In கங்கை கொண்ட சோழபுரம் சோழர்கள்

இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு

சில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.

இந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. :(


மாளிகைமேடு தற்போது




சுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்


கிடைத்த கல்வெட்டு ஒன்று - காலம் கிபி 1100


மாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம்! இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.

மாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்(!!!) கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

இனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இணை அரசனாக நிர்வகித்தல்

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்

இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

படையெடுப்பு - தொடக்க காலம்
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் '''மஹிந்தா V''' பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

ஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு

இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்

இராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.

ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.

மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.

இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

தேவிக்கு தனிக்கோயில்

இது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.

சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.

முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.

பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.

அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.

























Read More

Share Tweet Pin It +1

37 Comments

In

தாரை தப்பட்டை

குப்பை கூளமே இல்லாமலாடா வைச்சிருக்கீங்க எவனாவது ஸ்லம்டாம் மில்லினியர் படம் எடுத்தா ஆரம்பிச்சிடுவானுங்க சேரியைப் படமெடுக்கிறான்னு. சேரியே இல்லாமலா வைச்சிருக்கீங்க, படமெடுத்தா என்னடா குறையும். இந்தியாமேல குத்தம் சொல்றாங்கன்னு இப்ப தமிழ்நாட்டு மேல குத்தமா? இதெல்லாம் இல்லாமலேயே இருக்கு ஊரில. ஏன் எடுக்கக்கூடாது படம், எல்லாத்தையும் பத்தி எடுக்கலாம். நான் கடவுள் எடுத்தா பிரச்சனை, தார தப்பட்டைப் பத்தி எடுத்தா பிரச்சனை. உண்மையை படமா எடுத்தா பிரச்சனையா? இந்தப்படத்தில் நான் பிரச்சனையில்லை என்று சொல்லவில்லை ஆனால் அது கலை சார்ந்த பிரச்சனை. இதைத்தாண்டியும் எடுத்திருக்கவேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை. ஆனா இதுக்கே டங்குவார அவுக்குறானுங்க. பாலா இதுக்கு மேல எடுத்துட்டாலும்.

அதான் ரஜினி முருகன், வவாசங்கம்னெல்லாம் படம் எடுக்குறானுங்களே. அதைக் கொண்டாடிட்டுப் போங்க. பாலாவைக் குத்தம் சொல்லாதீங்க. இதில மனநோயாளியாம், டிவிட்டரில் பலது பார்த்தேன். இதைப்பத்தி பேச விருப்பமில்லை.

இது டிவிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே எழுதியது

”அம்மணமா கூட ஆடுவேன்னு” வரு சொன்னது இளையராஜா ஒரு பிட்டுப் போட்டிருக்காரு பாரு. அதுக்காகத்தான் அந்தாள் மியூஸிக் போடக்கூடாது இந்தப்படத்துக்கு.

 ஒக்காளி சந்தோஷ் நாராயண்னுக்கு பாலா கொடுத்திருந்தா, தூக்கி நிறுத்தியிருந்துருப்பான் மனுஷன். பாலாய்ப்போன நீஎபொவ படம் போல் கொலையா கொல்றார். :(

 ஏன் பாலா குத்தவைச்சு அத்தன காலம் ஆனபின்னாடியும், ஆச மாமன் இருந்தும், கன்னியா இருக்கணும். பாலாவோட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்னு இது.

 Anurag Kashyap இந்தப்புள்ளியை அநாயாசமாய்க் கடக்கிறார். தமிழில் குலால் எல்லாம் செய்யவே முடியாது. அங்க தான் நிக்கிறார் அனுராக்.

 ஹீரோயினைக் குடிக்க வைத்திருக்கிறார், இன்னும் சில படத்தில் கன்னிக் கழிய வைச்சிருவார்னு நினைக்கிறேன். இளையராஜாவை ஒழிச்சா சரியாய்டும்.

 ஆனா பாலா தொடுற புள்ளியை தொடறதுக்கு கூட தமிழில் ஆள் கிடையாது. இருந்த ஒரு செல்வராகவனையும் காயடிச்சிட்டானுங்க.

 கரகாட்டக்காரன் படத்தில் ஒரிஜினல் கரகாட்ட சீன், கோவை சரளா ஒரு அறிமுகத்தில் பாவாடையைத் தூக்கிக்காட்டுற சீன் தான்.

 பாலாவுக்கு எடுக்கத்தெரியாதுன்னு இல்லை, சேது படமே மூணு ரீலு தான்னு சொன்ன உத்தமன்டா பாலா. பாவம் பார்க்கிறார். இல்லாட்டி காயடிச்சிட மாட்டீங்க??

 வரு கல்யாணத்துக்கு வரும் பேக்ரவுண்ட் சாங்க், படத்தை drag பண்ணுது. மனதில் சந்தோஷ் நாராயணன் இசை ஓடுது. யாராவது ரீமிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணனும்.

இந்தப்படத்துக்கு எவனாவது இளையராஜாவுக்கு அவார்ட் கொடுக்கட்டும். டேய் மியூஸிக்காடா இது.

என்னுடைய பெரும் பிரச்சனை இந்தப் படத்தின் இசை. படம் ஒரு ஜானரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது இசை  வழுவாய் தரம் இறக்குகிறது. இந்தப்படத்தை இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டிய இசை, தேம்பி நிற்கிறது. அது என்னுடைய ஒரு பிரச்சனை, ஆனால் பாலா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால் அதுதான் வாஸ்தவம். வரலட்சுமி எல்லாம் வேற லெவல். இதுவரை இந்தமாதிரியான ஒரு சசிகுமாரை நான் சினிமாவில் பார்த்ததில்லை. புதுசா ஆட்களை உருவாக்குகிறார், அவர்களிடமிருந்தே. இந்த மாதிரி படமெடுப்பதற்கான “பால்ஸ்” பாலாவுக்கு மட்டும் தான் உண்டு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In புத்தகங்கள்

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Read More

Share Tweet Pin It +1

30 Comments

In சிறுகதை

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

March 1, 2008

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
நான் ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிவிட்டு காத்திருக்கிறேன்.

