In சிறுகதை திண்ணை

ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்

"இன்னிக்கென்ன நாயா? பூனையா?"

இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது. எங்களுக்கிடையேயான அலைவரிசையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் இந்த பத்து வருடங்களில் அவள் என்னை புரிந்துகொண்டது ரொம்ப அதிகம்.

"சொல்லுங்க கேக்குறேன்ல, இன்னிக்கு எந்த நாய், நரி ரோட்டில் அடிபட்டுக்கிடந்துச்சு, அய்யா எந்த ஆஸ்பத்திரிக்கு போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றீங்க. ஆபிஸ்லேர்ந்து கிளம்புறப்ப போன் பண்ணிட்டுத்தானே கிளம்புனீங்க?"

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பத்ரகாளி போன்ற ஒரு உருவகத்தை கொண்டுவர அவள் நினைத்தாலும் அந்த சாந்தமான அழகான முகத்திற்கு ஒத்துவரவில்லை. வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவளை நெருங்கிவந்து லேசாய் கன்னத்தை கிள்ளினேன்,

"அம்முன்னா அம்முதான், எப்பிடிடா கரெக்டா கண்டுபுடுச்ச, எவனோ ஒரு லூசுப்பய வண்டியே நாய் மேல ஏத்திட்டான், அது கதறித்துடிக்குது அவன்பாட்டுக்கு கண்டுக்காம போறான். ரொம்ப குட்டிடா இரண்டுமாசம் கூட ஆயிருக்காது, ஒரே ரத்தம் வேற. எனக்கு மனசு கேக்கலை. நம்ம அன்புக்கு இப்படி ஆகியிருந்தா பார்த்துட்டு அப்பிடியே உட்டுருவோமா சொல்லு?"

நான் மெதுவாய் அவளைக் கொஞ்சத்தொடங்க, கையைத் தட்டியவளாய்,

"இன்னிக்கு நம்ம மணீஷோட பிறந்தநாள் ஞாபகமிருக்கா. இவ்ளோநேரம் இங்க வாசல்லயே உட்கார்ந்துக்கிட்டிருந்தா, 'நைனா எப்பவருவாங்க'ன்னு கேட்டுக்கிட்டே. வண்டிச்சத்தம் கேட்டதும் கோபத்தில உள்ள போய் உக்காந்திருக்கா. நீங்களே போய் சமாதானப்படுத்துங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. நம்மளால முடியாது,"

கோபம் அம்முவுக்குத்தான் அதிகமிருக்கும் ஆனால் வெளியில் காண்பிக்கமாட்டாள். மணீஷோட பிறந்தநாளுக்கு வெளியில் அழைத்துச்செல்வதாய் ஏற்பாடு. இப்பொழுது எல்லாம் அரோகரா ஆகியிருந்தது. மணீஷ் என்ன சின்ன பொண்ணு, எட்டு வயசாகுது. நாளைக்கு கொஞ்சநேரம் அதிகமா போகோ சேனல் பாத்துக்கோன்னு சொல்லிட்டா சமாதானமாயிருவா. ஆனா இங்க அப்படி முடியுமா? காலைலேர்ந்து ஆரம்பிக்கணும் தாஜா பண்ண, அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சி காபிபோட்டுத்தந்து, அவள் வேண்டாம் வேண்டாம்னு சொல்லும்பொழுதும் சமையல்ல அவளுக்கு உதவி செஞ்சு, சாயங்காலநேரமாய் அவளுக்குத்தெரியாமல் வெளியில் சென்று மணீஷிற்கு நொறுக்குத்தீனியும் இவளுக்கு மல்லிகைப்பூ வாங்கிவந்து இப்படி நிறைய செய்யவேண்டியிருக்கும் சமாதானப்படுத்த. இதெல்லாம் பண்ணுறமோ இல்லையோ அன்னிக்கு மட்டும் அவள் சமையல்ல நொட்டாங்கு சொல்லாமயிருக்கணும்.



இதையெல்லாம் நினைத்துக்கொண்டவனாய் மணீஷாவை சமாதானம் செய்ய வீட்டிற்கு உள்ளே நுழைந்தேன். அவ என்னைக் கவனித்தாலோ இல்லையோ அன்பு வந்துட்டான் முன்னாடி வாலை ஆட்டிக்கிட்டே. பொண்டாட்டி புள்ளயக்கூட சமாதானப்படுத்திரலாம், அய்யோ இவனை சமாதானப்படுத்த முடியாது. சிலசமயம் கோபத்தில் அம்மு நேரடியாகவே சொல்லிவிடுவாள்.

"உங்களுக்கு என்னையும் என் புள்ளையும் விட இவன்தான் முக்கியம்" என்று.

நமக்கு விளங்குதோயில்லையோ, அன்புக்கு கோபம் வந்திரும். அவளைப்பார்த்து குரைத்து தன் எதிர்ப்பைக்காட்ட, அம்முவின் வேதாளம் சீக்கிரமே முருங்கைமறம் ஏறிக்கும். அவ்வளவுதான் அன்புவின் வாய்க்கு போடவேண்டிய பெல்டை போட்டுட்டுத்தான் மறுவேலைன்னு அம்மு ஒத்தைக்காலில் நிற்க, சாதாரணமா அவனோட கழுத்து சங்கிலியை போட நினைத்தாலே கோபமாகிவிடும் அன்பு; ஒரே ராகமாய் அவளைப்பார்த்து குரைக்கத்தொடங்க, அப்புறமென்ன ரெண்டு வேளைக்கு எனக்கும் அன்புக்கும் வெளியில் தான் சாப்பாடு.

சமையல்கட்டிற்கே போகமாட்டாள், ஆனால் அவளும் அவள் பொண்ணும் மட்டும் எப்படியோ சாப்பிட்டிருப்பார்கள். இத்தனைக்கும் அன்புமேல அம்முவுக்கு பாசமில்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு உண்ணி எடுத்து விடுவதில் தொடங்கி, அவனைக்குளிப்பாட்டி, வாக்கிக் அழைத்துச்சென்று எப்பவாவது வீட்டில் அசிங்கம் பண்ணிட்டான்னா கழுவிவிட்டு அத்தனையும் அவள்தான் செய்வாள். என்ன நான் கொஞ்சம் செல்லம் கொடுப்பேன் அவள் மொத்தமாய்க் கண்டிப்புதான்.

ஒருநாள் இப்படித்தான் ஆபிஸில் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது இவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டு வார்த்தை பேசமாட்டேங்கிறா, அழுகுறா. எனக்கு தூக்கிவாறிப்போட அவசரஅவசரமாய் வீட்டிற்கு கிளம்பிவந்துபார்த்தால். அன்பு தேமேன்னு ?£லில் படுத்திருக்க பக்கத்தில் அவனைத்தடவிக் கொடுத்தபடியே இவள் அழுதுகொண்டிருந்தாள்.

என்னாடின்னு கேட்டா, அன்புவிற்கு உண்ணி வராமயிருக்கிறதுக்கான ஷேம்புவை போட்டு குளிப்பாட்டிவிட்டிருந்தாளாம். சமையல்கட்டில் ஏதோ அவசரவேலையாய் நன்றாய் கழுவிவிடாமல் விட்டிருக்கிறாள். அன்பு உடம்பை நக்கிவிட்டிருக்கிறான், பிறகென்ன தலைவர் வாந்தியெடுத்து, பெரிய பெரிய பிலிம்மெல்லாம் காட்டியிருக்கிறான்.

இவள் ஒரே அழுகையாய் அழத்தொடங்க, நான் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். இவள் அதற்கு பிறகும் நிறுத்தாமல் அழுதுகொண்டேயிருக்க, ஸ்கூல்லேர்ந்து வந்த மணீஷா அம்மா அழுவதைப்பார்த்து அவளும் அழத்தொடங்க, நம்ம ஆளு, ?¦ரோ அன்பு டாக்டர்கிட்ட அழகா ஊசியை போட்டுக்கிட்டு; நல்லா ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையும் ஒரெயடியாய் விழுங்கிவிட்டு; ஜம்முன்னு வண்டியில் காத்துவாங்கிக்கிட்டே வந்து இறங்கினான்.

உள்ள நுழைஞ்சானோ இல்லை, நேராய் மீன் பொம்மையை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரிடமாப் போய் விளையாடிக் கொண்டிருந்தான். அம்முவுக்கு அவன் திரும்புவும் ஆடிஓடி விளையாடத்தொடங்கவும் தான் உயிரே வந்தது போல் இருந்தாள். இரண்டு பேர்க்கிட்டையும் முடிச்சிக்கிட்டு என்கிட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு வர எனக்கு கோபமுன்னா கோபம், பின்ன என் பொண்டாட்டி புள்ளையை அழவச்சிட்டான்ல!!!, நான் விளையாட வரமாட்டேன்னு சொல்ல. உடனே அம்மு,

"அந்தாளு கிடக்குறாரு! நீவாடா குட்டி நாம விளையாடலாம்' னு சொல்லி கொஞ்ச நேரம் சார்கிட்ட விளையாடிக்கிட்டிருந்தாள். பின்னர் டாக்டர் போட்ட ஊசி வேலைசெய்யத்தொடங்க அன்பு அப்படியே தூங்கிட்டான். அப்புறம் மணீஷாவும் தூங்கினதுக்குப்பிறகும் அம்மு அன்பின் பக்கத்தில் உட்கார்ந்து அவனைப் பாவமாய்ப் பார்த்தபடியே தடவிவிட்டுக்கொண்டிருக்க, நான் மெதுவாய்,

"நானும் பாவந்தானே அம்மு, இன்னிக்கு பூரா இவனால ஒரே அலைச்சல்." ஆரம்பிக்க, திரும்பி முறைத்தவள்.

"பேசாமப்போய்ப் படுத்துக்கோங்க, அன்பை அப்படி பார்த்ததிலிருந்து எனக்கு மனசே சரியில்லை, பாவம் புள்ள காலைலேர்ந்து சாப்டதையெல்லாம் வாய்லெடுத்துட்டு கஷ்டமா படுத்துறுக்கான். உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனசுவருதோ தெரியலை. மரியாதையாய் போயிருங்க, இல்லைன்னா ஒருமாசத்துக்கு அவ்வளவுதான்..." சொன்னவள் என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் அவன் கால்களை நோண்டிக்கொண்டிருந்தாள். அன்பு விழித்திருக்கும் பொழுது காலில் இருக்கும் உண்ணியை எடுக்கவிடமாட்டான்.

எனக்கோ அன்னிக்கு இரவைக் கெடுத்துட்டானே பாவின்னு கோபத்தோட அவனைப்பார்த்தேன். அவனோ, அவள் தடவிக்கொடுக்கும் சொகுசில் ஒரு கண்ணை மட்டும் உயர்த்தி என்னை ஏளனமாகய்ப்பார்த்தான். இப்படியாக அவளுக்கு அன்பு என்று நாங்கள் செல்லமாய்க் கூப்பிடும் அன்பரசன் என்ற லேப்ரடார் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்குட்டியை ரொம்ப அதிகமாகவே பிடிக்கும்.

அன்பை அப்படியே இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு மணீஷாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். பின்னர் அவளை பக்கத்தில் இழுத்து உட்காரவைத்துவிட்டு,

"என்னம்மா செல்லம் கோபமா நைனாமேல, பாருடா நம்ம அன்பு மாதிரியே ஒரு குட்டி நாய், ரோட்டில ஒருத்தன் அடிச்சிபோட்டுட்டு போய்ட்டான். பாவமில்லையாடா அது. நம்மள மாதிரி ஒரு உயிர்தானே அதுவும், அதான் நைனா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுபோய் வர்றேன்."

நான் சொல்லச்சொல்ல மணீஷாவின் கண்களில் நீர்முட்டத் தொடங்கியிருந்தது.

"இல்ல நைனா எனக்குத்தெரியும் இப்புடித்தான ஏதாவதிருக்கும்னு. ஆனா அம்மாத்தான்..." சொல்லிவிட்டு திரும்பியவளை அம்மு முறைக்க மணீஷ் நிறுத்திக்கொண்டாள்.

பின்னர் நானும், அன்பும் மணீஷாவும் சேர்ந்துகொண்டு கொஞ்ச நேரம் அம்முவை வம்பிழுத்துக்கொண்டிருக்க, அவள் நேரமாகியிருந்ததால் வெளியில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டு சமைக்கத்தொடங்கினாள்.

அன்றிரவு,

"என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."

"ஏய் இங்கப்பாரு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்தச் சமயத்தில் உன்னோட எண்ணங்களை என்மேல திணிக்காதேன்னு." நான் சப்தமில்லாமல் அதே சமயம் கோபமாய்க் கேட்டேன்.

"நான் என்ன அவுசாரியா உங்க பொண்டாட்டிதானே, கண்டதையும் காண்பிச்சு கேக்கணும்ங்ற அவசியம் எனக்கு கிடையாது தெரிஞ்சிக்கோங்க." அவளும் கோபமாய்ச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள. நான்,

"சரி சொல்லித்தொலை என்ன விஷயம்." கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. பின்னர் திரும்பிப்பார்த்தவள்,

"நம்ம மணீஷைப்பத்தித்தான். எனக்கு அவ பண்றது சுத்தமாப் பிடிக்கலை."

இதை நான் எதிர்பார்த்தேன்தான். அவள் என்னைப்பற்றியோ என் குடும்பத்தைப்பற்றியோ சொல்ல அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உண்டாக்க மாட்டாள். ஆனால் மணீஷாவைப்பற்றி குறைசொல்ல மட்டுமே இப்படிச் செய்வாள். அப்பொழுது இவளுக்கு டெலிவரி டைம், அதுவரைக்கும் நார்மல் டெலிவரின்னு சொல்லிக்கிட்டிருந்த டாக்டர்ஸ் அந்த டைம் பார்த்து குழந்தையோட தலை கொஞ்சம் பெரிசாயிருக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. கடைசியில் அம்மா பொண்ணு இரண்டுபேரும் டெலிவரி முடிஞ்சு நல்லபடியாயிருக்காங்கன்னு சொன்னவுடன்தான் எனக்கு உயிரேவந்தது.

மணீஷா என்னைப்போலவே இடதுகாலில் ஆறு விரல்களுடன் பிறந்திருந்தாள். குட்டிக்குட்டியான கைகள், பஞ்சு போன்ற உடம்பு, பிறந்த கொஞ்சம் நாட்களுக்கு நான் அவளை தூக்கவேயில்லை. எனக்குப் பயம் கீழேப் போட்டுவிடுவேனோ என்று. அதற்குப்பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. அதிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் அவள் என்னிடம் தான் இருப்பாள். இன்னும் சொல்லப்போனால் அப்படியே அவள் என்னைப்போலவே வளர்ந்துவந்தாள். அதனால் மணீஷாவைப்பற்றி குற்றம் சொன்னாள் எனக்கு பிடிக்காது என்றுதான் அம்மு இத்தனையும் செய்வது.

மணீஷா டெல்லியில் பெரிய வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த வயதிலேயே மணீஷா மூன்று மொழிகளில் அழகாய்ப் பேசுவாள். தமிழும் இந்தியும் நாங்கள் டெல்லியில் இருப்பதால் எங்கள் பேச்சுவழக்கில் வந்தது, பள்ளியில் படிப்பதால் ஆங்கிலமும். என் டெல்லிவாழ் நண்பர்கள் பெரும்பாலோனோர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆதலால் அவளுக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் ப்ரெஞ்சும் சொல்லிக்கொடுத்து வந்தார்கள். மற்ற குழந்தைகளைப் போலில்லாமல், ஓவியம் வரைவது, என்னுடன் செஸ் விளையாடுவது என அவள் படிப்பைத்தவிர மற்றவிஷயங்களில் நன்றாகத்தான் ஈடுபாட்டோடு இருந்தாள். ஆனால் அம்மு எதைச்சொல்லவருகிறாள் என்று எனக்கு புரியவில்லை.

"அம்மு எதைச்சொல்ற, இன்னிக்கு மணீஷாவை நீதான் அப்படி கோபமாயிருக்கும் படி இருக்கச் சொன்னங்கிறத என்கிட்ட சொன்னாலே அதைச் சொல்றியா? அவ சின்ன குழந்தைம்மா இதிலென்ன தப்பிருக்கு சொல்லு?"

"இங்கப்பாருங்க உங்களுக்கு புரியலை, அவளுக்கு இந்த வயசில இருக்கக்கூடாத தௌ¤வு இருக்கு. யார்க்கிட்ட எப்படி பேசினா விஷயம் ஆகும்னு தெரிஞ்சிருக்கா. இன்னிக்கு நடந்தத மட்டும் வைச்சு சொல்லலை, ஆனாலும் பாருங்க இன்னிக்கு நான் உங்கமேல கோபமாயிருந்ததால நீங்க வர்றவரைக்கும் அவளும் உங்க மேல கோபமாயிருக்குற மாதிரி இருந்தா, பின்னாடி நீங்க வந்ததும் உங்களுக்கு ஏத்தமாதிரி பேசுறா.

இந்த டெல்லி சூழ்நிலை எனக்குச் சரியாப்படலைங்க, இந்த வயசுல நான் செய்யத்தயங்குற பல விஷயங்களை ரொம்ப சாதாரணமா செய்றா. எல்லாம் நீங்க கொடுக்குற இடம். நாலு அடிவைச்சா சொல்பேச்சு கேட்டுறுவா. நீங்கத்தான் சிங்கத்துக்கு பிறந்ததால மட்டும் சிங்கக்குட்டி சிங்கமாகிவிடுறதில்லை, சிங்கம் தன் குட்டியை நக்கி நக்கித்தான் சிங்கமாக்குதுன்னு விளங்காத தத்துவம் எல்லாம் சொல்லி அவளை அடிக்க விடமாட்டேங்குறீங்க.

