In மோகனீயம்

மோகனீயம்

மெல்லியதாய் கிஷோர் குமாரின் பாடலொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த பொழுதொன்றில் சட்டென்று மின்சாரம் தடைபெற்று பரவிய மௌனத்தின் வழியே அவளைப் பற்றிய வித்தியாசமான அறிமுகம் கிடைத்தது. "விசு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீங்க!" அறைத் தோழன் அந்தச் சமயத்தை உதவி கேட்க பயன்படுத்தியக் காரணம் பின்னர் எனக்குப் புரிந்ததும் மெல்லிய புன்னகை என் முகத்தில் பரவியதை அவன் உணர்ந்திருக்க முடியாது சொல்லப்போனால் அது தான் அவன் எதிர்பார்த்ததுமாயிருக்கும். சொற்களைக் கோர்ப்பது எத்தனை சிரமமானது என்று அன்று உணர்ந்தேன், அவன் தனக்கும் எங்கள் வீட்டு உரிமையாளரின் மனைவிக்கும் இருந்த தொடர்பை என்னிடம் சொல்லிவிட அமைத்த சொற்கூட்டுகள் முடிவதற்கு முன்னமேயே அவிழ்ந்து கொண்டிருந்தன. ஒரு வழியாய் தன் திருமணத்தைக் காரணம் காட்டி அவள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாய் மிரட்டுவதாகச் சொல்லி உதவி கேட்டு விட்ட பெருமூச்சு அலைகளாய்ப் பரவி என்னைத் தீண்டி அறை முழுவதும் பரவியிருந்தது. அந்த அறையை அவனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய இந்த ஓராண்டு காலத்தில் என் சந்தேகத்தின் எல்லைக் கோடுகளைத் தீண்டாதவாறு இந்த உறவு அமைந்திருப்பதற்கான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்த்தேன், ஆச்சர்யம் என்ற சொல்லின் போதாமை மீது கோபம் வந்தது. என் சுயபச்சாதாபத்தின் எல்லை வரை என்னை விரட்டிக் கொண்டுவந்து நிறுத்தியது அவர்கள் உறவைப் பற்றிய என் அறியாமை, வருடங்களை மீளப்பொருத்தி நாட்களை, வாரங்களை ஓட்டிப் பார்த்ததில் என்னால் கற்பனை வெளியின் நீள அகலத்திற்கு நகர்ந்து கையும் களவுமாய் அவர்களைப் பிடிக்க முடிந்திருந்தது.

உமையாள் நாச்சி பழமையான பெயர் தான், தங்கள் வீட்டில் குடியிருக்கும் ஒரு அன்னியனிடம் காட்டும் பரிவுடன் தொடங்கிய அவள் சுந்தர் விஷயமாய் பேச வந்திருப்பதை உணர்ந்து சட்டென்று காட்டிய நெருக்கம் ஒருநாள் என்னிடம் இதைப்பற்றி பேசவேண்டிவரும் என்று அவள் ஊகித்திருந்ததும் அந்த பொழுதிற்காக தன்னை தயார்ப்படுத்தியிருந்ததும் தெரிந்ததும் என் கூட்டிலிருந்து என்னை இயல்பாய் வெளியில் வரச்செய்திருந்தது. வெகுநேர்த்தியாக அவள் மீது பரவியிருந்த சேலையின் இடைவெளிகளைத் தேடியலைந்த கண்கள் தன்னால் உணரப்பட்டதை நம்பமுடியாமல் தவித்ததற்கு காரணம் அவள் வயதைப் பற்றிய அறிமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும் பெண்ணொருத்தி மனக்கண்ணில் வந்து நம்பவிடாமல் செய்தாலும் உடற்கட்டு துருத்திக் கொண்டேயிருந்தது அவளிடம் இருந்து மாற்றிய பார்வை பட்ட அந்த அறை முழுவதுமே நேர்த்தி என்ற சொல்லுக்குள் அடக்கிவிடக்கூடியதாகயிருந்தது, அவள் கணவரது காவல்துறை உடுப்பில் எடுத்த புகைப்படத்தின் மீது இயல்பாய் நகர்ந்த விழிகள் கூர்மையடைந்து நின்றது தெரிந்ததும் சட்டென்று சிரித்து இயல்பு நிலைக்கு அவள் கொண்டுவர வேண்டியதாயிருந்தது. அத்தனை சுவாரசியமாய் அந்தப் பொழுதை விரிக்காமல் அவள் "ஒன்றும் பிரச்சனையில்லைங்க நான் தற்கொலை எல்லாம் செய்துக்க மாட்டேன், அவனைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லுங்க" சொல்லிவிட்டு திரும்பி என்னைப் பார்த்த அவள் பார்வையைச் சந்தித்து தொடராமல் தவிர்த்து நழுவவிட்டேன்.

மனம் விசித்திரமானது கற்பனையின் சாத்தியக்கூறுகளை கையகப்படுத்தியபடி விரிந்து கொண்டே செல்லும் வலிவு பெற்றது. ஒரே இரவில் எண்ணில் அடங்காத இரவுகளுக்கான படுக்கைகளை விரித்தபடி சென்ற எண்ணங்கள் சிக்கலான சூட்சமங்களால் உருவாக்கப்படக்கூடிய சமன்பாட்டின் ஒரு பக்கத்து விடையாய் உட்கார்ந்து கொண்டதும் நான் என் அறைத்தோழன் விட்டுச்செல்லும் வெளியை நிரப்பும் சந்தர்ப்பங்களை எனக்கு நானே உருவாக்குவதும் பின்னர் நிராகரிப்பதுமாய் முந்தைய இரவின் பொழுதை உறக்கமில்லாமல் தொலைத்துவிட்டு விடியற்காலையில் சிரித்துக் கொண்டிருந்தேன். சிறுகுழந்தையொன்று ஆசையாசையாய் வாங்கி ஆசைதீர ஊதி பெரிதாக்கிய பலூன் சட்டென்று வெடித்து ஏற்படுத்தும் வெறுமையால் அழும் குழந்தையை வேடிக்கைப் பார்க்கும் நபர்கள் சிரிப்பதைப் போல். "பிரச்சனை எதுவும் இல்லை சுந்தர், பேசியிருக்கேன். அவங்களும் உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சொன்னாங்க. தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டாங்களாம்." சொல்லி அவனை வாழ்த்துக்களுடன் அனுப்பிய இரண்டாம் நாள் உமையாள் நாச்சியின் மகள் வந்து சொல்லப்போய் தான் தெரியும் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தி.

ஆண்டாளின் யமள மொஞ்சிகள் தங்களுக்குள்ளே உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டதாக நம்பப்படும் சித்தர் ஒருவர் சொல்லி தானறிந்ததாக துங்கபத்திரா அணைக்கட்டின் மேல் நின்று கொண்டிருந்த சூரியன் அந்திசாயும் பொழுதில் அவன் சொன்ன விஷயங்கள் நம்பக்கூடியதாக இல்லாமல் மனதில் நித்தமும் குடைந்து கொண்டேயிருந்தாலும் ஆண்டாளின் அழகியலை நிராகரித்து புனைவெழுதிய சித்தரை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன் உமையாள் நாச்சியை மருத்துவமனையில் கண்டுவந்த அன்று. பல்வலிக்காரனின் இரவைப் போல் அவஸ்தையுடன் நகர்ந்தது இரவு. அவைகள் ஒரு கோடைக்கால மத்தியான வேளையில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும் என்றே எப்பொழுதும் நினைத்து வந்திருக்கிறேன். பதின்மத்தின் தொடக்கத்தில் அறிமுகமான முலைகள் ஏற்படுத்திய மூர்த்தன்னியம், பின்னர் அடையவே முடியாததாய் இருந்தது. அவைகளும் அவைகளைக் கட்டுக்காப்பதற்காய் அந்தச் சமயத்திலேயே புதிதாய் அறிமுகமாகியிருந்தவற்றின் தோள்பட்டை வழியாய் தென்பட்டு முதுகிற்கு நீளும் நாடாவும், முதுகுப்புற ஹூக்குகளும் மிகவும் ரகசியமானதாக இருந்த பள்ளிப்பருவமும், தாவணி இடுக்குகளிலும் சுடிதார் துருத்தல்களிலும் கொஞ்சம் அறிமுகமாகி பதின்மத்தின் பருவக் காதலின் சாத்தியங்களாய் கைகளுக்கு நடுக்கத்துடன் அறிமுகமாகி பின்னர் கண்களுக்கு வெட்கத்துடன் நீண்டு தொடர்ச்சியாய் கண்ணீருடனும் உறுதிமொழிகளுடனுமே முடிந்தாலும் சுவைத்தலுக்கான அனுமதியை மறுக்காத கல்லூரிக்காலம். எதிர்காலத்தின் பயம் மறுத்தளித்த காதல் கொண்டுவந்து தள்ளிய நீலப்படங்களும், பத்திரிக்கைகளும் தொடர்ச்சியாய்க் கொண்டு வந்து தள்ளிய அவைகள் ஏற்படுத்தியிருந்த ஒரு வித சலிப்பையும், புறக்கணித்தல்களையும் பிடித்துக் கொண்டு கண்களைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மாய கட்டுக்களை பொசுக்கித் தள்ளும் வலிமையான அசைவுகளுடன் அவள் மருத்துவமனை படுக்கை புரள்தல்கள் இருந்தன.

தொடர்பில்லாதது பறக்கக்கூடியது

சிறகுகளுடன் கூடிய பெண்ணை மட்டுமே மணம் செய்துகொள்வேன் என்ற எண்ணம் உருவான நாள் நினைவில் இல்லை என்றாலும் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கிய பிறகுதான் அந்த எண்ணம் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது என்பது தெரியும். தேவதைக் கதையொன்றை பின் தொடர்ந்து சென்று, அரக்கு மாளிகையின் பதினேழாம் மாடியில் சிறகுகளை அறுத்தெரிந்த ரத்தம், சொட்ட சொட்ட எனக்காகக் காத்திருந்த தேவதையை அரக்கனை கொன்று மாளிகையை எரித்து காப்பாற்றிக் கொண்டு வந்ததை என் பாட்டியிடம் மட்டும் சொல்லியிருந்தேன். என்னைப் பாராட்டியதுடன் விடாமல் தேவதையின் சிறகுகள் மீண்டும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்க சொன்ன நாள் முதல் என் பிரார்த்தனையில் தேவதையின் சிறகுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் வளரத்தொடங்கியதும், வளர்ந்துமுடித்ததும் என்னிடம் சொல்லாமல் தேவதை பறந்து போனதும் எனக்கான சிறகுகளுக்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கியிருந்தேன். தேவதைக்கான வேண்டுதலைப் போலில்லாமல் எனக்கானது என்பதால் உண்டான தாமதம் என்னை மனப்பிறழ்வில் தள்ளியதாக என் சுற்றத்தில் பேசிக் கொண்டனர், ஆனால் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கியதும் அவர்கள் மனப்பிறழ்வு நோய் அதிகமாகி என் முதுகையே வந்து பார்த்த பேசிய வண்ணம் இருந்தனர்.

