In இருத்தலியநவீனம் கவிதைகள்

கனசதுரங்களை உடைத்தெறியும் பயணம்

என் எல்லைகளைப் பற்றிய கேள்வி
ஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்
எல்லா நாட்களிலும் இருக்கிறது
நீள அகலமாய் குட்டை நெட்டையாய்
அவரவர்களுக்கென்று எனக்கான
எல்லை கனசதுரமாய்

சுருங்கத்தான் போகிறதென்றாலும்
நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது

கனசதுரத்திற்கு வெளியில்
என் நிழலின் நடமாட்டம்
தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து
கணங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது
 
தவிர்க்கமுடியாததாயும்
ஒப்புக்கொள்ள முடியாததாயும்
நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்
உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்
தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்
வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு
நிரப்பப்படுகிறது
நிரப்பப்படாத பக்கங்களைப்
பற்றிய பயமில்லாமல்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

புத்தாண்டு வாழ்த்துக்களும் அதைப் பற்றிய சில குறிப்புக்களும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் சொல்ல வேண்டும் என்று என்னுள் நிறைய கேள்விகள் தோன்றியிருக்கின்றன. நாளை மற்றொரு நாளே என்பது போன்ற எண்ணங்கள் உண்டென்றாலும், கொண்டாட்டங்களுக்கான நாட்கள் என்று எனக்கும் சில இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன.

புதிய ஆண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக இருக்கட்டும் என்கிற போக்கில் வாழ்த்துச் சொல்கிறோம். ஆனால் இன்றில்லாத நாளையோ அல்லது அடுத்த 365 நாட்களில் எப்பொழுதோ ஒரு முறை/பல முறை வரக்கூடிய சந்தோஷத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும். எல்லா நாளும் நல்ல நாட்களே, எல்லா பொழுதுகளும் மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மையை அளிப்பதாக அமையட்டும் என்று சொல்லலாம் என்றால், ப்ராபபிலிட்டு படி அதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைந்ததாக இருக்கும்.
 

எனக்கும் சில வருடப் பிறப்பு நினைவுகள் உண்டு, கிரிக்கெட் பித்து பிடித்து அழைந்த நேரத்தில் 12 மணிக்கு தேசியக் கொடியேற்றி தெருவிற்கே இனிப்பு வழங்கி கலாய்த்திருக்கிறேன் என் கிரிக்கெட் அணியுடன். ரோடு முழுக்க பெரிதாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எழுதியிருக்கிறேன், என் கையெழுத்து காரணமாய். பைக்கில் வேகமாய் சுற்றியிருக்கிறேன் பிஎச் இஎல் ரோடுகளில். நான்கைந்து முறை சர்சிற்குச் என்று என் பாவங்களைக் கழுவியிருக்கிறேன், அப்படியே கோவில்களுக்கும். ராத்திரி 12.00 மணிக்கு சர்ச், 6.00 மணிக்கு கோவில்.

இப்பொழுதெல்லாம் அத்தனை பெரிதாய் மனம் தத்தளிப்பதில்லை, புது வருடப் பிறப்பென்று ஆனாலும் மற்றவர்களுக்காக நானும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வாழ்த்துக்கள் பெற்று அனுப்பி வருகிறேன் இந்த வருடமும்.

வலைபதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

புதிய வருடம் உங்களுக்கு மேன்மைகளைக் கொண்டு வரட்டும். :)

 

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தாரே ஜமீன் பர்

இன்று டெல்லியில் எனக்கிருந்த ப்ளான்களை திருப்பிப்போட்டது, ஆசிப்பின் சூடான இடுகையில் இருந்த இந்தப் படத்தின் விமர்சனம். சட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு நேரம் இருந்ததால் சட்டென்று கிளம்பி வசந்த் விகார் பிவிஆர் சினிமாஸில் இந்தப் படத்தின் டிக்கெட்கள் கேட்டேன், ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு குடும்பத்தில் ஒரு டிக்கெட் மீந்துவிட எனக்கு தந்துவிட்டார்கள் காசுக்குத்தான்.

ஆசிப்பிற்கு தமிழ் படங்கள் பிடிக்காதென்பது எனக்கு புது விஷயமல்ல, இதே அவர் இப்படி ஒரு தலைப்பை வைத்துவிட்டு மலையாளப்படத்தைப் பற்றி எழுதியிருந்தால் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் இந்தப் படத்தைப் பற்றி போகோவில் முன்பே விளம்பரங்கள் பார்த்திருந்ததால். சட்டென்று இந்தப் படத்தின் பால் ஆசைப்பட்டேன் அப்படி என்னத்தான் கிழிச்சிட்டார் அமீர் கான் என்று.
 
அமீர் கானின் பக்வாஸ் தனத்தை ஒத்த சில கான்செப்ட்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் சினிமா என்பதில் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களைப் போட்டுக்குழப்பி விட விரும்பவில்லை. லகான் படத்தை இந்தியாவே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது. நான் டெல்லியில் இருந்தேன் என்று நினைக்கிறேன் அந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை. இன்றும் லகான் பார்க்கவில்லை என்று சொல்லி நண்பர்களின் தேசப்பக்தி மிகுந்த பேச்சுக்களைக் கொண்டுவந்து ஒரு மாதிரி அவர்களை வம்பிழுத்திருக்கிறேன். அவருடைய லகான் படம் என்னைக் கவரவில்லை.

இதனால் இந்தப்படத்தைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகமானது.

 Dyslexia என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய கதையிது. படத்தின் தொடக்கத்தில் அந்தப் பையனின் பெயரைப் போட்டு பின்னர் அமீர்கான் பெயர் போடுவதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இந்தப்படத்தைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்தச் சிறுவன் தான் ஹீரோ என்பது தெரியும் அப்படியிருக்க அமீர்கானின் பெயரைப் போடாமல் அவர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்ததற்காக அமீர்கானை, டைரக்டராக, தயாரிப்பாளராக நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். படம் மனதைக் கவர்வதாக, பிசைவதாக, கண்ணீர் சிந்த வைப்பதாக இருக்கிறது. நான் படம் பார்த்து கண்ணீர் விடுவதெல்லாம் பெரியவிஷயம் இல்லை, ஏனென்றால் நிறைய படங்கள் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன், ஆனால் ஒன்று கிளைமேக்ஸில் ஆயிருக்கும் இல்லாவிட்டால் படத்தின் ஏதோ ஒரு தருணத்தில் ஆய் இருக்கும். ஆனால் இந்தப் படம் என்னை கண்ணாடிக்குள் இருக்கும் கண்களைத் துடைத்தபடியே படம் பார்க்க வைத்தது.

அந்தப் பையனை தேர்ந்தெடுத்தது யாரென்று தெரியவில்லை, படத்தில் அமீர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் மிக இயல்பாகவே பொருந்துகிறார்கள். அந்தப் பையனின் அப்பா, அம்மா ஆகட்டும் அண்ணன் ஆகட்டும் ஆசிரியர்கள் ஆகட்டும்(அமீர் கான் தவிர்த்து) தேடிப்பிடித்து கோர்த்தது போல் இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடுமாற வைக்காத இசை, பின்னணி இசை பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன. ஏற்கனவே கேட்ட பாடல்கள் தான்.

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, படத்தில் வண்ணங்கள் ஒரு பகுதி என்பதால், ஒளிப்பதிவின் தேவை அதிகமாகயிருந்திருக்கும் நன்றாகச் செய்திருக்கிறார் காமராமேன். ஓவியங்கள் வரைந்தது யார் என்று தெரியவில்லை அருமையாக இருக்கிறது ஒவ்வொன்றும் அதிலும் கடைசியில் அந்தச் சிறுவன் வரைந்த ஒன்றும் அமீர்கான் வரைந்த ஒன்றும் பிரம்மாதமாகயிருக்கிறது.

லகே ரஹோ முன்னாபாய்க்கு பிறகு ஸ்டான்டிங் அப்ளாஸ் எனக்குத் தெரிந்து நான் பார்ப்பது இந்தப் படத்திற்குத்தான்.

தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் சென்று பார்க்கவேண்டும் என்று கட்டளை ஒன்று போட்டால் நன்றாகயிருக்கும் ஆனால் பாவம் மக்களுக்கு இந்தி தெரியாதே(:)) ஜோக்ஸ் அபார்ட் நிச்சயம் படம் சொல்ல வரும் விஷயம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் சென்று சேரக்கூடியது. அதென்ன தமிழ்க்குடும்பங்கள் என்று சண்டைக்கு வராதீர்கள், வேண்டுமானால் கல்யாணம் ஆகி குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு படம்.

ஆனால் ஒரு படம் சமுதாயத்தை மாற்றிவிடுமா தெரியவில்லை, ஓவியத்தின் மூலம் போட்டிகளின் உலகத்தின் கத்திச் சண்டை போட முடியுமா தெரியவில்லை. படத்தை மசாலா தடவித்தான் எடுத்திருக்கிறார் அமீர்கான், படத்தின் முடிவு எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது இதைத் தவிர்த்து ஒரு முடிவை இந்தப் படம் வைத்திருக்கவே முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வளவே. குஜராத்தில் இந்தப் படம் ஓடுகிறதா என்று தெரிந்து கொள்ள ஆசையாகயிருக்கிறது. அமீர்கான் 'கஜினி' ரீமேக் போன்ற பக்வாஸ் படங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இது போல் இறங்கலாம் என்று மனம் சொன்னாலும் அவருடைய பொருளாதாரம் அதற்கு அனுமதிக்காதென்றே நினைக்கிறேன். எல்லோரும் ஒரு முறை பார்க்கவேண்டிய படம் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை, அம்மாவையும் அப்பாவையும் அழைத்துவந்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் எழுகிறது.

படம் பார்த்து முடித்ததும் நிச்சயமாய் சொல்லலாம் அமீர்கான் என்னமோ கிழித்துத்தான் இருக்கிறார் என்று. ஆனால் அது அழகான ஓவியமாக இருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In பயணம்

காஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து

ஒரு வழியாக நான் காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கே வந்தாகிவிட்டது. மனம் நிறைந்த அனுபவத்தைத் தந்தது காஷ்மீர் பயணம்.

காஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் அனைவரும் ஒரு முறை வின்டரில் காஷ்மீர் வந்து செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று, ம்ஹூம் இனி வருஷத்தில் ஒரு தடவை கூட வந்து போகலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் சீசனில் ஒரு முறை வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இப்பொழுதே வருகிறது. :)

பிற்பாடு விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் 30,31 டெல்லியில் தங்குவேனாயிருக்கும். இடையில் ஜெய்பூர் சென்றுவரும் ஒரு ப்ளானும் இருக்கிறது.

காலம் ரொம்ப வேகமாய் ஓடுகிறதாயிருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In பயணம்

காஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து

ஜம்மு வந்தாகிவிட்டது. பழைய தில்லியிலிருந்து நேற்றிரவு 9.30க்கு கிளம்பி இன்று காலை 11.30க்கு ஜம்மு மெயில் கொண்டு வந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டது. உடன் வந்த மூன்று வாலிபர்கள் என்ன நினைத்து வந்தார்களோ, ஒரேயொரு ஸ்வெட்டரை மட்டும் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டிருந்தனர். ஆனால் இரவின் பின்நேரங்களில் கம்பளி இல்லாமல் ரயிலின் உள் சமாளிக்க முடியாது என்பது மிகவும் லேட்டாக அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

காலையில் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள். கல்லூரி மாணவர்களாம், வைஷ்ணவ் தேவி பார்க்க வந்திருக்கிறார்கள், நான் ஜம்மு வரை வந்து வைஷ்ணவ் தேவி பார்க்கவில்லை என்றதும் கிறிஸ்தியனா என்று கேட்டார்கள், என் பெயரும் ஒரு மாதிரி சுத்தி கிறிஸ்துவப்பெயர் போல் இருப்பதால் இந்த சந்தேகம் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

நானென்னமோ ரொம்பவும் குளிரும் என்று ஸ்வெட்டர் போட்டு மேலே ஜெர்கின் போட்டுக்கொண்டு ஜம்முவில் இறங்கினால் அத்தனை குளிரில்லை, இப்பொழுது ஜெர்கினின் உள் வேகிறது. இங்கிருந்து ஸ்ரிநகர் 12 மணிநேர பயணம் என்று சொல்கிறார்கள். ஜம்முவிலிருந்து ஸ்ரி நகர் போகும் வழி பிரம்மாதமாகயிருக்கும் என்று சொல்லி ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறார்கள். பார்ப்போம். இன்று வரை வைஷ்ணவ் தேவி போகும் ஆவலில்லை, தெரியாது. ஸ்ரிநகரில் இருந்து வந்த பிறகு நேரம் இருந்தால் ஒரு தடவை போய்வரலாம் என்றிருக்கிறேன்.

முந்தையது

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In காஷ்மீர் பயணம் பயணம்

காஷ்மீர் பயணம்

ஒரு வழியாக டெல்லி வரை வந்தாகி விட்டது. அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணம் தொடங்கணும். இது வரை அத்தனைக் கடியாகலை. பெஙளூரில் இருந்து நேராய் ஆக்ராவிற்கு வந்துவிட்டேன். இங்கேயே என் திட்டத்தின் முதல் மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் நல்ல மாற்றம், பைசா அதிகம் செலவாகாமல் தாஜ்மகால் பார்த்துவிட்டு தில்லிக்கு வந்தாகிவிட்டது.

கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணத்தில் 'குறட்டைச் சுதந்திரம்' என்றொரு கதையொன்று எழுதும் ஐடியா தோன்றியது. அதனால் அந்தத் தலைப்பை பதிவு செய்து வைக்கிறேன். ஆக்ராவில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் சென்று சேர்த்த பொழுது மணி 7.20 போல, நான் நேராய் ஹோட்டலுக்கு போகலாமா இல்லை தாஜுக்கே போய்விடலாமா என்று யோசனை செய்தேன். என்னவோ நினைத்தவனாய் தாஜிற்கு சென்றேன் நல்லதாய்ப் போனது. என்னால் மிக எளிதாய் உள்ளே செல்ல முடிந்தது. நான் தாஜில் இருந்து வெளியில் வரும் பொழுது 2 அல்லது 3 கிலோமீட்டருக்கு கியூ.

அதிகமாய் இல்லாமல் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன். என்னை தாஜ் மகாலுடன் சேர்த்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றாலும் ஒருவரை தொந்தரவு செய்து படம் ஒன்று எடுத்துக் கொண்டேன். ஆக்ரா கோட்டை போகும் எண்ணம் எதுவும் இல்லை, முன்னமே இரண்டு முறையோ என்னமோ பார்த்திருக்கிறேன். ஷாஜகான் அங்க படுத்தார் இங்க உருண்டார் எல்லாம் ஏகப்பட்ட தடவை கேட்டாகிவிட்டது, பயணிகள் தொடர்ச்சியாகச் செல்லும் இடங்களுக்குச் செல்ல இப்பொழுதெல்லாம் அலர்ஜியாக உள்ளது. என்ன செய்ய சொல்லுங்கள். ஆனாலும் கொடுமையே கொடுமை என்று இன்னுமொறு முறை என் காமெராவிற்காக சென்று வந்தேன்.

ஆக்ராவில் இருந்து மீண்டும் திலிக்குச் செல்ல தாஜ் எக்ஸ்பிரஸ் பிடித்துக் கொள்ள, டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை கடைசிவரையில் வெயிட்டிங் லிஸ்ட் 350 எல்லாம் ரொம்ப ஓவர் என்று எனக்கே தெரியும். தில்லிக்கு வந்து ஹோட்டலில் படுத்து தூங்கிவிட்டு கிளம்பி பழைய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் இந்தியா கேட்டுக்கு சென்று வந்து இப்ப தூங்கப் போகிறேன் அதற்கு முன் சும்மா வந்த இன்டர்நெட் பூத்தில் என் காமெரா வொர்க் ஆக சரி பதிவொன்னு எழுதுவோம் என்று உட்கார்ந்துவிட்டேன்.

கடைசியில் இருக்கும் ரோடு ராஜ்பத் என்றழைக்கப்படும் ஜனவரி 26ல் இந்திய ராணுவத்தின் பரேட் நடக்கும் ரோடு. சிங்கிள் ஸ்ட்ரெயிட்டா இந்த ரோடுதான் இந்தியாவிலேயே பெரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.





PS1: என் புகைப்படங்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று ரோமிங்கில் இருக்கும் எனக்கு போன் போட்டுச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்.(உட்கார்ந்து யோசிப்பாங்க்யளோ???)