இன்னிக்கு பாருங்க அவங்க ஸ்கூல்ல இவ பிறந்தநாளுக்கு ஒரு கெட்டுகெதர் வைச்சிருந்தாங்க. அங்க வந்த இவ ப்ரண்ட்ஸ்ல யார் இவளுக்கு கிப்ட் கொடுத்தாங்களோ அவங்க கிட்ட மட்டும்தான் போய்ப்பேசுறா. இதுல ஒரு பையன் கிட்ட நேர்லையே கேட்டாகுது. நீ கிப்ட் வாங்கிட்டு வரலையான்னு. எனக்கென்னமோ இது சரியாப்படலை. அப்பிடியே உங்க சாமர்த்தியம், இதை நான் பார்த்ததும் ஒன்னுமே நடக்காதது போல அந்தப் பையனுக்கும் கொண்டு போயிருந்த சாக்லேட்டை கொடுக்குறா.

எனக்கென்னமோ நாம அவளை தப்பா கைட் பண்றமோன்னு தோணுது. எதுக்கெடுத்தாலும் ஒரே பிடிவாதம். தான் சொல்றததான் எல்லோரும் கேட்கணும்னு. அன்னிக்குத்தான் நீங்க பார்த்தீங்களே உங்க பிரண்ட்ஸ்ங்களோட நாம ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சாப்பிடப்போயிருந்தப்ப நடந்தத. இவளாலத்தானே நாமெல்லாம் அன்னிக்கு பனியில உக்கார்ந்து சாப்பிட்டோம். அன்னிக்கே உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால் விட்டுட்டேன். இன்னிக்கு இவ ஸ்கூல்ல பண்ணது ரொம்ப ஜாஸ்தி.

டெல்லி மாதிரி எஜூகேஷன் கிடைக்காதுதான் ஒத்துக்குறேன். ஆனா இந்த வயசிலேயே இவளை நாம மாத்திட்டாத்தான் உண்டு. இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிரும் சொல்லிட்டேன்."

மூச்சுவிடாமல் பேசிவிட்டு நிறுத்தியவள், என்னையே பார்த்தாள். எனக்கும் இது ஒருவாறு தெரிந்துதான் இருந்தது. அப்படியே மணீஷா நார்த் இண்டியன் குழந்தைகளைப்போல் வளர்ந்திருந்தாள். என்னையே சிலநேரம் கோபப்படுத்திவிடும் அளவிற்கு மணீஷாவின் பிடிவாதம் வளர்ந்திருந்தது. இதைப்பற்றி நானும் சில மாதங்களாகவே யோசித்து வந்திருந்தேன். அதை இன்று அம்மு சொல்லவும்.

"சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?" நான் கேட்க. அவள்,

"நாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு தமிழ்நாடு போய்டலாம், அவளோட பேஸ் நல்லபடியா வந்ததும் வேண்டுமானால் திரும்பும் டெல்லியோ இல்லை நார்த் இண்டியாவில் வேற இடமோ வந்திடலாம். நம்ம ஊரு வழக்கப்படி வளர்ந்தா கொஞ்ச நாளில் சரியாய்டுவா. அவளுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை இதுதான். ஆனா கொஞ்சம் சீரியஸான பிரச்சனை. மற்றபடிக்கு நம்ம பொண்ணுக்கென்ன என்னைமாதிரி முட்டாளா? உங்களமாதிரியே அறிவுக்கொழுந்து. அதெல்லாம் சரியா பிக்கப் பண்ணிக்குவா..." அம்மு எனக்கு ஐஸ்போட ஆரம்பிக்க அவள் பேச்சை இடைமறித்தவனாய்.

"இங்கப்பாரு இதைப்பத்தி நானும் கொஞ்ச நாளாவோ யோசிச்சிட்டுத்தான் வர்றேன். ஆனா நாம மெட்ராஸ் போனாலும் நான் அடையார் பக்கத்தில் வீடு பாக்கமாட்டேன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ. இன்னும் சொல்லப்போனால் அடையாறுக்கு ஆப்போஸிட்டாத்தான் எங்கையாவது வீடு எடுப்பேன். நீ இதை சாக்கா வைச்சு உங்கம்மா, அப்பாக்கிட்ட கொஞ்சலாம்னு நினைச்சேன்னா அதை இப்பவே மறந்திரு. நாம மெட்ராஸ் போனா அதற்கு ஒரே காரணம் மணீஷாவின் பழக்கவழக்கத்தை சரி பண்றதுதான்."

நான் சொல்ல வேகமாய்க் என் கையைக் கிள்ளியவள்,

"எக்கேடோ கெட்டு ஒழிங்க." சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவள் சுலபமாய்ச் சொல்லிவிட்டாள் மெட்ராஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்குங்கன்னு. நான் அதன் சாதக பாதகங்களை கணக்கிடத்தொடங்கினேன். பிறகு சிறிது நேரத்திலேயே இதில் இருக்கும் பாதகங்கள் அனைத்துமே மணீஷாவின் நல்லதுக்குத்தான் என நினைத்தவனாய் தூங்கத்தொடங்கினேன்.

----

Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கல்யாணம் காதல் சிறுகதை

நிற்க அதற்குத் தக

வரவர சன்டிவியைப்பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது. அப்படியொன்றும் தொலைக்காட்சி பார்ப்பவனல்ல என்றபொழுதுதிலும். சில காலமாய் அது என் வாழ்க்கையில் உருவாக்கிய மாற்றங்களால் வந்த எரிச்சல் அது. சில சமயம் நம்முடைய தேர்வுகள் தவறாகிப்போகின்றன, என்னதான் நம்மை நாமே பெருமையாய் எண்ணிக்கொண்டாலும் நம்முடைய செயல்கள் அதை வழிமொழிவதில்லை. இப்படித்தான் போய்விட்டது கல்யாணம் செய்து கொள்ள நான் தீர்மானித்த பெண்ணைப்பற்றிய தெரிவும்.

அமேரிக்காவிலிருந்து சென்ற முறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பொழுது இந்த விடுமுறையில் திருமணம் முடித்துவிட்டுத்தான் திரும்பிச்செல்வது என ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த எனக்கு முதலில் கிடைத்த பதிலே எரிச்சலடையச் செய்தது. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த அக்காவிடம் ரொம்ப நேரம் ஒற்றைக்காலில் நிற்கமுடியாமல் விஷயத்தைச் சொல்ல.

“இப்ப உனக்கென்ன வயசாகுது. கொஞ்சம் பொறுத்து பண்ணிக்கிட்டா என்ன குறைஞ்சாபோயிரும். நான் இந்த சின்னவயசுல இந்தாளைக் கட்டிக்கிட்டு என்னத்தைக் கண்டேன். கொஞ்சம் விட்டிருந்தா ஐஏஎஸ் ஐபிஎஸ் படிச்சிட்டிருந்திருப்பேன். நீயும் உங்கம்மாவும் சேர்ந்து எப்புடியாவது என்னை வீட்டிலிருந்து தொரத்திட்டா போதும்னு பண்ணி வச்சிட்டீங்க. இப்பப்பாரு அதுக்குள்ளயே ஆறுமாசம் இந்த மனுஷனுக்கிட்ட சொன்னா கேட்டாத்தானே.” காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாவாவுக்கும் கன்னத்தில் குத்து விழுந்தது.

அவளின் பதிலில் திருப்தியாகாமல் நான் அந்தப்பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டேன். அதற்கு பிறகு வீட்டிற்கு வரும்வரையில் அவளிடம் பேசவேயில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் நான் என்முடிவில் தீவிரமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட அக்காதான் முதல் வரனைப்பற்றி சொன்னாள்.

“இங்கப்பாருடா தம்பி, அவருக்கு நெருங்கின சொந்தத்தில ஒரு பொண்ணிருக்கு பேரு, அமலாவோ விமலாவோ என்னவோ சொன்னாங்க. இவரோட அத்தைப்பொண்ணு நிச்சயத்துக்கு வந்திருந்தா. நல்லா கலரா உனக்கேத்தமாதிரி இருப்பா, சரின்னு சொன்னா நான் உன் பாவாகிட்ட சொல்லி பேசச்சொல்றேன்.”

நான் அவளிடம் நேரடியாய் சரியென்று சொல்லாமல், புகைப்படம் எதுவுமிருந்தால் அனுப்பச்சொல்லு பாத்துட்டு சொல்றேன் சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டவளாய். நான் அவளுக்காய் வாங்கிவந்திருந்த சென்ட் பாட்டில்களையும் அமேரிக்க சாக்லேட்டுக்களையும், போன்போட்டு வாங்கிவரச்சொல்லியிருந்த முத்துமாலையையும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். அக்கா அந்தப்பக்கம் போயிருக்கமாட்டாள் அம்மா,

“என்னடா சொல்றா உங்கக்கா?”

“ஏதோ வாவாவோட சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்காம். கட்டிக்கிறியான்னு கேட்டா?”

அவ்வளவுதான் அம்மா ஆரம்பித்துவிட்டார்கள், அக்காவைப்பற்றி ஒரே குறையாய்ச்சொல்லிவிட்டு அவர்கள் பங்கிற்கு மூன்று பெண்களின் புகைப்படங்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். இதில்லாம எங்க நைனா வேற அவரு பங்குக்கு இரண்டு பொண்ணு புகைப்படம். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை எனக்கு இந்தவிஷயத்தில் உதவுவாள் நான் நினைத்திருந்த அக்காவும் ஒரு பெண்ணைப்பற்றிய சிபாரிசுடன் வந்திருந்தது கவலையளித்தது. அடுத்த நாள் அக்கா சொன்ன அந்தப்பெண்ணின் புகைப்படமும் வர என்னிடம் ஆறு பெண்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள்.

நான் என் மனதிற்கு சரியென்றுபட்டதாய் புகைப்படத்தின் படியும் விவரங்களின் படியும் தேர்ந்தெடுத்த பெண்ணைப்பற்றி வீட்டில் சொல்ல களேபரம் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கு எங்கள் வீட்டில் யாருக்கிடையிலும் ஈகோ இல்லாத காரணமே. அந்தப்பெண்ணின் பெயர் தீபிகா, அதன் பிறகு அந்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி சாதகபாதகங்ளை விவாதிக்கத் தொடங்கினார்கள்.

“தம்பி பெண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப சின்ன பெண்ணாயிருக்காளேடா சரிபட்டுவருமா. தர்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா இல்லடாயிருக்கும்.”

நான் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இங்கப்பாரு இப்பயே நல்லா முடிவு பண்ணிக்க, இன்னிக்கு கலராயிருக்கா, நல்லா மதமதன்னு இருக்கான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்கக்கூடாது. அதேமாதிரி அவசரப்படாத இன்னும் நிறைய பொண்ணுங்க பார்க்கிறதுன்னாலும் பார்க்கலாம். இந்ததடவையே கல்யாணம் பண்ணிக்கிட்டு போகணும்னு நினைக்காத.

இருபது வயசு பொண்ணுக்கு என்ன தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சமைக்கத்தெரியுமா, அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா உன்கூட அமேரிக்காவுக்கு வருவாளான்னு தெரியலை. இவனென்னான்னா அவளைத்தான் கல்யாணம் பண்ணின்பேன்னு அடம்பிடிக்கிறான்.”

பிறகு ஒருவழியாய் எல்லோரும் சம்மதித்து ஒரு நாள் பொண்ணு பார்க்கப்போயிருந்தோம். அங்கே பாவாவுடன் வந்திருந்த மோகனா அந்தப் பெண்ணிடம் தனியாய் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் முடிவைச் சொல்வதாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தோம். ஒருவழியாய் அந்தப்பெண்ணை அக்காவிற்கும் பிடித்திருந்தது. என்னைத் தனியாய் அழைத்துப்போய் மொட்டைமாடியில் வைத்து அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“இங்கப்பாரு உனக்கென்ன இப்ப அவசரம்னு தெரியலை, கேட்டாலும் சொல்லமாட்டேங்குற, நானோ அம்மாவோ உன்கிட்ட நிறைய காசுவாங்குறோம்னு நினைக்கிறியா அதுதான் பிரச்சனைன்னா சொல்லிடு நான் அம்மாகிட்ட பேசுறேன். ஏன்னா இவ்ளோ சீக்கிரமா பொண்ணுபார்த்து ஒரு கல்யாணம் நீ நிச்சயம் செய்துக்கத்தான் வேணுமா? நான் சொன்ன பொண்ணை விட்டுறு, அது உங்க வாவாவுக்காக சொன்னது. மனுஷன் உயிரைவாங்கி என்னை அந்தப்பொண்ணைப்பத்தி உன்கிட்ட சொல்லச் சொன்னார். வேற என்னத்தான் பிரச்சனை?”

நான் இந்தக்கேள்விக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். அக்கா தம்பி என்ற வரையறைகளை மீறி நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், என் அம்மாவைவிட என்னைப்பற்றி நிறையத்தெரிந்தவள் என் அக்காதான். ஆனாலும் அவளுடைய இந்தக்கேள்விக்கு பதிலளிக்கு முடியவில்லை.

“சரி நீ சொல்ல வேணாம், ஏதோ ஒரு பிரச்சனையா இருந்துட்டு போகுது. நீ செலக்ட் பண்ணியிருக்கிற பொண்ணு ரொம்ப சின்னதுடா. அவளுக்கு ஒன்னுமேத்தெரியலை அதுவுமில்லாம ஒரே பொண்ணுங்கிறதால குழந்தை மாதிரி வளர்த்துவைச்சிருக்காங்க அவங்க வீட்டில். நீ ஏன் இவ்வளவு சின்ன பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு சொல்றன்னு தெரியலை. யாருக்கிட்டையாவது மனசுவிட்டு பேசு. அப்புறம் தப்பாயிருச்சுன்னா நல்லாயிருக்காதுடா தம்பி, நான் சொல்றது புரியுமுன்னு நினைக்கிறேன்.”

“இங்கப்பாரு மோனா, நீ நெனைக்கிற மாதிரி பணம் உங்களுக்கு அனுப்புறதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை. அந்த மாதிரியான ஆளும் நான் கிடையாதுன்னு உனக்கு நல்லாத்தெரியும். அமேரிக்கா போனதிலேர்ந்தே என்னவோ தப்பு பண்ணிடுவனோன்னு ஒரு பயம் எனக்கு அதிகமாய்ட்டே வருது. தண்ணி, தம்மைப்போலவே இந்த விஷயத்திலும் நானேதான் என்னைக்காப்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. நான் தம்மடிச்சிருந்தாலோ, தண்ணியடிச்சிருந்தாலோ நீங்க தடுத்திருப்பீங்களான்னு தெரியாது. ஆனா நான் பண்ணமாட்டேன்னு நினைச்சிறுப்பீங்க. அதேமாதிரிதான் இதுவும்.

அது சின்னப்பொண்ணுன்னு நீ சொல்றது தெரியது. வாழ்க்கையில இந்தமாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நம்ம சைடுக்கு கொண்டு வந்திரலாம். இதுவே கொஞ்சம் வயசான பொண்ணுன்னா அவளுக்குன்னு ஒரு சூழ்நிலையை ஏற்கனவே அவமனதில் உருவாகியிருக்கும். நாம அதுக்கு போறதும் கஷ்டம் அவளை நம்ம பக்க இழுக்குறதும் கஷ்டம். அதான் அந்த முடிவை எடுத்தேன்.”

நான் சொன்னதும் சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்தவள்.

“நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தானிருக்குமுன்னு, நீ தண்ணியடிச்சிருந்தாளோ, தம்மடிச்சிருந்தாளோ நாங்க தடுத்துறுக்க மாட்டோம்தான் ஆனா நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு அதெல்லாம் வராதுங்ற நம்பிக்கை கொஞ்சம் மாறியிருக்கும்.

நீ நினைக்கிற மாதிரி 20 வயசு பொண்ணுங்களுக்குன்னு ஒரு உலகம் இருக்காதுன்னு நீயே கற்பனைத்தான் பண்ணிக்கணும், அதுவும் இந்தக்காலத்தில. ஆனா அந்தப்பொண்ணைப்பார்த்தா அப்படித்தெரியலை பார்ப்போம். நம்மவீட்டில் எல்லோருக்கும் சொல்றதுதான் அந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எந்தப்பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கத்தான் வேணும். அதில்லாம கண்ட கண்ட அமேரிக்க கலாச்சாரம் மாதிரி இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்குறேன் நாளைக்கு ரத்து பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கக்கூடாது.

நீ பண்ண மாட்டேன்னு தெரியும் ஆனாலும் பார்த்க்கோ. அந்தப்பொண்ணை உன்வழிக்கு கொண்டுவர்றதும் பெரிய பிரச்சனையாத்தான் இருக்கும். ஓக்கே ஆல் த பெஸ்ட் பார் யுவர் மேரிட் லைப்.” சொல்லிவிட்டு கையைக்குலுக்கியவளாய் கிளம்பிவிட்டாள்.

விடுமுறை குறைவாகவே இருந்ததால் ஆடம்பரமாய் இல்லாமல் சாதாரணமாய் கல்யாணம் செய்துகொள்வதாய் முடிவாகி நடந்து முடிந்து அமேரிக்காவிற்கு வந்தாகிவிட்டது. இங்கே வந்ததும்தான் ஆரம்பித்தது பிரச்சனை.

தமிழ்நாட்டில் இருந்தவாளயிற்றே, சன்டிவியில்லாமல் இருக்கமுடியாதேன்னு டிஷ்வாங்கித்தந்திருந்தேன். அதுவரை டிவியின் பக்கமே நான் தலைவைத்துப்பார்த்ததில்லை. எங்க பக்கத்தில் அதை டைம் கில்லிங் மெஷின்னு சொல்வாங்க. ஆனால் எனக்கும் தீபிகாவிற்கும் இடையில் இது வேறுவொறு பிரச்சனையை கிளப்பிவிட்டது.