சிறகுகள் கொண்டுவந்த தனிமை என்னை காட்டிற்குள் செலுத்தியது, காடு என்னை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்த பொழுதுகளில் நான் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். மேலெழும்புவதையும் அலைவதையும் இறங்கி அமர்வதையும் மற்ற பறவைகளுடன் உறையாடுவதையும் அந்த உரையாடல் மொழியை அறிந்து கொள்வதிலுமே என் இளமைப் பருவத்தில் பாதி கழிந்தது. நான் பறவைகளின் மொழியினை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்ட பொழுது மனிதர்களின் மொழி என்னிடம் இருந்து விலகிவிட்டதாக உணர்ந்தேன். வளர்ந்துவிட்ட அடர்ந்த சிறகுகளுடன் என்னைப் பார்த்த காட்டில் புலி பார்க்கவந்த பயணி ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது என் மொழி இயலாமை அவனை பயமுறுத்தியிருக்கவேண்டும், முகம் வெளிறியவனாய் ஓடத்தொடங்கிய அவன் இன்னும் சில மனிதர்களை அழைத்து வந்து என்னைத் துரத்திய பொழுது காடு என்னை அதனுடன் அணைத்துக் கொண்டது. அன்றிலிருந்து காட்டு மனிதனாய் நான் அலையத் தொடங்கிய நான்காம் வருடம் எனக்கு பறக்கும் சாகசம் புரிபடத்தொடங்கியது இளமையில் பாதியை இழந்து கற்ற பறவையியல் நிகழ்வுகள் அதில் பெரும் உதவி செய்தன.

தொடர்புடையது

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.

ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கறுப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In ஆண்டாள் கவிதை காதல் திருமணம்

ஆண்டாள்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

=====

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சிறுகதை

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி

“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...”

வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்தத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். பாளயக்கார நாயுடுங்கிற வகையறா கெஜட்டில் இல்லை, என்று சொந்தக்கார மாமா ஒருத்தருக்கு பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமாதானம் செய்ய வந்தவர்.

மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறையில் இருந்து இரண்டு மூன்று மணிநேர பயணத்தில் கண்ணங்குடி என்று சொல்லப்பட்ட எங்கள் கிராமத்திற்கு வந்துவிடலாம். அந்த கிராமத்தில் மொத்தம் பெரிய பண்ணை, சின்ன பண்ணைன்னு இரண்டு பங்காளிக் குடும்பங்கள், பிறகு அவர்களது சொந்தக்காரர்கள் அவ்வளவுதான். அந்தக் காலத்து மச்சுவீடு எங்களுடையது, இரண்டு பக்கம் திண்ணை வைச்சு, வாசலைத் தாண்டினா நாலுபக்கம் தாழ்வாரம் அதற்கடுத்து இடது பக்கம் கூடம் வலது பக்கம் பத்து ஆளு புலங்குகிற அளவிற்கு பெரிய சமையற்கட்டென்று நல்ல பெரிய வீடு பெரிய பண்ணையென்று சொல்லப்பட்ட எங்கவீடு.

முன்பக்கம் திண்ணையிலும் தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட மணிப்புறாக்கள் நிறைந்திருக்கும். பக், பக், பக் என்று ஒரு பக்க மீசையை நீவி விட்டுக்கொண்டு இன்னொரு கையால் அவர் அந்தப் புறாக்களுக்கு பொரி தூவும் அழகே அழகு. வீட்டு பாதுகாவலர்களாக ராஜபாளயத்து வஸ்தாதுகள் இரண்டு தாத்தாவின் முறுக்கிவிட்ட மீசையைப்போல வேறெதற்கும் உபயோகமில்லாமல் வெறும் பெருமைக்காக. அவ்வாவின் செல்லங்களாக மணப்பாறை வகையறாக்கள், ஆடு, கோழி இன்னபிற வீட்டின் பின்புறத்தில், பெரிய காடாய் மூங்கில் மரங்களும், பனை மரங்களும், புளிய மரங்களும் ஒன்றுடன் ஒன்று எங்கள் குடும்பத்தைப் பற்றிய கிசுகிசுக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் எப்பொழுதும் சப்தமாக இருக்கும், கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஒரு கிலோமீட்டருக்கப்பால் கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் கூட கேட்கும்.

இவர்களெல்லாம் ஆந்திரத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து அங்கிருந்த கரிசல் நிலங்களை விளைநிலங்களாக மாற்றி தங்கள் வாழ்க்கையை அங்கிருந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் உருவாக்கிக் கொண்டவர்கள், கொஞ்சமேக் கொஞ்சமாக இன்னும் தெலுங்கு வாடை அடிக்கும் அந்தக் குடும்பங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியிருந்தக் காலம் உண்டு. பின்னர் வானம் பார்த்த பூமி பொய்த்துப்போய், சவூத் ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் பிழைக்கப்போன மக்கள் பெரும் செல்வத்துடன் வந்து இங்கிருந்த மற்ற விவசாய மக்களையும் கெடுத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த அவ்வா,

“டேய் குஞ்சான் அந்தக் காலத்தில தெலுங்கானாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தப்ப உங்க தாத்தாமாருங்கல்லாம் பெரிய பணக்காரங்க அவங்க கொண்டு வரும் சொத்தைப் பறிக்கிறதுக்காகக் கொள்ளைக்காரங்க வழிமறிப்பாங்களாம். அவங்கக்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்காக வழியில் பணம் நகையெல்லாம் மண்ணில் புதைச்சு வைத்து அடையாளத்திற்கு மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு வந்திருவாங்களாம். அந்த பணமெல்லாம் இருந்தா இந்த மெட்ராஸ் மெட்ராஸ்னு சொல்றாங்களே அதையே விலைக்கு வாங்கலாம் தெரியுமா?”

சொன்ன அன்றிரவு நான் மரங்களின் கீழிருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து மெட்ராஸை விலைக்கு வாங்குவதாக கனவுகண்டு கொண்டிருந்தேன். பாட்டிக்கு தன் மாமனாரோட பேரைச் சொல்வதில் என் குஷியிருக்குமோத் தெரியாது, எப்பப்பாரு குஞ்சான், குஞ்சாநாக்யருன்னு தான் கூப்பிடும். நான் அது என்னோட பேரில்லைன்னு சொன்னாலும் கேட்பதில்லைன்னு வைத்திருந்தது, தாத்தா இருந்த காலத்தில் அவ்வா தாத்தாவிடம் பேசி நான் கேட்டது கிடையாது.

“டேய் பொடியா நான் சொன்னேன்னு அவ்வாக்கிட்டப் போய் காபித்தண்ணி வாங்கியாடா.” அந்த மீசைக் கிழம் சொன்னது என் காதில் விழுந்திருக்குமோ என்னமோத் தெரியாது அவ்வாவின் காதில் விழுந்திருக்கும். ஐந்து நிமிடத்தில் குவளையில் காபித்தண்ணி என் கரங்களினால் தாத்தாவிற்கு அனுப்பப்படும். தாத்தா சாவுறவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு அவ்வா, தாத்தா செத்ததுக்கப்புறம் நாட்டாமையை எங்கம்மா பேருக்கும் மாத்தி எழுதிவைச்சிட்டு நான் வாழ்ந்தது அந்த மீசைக்காரனகுக்காகத்தான் உங்களுக்காகயில்லைன்னு சொல்றமாதிரி கொஞ்ச காலத்தில் அதுவும் செத்துப் போச்சு, அன்னைலேரந்து அம்மாவோட அதிகாரம் தான் பண்ணையில் கொடிகட்டி பறந்தது தெய்வநாயகி என்ற ஆட்டக்காரியை நைனா வீட்டிற்கு கூட்டி வந்த நாள்வரை.

அப்ப எனக்கு ஒன்பது வயசிருக்கும். நைனா அரசியல்ல சேர்ந்த நேரம் அது எப்பப்பார்த்தாலும் வீட்டில் தங்காம புல்லட்டில் கட்சிக் கொடிகட்டிக்கிட்டு, இளையாங்குடி, முப்பேத்தங்குடி, செல்லலூர்னு பக்கத்துக் கிராமத்து ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது. அட நம்ப பண்ணையே சொல்லுதுன்னு சொல்லி ஊர் ஊரா அந்தக் கட்சியில சேர்ந்துக்கிட்டிருந்தாங்க, நைனாவும் இந்த தடவை கொஞ்சம் முயற்சி பண்ணினா சீட்டு வாங்கிரலாம்னு நினைத்தார். நைனாவுக்கு ஐம்பது வயசிருக்கும்னு நினைக்கிறேன், அம்மாவிற்கு நாற்பத்தைந்து வயசான காலம். மூத்தவன் மாயூரம் ஏவிசியில் படிக்கப் போயிருந்தான், இரண்டாவது நானு, மூணாவது என் தங்கச்சி பேபி. பேரென்னமோ அகிலாண்டேஸ்வரிதான் ஆனால் எல்லாரும் பேபின்னு கூப்பிடுவதே பழக்கமாயிடுச்சு.