I live my life the way –
To keep you coming back to me –
Everything I do is for you –
So what is it that you can’t see?

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In கட்ட பொம்மு கட்டபொம்மன் தொண்டைமான் புதுக்கோட்டை வரலாறு

தொண்டைமான் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தாரா?

முன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும்என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்றாலும் லிங்க் கொடுக்கிறென்.

  
நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.
என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள். அப்பொழுது சொல்வேன் இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட விஷயத்தை வைத்து தான் பேசமுடியும் நாளைக்கு நிரூபிக்கப்படக்கூடிய விஷயத்தை கணக்கில் கொண்டு பேசமுடியாதென்றும். சரி என் ஜல்லியை இத்துடன் முடித்துக் கொண்டு பதிவின் விஷயத்திற்கு வரலாம்.

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டைக்கு "காட்டிக்கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் "காட்டிக்கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.

'காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லல. ஆனால் கட்டபொம்மனை தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா? காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டிவந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம். 

கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லை. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கு தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டுவந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும் சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்க்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரியவருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து(ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை!
இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?

இதுபற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்! அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.
புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம்! ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்டவிதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர்  கூறூகிறார்.(சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம் 105)

தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்க்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக் காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையில் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன(yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசை துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்டபிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனை சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தகளை செய்துகொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக்குறைப்பு, ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்கால் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல் ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவொ மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது(கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59). இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிடக் கொண்டு செயல்பட நிகழ்ச்சிகள் பலவாகும்.

மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?

அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில்(1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755லேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது. 

கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றை சரியாக படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755ம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில்(அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.

ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.

PS: மேற்சொன்ன பத்தியை எழுதியவர் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய டாக்டர் ஜெ. ராஜாமுகமது. பதிவை முழுவதுமாகப் படித்துவிட்டு அவர் சொல்லும் விஷயத்தை எதிர்த்து பின்னூட்டம் போடலாம். அந்தப் புத்தகம் படித்திருக்கிறியா இதில் இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.

Read More

Share Tweet Pin It +1

37 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவனின் சொந்த ஜானர். எழுத்து மட்டும் தான் செல்வராகவனாம், கீதாஞ்சலி இயக்குநர் என்றாலும் செல்வராகனின் இயக்க பாதிப்பு அதிகம் உண்டு, அல்லது முழுவதுமே அப்படித்தான். 3 படம் போல் இதுவும், எனக்குப் பிடித்திருந்தது. அதன்(3 படத்தின்) கிளைக்கதை அத்தனை வலியதில்லை. இந்தப் படம் அவர் பெயரில் வராமல் இருந்தது கூட நல்லதற்குத்தான்.  தமிழில் பெண் இயக்குநர்கள் பற்றி எனக்கிருந்த மூடநம்பிக்கையை நகர்த்தியது 3 படம், இது கீதாஞ்சலி இயக்கியிருந்தால் நான் இன்னும் நகர்ந்துவிட்டேன் என்றே அர்த்தம்.


கொஞ்சம் காமடி கலந்து செய்யாமல் விட்டதற்கே நன்றி சொல்லவேண்டும், மூன்று மணிநேர படமில்லை என்று நினைக்கிறேன், இப்பொழுதைய முதல் ஹாஃப் நீளம் பிந்தைய ஹாஃப் சின்னது டெக்னிக் என்று நினைக்கிறேன், படம் சட்டென்று முடிந்தது போலிருந்தது.

ஹீரோயின் பேசும் வழமை எங்கள் குடும்பத்தில் உள்ளது போல் இருந்ததால் இன்னும் என்னை நெருக்கியிருக்கக்கூடும். வலிந்து திணித்தது போலிருந்தது அந்த ஹோட்டல் சீன், இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கதையின் திரியே அங்கே தானே பிரிகிறது! ஹீரோ ஹீரோயின் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள். பெண்களை வசப்படுத்தும் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காய் ஆரம்பித்த தொடக்கம், அவர்கள் போக்கிரி பாடல் பாடும் பொழுது ஒட்டவில்லை. கீதாஞ்சலி இப்பொழுதுகளில் கருத்த - தென்தமிழக நிற - ஆண்கள் பிகர் மடிக்கிறார்கள். நீங்கள் கதையை ஹீரோவின் நிறத்திலிருந்து நகர்த்தியிருக்கலாம். பரவாயில்லை.

ஹீரோயின் முன்னமே செல்வராகவன் படத்தில் பார்த்தது போலிருந்தாலும், அடித்துச் சொல்வேன், 7Gயில் நடிக்கவைத்திருக்கலாம். சோனியாவை விட இந்த வகை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சீன் யோசிக்க முடியாத காரணத்தால் சட்டென்று கதாநாயகி கோபப்பட ஒரு காட்சி போதும் என்று நினைத்திருக்கலாம். பாத்ரூம் கிளின்னஸ் காட்சியின் இயல்பிற்காய்ப் பிடித்திருந்தாலும், ஒட்டவில்லை. இன்னும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் கதாநாயகி கதாநாயகனை வெறுத்த பின் வரும் காட்சிகள் இயல்பாய் இருப்பதாய்ப் பட்டது.