PS2: பைக்கில் ஜம்மு வரும் நண்பரை இங்கே டெல்லியில் சந்திக்க வேண்டியது, நண்பர் ஜெய்சல்மர் நன்றாகயிருக்கும் அங்கே போகாமல் இருக்காதீர்கள் என்று நண்பர்கள் சொல்லப்போய் அவர் ஜெய்சல்மர் சென்று விட, இப்போதைக்கு ஜம்முவில் சந்திப்பதாக உத்தேசம் நான் Srinagar சென்று விடுவேன் என்றாலும் பார்த்துக் கொண்டாலும் கொள்வோம்.

PS3: பின்னூட்டங்கள் அவ்வளவு சீக்கிரம் வராதாயிருக்கும் நண்பர்கள் பொறுத்தருள்க.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In நாட்குறிப்பு

மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்

என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா "நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது எனக்கு என்ன வயது என்று தெரியாது, ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி என் மீது வீசப்பட்டிருக்கிறது. மரணம் கொடுக்கும் இல்லாமையைப் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாத நாட்களிலேயே இந்தக் கேள்விக்கான விடையை யோசித்திருக்கிறேன்.
 
நெருக்கமான சொந்தங்களில் நண்பர்களில் மரணம் இதுவரை சம்பவித்ததேயில்லை, எனக்குத் தெரிந்து இறந்து போனது என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் தான். சாமியாராய்த் திரிந்த என் தாத்தாவின் மரணம் பற்றிய செய்தி தான் கிடைத்தது, நீண்ட நெடிய உருவம் இடுப்பு வரை நீளும் தாடியுடனும் பிருஷ்டத்தைத் தொடும் தலைமுடியுடன் இருந்தவரை அவ்வளவு பழக்கம் கிடையாது. இந்திய-இங்கிலாந்து விமானப்படையில் இருந்ததாகவும் பிறகு காது கேட்காததால் விமானப்படையின் கனரக ஓட்டுனராக சில காலம் இருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கங்கே சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய பெயர் தான் எனக்கு வைத்திருந்தார்கள் "பவானிதாஸ்" இன்னும் தாஸ் என்ற அளவிலும் என் மாமா சித்தியின் மூலமாகவும் அவருடைய பெயரின் இருப்பு இருக்கிறது. அதுதான் முதன்முதலில் சந்தித்த மரணமாயிருக்கும். சின்னவயது ஒன்றும் தெரியாத காலத்தில் நடந்தது.
 
அப்பாவின் அம்மாவிற்கு என் மீது கொள்ளைப் பிரியம், குழந்தையாக என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு அம்மா டீச்சர்ஸ் டிரெயிங் சென்றுவிட்டார் என்று தெரியும். என்னை சிறிது காலம் வளர்த்தது அவர்தான். கொஞ்சம் மனநலம் பிறழ்ந்து அவர் என் வீட்டின் ஒரு அறையில் இருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அவர் இறந்த பிறகு கூட அம்மா அந்த அறையை உபயோகப்படுத்த மாட்டார். என்னமோ இன்னமுமே கூட அந்த அறையைப் பற்றிய நினைப்பு சட்டென்று 'பாச்சம்மா' பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது. அவருக்கு வெத்தலைப் பாக்கு சீவல் புகையிலை வாங்க அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயில் கமிஷன் அடித்து ஐம்பது காசுக்கு வாங்கிக் தின்று விட்டு 1.30 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவிற்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் பாச்சம்மா அப்பாவிடம் போட்டுக்கொடுத்து எனக்குத் தெரியாது. அக்காவுடனான என் சண்டைகளில் அப்பாவும் அம்மாவுமே கூட அக்கா பக்கம் பேச அவர் மட்டும் என் பக்கம் பேசியது நினைவில் இருக்கிறது. அப்பா தன் தம்பியிடம் அவரை அனுப்பிய சிறிது காலத்தில் எல்லாம் அவர் இறந்துவிட்டார், என் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தால் நான் பட்டிருக்கக்கூடிய வேதனை அப்பொழுது அனுபவிக்கவில்லை.
 
அவ்வளவுதான் மரணம். ஆனால் மரணம் பற்றிய தொடர்ச்சியான கேள்விகள் இருந்ததுண்டு, பொன்னியின் செல்வன் போல், வந்தியத்தேவன் போல், சுஜாதா போல் சாதிக்காமலேயே இறந்துவிடுவேனோ என்ற பயம் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. மரணம் பற்றிய கேள்விகள் இயல்பாய் எழுப்பும், மரணத்திற்குப் பின் யாருக்கு என்னைத் தெரியும் உலகத்திற்கு என் நினைவு எப்படி வரும் உலகில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும் போன்ற கேள்விகள். அந்தச் சமயம் பார்த்த கடவுள் படங்கள் நினைவில், அசுரனாக என்னையே நினைத்துக் கொண்டு எப்படி சிக்கலான கேள்வி கேட்டு இறப்பற்ற வாழ்க்கையை கடவுளிடம் யாசிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. எத்தனை இரவுகள் எத்தனை இரவுகள் கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, மரணமற்ற பெருவாழ்வைப் பற்றிய வரத்துடன் நான் இருப்பதைப் போன்ற நினைப்புகள்.
 
பொன்னியின் செல்வன் படித்து, ஆதித்த கரிகாலனின் வாசகமான, இளம் வயதில் சாதித்து இறந்துவிட்டால்  வயதான தோற்றம் மறைக்கப்பட்டு சிறுவயது நபராகவே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவேன் என்று நினைத்திருக்கிறேன். என் பாட்டியின் நிலையைப் பார்த்து சிறு வயதிலேயே இறந்துவிடும் ஆவல் அதிகமாயிருக்கிறது. இந்தியாவிற்காக உடலெல்லாம் வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு பாகிஸ்தானில் குதிப்பது கொஞ்ச காலக் கனவு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிறு வயது மரணம் தேவைப்படும் புகழ். இந்தியாவிற்கு வேறொரு நாட்டிற்கு வரும் சண்டையில் என்னை தற்கொலைப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு நான் நிற்கும் காட்சிகள் மனக்கண்ணில் இன்றும் ஓடுகிறது. எல்லாம் கடந்து போய் மரணத்தை பற்றிய பயம் தோன்றிய காலமும் உண்டு, அப்பா இறந்திவிட்டால் என்ன செய்வது அடுத்த நாள் வாழ்க்கை எப்படி போகும். அம்மாவின் 1500 ரூபாய் சம்பளத்தில் என்னையும் அக்காவையும் வளர்க்கமுடியுமா? அம்மா அடிக்கடி சொல்லும் உங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் கூட போய் நிற்கமுடியாது என்ற வார்த்தைகளைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பாரதியின் "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை" என்னை அப்படியே நெருப்பின் அருகில் நிறுத்துவதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.
 
பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும். டெல்லியில் பெங்களூரில் என இந்த வரிகளை பாரதி எழுதியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை எத்தனையோ தடவை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் ஒருவனைப் பார்த்த உணர்வில் மனம் நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். அந்த வரிகள் மட்டுமல்ல அச்சமில்லை கவிதையின் அத்தனை வரிகளும் எனக்கு உத்வேகத்தை என் வழியில் தொடரும் இடற்பாடுகளைத் தூக்கியெறிந்து என் பயணத்தை தொடர உதவியிருக்கின்றன.
 
அப்பா தன்னுடைய இம்பார்ட்டன்ஸைக் காட்டுவதற்காகக் கேட்ட அன்றைய கேள்வி இன்றுவரை தொடர்கிறது ஆனால் அந்தக் கேள்வி என்னை அணுகும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பல சமயம் நினைத்துக் கொள்வே என் அப்பாவின் மரணம் என்னிடத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று. அந்த பதிலுமே கூட காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான எந்தக் கேள்வியும் என் அம்மாவைப் பற்றி வந்ததில்லை, நெருப்பென்று சொன்னால் சுட்டுடுமா என்றால் என் அம்மா விஷயத்தில் சுடும் என்று சொல்வேன். அம்மாவிற்கும் அப்பாவிற்குமான கண்ணோட்டத்தில் கூட என்னால் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை. நரை விழுப்போகும் அம்மாவைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத காலங்கள் எல்லாம் என் வாழ்வில் உண்டு.
 
எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை. சில சமயங்களில் நமது தைரியங்களுக்குப் பின்னால் தான் பயம் மறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு என் மரணம் நிகழ்ந்தால் என் வீட்டில் நடைபெறப்போகிற மாற்றங்களைப் பற்றி அலுவலகத்தின் நான் மட்டும் வேலை பார்க்கும் சில இரவுப் பொழுதுகளில் யோசித்துக் கொண்டிருப்பேன். கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய்.
 
அப்பாவிடம் நேற்று எப்ப பெங்களூர் வரீங்க நான் காஷ்மீர் போறேனே என்று கேட்டதற்கு "தம்பி பயமாயிருக்கு போய்த்தான் ஆகணுமா?" என்ற கேள்வி எனக்குள் ஏற்படுத்திய சந்தோஷம் எழுதுவதற்கு அப்பாற்பட்டது. "நைனா நான் காஷ்மீர் போகலை ஜம்முதான் போறேன் அங்க பிரச்சனையே கிடையாது" என் அப்பாவிடம் நாங்கள் யாரும் உண்மை பேசமாட்டோம் ஆனால் அவருக்கு உண்மை தெரியும் எங்கள் வாய்களின் மூலமாய் அவருடைய காதுக்கு உண்மை போகாது. அக்காவிடம் விளையாட்டிற்குச் சொன்ன இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன். அக்காவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும் மரணம் என்பது நெருப்பைப் போல பலருக்கு சொன்னாலே சுடும்.

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In நாட்குறிப்பு

நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்

சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேறும் பொழுது மனம் அப்படியே பறக்கத் தொடங்குகிறது. நான் சாஃப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் சேர்ந்த பொழுது, லாப்டாப் வாங்கிய பொழுது என இப்படி மனம் உற்சாகத்தில் குதித்திருக்கிறது. சில ஆசைகள் திணிக்கப்பட்டதாக இப்பொழுது புரிந்தாலும் அந்தக் கனவுகளுடன் தான் நான் வாழ்ந்திருக்கிறேன் எனும் பொழுது அவற்றை அடைந்த தருணங்கள் பறப்பது போன்ற உணர்வுகளையே தந்திருக்கின்றன.
 
அப்படிப்பட்ட ஒன்றுதான் காஷ்மீர் செல்லவேண்டுமென்ற என் ஆசையும் கூட, இந்திய தேசியத்தின் மீதான ப்ரியமானது இன்றையைவிடவும் அதிகம் இருந்த காலக்கட்டங்களில் நான் செல்லாவிட்டால் வேறு யார் செல்வார், என்று கோபப்பட்ட காலங்கள் உண்டு. இன்று காஷ்மீர் செல்வதற்கான ஆரம்பகட்ட திட்டங்கள் முடிவடைந்து நகர்தலுக்கான நாட்கள் நெருங்க மனம் திரும்பவும் இறக்கை கட்டிக்கொண்டது. மனிதனுடைய நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாய் பறப்பதைச் சொல்லலாம், விமானத்தில் பறப்பதைச் சொல்லவில்லை. நீந்துவதைப் போல் தனியாய் பறப்பதைச் சொல்கிறேன். அதனாலேயே உணர்வுப்பூர்வமாய் பறப்பது என்பது மிகப்பெரிய விஷயமாகயிருக்கிறது.
 
பெங்களூரின் குளிர் ஓரளவுக்கு உதவுமென்றாலும் நான் டெல்லியில் இறங்கும் பொழுது கடும்குளிர் என்னை கட்டி அணைத்து வரவேற்க காத்திருக்கும், பாவம் குளிருக்கு என்ன தெரியும் அது தன்னுடைய வரவேற்பை உற்சாகத்தை தடைசெய்யாமல் வழங்குகிறது.எப்பொழுதும் இயற்கை மட்டும் ஒருவருக்கு கொடுத்து ஒருவருக்கு மறுப்பதில்லை, மனிதர்கள் தான் அதைச் செய்வது. இந்த பெங்களூர்-டெல்லி மாற்றம் என்னை பெரிய அளவில் தாக்காமல் இருப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியாகிவிட்டேன் என்றாலும் டெல்லியின் கடுங்குளிரை அனுபவித்தன் என்ற முறையில் பயத்துடன் ஒரு குதூகலமும் இருக்கிறது.
 
படிக்கும் காலங்களைப் போலில்லாமல் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு கையில் சம்பளம் வாங்கத் தொடங்கிய பிறகான வாழ்க்கை அதிகம் சம்பாதிக்கும் வெறியை தானாகத் தோற்றுவிக்கும், கையில் டெல்லியில் வாழ்வதற்கான சம்பளம் வாங்காமல் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சமாளித்தக் காலங்களில் முனிர்க்கா தெருக்களில் அலைந்திருக்கிறேன் இந்த பணம் சம்பாதிக்கும் வெறியுடன் யாருமில்லா ரோடுகளில் "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்ரு நினைத்தாயோ" என்று சப்தமிட்டு கவிதை சொல்லியிருக்கிறேன். இன்று மனநிறைவாக சம்பாதிக்கும் பொழுது நினைத்துக் கொள்கிறேன் அந்தப் பொழுதுகளை, ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் கிடைத்திருக்குமானால் இன்றிருக்கும் நானாக நான் இருந்திருக்க மாட்டேன்.
 
எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, 'காலம் உனக்குச் சொல்லித்தரும்' என்ற பதிலில் இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது. இதைச் சொல்லும் மனிதனை அருகில் அழைத்து 'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே!' என்று சொல்லவேண்டும் போலிருக்கிறது. ஈகோவைக் கழட்டிவிட்டு உண்மையை நெருங்கும் சாத்தியத்தை காலம் வழங்குகிறது ஆனால் அதை முன்னமேயே சொல்லிக்காட்டி கர்ண கவச குண்டலமாய் மாற்றுவதால் நீங்கள் அடையப்போவது என்ன என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது.
 
கையில் பணம் இல்லாமல் இருந்த திருச்சியை அதேபோல் இருந்த டெல்லியுடன் ஒப்பிட முடியவில்லை, டெல்லியில் நான் சுயமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என் உழைப்பு மதிப்பற்றது அதற்கான மதிப்பை பெறவில்லை என்ற கோபம் ஆதங்கம் இன்றும் சரியென்று தான் படுகிறது. ஆனால் அனுபவங்களை தராசின் இன்னொரு பக்கத்தில் வைத்தால் என் கோபம் ஆதங்கம் இன்னபிறவெல்லாம் தூசியாகிப்போகின்றன. ஆனால் இன்று கையில் காசுடன் நான் நினைத்த எதையும், எதையும் செய்யும் சாத்தியக்கூறுகளுடன் டெல்லி செல்வதை நினைக்கும் பொழுதே மூளைத்தசைகளின் அடியில் ஒளிந்திருக்கும் பழைய நினைவுகள் மேலெழுந்து மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உண்டாக்குகின்றன. நான் டெல்லியில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்னர் நினைத்ததை எல்லாம் ஆசைப்பட்டதை எல்லாம் இன்று கையில் பணமிருப்பதால் செய்துவிடுவேனா என்று கேட்டால் ம்ஹூம் மாட்டேன்.
 
ஏனென்றால் பணம் என்பது வெறும் காகிதத்தால் ஆன ஒரு பொருளாய் நான் நினைக்கவில்லை, அதனுடன் நாம் நம் அனுபவங்களையும் சேர்த்து பொட்டலம் கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அந்த எண்ணம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது, நானலைந்த முனிர்காவின் சந்துகள், கனாட்ப்ளேசின் சந்துகள், பாலிகா பசார் கடைகள், ஜேஎன்யூவின் வீதிகள் எல்லாவற்றிலும் சந்தோஷத்துடன் நடக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுவோமா என்று கேவிய இரும்புக் கதவுகள், சிமென்ட் பெஞ்சுகள், பனிவிழுந்த ரோடுகள் எல்லாவற்றையும் திரும்பவும் சந்தித்து இல்லை நான் அப்படி முடிந்து போகவில்லை. இன்றைக்கு கொஞ்சம் நிமிர்ந்து இருக்கிறேன் என்று கட்டித்தழுவி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இன்னொரு முறை உங்களிடம் இதே போன்று வருபவர்களிடம் அவர்களும் ஒரு நாள் என்னைப்போல் ஆவார்கள் என்று ஆறுதல் கூறுங்கள் என்று சொல்லத் துடிக்கிறேன்.
 
