திருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி... என்ற ராஜராஜ சோழனின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின் சோழம் சோழம் என்ரு வீரர்க்ள் டங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்பே தொடர்ந்தது, வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான்.
"தேவி கேட்டாயா, சோழ ராஜ்ஜிய முழக்கத்தை. இங்கிருந்து கேட்கும் போழுதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது."
பிறகு ராஜேந்திரனிடம் திரும்பி, "ராஜேந்திரா நீயும் உன் தந்தை போலவே பெரும் பேரும் புகழும் அடையவேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம்."
"மாமா, பெரியவன் ஆனதும் நானும் தந்தையை போல் நாடுகளையெல்லாம் பிடிக்கிறேன். இதெல்லாம் இருக்கட்டும். அப்பாவிற்கென்று இவ்வளவு பெரிய நாடும், மக்களும் இருக்கிறார்களே. உங்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாதா?" சிறுவயது பாலகனாகையால் தைரியமாக கேட்டுவிட்டான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த குந்தவைபிராட்டி,
"அப்படிக்கேள் என் செல்லமே, பெண்டாட்டி வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் தனியாக வீடே கிடையாதா?" என்று கேள் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.
அவருடைய ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்த வந்தியத்தேவர், குந்தவை அமர்ந்திருந்த இருக்கையின் முன் முழங்காலிட்டு உட்கார்ந்து, பிராட்டியின் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு,
"தேவி இளவரசன் கேட்டதை விடு, சின்னப்பிள்ளை, நீ சொல், இந்த கணம் சொல், உனக்கு ஆழ்வதற்கு ஒரு நாடு வேண்டுமா? சோழ சாம்ராஜியத்தை விட பெரிய நாடு வேண்டுமா? சொல் நான் வென்று தருகிறேன். பல போர்க்களங்களை வென்று தருகிறேன், உன் தம்பிக்கு போட்டியாக வேண்டாம், வடக்கே போய்விடுவோம். மேலை சாளுக்கியத்தையும் தாண்டி, இல்லையேல் பாரதகண்டத்திலேயே வேண்டாம், கடல்கடந்து, கடாரம், சாவகத்தீவு பக்கம் போய், உனக்கான ராஜ்ஜியத்தை நான் நிறுவுகிறேன். நீ மட்டும் இந்த சோழ தேசத்தை விட்டுவருவதாக ஒரு வார்த்தை சொல், ராஜராஜனை விட்டு, ராஜேந்திரனை விட்டு, வருவதாக சொல்." கேட்டுவிட்டு குந்தவையையே பார்த்தார்.
ராஜேந்திரன் தான் கேட்டதனாலே தான் வந்தியத்தேவர் இப்படி கேட்கிறார் என்று கவலைப்படத்தொடங்கினான். அந்தச் சமயம் அங்கே வந்த இராஜராஜரிடம் குந்தவை,
"அருள்மொழி கேட்டாயா! நான் சோழதேசத்தை விட்டு வரவேண்டுமாம்." சொல்லிவிட்டு வந்தியத்தேவரை திரும்பி பார்த்தாள்.
"கேட்டுக்கொண்டுதான் இருந்தேன், அக்கா நீ என் ஒருவனை நாடு பிடிக்கும் பைத்தியமாய் அலையவிட்டதும் இல்லாமல், இப்பொழுது தேவரையும் உனக்காக நாடு பிடிக்க சொல்லி கேட்கிறாயா. விட்டால் நீ எனக்கும் தேவருக்கும் இடையில் பொறாமையை வளர்த்துவிடுவாய் போலிருக்கிறது." சொல்லிவிட்டு சிரித்தார்.