காலையில் வணக்கம் தமிழகத்தில் வரும் மகளிருக்கான தற்காப்புக்கலை நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பவள் ஒருநாள் இரவு கேட்டாளே பார்க்கணும்,

“மோகன் பக்கத்தில இருக்குற கராத்தே ஸ்கூல்ல நான் சேர்ந்துக்கவா? நானும் சும்மாத்தானேயிருக்கேன் எங்கவீட்டில் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சின்னவயசிலேர்ந்தே இதுஒரு ஆசை. ப்ளீஸ், ப்ளீஸ் ம்னு சொல்லுங்க.”

அக்கா சொன்னது உண்மைதான் சின்னக் குழந்தைதான் அவள். கண்ணில் படும் அனைத்தையும் நோக்கி கையைத்திருப்பும் குழந்தைபோல் இப்பொழுது கராத்தே.

“இங்கப்பாரு தீபி, சும்மாயிருக்க ஒருமாதிரியிருந்துச்சுன்னா மல்டிமீடியா கோர்ஸ் சேர்த்துவிடுறேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்காயிருக்கும். அதைவிட்டுட்டு கராத்தே அது இதுன்னா எப்புடிம்மா? அதுவுமில்லாம ஆம்பளைங்க இருக்குற இடத்தில் நான் இல்லாம தனியா போய்ட்டு வரணும் முடியுமா இதெல்லாம்.”

“அய்ய, இதப்பத்தித்தான் பயந்தீங்களாக்கும் இது மகளீருக்கான கராத்தே, அங்க பொண்ணுங்க மட்டும்தான் வருவாங்க, பொம்பள மாஸ்டர்தான் சொல்லித்தர்றதும். நம்ம தமிழ்நாட்டு மாமிங்க நிறையபேர் வர்றாங்க தெரியுமா? நான் கராத்தேவுக்கும் போறேன் மல்டிமீடியா கோர்ஸ்க்கும் போறேன் என்ன?”

நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் அந்த மாமிங்க வேலையாத்தான் இருக்குமுன்னு. இதுக்கெல்லாம் ஒரு அஸோஷியேஷன் வேற. அன்னிக்கு இவளை பார்டிக்கு கூட்டிட்டு போறப்பவே நினைச்சேன் இதெல்லாம் நடக்குமுன்னு. கொலுவைக்கிறேன், விளக்கு பூஜை நடத்துறேன் பேர்வழின்னு ஒரே அலம்பல் தான் நான் இருக்கிற இடத்தில், ஆனா கராத்தே அளவிற்கு போகுமுன்னு நினைக்கலை. எப்பொழுதுதான் நினைத்தேன் சின்னப்பேண்ணை மணம் செய்து கொள்ளக்கூடாதோன்னு.

“என்னங்க நீங்க இன்னும் பதிலே சொல்லலை.” கட்டிலில், கட்டிப்பிடித்துக் கொண்டு கல்யாணம் ஆன இரண்டாவது மாதத்தில் கேட்டால் வேறென்ன பதில் சொல்லமுடியும்.

“தீபி, போறதுன்னா பத்திரமா போய்ட்டுவா. இதப்பத்தி காலைல பேசலாம் என்ன.”

காலையில் முழித்துப்பார்த்தால் கராத்தேக்குரிய வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டுக்கிட்டு நின்றுகொண்டிருந்தாள். ஒரு மாதம் காலையில் ஆ, ஊ என்ற சப்தத்துடன் தான் என் காலை பொழுது விடிந்தது. பிறகு என்ன நினைத்தாளோ தெரியாது நான் கராத்தேவிற்கெல்லாம் போகலைன்னு சொல்லி நின்றுவிட்டாள். நானும் விட்டுச்சு சனியன்னு நினைச்சா அதான் இல்லை. அப்புறம் வாரத்தில் இரண்டு தடவை வர்ற அந்த தற்காப்புக்கலை நிகழ்ச்சியை ரெக்கார்ட் பண்ணி வைச்சிக்கிட்டு என்னை வைத்துக்கொண்டு பயிற்சி வேற.

காலைத்தூக்கி உதைக்கிறேன்னு, கையால் குத்துறேன்னு ஒரே அலப்பற, அதிலிருந்தே சன்டிவியைப் பார்த்தேலே எரிச்சல் வரத்தொடங்கியது. அதுவும் அந்தாளு மூஞ்சியைப்பார்த்தாலே பத்திக்கிட்டு வரும், கராத்தே, அக்கிடோ, ஜடோ அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இதற்குத்தேவை முறையான பயிற்சி சரியான குரு அப்படின்னு சொல்ல நேரா டிக்கெட் எடுத்துட்டு போய் அந்தாளை உதைக்கணும் போலயிருக்கும். ஒறு வேலை அக்கா சொன்னது தான் சரியோ அப்பிடின்னெல்லாம் நினைப்பேன்.

அடுத்த மாதத்தில் இந்த வினையும் நின்றுபோயிருந்தது. தீபி முழுகாமல் இருந்தாள் அதனால் இந்த கராத்தேவை தூக்கி குப்பையில் போட்டாகிவிட்டது. எங்கேயோ கணக்கில் நடந்துவிட்ட தவறால் கர்ப்பமாகியிருந்தாள், அவள் உடலளவில் ரொம்பவும் தளர்ந்துபோயிருந்தாள், இரண்டாம் மாதத்திலேயே முடியலைன்னு சொன்னதால் எங்களுக்கிடையேயான தாம்பத்தயம் இல்லாமல் போயிருந்தது. தினமும் சாயங்காலம் எங்கம்மாவிற்கு, அவங்கம்மாவிற்கு, எங்கக்காவிற்கு என போன்போட்டு பேசி அமேரிக்க தொலைதொடர்புத்துறைக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே சென்றது.

“காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலையை.”

ஒரு சனிக்கிழமை தீபிகா விழித்துப்பார்க்கும் பொழுது நான் கையில் லாப்டாப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் ரொம்பவும் அலுத்துக்கொண்டவளாய் பிரச்சனையைத் தொடங்கினாள்

“ஏய் நீ பேசாதடி, எழுந்திருக்கிறா பாரு எட்டுமணிக்கு. என்னமோ ஆடி ஓடி வேலைசெஞ்ச மாதிரி. ஊட்டுல உக்காந்துக்கிட்டு தின்னு தின்னுட்டு தூங்குற, இதுல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டிங்களான்னு கேள்வி வேற. ஆளப்பாரு, போய் காபி போடுறீ.”

அதற்காக சென்றுகொண்ருந்தவள் நான் அதிகாரமாய்க் கத்தவும் என்னை நோக்கி திரும்பி வந்து,

“இங்கபாருங்க திங்கறேன் கிங்கறேன்னெல்லாம் பேசினீங்க, அவ்வளவுதான் நடக்குறதே வேற, இந்த மூஞ்சிக்கு வேலைக்கு போற பெண்டாட்டி கேக்குதாக்கும் எல்லாம் இது போதும். இன்னிக்கு காலையிலேயே எதுக்கு நீங்க அடிபோடுறீங்கன்னு எனக்கு நல்லாத்தெரியும். இந்த விளையாட்டல்லாம் வேற யார்க்கிட்டையாவது வச்சுக்கோங்க. இன்னிக்கு பூரா உங்கக்கிட்டேர்ந்து சத்தமே வரக்கூடாது ஆமாம் சொல்லிட்டேன்.” சொல்லியபடி சமையல்கட்டிற்கு சென்றாள்.

நான் வேண்டுமென்றே அவளை சீண்டிக்கொண்டிருந்தேன்.

“ஏய் இந்தாடீ, பாஸ்வேர்ட் மாத்தினியா இதுக்கு.” லேப்டாப் உள்ளே நுழைய அனுமதிக்காது குழப்பமாய் இருந்தது.

“ஆமாம் நான் தான் மாத்தினேன், நீங்க தப்பான படத்தையெல்லாம் எனக்கு முன்னாடியே பார்த்துக்கிட்டிருந்தா நல்லாயிருக்கா. அதான் மாத்தினேன்.” உள்ளேயிருந்தே சப்தம் கொடுத்தாள்.

இதுவும் என் சீண்டல்களில் ஒன்றுதான், அவளுக்கும் நன்றாய்த்தெரியும் அப்படிப்பட்ட படம் ஒன்று அந்த லேப்டாப்பில் இல்லாதது. ஆனால் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

“அதெல்லாம் சரி, என் பாஸ்வேர்ட் உனக்கெப்பிடி தெரியும்.” நான் கேட்க சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தவள்.

“பெரிய தங்கமலை ரகசியம், அவபேரு தானே வைச்சிருந்தீங்க. சக்காளத்தி சிறுக்கி. எனக்கு உங்க மேட்டர் எல்லாந்தெரியும். உங்கம்மாகிட்ட தான் இன்னும் சொல்லலை. நேத்திக்கு மாதிரி இன்னைக்கும் எதாவது பிரச்சனை பண்ணீங்க உங்கம்மாகிட்டையும் சொல்லிடுவேன்.” அவள் சிரித்துக்கொண்டே சொல்ல,

“இங்கப்பாரு அவளைப்பத்தி தப்பாப் பேசின அப்புறம் நடக்கிறதே வேற. நீதான் முடியாதுன்னு சொல்லிட்டல்ல, அதோட நிறுத்திக்க. என் பர்ஸனல் விஷயத்திலெல்லாம் தலையிடாத.” நான் கத்தினேன்.

“அதான் தெரியுமே உங்க குடும்பத்தைப்பத்தி, யாரு ஒரு பெண்டாட்டியோட நிறுத்தியிருக்கீங்க, அந்த ரத்தம்தானே உங்ககிட்டையும் ஓடுது.”

“ஏய் நீ ரொம்ப அதிகமாப்போற, இந்த விஷயத்தில் எங்க குடும்பத்தையெல்லாம் ஏன் இழுக்குற. அப்படியேப்பாத்தாலும் எங்கப்பாவுக்கு ஒரு பொண்டாட்டிதான்.”

இல்லாத ஒருத்தியைப் பற்றி நான் இருப்பதாய்ச் சொல்ல, நம்பாத அவளும் நம்புவதாய் நடிக்க நாடகமாடிக் கொண்டிருந்தோம். பலசமயம் எனக்குள் இந்தக்கேள்வி எழும் ஏன் இந்த நாடகமென்று ஆனால் எங்களுக்கிடையில் தாம்பத்யம் இல்லாத குறையை இதைப்போன்ற ஊடல்களால் நாங்கள் சரிசெய்து கொள்கிறோம் எனத்தோன்றியதால் நானும் அப்படியே தொடர்ந்தேன். அவள் சொல்வதும் உண்மைதான் எங்கள் பரம்பரையில் என் தந்தையைத்தவிர அனைவருக்குமே ஒன்றோ இல்லை அதற்கு மேற்ப்பட்ட சின்னவீடுகளோ செட்டப்புக்களோ இருந்தது. ஆனால் நான் என் தந்தைவழியைப் பின்பற்றி சுந்தரசோழரைப்போல் ஏகபத்தினிவிரதனாய் இருந்து வருகிறேன்.

சிறிது நேரம் என்னிடமிருந்து சத்தமே சமையல் அறையிலிருந்து வெளியில் வந்துப்பார்த்தவள். நான் விண்டோஸிற்குள் நுழைந்து விட்டது தெரிந்ததும்,

“எப்பிடி உள்ளே வந்தீங்க?”

“போடீ பாஸ்வேர்ட் மாத்துறாளாம், பாஸ்வேர்ட். கம்ப்யூட்டரைப்பத்தி ஒரு ஆறுமாசமாத்தெரியுமா உனக்கு இல்லை மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு வருஷமா? எனக்கெல்லாம் சாப்பாடு போடுறதே இதுதான். போ போய் காப்பி போடுற வேலையைப்பார்.” சிரித்துக்கொண்டே நான் சொல்ல, செல்லமாய்க் கோபப்பட்டவளாய் நறுக்கென்று தலையில் கொட்டியவள்,

“என்ன எழவையோ பாத்துத்தொலைங்க, யாரு வேணாங்கிறா, என்னைத் தொடறதுன்னா குளிச்சிட்டு தொடுங்க அசிங்கம் அசிங்கம்.” சொல்லிவிட்டு நகரப்பார்த்தவளை பிடித்து நிறுத்தினேன்.

“இப்பச் சொல்லு ஓக்கேன்னு ஒரு தடவையென்ன பத்துதடவை குளிச்சிட்டு வர்றேன். ஓக்கேவா?”

திரும்பிப்பார்த்து முறைத்தவள் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் காபி டபராவைக் கொண்டுவந்து கொடுத்தவள் சற்றுகூட நிற்காமல் சமையலறைக்குச் சென்றுவிட்டாள். நான் திரும்பத்திரும்ப அன்றைக்கு வம்பிழுத்துக்கொண்டேயிருந்ததால், சற்றே கோபமான அவள்,

“இங்கப்பாருங்க என்னால முடியலை அவ்வளவுதான் உங்களுக்கு வேணும்னா உங்க குடும்பத்தை மாதிரி இங்க ஒரு கூத்தியாலை வைச்சிக்கோங்க நானொன்னும் கேக்கலை.” சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் அசதியாய் உட்கார்ந்துவிட்டாள். நானும் இதுதான் சமயமென்று, சட்டை பேண்டை போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டேன்.

காலையில் பத்துமணிக்கு போனவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்பிவந்தேன். தீபிகாவை நேரில் பார்க்கும் துணிவு இல்லாததால் நேராய் படுக்கையறைக்கு போக,

“நில்லுங்க சாப்டீங்களா?”
“இல்லை சாப்பிடலை, நீ சாப்டியா இன்னிக்கு என்ன சமையல் மதியம் என்ன சாப்பிட்ட?” நான் கேட்க பதில் சொல்லாதவள் நேராய் போய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டை நீட்டியவளிடம்.

“நான் எங்கப்போயிருந்தேன்னு நீ கேட்கவேயில்லை?”

“அதான் தெரியுமே. நீங்க யாரோ ஒரு எழுத்தாளரோட கலந்துரையாடலுக்கு இன்னிக்கு போகப்போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்களாக்கேட்டா குறைஞ்சு போயிருவீங்க பாருங்க அதான என்கிட்ட சொல்லாமக்கூட போய்ட்டீங்க.” லேசாய் கண்ணில் நீர்க்கட்டியது. அவளை சமாதானம் செய்ய பக்கத்தில் இழுத்தேன். அம்மான்னு அலறியபடி வயிற்றைப்பிடித்துக்கொண்டு அவள் கத்தத்தொடங்கினாள். நான் வெளிறிப்போனேன். அடுத்த பத்துநிமிடம் எனக்கு உலகமே மறந்து போயிருந்தது, அவள் கதறுவதை பார்க்க சகிக்காமல் எதுவும் செய்ய முடியா என் இயலாமையை நினைத்து அழத்தொடங்க, அவள் சிரிக்கத்தொடங்கினாள்.

“காலங்காத்தால என்னை தனியா விட்டுட்டு போனீங்கள்ல அதுக்கு பனீஷ்மெண்ட் இது.”

அவள் சொல்லிவிட்டு சிரிக்க, எனக்கு நன்றாய் இழுத்து கன்னத்தில் ஒன்றுவிடவேண்டுமென்று நினைத்தேன். இருப்பது அமேரிக்கா பொண்ணு ஏதோ கோபத்தில் 911 அழுத்திட்டான்னா ஒருநாள் உள்ள உக்காந்திருக்கணும். அதனால் பக்கத்தில் இழுத்து இறுக்க அணைத்துக்கொண்டேன்.

“தம்பி உனக்கு எல்லா விஷயத்திலேயுமே அவசரம் தான், ரொம்ப தப்புடா நீ பண்றது. குழந்தை பெத்துக்குற வயசாடா அவளுக்கு எவ்வளவோ சொல்லியும் கேட்காம இவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இந்த சின்னவயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பிரி பிளான்கூட இல்லாம இப்ப குழந்தைவேற. பேசாம வேலையை மாத்திக்கிட்டு தமிழ்நாடு பக்கம் வந்துசேறு. இவளையும் சொல்லணும் இவனுக்குத்தான் தெரியலைன்னா உனக்குமா. ஏதோ என் புருஷன் அப்பிராணியா இருக்குறதால என்னால உன் பிரசவத்துக்கு அமேரிக்கா வரமுடிஞ்சுது இல்லைன்னா? இதோட நிறுத்திக்கோடா ஏற்கனவே இந்தியாவோட ஜனத்தொகை ஜாஸ்தியாயிருக்கு.” அக்கா இங்கேவந்தும் அட்வைஸ் மழை கொட்ட. நான்,

“குழந்தை அமேரிக்காவில் பிறந்ததால அமேரிக்க சிட்டிஸன். அதனால இன்னொன்னு இந்தியா போய் இந்தியாவுக்காக பெத்துக்கலாம்.” சொல்ல மோனாவும் தீபிகாவும் என்னைத் துரத்தினார்கள்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In கவிதைகள் ரமேஷ் - பிரேம்

பேரழகிகளின் தேசம்

இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.

டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.

பேரழகிகளின் தேசம்

பாயிரம்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனயால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

வேறு

என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த
உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்
திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்
தணல்கொண்டு வருகிறேன்

இதுவுமது

சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு
முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து
வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்
மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்

பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்
ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்
எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து
முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று
உனது மதனபீடத்தில்
அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்
கவ்வி இழுக்கும்போது
உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது
ஒரு துளி எல்லையற்ற வெளியில்
வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு
பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது

வேறு

கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று
வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்

இதுவுமது

ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே
ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது
ஆளற்ற படகு - அதிலே
சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது
யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்
எனது மனம் படுத்துக்கிடக்கிறது

இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து
கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்
கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி
கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து
எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது

வேறு

யோனி புணர்வதற்கல்ல
பிறப்பதற்கு - என்று வேதநூலில் நான்
சொல்லியிருந்த வாக்கியத்தை
காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து
வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்

தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
நிறைந்த இந்தத் தேசம்
மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து
அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக
இந்த்ப் பூமி இருந்தது
அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.