ஒரு பயணத்தைப் பற்றிய நினைப்பு கிளறிவிடும் நினைவுகள் சட்டென்று முடிந்துவிடுவதாய் இல்லை. எங்கேயோ இத்தனை நாளாய் மூளையின் சிக்கலான நரம்புப்பிணைப்புகளில் காணாமல் போயிருந்த ஏகப்பட்ட எண்ணங்களை கிளறிவிட்டு கால்கள் தரையில் பரவவிடாமல் செய்துவிடுகின்றன. மனிதர்களைப் போல் தாவரங்களைப் போல் கட்டிடங்களுக்கும் ரோடுகளுக்கும் பெஞ்சுகளுக்கும் நகரங்களுக்கும் உயிரிருப்பதாய் படுகிறது. என்னுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசையோடு நெருங்குவதாகவும் அவற்றின் மொழி எனக்குப் புரிபடாததால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற எண்ணமே மேலிடுகிறது. ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்ட இரவு நேர கனாட்ப்ளேஸ் முட்டுச் சந்து, சமோசா - குலோப் ஜாமுன் சாப்பிட்ட மார்கெட் பகுதியின் பெரிய கடை, எருமைப்பாலின் காச்சப்படும் வாசத்தோடு லஸ்ஸி சாப்பிடும் முனிர்காவின் இன்னொரு கடை என திரும்பிச் சென்று விசாரிக்க ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள் மனதில் ஓடுகிறது.
 
அங்கே இருக்கப்போகும் இரண்டு நாளில் ஒரு நாள் தாஜ்மகால் பார்க்க என்று வைத்திருக்கிறேன், ஒரு வகையில் அதன் பிரம்மாண்டத்தாலேயே என் மனதில் அதற்கு இடமில்லாமல் போனது கைக்கடக்கமான தாஜ்மகால் தான் உண்மையான தாஜ்மகாலைப் பார்க்கும் வரை மனதில் இருந்தது. அதன் பிரம்மாண்டம் என் மனதில் இருந்த தாஜ்மகாலின் இடத்தை அழித்துவிட்டது, மீண்டும் முன்முடிவுகள் இல்லாமல் இன்னொரு முறை பார்த்தால் தாஜ்மகாலுக்கான இடம் மீண்டும் மூளைச்சந்துகளில் தோன்றுமா என்று கேள்விகளுடன் என் பயணம் பெங்களூரில் இருந்து இந்த வாரம் 21ம் தேதி கிளம்புகிறது, 23ம் தேதி டெல்லியில் இருப்பேன் என்றாலும் ஜம்முவிற்கான பயணம் 25ம் தேதிதான் 24 தாஜ்மகால் பயணம் என்று வைத்திருக்கிறேன். இது திட்டமிடப்பட்டதல்ல மாற்றங்களுக்குரியதே, 'நான் திட்டமிட்டேன் என்று சொன்னால் கடவுள் சிரிப்பார்' என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன் கடவுள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் அந்த பழமொழி சொல்லவரும் விஷயத்தை கடவுள் என்ற ஒன்று இல்லாமலே புரிந்து கொண்டிருக்கிறேன். 29 ஜம்முவில் இருந்து கிளம்பி டெல்லிவந்து 1ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூர் வருவதாக உத்தேசம். 4ம் தேதிக்கு சென்னையில் புத்தகக்கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்பதும் விருப்பம், இடையில் கன்னியாகுமாரியை தொட்டுவிட்டாவது வந்துவிடணும் என்பது இப்போதைக்கு ஒரு பெருங்கனவும். ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவன் கருணை வைத்தால் எல்லாம் சரியாக நடந்துவிடும் இல்லையா? :)
 
 

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In அக்கினிக்குஞ்சு

நடுவர்களுக்கு அடிதடி தமிழ்மணத்தில் ரகளை

தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன் நின்னவன் நடந்தவன் எல்லாம் நானும் விருது கொடுக்குறேன் பிடிச்சிக்கோ என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொம்மாஞ்சக்க, எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா?

நல்லா இருக்கே உங்க கதை! இப்படியே போனா எல்லாரும் கடைசியில் பீடத்தில் உட்கார்ந்துக்குக்கிட்டு வேடிக்கதான் பார்க்கணும் என்கிட்ட வாங்க விருதுவாங்க என்கிட்ட வாங்கன்னு. கொடுக்கத்தான் ஆளிருக்கும் வாங்க இல்ல. கடைசியில் பெரிய அடிதடி நடக்கப்போகுது இவர நான் தான் முதல்ல நடுவரா நியமனம் செய்தேன் அவரை நீ எப்படி கூப்பிடலாம்னு.

முதல்ல விருது கொடுக்குறதுக்குள்ள தகுதியை வளர்த்துக்கோங்க அப்புறம் கொடுக்கலாம் விருது. இன்னிக்கு வெப்சைட் தொடங்கி நாளைக்கு அறிவிப்பு செய்து அடுத்த நாளே விருது கொடுத்திடுனுமாம் ஏன்னா பயமாம், எங்கடா புலியொன்னு வந்திடும்னு. இன்னும் நாலு மொக்கைப் பதிவைச் சேர்த்து போடு, பின்னூட்ட விளையாட்டு விளையாடு அப்புறம் என்ன தேவைப்படுற டிராபிக் கிடைக்கும். அதுக்கு ஏன்டா எழுதுறவங்க தாலிய அறுக்குறீங்க.

முதலில் நீயாரு நீயென்ன கிழிச்சன்னு பாரு அப்புறம் 2007ல் எவன் என்ன கிழிச்சான்னு அவார்ட் கொடுக்கலாம். வர்ட்டா!

Read More

Share Tweet Pin It +1

34 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

பில்லா திரைவிமர்சனம்

பில்லா படம் பார்க்கச் சென்றிருந்தேன், அஜீத்தின் படம் என்பதனால் மட்டுமல்ல, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வருவது என்பது கூட ஒரு காரணம். எனக்கு தமிழ் பில்லா நினைவில் இல்லை, ஆனால் ஒன்றிற்கு இரண்டு முறை பார்த்த ஷாருக்கின் டான் படம் நன்றாக நினைவில் இருந்தது. படத்தின் ஒருவரி விமர்சனம் வேண்டுமென்றால் நீங்கள் ஷாரூக்கின் "டான்" ரீமேக் படம் பார்த்துவிட்டீர்கள் என்றால் இந்த அஜீத்தின் பில்லா அதன் பக்கத்தில் கூட இல்லை, ஆனால் தமிழ்படங்களில் எடுக்கப்பட்ட விதத்தில் அசத்தலாகயிருக்கிறது. ஆனால் நான் டான் படத்தைப் போல ஒன்றை எதிர்பார்த்துச் செல்ல ம்ஹூம் ஒன்றுமேயில்லை.
 
"டான்" படத்தின் இந்தி ரீமேக்கின் பொழுது பழைய படத்தில் இருந்து வித்தியாசப்படுத்தியிருப்பார்கள், கடைசியில் டான் சாகாதது போலும் கடைசிவரை பிழைத்து இருப்பதைப் போலவும். அது போன்ற ஒரு கடைசி நிமிட திருப்பத்திற்கு வாய்ப்பேயில்லை என்று படத்தின் பாதியிலேயே தெரிந்துவிட்டது. தேங்காய் சீனிவாசன் கேரக்டர் கட். மற்றபடிக்கு எடுக்கப்பட்ட விதத்தைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை இந்தப் படத்தில்.
 
அஜீத் குமார் பரவாயில்லை நன்றாக முயற்சித்திருக்கிறார், ஒன்றிரண்டு ஸ்டண்ட் காட்சிகள் அவர் செய்வது போல் இருக்கிறது அவர் தானா டூப்பா தெரியவில்லை. முக்கியமாக அந்தக் கார் 180 டிகிரி சுற்றுவதைப் போன்ற காட்சி. ஒருவேளை ரஜினியை ரிப்ளேஸ் பண்ணமுடியலையா தெரியலை ஆனால் அஜீத்குமார் ரஜினி கதாப்பாத்திரத்தில் ஒட்டவேயில்லை, ஏனென்றால் அஜீத் வில்லனாகயில்லாமல் ஹீரோவாக வந்தவர் என்பது கூட காரணமாகயிருக்கலாம். பில்லா என்பது வில்லன் கேரக்ட்டரின் படம் எனக்கென்னமோ அஜீத் ஒட்டாமல் இருப்பதாகவே பட்டது.
 
நயன்தாரா நன்றாக ஆட்டிக் காண்பித்திருக்கிறார் எதையென்று நான் சொல்ல விரும்பவில்லை, இடையில் பிகினியில்(technically பிகினின்னு சொல்லமுடியாது) வேறு வருகிறார். "டான்" பிரியங்கா சோப்ரா கண்ணில் நிற்கிறார், இங்க ம்ஹூம் வேறென்னமோ தான் கண்ணில் நிற்கிறது. ஸ்ரீப்ரியா கேரக்டரை சப்பென்று ஆக்கிவிட்டார்கள். அதில் இந்தம்மா(நயன்தாரா) இரண்டு தடவை வேறுவேறு காலக்கட்டங்களில் கால்ஷீட் கொடுத்திருக்கும் போலிருக்கிறது, புருவம் இருக்கிற அழகை வைத்தே சொல்லமுடிகிறது. பாதிநேரம் காட்டிக்கொண்டே நிற்கிறது மார்கெட் கவிழ்ந்து கொண்டிருக்கிறதோ? உருப்படாதது நாராயணன் பதிவில் சொல்லியிருந்தேன் பக்வாஸ் செய்திருப்பார்கள் என்று அப்படியே.
 
நமீதா பாவம் அவருண்டு சத்யராஜ் சிபிராஜ் படமுண்டு என்று இருந்தவரை செகண்ட் ஹீரோயின் என்று சொல்லி அழைத்துவந்து ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடவிட்டு காலிசெய்வதை இப்பொழுதெல்லாம் இயக்குநர்கள் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
 
படம் ஸ்டைலிஷ்ஷா எடுத்திருக்கிறார் இயக்குநர், பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் நன்றாகயிருக்கிறது. முதல் பாடல் 'செய்' நன்றாக வந்திருக்கிறது. இயக்குநரின் ஃபேவரைட்டான 'ராப்' வகை நடனம் இந்தப்படத்திலும் இருக்கிறது. ஸ்டண்ட் நன்றாகச் செய்திருக்கிறார்கள், ரொம்பக் காலம் கழித்து(இல்லை முதல் முறையோ) ஏகே 47 வகையறா துப்பாக்கியை கூடவரும் போலீஸ்காரர்கள் சரியாகப் பிடித்திருக்கிறார்கள். விஜயகாந்த் படங்களில் அதென்னமோ டப்பா துப்பாக்கின்னு தெரிஞ்சாலும் ஒரு கெத்தா பிடிப்பாங்களான்னா அது கிடையாது. அந்த விதத்தில் இயக்குநரை பாராட்டலாம், ஸ்டண்ட் நன்றாக உழைத்து செய்திருக்கிறார்கள்.
 
டூப்ளிகேட்-பில்லா போலீஸிடம் தப்பிக்கும் சீனை வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன், மொக்கை, மொக்கை, என்ன சொல்றது ஒரு வேனை வைத்து முடித்துவிட்டார்கள். என்னயிருந்தால், எவ்வளவு தான் எனக்கு நானே மறுத்துக் கொண்டாலும், டானில் அற்புதமாக வந்திருந்தது அந்த சீன். எனக்கும் புரிகிறது எத்தனை காப்பி ஹிந்தி படம் போடுகிறார்கள் எத்தனை காப்பி தமிழ்படம் போடுகிறார்கள் என. ஆனாலும் என்ன செய்வது பாழும் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. சரி பட்ஜெட் பத்தலை என்றாலும் கதையையாவது மாற்றியிருக்கலாமே ஒரு ட்விஸ்ட் வருகிற மாதிரி. ம்ஹூம்.
 
நான் இந்தி டான் அளவு எதிர்பார்த்திருக்காவிட்டாலோ இல்லை இந்தி டான் ரீமேக் பார்த்திருக்காவிட்டாலோ ஒருவேளை பிடித்திருக்குமோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஓடுமாயிருக்கும் விகடன் 41 தருவார்களாயிருக்கும். இந்த விமர்சனமும் பாரபட்சமுடையதாகவே பார்க்கிறேன், இதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள் இன்னும் நாலுபேர் சொல்வதைக் கேளுங்கள். வர்ட்டா இந்தப் படத்தை இன்னொரு தடவை வேறு பார்க்கணும், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மம்மிமிமிமிமிமி.









Read More

Share Tweet Pin It +1

21 Comments

In நாட்குறிப்பு

நான் பூப்பிடிக்க போன கதை

மலர்கள் என்று PIT யில் போட்டி அறிவித்ததுமே காலங்கார்த்தால போய் லால்பாஹ்வில் புகைப்படம் எடுப்போம் என்று தீர்மானித்திருந்தேன். வேலை காரணமாக இரவு நேரங்கழித்து வீட்டிற்கு வருவதாலும் வந்த பிறகும் 'குழும' மடல்களைப் படித்துக் கொண்டிருப்பதால் 1.00, 1.30 மணிக்கு தூங்கப்போவதால் காலையில் 6.00 மணிக்கு எழுவதில் தொடர்ச்சியாக பிரச்சனையிருந்தது. அலுவலகத்தில் இன்னிக்கு நீ லால்பாஹ் போனியா என்று கேட்கும் அளவிற்கு 'நானும் ரௌடி' ரேஞ்சில் ஏக பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களாய் அலுத்துப்போய் விட்டுவிட்டார்கள், ஏற்கனவே வயநாட் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த செம்பருத்தியும், மாமல்லபுரம் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த தாமரையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தாலும். போட்டின்னு வந்துட்டா டெடிகேஷனா போய் படம் எடுக்கணும் என்று நினைத்திருந்ததால் சரி புதுசா எடுத்துப் போடலாம் என்று வைத்திருந்தேன்.





நாங்கள் செய்துகொண்டிருந்த ப்ரொஜக்ட் வெற்றிகரமாக UAT முடிந்து கொண்டிருந்ததால், இன்னொரு சின்ன ப்ரொஜக்ட் பார்ட்டி தருவதாகச் சொல்ல, கூட வேலை செய்யும் பெண்கள் ஒரு படம் பார்த்துவிட்டு பார்ட்டிக்குப் போகலாம் என்று வற்புறுத்த, அங்கேயும் பெண்கள் பாலிடிக்ஸ் செய்து "Jab we met" என்ற ஹிந்தி படத்தை தேர்ந்தெடுத்துத் தொலைத்தார்கள். நானும் ஃபோரம் இல்லாவிட்டால் கருடா மாலிற்குத்தான் செல்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கேள்விப்படாத சிக்மா மாலின் Fun Cinemaவில் டிக்கெட் பதிவு செய்ய, கன்னிங்கஹாம் ரோட்டில் அந்த தியேட்டர் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

ஷாஹித் கபூரும் கரீனா கபூரும் நடித்தப் படம், அப்பா இறந்துவிட அம்மா இன்னொரு நபருடன் ஓடிவிட, காதலித்த பெண் இதன் காரணங்களுக்காக விட்டுவிட்டு வேறொருவனை மணந்துகொள்ள, அம்மா ஓடிப்போனதால் கம்பெனி ஷேர்களில் இருந்த பிரச்சனைகள் பெரிதாக ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்குகிறது படம். சரி பயங்கர மொக்கை படம் போலிருக்கு என்று நினைக்கும் பொழுது கரீனா கபூரின் அறிமுகம், படத்தை தாங்கி நிற்கிறார் கரீனா. பின்னர் ஹீரோவின் காரணமாக ஹீரோயின் டிரெயினில் இருந்து கீழிறங்க, டிரெயினை கோட்டை விட்டுவிட்டு பின்னர் ஹீரோயினை அவரது வீட்டுற்கு கூட்டிக்கொண்டு போகும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹீரோ. வீட்டிற்குச் சென்றதும் ஹீரோயின் தனக்கு பார்த்திருக்கும் மணமகனை விரும்பாமல் வீட்டை விட்டு ஓடிச் செல்ல நினைக்க வரும் பிரச்சனைகள் கடைசியில் எப்படி ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கரீனா கொஞ்சம் ஷாஹித் கபூரை விட வயதானவராகத் தெரிகிறார், ஆனாலும் கனமான கதாப்பாத்திரம் என்பதால் வேறுவழியில்லை என்று நினைத்திருக்கலாம். கொஞ்சம் சிவாஜி போல் ஓவர் ஆக்ட் போல் இருந்தாலும் ரொம்பவும் ஆட்(Odd)ஆக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார்கள் என்ற கோபத்தில் நானும் ஹிந்தி தெரியாத/புரியாத சோகத்தில் பிரபுவும் சோகக்காட்சியில் எல்லாம் கெக்கெபிக்கே என்று சிரித்து கூட வந்திருந்த இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தவர்கள் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். படம் முடிந்து இன்ஃபேண்ட்ரி ரோட்டில் உள்ள ஓரியண்டல் ஸ்பைஸஸில் இரவு உணவு முடித்துக்கொண்டு வந்ததும் வந்த களைப்பில் உறங்கிவிட இன்றைக்கு காலங்கார்த்தாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சரி இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்கு சட்டென்று லால்பாஹ் நினைவில் வர வேகவேகமாய்க் கிளம்பிச் சென்றேன். ஆறுமணிக்கு அங்கே இருந்தேன்.

