஞ்சம் shake ஆனது போல் இருக்கிறது. உதாரணம் க்ளைமாக்ஸ் காட்சி, அதில் அமிதாப்பிற்கு அப்படித்தான் ஆகிறது. இது வேண்டுமென்றே செய்ததா தெரியவில்லை."

    cine camera வில் ஆட்டோ ஃபோகஸ் என்ற இயக்கம் கிடையாது, அது digital camera வில் மட்டும் தான் உள்ளது.

    ReplyDelete
  5. //இந்த மாதிரி படங்களுக்கேயான பிரத்யேகமான டயலாக் எனக்கு God Fatherல் புரிந்த அளவு இந்தியில் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் என்னால் ரிலேட் செய்ய முடியும், சூழலோடு பொருத்தி வசனத்தை புரிந்து கொள்ள முடியும்.
    //

    :)))


    சர்க்கார் பார்த்திருக்கிறேன். நல்ல படம். இதையும் பார்த்துட வேண்டியதுதான் :))

    ReplyDelete
  6. தம்பீ..

    சர்க்காரும் நன்றாகத்தான் இருந்தது..

    நேற்றுதான் படம் இங்கே ரிலீஸ்..

    நீ இநன்றாக இருக்கிறது என்று சொன்ன பின்பும் பார்க்காமல் விடுவேனா..?

    பார்த்து விடுகிறேன்..

    ReplyDelete
  7. கிரி,

    நன்றி, தியேட்டரிலேயே சென்று பாருங்கள். சில காட்சிகளில் முழுவதுமாய் பின்னணி இசையை விடுத்து வெறும் நடக்கும் சப்தம், உறுமும் சப்தம் எல்லாம் கேட்கும் படி செய்திருப்பார். குறிப்பாக ரவி காலேவிடம் நீ விலகிக்கோ என்று சொல்லும் காட்சியில். அவர் உறுமுவது(குமுறுவது) மட்டுமே கேட்கும் அதைப் போலவே கடைசியில் மருத்துவமனையில் அமிதாப் பச்சன் நடந்து வரும் பொழுதும்.

    //எனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் படத்தை ரசித்து பார்ப்பேன் :-)//

    நான் இந்தியை மேன்டேட்டரியாகச் சொல்லலை, கலைக்கு மொழி கிடையாது என்றே நிச்சயம் நம்புகிறேன்.

    ReplyDelete
  8. அனானிமஸ்,

    நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வந்தததின் அர்த்தம் பாடல்கள் இல்லாமல் தமிழில் படம் வந்ததே கிடையாது என்பதல்ல.

    ReplyDelete
  9. பைத்தியக்காரன்,

    நன்றி. முதல் படத்தில் கோப்போலோவிற்கு நன்றி போட்டது எனக்குத் தெரியாது. ஆனால் God Fatherன் நிறைய ஒற்றுமை உண்டு என்றோ God Father சார்ந்தோ என்றோ ஒப்புக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ராம் கோபால் வர்மாவின் வலைபதிவு முகவரிக்கு நன்றி. படித்துப் பார்க்கிறேன், நீங்கள் படம் பார்த்ததும் நாலு வரி எழுதுங்கள் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது பற்றி.

    ReplyDelete
  10. அருணாசலம் ராஜன்,

    நீங்கள் சொல்வது சரிதான், நான் ஒப்பிடத்தான் அந்த வரியை உபயோகித்தேன் அதாவது நான் அப்படித்தான் ஃபீல் செய்தேன்.

    திரைப்பட காமெரா வேலை செய்யும் விதம் தெரியாது. ஆனால் படத்தில் சில காட்சிகளில் கொஞ்சம் ஷேக்கியா, ஷார்ப்னெஸ் இல்லாமல் இருந்தது அதனால் வந்த கேள்வி அது.

    ReplyDelete
  11. சென்ஷி, உண்மைத்தமிழன் - நன்றிகள்.

    நிச்சயம் பாருங்கள் - உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Popular Posts