இதுவுமது

யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக
ஒரு மிடறு நீர்
எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்
அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது
நீரலைகளென அசையும் அவளது
தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்
எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று
அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்

கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென
றெக்கைத் துடிக்கிறது யோனி
வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த
ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று
மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி
கிளர்ந்து புகைகிறது
கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.

வேறு

நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்
சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக
தொடுவானத்திலிருந்து
மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்
தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்
வெயில்படாத பால் நிறச் சருமத்தில்
என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்
என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்
பெயரால் அவனை விளித்தேன்
திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி
குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்
ஒற்றை முலையோடு
வந்தவளை வாறி மடியிலிருத்தி
முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி
வரல் சுட்டுப் பதறி
உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை
எனது வாய் எச்சிலில் நனத்தேன்
உறிந்த பொருக்கினூடே உள்ளே
கணன்ற நெருப்பைக் கண்டேன்.

கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து
குறுஞ்சிரிப்போடு நடந்காள்

இதுவுமது
வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்
அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க
ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்
என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது
முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க
என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்
குருதி குடித்தபோதுதான் தெரிந்தது
இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது

உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்
பிணைந்த எனது படகை
தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி
முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்
படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு
உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்

நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்
தரும்படி வேண்டினேன்
அவர்களில் ஒருத்தி பதிலுக்கு
தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்
திரும்பிக் கேட்டாள்
எல்லோரும் சிரித்தார்கள்
பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது

படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி
நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்
படகு பற்றிப் புகையத் தொடங்கியது
பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனையால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


----------------------------

இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் - பிரேம் காப்பிகள்.

தாமதமாக வந்துசேரும் அறிவு
கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் Science ஜல்லிஸ் சுய சொறிதல்

வாசகர் பரிந்துரை அரசியல், blogger wordpress அரசியல், கன்னடம் படிக்கலாம் வாங்க!

வாசகர் பரிந்துரை சம்மந்தப்பட்டு நிறைய மடல்கள் வந்த வண்ணம் இருந்தன. சொல்லப்போனால் அது எப்படி 20/20 வரைக்கும் போனதோ அப்படியே 0/40 கொண்டு வந்துவிட்டு பின்னர் ஆட்டத்தை முடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். போய்த் தொலையுது என்று விட்டேன், நண்பர்கள் அதை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி நண்பர்களே 0 ற்கு கொண்டு வந்து விட்டால் இன்னும் சந்தோஷம்.

வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் இருந்த அதற்கான importance சிறிது காலத்திற்கு முன்பு இல்லை. எல்லோரும் சூடான இடுகைகளில் கால் கழுவிக் கொண்டிருக்கையில், தமிழ்மணம் மீண்டும் முகப்பிறகு 'வாசகர் பரிந்துரை'யை கொண்டு வந்து இங்கையும் கொஞ்சம் கழுவிக்கோங்க என்று விட்டிருக்கிறது.

நண்பர் ஒருவர் நிறைய '-' வருவதைப் பற்றி வருத்தப்படுவதாக, நண்பரின் நண்பர் என்னிடம் சொன்னார். ஒரு முறை எனக்கும் இதே பிரச்சனை வந்த பொழுது தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? என்று எழுதி அவர்களும் கவனித்து, பதிவர் பட்டை 'செப்புப்பட்டயம்' திற்கு 'நட்சத்திரக் குத்து' இல்லாமல் வந்து கொண்டிருந்தது. நான் mohandoss.comற்கு மாறும் வரை. இப்பொழுதைய செப்புப்பட்டயத்தில் '+' '-'ற்கான ஆப்ஷன் வந்தாலும் இரண்டுமே 99% செய்ய முடியாது. அதனால் விட்டுவைத்திருக்கிறேன். (அந்த 1% வேலையை யாரும் நண்பர்கள் செய்தால் தமிழ்மணத்திடம் மீண்டும் முறையிட வேண்டியது தான்.)

மேற்சொன்ன நண்பரின் பதிவுகளைப் படிப்பவன் என்ற முறையில் 'உள்ளடி அரசியல்' காரணங்களுக்காக அந்த '-' போடும் பழக்கம் இருப்பது புரிந்தது. நண்பர் இந்த வகையறா 'வாசகர் பரிந்துரை' பிரச்சனையை மூட்டை கட்டிவிட்டு நகரணும் என்பது என் அவா.

--------------------------------------------

WordPress, Blogger இரண்டில் bloggerஐயே அதிகம் சப்போர்ட் செய்தவன் என்ற முறை என் பதிவை, mohandoss.comல் ப்ளாக்கர் கொண்டே இணைத்தேன். பதிவு feedburner மூலம் வருவதால் கிடைக்கும் statistics அத்தனை தூரம் ப்ளாக்கரை தேர்ந்தெடுத்ததை சரியென்று மனதிற்குச் சொல்லவில்லை.

என் செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் பதிவுகளின் மொத்தமும் 2004லிலிருந்தே அவ்வப்பொழுது WordPressல் சேகரிக்கப்பட்டிருப்பதால் wordpress statistics அற்புதமாக இருக்கிறது. நாம் பதிவெழுதும் நாட்கள் தவிர்த்து இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஒரு வாரம் கழித்து எனக்கு வருகை 30 - 40 தான் இருக்கும் நாட்கணிக்கில் பார்க்கும் பொழுது. ஆனால் பதிவு எழுதுகிறோமோ இல்லையோ ஒரு நாளைக்கு 250 - 350 வருகை wordpressற்கு வருகிறது. கூகுள் தேடலிலும் wordpress பதிவே முன்னால் வருகிறது, புது domainஐ தொடங்கியவுடன் கூகுள் indexingற்காக Webmaster centralல் இணைந்து பதிவை இணைத்து எல்லாம் செய்தும் கொஞ்சம் வேலை காட்டிக் கொண்டிருந்தது என் புது domain.

இப்பொழுது பிரச்சனையில்லை 'செப்புப்பட்டயம்' என்று தேடினால் blog.mohandoss.comற்கு வருகிறது, முன்னர் google index சரிவர செட் ஆகாததால் என் wordpress பதிவிற்கோ இல்லை AnyIndianன் உடைய பக்கமான பாலகுமாரனின் செப்புப்பட்டயம் புத்தகத்திற்கோ சென்று கொண்டிருந்தது.

ஆனால் இப்பொழுது என் kundavai.wordpress.com பதிவிற்கு இருக்கும் கூகுள் ரேங்க் 4, என் blog.mohandoss.comற்கு வர எவ்வளவு நாட்கள் ஆகுமோ? SEO எல்லாம் அத்தனை தூரம் தெரியாவிட்டாலும் இந்த விஷயத்தில் wordpress, bloggerஐ விட நன்றாக இருக்கிறது என்றோ சொல்வேன்.

--------------------------------------------
என் கம்பெனியில் தேவையென்றால், பெங்களூருவில் கன்னடத்தில் பேச கஷ்டப்படுகிறீர்கள் என்றால் கம்பெனி உங்கள் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கன்னடம் கற்றுக் கொடுக்கும் என்றும் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றதும் நானும் 'yes' பட்டனைத் தட்டி சேர்ந்து கொண்டேன்.

சொல்லப்போனால் பெங்களூரில் இருப்பதற்கு நல்ல உபயோகமாக வகுப்புகள் இருப்பதால் அதை ஒரு பதிவாக தர உத்தேசம். நான் இங்கே எழுதுவதும் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கே. அவர்கள் சென்ற வழியிலேயே நானும் செல்கிறேன்.

சரி இனி கன்னடம்,

நானு மோகன்தாஸ் - நான் மோகன்தாஸ்

நீவு யாரு? - நீங்க யாரு?

நிம்ம ஹெசுரு ஏனு - உங்க பெயர் என்ன?

நன்ன ஹெசுரு மோகன்தாஸ் - என் பெயர் மோகன்தாஸ்

நிம்ம கெலசா ஏனு - உங்கள் வேலை என்ன?(அல்லது) நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

நிம்ம தந்தைய ஹெசுரு ஏனு - தந்தைய - அப்பாவுடைய
நிம்ம தாயிய ஹெசுரு ஏனு - தாயிய - அம்மாவுடைய
நிம்ம அக்கன ஹெசுரு ஏனு - அக்கன - அக்காவுடைய
நிம்ம தங்கிய ஹெசுரு ஏனு - தங்கிய - தங்கச்சியுடைய
நிம்ம அண்ணன ஹெசுரு ஏனு - அண்ணன- அண்ணனுடைய
நிம்ம தம்மான்ன ஹெசுரு ஏனு - தம்மான்ன - தம்பியுடைய
நிம்ம கண்டன ஹெசுரு ஏனு - கண்டன - கணவனுடைய
நிம்ம ஹெண்டத்தியிய ஹெசுரு ஏனு - ஹெண்டத்திய - மனைவியுடைய

இவத்து - இன்று
நாளே - நாளை
நினே - நேற்று
நாடிட்டு - முந்தா நேற்று
மொன்னே - நாளை மறுநாள்

யாரது - யார் அது?
யாவத்து - எது?

நந்து - என்னுது
ஈ பேனா நந்து!
ஈ புஸ்தகா நந்து!

இது தொடரும்...

-------------------------------------------------------

தமிழ்மணத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் படிப்பவர்கள்(அல்லது என் பதிவுகளை) எண்ணிக்கையை நான் 150லிருந்து 200க்கு மேல் உயர்த்தமாட்டேன். அவ்வளவு பேர் தான் தொடர்ச்சியாக என்ன எழுதினாலும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கூகுள் ரீடரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதில் Recommendation என்று வரும் இடத்தில் வந்த பதிவுகள் அனைத்திற்கும் ஏறக்குறைய 70 - 120 வரை கூகுள் ரீடரில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது. இது நபர் எத்தனை பிரபலம் என்ற விகிதத்தில் மாறியது.

அப்படிப்பார்த்தால் ஏறக்குறைய 100 நபர்கள் ரீடரில் இருந்தே பெரும்பாலும் பதிவுகளைப் படிக்கிறார்கள், பதிவின் தீவிரத்தை - நோக்கை கொண்டு பின்னூட்டம் இடவோ பின்னூட்டம் படிக்கவோ பதிவை நாடுகிறார்கள். பெரும்பாலும் பின்னூட்டங்கள் வரவே வராது என்னும் பதிவுகளை க்ளிக்கி படிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இளவஞ்சியிடம் நான் ரீடருக்கு மாறியதைச் சொன்னதும் அவர் வழமை போல் என் கொள்கையை வம்பிழுத்து, போலி கம்யூனிஸ்ட் என்று திட்டினார். கொள்கையை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று வீம்பு பிடிப்பதனால் கொள்கைக் குன்று என்ற பெயரைத் தவிர்த்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

பல பதிவுகளுக்கு இப்பொழுது என்னுடைய ஒரு ஹிட் கிடைக்காதாயிருக்கும் பெரும்பாலும் பின்னூட்டம் படிக்க விரும்பமாட்டேன் என்பதால் எனக்கு ரீடர் 100% ஏதுவாயிருக்கிறது. இடையில் feedஐ குறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். anonymous chatல் வந்த பல நண்பர்கள் ப்ளாக்கர், flickr போன்ற பல தடை செய்யப்பட்ட நாடுகளில் ரீடர் மூலமாக படிப்பதாகச் சொல்லியதாலும், நானும் ரீடருக்கு மாறியதாலும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In கவிதைகள் புகைப்படம்

ஆத்மார்த்தியின் பூனை



அமராவதியின் பூனைக்கான தேடல்
ஆத்மார்த்தியின் பூனையோடு
புனைவொன்றின் மாயயதார்த்தவாத
பக்கத்தில் முடிவுற்றது
முடிவுற்ற இடத்தில் இருந்து துவங்கிய
பெருங்கனவொன்று பெங்களூர் வீதிகளில்
கருப்பு வெள்ளை சினிமாவில் நடித்தது
என்றவாறு நகர்ந்து
தேடிவந்த ஆத்மார்த்தியின் பூனையை
மறந்து கையில் கிடைத்த
பெயரில்லாத பூனையில் சமாதானமாகிறது

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கவிதைகள் புகைப்படம்

யாசித்தலின் குரூரம்

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

------------------------------------------------

இதனுடன் தொடர்புடைய ஒரு பதிவு:

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In புகைப்படம்

மேல்கோட்டை, தென்னூரு ஏரி, பைலகுப்பே நடனத் திருவிழா - புகைப்படங்கள்

தலாய்லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், கூர்கின் அருகில் அமைந்துள்ள, குஷால் நகர் - பைலகுப்பே - திபெத்திய மக்கள் குடியிருப்பில் நடைபெறப்போவதாகவும் புகைப்படம் எடுக்க வாறீகளா என்ற மெயில் நாங்கள் கூர்க் போய்வந்த ஒரு மாதத்திலேயே வந்தது. ஆனாலும் ஒரு விழா என்ற வகையில் போய் வருவதற்கான ஆர்வம் இயல்பாய் எழ வருகிறேன் என்று சொல்லி வைத்திருந்தேன்.

peevee, இளவஞ்சி, இலக்குவண ராசா, ஆதித்த நடராஜன், நாதன் பின்னர் இலக்குவண ராசாவின் இன்னொரு நண்பர், இளவஞ்சியின் நண்பர் ஒருவர் என எட்டு பேர் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கிளம்பினோம். அப்படியே வழியில் மேல்கோட்டைக்கும், தென்னூரு ஏரிக்கும் சென்ற வருவதாகவும் உத்தேசம் இருந்தது. ராமானுஜரை சோழர் தேசத்திலிருந்து வெளியேற்றியதும் அவர் வந்து தங்கியிருந்தது இந்த மேல்கோட்டையில் தான்.

நல்ல நண்பர்கள் குழு அமைந்தது - அருமையான பயணம் - நகைச்சுவையுடனே நகர்ந்தது மொத்த பயணமும். அப்பொழுது எடுத்த சில படங்கள்.

Landscape

Tree

Melkottai Kovil

Bylakuppe Dance Festival

Greatness of being

Expectation

Smart & Cute boy in Melkottai Koil Theru

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சர்க்கார் ராஜ் - திரைப்படம்

அதிக நாட்கள் கழித்து ஒரு இந்திப்படம் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியதும், சரி செய்து பார்த்திடுவோம் என்று சர்க்கார் ராஜ்ஜிற்கு முன்பதிவு செய்தேன். நல்லவேளை செய்தேன், இல்லாவிட்டால் 'கதை தெரிந்துவிட்டது', 'முதல் நாள் பார்க்கவில்லை' என்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தப் படத்தை பார்க்காமலேயே இருந்திருப்பேன். அப்படி பார்க்காமல் போன இந்திப் படங்கள் நிறைய இருக்கும்.



இதன் முந்தைய வரிசைப் படமான 'சர்க்கார்' பார்த்திருக்கவில்லை, இன்று மதியம் நண்பர்களிடம் கதை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை, God Father பார்த்திருக்கிறாயில்லையா? அதில் Marlon Brando நடித்த கதாப்பாத்திரம் தான் அமிதாப் பச்சன், Al Pacino நடித்த கதாப்பாத்திரம் தான் அபிஷேக் பச்சன் என்றார்கள். அதில் இருக்கும் நிறைய காட்சிகள் பழைய படத்திலும் இருந்தது என்றும் சொன்னார்கள். God Father பார்த்தவர்கள் யாருக்கும் அதன் காப்பியைப் பார்ப்பதில் அத்தனை விருப்பம் இருக்காது தான், Francis Ford Coppolo வின் இயக்கத்தில் மூன்று படங்களையும் பார்த்தவன்ன் என்ற முறையில் எனக்கும் ஒரு அலட்சியம் இருந்தது சர்க்கார் ராஜ் பற்றி. சரி பார்த்துவிடுவோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது, நாளை(இன்று) அதிகாலை வேறு பயணம் இருக்கிறது என்று பார்க்கத் துணிந்தேன்.

படம் பிரம்மாதமாக இருக்கிறது, ஏன் இதை முதலில் சொல்கிறேன் என்றால் பிற்பாடு சொல்லப்போகும் விஷயங்களை வைத்து படம் நன்றாகயில்லையோ என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா அதனால் தான்.

என்னால் God Father I, II, III ற்கும் இந்தப் படத்திற்கும் சில ஒற்றுமைகள் சொல்லமுடியும் நிச்சயமாய், அபிஷேக் பச்சனின் முதல் மனைவி இறந்து போவது அதுவும் God Fatherல் வெடித்தது போலவே கார் குண்டு. பின்னர் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் தன் சகோதரனைக் கொன்ற விஷயம், God Father III ல், Freddoவைக் கொன்றதற்காக இன்னமும் வருத்தப்படும் Micheal Corleone போலவே பட்டது. அதைப் போல் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் "மே சம்பாலூங்கா பாபா" வும் God Father Iல் மர்லான் ப்ராண்டோவிடம் அல்பாசினோ சொல்லுவதோடு ஒப்பிட முடியும். இந்த மாதிரி படங்களுக்கேயான பிரத்யேகமான டயலாக் எனக்கு God Fatherல் புரிந்த அளவு இந்தியில் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் என்னால் ரிலேட் செய்ய முடியும், சூழலோடு பொருத்தி வசனத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் எனக்கு God Father வசனங்கள் மிகவும் பிடித்தவை, நான் க்ளாசிக் என்று நினைக்கும் சில உதாரணங்கள். "Never hate your enemies. It affects your judgement", "Your enemies always get strong on what you leave behind.", "Never let anyone know what you are thinking." சொல்லப்போனால் இவை தாதா உலகத்திற்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் கூட பொருந்தக் கூடியவை தான். சரி திரும்பவும் படத்திற்கு.