ஆனால் கொடுமை என்னவென்றால் ஒட்டுமொத்த லால்பாஹ்விலும் ஒரே ஒரு ரோஜாப்பூதான் இருந்தது. ரோஸ் கார்டன் என்றே ஒரு இடம் உண்டு லால்பாஹ்வில் ஆனால் இது சீசன் இல்லையாமாம், பக்கத்தில் இருந்த லோட்டஸ் பாண்ட்டில் தாமரை இருக்கா என்று பார்க்கச் செல்ல இருந்த ஒன்றிரண்டு சின்ன தாமரை மொக்குகள் பக்கத்தில் கூட என் ஷூம் செல்லவில்லை என்பதால் பக்கத்தில் இருந்த வேறு சில மலர்களைச் சூட்டிங் போட்டுக்கொண்டு வந்தாகிவிட்டது. எடுத்த சில படங்கள் கீழே.











என்னோட சாய்ஸ் முதலாவதும் ஐந்தாவதும்

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In சுய சொறிதல் நாட்குறிப்பு

சில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்

காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணாலி போய்விட்டு நல்லபிள்ளையாய் திரும்ப வந்துவிடலாமா என்று. சிறுவயது ஆசை, காஷ்மீர் போகவேண்டும் என்பது; கையில் காசிருக்கிறது, 45,000 செலவு செய்து வாங்கிய காமெரா இருக்கிறது, கேட்பதற்கு ஆளில்லை வேறென்ன வேண்டும். மனம் ஒரு விசித்திர விலங்கு என்று அடிக்கடி தோன்றும் இந்த விஷயத்தில் உண்மைதானா என்று படுகிறது. இன்று வரை ப்ளானில் மாறுதல் இல்லை, காஷ்மீர் என் வருகைக்காக காத்திருக்கிறது.
 
கடவுள் நம்பிக்கை இல்லாமல் போன சமயம் நினைவில் இல்லை, ஆனால் குழப்பமாய் இருந்து கடவுள் இருக்கமுடியுமா என்று நிறைய யோசித்த சமயம் தெரியும், எல்லாம் கல்லூரி படிக்கும் பொழுதுதான். எந்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலோ இல்லை குறிப்பிட விஷயத்தின் காரணமாகவோ நான் நாத்தீகனாகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நம்புவது தொடர்ச்சியான புத்தக அறிவும், ப்ராக்டிக்கலான அணுகுமுறையும் தான் என்னை நாத்தீகனாக்கியது என்பேன். எனது குடும்பத்தில் இன்றுவரை நாத்தீகர்கள் கிடையாது, கடைசி வரைக்கும் பார்த்தால் கூட ஏதோ ஒரு சக்தி இயக்குதுன்னு சொல்வார்களாயிருக்கும். சொல்லப்போனால் தீவிர ஆஸ்தீகர்கள் இருந்தது வேண்டுமானால் அவர்களுடன் என்னை ஆர்க்யுமென்ட் செய்வதற்காக தேடிப்படித்தது காரணமாயிருக்கும்.
 
ஆனால் ரொம்பக் காலம் நிறைய superstition இருந்திருக்கிறது, எக்ஸாம் எழுதப் போகும் பொழுது உணவு சாப்பிட மாட்டேன், காலை பரிட்சையாக இருந்தால் பரவாயில்லை சில சமயம் மதிய பரிட்சைக்கு கூட சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். இது ஒரு உதாரணத்திற்கு இன்னும் நிறைய உண்டு, எனக்கு சிவபெருமான் பிடிக்கும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் பொழுது நிச்சயம் சொல்வேன் அழிவிற்கான கடவுள் என்பதால் தான் அவரை எனக்குப் பிடித்திருந்தது. ஆக்கப்பூர்வமானதை விடவும் அழிவுப்பூர்வமானதில் ஆர்வம் அதிகமமிருந்திருக்கிறது. வீட்டில் எனக்காக சாமியறையில் லிங்கம் வைத்திருந்திருக்கிறார்கள். வீட்டில் லிங்கம் வைக்கமாட்டார்கள், ரொம்ப சுத்தமாயிருக்கணும் என்பது ஒன்றென்றாலும் சிவனுக்கு ஆலயம் தனியாகத்தான் இருக்கணும் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். என்னுடன் கோயிலுக்கு வருபவர்கள் சிரித்துவிடாமல் இருக்க பெரும்பாடு படுவார்களாயிருக்கும், எதையாவது சொல்லி நக்கல் அடித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவை வேடிக்கைக்காக சொல்வது மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்த பிறகு பெரும்பாலும் இது போன்ற கிண்டல்களைக் கூட தவிர்த்திருக்கிறேன். ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான்  மறுவேலை பார்ப்பேன்.
 
இன்றைக்கும் கூட பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது நாமாய் எதுவும் செய்து பிரச்சனையில் இருந்து வெளியேற முடியாத பொழுது அன்னிய சக்தி எதுவும் காப்பாற்றுமா என்று, ஆஸ்தீகர்கள் ஒரு நிமிடம் சட்டென்று நாத்தீகனாகித் திரும்புவதைப் போல். ஆனால் நாத்தீகம் என்பதை ஒருவரை, ஒரு குறிப்பிட்ட மக்களை வம்பிழுப்பதற்காகவோ இல்லை பழிதீர்த்துக் கொள்வதற்காகவோ இல்லாமல் உணர்ந்து ஏற்றுக்கொண்டதாக நினைப்பதால் புன்னகையுடன் அத்தருணங்களை ஒதுக்கிவிடமுடிகிறது. இன்றைக்கு என்னால் இதைப் பற்றி எழுத முடிவதைக் கூட வெற்றி என்று தான் நினைப்பேன்.
 
உரையாடல்/ஆர்க்கியூ செய்யும் பொழுது வெற்றி என்பதை எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்துவது என்று நான் வைத்திருந்தேன். இதை நிறையவே செய்தும் இருக்கிறேன், ஆனால் அந்தச் சமயம் முடிந்ததும் நாம் செய்தது தவறோ என்ற எண்ணம் வருவதுண்டு. இதன் காரணமாகவே பெரும்பாலும் உரையாடல் செய்யும் பொழுதோ இல்லை ஆர்க்கியூ செய்யும் பொழுதோ என்னை எளிதில் கோபப்படுத்திவிட முடியாது. இன்றைக்கும் என் கம்பெனியில் சொல்வதுண்டு 'என்னுடன் ஆர்க்கியூ செய்வது கஷ்டம்' என்று; ஏனென்றால் எதிர்முனை ஆளைக் கோபப்படுத்திவிடும் பொழுது, அவர் ஆர்க்கியூமென்டில் இருந்து விலகிவிடுவார். நாம் ஆர்க்கியூமென்டில் நிற்கும் பொழுது அவரால் பேசமுடியாது. இந்த கோபப்படுத்தும் அளவுகோல் என்வரையில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது, பெரும்பாலும் கடைசியில் உபயோகிக்கும் ஆயுதமாக 'கடவுளை' வைத்திருப்பேன் இப்பொழுதெல்லாம் 'தேசியம்' ஒரு கருப்பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக தமிழர் தவிர்த்த மற்ற இந்திய மாநிலத்தவருடன் வெகுசுலபமாக அவர்களுடைய ஈகோவை தொட்டு உசுப்பேத்தி விட முடிந்திருக்கிறது.
 
சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியில் வரும், 'தமிழ்' எத்தனை எத்தனை ஆதியின மொழிகளை வழக்கொழித்து வந்திருக்கிறது என்பதை தமிழ் எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று வரும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ என்னை விவாதத்திற்காக இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டு என்னுடன் பேசிக்கொள்ள முடிந்திருக்கிறது. எனக்குள் இருக்கும் புனித பிம்பங்கள் ஒன்றொன்றாக அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கிழித்து தொங்கவிட முடிந்திருக்கிறது. ஆனால் எல்லாரையும் செய்துவிட்டேன் என்றில்லை, இன்னமும் சிலர் அந்த லிஸ்டில் உண்டு குறிப்பாய் ஒன்றிரண்டு பேரைச் சொல்லவேண்டுமென்றால் 'விவேகானந்தரை' சொல்லலாம். ஆனால் முற்றிலுமாக யாரையும் ஏற்றுக்கொண்டதில்லை அது விவேகானந்தராகயிருக்கட்டும், ஹிட்லர், காந்தியாக இருக்கட்டும். அவரவர்களிடம் எனக்குப் பிடித்த நல்ல குணங்களை எடுத்துக் கொள்வதில் பிரச்சனையிருந்ததில்லை.
 
ஜெயமோகனுடைய நினைவில் நதியில் எழுதியிருப்பார் சுராவுடனான பல உரையாடல்களில் தன்னுடைய நிலையை எடுத்து வைக்க முடியாமல் கோபப்பட்டதாக, உரையாடல் மீதான இயல்பான ஆர்வம் என்னை நினைவின் நதியில் படித்தப் பின்னர் சுராவை நோக்கி இழுக்கிறது என்றுதான் சொல்வேன். கடவுளை நம்பாமல் எல்லாவற்றையும் தத்துவ ரீதியிலாக அணுகியதாகவும், எதைப்பற்றிய உரையாடலுக்கும் ஆர்வமாகயிருந்த சுராவை நேரில் சந்திக்க முடியாமல் போனதை நினைத்துக் கொள்கிறேன். ஆனால் சுராவைப் போல் ஆயிரம் நபர்கள் இருப்பார்கள் இன்னமும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேடல் தான் தேவையே தவிர தத்துவ ரீதியான மனிதர்கள் முற்றிலும் இல்லாமல் இல்லை. கடவுள் என்பவர் உரையாடல் மூலம் உணரமுடியாதவராக, தத்துவ ரீதியில் விளக்க முடியாதவராக இருந்து உணர்வுப் பூர்வமாயும் லாஜிக்களுக்கு அந்தப் பக்கம் இருந்து கொண்டு, என்னுடைய இயலாமையின் தவிப்பின் பொழுதுகளில் தன்னைக் காட்டிக் கொள்வார் என்றால், நான் என் இயலாமையின் வாழ்வின் கடைசிப் பொருளைத் தேடும் வரை கடவுளை விலக்கிவைக்கிறேன். இந்த வயது இப்படித்தான் இருக்கும் அனுபவம் உனக்கு கடவுளைக் காட்டுமென்றால் அந்த அனுபவம் தான் கடவுள் என்றால் ஒரு பெரிய கும்பிடு அது வரும்பொழுது வாக்குவாதத்துடன் சந்தித்துக் கொள்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In நாட்குறிப்பு

போனஸ் பார்ட்டி பேச்சுலர் பேச்சிலர் பெங்களூரு

முன்னமே லே-ஆஃப் பற்றி எழுதியிருந்தேன் அப்படியே என் வருடக்கடைசி கிறிஸ்மஸ் பார்ட்டி பற்றியும், பார்ட்டியின் முதல் நாள் இரவு கேள்விப்பட்ட விஷயம் தான் இந்த வருடம் போனஸ் கிடையாதென்பது. மற்ற கம்பெனிகள் போலில்லாமல் 10% போனஸ் என்று அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரிலேயே எழுதிக் கொடுத்தனர். சொல்லப்போனால் கிடைத்த மற்ற ஆஃபர்களை விடுத்து இந்தக் கம்பெனியில் சேர்ந்ததற்கு முக்கியமான காரணமே CTCக்கு வெளியில் கொடுப்பதாய்ச் சொன்ன போனஸ் தான். Core Team அவர்களுடைய அடுத்த ரிலீஸில் மும்முறமா இருந்து சனி, ஞாயிறு என்று லேட் நைட் வேலையெல்லாம் செய்தார்கள் அதைப் போலவே நாங்களும் ரிலீஸ் காரணமாக நிறைய வேலை செய்ததற்கு பரிசு நோ-போனஸ். பார்ட்டியில் எல்லோருக்கும் தெரியும் முன்னர் தண்ணி அடித்திருந்த பெருந்தலை ஒன்று புலம்ப இந்த விஷயம் பொதுவில் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே தெரிந்து போனது. ஒரு பல்க் அமௌண்ட் என்பதால் ஏகப்பட்ட ப்ளான்கள் முன்னமே போட்டு வைத்திருந்தேன். எல்லாவற்றிற்கும் அரோகரா! ஆனாலும் நாங்கள் கடைசியாக செய்த ப்ரொஜக்ட் நல்ல வகையில் UAT போய்க்கொண்டிருப்பதால், கடைசி நேரத்தில் கூட போனஸ் கிடைக்கும் என்று நண்பர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும் இந்த வருட கிறிஸ்மஸ் பார்ட்டி செலவு 25 லட்சம் என்றதும் ஏகக்கோபமாகிப்போனார்கள் உடன் வேலை செய்யும் நண்பர்கள். பெங்களூரில் இருக்கும் அங்ஸானா ரிஸார்ட்டில் சனிக்கிழமை மதியத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஆன செலவு இது! பேச்சுலர் மக்களுக்காவது எதாவது செய்து போனஸ் தொகை இல்லாமல் போனதை சரிசெய்துவிடமுடியுமாயிருக்கும். குடும்பம் என்ற அளவில் செட்டில் ஆனவர்களுக்கு அது முடியாதது என்ற அளவில் 25 லட்சம் செலவைக் கேட்டதும் கொஞ்சம் போல் ஆடித்தான் போய்விட்டார்கள் மணமானவர்கள். பேச்சுலர்களுக்கும் இது ஒரு பெரிய இடிதான் என்றாலும் பேச்சிலருக்கு இது அடர்ப் பச்சையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ரிசார்ட் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, கம்பெனி டிராவலுக்கான வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் நாங்கள் எங்கள் க்ரூப்பாக டூவீலரில் சென்றிருந்தோம். இரண்டு நாடகங்கள் நடத்தினார்கள், இரண்டு ஐட்டம் நம்பர்ஸ் பிறகு வழமையான பேஷன் ஷோ. கொஞ்சம் போல் புகைப்படங்கள் தட்டினேன். வழமை போலவே தண்ணியடித்ததும் ஏகப்பட்ட உண்மைகள், அழுகைகள், கேலிகள் தொடர்ந்தன. எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சிக்கன் கபாப்களை காலி செய்து கொண்டிருந்தேன். இரவு camp fireல் சினிமா பேர் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டைத் தொடர்ந்ததும் சண்டை போட்டு இந்தியுடன், ஆங்கிலப்படங்களையும் சேர்த்தோம். தண்ணியடித்தவர்கள், அடிக்காதவர்கள் என ரகளையாக நடந்தது. பெங்களூரில் பனிதான் பொழிந்து கொண்டிருந்தது நேற்றில் இருந்து மழைவேறு பெய்கிறது. டெல்லி குளிருடன் ஒப்பிட முடியாதென்றாலும்  winter இங்கேயும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. காலையில் கம்பளியில் இருந்து விடுவித்துக் கொண்டு கம்பெனிக்கு கிளம்புவதற்கு முதலில் மனதை தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. திரைப்படம் ஒன்றை தியேட்டரில் சென்று பார்த்து மாதக்கணக்காகிறது! காரணம் புரிவதால் என்னை நானே விடுவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுவயதிலிருந்தே தொடரும் வழக்கமாக விடுமுறைக்கான நாட்களை நோக்கியபடி இப்பொழுதெல்லாம் நினைவுகள் அலைமோதுகிறது. இந்த பலூன் விடுமுறையின் கடைசி நாட்களுக்கு முன்னர் உடைந்து மனமெங்கும் பரப்பும் வெறுமை எழுதித்தள்ள முடியாததாக இருக்கிறது. இந்த முறையும் தொடரும் என்று நினைக்கிறேன்.
 