அட இப்படியெல்லாமா விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது வந்த ரேப் சீன் இதற்காகத்தான் விட்டார்கள் என்று உணர வைத்திருந்தது. ரொம்ப காலம் கழித்து தமிழ்ச்சினிமாவில் ஒரு ரேப் சீன், கதையை நகர்த்தியிருக்கிறது. துணிந்து இறங்கிய செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் பாராட்டுக்கள். ரேப் சீனுக்காக இல்லை, துணிச்சலுக்காக மட்டும், ரேப்கள் இல்லாமல் போகும் ஒரு காலத்தில் ரேப் சீன் வைக்காமல் இருக்கலாம். ”பெண்டாட்டியை ரேப்” என்கிற புள்ளியும் அதைத்தொடர்ந்த கோபமும் பயங்கர இயல்பு. ரேப் பண்ணினதும் அடுத்த நாள் குளித்து தலை துவட்டி வெட்கத்துடன் காப்பி கொடுக்கும் வழமை தான் தமிழ் சினிமா.

விவாகரத்துக்குச் செல்வதல்ல. Bravado.

மெச்சூரிட்டி காட்ட கண்ணாடி அணிவதை காண்பிப்பதை நிறுத்துங்கள், கதாநாயகி அந்தக் கண்ணாடியில் அழகாய் தெரிவது வேறு விஷயம். பொதுவாய் இவர்கள் மறந்துவிடும், கதாநாயகியின் அம்மா உருவ வேற்றுமை, பாராட்ட வேண்டியது. டிவிட்டரில் படித்தேன் கதாநாயகியின் அம்மா கதாநாயகியை விட அழகு என்பதை நான் மறுக்கிறேன், அவங்க அழகு தான் ஆனா கதாநாயகியை விட எல்லாம் இல்லை. இங்க வழிகிற ஸ்மைலி.

இதே ஜானரில் நிற்கச்சொல்லவில்லை, ஆனால் செல்வராகவன் அவ்வப்பொழுது இந்த ஜானரில் கதை செய்யணும். வேணும்னா கீதாஞ்சலிக்கோ இல்லை ஐஸ்வர்யாவுக்கோ தரலாம்.

அடல்ஸ் ஒன்லி படம் என்பதால் சொல்லவேண்டிய தேவையில்லை, குழந்தை குட்டியோட எல்லாம் பாக்கமுடியாது. :)

கல்யாணமாய்டுச்சு சொல்லக்கூடாது, ஆனாலும், ஹீரோயின் கொள்ளை அழகு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இளையராஜா வைரமுத்து ஜெயகாந்தன்

இளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து

''எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது?''

''அவரது அறச் சீற்றம்.
ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
'நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.’
'வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.’
'என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.’
'அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங் கள்.’

'பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப் பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.
'கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.
விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டா ராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.
கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந் தனை நினைத்துக்கொண்டேன்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?’ ''


--------- ஆனந்த விகடன், வைரமுத்து கேள்வி - பதி.
  

நான் அந்த இசையமைப்பாளர் இளையராஜான்னு ஊகிக்கிறேன். என்ன சொல்றீங்க.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In

உத்தம வில்லன்

எல்லாப் படங்களும் எல்லோருக்குமல்ல என்பதை இன்னொரு முறை சொல்கிறது உத்தம வில்லன். மணிரத்னம் எடுத்த குப்பை OKK போலில்லாமல் புதிய முயற்சி. அதற்குள்ளும் இணையத்தில் வெளியாகிவிட்டது உத்தம வில்லன். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் இல்லாமல் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் வெளியாகியிருந்தது. நான் எங்கே பார்த்தேன் என்பதற்குள் போகவிரும்பவில்லை. இணையம் கதறித்தீர்த்திருந்தது அதற்குள், பார்ப்பதா வேண்டாமா என்பதைப்பற்றிய கேள்விகள் இல்லை.

கதை தெரிந்திருக்கும் எனக்கும் கதை சொல்லிச் செல்வதில் விருப்பமில்லை. பேச விரும்புவது கமல்ஹாசனின் இந்தப் படத்திற்கான தேவை என்னவாகயிருக்க முடியும் என்பது. மக்களுக்குப் பிடிக்கும் ஒரு படத்தை கமலால் எடுக்க முடியாதென்பதல்ல, செய்யாதவருமல்ல, கமலுக்கு  பஞ்ச தந்திரம் போல் ஒரு கதையைத் திரைக்கதையாக்கி படமாக்க எளிதாகவே முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற பரீட்சைசார்ந்த படத்தை - அப்படிச் சொல்லவே வாய் வரலை - ரொம்பச் சாதாரணமான படம் தான் இதுவும், என்டர்டெய்ன்மென்ட் வால்யூ இல்லை - அதையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது தமிழ்ச்சினிமா பற்றி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கற்பனை தானே. மூன்று படங்கள் வருகிறதே ஒன்று இப்படியிருந்துவிட்டுப் போகட்டும் என்று கமல் விட்டிருக்கலாம். 

எனக்குப் பிடிக்காத அம்சங்கள் இதில் இருந்தது, பாலச்சந்தருக்கு நடிக்க வரலை, பூஜா குமார் சுத்தம். இயல்பாய் வந்திருந்தது ஊர்வசியுடைய நடிப்பு தான், மிகையைத் தொடாமல் விட்டுவிலகியிருந்தார். பாலச்சந்தர் ஒருமுறை சொல்லியிருந்தது போல், கமல் ஒரு படத்தில் காட்டத்துடிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் இன்னமும் கிரிஸ்பாக படம் வந்துவிடும் தான். எல்லாவற்றையும் ஒரே படத்தில் போட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தையும் அவருக்குத் திணித்தது கோடம்பாக்கமும் தமிழ் சினிமா ரசிகர்களும் தான். 