நான் இந்தியில் மதிக்கும் இன்னொரு விஷயம் ஹீரோ தவிர்த்தும் எல்லோருக்கும் முக்கியத்துவம் தருவது. படத்தில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ரவி காலே, சாயாஜி ஷிண்டே என அவரவர்க்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தனிஷா முகர்ஜிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வருத்தம் லேசாக(ஹிஹி) மனதிற்குள் இருந்தாலுமே கூட என்னைக்கேட்டால் God Father IIIல் Coppola, தன் மகளை Mary Corleone நடிக்கவைத்ததில் எத்தனை பேருக்கு கடுப்பு இருந்ததோ அந்த அளவு கடுப்பு எனக்கு இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்ததில் எனக்கு இருந்தது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவுடன் பேசும் பொழுது சுவரு ஒன்றுடன் பேசுவது போல் இருந்தது எனக்கு. எக்ஸ்ப்ரஷன் கிலோ என்ன விலைன்னு கேட்கிறார். அபிஷேக் பச்சனும் இன்னமும் கொஞ்சம் நிறைய செய்திருக்கலாம், அல் பாசினோ அளவிற்கு ஒட்டவில்லை, அல் பாசினோ உடன் ஒப்பிடுகிறேன் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா, படத்தில் Sepia Effect உபயோகித்திருக்கிறார்கள், அளவு கொஞ்சம் முன்ன பின்ன மாறினாலும் படம் முழுவதும் அந்த எஃபெக்ட் இருக்கிறது. ஒளிப்பதிவும், காமெரா வைக்கும் ஆங்கிளும் ரொம்ப அழகாக இருக்கிறது. அதிகம் சில்லவுட்வும் பயன்படுத்தியிருக்கிறார்கள், இதுவும் கூட படத்திற்கு தனி அழகைத் தருகிறது. முகத்திற்கு க்ளோசப் வைக்கும் பொழுது அவர் எத்தனையை ப்ரேமிற்குள் கொண்டு வருகிறார் என்று கவனித்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஒளிப்பதிவு பிரம்மாதம். அமிட் ராயாமாம், பிரம்மாதம். ஆனால் ஒரு முறை ஆட்டோ ஃபோகஸ் போட்டுவிட்டு பின்னர் சூம் இன் செய்யும் பொழுது ஸ்கிரீன் கொஞ்சம் shake ஆனது போல் இருக்கிறது. உதாரணம் க்ளைமாக்ஸ் காட்சி, அதில் அமிதாப்பிற்கு அப்படித்தான் ஆகிறது. இது வேண்டுமென்றே செய்ததா தெரியவில்லை. படத்தில் அபிஷேக்கிற்கு ஆரம்பத்தில் இருந்து இந்த எஃபெக்ட் இருந்தது.

கதை நன்றாக அமைந்திருக்கிறது. உண்மையில் கடைசியில் க்ளைமாக்ஸில் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சியை நான் ஊகித்திருக்கவேயில்லை. என்னைப் புரட்டிப்போட்டது அங்கே தான். அதற்கு நிச்சயம் லஹே ரஹோ முன்னா பாய் தான் காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்த பாதிப்பு இந்தப்படத்தில் நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன். படத்தின் கதை பற்றி பேச விருப்பமில்லை, ஆட்டத்தோடு பாடல்கள் இல்லை, ஐட்டம் நம்பர்கள் இல்லை, தமிழில் இந்த அளவிற்கு நிச்சயம் துணிந்து பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம். ஹாலிவுட் போல் படத்தின் இடையில் காட்சிகளுக்கு பின்னணியாக பாடல்கள் உண்டு, ஹாலிவுட்டிலிருந்து வித்தியாசம் என்னவென்றால் கொஞ்சம் சவுண்ட் கூட இருக்கிறது அஷ்டே.

ராம் கோபால் வர்மா இன்னொரு அருமையான படம் கொடுத்திருக்கிறார். அமிதாப் பச்சன் பற்றி, 'கபி அல்விதா நா கெய்க்னா' படம் பற்றி எழுதியபொழுது எழுதியது தான் நினைவில் வருகிறது, அவருடைய Screen presence அருமையாக இருக்கிறது. மற்றபடிக்கு வேறு என்ன சொல்ல, படத்தில் ஒரு பெரிய தூண் அமிதாப் பச்சன். நிச்சயம் எல்லோரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான். இந்தி தெரியணும் என்பது ஒரு டிஸ்கிதானென்றாலும் கொஞ்சம் தெரிந்தவர்களும் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In புகைப்படம்

என்ன ட்ரெஸ் போடாம ஃபோட்டோ எடுக்கப்போறேனா?

புகைப்படம் எடுக்கும் அன்பர்களுக்கு அவர்களுடைய ஒரு கனவுத் திட்டமாய் "மேற்படி" புகைப்படம் எடுக்கும் எண்ணம் இருக்குமாயிருக்கும். சமீபத்தில் கொல்லிமலை சென்றிருந்த பொழுது கூட இதைப்பற்றிய பேச்சு வந்தது நினைவில் இருக்கிறது. :)

சமீபத்தில் மைசூர் போகலாம் என்ற திட்டம் தீட்டியதும் நண்பர்களாய் ரங்கன்திட்டு என்றொரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது அங்கே நீ ஏன் அங்கே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கேட்டனர். நான் வேடந்தாங்கலையே பார்த்தவன் என்கிற மமதையில் ம்ம்ம் சரிசரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

மைசூர் சென்ற பொழுது ரங்கன் திட்டுவிற்கும் சென்றிருந்தேன், வேடந்தாங்கலை ஒப்பிட பறவைகள் குறைவு தான் என்றாலும் வகைகளுக்கும் பறவைகளுக்கு நிச்சயமாய்க் குறைவில்லை ரங்கன் திட்டுவில். அதைவிடவும் முக்கியமான விஷயம் போட்டிங் உண்டு, போட் ஒன்றை எடுத்துக் கொண்டு நீங்கள் பறவைகளுக்கு அருகில் சென்று பார்த்துவிட்டு வரலாம். 300 ரூபாய் கொடுத்தால் இன்னும் நிறைய தூரம் அழைத்துச் சென்று அமைதியாக புகைப்படம் எடுத்துவிட்டு வரமுடியும் என்றும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதையும் ஒரு முறை செய்து பார்க்க உத்தேசம் கைவசம் இருக்கிறது.

இப்போதைக்கு அங்கே எடுத்த படங்கள் சில.

Bird

Bird

Bird

Bird

Bird

m1__IMG_7375

Bird

PS1:பறவைகள் மேல் க்ளிக்கினால் பறந்து போய்டாது பெரிதாகத் தெரியும்

PS2:பறவைகள் எதுவும் ட்ரெஸ் போட்டிருப்பதாகத் தெரியவில்லை

PS3:கொல்லிமலையில் பேசியது விலங்குகளைப்(மனிதன் தவிர்த்த :)) பற்றி

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In தமிழ் இணைய அரசியல்

ரவிசங்கரின் அரசியல்

ரவிசங்கர் அண்ணாச்சி தன்னை 'விக்கிபீடியாவின் கொபசெ'வாக நினைத்துக் கொள்வதில் பெரிய பிரச்சனையில்லை. சொல்லப்போனால் இணைய உலகில் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகளைப் பரப்புவதற்கான செயலாளர் ஒரு அமைந்தது கூட நல்லதற்கே. இப்படி கொள்கைகளை பரப்பும் நோக்கில் அவர் எழுதி வருவதும் எல்லோருக்கும்(!?) தெரிந்தேயிருக்கும். அவருடைய கடைசி பதிவில், தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்? அவர் எழுதியிருப்பது அப்படித்தான்.

சொல்லப்போனால் பாராட்டப்படவேண்டியது தான் அவருடைய பதிவில் இருக்கும் 90% பகுதிகள். ஆனால் சைக்கிள் கேப்பில் அவர் செய்யும் அரசியல் தான் இந்தப் பதிவை எழுத வைத்தது. அது 'தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்' என்று சொல்லிவிட்டு அதில் "மாற்று"வையும் "சற்றுமுன்"னையும் இணைத்துப் போட்டிருக்கிறார்.

எனக்கு உண்மையிலேயே தமிழ்விக்கிபீடியா, தமிழ் விக்கிசினரி, நூலகம் போன்ற திட்டங்களுக்கும் மாற்று, சற்றுமுன்னிற்கும் இருக்கும் ஒற்றுமை தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யும் எதையுமே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்" என்று சொல்லிவிட முடியுமா? பிறகு வவாச, பபாச எல்லாம் தங்களை "தன்னார்வத் தமிழ் இணையத் திட்ட"த்தில் சேர்க்கவில்லை என்று பிரச்சனை செய்ய மாட்டார்களா?(வவாச, பபாச பற்றி எழுதியது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே!)

மாற்றுவிலும், சற்றுமுன்னிலும் ரவிசங்கரின் பங்களிப்பு எப்படி தமிழ் விக்கியிலும், இன்னபிற திட்டங்களிலும் இருக்கிறதோ அப்படி இருக்கிறது. அதனையே ஒரேயொரு காரணமாகக் கொண்டு தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம் வகையறாவில் மாற்றுவையும் சற்றுமுன்னையும் கொண்டுவந்துவிடமுடியுமா? இல்லை ரவிசங்கருக்கு உண்மையிலேயே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு" ஆன அர்த்தம் புரியலையா?

அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அன்பு அண்ணை 'கட்டற்ற சுதந்திர'த்திற்கு பெருமதிப்பு அளிப்பவர் என்று இரண்டு மூன்று முறை பட்டுத் தெரிந்து கொண்டதால் இங்கேயும் இருக்கட்டும் என்று அதை பதிந்து வைக்கிறேன்.

--------------------//தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் //

இதில் மாற்றுவையும், சற்றுமுன்னையும் இணைப்பது சரியா?

தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்கிசனரி, விக்கி நூல்கள், மதுரைத் திட்டத்துடன் மாற்றுவையும் சற்றுமுன்னையும் இணைக்க முடியுமா?

//மதுரைத் திட்டம் < 10
தமிழ் விக்கிப்பீடியா = 20
தமிழ் விக்சனரி = 6
தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி செய்தி = 0
தமிழ் விக்கி மூலம் = 1
நூலகம் திட்டம் < 10 ?
மாற்று! = 6
சற்றுமுன்… = 5
தமிழா!< 10// ----------------------

PS: ரவிசங்கர் தன் பதிவில் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதற்காக இந்தப் பதிவு கிடையாது.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In Only ஜல்லிஸ் சினிமா புகைப்படம் பெங்களூர்

பெங்களூர் தேர்தல் சீதோஷணநிலை மரங்கள் IPL Chennai Super Kings திரைப்படங்கள் புகைப்படம் கொல்லிமலை

தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் பெங்களூரில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, No Poster, No பொதுக்கூட்டம்(பெங்களூருக்குள்?!), No Sound, No disturbance. கூட வேலை செய்யும் மக்கள் பொதுவாக அரசியல் பேசுவதில்லை, நானாய்ப் போயும் பேசுவதில்லை. கௌடா குடும்பத்தின் மீது கோபமாகயிருக்கிறார்கள் அது மட்டும் தெரிகிறது. என் கம்பெனியில் என் ப்ரொஜக்டில் 10 ல் 8 பேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். சும்மானாச்சுக்கும் "IT Professional's" ஓட்டு போடமாட்டாங்கன்னு சொல்றது வெறும் புரளி.

10, 15 வருடங்களுக்கு முன்பிருந்த பெங்களூர் என்பது இப்பொழுது இல்லை என்ற சொல்லாடல் இப்பொழுது பெரும் க்ளிஷே ஆகிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் எல்லோரும் இதைப் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை வந்திருக்கிறேன், நிச்சயம் பெங்களூரின் சீதோஷணநிலை மாறிவிட்டதுதான். சின்னம்மை இங்கே கொஞ்சம் போட ஆரம்பித்திருக்கிறது, இளநீர் சாப்பிடவேண்டிய கட்டாயம் இங்கேயும் இருக்கிறது.

முன்னமே எழுதணும் என்று நினைத்திருந்தேன், பெங்களூரில் சாலையோரத்தில், சாலை நடுவில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டியாகிவிட்டது. மடிவாலாவில் இருந்து ஆலமரம் அடியோடு களையப்பட்டது. அதைப் போலவே இந்திராநகர் CMH சாலையில் இருந்த மரங்களும். மொட்டையாக ரோடுகள் பெங்களூரின் தனித்தன்மை இல்லாமல் போனது போல் இருக்கிறது. மடிவாலாவை நான் அத்தனை உபயோகிப்பதில்லை என்பதால் அதுபற்றி தெரியாவிட்டாலும், இந்திராநகர் CMH சாலை தன் தனித்தன்மையை இழந்துவிட்டதை நிச்சயம் உணர்கிறேன்.

IPL பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன் இப்பொழுது சற்று மாற்றிக் கொண்டிருக்கிறேன், ஷேன் வார்னேவை ஆஸ்திரேலிய காப்டனாக ஆக்காதது என்னை வருத்தப்படுத்தியதுண்டு. ஆனால் பான்டிங் சில மாதத்தில் எல்லாம் காப்டனுக்கான முழுத்தகுதியும் உண்டென்று நிரூபித்துக் கொண்டவர். இப்பொழுது ராஜஸ்தான் ராயல் அணிக்காக தலைமைப் பொறுப்பில் ஷேன் வார்ன் பிரம்மாதப்படுத்தும் பொழுது சந்தோஷமாகயிருக்கிறது.

ஹைடனுக்காகவும் ஹஸ்ஸிக்காவும் சப்போர்ட் செய்யத் தொடங்கி இப்பொழுது அவர்கள் இருவரும் இல்லாத பொழுதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சப்போர்ட் செய்யத் தொடங்கியிருக்கிறேன். IPLல் மட்டமான பௌலிங் அட்டாக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் உடையது தான் என்று நினைக்கிறேன். ஸ்பெஷலிஸ்ட் பாஸ்ட் பௌலர் இல்லாத அணியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் இருக்கிறது. (மகாய'ன்' கடைசி மாட்சில் ஹார்ட்ரிக் எடுப்பதற்கு முன் எழுதியது.)

"Then she found me" என்றொரு நகைச்சுவை - சென்ட்டி படம் பார்த்தேன். Adoption பற்றிய சீரியஸ் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நகைச்சுவையுணர்வோடு, புன்னகையுடனே படம் முழுவதும் பார்க்க வைத்திருக்கிறார்கள். Adoption எடுப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற காரணத்தால், படத்தில் அந்தப் பெண் Adoption எடுப்பதை மறுக்கும் ஒவ்வொரு முறையும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

"Scent of a Woman" படம் பார்த்தேன், Al Pacino பற்றி என்ன சொல்ல, தேர்ந்த நடிகன் என்பதை இன்னொரு முறை மெய்ப்பித்திருக்கிறார். இந்தப் படத்தில் Charlesற்கு வரும் பிரச்சனை போலவே எனக்கும் ஒரு பிரச்சனை கல்லூரிக் காலத்தில் வந்தது, கடைசியில் நானும் அவரை(Charles) மாதிரியே சொல்லாமல் விட்டதால்(நம்புக்கப்பா!) கடைசியில் பிரச்சனை செய்த மாணவர்கள் நான் தான் செய்ததாக ஒரு 'கதை' சொல்ல, ஏற்கனவே இருந்த என் Image நான் செய்திருக்க முடியும் என்று அவர்களை நம்பவைக்க, Apology லெட்டர் கொடுத்திருந்தேன். அது சட்டென்று நினைவில் வந்தது. இந்தப் படம் பார்த்ததும். கொடுமை என்னன்னா அந்தப் பிரச்சனையைச் செய்தது ஒரு Pasterன் மகன் என்பதால் மறுபேச்சே இல்லாமல் அவன் சொன்னதை நம்பினார்கள் :(. Personality does matters என்பது அந்தப் பிரச்சனையில் பொழுது தெரிய வந்தது. அதன் காரணமாக என் உருவத்தை/செயல்களை/எழுத்தை வைத்து என்னை தவறாக மதிப்பிடுபவர்களை நான் பிற்காலங்களில் எதிரியாக பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் இயல்பில் எங்க பிரின்ஸி ரொம்ப நல்லவர். :)

இம்சை அரசியின் கல்யாணத்தை ஒட்டி, திட்டமிட்டு கொல்லிமலைக்குச் சென்றிருந்தோம். வழமையான நண்பர்களுடன் புதிதாகச் சில நண்பர்களையும் சந்தித்திருந்தேன், மகிழ்ச்சியான பயண அனுபவம். 'இருள்வ மௌத்திகம்' புத்தகம் எப்படியோ(!?) என் பையில் வந்திருக்க அதைப் பார்த்த நண்பர்களிடம் ஒரு 'பெட்' கட்டியிருந்தேன். அதில் இருக்கும் ஒரு பக்கத்தை படித்து பின்னர் விளக்கம் சொன்னால் 1000 ரூபாய் தருவதாக, ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூட பெட் கட்டியிருக்கலாம். ஆனால் ஒரு இயல்புணர்ச்சியை வரவைப்பதற்காக 1000 ரூபாய்க்கான பெட் கட்டினேன். :) படித்துவிட்டு தலைசுற்றி கீழே விழாதது ஒன்று தான் குறை. கொல்லிமலையில் முக்கிய அருவிக்கு செல்வதற்கான நேரம் கழித்துச் சென்றதால் பக்கத்தில் இருந்த குட்டி அருவிக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அப்படியே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தோம்.

கொல்லி மலை அருவியில் நான் எடுத்த ஒரு புகைப்படம்.