------------------------
 
இதை எழுதி டிராஃப்டில் வைத்திருந்தேன். அப்ரைஸல் முடிந்துவிட்டது வெற்றிகரமாக, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததாலோ என்னவோ அப்ரைஸல் முடிந்ததும் No Hard Feelings. ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

Read More

Share Tweet Pin It +1

50 Comments

In நாட்குறிப்பு

நாட்குறிப்பு - Layoff & Appraisal

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரியான வேலையிருந்தது, போனவாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கூட நான் அலுவகத்திற்கு வந்திருந்தேன். இரண்டு முக்கியக் காரணங்கள் ஒன்று ரிலீஸ், இரண்டாவது அப்ரைஸல். ரிலீஸ் என்றால் கூட அசையாமல் இருக்கும் என் மனதை ஆட்டிப்பார்க்கும் திறமை வாய்ந்தது அப்ரைஸல். செய்து கொண்டிருந்த வேலை வளவளவென்று அதிகரித்துக்கொண்டே செல்ல, பெருந்தலை ஒன்று முடிச்சதும் அப்ரைஸல் வைத்துக்கொள்ளலாம் நகைத்தபடியே விளையாட்டுக்காய்ச் சொல்ல வேற வழியேயில்லாமல் வேலை - முடிக்கவேண்டிய ஒன்றாகியது. நானும் பருப்பு மாதிரி அப்ரைஸல் டாக்குமென்ட்டில் எழுதியது எல்லாமே தற்பொழுது செய்துகொண்டிருக்கும் வேலையைப்பற்றி மட்டுமே. அதுகூட ஒரு காரணம் என் அப்ரைஸல் நாள் தள்ளிக்கொண்டு போவதற்கு.

நாளையும் மறுநாளும் கம்பெனி கிறிஸ்மஸ் பார்ட்டி என்பதால் எங்களுடன் சேர்ந்து கொண்டாட வந்திருந்ததாக நினைத்த கம்பெனியின் CTO மீட்டிங் ஒன்றில் சட்டென்று Product Developmentல் யூரோப்பிலும் அமேரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் Lay off செய்யப்போகும் விஷயத்தைச் சொல்ல, நிசப்தம் - இருநூறு பேர் முகத்திலும் பயம் தாண்டவமாடியது. ஆனால் தொடர்ந்த ஸ்டேட்மென்ட்டிலேயே பெங்களூர் டெவலப்மென்ட் சென்டரில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்த 24 - 36 மாதங்களுக்கான ப்ளான் இருக்கிறது என்று சொன்ன பின்னரும் யார் முகத்திலுமே உயிரேயில்லை.

Insurenceல் செய்து முடிக்கவேண்டிய ஒரு காம்பனென்ட் பல்வேறு காரணங்களூக்காக செய்துமுடிக்கப்படாமல்/கிடைக்காமல் போக இந்த முடிவை எடுக்கவேண்டியதாய் அவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெரிந்து பெங்களூர் டெவலப்மென் ட் சென் ட்டரின் பிரம்மாதமான வெற்றி, அவர்களை டப்ளினில் இன்னொரு டெவலப்மென் ட் சென் ட்டரை நடத்துவதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். உண்மைதானே, ரூபாய்க்கும் யூரோ - டாலர் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் எல்லோருக்குமே புரிந்தது தான். Oracle, SAP போன்ற ஜாம்பவான்கள் சண்டை போடும் ஒரு ஏரியாவில் தொடர்ச்சியாக Leaderஆக இருப்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம் தான்.

CTO பேசும் பொழுது முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததோ வேறு விஷயமோ தெரியாது, எனக்கு பிரகாசமாகப் புரிந்த இந்த Layoff விஷயம் நண்பர்களுக்கும் மற்ற கம்பெனி மக்களுக்கும் புரியவில்லை. மேபி Layoff என்றதைக் கேட்டதுமே நின்று கொண்டிருக்கும் தரை நழுவுவதாக உணர்ந்திருக்க வேண்டும். CTO தனித்தனியாக, குழு குழுவாகச் சென்று பெங்களூர் சென்ட்டரில் மாற்றம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் ஒரு Product ஆக நினைத்து செய்யாத ஒரு விஷயத்தை சட்டென்று கடைசி சமயத்தில் இறுக்கிப்பிடித்து Productஆக மாற்றியதால் எங்கள் Teamன் மீது ஏகக் காதலாக இருந்தவரை எங்க head அதை பொதுவாக வெளியில் சொல்லவைத்தது அவருடைய சாமர்த்தியமே! ஒரு வழியாக வெள்ளைக்காரர்களின் வேலையைப் பறித்தாகிவிட்டது இனிமேல் நிச்சயமாய் இன்னும் அதிக மக்களை PDக்கு வேலைக்கு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தெரியவில்லை.

நான் செய்து கொண்டிருக்கும் வேலை பற்றியும், கம்பெனி பற்றியும், நாங்கள் உபயோகிக்கும் Architecture பற்றியும் எழுத வேண்டும் என்று முன்னமே நினைத்திருந்தேன். ஆனால் என்னமோ இழுத்துக்கொண்டே போகிறது. சுவாரசியமான ஒன்றாகக்கூடயிருக்கும். ம்ம்ம் அப்ரைசல் அதைவிட்டுட்டேன் இடையில் நான் என் வேலையைச் செய்து காட்டியபிறகும் பெருந்தலை அப்ரைசலை அடுத்தவாரம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ரிலீஸ், CTOவின் இந்தியா வருகை என்று அவரும் பிஸிதான் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு எந்த நாளில் அப்ரைஸல் மீட்டிங்க் நடந்தாலும் நாள்கணக்கு தவறாமல் கிடைக்க வேண்டிய கூடுதல் பணம் arrear ஆகக்கிடைத்துவிடும். இந்த தலை தான் என்னைத் தனிப்பட்ட முறையில் interview வைத்து எடுத்தது, என்ன காரணத்தினாலோ HR மக்கள் வெளியில் சென்றிருக்க, முதல் ரவுண்ட் இன்டர்வியூ எடுக்கும் ஆளும் வெளியில் சென்றிருந்த பொழுதில் நான் ஹோட்டலுக்குச் சென்றிருந்ததால் இவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் எடுத்திருந்தார்.

ஒரு முக்கால் மணிநேர இன்டர்வியூ முடியும் பொழுதே நீங்க பேப்பர் போட்டுவிட்டு காத்திருங்கள் நீங்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கமுடியும் என்று சொல்லியனுப்பினார். அன்று நினைத்தேன் சரியான மாங்காயாயிருப்பான் போலிருக்கு என்று ஆனால் ஆள் சரியான டெக்னிகல் மனுஷன், அங்க உதைக்குது இங்க உதைக்குது என்றால் தானே உட்கார்ந்து debug பண்ணி சரிசெய்யும் அளவிற்கு எங்கள் architectureன் in and out தெரிந்தவன். சரியான ஞாபகசக்தி, சென்ற முறை கம்பெனி அளவில் நடந்த Quiz போட்டியில் தன்விடை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய விடைகளையெல்லாம் சொல்லி ஆச்சர்யப்படுத்தியவர். ம்ம்ம் பல சமயங்களில் நம்முடைய First impression படுதோல்வியடைகிறது. எனக்கு என் தலை விஷயத்தில் அப்படியே! இன்னும் அப்ரைஸால் முடியவில்லை பார்ட்டி முடிந்து வந்ததும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த முறை அப்ரைஸல் பற்றிய பெருங்கனவுகள் இல்லை, நான் என்ன செய்தேன் என்ன செய்யலை என்று எல்லாவிஷயங்களும் பெரியவருக்கு தெரியுமாதலால் அப்ரைஸல் இந்த முறை பிரச்சனையில்லாமல் செல்லும் என்று தான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

கம்பெனி வழக்கப்படி டிசம்பரில் கிறிஸ்மசுடன் சேர்த்து பதினைந்து நாள் விடுமுறை கொடுப்பது வழக்கம். இந்த முறையும் உண்டு, டிசம்பர் 19ல் இருந்து ஜனவரி 2 வரை விடுமுறை ஏற்கனவே இந்த விடுமுறையைக் கணக்கிட்டு டூர் ப்ளான் ஒன்று போட்டு டிக்கெட் எல்லாம் புக்செய்தாகிவிட்டது. என்ன உயிருக்கு ஆபத்து இல்லாமல் திரும்பி வரவேண்டும் அவ்வளவே! தூங்கி எழுந்து வேலை செய்து திரும்பவும் தூங்கத்தான் நேரம் கிடைக்கிறது எதுவும் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In நாட்குறிப்பு

'கார்சியா மார்க்வெஸ்' பிச்சை வாங்கணும் சுஹாசினி கிட்ட - மாஜிக்கல் ரியலிஸம்

வியாழக்கிழமை அதுவும் ப்ரொஜக்ட் ரிலீஸ் பிஸியில் இருந்த நான் டீவி பார்த்திருப்பதே பெரிய விஷயமாயிருந்திருக்க வேண்டும். என்ன செய்ய கலிகாலம் முத்திடுச்சு, நான் 1,2,3 என்று சன் மியூஸிக்கிற்காக நகர்த்திக்கொண்டே வர 4 ல் ஜெயாடிவி, சுஹாசினி தங்கச்சி(ஹிஹி) ஹாசினி பேசும் படத்தில் பேசிக்கொண்டிருந்தாங்க! நானும் பேசாம மூடிட்டு போயிருக்கணும் இல்லாமல் சரி என்னா சொல்றாங்கன்னு பார்த்தேன் - சரியா கவனிச்சிக்கங்க நான் பார்த்தது கடைசி ஐந்து நிமிஷம் தான் இருக்கும் அதற்கே இப்படி ஒரு பதிவு.

அவருடைய கொனொஷ்டைகளைத் தாண்டி அவர் விமர்சனத்தைப் பார்ப்பதே பெரிய விஷயம், இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் பின்னாடி ஐம்பது க்ரூப் ஆர்ட்டிஸ்ட் ஆடுறதுக்கு சுத்திச் சுத்தி காரணம் சொல்லிட்டு 'மாஜிக்கல் ரியலிட்டி' அப்படின்னாங்க பாருங்க. என்ன சொல்ல 'கார்சியா மார்க்வெஸ்' கேட்டிருந்தா வருத்தப்படுவார் என்பதைத் தவிர. இந்த மாதிரி நேம் டிராப்பிங்களை முதலில் நிறுத்தலாம் இந்த தங்கச்சி.

நினைத்துக் கொண்டேன், இன்னும் இரண்டு தரம் 'அரசூர் வம்சத்தையோ' 'டார்த்தீனயத்தையோ' படிச்சி பாவத்தைப் போக்கிக்கலாம் என்று இருக்கிறேன்.

--------------------------

சுஜாதாவுடன் சாட்டிக் கொண்டிருந்த பொழுது 'கற்றதும் பெற்றதும்' பற்றிய பேச்சின் பொழுது - தான் நிறுத்தவில்லை என்றும் ஆவிதான் நிறுத்தியதாகவும் சொன்னது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. நான் இன்றுவரை வெள்ளிக்கிழமை ஆன்லைன் ஆவியை வெள்ளிக்கிழமையே படிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் சுஜாதாதான்.

"w_sujatha: Murthy They are behaving funny these days"

இதுவும் கூட ஆச்சர்யமான ஒரு ஸ்டேட்மென்ட்டே என்னைப் பொறுத்தவரை. ஞானியைப் பற்றிப் பேசும் பொழுது சொன்ன,

"w_sujatha: subbudu no idea juno gnani is their chief adviser"

என்றது கூட எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. அப்ப "ஓ! பக்கங்கள்" நிறுத்தியதை எந்தக் கோணத்தில் அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் இன்னொரு கேள்விக்குச் சொன்ன,

"w_sujatha: Saha probably They are being advised wrongly "

பதிலைப் பற்றி எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை ;).

உயிர்மையில் பாரதிராஜாவைப் பற்றி எழுதியிருந்தார் அதிலும் ஏகப்பட்ட ஆச்சர்யப்படுத்தக் கூடிய விஷயங்கள். கேட்டதற்கு என்னுடைய சிறிது கால அவதானிப்பு என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார், சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் பொழுது பிரபல வலைப்பதிவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஆனால் பேச்சு சட்டென்று சினிமா, பாரதிராஜாவிடம் இருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றுவிட்டது.(வேறயாரு சாருநிவேதிதா தான் அது - அதாவது பேச்சு சென்றது)

-----------------------------------------

சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஒரு தமிழ் ப்ளாக் எழுதும் படிக்கும் கும்பல் 'ஆடு தாண்டிய காவிரி' 'முத்தத்தி' வரை சென்று வந்தது. ஒரு 'நைஸ்' ட்ரிப். SLR வாங்கிய பிறகு பெங்களூரில் செய்யும் முதல் பயணமாயிருக்கும், முன்னமே திருச்சி, கங்கை கொண்ட சோழபுரம் போய் வந்திருந்தேன். ஆனால் இந்த முறை என் காமராவை கையில் எடுக்கவே மனம் நடுங்கியது. எல்லாம் பெரிய பெரிய கைகள் எல்லாம் அவங்கவங்க SLR உடன் வந்திருந்ததால் கொஞ்சம் portrait மட்டும் எடுத்தேன். போர்ட்ராய்ட்டுகள் போட அனுமதி கிடைக்காததால் ;) போடலை. தமிழ்மணத்தின், மற்ற குழுமங்களின் அரசியல் அதிகம் பேசப்பட்டது, என் வாயை நன்றாகக் கிளறினார்கள். எவ்வளவு உளறினேன் என்று தெரியாது. யாராவது பதிவெழுதினால் பார்க்கலாம். இருமுறை ஃபோனில் மட்டுமே பேசியிருந்த நண்பரொருவர் பக்கத்து சீட்டில் மாட்டினார், பாவம், ஆனால் நாங்கள் இருவரும்(வேணும்னா நான் மட்டும்) பேசிய பேச்சில் டெம்போ டிராவலரே கொஞ்சம் ஆடிப் போயிருந்தது. ஹிஹி. வெளியில் பப்ளிஷ் செய்றோனோ இல்லையோ அதைப்பற்றி ஒரு பதிவு எழுதிவைச்சிக்க முயற்சி செய்யணும்.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Science ஜல்லிஸ்

உங்கள் பதிவை ஹாக்கினால் தப்புவது எப்படி?

இட்லிவடையின் பதிவை ஹாக்கிவிட்டார்கள் என்று ஒரு புரளியோ உண்மையோ கிளம்பி பெரிதாய் பேசப்பட்டது. அப்பொழுது இட்லிவடை gmail account hack ஆகிவிட்டதாகவும் blogger அக்கவுண்டை திரும்ப எடுத்துவிட்டதாகவும் சொன்னார். நிறைய பேர் இதைப்பற்றி பேசினார்கள் இட்லிவடை பதில் சொன்னாரா என்று தெரியாது ப்ளாக்கர் அக்கவுண்டை எப்படி திரும்பஎடுத்தார் என்று.

இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த பொழுது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இட்லிவடை சொல்வது சாத்தியமா என்று. நான் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இதைப்போல் செய்ய முயன்று தேடி கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததால்.

எனக்கு பூனையாக இல்லாமல் போன சோகங்களுக்கும், செப்புப்பட்டயத்திற்கும் ஒரே மாதிரியான பெயர், ஃபோட்டோ வருவது பிடிக்கவில்லை. செகுவாராவை பூனைக்குட்டிக்கு அவ்டாரா போட்டு சக்க கடியா இருந்தது எனக்கு இது நடந்தது ப்ளாக்கரில் இருந்து பீட்டா ப்ளாக்கருக்கு மாறிய பொழுது. எல்லா பதிவும் ஒன்னா ஒரு மெயில் ஐடிக்கு போய்விட்டது.

இப்ப உங்களுக்கான சொல்யூஷன்.

முதலில் இன்னொரு gmail idக்காரரை உங்களில் பதிவில் எழுத இன்வைட் செய்யவேண்டும். எப்படியென்றால் Settings - Permissions - Add Authorல் ஒரு gmail idக்கு இன்வைட் அனுப்புங்க, அதை அந்த gmail idயில் இருந்து accept செய்துகொள்ளுங்கள்.

பின்னர் அந்த புதிய gmail id போட்டு ப்ளாக்கரை திறந்தால் நீங்கள் இன்வைட் எந்த பதிவில் இருந்து செய்திருந்தீர்களோ அந்தப் பதிவில் வெறும் எழுதுவதற்கான வசதி கிடைத்திருக்கும். இப்பொழுது திரும்பவும் உங்களின் பழைய gmail idல் ப்ளாக்கரைத் திறந்தால். அதே Settings - Permissionsல் Grant admin privileges என்று ஒரு லிங்க் வரும் இதைக் கிளிக்கினால் அந்த புதிய gmail idக்கு admin privileges கிடைக்கும், எப்படி உங்கள் பழைய gmail idக்கு இருக்கிறதோ அதைப் போல்.

இப்பொழுது பழைய gmail idக்கு admin rights இல்லாமல் author rights மட்டும் தான் இருக்கும். அந்த author rightsஐயும் எடுத்துவிட்டால் உங்கள் பதிவு உங்கள் புதிய gmail idயில் இயங்கத் தொடங்கும். author rights எப்படி எடுப்பதென்றால் அதற்குப் பக்கத்தில் இருக்கும் Delete பட்டனை குத்தி நீக்கலாம்.