அந்த சின்ன வயதில் புரியவில்லை ஏன் நைனா வீட்டின் எதிர்ப்பக்கம் இருந்த தானியக்கிடங்கை சுத்தப்படுத்தி யாரோ ஒருவரை தங்க வைக்கிறார் என்று, ஐம்பதுகளிலும் அவர் தன் பண்ணைத்தனத்தை நிரூபிக்கும் ஆசையிலும், நாற்பத்தைந்துகளில் அம்மாவினால் அவர் இழுப்பிற்கு ஆடமுடியாததும் கூட காரணமாயிருந்திருக்கலாம் என்று இன்று நான் நினைக்கிறேன். அம்மாவின் நாட்டாமைத்தனத்தில் தெய்வநாயகியின் தலையீடு சுத்தமாக இல்லாத பொழுதும் தன் கட்டிலை பங்கு போட வந்துவிட்டதாலேயே அம்மாவின் கோபம் தலைக்கேறியிருந்த நாட்கள் அவை. எந்நேரமும் வீட்டில் சண்டை தான், எங்கள் வீட்டில் படுக்கையில்லாவிட்டாலும் சாப்பாடு இந்த வீட்டில் தான் என்பதால் நைனா சாப்பிட வரும் நேரத்தில் அம்மா தன் அத்தனை சாமர்த்தியத்தையும் காட்டி அப்பாவை கோபப்படவைப்பார். பெண்டாட்டியின் மீது கைநீட்டும் பழக்கம் இல்லாததால் பல இரவுகள் தட்டு விசிறியடிக்கப்படும் அதிகபட்சமாக.

இந்தக் காலகட்டத்தில் அப்பாவும் அண்ணாவும் ஏன் சந்தித்துக் கொள்ளவேயில்லை என்பது சிறுவயதில் நான் எப்போதும் யோசித்துக் கொண்டேயிருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. என்னைப் போலில்லாமல் அண்ணன் கல்லலூரியில் படித்துவந்ததால் அவன் நேராய் சில கேள்விகளைக் கேட்டுவிட முடியும் என்பதால் நைனாவும், நைனாக்களை கேள்வி கேட்கும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லாததால் அண்ணாவும் ஒருவரிடம் ஒருவர் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எனக்குத்தான் கொண்டாட்டம், இரண்டு வீடுகளில் சாப்பாடு, கேட்ட பொழுதெல்லாம் தீனி என சந்தோஷமாயிருந்தேன் அதற்கு ஒரு காரணமிருக்கிறது.

நான், அண்ணா பேபி ஓடிவிளையாடிய வீட்டில் தான் அப்பா அந்த நாட்டியக்காரியை குடிவைத்திருந்தார் என்றாலும் என்னைத்தவிர யாரும் அந்த வீட்டிற்கு வருவது போவது கிடையாது. அண்ணா வயசுதான் இருக்கும் அந்த தெய்வநாயகிக்கு, அதனால் அவன் தலைவைத்துப் பார்க்கவில்லை, தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவிற்கு எது சரியோ அதுதான் அவளுக்கு சரி அப்படித்தான் சரியில்லாததும். ஆனால் நானோ இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் விஷயத்தை என்னிடம் சொல்லவும் முடியாமல் அதே சமயத்தில் என்னை ஒரேயடியாக இழக்கவும் விரும்பமில்லாமல் இருந்ததால் அந்தக் காலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான். அதன் காரணம் பின்னால் தெரிந்தது, தெய்வநாயகி வந்த ஒன்றிரண்டு வருடங்கள் இருந்த சண்டை ஒரேயடியாக குறைந்திருந்த ஒரு வாரம் மட்டும் அம்மா தெய்வாவிற்கு சமைத்து என்மூலம் கொடுத்தனுப்பினாள். பின்னர் நேரடியான சண்டை தெய்வாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் நடந்ததேயில்லை.

பிற்காலங்களில் நான் தெரிந்து கொண்டேன், அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி தெய்வநாயகியின் கர்பப்பையை நீக்கிவிட்டதாகவும் அதனால் இனிமேல் அவளுக்கு தன் பண்ணையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது என்ற விஷயம் உண்மையானதும். அம்மா கொஞ்சம் அடங்கிவிட்டாள் இரவு நேரங்களில் தெய்வாவிற்கு செய்த துரோகத்தினால் குலதெய்வம் அகிலாண்டேஸ்வரி சூலாயுதத்துடன் துரத்துவதாக ஒன்றிரண்டு பூசாரிகளைப் பார்த்து பரிகாரம் செய்து கொண்டதுடன். அந்தக் காலம் இனிமையானது, நான் அந்த வீட்டிற்குப் போவதை அம்மா தடுக்காதக் காலம் இன்னும் சொல்லப்போனால், திருவிழா, தேர் போன்ற காலங்களில் வீட்டில் கரியஞ்சோறு சமைத்தால் தெய்வாவிற்கு நான் தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் தூதன் நான்தான், பெரும்பாலும் தெய்வாவின் வீட்டில்தான் இருப்பேன். அம்மாவைப் போல எப்பொழுது எண்ணை வழியும் முகமாக இல்லாமல் தெய்வா பவுடர் பூசி சிங்கப்பூர் சென்ட் அடித்து, அந்தச் சமயத்தில் நான் இருந்தாள் என்மீதும் அடித்துவிடுவாள், வாசனயாக இருப்பாள். பெரிய நடராஜர் போட்டோ இருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் எனக்கு அந்த கிராமத்தை விட்டு ஏதோ வேறுறொரு உலகிற்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அம்மாவைப் போலில்லாமல் தெய்வா அவளுடைய பாடல்களுடன் தான் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் மிகவும் சன்னமாகத்தான் பாடுவாள், ஒடிசலான தேகம், கண்ணுக்கு மையெழுதி, ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பவளாயிருந்தாள்.

வீட்டிற்குப் போனால் பிடித்திழுத்து மடியில் உட்கார வைத்து எப்பொழுதும் தயாராகவேயிருக்கும் ஏதாவதொறு பலகாரத்தை ஆசையுடன் ஊட்டிவிடுவாள். எங்கள் வீட்டில் நாங்கள் அம்மாவையோ இல்லை அவ்வாவையோக் கூட தொட்டுப் பேசி பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் கூச்சமாகயிருக்கும்.

கொஞ்சக் காலத்தில் அந்தக் கூச்சசுபாவம் என்னிலிருந்து அடியோடு போயிருந்தது, நைனாவைப் போலவே நானும் அவளை தெய்வா தெய்வா என்றுதான் கூப்பிடுவேன், அவளுக்கு நான் எப்பொழுதும் ராசய்யாதான், பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் வாங்க ராசய்யா என்று சொல்லி பலகாரம் கொடுத்து, கன்னத்தில் முத்தா வாங்கிக்கொள்வாள். பிற்காலங்களில் எனக்குப் புரிந்தது, அவள் தனக்கே தனக்காய் ஒரு பிள்ளை இனிமேல் பிறக்காது என்பதால் என்னை அவள் பிள்ளையாய் வரித்துக்கொண்டு நான் அம்மாவிடம் மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தன் சாமர்த்தியங்களை பயன்படுத்தி வந்தது. ஏனென்றால் அவளுக்கு இருந்தது மிகச்சில ஆண்டுகாலமே, எனக்கு வைப்பாட்டி, நாட்டியக்காரி, பெண்டாட்டி போன்ற வார்த்தைகளுக்கான வித்தியாசம் தெரிய வருவதற்குள் தன் மீதான ஒரு பாசத்தை கொண்டு வரும் முயற்சிகள்.

அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் வலிமை அம்மாவிற்கு இல்லை, ஏனென்றால் அவள் தெய்வாவிற்கு ஒரு தவறைச் செய்திருந்தாள் அதனால் அவளும் என்னை ஓரளவிற்கு தெய்வாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் ஊர்க்காரர்கள் அப்படியில்லையில்லையா.

“என்னடா அய்யாப்பிள்ளை எப்பப்பாரு உங்க சித்தி வீட்டிலேயேத்தான் இருக்கிறியாமே. ம்ஹும்.”

தனியாக அழைத்துக் காதில் “என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா” என்பார்கள்.

“ஆனாலும் உங்கம்மா பாவம்டா இப்பல்லாம் ராத்திரி உங்கப்பா வீடு தங்கறதேயில்லையாம்ல.”

“ஒருநாள் ராத்திரி உங்கப்பா உங்க சித்திக்கு முடியாத நாளில் உங்க வீட்டுக் கதவைத்தட்ட கதவைத் திறக்கவேயில்லையாம்ல.”

இதுபோல் அவரவர்களின் எங்கள் வீட்டின் மீதான கற்பனையை என்மீது திணித்தவாறு இருந்தனர். இதிலிருந்தெல்லாம் நான் தப்பியதற்கு ஒரே காரணம் தெய்வாதான். இரண்டும் கெட்டான் வயதின் இறுதி நாட்கள் அவை, தன் நாட்டியத்திறமை காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை மாலை நேரக் கதைகளாக அவள் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள், அவைகள் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி என் இரண்டும் கெட்டான் வயது சந்தேகங்களைத் தீர்ப்பதாகவேயிருக்கும். அவள் என்னுடன் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயாராயிருந்தாள் கேள்வி எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதற்கான பதில் அவளிடம் இருந்தது. பெரும்பாலும் அவள் கோபப்பட்டு நான் பார்த்ததேகிடையாது, சிரித்துக்கொண்டே எல்லாக் கேள்விக்களுக்குமான பதிலை எனக்குப் புரியும் வகையில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“தெய்வா உன்னைய பின்னின்னு வெளியில் சொன்னா ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க...” போன்ற என் கேள்விகளுக்கான பதில் கூட அவளிடம் இருந்தது, எங்கள் பக்கத்தில் சித்தி என்று அழைக்கும் வழமைகிடையாது. அம்மாவின் தங்கை உறவில் வருபவர்களை பின்னி என்றுதான் இன்றும் அழைப்போம்.

நைனா என்ன தான் பண்ணையாராக இருந்தாலும், அரசியல் செய்யத் தெரியாததால் அரசியலில் நன்றாக அடிவாங்கினார். ஆனால் பரம்பரைச் சொத்தை அழித்துவிடும் அளவிற்கு அது போகாமல் இருந்ததற்கு தெய்வா ஒரு காரணம். பொறுமையாகப் பேசி அவருக்கு இந்த அரசியல் நமக்குத் தேவையில்லைன்னு சொல்லத் தெரிஞ்சிருந்தது. நைனாவும் அரசியலை விடுத்து மீண்டும் தான் நன்கறிந்த விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கினார். இதனால் தங்களுக்கு செலவு செய்யும் வழமையை நைனா நிறுத்திவிட்டதால் கோபமான அம்மாவின் அண்ணன் முறை உறவினர்கள் இதற்கெல்லாம் காரணம் தெய்வாதான் என இல்லாததும் பொல்லாததையும் அம்மாவிடம் வத்தி வைத்தனர்.