இதற்குள் வந்தியத்தேவர், குந்தவைதேவியின் கைகளை அவரிடமே கொடுத்துவிட்டு, எழுந்து நின்றார், பிறகு,
"அரசே உங்களுக்கும் எனக்குமிடையில் பொறாமையை யாராலும் வளர்த்துவிட முடியாது. நம் தேவியாலும்தான். அதுமட்டுமில்லாமல், பொறாமை ஒரு மிகக்கொடுமையான நோய், உலகத்தின் எல்லா கொடுரங்களையும் அதுதான் ஆரம்பித்து வைக்கிறது. உங்களுக்குத்தான் அர்ஜூனன் கதை கூட தெரிந்திருக்குமே!" சொல்லிவிட்டு நகர்ந்து சென்று தூணுக்கருகில் நின்றார். குந்தவைபிராட்டியின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ராஜேந்திரன் நேராக வந்தியத்தேவரிடம் வந்து.
"அது என்ன கதை மாமா?"
அர்ஜூனனைப்பற்றிய அந்தக் கதையை ராஜேந்திரனிடம் சொல்லத் தொடங்கினார்.
"இராஜேந்திரா, அர்ஜூனன், மிகவும் பொறாமை பிடித்தவன் தன்னைவிட வில்வித்தையில் சிறந்தவர் யாரும் கிடையாது, தன்னைவிட அழகில் சிறந்தவர் கிடையாது என்று, இதை அருகில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட நினைத்தார். அதே போல் ஒரு நாள், அர்ஜூனனும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கன்னனை பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது அர்ஜூனன், கண்ணனிடம், இது என்ன யாரைக்கேட்டாலும் கன்னனைப்போல் கொடையில் சிறந்தவனே கிடையாது என்று சொல்கிறார்கள். நானும் தான் தானம் செய்கிறேன்.
யார் வந்து எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன். அப்படியிருக்க கன்னன் மட்டும் எப்படி கொடையில் சிறந்தவனாக இருக்க முடியும் என்று கேட்டான், கண்ணனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அர்ஜூனன் கேட்கவேயில்லை, அவனுடைய பொறாமை குணம் மாறவேயில்லை, இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்த கண்ணன், அர்ஜூனனிடம் தான் ஒரு போட்டி வைப்பதாகவும் அப்பொழுது புரிந்து கொள்வாய் என்றும் அர்ஜூனனிடம் சொன்னார். கண்ணன் சின்னதாக ஒரு தங்க மலையை உருவாக்கினார். பிறகு அர்ஜூனனை அழைத்து, இன்று இரவுக்குள் நீ இதை தானமாக கொடுக்க வேண்டும் கொஞ்சம் கூட மிச்சம் மீதி இல்லாமல் என்று சொன்னதும் முதலில் சிரித்த அர்ஜூனன்.
மக்களையெல்லாம் அழைத்தான், பிறகு ஒரு மண்வெட்டியை எடுத்து வெட்டி வெட்டி கொடுக்கத் தொடங்கினான். நேரம் ஆகியும் கொஞ்சம் மட்டுமே குறைந்திருந்ததால், பிறகு தன் காண்டீபத்தை எடுத்து மலையை கொஞ்சம் கொஞ்சமாக அம்பெய்து வெட்டிக் கொடுக்கத் தொடங்கினான். ஆனால் அந்த மலை எவ்வளவு வெட்டியும் குறையவேயில்லை. இரவானது கண்ணன் அங்கு வந்து பார்த்தபொழுது மலை சிறிதளவே குறைந்திருந்தது.
கண்ணன் அருகில் வந்த அர்ஜூனன், கண்ணா, என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது, கன்னன் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாமல் எப்படி யார் கொடைவள்ளல் என்று தீர்மானிக்க முடியும் என்று கேட்டான். அதைக்கேட்டு சிரித்த கண்ணன் திரும்பிப் பார்த்தார். கன்னன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்த கன்னனிடம் கண்ணன், போட்டியென்றெல்லாம் சொல்லாமல் தங்கமலையை காட்டி, இந்த மாதிரி ஒரு தங்க மலையென்றும் தானம் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். அதைக்கேட்ட கன்னன்.