இப்பொழுது நான் அப்படிச் செய்து என் பூனைக்குட்டியையும் செப்புப்பட்டயத்தையும் பிரித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்ய இந்தப் பதிவு வந்த சில நிமிடத்தில் பூனனக்குட்டியில் weekend ஜொள்ளு வரும். இந்த விளக்கம் கொஞ்சம் மேம்போக்காக programming terms போல இருக்கலாம். உதவி வேண்டினால் தனியாக விளக்குறேன்.

இட்லிவடை இப்படித்தான் செய்தாரா என்றும் விளக்கலாம் ;)(அவரு பின்னூட்டம் போடுவாரா?)

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In நாட்குறிப்பு

டைரிக் குறிப்புகள் - வாலிபால் அனுபவங்கள்

நான் வாலிபால் விளையாட மனதளவில் தயாரான பொழுது இன்னமும் நினைவில் இருக்கிறது பசுமையாய். ஒன்பது முடித்து பத்தாவது சேர்வதற்கு முன்னான வருடப்பரிட்சை விடுமுறை காலம். BHELல் கோச்சிங் கேம்ப்கள் நிறைய நடைபெறும், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கலாம், ஓவியம், நீச்சல், டென்னிஸ், ஷட்டில் இப்படி. என் வாழ்க்கையில் விடுமுறைக்கென்றோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ என் வீட்டை விட்டு வெளியில் தங்கியதில்லை. அதேபோல் வேறு மனிதர்கள் யாரும் எங்கள் வீட்டிலும் தங்கியதில்லை நான் அக்கா அம்மா அப்பா எல்லாம் ஒரு தனித்தீவு போலத்தான் அந்தக் காலத்தில். இப்பவும் ஒன்னும் என்னைத் தவிர்த்த மற்றவர்களின் வட்டம் அவ்வளவு பெரியது இல்லை என்றே நினைக்கிறேன்.

BHELல் ஒரு அருமையான பாஸ்கெட்பால் கிளப் ஒன்று உண்டு, கலைச்செல்வன் என்பவர் நடுத்துகிற கிளப் அது. அப்பா PET என்பதால் கலை அண்ணாவுடன் நல்ல பழக்கம் அதுமட்டுமல்லாமல், அப்பாவின் நெருங்கிய நண்பரான இன்னொரு PETயின் அண்ணா பையன் என்கிற முறையில் அப்பா சிலதடவைகள் பாஸ்கெட்பால் காம்படிஷனுக்கு முன்னால் பிஸிகல் டிஸ்ப்ளே செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் அப்பாவிடம் அவ்வளவாகப் பேசமாட்டேன், அம்மாவிடம் நச்சரித்து என்னை அங்கே சேர்த்துவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன். அது அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை தான்; என்ன காரணமோ அப்பா கலை அண்ணாவிடம் பேசி என்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்.

நான் சின்ன வயதில் இருந்தே பாஸ்கெட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். ஒரு அழகான விளையாட்டு, கலை அண்ணா நடத்தின அத்தனை டோர்னமென்ட்டும் பார்த்திருக்கிறேன். அப்பா PET என்றாலும் கோ-கோ, கபடிக்கு ஊதுவார் தெரியும் - ஆனால் பாஸ்கெட்பால் எல்லாம் ரெஃப்ரி பண்ணமாட்டார். அவர் மற்றவர்களைப் போல் PETக்கு படித்து வந்தவர் இல்லை, நல்ல உடற்பயிற்சியும் உடல்திறனும் சேர்த்து அவரை உடற்பயிற்சி ஆசிரியராக்கியிருக்கிறது. அவரைப் பற்றி இன்னொருமுறை எழுதுகிறேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாகயிருக்கும் அப்பா ஏன் பாஸ்கெட்பால் ரெஃப்ரி பண்ண மாட்டேங்கிறார் என்று. அப்படி எனக்கு விருப்பமான விளையாட்டு.

அம்மா காலையில் எழுப்பிவிட வீட்டிலிருந்து நடந்தே ஸ்டேடியம் வந்து பேஸ்கட்பால் காலரியில் உட்கார்ந்திருந்தேன். கலை அண்ணாவுக்கு என்னை நன்றாகத் தெரியும் அப்பாவுடன் வைத்து நிறைய முறை என்னைப் பார்த்திருக்கிறார், என்னுடன் நன்றாகப் பேசவும் செய்வார். அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கெல்லாமுமே ட்ரௌஸர் என்பதால் ட்ரௌஸரும் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு சென்றிருந்தேன். இது போன்ற கோச்சிங்-கேம்ப்களுக்கு பணம் கட்டித்தான் சேரமுடியும், ஆனால் அப்பா PET என்பதாலும் கலை அண்ணாவின் நண்பர் என்பதாலும் காசு எதுவும் கட்டவில்லை என்று எனக்குத் தெரியும்.

நான் தான் முதல் ஆள், அன்று தான் பாஸ்கெட்பால் கோச்சிங் முதல் நாள், நேரம் ஆக ஆக புதிதாய் கோச்சிங்கில் சேரவந்தவர்கள் ஒன்றிரண்டாக வரத்தொடங்கினர். ஏற்கனவே அங்கே பயிற்சி பெற்று வருடம் முழுவதும் ஆடும் மற்றவர்களும் சிறிது நேரத்தில் வர பழைய ஆட்கள் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினர். புதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், நமது inferiority complex யாருடனும் என்னைப் பேச விடாமல் செய்தது அதுமட்டுமில்லாமல் அவர்கள் எல்லோரும் அழகான ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு ஜெர்ஸியில் வந்திருந்தார்கள். நான் ஒருவன் தான் ட்ரௌஸர் மற்றும் டீஷர்ட். எனக்கு சாதாரணமாக எழுந்த தாழ்வு மனப்பான்மையால் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் அன்று. பக்கத்தில் வாலிபால் கோச்சிங் நடந்து கொண்டிருந்தது. அன்று அங்கும் சேரவில்லை, அம்மாவிடம் அழுது நான் பாஸ்கெட்பால் சேரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்தேன்.

இன்று என்னால் சொல்லமுடியவில்லை நான் வாழ்க்கையில் பாஸ்கெட்பாலை இழந்துவிட்டேனா என ஏனென்றால் எனக்கு வாலிபால் கிடைத்திருக்கிறதே. பாஸ்கெட்பால் க்ரவுண்டுக்கு அருகில் தான் வாலிபால் க்ரவுண்ட், கலை அண்ணா நான் பாஸ்கெட்பால் கோச்சிங் வராமல் வாலிபால் கோச்சிங்கில் இருப்பதைப் பார்த்து அப்பாவிடம் வருத்தப்பட்டதாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் என்னையும் சிலசமயம் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விடுவார். நிறைய பேருக்கு நான் ஏன் அன்று அப்படியொரு முடிவெடுத்தேன் என்று தீர்மானிக்க கஷ்டமாகயிருக்குமாயிருக்கும். பள்ளிக்கூடத்தில் இருந்து அப்பாவின் ஆதிக்கம் செல்லுபடியாகும் எல்லா இடங்களிலும் சலுகை, பணம் கட்டி பெரிதாக எதையுமே செய்ததில்லை. டியூஷனாகட்டும், டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் ஆகட்டும் எல்லாமே ஃப்ரீ. ஆனால் அப்பாவின் முன் காசுகேட்க விரும்பாதவர்கள் என்னிடம் காசு கொடுத்து படிப்பவர்களிடம் காட்டும் அக்கறையைக் காட்டவில்லை என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் எதையுமே சரியாய் முடித்ததில்லை, டியூஷனாகட்டும் டைப்ரைட்டிங் கிளாஸாகட்டும் இரண்டு மாதங்கள் பணம் தராமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் அவர்களால் தொடர்ச்சியாக அப்படியிருக்க முடிந்திருக்கவில்லை அதனால் பெரும்பாலும் நானே நின்றுகொண்டுவிடுவேன். அப்பாவுக்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்.

வாலிபால் கோச்சிங் வந்தவர்கள் என்னைப் போலவேயிருப்பதாகப் பட்டது எனக்கு. ஒரு மாத கோச்சிங் முடியும் பொழுது நான் சர்வீஸ் போட, பூஸ்டிங் செய்ய, அன்டர் ஆம் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். கோச்சிங் முடித்ததும் எல்லோருக்கும் கொடுத்த பனியன் எனக்குக் கொடுக்கப்படவில்லை முதலில் ஏனென்றால் அதெல்லாம் காசுகட்டி பயின்றவர்களுக்குத் தான். ஆனால் என் கோச் ராஜமாணிக்கம் எனக்கும் வாங்கித் தந்தார். மற்றவர்களைப் போல ஒரு மாதப் பயிற்சிக்குப் பின் நான் வாலிபால் விளையாடுவதை நிறுத்திவிடவில்லை அதற்கு முக்கியக் காரணம் என் கோச் ராஜமாணிக்கம் என்னைத் தொடர்ந்து வந்து விளையாடச் சொன்னார்.

நானும் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்று காபி குடித்துவிட்டு கிளம்பி வாலிபால் விளையாட வந்துவிடுவேன், Community Center என்று சொல்லப்படும் ஒரு கிளப்பைச் சார்ந்தது தான் அந்த வாலிபால் கிரௌண்ட். BHELக்கு இருக்கும் வாலிபால் டீம் அங்கே தான் விளையாடுவார்கள், அவர்கள் ஏழு மணிக்குத்தான் வருவார்கள், எங்கள் வாலிபால் க்ரவுண்டும் சரி பாஸ்கெட்பால் க்ரவுண்டும் சர்ரி Fled Light வசதியுள்ளவை. அதனால் இரவு ஒன்பது மணிவரை விளையாடிவிட்டுத்தான் செல்வார்கள். கம்யூனிட்டி செண்டருக்குச் சென்று வாலிபால் பந்துகளை எடுத்துக்கொண்டு க்ரவுண்டுக்கு வருவது எனக்கு வழக்கம். வந்து மற்ற எல்லா பந்துகளையும் வைத்துவிட்டு ஒரு பந்தை எடுத்து பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.

என்னை எல்லாம் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், நான் ரொம்பவும் சின்னப்பையன் ஃபிங்கரிங் போடும் பொழுது பந்து கைக்குள் நிற்காத காலங்கள் அவை. ஆனால் இடைவிடாதப் பயிற்சி, பந்து பொறுக்கிப்போடுவது தான் வேலை ஒரு பக்கம் நெட்கட்டியிருப்பார்கள் இன்னொரு பக்கம் ஓப்பன் ஸ்பேஸ். கையில் வைத்து ஃபிங்கரிங், அண்ட்ர் ஆம் போட்டுக்கொண்டே அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். பந்து என்னைத் தாண்டிச் சென்றால் என் கையில் இருக்கும் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பந்தை எடுத்து பயிற்சி செய்வேன். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி பயிற்சி செய்திருக்கிறேன்.

என்ன ஆனதோ தெரியாது ஒரு நாள் community centerல் வேலை பார்க்கும் நபர் எனக்கு பந்து தரமுடியாது என்று சொல்லிவிட, அன்று நான் க்ரவுண்டில் பந்து இல்லாமல் உட்கார்ந்திருக்க வந்த BHEL ப்ளேயர்கள் இனிமேல் என்னிடம் அப்படிச் சொல்லக்கூடாது என்று சொல்லி அந்த நபரைத் திட்டினார்கள். அதில் விளையாடும் எல்லோருக்கும் என் தாத்தாவைத் தெரிந்திருக்கும், எங்க அம்மா வழித்தாத்தா வாலிபால் ப்ளேயர், National referee. இன்றுவரை அவரை மாதிரி சர்வீஸ் போடமுடியாதென்று நிறையபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரயில்வேஸ்காக விளையாடியவர் அவர். சொல்லப்போனால் எங்கள் குடும்பத்திலேயே வாலிபால் விளையாடத்தெரியாத(proper) ஆள் எங்கக்கா தான். சித்தி, அம்மா, மாமா இருவரும், அப்பா, தாத்தா எல்லோரும் விளையாடுவார்கள் அவரவர்களின் பள்ளி கல்லூரிக்காக விளையாடியவர்கள்.

பின்னர் BHEL அணியினரின் பயிற்சி நிறைவு பெற, அதில் விளையாடிக் கொண்டிருக்கும் வேறு அண்ணன்கள் மட்டும் விளையாடுவார்கள் அப்பொழுது என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். அப்படித் தொடங்கியது தான் நான் க்ரவுண்டிற்குள் மேட்சிற்காக இறங்கியது என்றால் அதற்குப் பிறகு பள்ளிக்காக, கல்லூரிக்காக, கம்பெனிக்காக(Kanbay) விளையாடியிருக்கிறேன். இன்று ஏதேதோ காரணங்களுக்காக பேஸ்கெட்பால் கிடைக்காததால் தான் வாலிபால் விளையாடினேன் என்று நான் நினைக்கவில்லை, என் உயரத்திற்கு என்னைச் சாதிக்க வைத்தது வாலிபால், நான் என்னுடைய உழைப்பை போட்டேன் பலன் கிடைத்தது. அவ்வளவே பெரிய அளவில் வெற்றிகள் பெற்றதில்லை தான், மறுக்கவில்லை. ஆனால் நல்ல ஸ்டெமினாவைக் கொடுத்தது வாலிபால் தான், சொல்லப்போனால் எங்கள் வீட்டிலேயே ஸ்டெமினா குறைவாக இருப்பது நானாகத்தானிருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

அழகிய தமிழ்மகன்

அம்மா அப்பா பெங்களூருக்கு தீபாவளிக்கு வந்திருந்ததால் ஏதாவது ஒரு தீபாவளி ரிலீஸ் படம் போகாலாம் என்று ப்ளான் இருந்தது. போனதடவை வந்திருந்த பொழுது சிவாஜி போகலாமான்னு கேட்டாங்க ஆனால் டிக்கெட் வாங்கச் சென்ற பொழுது நான் எதிர்பார்த்த சமயத்தில் சிவாஜி படம் பார்க்கமுடியாது என்று வந்துவிட்டதால் இந்தமுறை டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன். INOXல் வெள்ளிக்கிழமை மதியம் தான் முதல் ஷோ. அதற்கு ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன், பதிவுகளில் விமர்சனம் என்ற பெயரில் இந்தப்படத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் அதைப்படித்து நான் இந்தப்படத்தைப் பார்க்கப்போகும் வாய்ப்புகள் எதுவும் குறையப்போவதில்லை என்பதால் அவைகளைப் படிக்கவில்லை; எல்லாம் ஒரு முன்னேற்பாடு தான்.

முதல் பாதி படம் நல்ல விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது, என்னக் கொடுமைன்னா படத்தின் ஆரம்பத்திலேயே படத்தில் ஏதோ 'கதை' சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதைப்பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என்னாது டாக்டர். விஜய் படத்தில் கதையா? அதுவும் பர்ஸ்ட் ஹாஃபிலா! ஆச்சர்யம்தான். படம் மலைக்கோட்டையில் தொடங்குகிறது, இதையும் ஏதோ சாமியார் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். இப்பல்லாம் நிறைய படத்தில் மலைக்கோட்டையை காண்பிச்சிட்டுத்தான் தொடங்குறாங்க.

விஜய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டு 100M ஓடுறார், எனக்குத் தெரிந்து BPBHSS(அதாங்க எங்க ஸ்கூல் Boiler Plant Boys Higher Secondary School)ல் நடக்கும் ஸ்கூல் லெவல் போட்டியில் கூட மக்கள் ஸ்பைக்ஸ் ஷூக்கள் போட்டுத்தான் ஓடுவார்கள். அண்ணாத்த காலையில் ஜாகிங் போகும் ஷூவில் வந்து 100M ஓட்டம் ஓடுகிறார். ஆனால் விஜய் படத்தில் இந்த அளவுக்கு லாஜிக் பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே படுவதால் எஸ்கேப்.