இது போன்ற படமெடுக்கும் துணிபு கமலுக்குத்தான் வருமென்ற சொல்ல முடியவில்லை, இன்னமும் சினிமாச்சூழல் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதற்கே குதிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ப்ளாக்-ஆக இன்னும் வறட்சியாக எடுத்திருந்தால் என்னவாகியிருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 'வோ லம்ஹே' படத்தில் வரும் ஒரு காட்சியை கமல் எடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. சொல்லப்போனால் எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காததே, தமிழ்ரசிகர்களுக்காக கமல் தன்னைத் தானே கட்டுக் கொண்டிருக்கும் போக்கு தான். இந்தப் பக்கமும் வராமல் அந்தப் பக்கமும் வராமல் மத்தியில் நின்றிருக்கிறார் கமல். கலைப் படம் எடுக்கத் தெரியாதவர் அல்ல, வணிக சினிமாவும் எடுக்கத்தெரியாதவர் இல்லை, ஆனால் மத்தியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் இக்காலங்களில், ஏதாவது ஒரு பக்கம் நகர்ந்துவிடுவது அவருக்கும் தமிழ்ச்சினிமாவுக்கும் நமக்கும் நல்லது. 

அவர் கதை - திரைக்கதைக்கு மற்றவர் இயக்குநர் என்றால் அது எப்படிப்பட்டமாயிருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு, எங்கே ரசிகர்கள் ஏமாந்தார்கள் என்று தெரியாது. கடைசி கமலஹாசன் படங்களைப் பார்த்தாலே இம்மாதிரியான படத்திற்கான தேவையும் அதை கமல் செய்யாமல் விடமாட்டார் என்பதும் தெரிந்தேயிருக்கும். மீண்டும் சொல்கிறேன், எப்பொழுதும் எல்லாப்படமும் எல்லோருக்குமல்ல. இதில் உயர்த்தி தாழ்த்தி சொல்வதில் எதுவும் இல்லை, நான் எல்லாப் படங்களையும் தொடர்ச்சியாய் பார்த்தே வருகிறேன், நெட்ப்ளிக்ஸில் ஐந்து நட்சத்திரத்திற்கு ஒன்று வாங்கிய படங்களையும். சினிமா என் வாழ்க்கையின் ஒரு பாதி என்று முடிவு செய்திவிட்டிருக்கிறேன், இன்னமும் சுஜாதா போல் ஆகவில்லை, கொஞ்ச காலம் தான் உயிர்வாழ்வேன் என்று தெரிந்த பின்னால் மட்டுமே நான் சினிமாவில் காலம் தள்ளுவதை நிறுத்துவேனாயிருக்கும். 

இதை உத்தம வில்லன் விமர்சனம் என்று சொல்லவில்லை, தொடர்ச்சியாய் இணையத்தில் பார்த்த விமர்சனங்களால் தோன்றிய எண்ணம். சுஹாஸினி சினிமா விமர்சனம் பற்றிச் சொல்லியதற்கு கமல் கொடுத்த வியாக்கியானம் சரியானதல்ல, ஆனால் அது அவருடைய பர்ஸனல் ஒப்பினீயன் என்றே எடுத்துக் கொள்கிறேன். சில பல காரணங்களுக்காக இந்தப் படத்தையும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகச் சொல்வேன் தான், இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம், ஆனால் அது தமிழ்மக்களுக்கு மொத்தமாகப் பிடிக்காமல் போயிருக்கும் என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

எம்டிஎம் விமர்சனம் பார்த்தேன். பின்னர் இன்னும் சில எம்டிஎம் சொல்லும் புள்ளியில் நின்று. ஆனால் இந்தப் படம் முக்கியம் என்றால், எம்டிஎம் சொல்லும் அதே புள்ளிக்காகத்தான். அவர்களுக்கு வெறுப்பதற்கான புள்ளி என்றால் எனக்கு இந்தப் படம் பிடித்திருப்பதற்கான புள்ளி அது தான்.

ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்கள் தொடக்கூடாத விஷயம் என்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்துகிறார்கள்.  கமலால் இத்தனை துள்ளியமாய் கிறிஸ்துவத்தை, இஸ்லாத்தை துகிலுறிக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் ஒன்றுதான். இன்னமும் இந்தியாவில் தமிழகத்தில் இவை சிறுபான்மை மதங்கள் தான், அதைப்பற்றிய விரிவான விமர்சனம் அந்த மதங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருக்கும், அது அப்படித்தான் முடியும். பில் மாஹ்ர் அளவிற்கு கிறிஸ்துவத்தை ஓட்டுபவர்கள் குறைவு தான்(பில்-இடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் தற்சமயத்தில், இஸ்லாம் பற்றி அவர் வைக்கும் விவாதம்.) இப்படி இவர்கள் கதறுவதற்காகவே இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்.

PS: Updated the post after reading MDM review. 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்

பெண்ணியமும் சில புடலங்காய்களும்

ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே என்னைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி வரவில்லை, ஏனென்றால், என்னைவிட குறைவாய்ப் படித்த, தமிழ் மீடியத்தில் படித்தப் பெண் அதிக சம்பளம் வாங்கும் வாய்ப்பிருக்காது என்பதல்ல அதற்கு காரணம். அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பப்போவதில்லை என்பதுதான். ஆப்பியஸ்லி வேலைக்குப் போகாத பெண் என்னைவிட அதிக சம்பளம் வாங்க முடியாதில்லையா?