Falls

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் நட்சத்திரம்

Legends : Fidel Castro

வாழ்க்கையில் நமக்கு சிலரை பிடித்துவிடும் ஏன்னெல்லாம் தெரியாது. அவரைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளச் சொல்லும். அதுபோல் சில ஆட்கள் எனக்கும் உண்டு. அதில் மிகக்குறிப்பிட்ட ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சந்தோஷப்படுகிறேன். இவரை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். சிலருக்கு என்னை விட மேலாய், எனக்கு இந்தாளால மட்டும் இந்த வயசிலேயும் இவ்வளவு எதிர்ப்புக்களைத்தாண்டி இருக்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கும்.

அவர், அக்குனியோண்டு குட்டி நாடான கியூபாவில் உட்கார்ந்துக்கிட்டு உலக போலீஸ்காரனுக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ. தலைவர் கருணாநிதி கூட தான் மிகவும் ஆசைப்பட்டு பார்க்கமுடியாமல் இருக்கும் நபர் என்று சொல்லியிருந்தார். எனக்கு கம்யூனிசம் தெரியாது. கொஞ்சமே கொஞ்சம் படித்தது கூட கதைகளின் வழியாகத்தான்.(இவரும் கம்யூனிஸ்ட் கிடையாது அது வேற விஷயம் பின்னாடி சொல்றேன்.)ரெவல்யூஷன், சுதந்திரப்போராட்டம் இதிலெல்லாம் பூந்து பொறப்படுற ஆளும் கிடையாது நான் ஆனாலும் இவரை பிடித்திருந்தது, இருக்கிறது, இருக்குமென்று நினைக்கிறேன்.

ஆனாளப்பட்ட அமேரிக்காவால வியட்நாமில் சாதிக்க முடியாததை. 1990 களுக்கும் முன்னர் இருந்த பலமான சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தானில் சாதிக்க முடியாதை சாதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரைக் கொல்வதற்கு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கையை சொன்னால் யாராலும் நம்பவேமுடியாதது. இதைப்பற்றியே சில கதைகளைத்தனியாக கொண்டவர். அதாவது இவரைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இவரையே காதலிக்கும் அளவிற்கு கொண்டுவரப்பட்டார் என்பது போன்ற அதிசயமான கட்டுக்கதைகள் இவரைப்பற்றி அதிகம்.



காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பிடல் அலக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ், பிறந்தது, ஆகஸ்ட் 13, 1926. அதுவரை க்யூபாவை ஆண்டுவந்த பட்டீஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறிய, 1959ல் இவர் நடத்திய புகழ்பெற்ற 26th of July Movement, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றாலும்.

1947களில் இவர் பார்ட்டி ஆப் கியூபன் பீப்பிளில் சேர்ந்ததில் இருந்து பல இடங்களில் பொதுவாக அறியப்பட்ட மனிதராகத்தான் இருந்து வந்தார். ஜூலை 26, 1953ல் ஒரு சந்தர்ப்பத்தில், பாட்டிஸ்டாவின் ஆர்மியிடம் சிக்கிக்கொண்ட காஸ்ட்ரோ, அந்த ஆர்மியில் இருந்த இவருடைய கல்லூரி நண்பரால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார். இது நடந்த அதே ஆண்டு தான் காஸ்ட்ரோ தன்னுடைய மிகப்பிரபலமான சொற்பொழிவான La historia me absolveráவை நிகழ்த்தியிருந்தார். இதில் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி தொடரப்போகும் தன்னுடைய அரசியல் வியூகத்தை தெரிவிக்க, பாட்டிஸ்டா அரசால் 15 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் அதாவது 1953ல் சிறையில் இருந்து வெளிவந்தவர் மெக்ஸிகோவில் அடைக்கலம் புகுந்தார்.

இந்த இரண்டாண்டு சிறை வாழ்க்கையில் தான் நான் மேலே "நம்பமுடியாதது" என்று சொல்லியிருந்த இவரைக் கொல்வதற்கான 600 முயற்சிகள் நடத்தப்பட்டன(அப்படியாக நம்பப்படுகிறது.) இது கொஞ்சம் புகழ்ச்சிக்காக மிகப்படுத்தப்பட்ட நம்பராக இருந்தாலும் முயற்சிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறைவானது கிடையாது. அத்துனையிலும் இருந்து தப்பித்து தான் காஸ்ட்ரோ சிறையில் இருந்து வெளியானது.



மெக்ஸிகோவில் தான் சொல்லப்போனால் கியூபாவின் சுதந்திரப்போராட்டத்தின் முக்கியப்பகுதி நிகழ்ந்தது. அதில் மிகவும் முக்கியமானது எர்நெஸ்டோ 'செ' குவாரா என்னும் மருத்துவம் படித்த போராளியை காஸ்ட்ரோ சந்திக்கும் நிகழ்வு. அது மட்டுமல்லாமல், காஸ்ட்ரோவின் ஆட்களுக்கு போர்ப்பயிற்ச்சியும் இங்கே தான் தரப்பட்டது. ஸ்பானிய சிவில் போரின் போராளிகளில் முக்கியமானவரான அல்பெர்ட்டோ பாயோ, தான் அந்த பயிற்சியை முன்னிருந்து அளித்தவர் இவர் பிறப்பால் ஒரு கியூபன் என்பது முக்கியமானது.

இதன் பிறகு நடந்த உள்நாட்டுப்போரின் பொழுது, தன்னுடைய தளபதியே காஸ்ட்ரோவின் பக்கம் சென்றுவிட்ட காரணத்தினால் பாட்டிஸ்டா கியூபாவில் இருந்து வெளியேறினார். அப்பொழுத்து தொடங்கப்பட்டது கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி இன்று வரை நீடித்து வருகிறது. இது அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.

நான் சொல்ல வந்து இரண்டு விஷயங்கள், உலக வரலாற்றில் மிகப்பிரபலமான, Cuban Missile Crisis, Bay of Pigs பற்றி கொஞ்சம்.

முதலாவது ஆண்டுக்கணக்கின் படி, பே ஆப் பிக்ஸ் இன்வேஷன். ஒன்றுமில்லை அத்தாம் பெரிய அமேரிக்கா, கியூபாவை ஆக்கிரமிக்க நடந்திய ஒரு முயற்சிதான் இது. ஒன்றுமில்லை, காஸ்ட்ரோ உண்மையில் சொல்லவேண்டுமானல் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அவர் சோவியத் யூனியனின் தயவை பெற வேண்டி அப்படியொரு உருவகத்தை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட சிந்தாந்தப்பிரச்சனையில் செகுவாரா காஸ்ட்ரோவை விட்டு பிரியும் நிலை வந்தது. பிரிந்த பொழுது அவர் காஸ்ட்ரோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் பிரபலமானது. 'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.

இப்படியாக அமேரிக்கா உலகமெங்கிலும் எந்த நாடும் கம்யூனிச நாடாக இருக்கக்கூடாது என்று ஒற்றை காலில் நின்ற பொழுது அமைப்பின் படி அமேரிக்காவின் காலின் கீழ் இருக்கும் ஒரு நாடு கம்யூனிச முகம் கொண்டது பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதனால் காஸ்ட்ரோவை நிர்மூலமாக்கும் எண்ணத்தில் ஏப்ரல் 15, 1961ல் ஒரு பக்கம் A-26 குண்டுமழை பொழிய அமேரிக்க சிஐஏவால் பணமும் பயிற்சியும் கொடுக்கப்பட்ட, கியூபாவின் ஏறக்குறைய 1500 மக்கள் பே ஆப் பிக்ஸ்ஸில் இறங்கினர். அதாவது காஸ்ட்ரோவிற்கு எதிரான இந்த மக்களைக்கொண்டு ஒரு உள்நாட்டுக்குழப்பத்தை விழைவித்து அதற்கு ஆதரவு தரும்(என்று அமேரிக்கா நினைத்த) கியூபாவின் மக்களைக்கொண்டு காஸ்ட்ரோவை நீக்கிவிடலாம் என அமேரிக்கா கனவு கண்டது. ஆனால் கடைசி நிமிடம் கென்னடி இந்த இன்வேஷனுக்கான தன்னுடைய ஆதரவை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கிக்கொள்ள இந்த உள்நாட்டுக்குழப்பம் பிசுபிசுத்துப்போனது.

இந்த சமயத்தில் கியூபாவின் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அமேரிக்க இராணுவவீரர்களை, கியூபா மருத்து உதவி வாங்கிக்கொண்டு விடுவித்ததாக எங்கேயோ படித்த நினைவு இதை படிக்கும் யாராவது சரிசெய்தால் சந்தோஷம். இப்படியாக தோல்வியில் முடிந்துபோன இந்த குழப்பத்தால், காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் அன்று முதல் கியூபா ஒரு கம்யூனிச நாடென்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

இதன் பிறகு நடந்தது இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு, அது மூன்றாம் உலகப்போரில் முடியாமல் போனதில் பலருக்கும் ஆச்சர்யமே. அக்டோபர் 22, 1962ல் அமேரிக்க பிரஸிடெண்ட் கென்னடி வெளிப்படையாக, ரஷ்யா கியூபாவில் தன்னுடைய குறைந்த தொலைவு செல்லும் நியூக்ளியர் மிஸைல்களை குவித்திருக்கிறது என்று சொன்னார். அமேரிக்காவின் ப்ளோரிடாவிற்கு கிட்டத்தட்ட 145 கிமீ, நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்யாவின் நியூக்ளியர் ஏவுகணைகள் அன்று உலகத்தின் மிகப்பெரிய பேச்சாக இருந்தது. அமேரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான கோல்ட் வார் உச்சத்தில் இருந்த சமயம் அது.

கென்னடி, அமேரிக்காவின் மீதோ இல்லை இலத்தீன் அமேரிக்கா நாடுகளின் மீதோ ஏவுகணை வீசப்பட்டால் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னதிலிருந்து இன்னும் சூடுபிடித்தது. அமேரிக்கா கியூபாவை சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஸ்பை விமானம், கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானியும் கொல்லப்பட, அதன் உச்சத்தை அடைந்தது.

கியூபாவை ஒழித்துக்கட்டிவிடும் ஆத்திரத்துடன் வந்த அமேரிக்க அமேரிக்க கப்பல்களை எதிர்கொள்ள ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை அங்கே அனுப்பியது. சொல்லப்போனால் இதுதான் இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டம். உலகமே அடுத்த உலகப்போர் தொடங்கப்படுமோ என்ற பயத்தில் இருந்த சமயம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ ரஷ்யா அந்த சமயத்தில் பின்வாங்கியது, கியூபாவின் மீது படையெடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நியூக்ளியர் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவிக்க இந்த பிரச்சனை உலகப்போராக மாறாமல் காப்பாற்றப்பட்டது. இதில் காஸ்ட்ரோவிற்கு ரஷ்யாவின் மீது கோபம் இருந்தாலும் மறுக்கமுடியவில்லை. இப்படியாக உலகப்போலீஸ்காரனுக்கு ஒரு காலத்தில் பெரும் தலைவலியாக இருந்த கியூபா இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.

ரஷ்யாவின் பண உதவி கிடைத்துக்கொண்டிருந்ததால் ஒருவாறு சமாளித்துவந்த, கியூபா கடைசியில் 1990களில் ரஷ்யாவும் பிளவுபட்டுப்போக, கஷ்டம்தான் படுகிறது தற்பொழுது. இந்த நிலையில் காஸ்ட்ரோவின் அரசியலை விமர்சிக்கும் நிறைய பேர் இன்றளவும் அதிகமாகவே இருக்கிறார்கள். அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.

அதேபோல் அங்கோலா, எத்தியோப்பியா, நிக்காராகுவே போன்ற நாடுகளுக்கு கியூபாவின் படைகளை அனுப்பி அங்கே விடுதலைபோரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவி செய்து, அமேரிக்காவால் வியட்நாமில் செய்ய முடியாததை, 1990களுக்கு முன்பிருந்த ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாததை காஸ்ட்ரோ செய்தார்.

இதன் காரணமாகத்தான் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திரம், விடுதலைப்போருக்கு கியூபாவின் பங்கு மிக அதிகமானது என்று குறிப்பிட்டிருந்தார். என்ன இருந்தாலும் தனியொரு மனித ஆளுமையாக இன்று வரை அமேரிக்காவின் அருகிலேயே இருந்து கொண்டும் அமெரிக்காவிற்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் பிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ.

ஒரிஜினல் தலைப்பு - நட்சத்திரம் - இந்த ஆளைப்பற்றி கொஞ்சம் ஜல்லி
மீள்பதிவிற்காக மாற்றியிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In ஜான் லெனன்

Legends: John Lennon (The Beatles)

“இசை எங்கேர்ந்து பிறக்குது தெரியுமா?” கேட்டதும் ஒரு கையை தூக்கி “எனக்கு தெரியும் சார்...” சொல்லிட்டு ஒரு மாதிரியா அசடு வழிஞ்சிக்கிட்டே, “ஆர்மோனியப் பெட்டியிலேர்ந்து சார்...” வடிவேலு சொல்வது போல் ஒரு காமடிக் காட்சி இருக்கும் கிங் திரைப்படத்தில்.

நான் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவன் கிடையாது. வடிவேலு ஆர்மோனியம்னு சொன்னதை வேண்டுமானால் நான் கீபோர்ட்ன்னோ இல்லை பியானோன்னோ சொல்வேன் அவ்வளவுதான் எனக்கு இசைக்குமான தொடர்பு இவ்வளவுதான். பாடல்களை ரசிக்கப் பிடிக்கும் அதற்கு மேல் ஆராய்ச்சியில் குதிக்கும் அளவிற்கெல்லாம் ஒன்றும் கிடையாது மேல் பக்கத்தில். எங்கள் குடும்பத்தில் ஆண்கள் தபேலாவோ இல்லை வயலினோ கற்றுக்கொள்ளும் பழக்கம் இருந்தாலும். நான் அந்தப்பக்கம் கூட போனதில்லை.

ஆரம்ப காலத்தில் இன்னும் மோசம் பாடல்களே பிடிக்காத ஒரு நிலையிருந்ததது. பின்னர் வந்த முதல் காதல் என்னில் ஏற்படுத்திய பிரளயத்தில் பாடல்களில் மேல் விருப்பம் வந்தது. அதற்கு பின் அது கொஞ்சம் கொஞ்சமாக காதலாகத் தொடங்கியிருக்கிறது.



யார் இந்த ஜான் லெனன். ஒரு அமேரிக்க ஜனாதிபதி இவரை கொல்லச் சொன்னார் என்று ஒரு கன்ஸ்பியரஸி தியரி இன்றும் உள்ளது.(யார் அவர் எனக்கேட்பவர்கள் கடைசி வரை பதிவைப் படிக்கும் தண்டனை.)

இந்த ஜான் லெனனைப் பற்றி உங்களில் பலருக்கு என்னை விட அதிகம் தெரிந்திருக்கும். பீட்டில்ஸ் குழுவின் இறந்தகாலத்தில் பிறந்த எனக்கு தெரிந்ததை விட அதிகமாக தமிழ்மணத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும்.

சமீபத்தில் திருமதி. சுஜாதாவின் பேட்டியை சிநேகிதியில் படிக்க நேர்ந்தது. அதில் அவர் ஜான் லெனன் என்று கூறிப்பிடாவிட்டாலும். பீட்டில்ஸ் பற்றி கூறியிருந்தார். மேலும் சுஜாதாவின் கிதார் ஆசையைப் பற்றியும். என்னிடம் ஒரு அக்வெஸ்டிக் கிதார் உண்டு(மாமாவினுடையது) அதில் சி, டி கார்ட்களைக்கூட சரியாகக் பிடிக்கத் தெரியாது. நானும் கிதாரை பின்னால் கட்டிக்கொண்டு கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று, ‘ஓ நெஞ்சே நீ தான்...' பாடலை மட்டும் தப்பு தப்பா வாசிப்பேன். சரி விஷயத்திற்கு வருவோம்.

அமேரிக்க அரசாங்கம் இவரை கவனிப்பதற்காக ஒரு தனி FBI குழுவை அமைத்திருந்தது, இவர் மேடைகளில் சொல்லும் பாடும் ஒவ்வொரு வார்த்தைகளும் குறிப்பெடுக்கப் பட்டிருந்தது. ஒரு பெரிய அரசாங்கமே இவரை எப்படி அமேரிக்காவிலிருந்து வெளியேற்றுவது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் ஒரு பயங்கரவாதியா, தீவிரவாதியா யார் இவர் எதற்காக இவரை அமேரிக்க அரசாங்கம் தனியாக குழு அமைத்து கவனிக்க வேண்டும்.

அது ஒரு பெரிய கதை, எவ்வளவு பெரியதென்றால், அமேரிக்காவின் வியட்நாம் போர் பற்றி தனியாக பதிவெழுதும் அளவிற்கு பெரிதானது. அதே போல் பீட்டில்ஸ் உடைய கதையும் மிகவும் பெரிதானது. ஆனால் அதையெல்லாம் குறிப்பிட்டு பதிவை திசைதிருப்ப விரும்பாததால், சில வரிகளில் ஜான் வின்சென்ட் ஓனோ லெனான் பிறந்தது 9 அக்டோபர் 1940 இங்கிலாந்தில், எல்விஸ் பிரஸ்லி, சொக் பெர்ரி போன்றவர்களில் ராக் அண்ட் ரோல் பாணி இசையில் கவரப்பட்டு ஜானும் ராக் அண்ட் ரோல் இசைப் பயிற்சியாளராக ஆனார்.