அப்பொழுது மீண்டும் தொடங்கியது என் உரிமையைப் பற்றிய போராட்டம் அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் இடையில், தெய்வா வீட்டில் அப்பாவிற்கு கூட அம்மாவைப் பற்றி தவறாகப் பேசும் உரிமை கிடையாது. அதும் என் எதிரில் நைனா ஏதாவது சொல்லிவிட கண்களாலேயே நான் இருப்பதையும் தொடர்ந்து பேசாதீர்கள் என்று தடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அம்மாவிற்கும் தான் தெய்வாவிற்கு செய்த தீங்கு நினைவில் வந்தாலும் தன் சொத்தில் தன் நாட்டாமையில் தெய்வாவின் பங்கு வந்தவிடவேக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வைப்பாட்டி கூட சொத்தில் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போடமுடியுமென்றும் அல்லது அவள் இறந்தபிறகு தெய்வாவின் உறவினர்கள் அவளுக்கு நானோ இல்லை நைனாவோ கொள்ளி போட்ட சாட்சியத்தை வைத்து சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமென்று புரளியைக் கிளப்பிவிட்டனர். அம்மாவிற்கோ எங்கள் குடும்பச்சொத்து யாருக்கும் போய்ச் சேருவதில் விருப்பம் கிடையாது. அதனால் ஒரு வார்த்தை தெய்வாவிடம் நேரில் கேட்டாள், அது நானோ இல்லை எனது நைனாவோ அவளுக்கு கொள்ளி போடமாட்டார்கள் என்பதைப் பற்றிய ஒன்று.

முதன் முதலில் தெய்வா கோபப்பட்டு பேசி நான் அன்றுதான் பார்த்தேன், கேட்ட அம்மாவை நோக்கி முதலில் கோபமாக ஆரம்பித்தவள் தன் இயலாமையால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தேம்பத் தொடங்கி பின்னர் அழுகையாக அம்மாவின் கால்களைப் பிடித்து உங்கள் சொத்தே வேண்டாம் நான் இவருக்கு வைப்பாட்டியா வந்து என்னத்தக் கண்டேன் கடைசியா கொள்ளி போடறதக்கூட தடுத்துறாதீங்கன்னு சொல்லி அழ. அம்மா ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டாள். ஆனால் அன்றிரவு நைனா தண்ணியடித்துவிட்டு என்னை அழைத்துப் பேசினார். அதுதான் முதன் முறை அம்மா இல்லாத ஒருவரிடம் நைனா தெய்வாவைப் பற்றி பேசியது.

“தம்பி நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியாது. தெய்வா ரொம்ப நல்லவ, அது உனக்குத் தெரியும் உங்கம்மா கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்னுக்கெடக்க ஒன்னைச் சொல்லி அவளுக்கு கொள்ளி போடுவதைக் கூட இல்லாமல் செய்துவிடுவாள் எனக்காக நீ அதைச் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்ன பொழுது தெய்வாவும் நைனாவும் இந்த விஷயத்தில் அம்மாவை தவறாக புரிந்து கொண்டதாகவே நினைத்தேன். ஆனால்,

நைனா ஒருநாள் அறுபது வயதில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட, அடுத்துவந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தெய்வாவும் கர்பப்பை எடுத்துவிட்டதால் வந்த ஏதோ ஒரு வியாதியில் இறந்துவிட்ட அன்று அம்மா என்னிடம் ‘நீ அவளுக்கு கொள்ளி போட்டா எனக்கு போடமுடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லிவிட, நைனா அத்தனை வருடங்கள் அம்மாவுடன் குப்பைக் கொட்டியதில் அவளை மிகச்சரியாக புரிந்து கொண்டதை நினைத்து நான் சிரிக்க, பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல அவள் என்னைப் பார்த்தாலும் நைனாவிற்காகவும் தெய்வாவிற்காகவும் நான் அவளுக்கு கொள்ளி போட்டு அம்மாவிற்கு கொள்ளி போடும் உரிமையை விட்டுக்கொடுத்தேன்.

ஆனால் கடைசி வரை தெய்வாவை அம்மா என்று அழைத்ததில்லை, வெளியில் சித்தி, பின்னி என்று அழைத்திருந்தாலும் அவள் முன்னிலையில் எப்பொழுதும் தெய்வா என்றே அழைத்து வந்ததை நினைக்கும் பொழுது அவள் உடலுக்கு எரியூட்டும் கணத்தில் மூச்சு முட்டியது. ஆனால் அவளுக்கு அது விருப்பமானதாகத்தான் இருந்ததாகப்பட்டது. கடைசி காலங்களில் அவளுடைய ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறேன். தயங்காமல் சொல்லியிருக்கிறாள், நோய்வந்து கொள்ளிபோட ஆளில்லாம அநாதைப் பிணமாப் போயிருவேனோன்னு கவலைப்பட்டதாய், கவலைப்படாமல் என்னிடம் சொல்வாள். அம்மாவைப் பற்றி அவளிடம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. தெய்வா ராசா உங்கப்பா உங்கம்மாவை உபயோகிக்கிற வரைக்கும் உபயோகிச்சிட்டு, அவரோட அன்பும் ஆதரவும் உங்கம்மாவிற்கு தேவையான நாட்களில் கழட்டிவிட்டுட்டார். ம்ம்ம் அதெல்லாம் ஆம்பளைப் புள்ளைங்களுக்குப் புரியாது, சொல்லியது நினைவில் வந்தது. ஆனாலும் கடைசிவரை அம்மா தன் கருத்தில் மாறாமலேயிருந்ததால் அண்ணா சுடுகாட்டிற்குக்கூட வரவில்லை. அம்மா வீட்டில் அழுததாக பேபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். தெய்வா இல்லாத அந்த வீட்டை, அந்த கிராமத்தை ரசிக்கமுடியாமல் நான் கால்போன போக்கில் நடந்து இனிமேல் அந்தக் கிராமத்திற்கே வருவதில்லை என்ற எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன்.

PS: படமும் நான் வரைந்ததுதான்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

பிக் பாஸின் பாப்பார புத்தி

காயத்ரியின் புத்தியா, கமலஹாசனின் புத்தியா இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸின் புத்தியா என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

காயத்ரிதான் சேரிபுத்தி என்று சொன்னது, ஓவியாவைச் சொன்னதாக ப்ரோமோ மட்டும் காட்டியவர்கள், நிகழ்ச்சியின் பொழுது அந்த சம்பவத்தைக் காட்டவில்லை. ப்ரோமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். சொல்ல முடியாது, நிறைய நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ப்ரோமோவில் காட்டியதில் பிக்பாஸின் புத்தி தெரிகிறது, அதற்காக தார்மீக மன்னிப்பு கேட்காத கமலஹாசனிடம் புத்தி தெரிகிறது. காயத்ரியைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை பாப்பார புத்தியின் மூட்டை இவதான். ஜூலியை இவள் ட்ரீட் செய்யும் விதத்தில் இவளின் சினிமா சீனியர் என்கிற அகம்பாவம் மட்டுமில்லாமல் ஜாதித்திமிரு தொடர்ந்து தெரிகிறது. வாழ்க்கை முழுதும் இப்படிப்பட்ட புத்தியுடனே இருந்து இறந்தும் போய்விடும் நபர்கள் போலத்தான் காயத்ரியும். ஒரே வித்தியாசம் இவள் பிக்பாஸில் பங்குபெறுவது. உங்களில் எத்தனை பேர் இப்படிப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் அறிவீர்கள்.

நான் இன்னமும் காயத்ரியை சாக்லேட் மில்க்கிற்காக பொய் சொன்னாள் என்ற கேட்டகிரியில் வைக்கலை, அவள் வெளியில் வந்து எனக்கு கால்சியம் குறைவாக இருக்கிறது என்று சொன்ன பொழுது அதிர்ச்சியடைந்தேன் தான். ஆனால் கமல் சொன்னதும் செய்து காட்டியதும் உண்மையாகத்தான் இருப்பதாய் நினைக்கிறேன். அவள் வெளியில் வந்து சினேகனிடம் சொன்ன பொழுதும் அவள் பொய் சொல்கிறாள் என்று நினைக்கவில்லை, அவள் உடல்மொழி அதை வழிமொழியவில்லை. பாப்பான்னு டிவிப்பொட்டி நிகழ்ச்சியில் சொல்லிட்டாங்கன்னு பிஜேபி கர்ராபுர்ரான்னு கத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் இவ சேரி புத்தின்னு சொன்னதுக்கான எதிர்வினை சரியா இருந்ததாத்தான் ஊகிக்கிறேன். ஆனால் விஜய்டிவியோ கமலஹாசனோ இதைச் சரியாகக் கையாளவில்லை.

ப்ரோமோவில் காட்டிவிட்டு ஏன் நிகழ்ச்சியில் காட்டவில்லை என்பதில் தான் பதில் இருக்கிறது. அவர்கள் அதைச் சொல்லப்போவதில்லை, நெவர்த்லெஸ் விஜய் டிவி ஒழுக்கமானவனுங்க இல்லை என்கிற எண்ணம் இப்பொழுது ஏற்பட்ட ஒன்றில்லை. அதனால் தான் இதை காயத்ரியை விடவும், கமலஹாசனைவிடவும் விஜய் டிவியைக் குற்றம் சொல்லவேண்டியிருக்கிறது. பிக்பாஸில் ஆயிரம் விஷயங்களை மறைக்கிறார்கள். கஞ்சா கருப்பு, பரணி பற்றி சொல்லிய விஷயம் எதையும் காட்டவில்லை. இது போல் நிறைய சொல்லலாம். இந்த சேரி புத்திக் கதையையும் ஏறக்கட்டியிருக்கலாம். தெரிந்தே தான் அவர்கள் அதை ப்ரோமோவில் ஒளிபரப்பியிருக்க வேண்டும், கன்டென்ட் கட் செய்யும் ஆள் இத்தனை ஏமாளி அவருக்கு சேரி புத்தியின் பின் இருக்கும் அரசியல் தெரியாது என்பதில்லை. நன்றாகத் தெரியும், இதன் காரணமாய் இணையம் அட் லீஸ்ட் பற்றி எரியும் என்று தெரியும். ஆனாலும் செய்ததன் பின்னால் இருக்கும் புத்தி, அரசியல் சார்ந்தது, பாப்பாரத்தனமானது.