இதெல்லாம் சொல்லப்போனால் ரொம்பவும் சராசரியானவை. பின்நாட்களில் என் நண்பர்களுடைய திருமண விபத்திற்கு பிறகு இந்த பட்டியல் நீண்டது தான் ஆச்சர்யம், அதுவும் முந்தயதைவிடவும் நீளமாய். பொண்ணோட பேமிலி எங்க பேமிலியைவிட வசதியானதாய் இருக்கக்கூடாது. பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருக்க வேண்டும். நிச்சயமாய் ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே என்பது அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட அத்தனை நண்பர்களின் ஒட்டுமொத்த அறிவுரையாக இருந்தது. அதைப் போலவே பெண்ணிற்கு கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் டீபால்டாக சொல்லப்பட்டது. அப்படி ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு நிச்சயமாய் பெண்ணியம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் எதற்கெடுத்தாலும் பிறகு சண்டை வருமென்றும் சொல்லித்தரப்பட்டது. இப்படியாக பேச்சுப்போட்டியில் அந்தப் பெண் ஒருமுறை கலந்துகொண்டிருந்தால் கூட நிராகரிக்கும் படியாகக் ஒரு தண்ணீர்ப்பார்ட்டியில் அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட நண்பர் அழுதுகொண்டே கூற, சிறிது நேரத்தில்தான் தெரிந்தது. நண்பருடைய மனைவி சண்டை வந்துவிட்டால் நேரடியாக பாரதி, பாரதிதாசன் போன்ற இன்னபிற ஆட்களின் கவிதை வரிகளைப் பாடிக் காண்பித்து கடைசியில் நீங்களெல்லாம் எப்பத்தான் உருப்புடுவீங்களோ என்றுதான் முடிப்பார் என்பது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், பெண்ணுடைய சகோதரகள், பொண்ணுடைய சகோதரியுடைய கணவர்கள் இவர்களை விட நீ சம்பளம் அதிகம் வாங்கினால் மட்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்றுகூட அட்வைஸ் வழங்கப்பட்டது.

அதென்னமோ கல்யாணம் ஆகிவிட்ட அத்தனை நண்பர்களுக்கும் என்னுடன் தண்ணியடிப்பதில் ஒரு அலாதி திருப்தி, தங்களின் சோகங்களைச் சொல்லி விரைவில் திருமணம் ஆக இருக்கும் ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வீரர்கள் போன்ற ஒரு உணர்வு வரும்போலிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் இதற்கெல்லாம் வழியில்லாமல் அப்பாவிற்கு தெரிந்தவர் மகள் என்ற பெயரில் நான் அகிலாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். பொண்ணு பிராமணப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் எப்படியாவது இந்தக் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திவிட நான் செய்த அத்தனையும் தவிடுபொடியானது. இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் இதெல்லாம் நினைவில் வர. நான்கு ஆட்கள் தலைக்கு மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் போன்ற தலைவலி தானாய் வந்தது.

தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரிந்தது, ஆராம்ஸேயாய் கையில் காபித் தம்ளருடன் சோபாவில் உட்கார்ந்து, எதிரில் தேடித்தேடி கஷ்டப்பட்டு வாங்கிய டீப்பாயின் மீது வைத்துக்கொண்டிருந்த, அகிலாவின் கால்கள். அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்திருக்க டீவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலைப் பார்த்ததும் அதுவரை கஷ்டப்பட்டு பொத்திக்கொண்டிருந்த கோபம் வார்த்தைகளாய் சீறியது.

"யேய் எனக்கு இப்ப உடனேயே காப்பி வந்தாகணும்."

"ஏண்டா புள்ளத்தாச்சிப் பொம்பளைக்கிட்ட உன் ராங்கித்தனத்தைக் காட்டுற. ஒரு நிமிஷம் இரு போட்டுத் தர்றேன்." அம்மா எழுந்திருக்க, அந்த நொடியே அதுவரை டீப்பாயில் இருந்த ரிமோட் வேகவேகமாக அவள் முதுகிற்கும் அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கும் இடையில் சென்றது.

"அகிலா சொன்னா மரியாதையா கேளு. இப்ப ரிமோட் என்கிட்ட வந்தாகணும்."

அவளிடமிருந்து பதிலேதும் வராமல் உதட்டைச் சுழித்து பழிப்பு மட்டும்தான் வந்தது. எங்க வீட்டுப் பொண்ணுங்க இப்படிச் செய்து பார்த்ததேயில்லை. இதை ஒருநாள் இருவரும் சந்தோஷமாக இருந்த நாள் ஒன்றில் சொல்லிக்காட்ட, உங்க வீட்டுப் பொண்ணுங்களெல்லாம் பொண்ணுங்களே இல்லை என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் நான் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்து பிறகு அக்காவிடம் சொல்லி சமாதானம் ஆனது நினைவில் வந்தது. அவளுக்கு நன்றாகவேத் தெரியும் இந்தச் சமயத்தில் நான் அவளின் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று. ஏனென்றால் அவள் எங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.

மனதிற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்க, கண்களால் நான் கைகளால் செய்ய முடியாததை செய்துகொண்டிருக்க, கண்ணெதிரில் காபித் தம்ளர் நீட்டப்பட்டது, கூடவே தலையில் ஒரு கொட்டுடன்.

"வந்ததும் வராததுமா அவகிட்ட ஏண்டா வம்பு பண்ற? அவ ஒன்னும் சீரியல் பார்க்கலை, நான் தான் பார்த்துக்கிட்டிருந்தேன். போதுமா?"

இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது கடந்த நான்கைந்து மாதங்களாய், நாங்கள் மணாலியில் இருந்து திரும்பியதிலிருந்து அம்மாவின் புல் சப்போர்ட் அவளுக்குத்தான். இது என் கோபத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்றார்போல் அவள் திரும்பவும் பழிப்புக் காட்ட. அம்மா,

"ஏய் சும்மா இருடீ. நீயும் அவனுக்குச் சமமா வம்பிழுத்துக்கிட்டு." எனக்குச் சாதகமாய் பேசினாலும் கோபம் தலைக்கேற.

"இனிமேல் நான் வேலைக்குப் போக மாட்டேன். இவ குட்டிப் போட்டதும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டு வரட்டும் நான் வீட்டைப் பார்த்துக்கிறேன்."

"குட்டிப்போடுறன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன வேலைக்குப் போகணும் அவ்வளவு தானே போனாப்போகுது. என்ன பெரிய விஷயம்? புள்ளப் பெத்துக்கிறத விட பெரிய விஷயம்."

அம்மாவிற்கு இந்தச் சண்டை சின்னப்பிள்ளைத்தனமாய்த் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவில் இருந்து எழுந்தவர்.