அங்கே நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்து, இனிமேல் இந்த மலையை நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் சிரிக்கத்தொடங்கினார். பிறகு அர்ஜூனனிடம், இப்பொழுது புரிகிறதா காண்டீபா யார் கொடைவள்ளல் என்று, நீ இந்த மலையை தங்க மலையாய் பார்த்தாய், ஒருவனிடம் கொடுக்க உனக்கு மனது வரவில்லை, தகுதி, தராதரம் பார்த்து இவருக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொடுத்தாய்.
நீ எப்படி கொடைவள்ளல் ஆகமுடியும், அதே சமயம் கன்னனைப்பார் அவன் அதை தங்கமலையென்று பார்க்கவில்லை, யாரிடம் கொடுக்கிறோம் என்று பார்க்கவில்லை, கொடுத்துவிட்டான் அவன்தான் கொடைவள்ளல். இதனால் நீ இனிமேலாவது பொறாமைபடுவதை நிறுத்துவிடு என்று சொன்னார். இதைக்கேட்ட அர்ஜூனனும் திருந்தினான் அதனால் இராஜேந்திரா நீயும் யாரையும் பார்த்து பொறாமைபடக்கூடாது. அது ஒரு பெரிய நோய்!" வந்தியத்தேவர் முடித்துவிட்டு திரும்பி இராஜராஜனைப்பார்த்தார்.
......(1).....
ராஜராஜர் உடனே,
“தேவரே, இது ராஜேந்திரனுக்காக சொல்லப்பட்ட கதையா, இல்லை எனக்கானதா?” கேட்டுவிட்டு நகைத்தார்.
“அரசே, இது உங்கள் இருவருக்குமான கதையல்ல, எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பலகதைகளில் இதுவும் ஒன்று.”
சொல்லிவிட்டு இராஜராஜரைப் பார்த்து நகைத்தார் வந்தியத்தேவர். இடையில் தலையிட்ட குந்தவைதேவி,
“உங்கள் சண்டையில் எனக்காக நாடுபிடிக்கும் எண்ணத்தை மறந்துவிட வேண்டாம்.”
“அக்கன் இன்னொருமுறை இப்படி கேட்கவேண்டாம். அவர் சொன்ன அத்துனையும் உண்மையே, தேவர் நினைத்தால் மாநக்காவரத்தையோ, இல்லை கடாரத்தையோ, இலாமுரித்தேசத்தையோ உனக்காக வென்று தரமுடியும் இதில் எனக்கு சந்தேகமே கிடையாது.
சிலசமயங்களில் வாள் பயிற்சிகளின் போது, வல்லவரையரின் வாளை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பறக்கடிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் நாங்கள் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழன்” ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க, என் ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் காந்தளூர்ச்சாலை மீது போர்புரிந்த பொழுதுதான் உண்மையை உணர்ந்தேன்.
அந்த முன்குடுமி அந்தணர்கள் போர்வீரர்கள் போல் உடையணிந்து வந்ததும் தான் தாமதம், வந்தியத்தேவரின் முகத்தில் தெரிந்த கோபமும், அவரின் வாளின் வேகமும் என்னை வியப்படையசெய்தது.
பதினாறு ஆண்டுகள், ம்ம்ம், ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க இத்தனை காலம் பொறுத்திருந்த அந்த வெறியை நான் அவர் கண்களில் பார்த்தேன். இவரது குதிரை சென்ற இடமெல்லாம் தலைகள் உருளுகின்றன. அப்பப்பா என்ன வேகம் அப்பொழுதுதான் தெரிந்தது, தேவரால் என்னுடைய வாளை ஒரு நொடிப்பொழுதில் விசிறி எறிந்துவிடமுடியுமென்ற உண்மை.”
சொல்லிமுடித்துவிட்டு பெருமூச்சுவிட்டார் ராஜராஜர்.
சுமார் பதினாறு ஆண்டுகள், இரண்டாம் ஆதித்தன் இறந்தபிறகு, இராஜராஜருக்கு பதில் அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் ஆட்சிபுரிந்த காலம்.