ஸ்ரேயா அக்கா வராங்க, கொஞ்சமா ட்ரெஸ் போட்டு ஆட்டம் ஆடுறாங்க, கொஞ்சம் கண்ணீர் விடுறாங்க கடைசி கிளைமாக்ஸில் சென்டிமென்ட் ஆகப்பேசி 'கெட்ட'விஜய்யை திருத்துகிறார். ஹிஹி பெண்ணிய பக்வாஸ் விமர்சனம் ஒன்றை எதிர்பார்க்கலாம், ஒரிஜினல் விஜய்யையும் டூப்ளிகேட் விஜய்யையும் கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவிற்கு ஸ்ரேயாவை முட்டாளாகக் காண்பித்திருக்கிறார்கள் என்று ஆனால் படத்தில் பாதியில் கழட்டி விடாமல் ஷ்ரேயா அக்காவை கடைசி வரை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஜய்க்கு இரட்டை வேஷமாம், ஒரு இன்ச் கூட வித்தியாசம் இல்லாமல் இரண்டு வேடங்களிலும் விஜய், ஆனால் அதற்கேற்றார்ப்போல் கதையும் இரண்டும் பேரும் ஒரே மாதிரி. எனக்குத் தெரிந்து ஜீன்ஸ் என்று ஒரு படம் வந்தது அதில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஐஸ்வர்யாராயை உண்மையாகக் கல்யாணம் செய்துகொள்ளும் பிரசாந்திற்கு(அதாவது இரட்டையரில் ஒருவர்)த் தான் எல்லாப் பாடல்களும் இருக்கும் ஒரே ஒரு பாடலைத் தவிர, இதை ஏன் சொல்றேன் என்று கேட்கிறீங்களா? அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் வெளியில் என் வயசொத்த பையன்கள் ரொம்பவும் கவலைப்பட்டார்கள் கடைசியில் அந்த இன்னொரு பிரசாந்தைக் இப்படி செஞ்சிட்டாங்களேன்னு அதனால ரொம்பவும் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள்.

இப்படி எல்லாம் ரசிகர்கள் நினைப்பார்கள் என்று நினைத்தோ என்னமோ 'கெட்டவன்' விஜய்க்கு ஒரு பாட்டு, ஒரு ஹீரோயின், ஒரு ரேப் சீன்(அப்படியா?), ஒரு குழந்தை என சொல்லிக்கொண்டே வந்தவர்கள், இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

'பொன்மகள் வந்தாள்' பாட்டு சொல்லப்போனால் கதைக்கு ஏற்றவகையில் ரீமிக்ஸ் செய்திருப்பதாகச் சொல்லலாம் தான், ரீமிக்ஸ் பாடல்களில் இது தனியாக நிற்கிறது - ரஹ்மானாம், கலக்கலாக இருக்கிறது பாட்டு. ஆனால் இன்னும் நல்லா செய்திருக்கலாம் இந்தப்பாடலின் டான்ஸ், அதுவும் விஜய் இருக்கும் பொழுது படம் காண்பித்திருக்கலாம். ம்ஹூம் ஒழுங்காக இந்தப்பாடலை எடுக்கவில்லை, விஜய்யின் ட்ரெஸ்ஸிங்கும் இந்தப்பாடலுக்குப் பொருந்தவில்லை சிம்புவிடமாவது கேட்டிருக்கலாம்(சிம்பு அந்த விஷயத்தில் சூப்பர், லூசுப்பெண்ணே எடுத்திருந்திருந்த விதமும் ட்ரெஸ்ஸிங்கும் அருமை).

மற்றபடிக்கு ஷகிலாவுடனான இரட்டை அர்த்த கிச்சுகிச்சு, ஷகிலாவின் Cleavage ஷாட்ஸ் வைக்கணும்னே ஷகிலாவை இழுத்திருப்பார்களோ என்னமோ இன்னொரு பாட்டில் ஷ்ரேயாவும் Cleavage காட்டிச் செல்கிறார் என்ன சொல்ல தியேட்டரின் முதல் சீட் வரிசையில் ஏற்கனவே கழுத்தை தூக்கி படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் நிலைமை கவலைக்கிடம் ;).



சந்தானம், கஞ்சா கருப்புவும் கூட கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் சில இடங்களில் சிரிப்பும் வருகிறது.

இரட்டையர் படம், கிராபிக்ஸ்க்கு இன்னும் கொஞ்சம்(நிறைய!!!) செலவு செய்திருக்கலாம். பக்வாஸா இருக்கு, ஜீன்ஸ் குறைந்தபட்சம் ஆளவந்தான் அளவுக்கு கூட கிராபிக்ஸ் இல்லை. விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம் ஏன் என்றால் இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் விஜய் இன்னும் கீழிறங்கி பக்வாஸ் படங்கள் எடுத்து அதையும் நூறு நாள் ஓட்டமாட்டாராயிருக்கும். படத்தின் பாதியிலேயே விஜயின் அம்மா, அப்பாவைக் காணோம். இரண்டு விஜயில் எது ஒரிஜினல் என்பதில் வரும் சந்தேகங்கள் என நிறைய லாஜிக் ஓட்டைகள் உண்டுதான் என்றாலும் விஜய்கிட்டேர்ந்து இந்த அளவு படம் வருவதே பெரிசுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். விஜய் எப்படி படம் எடுத்தாலும் அவங்க அப்பா 100 நாள் ஓட்டுறார்ங்கிறதால இது மாதிரி படம் எடுக்கவாவது தோனிச்சே. எங்கப்பாவின் விமர்சனத்தை பொதுப்புத்தி சார்ந்த விமர்சனமாகப் பார்த்தால் படம் நல்லாயிருக்கு என்று தான் என் அப்பா சொன்னார். வேறெதுவும் நினைவில் வந்தால் பின்னால் இணைக்கிறேன்.


Read More

Share Tweet Pin It +1

16 Comments

In இருத்தலியநவீனம்

நான் கவிழ்த்த கோப்பைகள்

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.



ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

---------------------------------

தேவைப்பட்டால் முடிந்தால் தொடர்வேன்...

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In நாட்குறிப்பு

டைரிக் குறிப்புகள்

என் எழுத்துநடையைப் பற்றிய கிரேஸ் எனக்கு உண்டுதான்; பலநாட்களில் மனம் ஒரு நிலையில் இல்லாதபொழுது முன்பு எழுதியவற்றை எடுத்து படித்து சிரித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அதென்னமோ எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட நடை கிடையாது கொஞ்சம் போல் சுஜாதாவைக் காப்பியடித்துக் கொண்டுவந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா படிச்சிட்டு என்னுதில்லை இதுன்னு சொன்னாருன்னா என்னுதுதான் இந்த நடை. விருப்பமில்லாமலோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ தங்கள் சொந்த நடையை மாற்றிக்கொண்டு எழுதுபவர்களை நினைத்தால் பாவமாகயிருக்கும். என்னால் ஒரு முழுநீள நகைச்சுவைப் பதிவு எழுதமுடியாததற்குக் காரணமாய் நான் நினைத்துக்கொண்டிருப்பது கூட இந்த விஷயத்தால் தான்.

POGOவில் Just for laughs gags, Smile OK please ம் ரொம்ப வருஷமா பார்த்துவருகிறேன். Takeshi's castle முன்பிருந்தே வருகிறதென்றாலும் அவ்வளவு தீவிரமாய் பார்க்கமுடியாததற்கு வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு பெரும்பாலும் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இல்லாமல் இருந்தது தான் காரணம் பெங்களூர் வந்ததில் இருந்து நான் தொடர்ச்சியாக பார்க்கும் ஒரு விஷயம் இந்த நிகழ்ச்சி மனசுவிட்டு சிரிப்பதற்கு ஏற்ற நிகழ்ச்சி மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிப்பதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுந்தாலும் பங்கேற்பவர்களும் Enjoy செய்வதால் நமக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

சன் மியூஸிக்கில் இரவு 9 - 10 மணிக்கு ஹலோ ஹலோவில் தொடர்ச்சியாக ஹேமா சின்ஹா வந்துகொண்டிருந்த நாட்களில் நானும் தொலைபேசி ஜல்லியடித்திருக்கிறேன். அந்தப் பொண்ணு கொஞ்சம் வாத்து மாதிரியிருக்கும், சுமாரா தமிழ் பேசும் மொக்கையாக கேள்வி கேட்டு அதுக்கு அதைவிடவும் மொக்கையாய் க்ளூ கொடுக்கும். ராஜிவ் காந்தியோட அம்மா பேர் என்னான்னு கேட்டுட்டு அவங்க பேரில் ஒரு பாதி இந்திரான்னு க்ளூ கொடுக்கும்னா பார்த்துக்கோங்க. ஆனால் எனக்குத் தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் - ஹேமா ஜோடி நல்லாயிருக்கும் ஆனால் ஹைட் வித்தியாசம் அதிகம் இருக்குங்கிறதுனால விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித்தான் பேசிட்டு பிடித்த பாடலான "ஊரோரம் புளியமரம்..." போடுங்கன்னு சொல்லிட்டு போனை வைக்குறேன். நண்பரொருவர் போன் செய்து ஏன்யா வேற பாட்டே கிடைக்கலையா என்று கேட்டார். அப்பத்தான் தெரிஞ்சது ரொம்பப்பேர் இதை பார்த்துக்கிட்டு வேற இருப்பாங்கன்னு.

நான் "ஜூன் போனால் ஜூலைக்காற்றே..." தான் கேட்டேன் ஆனால் அந்தப்பாட்டை கொஞ்ச நேரத்திற்கு முன் தான் ஒளிபரப்பினோம் வேற சொல்லுங்கன்னு முன்னமே கேட்டு இந்தப்பாட்டை வாங்கிக்கிட்டாங்க. இப்பொழுதெல்லாம் ஒரு பாட்டை பிரபலப்படுத்தணுனு சன்மியூசிக்கில் நினைச்சிட்டா பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன். "உலக அழகி நான் தான்..." இந்த பிறப்பு படப் பாடலை முதலில் பார்த்தப்ப சுத்தமா பிடிக்காம இருந்தது. ஆனால் தொடர்ச்சியா பார்க்கப்போய் இப்ப ரொம்பப் பிடிச்சிப்போச்சு.



அழகான பொண்ணை என்னப் பாடு படுத்தியிருக்காரு பாருங்க அந்த இயக்குநர். இந்தப் பொண்ணும் ஹேமா சின்ஹாவும் ஒரு நிகழ்ச்சிக்காக சன்மியூசிக்கில் ஒன்றாய் நின்னப்ப எந்தப் பொண்ணை சைட் அடிக்கிறதுன்னு பெரிய குழப்பமே வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன். இந்தப் பொண்ணுங்களுக்கு எதுவும் ரசிகர் மன்றம் இருக்கான்னு தெரியலை; இருந்தா சேர்ந்துக்கலாம் இல்லைன்னா ஒன்னு உருவாக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்றீங்க.

காதலிப்பதைவிடவும்
கவிதையெழுதப் பிடித்திருந்தது
எனக்கு
கவிதையெழுதுவதற்காகக் காதலித்தவன்
நானொருவனாகத்தான் இருப்பேன்

அப்படின்னு ஒரு மேட்டர் எழுதி என்னுடைய ஸ்டேட்டஸ் மெசேஜில் போட்டதும் போட்டேன். சக்க மொத்து வாங்கினேன். அதுவரைக்கு சாட்டிங்கில் பார்த்திராத நண்பர்கள் எல்லாம் வந்து காட்டு காட்டிவிட்டு சென்றிருந்தனர். ஆனால் எல்லாருமே சொல்லிவைத்ததைப் போல் காதலியைத் தான் துக்கம் விசாரித்திருந்தார்கள். "பாவம்யா உங்க காதலி" என்று.

வா.மணிகண்டனின் "ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்" சிறுகதை படித்தேன். கிளைமாக்ஸில் சடர்ன்னான திருப்பம் இருக்கும் பெரும்பான்மையான கதைகள் நன்றாகத்தான் இருக்கும். இக்கதையும் அப்படியே ஆனால் சஸ்பென்ஸ் கதைகளுக்கு முக்கியமான ஆரம்பத்தில் இருந்தே வாசகரை அந்தக் கதைக்குள் தள்ளி அவரையும் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டு வரவைக்க வேண்டும். முடிவென்பது முற்றிலும் வாசகர் ஊகிக்காத ஒன்றாகயிருக்க வேண்டுமே ஒழிய அதுவரை கதையில் சொல்லப்படாத ஒரு விஷயமாக இருக்கக்கூடாது; இந்தக் கதையில், "இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன்." என்ற ஒரு இடத்தில் மட்டும் தான் அவர் அந்த விஷயத்தில் இவருக்கான தனிப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகிறார்.

பிகே சிவக்குமார் என்னிடம் சொல்வார், துப்பாக்கியைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து எழுதுகிறீர்கள் என்றால் அந்தக் கதையில் துப்பாக்கி எங்காவது ஒரு இடத்தில் வெடித்திருக்கவேண்டும் என்று. ஆனால் இந்தக் கதையில் துப்பாக்கி வெடிக்கிறது ஆனால் அதைப்பற்றி விவரங்கள் இல்லை ;). எங்கிருந்தோ சட்டென்று முளைத்த துப்பாக்கியொன்று வெடிக்கிறது. வாசகர் முதல் முறை படிக்கும் பொழுது ஜட்ஜ் செய்ய முடியாமல் அந்த ஹீரோவுக்கும் நரேஷின் பெண்டாட்டிக்கும் முதலிலேயே தொடுப்பு உண்டு என்று எங்காவது சொல்லியிருக்க வேண்டும். வாசகர் கவனிக்காத மாதிரி அதைச் செய்ய வேண்டும். ஆனால் அந்தக் கதை படிக்கும் பொழுது விறுவிறுப்பாக இருந்தது உண்மை. உரையாடலே இல்லாமல் சரசரன்னு இழுத்துட்டுப் போயிருக்கிறார் வாழ்த்துக்கள்.

ராஜேந்திர குமார், சுபா மற்றும் ஏனைய சஸ்பென்ஸ் புத்தகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இதுதான் காரணம். கிளைமாக்ஸில் எங்கிருந்தோ முளைக்கும் ஒரு புதிய வில்லனைக் காண்பித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள் எல்லாக் கதைகளையும் சொல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக எழுதும் பொழுது உழைப்பு குறைந்து எழுதித்தள்ளுவது தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

ஷேர் டிரேடிங்கில் இறங்கியிருக்கிறேன்னு சொன்னதும் அட்வைஸ் கொடுக்காதவங்களும், எச்சரிக்கை செய்யாதவர்களும் தான் குறைவாகயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அம்மா உண்மையிலேயே பயந்துவிட்டார்கள், அக்காவைத் தவிர பயமுறுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அக்காவிற்குத் தெரியுமாயிருக்கும் சொன்னாலும் திருந்தாத ஜென்மன் என்று. சைடில் Portfolio என்றொன்றைப் போட்டிருக்கிறேன். இதில் தற்சமயம் நான் வாங்கியிருக்கும் Stock களைப் போடலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது; தற்சமயம் குறைவாக இன்வெஸ்ட் செய்வதால் சரி, பின்னால் பிரச்சனை வருமே என்று நண்பர் ஒருவர் கேட்டார் நான் சொன்னேன் 100 வாங்கினேன் என்றால் 10 என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று.

இந்த நண்பர் தான் என்னுடன் சிவாஜி பார்த்தது. என்னமோ நினைத்துக்கொண்டவராய் சட்டென்று "நீ பொண்ணுங்க ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறியா?" என்று கேட்டார். "நான் ரொம்பவும் யோசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் நம்ம "பம்பா நந்தி" இல்லை அவ இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறேன் ஏன் கேக்குறீங்க" என்று கேட்டேன். "இல்லை அவளை விடு கல்யாணம் ஆனவ அவ புருஷன் ஷேகர் சொல்லி செய்றாளாயிருக்கும். நான் பார்த்திருக்கேன் ஷேகர் டிரேடிங் செய்வதை" சொல்லிவிட்டு மீண்டும் "கல்யாணம் ஆகாதவளுங்க யாராவது செஞ்சு பார்த்திருக்கிறியா?" என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் "நான் தேடிப்பிடிச்சி சொன்னாலும் அவங்கப்பா சொல்லிச் செய்றான்னு சொல்லுவீங்க" என்று சொன்னேன்.

பின்னர் இதைப்பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பெண்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் சுதந்திரம் கிடைக்கலை என்று நான் சொல்ல நிறைய விஷயங்களுக்கு அப்படித்தான் அப்படிப்பார்த்தா இந்த விஷயம் ரொம்பக்கடைசியாத்தான் வரும்னு சொல்லிட்டுப் போனார் அவர். நான் வேறெதாவது சொல்வேன்னு தெரியும் அவருக்கு அதனால் தான் அவ்வளவு வேகமாய் நகர்ந்தது.

இதே போல் முன்பொருமுறை எழுதிய குறிப்புகள் கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சுந்தர ராமசாமி பிரமிள் புத்தகங்கள்

பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்

இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,

"ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்."

என்ற கவிதை வரிகளும் "சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது." பிகேஎஸ்ஸின் இந்த வரிகளும் என்னை வெகுவிரைவாக சுந்தர ராமசாமி - பிரமிள் - இலக்கிய சர்ச்சையை நோக்கி இழுத்தது.