காயத்ரியின் முகமுடி இதில் கிளிந்தது என்பதில் எந்த சந்தோஷமும் இல்லை. அவள் முகம் ஏற்கனவே கிழிந்து தான் தொங்கிக் கொண்டிருக்கிறது, இதில் சந்தோஷப்படும் நபர் காயத்ரியின் டிவர்ஸ்ட் கணவனாகயிருக்க முடியும். நமக்கில்லை ஆனால் இந்த நிகழ்ச்சி அவள் தற்பொழுது பயப்படுவதைப் போல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடும். ஆனால் ஆணாதிக்க தமிழ் சினிமாவில் காயத்ரி ரகுராமிற்கான எதிர்காலமென்று என்ன இருக்கிறது. பெரிதாய். சின்னத்திரையில் நடனத்தை மதிப்பிட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கும் அவள் விஜய்டிவிக்குத்தான் வந்தாக வேண்டும். சன்டிவிக்கு என்று ஒரு மரியாதை இன்னமும் இருப்பதாய் நினைக்கிறேன், இந்த பாப்பாரபுத்தி காயத்ரியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். பாப்பாரபுத்தி கொண்டு நிறைய பேர் இன்னமும் சன்டிவியில் இருக்கக்கூடும் ஆனால் இப்படி பிக்பாஸில் முகம் கிழிந்து நிற்கும் காயத்ரியை ஏற்கும் நிலைக்கு வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இன்று சோசியல் மீடியா இருக்கும் உச்சத்தில், காயத்ரி இன்னும் சிறிதுநாள் தலைமறைவாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

சுஜாதா மேல் எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் என்று என்னைப் படித்துவரும் ஆட்களுக்குத் தெரியும், ஆனால் இன்று சுஜாதா என்று சொன்னால் மனதில் தோன்றும் படிமம், டாம்ப்ராஸுக்காக குரல் கொடுத்த பாப்பார சுஜாதா தான். அவர் எப்பொழுது அப்படிச் சொல்லவில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் நான் அவரைப் படிக்க ஆரம்பித்தப் பிறகு அந்த பொதுவில் பாப்பார புத்தியை அவர் காட்டியதில்லை, எத்தனையோ பேர் என்னிடம் நான் சுஜாதாவைப் பற்றி பாராட்டிப் பேசும் பொழுது சொல்லியிருக்கிறார்கள். பாப்பாரபுத்தி கொண்டவர் என்று, ஆனால் டாம்ப்ராஸ் தான் அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றியது. ஜெமோ, பாலகுமாரன், சுஜாதா என்று எல்லோரிடமும் அவர்களைப் படிக்கும் காலத்தில் ஒரு மயக்கநிலை, மாயக்கயிறைக் கழற்றிவிடும் ஒன்று எப்பொழுதும் கிடைத்தது. அது பதின்மத்தின் பிரச்சனை இருபதுகளின் பிரச்சனை இப்பொழுது அந்த மயக்கநிலை பெரும்பாலும் உருவாவதில்லை. எப்படியும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்று தோன்றத்தொடங்கி விடுகிறது. தராசுத்தட்டு ஒன்றுடன் தான் எவரையும் அணுக முடிகிறது. காலாம் விந்தையானது. கொடூரமானது. எவரையும் நம்பாத மனம் அல்ல பிரச்சனை ஓவியா போன்று உற்சாகம் இல்லாதது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். அந்தப் பெண் இந்த நிலைக்கு வரை என்ன நடந்திருக்கும் என்றே யோசிக்கிறேன். அவள் அம்மாவைப் பற்றி கேன்சர் பற்றி கேள்விப்படுகிறேன், மரணம் தான் எத்தனை எத்தனை தத்துவ விசாரத்தைக் கொடுக்கக் கூடும்.

நான் ஜூலிக்கு இந்த விசாலமான மனம் இருக்கக்கூடும் என்று ஊகித்தேன், ஆனால் இப்பொழுது நடந்து கொள்ளும் விதம்,  அவள் வயது சம்மந்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்று இப்பொழுது நினைக்கிறேன்,  இல்லாவிட்டாலும் கூட இத்தனை புகழுக்காக தன் மீது மண்ணை வாறித்தூற்றிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது. யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும், அவள் இன்று பிக்பாஸில் இருந்து வெளியேறினால் அவளை யாருக்குத் தெரியும்.

ஆரவ் நமீதாவை ஐட்டம் கேர்ள் என்று சொன்னால் என்ன நினைப்பாள் என்று கேட்டது ஒரு சரியான கேள்வி, ஆனால் மகனே நீ நடந்து கொள்வதைப் பார்த்து தான் அவள் அப்படி அழைக்கிறாள். நமீதா, ஆரவ் தனக்கு கேர்ள் ப்ரண்டு இருப்பதை காயத்ரியிடன் சொல்லும் பொழுது கேட்டுவிட்டு பின்னர் அவன் ஜூலியுடனும் ஓவியாவுடனும் பழகியதை வைத்துச் சொல்கிறாள். ஆனால் நமீதா இப்பொழுது இறங்கியிருக்கும் இந்த ஆன்மீகப் பயணம் ஏற்கனவே பலர் முயன்றது தான். ரஜினிகாந்த், பாலகுமாரன் பின்னர் தற்காலங்களில் சிம்பு என்று ஐட்டம் பாய் இமேஜில் இருந்து யோக்கியன் இமேஜிற்கு மாறி உத்தி எல்லோரும் பார்த்தது தான். ஆனால் அவள் நினைத்த அந்த இமேஜை கமலஹாசன் அவள் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லும் முன்பே உடைத்தது தான் கொடூரம்.

சிநேகன் அவன் அளவிற்கு நியாயமாக நடந்து கொள்கிறானா என்றால் அதுவும் இல்லை, அயோக்கியன். ஓவியாவை, ஜூலியைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று அவன் நடந்து கொள்வது பிரச்சனையில்லை. அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு ஹக் செய்கிறான் அயோக்கியப்பயல் என்று சொல்வது நியாயமாகாது, ஆனால் அவன் ஒரு ஆண் ஜூலி போல் நடந்து கொள்கிறான் என்பதுதான் பிரச்சனை. பரணியை இவன் நடத்திய விதம் அநாகரீகமானது, ஏன் ஓவியாவைத் தவிர எல்லோரும் பரணியை நடத்திய விதம் அசிங்கமானது. கமலஹாசனின் பரணி பேட்டி இதை எந்த விதத்திலும் குறைத்ததாய் நான் நினைக்கவில்லை. ஆனால் கஞ்சா கருப்பின் முகம் இன்னும் பலருக்கு தெரிந்திருக்கும். சமுத்திரகனியாவது பாலாவது எதுவும் சொல்வார்கள் என்று இன்னமும் மண்டுகம் போல் நினைத்திருக்கிறேன்.

கணேஷை இந்த முறை ஒழித்துக்கட்ட முடியாது, நமீதா தான் அவுட்டு எப்படியும். சாப்பாட்டுப் பிரச்சனையில் கணேஷ் எப்படி நடந்துக்குறார்னு விஜய் டிவி காட்டாமல் நமக்குப் புரியாது. அவர்கள் காட்டப்போவதில்லை. சாப்பாட்டுப் பிரச்சனைக்கு மக்கள் வெளியில் அனுப்ப மாட்டார்கள் என்றே ஊகிக்கிறேன். ரைசா முன்னமே சொன்னது போல் மூளையைக் கழட்டிவிட்டு வந்திருக்கும் மாடல், அவள் வாய்விட்டு எதுவும் சொல்லப்போவதில்லை. வையாபுரி நாமினேட் செய்யப்படும் அடுத்த முறை தப்ப முடியாது. ஆர்த்தியின் சுபாவம் அவர்கள் நாமினேட் செய்ததும் அப்படியே மாறியது, ஆனால் கடைசிவரை அவள் எதையுமே உணரலை, கத்துக்கலைங்கிறது இவளுக்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸுக்கும் தான்.

சக்தி அவன் பெண்டாட்டியை ஆஸ்பத்திரியில் விட்டுட்டு பிரசவ காலத்தில் வீட்டுக்கு வந்தானாம். ச்சை. வாழ்க்கை அளிக்கும் மிகப்பெரிய பேறில் ஒன்று தன் குழந்தை இந்த உலகத்தைப் பார்ப்பதை நேரில் பார்த்து உணர்வது. என் மகன் பிறந்த பொழுது - இந்தியாவில் - நான் கேட்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனுக்கு இருக்கும் பணத்துக்கு ஒத்துக் கொண்டிருப்பார்கள் தானே. அதைக்கூட செய்யாத முழுமூடன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In அயர்ன்பாக்ஸ் சிறுகதை பிறந்தநாள்

மக்கு பொண்டாட்டி


"They tell me" 'OK, this is where we're going to push up your cleavage,' and I'm like 'What cleavage?'" - Natalie Portman

கோபம் பலசமயங்களில் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருப்பதில்லை, அன்று அகிலாவிற்கும் அப்படித்தான் ஆனது. அகிலா நேற்றுவரை அடக்கிக்கொண்டிருந்த கோபம் இன்று வெளிப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருந்தது. தாஸ் இப்படிச்செய்கிறவன் இல்லை தான், அது அவளுக்கும் நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் மனம் சொல்பேச்சு கேட்க மறுக்கிறது. அகிலாவின் மனம் கண்டதையும் நினைத்து குழம்பியது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் என்றாலும் எல்லோரையும் போல அவர்களுடைய காதலும் மோதலில் தான் தொடங்கியது. அவர்களின் முதல் சந்திப்பே கூட அத்தனை இனிமையானது கிடையாது, கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எதேச்சையாக கேன்டீன் பக்கம் போக தாஸ் தன் நண்பர்களிடம் அவளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

அவனுடைய நண்பன் ஒருவன் அகிலாவைப்பற்றிக் என்னவோ கேட்க, தாஸ் சொன்ன பதில் அகிலாவை நிலைகுலையச் செய்தது. அவன் அகிலாவை அயர்ன் பாக்ஸ் என்று கூறியதை கேட்டவளுக்கு அவனை கன்னம் கன்னமாய் அறையவேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து விலகிவிட்டாள் வேறு என்னதான் செய்யமுடியும் இந்த விஷயத்தைப் போய் எப்படி வெளியில் சொல்வது என்று நினைத்தாள். ஆனாலும் தினமும் அவனை வகுப்பில் பார்ப்பதே வெறுப்பிற்குரியதாய் இருந்தது. எப்படி ஒரு பெண்ணைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் மாரைப்பற்றிய விமரினத்தை இவர்களால் வெட்கமில்லாமல் வைக்கமுடிகிறது என்பதை யோசிக்க தாஸின் மீது இருந்த வெறுப்பு அதிகமாகியிருந்தது.