அரியணையின் மேல் உள்ள ஆசையால் தனக்கு ஆதரவான ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, உத்தமசோழன், தன்னை இளவரசனாக்குமாறு, சுந்தர சோழரை வற்புறுத்த, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாதென கருதிய ராஜராஜரும் இதற்கு மனமாற ஒத்துழைக்க, இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலனுக்கு பிறகு, உத்தமசோழன் பதவியேறான்.
சுமார் பதினாலு ஆண்டுகள் தன்னுடன், துணை அரசனாக இருந்த தன் மகன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் பின்னப்பட்ட சூழ்ச்சிகளை பொறுக்கமுடியாமல், சுந்தரசோழரும் இறந்து போக. உத்தமசோழனின் ஆட்சிகாலத்திற்கு பிறகு பதவியேற்ற இராஜராஜர் முதல் காரியமாக படைதிரட்டி, கரிகாலனின் கொலைக்காகவும், காந்தளூர்க்கடிகையில் சோழர்களுக்கெதிராக போர்ப்பயிற்சி அளஇத்துவந்ததற்காகவும் முன்குடுமி சோழ அந்தணர்களை பழிவாங்கும் பொழுது நடந்த சம்பவங்கள் அவரின் மனக்கண்ணில் விரிந்தது.
“அக்கன் இன்னுமொறு உண்மையை உங்களுக்கு விளக்கவா?” என்று கேட்டுவிட்டு, ராஜேந்திரனை தன்னருகில் அழைத்தார்.
“இராஜேந்திரா, மாமாவிடம், உங்களுக்கென்று சொந்தமாக நாடு இல்லையா என ஏன் கேட்டாய்? சொல்.”
இதுவரை நடந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன், இத்தனைக்கும் தான் கேட்ட கேள்விதான் காரணம் என நினைத்து வருந்திக் கொண்டிருந்ததால். இராஜராஜர் கேட்டதும்,
“தந்தையே மாமாதான் அத்தையிருக்கும் சமயமாய்ப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க சொன்னார்கள்.”
இதைக்கேட்டு சிரித்த இராஜராஜர்,
“அக்கா இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும், ஒன்றும் அறியாத பிள்ளை கேட்ககூடிய கேள்வியல்ல அது. மேலும் இப்படி செய்ய வந்தியத்தேவரை தவிர ஒருவராலும் முடியாதென்பதும் தெரியும்.” சொல்லிவிட்டு வந்தியத்தேவரின் அருகில் வந்து அவரை கட்டிக்கொண்டார்.
ஆனால் ராஜேந்திரன் கேட்டதைப்போல் அல்லாமல், வந்தியத்தேவர், சோழ சாம்ராஜியத்தின் கீழ் “வல்லவரையர் நாடு” என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர். தன் தலைமையின் கீழ் மாதண்ட நாயக்கராக, சோழகுலத்தின் வெற்றிக்காக அவரும் அவரது படையும் பங்குபெற்றிருக்கிறது.
“தம்பி இதெல்லாம் எனக்கு தெரியாதென்றா நினைக்கிறாய். சரி இது எத்துனை தூரம் செல்கிறது என்று பார்க்கத்தான் பேசாமல் இருந்தேன்.”
....2......தொடரும்...
In சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை
Posted on Friday, February 17, 2006
நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை
பூனைக்குட்டி
Friday, February 17, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
-
Amidst the scorching days of an unremarkable summer, a single day emerged that would shatter the ordinary rhythms of my life, forever alteri...
தெரிந்த பாத்திரங்கள். தெரியாத கதை. சுவையாகத்தான் இருக்கிறது. இந்தப் பாகத்தை எங்கோ படித்தது போல இருக்கிறது. எங்கென்றுதான் நினைவில்லை.