இவரும் இவருடைய நண்பர்கள், ஜார்ஜ் ஹாரிஸன், பவுல் மக்கார்டினி, ரிங்கோ ஸ்டர் இணைந்து உருவாக்கிய த பீட்டில்ஸ் இசை வரலாற்றில் ஏகப்பட்ட சாதனைகளை செய்திருக்கிறது. ஏகப்பட்ட சாதனைகளை. ஜானை தங்கள் தலைவனாக பார்த்த மக்களின் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். பலருக்கு அவருடைய இமேஜின் ஆல்பம் தேசியகீதத்தை விட விருப்பமுடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இமேஜின் பாடல் தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படுவது. இந்த த பீட்டில்ஸ் வெளியிட்ட பல ஆல்பங்கள் இன்றும் பல சாதனைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இனி முக்கியpபகுதிக்கு, ஜான் லெனன், அமேரிக்காவின் வியட்நாம் போரை எதிர்த்து தன்னுடைய கான்சர்ட்களில் பாடியும் பேசியும் வந்தார். சாதாரணமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று ஆரம்பிக்கப்பட்டோ, இல்லை இடையில் சொல்லப்பட்ட தனிநபர் தொலைபேசி உரையாடல்களை முழுவதுமாக பதிவு செய்து வைத்து விசாரிக்க, சுமார் ஏக்கர் கணக்கில் மெயின்ப்ரேம் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த அமேரிக்க அரசாங்கத்திற்கு,

ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞர்கள், அதுவும் எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை தன்வசப்படுத்தி, தன்னுடைய மயக்கும் பாடல்வரிகளால், குரலால் கவர்ந்து கொண்டிருந்த ஜான் லெனன் வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்ததும் எங்கேயோ பிடுங்கிக்கொண்டுவிட்டது. ஜான் லெனனை எப்படியாவது அமேரிக்காவிலிருந்து வெளியேற்றிவிட்டால் போதும் என நினைத்ததும் இதனால் தான். இடையில் ஜான் தனக்கு இங்கிலாந்து அரசகுடும்பத்தால் கொடுக்கப்பட்ட கவுரவ மரியாதையையும் திரும்ப அனுப்ப பற்றிக் கொண்டு எரியத்தொடங்கியது லெனன்னின் அமைதிக்கான வேள்வி.



தீயிலே நெய்விடுவதாய், ஜான் மற்றும் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட யோகோ ஓனோ இருவரும் ‘பெட் இன்’ என்ற அறப்போராட்டத்தை(?) ஆரம்பிக்க, ஏற்கனவே இவர்கள் திருமணம் செய்து கொண்டது உலகப்பிரசித்தமாக இருக்க இருவரும் அதை உபயோகித்து அமைதிக்கான முயற்சியில் இறங்க. அமேரிக்க அரசாங்கம் திணறியது. ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் குழுவையே ஜானை கண்காணிக்கப் பணித்தது.

மார்டின் லு\தர் கிங்கையே, தேசப்பாதுகாப்பின் விரோதியென்று சொன்ன அமேரிக்காவிற்கு, இங்கிலாந்தின் குடிமகனான, அமேரிக்காவில் கீரின் கார்ட் அப்ளை செய்திருக்கும், ஜானை தேசப்பாதுகாப்பின் விரோதியென்று முத்திரை குத்த நாளாகவில்லை. ஜானை அமேரிக்க அரசாங்கம் ‘அண்டர் ஸ்டாராங் ஸர்வைலன்ஸ்ஸில்’ வைத்திருந்தது. இந்த வார்த்தையை அப்படியே தர ஒரு விஷயம் இருக்கிறது. அது இப்படிப்பட்ட ஒரு வார்த்தையைத் தான் மார்டின் லூதர் கிங்கிற்கும் அமேரிக்க அரசாங்கம் சொல்லியிருந்தது. கடைசியில் என்ன நடந்தது?

மார்டின் லூதர் கிங், நான்கு புறமும் எப்பிஐ சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுதும் சுட்டுக்கொல்லப்பட்டார். இஸ்ரேலின் மொஸாட் மட்டுமல்ல அமேரிக்காவின் எப்பிஐ மற்றும் சிஐஏ வும் அரசியல் கொலைகளை சர்வசாதரணமாக செய்யவல்லதுதான். ஆனால் என்ன இஸ்ரேல் செய்தால் அவர்கள் தான் செய்தார்கள் என்று தெரிந்துவிடும். ஆனால் பெரியண்ணன் அதிலெல்லாம் கில்லாடி, ஜேஎப்கே, ஆர்எப்கே, மார்டின் லூதர்கிங், இப்படி கோலி மாறிய ஆட்கள் நிறைய பேர். ஜேஎப்கே தெரிந்திருக்கும் அது யார் ஆர்எப்கே, அது ராபர்ட் கென்னடி, கென்னடி குடும்பத்தின் அடுத்த வாரிசு, இவரையும் போட்டுத்தள்ள சொல்லியது அந்த ஜனாதிபதிதான் என்று ஒரு கான்ட்ரவர்ஸி இன்றும் அமேரிக்காவில் உண்டு. யார் அவர் அது கடைசியில்.

இப்படியாக அண்டர் ஸ்டார்ங் ஸர்வைலன்ஸ்ஸில்(Under strong surveillance) வைக்கப்பட்டிருந்த மார்டின் லூதர்கிங் போட்டுத்தள்ளப்பட்டார் என்றால் ஜானின் கதி, அதே கதிதான் அவரும் போட்டுத்தள்ளப்பட்டார், இவருக்கும் ஒரு மனோதத்துவ முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒருவனே கொலைகாரன். உலகத்தின் அமைதிக்காக சிந்தித்த பாடிய, ஒருவனை சுட்டுக்கொன்றனர். அந்த சமயத்தில் உலகமே இசை இறந்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டனர்.

இந்த ஆள் ஒரு பெரிய ஜீனியஸ், முன்னால் ‘Bed-in’ என்று ஒரு அய்ட்டம் சொல்லியிருந்தேன் அல்லவா, அது வேறுஒன்றுமில்லை. அப்பொழுதுதான் கல்யாணம் செய்துகொண்டிருந்த யோகோ ஒனோவும் ஜானும் தாங்கள் தேனிலவு கொண்டாடும் ஓட்டல் அறைக்குள் காலை ஒன்பதில் இருந்து மாலை ஒன்பது மணிவரை() பத்திரிக்கையாளர்களை விட்டு புரட்சி செய்தார்கள் எப்படி அமைதியைப் பேசி, அமைதிக்கான வாசகங்களை சுவற்றில் எழுதி வைத்திருந்து.



அப்பொழுது ஜான் இதையெல்லாம் பணத்திற்காக, புகழுக்காக செய்கிறார் என்று கூட ஒரு பரப்பப்பட்டது. ஆனால் ஜான் நினைத்தால் அந்த ஏழுநாட்கள் அவருக்கு கிடைத்த பப்ளிஸிட்டியை ஒரு பாடல் எழுதியும் அதை விட அதிக பணத்தையும் பப்ளிஸிட்டியையும் பெற்றிருக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இது ஒரு பக்கம் தான் நான் சொன்னது, ஜானின் இன்னொரு பக்கமும் இருக்கிறது ஆனால் அது இங்கே தேவையில்லாதது. என்னைப்பொறுத்தவரை.

ஜானின் புகழ்பெற்ற இமேஜின் பாடலை தமிழ்ப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவு முயன்றாலும் என்னால் அந்த ஆங்கில வரிகளில் உள்ளவற்றை அதே மாதிரியான தமிழில் சொல்ல முடியவில்லை. அதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இது அமைதிக்கான முயற்சிகளில் தேசியகீதமாக இன்றும் நிழைத்திருக்கிறது.



Imagine

Imagine there's no heaven, it's easy if you try,
No hell below us, above us only sky,
Imagine all the people, living for today.
Imagine there's no countries, it isn't hard to do,
Nothing to kill or die for, and no religion too,
Imagine all the people, living life in peace.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will be as one.

Imagine no possessions, I wonder if you can,
No need for greed or hunger, a brotherhood of man,
Imagine all the people, sharing all the world.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will live as one.

கடைசி விஷயம், அவரை கொல்லச்சொன்னதாக் சொல்லப்படும் அதிபர், இப்பொழுது இருப்பவரின் மூத்தவர். அவரே தான்...

Imagine Song (Real player)
en.wikipedia.com/john_lennon
en.wikipedia.com/the_beatles

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

Searching for Bobby Fischer



என்னைக்கவர்ந்த மற்றொரு அற்புதமான திரைப்படம், பாபி பிஷ்ஷருக்கான தேடல். (Searching for Bobby Fischer) பெரும்பாலானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும், சில மாதங்களுக்கு முன்னர் கூட அமேரிக்காவின் வலியுறுத்தலின் பெயரால் ஜப்பானில் கைது செய்யப்பட்டு பின்னர் தற்சமயம் ஐஸ்லாந்தின் வாழும் பாபி பிஷ்ஷர், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சதுரங்க வீரர்.(Former world chess champion & One and only American to win the FIDE World Chess Championship.) ஆனால் படம் இவரது பெயரை கொண்டிருந்தாலும் கதை இவரைப்பற்றியது இல்லை. பிஷ்ஷரைப்போலவே சிறுவயதிலேயே சதுரங்கத்தின் அத்துனை திறமைகளும் கைவரப்பெற்ற ஒரு சிறுவனைப்பற்றிய(Josh Waitzkin - Max Pomeranc) திரைப்படம் தான் இது.


பாபி பிஷ்ஷர்

ஒரு சிறுவன், அவனுடைய இணையில்லாத சதுரங்கத்திறமையை புரிந்து கொண்ட அவன் தந்தை(Fred Waitzkin - Joe Mantegna ), தன் மகனின் திறமையை புரிந்துகொண்டாலும் அது அவனுடைய வாழ்க்கையை பாதிக்குமோ என பயப்படும் அவன் அம்மா(Bonnie Waitzkin - Joan Allen), சிறுவனுடைய திறமையை சரியான வழியில் கொண்டுசெல்ல நினைக்கும் தந்தை, ஏற்பாடு செய்யும் பயிற்சியாளர்(Bruce Pandolfini - Ben Kingsley), அமேரிக்க வீதிகளில் சதுரங்கத்தின் இன்னொரு வகையான உத்தியை பயன்படுத்தி வேகமாக விளையாடும் சிறுவனின் ஆதரவாளர்(Vinnie - Laurence Fishburne). இவர்களைச் சுற்றி சூழழும் இந்தக் கதையை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பார் இயக்குநர்(written and directed by Steven Zaillian).

ஆரம்பத்தில் அந்த சிறுவனுடைய திறமையை, அவன் தந்தை நிறைய யோசித்து நகர்த்தும் ஒரு நகர்வின் பதில் நகர்வை இவன் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டோ இல்லை அந்த அடுக்கு மாடிகுடியிருப்பின் எல்லா இடங்களிலிருந்தும் கணக்கிட்டோ சொல்லும் வடிவத்தில் வெளிக்காட்டுவதிலாகட்டும், ஒரு போட்டியின் மிக ஆரம்பக்கட்டத்தின் பொழுது அவனது போட்டியாளரின் ஒரு நகர்த்தலை வைத்து அவனிடம் "நீ தோத்துட்ட" என்று மெதுவாய் சொல்லிவிட்டு பின்னர் அந்த போட்டியாளர் முழிக்க "ஆனால் உனக்கது தெரியாது" என சொல்லவதில் ஆகட்டும், ஒரு கட்டத்தில் பயிற்சியின் பொழுது தான் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பயிற்சியாளரின் நகர்விற்கு மெதுவாய் சதுரங்கக் கட்டங்களையும் காய்களையும் பார்த்து குழம்பி மெதுவாய் நகர்த்த அதைப் பார்த்த பயிற்சியாளர், அவனுக்கு உதவுவதாய் சொல்லிவிட்டு அத்தனை காய்களையும் கீழே தள்ளிவிட்டு இப்பொழுது சுலபமாய் இருக்குமே எனக் கேட்பதில் இருக்கும் உண்மையிலும் மிக அழகாய் படத்தைச் செதுக்கியிருப்பார் இயக்குநர்.

படத்தின் முக்கிய கட்டமே அவன் தான் தோற்றுவிடுவோமா என்ற பயத்திலேயே ஒரு பையனிடம்(Jonathan Poe - Michael Nirenberg) தோற்பதிலிருந்து சூடுபிடிக்கும். அவனுடைய அந்த காம்ப்ளக்சை மிக அழகாக படமாக்கியிருப்பார் இயக்குநர். அதே போல் அவனுக்கு பாரம்பரிய சதுரங்க முறை மட்டுமில்லாமல், பிலிட்ஸ்(Blitz) என அழைக்கப்படும் அதிவிரைவான சதுரங்க போட்டியில் இருக்கும் ஆர்வத்தால், அமேரிக்க தெருக்களில் விளையாடும் இது போன்ற நபர்களிடம் விளையாட ஆசைப்பட்டு பிறகு அவர்களிடம் கற்றுக்கொள்ளும் சில நெளிவு சுழிவுகளையும் ஆழமாக படமாக்கியிருப்பார் இயக்குநர். இடையிடையில் பாபி பிஷ்ஷரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அந்த சிறுவனின் பயிற்சியாளருக்கு பாபி பிஷ்ஷர் விளையாண்ட அத்துனை போட்டிகளின் நகர்த்தலும் அத்துப்பிடி என சொல்வதிலிருந்து, அடிக்கடி அந்தச் சிறுவனை பயிற்சியாளர் பாபி பிஷ்ஷருடம் ஒப்பு நோக்குவிலும் குறிப்பிடுவார்கள்.

இந்தப் படத்தின் முடிவும் ஒரு அழகான மாலை நேரத்தின் தூறல் விடும் காலத்தில் சூடாய் தேநீர் சாப்பிடுவதைப் போல அற்புதமாக இருக்கும். அந்தப் பையனைப் பார்த்தாலே தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு அந்த ஆண்டின் தலைசிறந்த வீரருக்கான போட்டியில் இறுதிப்போட்டியில் இருவரும் விளையாட நேரும், அந்தச் சமயத்தில் அவனுடைய இரண்டு பயிற்சியாளர்களிடமும் கற்றது எப்படி பயன்படுகிறது என தெளிவாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

அதாவது முதலில் அவனுடைய ஒரு தவறான நகர்த்தலால் தன் ராணியை தவற விடுவான் சிறுவன், ஆனால் கொஞ்சம் சோர்ந்த அவன், அதிவிரைவான பிலிட்ஸ் போட்டி அவன் விளையாடியிருந்த காரணத்தால் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாடுவதை காட்டுவதிலிருந்தும், இடையில் எதிராளியின் ராணியை வெட்டிவிட்டு இருவரும் சமநிலையில் இருக்கும் பொழுது அந்தப் பெண் நகர்த்தும் ஒரு நகர்த்தலால் அவன் தோற்றுவிடுவான் என இவனுக்கு முன்பே தெரிந்து கொள்வதில் இவனுடைய பயிற்சியாளரின் உதாரணத்தை பயன்படுத்துவதிலாகட்டும் மிக அற்புதமாக காட்டியிருப்பார் இயக்குநர். கடைசியில் அவன் தோற்றுவிடுவாள் எனத்தெரிந்ததும், இந்தப்போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள அவன் கேட்கும் அழகே அழகு. ஆனால் அந்தப்பெண் அதை ஒப்பாமல் விளையாடி தோற்பாள். முடிவில் அவனுடைய ஒரு நண்பனிடம் இருக்கும், தன்னிடமிருந்த அதே தோற்றுவிடுவோமென்ற காம்ப்ளெக்ஸை விரட்ட அவன் பேசுவதில் முடிப்பார் இயக்குநர்.

ஒரு அற்புதமான படம், கொஞ்சம் சென்டிமெண்ட், ஹாலிவுட் மசாலா தடவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இதுபோன்ற ஒரு படம் தமிழில் வருமா என இந்தப்படம் பார்த்ததிலிருந்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இனி இப்படியே சினிமாவை மட்டும் பேசிவிட்டு போகாமல் கொஞ்சம் ஆழமாக சதுரங்கத்தைப் பற்றி பார்ப்போம். இது அனைவருக்கும் தெரிந்த விளையாடிய ஒரு விளையாட்டு என்பதால் தற்சமயம் கணிணியில் இருக்கும் அதி நவீனமான சதுரங்க இயந்திரங்களைப்பற்றி பார்ப்போம். சின்ன சுய விளம்பரத்துடன்,

நான் லினக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டதும் உபயோகப்படுத்த தொடங்கியதும் சில தில்லுமுள்ளுகளை பண்ணத்தொடங்கினேன் அது, யாகூவிலோ இல்லை மற்ற இணையத்தில் கிடைக்கும் இடங்களிலோ சதுரங்கம் விளையாட நண்பர்களை அழைத்து இன்னொரு பக்கம் என் மடிக்கணிணியில் லினக்ஸில் நான், பிராஸஸரோடு விளையாடி, அடுத்த மூவை தெரிந்து பல நல்ல சதுரங்கம் விளையாடும் நண்பர்களை ஏமாற்றி வீழ்த்தியிருக்கிறேன். உங்களுக்கும் விருப்பமானால் முயற்சி செய்து பாருங்கள்.