அகிலாவின் தாஸ் பற்றிய நிலைப்பாட்டை உறுதிசெய்வதைப் போன்றே பலவிஷயங்காள் தொடர்ந்து நடந்தன. தாஸ் தன்னுடைய நண்பர்கள் ராகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கில், ஒரு புதன்கிழமை, அவனுடைய சீனியர் மாணவர்கள் டை அணிந்துவரும் அதேநாளில் பத்து பதினைந்து நாய்களுக்கு டைஅணிவித்து கல்லூரிக்குள் விட்டுவிட. கல்லூரி முழுவதும் பிரச்சனை ஆகியிருந்தது. கல்லூரி நிர்வாகம் தலையிட்டு அவனையும் அவன் நண்பர்களையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததில், சீனியர் மாணவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ அகிலாவிற்கு சந்தோஷம் தாளவில்லை. குறைந்த பட்சம் ஒரு வாரமாவது அவன் முகத்தில் விழிக்காமல் இருக்கலாமே என்றுதான்.

ஆனால் அகிலா எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக தாஸ் நன்றாய் படிக்கக்கூடியவனாயும், அதையும் விட நாடகம், விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் விற்பன்னனாக இருந்தான். இதன் பொருட்டாக அவன் மீது அகிலா கொண்டிருந்த அவமதிப்பு சிறிதளவு குறைந்திருந்தாலும் கோபம் சிறிதளவும் குறையவில்லை. சில மாதங்களிலேயே கல்லூரியின் தமிழ்மன்றத்தால் நடத்தப்பெற்ற பட்டிமன்றத்தில் எதிர்எதிர் தரப்பில் தாஸும் அகிலாவும் பங்குபெற, அகிலா தன் தரப்பிற்கு வைத்த ஏறக்குறைய அத்துனை வாதங்களையும் பொறுமையாய், அதே சமயம் ஆழமாய் நிராகரித்துப்பேச மலைத்துப்போயிருந்தாள். ஆனாலும் சில குறிப்பிட்ட காரணங்களால் அவனின் தரப்பு நன்றாய் பேசியிருந்தபொழுதும் தீர்ப்பு அகிலாவின் பக்கமாய் தரப்பட்டது.

என்னவோ அகிலாவிற்கு தாஸை பாராட்ட வேண்டுமென்று தோன்றியதால், பேசிவிட்டு கீழிறங்கியதும்,

"ம்ம்ம், நல்லா பேசினீங்க. ஆனா உங்கள் பேச்சில் இருக்கும் ஒழுக்கம் செயலில் இருப்பதாய் தெரியவில்லையே?"

அகிலா எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

"நன்றி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை."

"இல்லை 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'னு பாரதி சொன்னான் ஆனால் இன்னும் மாதர்களையே கொளுத்தும் நிலைமைதான் நீடிக்குதுன்னு ரொம்ப அழகா பேசினீங்க. ஆனா உங்கள் செயல்களில் இதைக்காணோமேன்னு கேட்டேன். ஒரு பெண்ணோட மாரை கண்களால் அளவிட்டு நக்கல் செய்யும் நீங்கள் இது போன்ற தங்க வரிகளை பேசுவது மட்டும் ஏன்னு கேட்டேன். இதற்கான பதிலை நான் உங்கக்கிட்டேர்ந்து எதிர்பார்க்கலை. ரொம்பநாளா மனசுக்குள்ளேயே உறுத்திக்கிட்டிருந்த ஒரு நிகழ்வு அதான் கேட்டேன்." சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்காய் காத்திராமல் வேகமாய் சென்றுவிட்டாள்.

பின்னர் வந்த ஓரிரு மாதங்களில் அவனாக அவளைச் சந்திக்க முயன்றதையும் அகிலா நிராகரித்தாள். இடையில் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய கல்லூரியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள தாஸை, கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்காக நடந்த போட்டியில் அகிலா கலந்து கொண்டிருந்தாலும் அவன்தான் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அதைப்போலவே அவன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் போட்டிக்கு ஒருவாரத்திற்கு முன்னர் வண்டியில் இருந்து அவன் கீழே விழுந்ததால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், நிர்வாகம் இவளைத் தேர்ந்தெடுத்தது.

அவனைப்போய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அவனுக்கு பதிலாய்த்தான் தான் பங்கேற்க இருப்பதால் அகிலா அவனை சந்தித்து அந்த விஷயத்தை தன்வாயால் சொல்லிவிட நினைத்தாள். இரண்டு நாட்களில் உடம்பில் ஏகப்பட்ட கட்டுக்களுடன் அவன் வகுப்பிற்கு வந்த உடன் போய்ப்பார்த்தவள், அவன் காயங்களைப் பற்றி பெரிதாய் விசாரிக்காதவளாய்,

"உங்களுக்கு பதிலா நிர்வாகம் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. அதை உங்கக்கிட்ட சொல்லணும்னு நினைத்தேன்." என்று சொன்னவளிடம்.

"அகிலா அன்னிக்கு நடந்த நிகழ்ச்சிக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதைத்தவிர வேறெதுவும் சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. மற்றபடிக்கு உங்களுக்கு அந்தப்போட்டிக்கான உதவிகள் எதாவது தேவைப்பட்டால் கேளுங்கள் செய்கிறேன்." சொன்னவன் எதையோ யோசித்தவனாய்.

"இல்லை ஒருநிமிஷம் இருங்க." சொல்லிவிட்டு அவன் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தவனாய்.

"தப்பா நினைக்காதீங்க, இதில இதுவரைக்கும் நான் பேசின அத்தனை பேச்சுப்போட்டிகளின் கன்டென்ட்டும் இருக்கு. ஒருவேளை இது உங்களுக்கு உபயோகமா இருக்கலாம்."

அகிலாவிற்கு முதலில் அதை வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், பின்னர் கல்லு\ரி நிர்வாகம் தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தருவாயில் அவனுடைய குறிப்புக்கள் நிச்சயமாய் உதவும் என்று நினைத்தவளாய் வாங்கிக்கொண்டாள். ஆனால்,

"இத நான் வாங்கிக்கிட்டதால உங்கமேல இருக்குற கோபம் குறைஞ்சிறுச்சுன்னு நினைக்காதீங்க." என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

ஆனால் அவன் மேலான கோபம் சிறிது சிறிதாக குறையத்தான் செய்தது, அதுமட்டுமில்லாமல் தாஸ் மீதான ஒருவித ஈர்ப்பு உண்டாவதைப்பற்றிய விஷயத்தையும் அவளால் அதிக நாட்கள், அவள் மனதிற்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்க முடியவில்லை. ஆனால், ஒரேநாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. அவன் நோட்டைப் படித்ததிலிருந்து அவன் வாசிப்பின் பரப்பை அறிய முடிந்தது. பிறகு முடியாத நேரத்திலும் பல்கலைக்கழகத்திற்கே வந்து அந்தப்போட்டியில் வெற்றிபெற அவளுக்கு உதவியது, பின்னர் அவனுடன் சிறிது சிறிதாக பழகத்தொடங்கியதும் அவன் பல பிரச்சனைகள் பற்றிய அவனுடைய கருத்துக்களை சாயங்கலக்காமல் வெளிப்படுத்தியது இப்படி. அவன் சொல்லிச்சொல்லி அகிலா அவன் மேல் கொண்டிருந்த அவநம்பிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்தெறிந்தான்.

இப்படித்தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் காதலாக மாறி, கல்லூரி வாழ்க்கையின் நான்காண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து பின்னர் அவர்கள் இரண்டுவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். ஆயிற்று எட்டுமாதங்கள், நாளை அகிலாவிற்கு பிறந்தநாள், இப்பொழுது அகிலா கடுங்கோபமாய் இருப்பதற்கு காரணம் அவனாக தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு முந்தையநாள் மாலைவரை அவனிடமிருந்து அதுபற்றிய குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஆறுமணிநேரம் தான் இருந்தது அவளுடைய பிறந்தநாளுக்கு,

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனின் கைகளில் பிறந்தநாள் பரிசுப்பொருட்களைத் தேடியவளுக்கு அவன் ஒன்றுமே வாங்கிவராதவனாய் வெறுங்கையை வீசிக்கொண்டுவர கோபம் கோபமாய் வந்தது. அதுவும் வந்தவுடனேயே,

"அகிலா இன்னிக்கு என்ன சாப்பாடு, எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்கு சீக்கிரமா வேலைக்கு போகணும்." சொன்னவனாய் பேண்ட், சட்டையைக்கூட கலட்டாமல் படுக்கையில் சாய்ந்தான்.

அதிலிருந்துதான் அகிலா பித்துபிடித்ததைப் போல் மாறியிருந்தால், அவள் நினைத்திருந்தாள் தாஸ் தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து எதுவும் சர்ப்ரைஸாக பரிசளிப்பான் என்று, தன் பிறந்தநாளிற்காக விடுமுறை எடுத்துக்கொண்டுவந்து வெளியில் அழைத்துச் செல்வான் என்று. ஏனென்றால் அவர்கள் காதலித்த காலங்களில் இதெல்லாம் வழக்கம்தான், அசட்டுத்தனமாக எதுவும் செய்யாமல் ஜேஜே சில குறிப்புகள், உபபாண்டவம் போன்று அவளுக்கு முன்பே அறிமுகம் ஆகாத ஒன்றை அந்தநாளில் கொடுத்து அசத்துவான். பெரும்பாலும் அவர்களின் கருத்துப்பரிமாற்றம் பிரச்சனையில் தான் முடியும் ஆனால் அன்றுமட்டும் தான் என்ன சொன்னாலும் மறுக்கமாட்டான். இது போன்ற காரணங்களால் தான் திருமணம் ஆனபிறகு பழசையெல்லாம் மறந்துவிட்டான் என்று நினைத்து அகிலாவிற்கு கோபம் வந்தது.

முதலில் அவனிடம் ஒன்றுமே பேசாமல் சாப்பாடு போட்டவள், பின்னர் மெதுவாக நாளை தினத்தைப் பற்றி லேசுபாசாய் குறிப்பிட்டாள். ஆனால் அவனோ இதையெல்லாம் குறித்துக்கொள்பவனாக இல்லாமல், கருமமே கண்ணாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பின்னர் கைகழுவிவிட்டு படுக்கைக்கு வந்தவன் விளக்கணைத்துவிட்டு தூங்கத்தொடங்க, மொத்தமாய் குடிமுழுகிப்போனதாக நினைத்தவளாய்.