"நான் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போகப்போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதுதான் நான் உங்க ரெண்டுபேருக்கும் கொடுக்குற டைம். அதுக்குள்ள சண்டபோடுவீங்களோ, இல்லை கத்தியை எடுத்து மாத்திமாத்திக் குத்திப்பீங்களோ தெரியாது ஆனா நான் வந்தப்புறம் வீடு அமைதியாகிடணும். அவ்வளவுதான்."

அம்மா அந்தப் பக்கம் சென்று ஒன்றிரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். என்னையே கண்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அருகில் வந்தாள். அவள் அப்படிப் பார்த்ததற்கான அர்த்தம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னை கணக்கிடும் கால்குலேட்டராய் கண்களை மாற்றிக்கொண்டு, வரப்போகும் பொய் மலையில் இருந்து அன்னமாய் உண்மையை கறக்கும் ஒரு நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிதான் அது.

"என்னாச்சு என் செல்லத்துக்கு ஏன் இப்படியொரு கோபம். ஆபிஸில் கோகிலா ஆண்ட்டி ஏதாவது வஞ்சாங்களா?"

இதுதான் எனக்கு அகிலாவிடம் அடியோடு பிடிக்காதது. நான் நடந்த பிரச்சனைய அடியோடு மறந்து வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி உண்மையான பிரச்சனையில் தெரிந்துவிட்டிருந்த என்னுடைய கையாலாகாத்தனத்தைக் கோபமாக வெளியிட்டுக் மறைக்கலாம் என்றால் அது என் செல்லப் பெண்டாட்டியிடம் நடக்காது. அதுவும் நிறைய பொய்களைச் சொல்லி அடுக்குவதற்கு முன்பே உண்மையான பிரச்சனை கண்டுபிடிக்கப்படும். என்னுடைய பொய்கள் செல்லுபடியாகாத ஒரே ஆள் அகிலாதான். சின்னவயதிலிருந்தே நம்பும்படியாய் பொய் சொல்லி வளர்ந்தவன் ஆதலால் அநாயாசமாய் வெளிப்படும் மூட்டையை அதைவிட அநாயாசமாய் புறந்தள்ளிவிடும் சாம்ர்த்தியம் அகிலாவிடம் நான் எப்போதும் மலைக்கும் ஒரு குணம்.

ஒரு விஷயம் ஒரு நபருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த விஷயத்தை எந்தவித பிரச்சனையுமில்லாமல் அந்த நபர் கண்டுபிடித்துவிடும் நேரத்தில் ஏற்படும் வாழ்க்கையின் மீதான விரக்தி எனக்கும் ஏற்பட்டது அவளுடைய அந்தக் கேள்வியால். அப்படியிருந்தும் உண்மைவெளிப்பட்டுவிடக்கூடாது என நினைத்து,

"எதுக்குத் தேவையில்லாம அவளை இழுக்குற இங்கே. என் கம்பெனிக்கும் இந்த முடிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தெரியுமா நான் வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு இருபது. இப்ப முப்பத்தி மூணாகுது. அக்காவிற்கு கல்யாணம் செய்து வச்சு, அம்மா அப்பாவிற்கு வீடு கட்டிக்கொடுத்து. உன்னைக் கல்யாணம் பண்ணி இப்ப குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.

ஏதாவது கேட்டா உடனே வீட்டைப் பார்த்துக்கிறதும் கஷ்டம் தான்னு ஒரே அலப்பற. அதனாலதான் இப்படி ஒரு முடிவு. இனிமேல் நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன். வேணுனா நீ பெத்துப்போடுற குட்டிப்பிசாச பார்த்துக்குறேன்.

நீயே சொல்லு என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம். நிம்மதியா உட்கார்ந்து ஒரு சீரியல் பார்க்கமுடியுதா, மனசவிட்டு ஒரு சீரியல் கேரக்டருக்காக அழ முடியுதா. என்ன வாழ்க்கை அதான் இப்படி ஒரு முடிவு. நீயும்தான் படிச்சிருக்கயில்லை, வேலைசெய்தா என்னவாம்."

நான் சொல்லிமுடிக்க அவள் நினைத்திருக்க வேண்டும், இப்ப பேசி தீர்க்கிற பிரச்சனையில்லை இது என்று அவளாய் நகர்ந்துபோய் பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கதில் கிடந்த கல்கியை புரட்டத் தொடங்கினாள். நானும் ஒருவாறு அவளை சமாளித்ததாய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கை, கால் அலம்பிக் கொண்டுவந்திருப்பேன் அம்மா கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். வந்ததும் வராததுமாய் புதுப்பிரச்சனை.

"டேய் இங்கப்பாரு எனக்கு காலெல்லாம் ஒரே வலியாயிருக்கு. இன்னிக்கு நீ அகிலாவை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு."

என்னுடைய வேலை காரணமாக ஒரு சமச்சீரான அலுவலக நேரங்கள் எனக்குக் கிடையாது. அதன் காரணத்தால் பொதுவாகவே நான் நடுஇரவில் ஆந்தை போல் உலாவிக் கொண்டிருந்ததால் அகிலாவை டாக்டரிடம் அழைத்துச் செல்வது, வாக்கிங் கொண்டு செல்வது என எல்லாச் சமாச்சாரங்களையும் அம்மாதான் செய்து வந்தார்கள். இதுவரை கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே அவள் என்னுடன் வந்திருப்பாள். இதில் இடையில் ஒரு மாதம் ஆன்சைட் வேறு. அம்மா என்னிடம் நேற்று அகிலாவிற்குத் தெரியாமல் கேட்டுக்கொண்டதற்காக மறுபேச்சுப் பேசாமல் அவளுடம் கிளம்பினேன். அகிலாவிற்கு ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும் என்னுடைய செயல்.