இடையில் ஜெயமோகன், "...ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத்தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்..." மரத்தடியில் எழுதியதைப் படித்திருந்தேன் - இதை ஜெ.மோ எழுதிய பொழுது சு.ரா உயிருடன் இருந்தாரா எனக்குத் தெரியாது ஆனால் நான் படிக்கும் பொழுது அவர் இல்லை. மேலும் ஜெ.மோ நினைவின் நதியில் என்ற சுந்தர ராமசாமியின் நினைவுகளைப் பற்றி எழுதியிருந்த சமயம். பெரிய உரையாடல் - கருத்துப் பரிமாற்றம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நடந்துகொண்டிருந்தது.

நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும் காலச்சுவட்டிற்கும் காண்டு என்று இதற்கு முன்னமே கூட படித்திருந்தேன். ஜெயமோகனின் "தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று" வரிகள் மற்றும் மேற்சொன்னவையெல்லாம் சேர்த்து என்னை இதைப்பற்றி நிறைய படிக்கவைத்தது.

இதற்குப்பின் நேரடியாக புத்தகத்தில் இருந்து படிக்காமல் இணைய நண்பர்கள் கிடைக்கும் தகவல்கள் என்று பிரமிள் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் நடந்த பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகமும் சுந்தர ராமசாமியின் "நினைவோடை - பிரமிள்" புத்தகமும் வாங்கினேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் முதலில் எடுத்தது பிரமிள் நினைவோடை - சுந்தர ராமசாமிதான்.

சொல்லப்போனால் இந்தப் பதிவை - நினைவோடை பிரமிள் - சுந்தர ராமசாமியின் புத்தக விமர்சனமாக பார்க்கலாம் தான்; பிரமீளைப் பற்றி நிறையப் படிக்காததாலும் புத்தகம் சுந்தர ராமசாமியினுடையது என்பதாலும் ஒருபக்கச் சார்பு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.



"பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்."

- புத்தகத்தின் பின்பக்க வரிகள்.

இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இது இலக்கியச் சண்டையைப் பற்றியதாக இருந்ததாலும் இதைப் பற்றி வெகுகாலமாக நான் தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்ததாலும் சுவாரசியமாகப் பட்டதா தெரியவில்லை. முன்னமே கூட ரமேஷ் - பிரேம்ன் பேச்சும் - மறுபேச்சுமில் வந்த உரையாடல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி, பிரமிளை சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சந்தித்து உரையாடி இரண்டு ஆண்டு ஒன்றாய் இருந்தது பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டின் பொழுதான காலங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

"சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ்.பொவின் 'தீ' பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயதில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம் தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. 'தீ' என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை..." இப்படித்தான் சு.ரா. பிரமிளைப் பற்றிய தன்னுடைய நினைவோடையைத் துவங்குகிறார்.

பிரமிளுக்கு எண்கணிதத்தின் மீது நம்பிக்கையிருந்ததால் அவருடைய பெயர் அவ்வப்பொழுது மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிறது. தருமூ அரூப் சிவராமூ என்பது தான் அவருடைய பெயர், அவர் இதை பெரும்பான்மையான சமயங்களில் வெவ்வேறான ஸ்பெல்லிங்கில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். ஏன் சட்டென்று எண் கணிதத்தில் நுழைந்தேன் என்றால் இதில் ஒரு பெரிய மேட்டர் உண்டு; வருகிறேன்.

சின்ன ப்ளாஷ்பேக் உடன், அதாவது பிரமிள் சுந்தர ராமசாமியுடன் தங்கியிருந்த பொழுதுகளில் அவருடைய பணத்தை சு.ராவிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். அதைப் பற்றி சு.ராவின் வார்த்தைகளில்...

"...நான் கடைக் கணக்குப் புத்தகத்தில் அவருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி அதில் அந்தத் தொகையைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு நாள் அந்தப் பேரேட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். கணக்குகளைச் சரிபார்க்க அல்ல. அன்று காலையில் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட்டிருக்கிறார். பழைய பெயரை மாற்றிவிட்டுப் புதிய பெயரில் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் 'ஒரு தடவை என்றால் செய்யலாம். நீங்கள் வாரத்திற்கு ஒரு பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களுக்கு எழுதும் போது, பிறக் பத்திரிகைகளுக்கு எழுதும்போது வேண்டுமானால் அந்தப் புதிய பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'அப்படியில்லை. எனக்கு ஒரு பெயரை மாற்றுவதானால் என் சம்மந்தப்பட்ட எல்லாப் பதிவேடுகளிலும் அதை மாற்றிவிட வேண்டும்' என்று சொன்னார்..."

அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லும் முன்னால், பெயரிலியின் இந்தப் பதிவு நினைவில் வந்தது. இதுவும் சொல்லப்போனால் பிரமிளின் இந்த பெயர் மாற்றும் வழக்கத்தை நையாண்டி செய்து வந்ததுதான்.

ஏன் நான் பிரமிளின் இந்த எண்கணித ஆர்வத்தை முதலில் எடுத்தேன் என்றால், பிற்பாடு சுராவுக்கும் பிரமிளுக்கும் பிரச்சனை வந்த பிறகு பிரமிள் சுராவின் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டில் ஒன்று சுரா தனக்கு பணம் பாக்கி தரவேண்டும் என்பது, இதில் எண்கணிதம் எங்கே வந்தது என்றால்; எண்கணித முறைப்படி சுராவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெயர் மாற்றம் செய்து தந்ததற்காகத்தான் அந்தப் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரமிள் சொன்னதுதான் அது. சு.ராவின் வார்த்தைகளில்,

"...ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம் தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும் இருந்தாலும் அப்படி எழுதினார்..."

இதே போன்ற கடிதத்தை பிரமிள் சுராவையும் பிரமிளையும் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறார். சுரா பணம் தரவேண்டிய பாக்கி இருக்கிறது என்று சொல்லி...

"...அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தெரிந்து ஒருவர்கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பல எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார். ஒரு நாள் கூட நானோ நம்பியோ அவருக்குச் செய்த நல்ல காரியங்களில் ஒன்றைக்கூட யாரிடமும் சொன்னது கிடையாது. நாங்கள் அவரைக் கவனித்துக்கொண்ட நாட்களில் சின்னச்சின்ன குறைகள், தவறுகள் நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. முழுத்தவறும் அவர் பக்கம்தான் இருக்கிறது; எங்கள் பக்கம் தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு மனித உறவில் அடிப்படையாகச் சில விஷயங்கள் இருக்குமே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்துவந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது..."

சுராவுக்கும் பிரமிளுக்குமான பிரச்சனை நடந்துகொண்டிருந்த பொழுது சுரா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. இன்றும் கூட மக்கள் சுராவின் மோனநிலை என்று நக்கல் செய்வதைப் பார்க்கமுடியும். அதற்கான விளக்கம் கூட இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

"...அவர் பலரைப் பற்றித் திட்டி நிறைய எழுதியிருக்கிறார். செல்லப்பா பற்றி, சாமிநாதன் பற்றி, ஞானக்கூத்தன் பற்றி, என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நானொரு முடிவு செய்திருந்தேன். அவர் என்ன சொன்னாலும் நாம் அதற்குப் பதில் எழுதக்கூடாது என்று. அதற்கான சக்தி எனக்குக் கிடையாது. நான் ஏதாவது பதில் எழுதினால் அதை வைத்துக்கொண்டு இன்னும் பல அஸ்திரங்களை அவர் பிரயோகிக்க ஆரம்பிப்பார். எனக்கு மட்டும் புரியும்படியாகச் சில விஷயங்களைச் செய்வார். அதன் பின் எல்லோருக்கும் புரியும்படியாக ஒன்றைச் செய்வார். 'அவர் ரொம்பவும் அழுகியவர், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள்' என்று சொல்ல ஆரம்பிப்பார். எனவே நான் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். அவர் இந்தியாவுக்கு வந்து தங்கி அவர் கடைசியில் மறையும் வரை அவரைப்பற்றி ஒரே ஒரு நெகட்டிவ்வான வாக்கியம்தான் நான் எழுதியிருக்கிறேன். யாத்ராவில் வெங்கட் சாமிநாதனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு இடத்தில் குழந்தைகளைக் கள்ளம் கபடமற்றவர்களாகச் சித்தரிப்பது பற்றி எழுதியிருந்தேன். அதில் குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்று சொல்வதானால் யாத்ரா இதழை எடிட் செய்யும் பொறுப்பை என் குழந்தை தங்குவிடம் தந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு சிவராமூவைப் பற்றி அதில் இணைத்துப் பேசியிருந்தேன். அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இருநூறு பேரிடமிடமாவது சிவராமூ சொல்லிக் காட்டியிருப்பார். ஏதோ நான் கத்தியால் குத்தியதுபோல் அதை ஆக்கிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் பலருக்கும் நான் சொன்னது தவறு என்றுதான் பட்டிருக்கும். நான் அவர் சொன்ன விஷயங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. ஜெயமோகன் என்னுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்..."

நகுலனைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார் சு.ரா.

"...நகுலனுடைய படைப்புக்கள் சிவராமூவின் உலகத்தோடு நெருக்கமுடையவையாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பொதுவான பார்வை, அக்கறைகள் இருப்பது போலாத்தான் எனக்குப் படுகிறது. என்ன காரணத்தினாலோ சிவராமூவுக்கு நகுலனின் கவிதைகள் பேரிலும் சரி, கதைகளின் பேரிலும் சரி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவேயில்லை. நகுலனுக்கு சிவராமூ பேரில் ஆர்வம் இருந்தது..."

நகுலன், பிரமிளைச் சந்திக்க விருப்பமுடன் இருந்ததாக சு.ரா. சொல்கிறார் அப்படி ஒரு சமயம் பிரமிள் சு.ராவின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நகுலன் பிரமிளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். சுராவும் பிரமிளின் பெயரில் உரிமையெடுத்து அவரை பார்க்க வரச்சொல்லி நகுலனுக்கு கடிதம் அனுப்ப பிரமிளுக்கு கோபம் வந்திருக்கிறது.

"...'நீங்கள் எப்படி என்னைக் கேட்காமல் எழுதிப் போடலாம்' என்று கேட்டார் அவர் வந்து உங்களைப்ப் பார்த்துவிட்டுப் போகப்போகிறார் அவ்வளவுதானே என்று சொன்னேன். 'அவரைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் தானே தவிர நீங்கள் அல்ல. நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், சிவராமூவுக்கு உங்களைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று எழுதிப்போடுங்கள்' என்றார் நான் சொன்னேன், 'வேண்டாம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் உங்களைக் கேட்காமல் எழுதிப் போட்டது தவறுதான். அந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதிப்போட்டுவிட்டேன். அவர் வரட்டும். நீங்கள் ஒரு அரைமணிநேரம்ம் இருந்து பேசிவிட்டுப் போங்கள். வரவேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுத என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னேன்'...

நகுலன் ரொம்பவும் பிரயாசைப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரமிள் அந்த முறை நகுலனைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டாராம். இதனால் நகுலனுக்கு சுராவின் பெயரில் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்தான் ஏதோ விளையாடுகிறார் என்று. இப்படியே விரிகிறது இந்தப் புத்தகம் வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான உறவைப் பற்றிக் கூட இந்தப் புத்தகம் பேசுகிறது.

பிரமிளைப் பற்றிய வேறு சில நல்ல விஷயங்களையும் பேசுகிறது.

"...ஒருதடவை அவர் டெல்லியில் இருந்தபோது க.நா.சுவைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார். அந்தப் பேட்டியை அருமையக எடுத்திருந்தார். அந்தப் பிரதியை என்னிடம் தந்து வைத்திருந்தார். நான் எங்கேயோ கை தவறி வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அவர் அந்தப் பேட்டியைத் தாருங்கள் என்று கேட்டபோது, இரண்டு நாட்களில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தததோ அப்போதெல்லாம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொல்லலாம்; அல்லது கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொல்லலாம்; அது வெளிவரவிடாமல் தடுக்க முயல்வதாகச் சொல்லலாம் என்று எனக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவரிடம் தயங்கியபடி, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். 'கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நானாக இருந்தால் 'எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருந்தேன், இப்படிக் கவனக் குறைவாக இருந்துவிட்டீர்களே' என்று கேட்டிருக்கத்தான் செய்திருப்பேன். ஆனால் அவர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டார். அந்தக் கட்டுரை அதன் பின் கிடைக்கவேயில்லை. நிச்சயமாக அது ஒரு இழப்புதான். அவரும் க.நா.சுவை அதன் பின் பேட்டி கண்டு எதுவும் வெளிவிட்டிருக்கவும் இல்லை. நான் என் கைவசம் இருக்கும் பொருட்களைப் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒரு தடவை அலசிப் பார்த்து வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். அப்படி எத்தனையோ தடவை தேடிப் பார்த்தபோதும் அந்தக் கட்டுரை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அவர் என்னிடம் கொடுத்த ஆங்கில நாவலை அவரிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலை நான் படுத்துப்படித்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான் அந்த நாவலே ஆரம்பமானது. அப்போது அந்த விதமான நாவல்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கவில்லை. ஹென்றி மில்லர் போன்றோரின் படைப்புகளை எல்லாம் அதன் பின் தான் படித்தேன். மேற்கத்திய படைப்பாளிகள் பலர் ஆபாசத்திலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து உயர்ந்த ஒரு தளத்திற்கு நகர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் பெரும்பாலும் அப்படியான ஒன்று நடக்கவில்லை. வெறும் ஆபாசத்தைத் தூண்டுவது என்பதாகவே அது முடிந்திருக்கும். சிவராமூவின்ன் அந்த நாவல் அப்படியான வேறொரு தளத்திற்கு நகர்ந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் அந்த நாவலை முழுவதுமாகப் படிக்க முடிந்திருக்கவில்லை..."

இப்படி அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் நிறையவற்றை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்தான்.

"அதிகம் அவரைப் பற்றி எதிர்மறையான அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொன்னதுபோல் தெரிகிறது. அவருடனான உறவில் இருந்த சாதகமான அம்சங்கள் ஏதாவது சொல்லமுடியாமா?" என்ற கேள்விக்கு

"நான் திட்டமிட்டு அவர் மீதான எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை. அவருடனான என் உறவு அப்படியான சம்பவங்களால்தான் நிறைந்திருக்கிறது. இது ஏதோ என் அனுபவம் மட்டுமல்ல. பெரும்பாலோனோருக்கு அப்படியான அனுபவங்கள் தான் இருந்திருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். வெங்கட் சாமிநாதன் பேரிலும் சிவராமூவுக்கு ஏகதேசம் இதே அளவு வெறுப்பு இருந்தது. நாங்கள் இருவர் மட்டும்தான் அவரை நம்பி ஏமாந்திருந்தோம். மற்றவர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருந்திருக்கவில்லை. மற்றவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், அதில் முறிவு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவு தான். நாங்கள் இருவர்தான் சிவராமூவை நாம் பாதுகாத்து வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான செயல்களைச் செய்தும் வந்தோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எனவே ஏமாற்றமும் வருத்தமும் எங்களுக்கு அதிகமாக இருந்தது..." என்று பதில் சொல்கிறார் சு.ரா.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய overall opinion ஆக இதையே சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் என்னுடைய விருப்பு வெறுப்பு காரணமாக அமைந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் புத்தகத்தைப் பற்றியோ சு.ரா. & பிரமிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டுகிறேன். வெட்டி ஒட்டும் பகுதிகள் பல சமயங்கள் தவறான பொருளைக் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால் இந்த டிஸ்கி.

பிரமிளின் கவிதை ஆளுமை பற்றி பெரிய அளவில் இந்த புத்தகம் விவரிக்கவில்லை, ஆனால் அங்கங்கே பிரமிளின் திறமையைப் பற்றி சுரா சொல்லி வந்திருக்கிறார் தான். பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாகவே பிரமிளின் கவிதைகள் இருந்திருக்கின்றன என்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரமிளின் திறமையில் கவரப்பட்டவராகவே சு.ரா இருந்திருக்கிறார். ஆனால் அவருடனான நேரடிப்பழக்கம் அந்தத் திறமையை கருத்தில் கொள்ள முடியாத அளவிற்குச் செய்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் கொஞ்சம் பதிவுகள் பிரமிளைப் பற்றி...

ரோசா வசந்தின்
மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.
அறைகூவல்

மு. சுந்தரமூர்த்தியின்
பிரமிள் கவிதைகள் - 1
பிரமிள் கவிதைகள் - 2
பிரமிள் கவிதைகள் - 3
பிரமிள் மேலும் சில குறிப்புகள்

PS: வலையுலகிலும் பிரமிள் - சுரா சார்ந்து காலச்சுவடு - எதிர் அரசியல் உண்டு. எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

Popular Posts