ReplyDeleteபடித்திருக்க வாய்ப்பிருகிறது தான் இராகவன், கீதத்தில், மரத்தடியில், பின்னர் அன்புடன், மற்றும் முத்தமிழ்மன்றத்தில் கூட போட்டதாக நினைவு. இங்கே இப்பொழுது வெளியிடுவதற்கு காரணம், முடிக்க நினைப்பது தான்.
ReplyDeleteதெரிந்த பாத்திரங்கள். தெரியாத கதை.
ReplyDeleteதொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
மோகன் தாஸ். அண்மையில் பாலகுமாரனின் உடையார் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவு பார்த்தால் அதில் வந்த எல்லாமே இருக்கின்றது. கதை நிகழ்வு புதிது தான்; ஆனால் விவரங்கள் அதில் வந்தவை. அதனால் அவர் நாவலைப் படிப்பது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம். நடுவில் ஒரு மகானோ துறவியோ சித்தரோ வந்து இங்கு நீங்கள் ஒரு பதிவில் சொல்லியிருப்பதை அவர் (பாலகுமாரன்) பல அத்தியாயங்களில் சொல்லியிருப்பார்.
ReplyDeleteஇதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//தெரிந்த பாத்திரங்கள். தெரியாத கதை. //
ReplyDeleteஅந்த கதா பாத்திரங்கள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன மனதில்.. அந்த அளவிற்கு கல்கியின் எழுத்து அற்புதமாக இருந்தது.
ஒரு சந்தேகம் கர்ணன் என்று தானே சொல்வார்கள் நீங்கள் கன்னன் என்று சொல்கிறீர்கள்??
அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
அன்புடன்
கீதா
பொட்டீக்கடை நிச்சயமாக இந்த வாரத்தில் இந்தக் கதையை முடித்துவிடுகிறேன். காத்திருங்கள்.
ReplyDeleteநான் சொல்ல வந்தது வேற விஷயம் குமரன் இது ஒரு வகையான் பிக் ஷன் கதை மாதிரி. சைன்ஸ் இல்லாத பிக் ஷன் கதை. எழுத ஆரம்பித்ததற்கான காரணம் முடிவில் கொஞ்சம் விளக்கமாக தரப்பார்க்கிறேன்.
ReplyDeleteஇல்லங்க கீதா தமிழில் கன்னன்னு தான் சொல்றது வழக்கம். :-)
ReplyDeleteமோகன்! பள்ளிக்கூடத்துல படிக்கும் போது வரலாறு பாடத்தை பரிட்சைக்காக மனசில் ஒட்டாமல் படித்தது. நான் இப்போ சில History Channel பார்க்கும் போது, பள்ளிக்கூடத்துல நிறைய மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று தோன்றும். இப்போ உங்க கதையை படித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. தொடருங்கள்.
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம். அர்ஜுனன் கதைல 'கன்னன்' என்று போட்டிருக்கிறீர்கள். அது கன்னனா...கர்ணனா?. எனக்கு சுத்தமா வரலாறு அறிவு கெடையாது :-). அதான் கேட்டுப்புட்டேன் :-))
அன்புடன்,
சிவா
சிவா, கர்ணனை கன்னனுன்னு தமிழ்ல சொல்லும் வழக்கம் உண்டு. எதற்கும் நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முறை நிச்சயித்துக் கொள்ளுங்கள். :-)
ReplyDelete//ஒரு சோழ பரம்பரைக் கதை //
ReplyDeleteஇதை பார்த்த உடன், அமைதிப்படையில் நம்ம அம்மாவாசை (சத்தியராஜ்) சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ நாகராஜ சோழன் என்பது போலவோ என்று நினைத்தேன்... கதை நன்றாக உள்ளது.
நன்றி
நன்றி குழலி. நன்றி குழலி. என்னமோப்போங்க இப்படி சொல்லிட்டீங்க, சோழர்களோட பெயரை கெடுத்துட்டார்னு கேஸ் போடலாம்னு நான் இருக்கேன். (மணிவண்ணன் மேல.) :-)
ReplyDelete