சாதாரணமாகவே வேகமாக நடக்கும் எனக்கு அவள் மெதுவாய் நடந்துவந்ததுதான் காரணமா தெரியாது ரொம்பவே மெதுவாய் நடப்பதாய்ப் பட்டது. பெங்களூர் பசுமையான ஊர், 100 மீட்டருக்குள் ஒரு பூங்காவைப் பார்த்துவிடலாம். அதுவும் நவம்பர் டிசம்பர் மாதத் தொடக்கம் என்பதால் பூங்காவெங்கும் விதவிதமான ரோஜாப்பூக்களைப் பார்க்கலாம். எனக்கும் ரோஜாப் பூக்கள் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சாப்ட்வேர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தில் மறைந்து போன ஒரு விஷயம் ரோஜாக்களுடன் நேரத்தை செலவிடுவது.

மௌனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் நடை, பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் பெஞ்சில் முடிவடைந்ததைப் போலவே எங்கள் மௌனமும் ஒரு முடிவிற்கு வந்தது. பூங்காவிற்குள் நுழையும் பொழுதே என்னுடைய கைகளை இருகப் பிடித்துக்கொண்டாள் அகிலா. அந்தத் தொடுதல் டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் இருந்தது.

"மோகன் நம்ம பையன் உதைக்குறான் பாருங்க." என்று சொல்லி அவள் கையோடு சேர்த்திருந்த என் கையை அவள் வயிற்றுப் பகுதிகுள் கொண்டுசெல்ல, அநிச்சையாய் என் கைகளை வெளியே உருவினேன். முதலில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் செய்தாலும் பிறகு செய்தது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் எனத் தெரிந்ததால் சமாதனப்படுத்தும் எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ சப்தமாய்ச் சிரித்தாள்.

"இத்தனை வருஷத்தில் நீங்க இன்னமும் மாறவேயில்லை. தாஸ்."

உண்மைதான், அந்த அந்நிச்சை செயல் அவள் மனதில் எந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியிருக்கும் என்று எனக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை நினைத்ததும் எனக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. எங்கள் திருமணம் முடிந்து அதாவது தாலி கட்டிமுடித்த பிறகு ஏதேதோ பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் என்னிடம், அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல நான் விழித்தேன்.

அதற்கு அவர் இது சாந்திமுகூர்த்த பூஜைக்காக, கல்யாணம் முடிந்ததும் ஐயர் அவர் வீட்டிற்கும் நாங்கள் எங்கள் வீட்டிற்கும் செல்வதாய் ப்ளான் அதனால் சாந்திமுகூர்த்தத்திற்கு முன்னர் செய்யவேண்டிய சடங்கை இங்கேயே செய்துவிடலாம் என்றே சொல்வதாகவும், சீக்கிரமாக அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல, அப்படியொரு சடங்கு எங்கள் பழக்கத்தில் கிடையாது என்பதால் என் துணைக்கு அக்காவையோ அம்மாவையோ தேட, பக்கத்தில் இருந்த ஒரே ஆள் அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ தான்.

நான் ஐயர் சொன்னதை மட்டும் செய்யாமல் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் பார்த்து திருதிருவென முழிக்க, ஐயர் 'ஓய் உம்ம அகமுடையாள் தப்பா நினைச்சுக்க மாட்ட. சும்மா தொடுங்க ஓய்' என்று சொல்ல. நடப்பதையெல்லாம் பார்த்து ஜெயஸ்ரீ சிரிக்க அகிலா என்னுடைய கையை எடுத்து அவள் வயிற்றுப்பக்கத்தில் கொண்டு சென்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று. அந்த நினைவுகள் பசுமையாக எழவும். வேகமாய் விலக்கிக் கொண்ட கையை நானாகவே அவள் வயிற்றுப்பக்கம் கொண்டு செல்ல, என் கைகளுக்குக் கீழ் எதுவோ ஒன்று அழகாய் புரள்வதாய்த் தோன்றியது, தொடர்ச்சியாய் அகிலா லேசாய் முனகினாள்.

நான், "நம்ம பொண்ணுக்கு அதுக்காட்டியும் அவசரம் பாரு..." சொல்ல அகிலா,

"வேண்டவே வேண்டாம், உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அப்புறம் பொறக்குறது பொண்ணா பொறந்துத் தொலைக்க என்னென்ன பிரச்சனை பண்ணுவீங்களோ." என்று சொல்லி அழகாய்ச் சிரிக்க, நான்.

"இங்கப்பாரு எதுக்கூட எதை கம்பேர் செய்யற. எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா. சொல்லப்போனா என்னை நான் பெண்ணியவாதின்னு கூட சொல்லிக்குவேன். ஒரு பெண்ணியவாதிக்கான கடமைகள் எதுஎதுன்னு யாருமே இதுவரை வரையறுத்துச் சொல்லலை. இதுவரைக்கும் நீ எதாவது சொல்லி நான் இல்லைன்னு சொல்லியிருக்கேனா? இப்பக்கூட பாரு உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டில் இருக்கேன்னு சொல்றேன். இதைவிட என்ன செய்துவிடமுடியும் ஒரு பெண்ணியவாதியாக. சொல்லப்போனால் இதுமட்டுமே போதும் என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்க." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"பெண்ணியவாதியாம் பெண்ணியவாதி, புடலங்காய் பெண்ணியவாதி. எனக்குத் தெரியாது உங்க லட்சணம். இன்னிக்கு கோகிலா எதுவும் வேலை கொடுத்திருக்கும். நீங்களும் செய்திருப்பீங்க, பார்த்துட்டு இதை இப்படி செய்றத விட இன்னொருமாதிரி செஞ்சா நல்லாவும் வேகமாகவும் வேலை செய்யும்னு சொல்லியிருக்கும். அங்க சரி சரின்னு சொல்லிட்டு வந்து உங்க கோபத்தை இங்க காட்டூறீங்க. சரிதானே?"