"தாஸ் நாளைக்கு எனக்கு பிறந்தநாள்." சொல்லியேவிட்டாள்.

இதைக்கேட்டும் கொஞ்சமும் சுவாரஸ்யம் காட்டாதவனாய்,

"அப்படியா வாழ்த்துக்கள்." சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

அவளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையளித்தது, எல்லோரும் சொல்வது போல் காதலிக்கும் வரைதான் அத்தனையும் போல என்று நினைத்தவளாய்.

"நாளைக்கு நாம ரெண்டுபேரும் கொஞ்சம் வெளிய போலாமா, எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்." இதையும் நேரடியாகக் கேட்டாள்.

ஆனால் திரும்பிக்கூட பார்க்காமல்,

"என் டெபிட், கிரெடிட் கார்ட் இரண்டும் உன்கிட்டத்தான இருக்கு, போய் என்ன வாங்கணுமோ வாங்கிக்க, வேணும்னா காரை விட்டுட்டு போறேன். நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு."

இந்த பதிலால் விரக்தியானவளாக அவளும் படுத்துக்கொண்டாள், அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் நடந்துகொள்ளும் விதம். இப்படி நடந்துகொள்பவன் கிடையாது, இன்று அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையிருந்திருக்குமா என்று யோசித்தாள். அவள் நாளை விடுமுறை போட்டிருந்தது வீணாய்ப்போய்விட்டதை நினைத்துப்பார்த்தால். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போல் அவள் அவனுக்கு சர்ப்ரைஸாய் சொல்ல ஒரு விஷயம் வைத்திருந்தாள். அதை நினைத்தபொழுது தான் அழுகை அழுகையாய் வந்தது. அவள் மறுபக்கம் திரும்பிப்பத்த சிறிது நேரத்தில் அவள் அவள் இடுப்பில் கையைப்போட, கோபம் வந்துவிட்டது அகிலாவிற்கு.

"போங்க போய் ஆபிஸையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்குங்க அதுக்கு மட்டும் நான் வேண்டுமா?" சப்தம் போட்டாள்.

"இப்ப எதுக்கு நீ இப்படி கத்துற. நான் இதுவரைக்கும் உன் பிறந்தநாளுக்கு கூடவே இல்லாதமாதிரியில்ல கத்துற. ஏதோ கொஞ்சம் வேலையிருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்ட. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற. அதான் என்ன வேணும்னா வாங்கிக்கன்னு சொல்லிட்டன்ல அப்புறமேன் தொட்டதுக்கெல்லாம் சிணுங்குற." சொல்லியவனாய் அவளை அருகில் இழுத்தான்.

அவளுக்கும் சம்மதம்தான் ஆனால் தன் பிறந்தநாளை மறந்துவிட்டு, என்னவோ காசுதான் கொடுக்குறனேன்னு சொல்லும் புருஷனை நினைத்தால் எரிச்சலாய் வந்தது. இதே அவன் மட்டும் ஒன்றுமே வாங்கிக்கொடுக்காமல் புன்னகைத்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, நாளைக்கு வேலையிருப்பதாய் சொல்லியிருந்தால். அவனுக்காக எத்தனை மணியானாலும் காத்திருந்திருப்பாள். ஆனால் அன்று அவன் நடந்துகொண்ட முறை சுத்தமாய் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவன் அவள் அனுமதியில்லாமலே உடைகளை நீக்கிக்கொண்டிருந்தான். அவனையே வெறித்துப்பார்த்தவளாய் தடுக்காமல் கல்லைப்போல் படுத்திருந்தாள். தன்னிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டால் விட்டுவிடுவான்னு நினைத்த அவளின் எண்ணத்தை தகர்த்தபடி அவன் அவள் கண்களையே பார்க்காமல் முன்னேறிக்கொண்டிருந்தான். அவளால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை தன் விருப்பமில்லாமலேயே தன்னைப்பெற நினைக்கும் அவனை தடுக்க நினைத்தும் முடியாதவளாய், அவன் விருப்பத்திற்கு ஒத்துழைக்கவும் முடியாதவளாய், தான் இழந்துவிட்ட ஆடையின் இயலாமை பீடித்தவளாய், அவன் முதல் தொடுதலில் அழுதுவிட்டாள்.

அதுவரை முன்னேறிக்கொண்டிருந்தவன் அவள் அழுகை சப்தம் கேட்டதும் நிறுத்திவிட்டு சிறிதுநேரம் அவளையே பார்த்தான்.

"எந்திரிடீ." அவன் அதட்ட,

படுக்கையிலிருந்து எழுந்தவளை அங்கிருந்து நேராய் உள்ளறைக்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனுடைய பீரோவைத் திறந்தவன் அங்கே மறைத்து வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்துக்கொடுத்தான். அழுத கண்களுடன் இதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கையில், பின்னர் ஒரு சிறிய பிறந்தநாள் கேக்கை கொடுத்து சிறிய கத்தியால் வெட்டச்சொன்னான். வெட்டிய கையின் மோதிரவிரலில் அப்படியே ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தவனிடம்.

"ஏன் இப்புடி பண்ணீங்க?" இன்னும் அவளால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.

"சும்மா விளையாட்டுக்குத்தான், இதுதானே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள் அதான். நீ பிறந்தப்ப எப்படி இருந்திருப்பேன்னு பாக்கலாம்னு..."

சொல்லிவிட்டு சிரித்தவனை அகிலா முறைக்க,

"இங்கப்பாரு ஆரம்பத்திலேர்ந்தே உனக்கு ஒரு விஷயமும் தெரியாது. காலேஜில் நான் உன்னைப்பத்தி கமென்ட் அடிக்க எம்மேல ரொம்பக் கோபமாயிருந்த ஞாபகமிருக்கா. அப்ப ஒருநாள் நீ என்கிட்ட நேருக்குநேராய் எப்படி உங்களால வெளியில பேசுறது ஒன்னாவும் செய்யறது ஒன்னாவும் இருக்க முடியதுன்னு கேட்டப்பவே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். பின்னாடி உன்கிட்ட பேசணும் பழகணும்னு தான். நான் வேணும்னே அடிப்பட்டுடதாய் பொய் சொல்லி உன்னை பேச்சுப்போட்டிக்கு போக வைச்சேன். அன்னைலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நான் என்ன நினைச்சேனோ அதேமாதிரிதான் நீ செய்திருக்க.

என் மக்கு பொண்டாட்டி எப்பவுமே நான் நினைக்கிற மாதிரிதான் நினைப்பான்னு எனக்குத்தெரியும். அது இன்னிக்கும் ப்ரூப் ஆயிருக்கு. இந்தப்பொருளையெல்லாம் நான் ஒருவாரத்திற்கு முன்பே வாங்கிவிட்டேன் கேக்மட்டும்தான் புதுசு. அப்புறம் நாளைக்கு நான் லீவு போட்டாச்சு, உன்னைய அழுவவிட்டதுக்கு பரிகாரமா நாளைக்கு நீ என்ன கேட்டாலும் ஸாங்ஷன். எல்லாமே உன் உத்திரவுதான்."

அவன் அவளை ஏமாற்றியதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க முதலில் சிரித்தவள் பிறகு,

"உண்மையிலேயே நான் ஏமாந்திட்டேன் தான். உங்க மக்கு பொண்டாட்டி உங்களுக்காக இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருந்தேன். ஆனா நீங்க காலேஜிலேர்ந்து என்னை ஏமாத்திட்டு வர்றதால உங்கக்கிட்ட சொல்லமுடியாது." என்று சொன்னவளிடம் என்னவென்று கேட்டு, தாஸ் கெஞ்சத்தொடங்க. முதலில் கொஞ்ச நேரம் சொல்லாமல் அலட்டியவள்.

சிறிது நேரம் கழித்து, "உங்க மக்கு பொண்டாட்டி வயித்தில உங்க குட்டிப்புள்ள வளருது." சொன்னவளாக வெட்கம் தாளாமல் அவனைக்கட்டிக்கொண்டாள். முதலில் நம்பமுடியாதவனாய் அப்படியா அப்படியா என்று கேட்டவன், பின்னர் மெதுவாய் அவள் வயிற்றைத்தடவ உள்ளேயிருந்த இரண்டுமாத சிசு, 'அய்யோ இப்படி ஒரு மக்குக் குடும்பத்தில் போய் பிறக்கப்போறமே' என்று நினைத்துக்கொண்டு சிரித்தது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In American Diary

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்




அமெரிக்காவிலிருந்து பயந்துபோய் இந்தியாவிற்கு வெளியேறிய இந்திய க்ரூப் ஒன்று எப்பொழுதும் உண்டு, நான் வேலை பார்த்த, டெல்லி புனே பெங்களூர் என்று அத்தனை இடங்களிலும் இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் அடிபட்ட புலி ஒன்றுண்டு பசியுடன், பொதுவாக கொஞ்சம் விலகியே இருப்பது அவர்களிடம்.

என்ன சொன்னாலும் இங்கிருக்கும் இந்தியர்கள்/கொஞ்சம் அமெரிக்கர்களும் அவர்களை தோற்றுப்போனவர்களாகவே கருதுகிறார்கள், இதைப்பற்றி நிறைய பேசியதுண்டு. இவர்களிடம் சமயங்களில் வெளிப்படும் துவேஷம் கடும் விஷத்துடன் இருக்கும். இவர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடியும்.

இவர்களில் ஒருவனாக நான் மாறிவிடக்கூடும் என்பதால் இவர்களைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நாள்தோறும் மாற்றத்துடன் சுழலும் எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று நானறியேன். ஆனால் வெஞ்சினம் இல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் வெளியேறிவிடவே ஆசைப்படுகிறேன். காத்திருந்து கீறுவதில் இல்லை உடன்பாடு. எத்தனை நேரம் ஆகிவிடும் மற்றவர்களுக்கு திரும்ப கீறிவிட.

ஜாக்கிரதை பிள்ளாய்!

---------------------------------------

அமெரிக்கா வந்து அஞ்சி வருஷமாச்சி, இன்னும் யாராவது NRIன்னு சொன்னா, யாரு யாருன்னு தான் மனசு தேடுது.

நானும் NRI என்று மனம் ஒத்துக்க மாட்டேங்குது. :) May be because I had a very high opinion about them. :) யாரோ ஒருத்தர் டிவிட்டரில் என்னை NRIன்னு திட்டம்பொழுது யாரையோ திட்டறார்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். :)

அய்யோ அய்யோ!


---------------------------------------


நாங்கள் முதல் நாள் இரவு பத்து மணி போல் One World Centerற்குச் சென்றிருந்தோம், ஒரு திட்டமிடப்படாத பயணம். இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பது இந்த One World Center. 9:00மணி இரவிற்கு மூடிவிட்டதால், அன்னாந்து பார்த்துவிட்டு வந்துவிட்டோம். இதைச் சொல்வதற்குக் காரணம் அன்றிலிருந்தே ஒரு வகையான உணர்ச்சிகரமான மனநிலை இருந்தது.

அடுத்தநாள் Intrepid museum சென்று மீண்டதும் நாங்கள் அல்பேனி மீள்வது தான் திட்டமாக இருந்தது. ஆனால் என்னவோ 911 museum சென்று வரவேண்டும் என்று தோன்றியது. Intrepid museumத்தில் நடந்து ஏற்கனவே முழுமையாக சோர்ந்து போயிருந்தோம். சரி கடைசியாய் இதைப் பார்த்துவிட்டு மூட்டையைக் கட்டுவோம் என்று முடிவெடுத்தோம்.

911 Museum waterfall அருகில் வந்து சில நிமிடங்கள் நின்றிருந்தோம். அங்கே இறந்தவர்களின் பெயர்களை கிரானைட் கல்லில் செதுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு பெயர் சட்டென்று மனதைக் கவ்வியது. ‘X with her Unborn Child' என்று. உடன் வந்தவர் அந்தப் பெயரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு அந்தப் பெயரைத் தடவியபடி இருந்தார். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

Unborn Child என்பது எனக்கு புதிய விஷயம் கிடையாது, கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் அறிந்த Use Case தான். நாங்கள் வேலை செய்யும் டொமைனில், Pregnant Women, Unborn Child எல்லாம் Use Caseகள். அமெரிக்கர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் தான். அதன் பின்னே அவர்களுடைய benefit களுக்குக்கான ரூல் என்று unborn child பற்றி டெக்னிக்கலாக நிறைய பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம் - ப்ரொக்கிராம்கள். ஆனால் அவை எல்லாமே உயிருடன் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியது. ஆனால் அங்கே குறிப்பிட்டிருந்தது, ஒரு கர்ப்பிணி பெண்ணைப் பற்றி, அவளுடைய இன்னமும் பிறக்காத குழந்தையைப் பற்றி.

பின்னர் 911 Museumத்தில் விமானத்திலிருந்து வாய்ஸ் மெயில் விட்டவர்களில் குரலைக் கேட்ட தருணத்தில் நான் வெளியேறிவிட்டேன். என் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று தெரியும் நண்பர் தேடுவார் என்று தெரியும். ஆனால் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. நண்பர் பின் என்னைத் தேடிக் கண்டுபிடித்து பின்னர் நாங்கள் சரவணபவன் வந்து உட்கார்ந்ததும். அந்தக் கேள்வி வந்தது, எங்கப் போனாய் என்று. நான் அவரிடம் ‘I couldnt take it' என்று சொன்னேன். அப்பொழுது அவர் 10 நிமிடம் அந்த ‘Unborn Child' என்ன பாடு படுத்தியது என்று சொன்னார். நாங்கள் இருவருமே எமோஷனலாக இருந்தோம். அதைப் பற்றி நான் அவரிடம் முன்பு பேசியிருக்கவில்லை, ஆனால் அவரும் கவனித்திருக்கிறார், அந்த வார்த்தை தன்னை எப்படி உலுக்கியது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவருமே முன் பின் பார்த்திருக்காத அந்த இன்னமும் பிறக்காத குழந்தை எங்களை ஆட்டிப் படைக்கும் திறமையுள்ளதாக இருந்தது. இனி Unborn Child Used Caseஐப் செயல்படுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் வரக்கூடும் அந்தக் குழந்தை. இனி அந்தக் குழந்தையை எப்படி மறப்பது?!

PS: இந்த டிரிப் சென்றிருந்த பொழுது, நியூயார்க் சிட்டியில் எடுத்த புகைப்படம் இரண்டு. ப்ரூக்ளின் ப்ரிட்ஜ்.




------------------------------------

இப்பொழுதுகளில் ஒருவரை தூக்கியெறியவும் கட்டிக்கொள்ளவும் ஒரு நிகழ்வே போதுமானதாய் இருக்கிறது.

கேரள சிஎம் நெருக்கமானது இப்படித்தான்.

ஞானி நெருக்கமானதும் இப்படித்தான். புலிக்குகை பற்றி அவர் எழுதிய வரி ஒன்று போதுமெனக்கு.

மனதுக்குள் பிரியாரிட்டி கொண்ட லிஸ்ட் எப்பொழுதும் உள்ளது. இத்தனைக்கும் பின்னர் PAKஅய் தூக்கியெறிய முடியாததை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும். அவர் விஷயத்தில் எனக்கு உள்மனதுக்கு புரிந்ததொன்று உண்டு. புலிகள் விஷயம் எனக்கு எமோஷனலாக ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டியும் என் எல்லை விரியுமென்பது. அதில் முதலாவது ராஜன் இரண்டாவது PAK.

இன்னமும் யோசித்துப்பார்க்கணும்.

மனைவி மக்கள் இல்லாத இந்தப் பொழுதை மீண்டும் புக்கோவிஸ்கியிடம் இழக்காமல் இருக்கணும். 

-----------------------------------






இந்தப் பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்தது தான். ப்ரிஸ்மா அவுட்புட்டில்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Miranda Kerr Only ஜல்லிஸ் Super Models Victoria Secret மிராண்டா கெர்

Miranda Kerr - Victoria Secret Angel

இது ஒரு பச்சை ஆணாதிக்கப் பதிவு - பெண்ணியவாதிகள் படித்து சர்ச்சை செய்ய வேண்டாம் படிக்காமல் விட்டுவிடலாம்.



நான் முதன் முதலில் விக்டோரியா சீக்ரெட் என்ற பெயரைக் கேட்ட பொழுது என்னமோ ஏதோ என்று நினைத்தேன் அப்பொழுது எனக்கு விடலை வயது. பின்னர் “ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”க்களும் “பிங்க் தாங்”களும் அறிமுகமான பொழுதில் விக்டோரியா சீக்ரெட் என்பது அமேரிக்காவின் நாயுடு ஹால் என்பது தெரிந்தது ஆனால் விசியை நாயுடு ஹாலோடு ஒப்பிடும் புத்தி எத்தனை மொக்கையானது என்பது அவர்களின் கலை ஞானத்திலும் அவர்களின் உபயோகிக்கும் மாடல்களின் கலை அம்சத்திலும் தெரிந்து போனது.

Adriana Lima, Alessandra Ambrosio, Doutzen Kroes என்று எத்தனையோ தேவதைகள் அன்ன நடை பயன்று ஆச்சர்யப்படுத்தினாலும் Miranda Kerr, மீது ஒரு தனிக்காதல் வந்தது. அழகான பூக்கூட்டத்தில் ஒரு பூ பிடித்திருக்க அந்தப் பூ பிடித்திருக்கிறது என்பது மற்ற பூக்கள் பிடிக்காது என்பதால் அல்ல, மற்ற பூக்களை விட இது பிடித்திருக்கிறது காரணம் சொல்ல முடியாமல். பெரும்பாலும் Miranda Kerr போன்ற சூப்பர் மாடல் பிகர்ஸ் அதிகபட்சம் பிகினியிலும் இல்லாவிட்டாலும் அதுவும் இல்லாமலும் தான் என்பதால் எனக்கு இந்த தேவதைகளை, இங்கே பதிவுலகத்தில் சரியாக அறிமுகம் செய்ய இயலவில்லை(lol). இப்படி அறிமுகம் செய்ய நினைத்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இணைய வெளியில் Miranda Kerrஐத் தேடிக்கொண்டு என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தான். சரி ஒழிஞ்சி போங்க ‘நீங்கள் கேட்டவை’ அப்படின்னு எழுதுறேன்.

இந்தப்பிகரை நான் முன்னமே இந்தப் பக்கங்களில் பார்த்திக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான், இரவின் தொடர்ச்சியாய் எப்பொழுதும் அறியப்படாத பகல் போன்ற என் கதைகளின் தேவைக்கு ஏற்ப தேவதையை நான் உபயோகித்திருக்கிறேன். இப்பொழுது சூப்பர் மாடகளில் சூப்பர் பொழுதுபோக்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அவர்களைக் கவனித்து வருபவர்களுக்கு நன்றாய்த் தெரியும். Miranda Kerrவும் அதற்கு விதிவிலக்கல்ல, அம்மணி தற்சமயம் Orlando Bloomன் காதலி அவரின் குழந்தையை தற்சமயம் சுமந்து வருகிறார். அதே போன்ற இந்த சூப்பர் மாடல்களின் இன்னொரு பொழுது போக்கான குழந்தை சுமக்கும் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அற்புதமான புகைப்படங்களிலும் Miranda Kerr கவனத்தைச் செலுத்தி ஒரு வாரத்திற்கு முன் வெளியான அவர் படம் அவருடைய இயல்பான அழகை இந்தக் காலம் எப்படி மெருகேற்றியிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.

தேவதையை நான் வரையவும் செய்திருக்கிறேன்.(தற்சமயம் படங்கள் இல்லாததால் பின்னர் இந்தப் பதிவு அந்தப் படங்களுடன் அப்புடேட்டப்படும்).

எனக்கு Mirandaவைப் பிடித்துப் போய்த் தேடத்தொடங்கியிருந்த நாட்களில் இணையவெளியில் அத்தனை புகைப்படங்கள் இல்லை தான் ஆனால் இன்றிருக்கும் அளவு ம்ம்ம் அருமை. இணையத்தில் இப்படி ஒரு சூப்பர் மாடலை அறிமுகப்படுத்தி வைக்க மட்டுமே நான் செய்கிறேன் மீதி தேடிப்பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. இணையத்தில் Miranda Kerrற்காக நான் அதிகம் பார்க்கும் இணையதளம் இது NSFW என்றால் புரியுமா தெரியவில்லை பொதுவாவே சொல்லிடுறேன் Not Safe For Work. தேவதைகளுக்கு ஆடைகள் தேவையில்லை என்று உணர்பவர்கள் மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

Popular Posts