அவள் சொன்னதன் ஒரு பாதி சரிதான், கோகிலாவிற்கும் எனக்கும் இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இன்று நடந்தது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது. நான் வேலைக்குப் போகமாட்டென் என்று சொல்லியதற்கு அகிலாவும் ஒரு காரணம்.

நேற்று அம்மா வெளியில் ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி காரில் இறக்கிவிடச் சொன்ன பொழுது நான் ஒன்றும் யோசிக்கவேயில்லை, சாதாரண நிகழ்வுதானேயென்று. ஆனால் அம்மா வண்டியில் உட்கார்ந்து வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னது தான் நான் வேலையை சிறிது நாட்கள் விட்டுவிட நினைத்ததற்கு முக்கியக்காரணம்.

"தம்பி அகிலா ரொம்ப பயப்படறாடா! முதல் பிரசவம் வேற, அம்மா இருந்து பார்த்துகிற அளவுக்கு வசதி பத்தாது அப்படின்னு நிறைய பிரச்சனை. முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு செத்துப் பிழைக்கிறது மாதிரிடா. உனக்குப் புரியாது. கவலையேப்படாமல் நார்மலாகப் பெத்துப் போடுற பொண்ணுங்க இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.

உன்னை ஏன் இப்படி வளர்த்தேன்னு இப்ப வருத்தப்படுறேன். உங்க தாத்தா பாட்டிய ஏன் என்னைய உங்கப்பாவை கூட எப்படியிருக்கீங்க, உடம்பு நல்லாயிருக்கான்னு கேட்க மாட்ட நீ. நானும் அதை ஒரு பிரச்சனையா பார்க்கவேயில்லை. ஆனால் இதையே அகிலா இப்படி இருக்கிற நேரத்தில் அவள்கிட்ட செய்யக்கூடாதும்மா.

அவ கூட உட்கார்ந்திரு, உடம்பு எப்படியிருக்கு எதுவும் கஷ்டமாயிருக்கான்னு கேளு. அவ இத நேரா உன்கிட்ட சொல்லாட்டியும் நிச்சயமா இத உன்கிட்டேர்ந்து எதிர்பார்ப்பா. உன்னைய பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டேன்னா கொஞ்ச நாளைக்கு லீவைப் போட்டுட்டு அவக்கூட இரு.

உனக்கும் அவளுக்கும் முந்தி இருந்த பிரச்சனையை நீ முழுசா மறந்திட்டேன்னு எனக்குத் தெரியும் ஏன் அவளுக்கேக் கூடத் தெரியும். ஆனால் இந்த முழுகாம இருக்கிற நேரம் இருக்குப் பாரு எல்லாத்தையும் தப்பாவே நினைக்கச் சொல்லும், நான் சொன்னா நம்ப மாட்ட இதை எப்படி சொல்றதுன்னு கூட நான் நினைச்சேன் ஆனால் பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்குப் புரியணும்னா சொல்லித்தான் ஆகணும்னு சொல்றேன். இந்த ஐந்து மாசத்தில் அவளை தொட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீ இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவ நினைக்கிறா! அதுமட்டுமில்லாமல் நீ ஏதோ தப்பு பண்ணுறீயோன்னு பயப்படுறா, வேற பொண்ணொட தொடர்பு எதுவும் இருக்கும்னு நினைச்சு தினம் அழுகைதான். அதனால் தான் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு லீவைப் போடு அது முடியாதுன்னு வேலையை விட்டுறு கொஞ்ச நாளைக்கு."

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது அம்மா சொன்னது, அப்படியுமிருக்குமான்னு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அப்படின்னு தான் நான் அகிலாவை நினைத்தேன். வார்த்தைகளால் மட்டும் காண்பிக்கப்படுவதில்லை அன்புங்கிறது அவளுக்கு தெரியும் என்றும் நினைத்தேன். ஆனால் அம்மா சொன்னது ஆச்சர்யத்தை அளிப்பதாகயிருந்தாலும் என் செல்ல மனைவிக்காக இதைக்கூட செய்யாம எப்படியென்று தான் வேலையைவிட முடிவெடுத்தேன். அதைச் சொன்னால் ஒருவேளை ஏதாவது காம்ப்ளக்ஸ் வரலாம் என்பதால் கோகிலா மேட்டரையே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து அகிலா கேட்டதற்கு உண்மை என்பதைப் போல் சிரித்து வைத்தேன்.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

மச்சினிச்சி வந்த நேரம்

"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.

"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.

நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.

"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல

"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."

அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.

"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.

"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.

"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."

சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.

வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.

"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.

"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"

"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"

நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."

நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"

கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.

என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,

"என்னடா பிரச்சனை?"

சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,

"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"

"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.

"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."

அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,

"யோவ்..." என்றாள்.

நான் திடுக்கிட்டவனாய்,

"என்னாடி இது மரியாதை கொறையுது."

"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.

ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."

அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.

"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."

வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.

அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.

சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

நான் நுழைந்ததும்,

"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."

"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.

"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.

"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.

"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."

அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.

"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."

"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.

நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.

"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."

விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.

"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை."

நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.

"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.

இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"

ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."

"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.

"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."

அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.

"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.

"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"

"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.

"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.

"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.

ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.

"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"

பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.

"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"

நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"

மூச்சை இழுத்துவிட்டவள்,

"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"

சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.

பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."

"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."

சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு

"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.

அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.

"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"

"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.

"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.

"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"

நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.

"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."

அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.

"எங்க கிளம்புறீங்க?"

"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.

"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,

"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"

கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,

"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.

காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.

"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"

"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.

"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,

"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.

"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.

"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"

"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.

இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.

உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"

முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.

"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.

"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.

"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"

கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.

"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.

"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

Popular Posts