இனி கணிணியில் சதுரங்கத்தைப்பற்றி,

முதன் முதலில் கம்ப்யூட்டர் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுமே, பிரபல பிரிட்டிஷ் கணித வல்லுநர், ஆலன் டியுரிங்(Alan Turing), அதைப் பயன்படுத்தி மனிதனை வெல்லவும் உலகவல்லுநரை வெல்லவும் சில சூத்திரங்களை கண்டுபிடித்தார். அதாவது முதன் முதலில் 1950-ல், கம்ப்யூட்டர் லாஸ் அலமோஸில் ஸயின்டிபிக் லெபாராட்டரியில்(Los Alamos Scientific Laboratory) வெளியிடப்பட்ட பொழுதிலிருந்து அதைப்பயன்படுத்தி ஆய்வாளர்கள் சதுரங்கம் விளையாட ப்ரோக்கிராம் எழுத தொடங்கிவிட்டனர்.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்ந்து வந்த இந்த ஆர்ட்பிஷியல் இன்டெலிஜன்ஸின்(Artificial Intelligence) முக்கிய நோக்கமே உலக வல்லுநரை(World Champion) வீழ்த்துவதாகத்தான் இருந்தது. இந்த சதுரங்கக்கணிணியை கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய சமுதாயமே இறங்கியிருந்தது, பல ஆயிரம் மாணவர்களின் ஒரு குறிக்கோளாக இருந்தது இந்தத் தொழில்நுட்பமே. அந்த நாளும் வந்தது,

மே மாதம் 11ம் நாள் 1997 3.30 மணிக்கு, ஐபிஎம்மின்
டீப் புளு IBM's Deep Blue என அழைக்கப்பட்ட மல்டி மில்லியன் டாலர் இயந்திரம், அப்போதய உலக வல்லுநரான கேரி காஸ்பரோவை(Garry Kasparov)(ஒரு வழியாக) ஆறு ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முறியடித்து, ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில் நுட்பத்தின் பல ஆண்டு கனவை நிறைவேற்றியது. ஆனால் ஐபிஎம் அந்த முயற்சியை தொடர்ந்து செய்யாமல் அதாவது அந்த டீப் புளுவின் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் அத்துடன் எங்கள் வேலை முடிந்தது எனக்கூறி அந்த டீப்புளுவையும் செயலிழக்க செய்துவிட்டது அதாவது தான் நிலவுக்கு சென்று திரும்பி வந்ததை வெளிப்படுத்தியைப்போல நிலவில் இருந்த பொழுது புகைப்படம் எடுத்துக்கொண்டதாக அந்த ஒரு வெற்றி.



ஆனால் இந்த முயற்சி இன்னமும் பிறரால் நடத்தப்படுகிறது, டீப்புளுவைப்போல டீப்ஜனியர், டீப் பிரிட்ஸ்(Deep Junior, Deep Fritz) வந்தாலும் கேரி காஸ்பரோவ் சொன்னது தான் நினைவில் வருகிறது, டீப்புளுவிடம் இருந்த ஒரு ஜீனியஸ்னஸ் இவற்றிடம் இல்லையென்பது, இதற்கு டீப்புளு மற்றவையைவிட 100 மடங்கு வேகமானது என்பது காரணமில்லையென்றும் கூறுகிறார் அவர். அதாவது வேகம் சதுரங்கத்தில் செய்யக்கூடியது எதுவும் இல்லை, கணித முறைகளில் எண்ணிக்கையில் அடக்கமுடியாத நகர்வுகளை தீர்மானிக்க வேண்டும் அந்த சதுரங்கக்கணிணி.

தற்சமயம் ஒரு கட்டுரையில் படித்தேன், கைவசம் இல்லாததால் சரியான தகவல் தரஇயலவில்லை, டீப்புளுவை விட வேகமாகவும், எண்ணிக்கையில் ஒப்பிடவே முடியாத எண்ணிக்கையில் அடுத்த நகர்வைப்பற்றி சிந்திக்கும் சதுரங்கக் கணிணிகள் தற்பொழுது புழக்கத்தில் உள்ளன. இந்தக் கட்டுரையை கேரி காஸ்பரோவ் சொல்லும் ஒரு கருத்துடன் முடிக்கிறேன் அதாவது, சதுரங்கமானது ஒரு அற்புதமான விளையாட்டு இதில் மனித மூளையையும் கணிணியின் திறமையையும் ஒப்பிட்டு நோக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது.

"What makes this new era so exciting is that there are many programs using different techniques that produce distinct styles. Deep Junior is as different from Deep Fritz as Kasparov is from Karpov. Chess offers the unique opportunity to match human brains and machines. We cannot do this with mathematics or literature; chess is a fascinating cognitive crossroads."

Mr. Kasparov, the world's top-ranked chess player, in The Wall Street Journal.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In புகைப்படம்

கொஞ்சம் வயநாட் படங்கள்

Phantom Rocks

Portrait

Bird

Muthanga Wild Life Santury

Karapuzha Dam

Praveen, Vishal, Shankar and Karthik

PS: இந்தப் பதிவு டெஸ்டிங்கிற்காக.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழர்கள் சோழர்

இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் கிருமி கண்ட சோழன் என்று ஒரு சோழன் குறிப்பிடப்படுவது வரலாற்று ஆதாரம் கிடையாது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் 'கதை'களிலும் சொல்லப்படுவது, சொல்லப்போனால் எப்படி 'கடவுளுக்கும்' அறிவியலுக்கும் எப்படி ஆகாதோ அப்படியே இந்த வகையறா 'கதைகளுக்கும்' வரலாற்றிற்கும் ஆகாது.

கல்கி பொன்னியின் செல்வனில், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்ற கற்பனைக் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்தும், ஆதித்த கரிகாலன் விஷயத்தில் ஏகப்பட்ட கற்பனைகளைக் கலந்துகட்டி சோழர் வரலாற்றைக் கவிழ்த்திருந்தார் என்பதைச் சொல்லி அலுத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் கல்கியின் தீவிர ஆதரவாளர்கள் வந்து அவர்களுக்கு கல்கியை மதிக்கிறேன் அதற்காக அவர் எழுதிய வரலாற்றுத் தவறுகளை சுட்டாமல் விடமுடியாது என்று டிஸ்க்ளெய்ம்பர் போட்டும் கை வலிக்கிறது.

சரி மேட்டருக்கு, கிருமி கண்ட சோழன் என்று 'மேற்சொன்ன கதைகள்' உள்ளிட்டு எதுவும் எந்தச் சோழனையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஒட்டக்கூத்தரின் 'குலோத்துங்கச் சோழன் உலா' வரி 76 - 78, இன்னும் தெளிவாக உள்ள 'இராஜராஜ சோழன்(இது முதலாம் இராஜராஜ சோழன் இல்லை) உலா' வரி 64 - 66, தக்கையாகப் பரணி செய்யுள் 777 என்று வந்தாலும் இவைகள் அனைத்தும் மிகவும் குறிப்பிட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று கூறுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த 'கிருமி கொண்ட சோழன்' முதலாம் குலோத்துங்க சோழன் தான் என்றே நிறைய பிற்காலக் கதைகள்(கோயிலொழுகு முதலியன) சொல்கின்றன. Life of Ramanuja என்ற எஸ்.கே. அய்யங்காரின் புத்தகம் குறிப்பிடுவதும் முதலாம் குலோத்துங்க சோழனையே. "சோழர் குடும்பம் அரசர்களாக இருந்து ஆட்சி செய்வது ஒழியட்டும்" என்று திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் பிரகடனம் செய்ததாக "திவ்யசூரி சரிதத்தில்" உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த "திவ்யசூரி சரிதமும்" "யதிராஜவைபவம்" உம் ராமானுஜர் வாழ்க்கையக் கூறும் பழைய நூல்கள்.

சாளுக்கிய சோழர்களை சோழர்களாக ஒப்புக்கொள்ளாமல் வைக்கும் பொழுது வரும் கடைசி சோழ மன்னர்களான வீர ராஜேந்திர சோழனையோ(இந்த மன்னன் இராஜகேசரி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டவன்) இல்லை அவனுக்குப் பின் வெகு சில காலம்(சொல்லப்போனால் சில வாரங்கள்) ஆண்ட ஆதி இராஜேந்திர சோழன் தான் இந்த 'கிருமி கண்ட சோழன்' என்றும் conspiracy theoryகள் உண்டு. ஆனால் என் வழி K.A. நீலகண்ட சாஸ்திரி வழி(தனியா வழியில் போக நானென்ன ரஜினிகாந்தா!) "எந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகள் சொல்லும் விஷயங்களை நிலைநாட்டுவதற்கில்லை"(சோழர்கள் முதல் பாகம் - நீலகண்ட சாஸ்திரி - பக்கம் 404)

வரலாறோ மன்னருடைய கல்வெட்டுக்களோ இந்தக் காலத்தில் (985 - 1170) வாழ்ந்த மன்னன் கிருமி கடிச்சி(ஹிஹி) இறந்ததாகச் சொல்லவில்லை. சரி அப்படியே சைவ - வைணவர் பிரச்சனையில் 'வைரஸ்' தாக்கம் ஏற்பட்டு 'முதலாம் குலோத்துங்கனுக்கு பிற்பட்ட' காலத்தில் நடைபெற்ற பிரச்சனையில் சைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வைணவர்களை எதிர்த்து அதனால் சிவபெருமானே(!) சாபம் கொடுத்து கிருமி பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாகச் சொல்லவில்லை. ரொம்பவும் லாஜிக்கலா யோசிச்சா அந்த குறிப்பிட்ட மன்னன் 'முதலாம் இராஜராஜ சோழன்' போலவோ 'முதலாம் இராஜேந்திர சோழன்' போலவோ சைவ மன்னனாக இருந்து எல்லா சமயங்களையும்(சைவம் வைணவம் சமணம் பௌத்தம் முதலியன...) ஆதரிக்காமல், வைணவர்களை 'ஒரு காட்டு காட்டியதால்' கோபப்பட்டு புலம்பியதாகவே கொள்ள முடியும் 'கிருமி கண்ட சோழன்' என்ற பதத்தை.இதற்கும் வரலாற்றிற்கும் சம்மந்தம் இல்லை

கமலஹாசன், வைணவர்களை ஆதரித்து சைவர்களை எதிர்ப்பதற்காக 'இராமானுஜ நம்பி' என்ற பெயரில் பாவம் அவர் நாத்தீகரா இருந்தும் முயல்வதாக நிருவ முயல்வதெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதே போல் அந்தக் காலத்தில் இருந்ததைப் போல் வைணவ-சைவ பிரச்சனை இப்பொழுது இல்லை என்று நம்ப வைக்க முயல்வதும். ஈஸ்வரோ ரக்ஷத் 'ஆண்டவன்' தான் உங்களை எல்லாம் காப்பாற்றணும். படம் 'ஹே ராமை'ப் போல கமர்ஷியல் பக்வாஸாக இல்லாமல் இருக்க எப்படி கே.எஸ்.ஆரின் உதவியை நம்பியிருக்கேனோ அதைப் போல் கமலஹாசன் படமாம 'ஹே ராம்' ஆக கமர்ஷியல் பக்வாஸாகி தேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.(இரண்டும் சரியா அமைஞ்சா என்னை விட சந்தோஷப்படப் போறது கமலஹாசனாத்தான் இருக்கும்!)

சைவ - வைணவ சண்டையை வலை உலகிற்கு எடுத்துட்டு வராதீங்க என்றெல்லாம் அறிவுரை வழங்கவில்லை விருப்பமுமில்லை சொல்லப்போனால் இப்படிச் சண்டைப் போட்டா கூத்தாடியா நான் தான் முதலில் நிற்பேன்.

இன்னும் விஷயம் தேவைப்பட்டால் - கிடைத்தால் வருகிறேன்.

அன்பு தோழர் ஃபெடரிக் நியீட்ஷேவைக் கொண்டு இதை முடித்து வைக்கிறேன்.

God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?

– Nietzsche, The Gay Science, Section 125, tr. Walter Kaufmann

(நியூட்டனைப்போல நியீட்ஷேவையும் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்று சொல்லிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் :))

ஆதித்த கரிகாலன்
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
வீரராஜேந்திர சோழன்
ஆதி ராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
சோழர்கள்

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

Twitter, தமிழ் விக்கிபீடியா இன்ன பிற

பதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.

தீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது 'வறட்சியான' ஒன்று.

சொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது! :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.

பின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

ஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் "நீலகண்ட சாஸ்திரி" நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

எடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.

சமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.

இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
புதுக்கோட்டை(பாதியில் நிற்கிறது)

ஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. :)

Adventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

PS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ் கவிதைகள் புகைப்படம்

கிணற்றுத் தவளைகளின் கதறலைப் புறக்கணியுங்கள்

ரம்யமான முன்பனிக்கால மாலைப்பொழுதின்
கலைந்து செல்லும் மேகங்கள்
இழைத்துக் கோர்த்த வண்ணங்களுக்காகவாவது
நீ அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்
உன் புறக்கணிப்பை விடவும்
வண்ணக் குழப்பங்களுக்கான என் வருத்தம்
உன் வேதனையை புரியவைக்கிறது

மொஸார்ட் இசைத்துக் களைத்த
பியானோவின் காதலைப் போல்
உனக்கான என் காத்திருத்தல்
புறக்கணித்தல்களுக்கு அப்பாற்பட்டது
உன் கோபம்
கிழித்தெறிந்த கவிதை, நாட்குறிப்புக்களோடு
எனக்கும் சம்மதமே
நாவலொன்றின் குறிப்புக்களோடு
உன் காதல்
சிறுகதைகளை நானும் புறக்கணிக்கின்றேன்

-------------------------------

இருத்தலியத்தின் பெயரைச் சொல்லி அடிக்கும் ஜல்லியாகட்டும், பொழுது போகாமல் எழுதும் சினிமா விமர்சனமாகட்டும் என் பதிவின் தொடர்ச்சி எனக்குப் பிடித்தேயிருக்கிறது. பக்கத்தில் சந்தித்த நண்பரொவர் சொன்ன 'உங்கள் பதிவின் தொடர்ச்சி உங்களை அடுத்த தளத்திற்கு நகர்த்தும்' என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கையில்லை. என்னைப் பொறுத்தவரை அடுத்த தளம் என்பது தொடர்ச்சியான ஒன்று, மாற்றம் என்கிற வார்த்தையைப் போல, ஒரே தளத்தில் யாராலும் நிற்க முடியாது. நின்றாலும் கூடவே நிற்பதனாலேயே அது அடுத்த தளமாகிவிடுகிறது. பதிவின் தொடர்ச்சியை அடுத்த தளத்திற்கான முயற்சியாக இல்லாமல் இயல்பாகவே செய்து வர நினைக்கிறேன் அது அடுத்த தளத்திற்கான முயற்சியாகவே இருந்தாலும். விகடன் குமுதம் கல்கி மீதிருந்த காதலைப் போல் காலச்சுவடு மீதும் உயிர்மை மீதும் காதல் இருந்திருக்கிறது இருக்கிறது. அடுத்த தளமாக தேர்ந்தெடுத்த அத்தனையும் ஒரு சமயம் நகர்ந்துவிட/அவிழ்ந்து விட தளத்திற்கான தேடல் மட்டும் இருக்கிறது. என்றாலும் ambition என்கிற வார்த்தை கிளிஷே மட்டுமல்லாமல் ரொம்பவும் பக்வாஸானது என்று மட்டும் இப்போது நினைக்கிறேன்.

-----------------------------------

காவிரிக் கரையிலிருந்து ஸ்ரீரங்கக் கோபுரத்தையும், மலைக்கோட்டையையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமீபத்தில் திருச்சி சென்றிருந்த பொழுது இதற்காகவே ட்ரைபாட் வேறு எடுத்துக் கொண்டு போயிருந்தேன். KPN Travels காரைக்குடி ஸ்லீப்பர் 4.00 மணிக்கெல்லாம் கெத்தா மத்தியப் பேருந்து நிலையத்தில் நிறுத்தினது, டீ மட்டும் ஒன்றைக் குடித்துவிட்டு மனசு முழுவதும் பறக்க, பஸ்ஸில் காவிரி பாலம் வந்து சேர்ந்தேன். அன்று சமயபுரம் தேர் என்பதால் சாரி சாரியாக மக்கள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள் வெளியூரில் இருந்து வந்த சிலர் பாலத்தில் பாய் விரித்துப் படுத்தும் கொண்டிருந்தார்கள்.

நான் சரி எடுத்து பார்ப்போமே என்று சொல்லிவிட்டு, Avயில் படம் எடுத்தால் ஷேக் ஆகியிருந்தது, தெரிந்தது தானே என்று Tvயில் போட்டு Tripodல் வைத்து படம் எடுத்தால் கைகளில் வைத்து எடுத்ததை விடவும் அதிகம் ஷேக் ஆகியிருந்தது பின்னர் தான் புரிந்தது - பேருந்து ஒன்று கடந்தாலோ இரண்டு ஆட்டோக்கள் அல்லது ஒரு ஆட்டோ நான்கு மனிதர்கள் கடந்தாலோ பாலமே ஆடுவதை. பின்னர் புகைப்படம் எடுக்கும் ஆசையை விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் நிரப்புவதற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் இருந்து எடுத்தப் படம் தான் கீழிருக்கும் மலைக்கோட்டை படம்.

Malaikottai

---------------------------------

அய்யனார் திருமணத்திற்காக திருவண்ணாமலை சென்றிருந்தது தான் முதல் முறை திருவண்ணாமலைக்குச் செல்வது. அதற்கு போட்டத் திட்டத்தில் நடந்த ஒரு சின்ன குளறுபடியால், பெரும்புரட்சியாளர்கள் நான்கு பேருடன் தீவிர பின்நவீனத்துவம் பேச/உரையாட/கேட்க முடியாமல் போனது.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிய கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான் போட்ட ஐந்து/பத்து நிமிட பிட்டில் பயந்து போய், பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி தெரித்துவிட(சும்மா விளையாட்டுக்கு கண்டுக்காதீங்க...) இந்தப் பிரச்சனையை முன்னமே எப்படியோ உணர்ந்த நந்தா அதற்கு முன்னமே தெரித்துவிட, அவசர பிரச்சனை ஒன்றை சமாளிக்க வேண்டி நானும் உடனே பேருந்து பிடித்தேன் பெங்களுக்கு.

Ayyanar Marriage

வளர்மதி மிகவும் அமைதியாக இருந்தார், ஆச்சர்யமான ஒருவிஷயம் என்று நினைக்கிறேன். நான் நிச்சயமாய் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

VaLarmathi

---------------------------------

குமுதம் வலைபதிவர்களைப் பற்றி எழுதியதும், வெ.சா திண்ணையில் புலம்பியதும் புதிய விஷயம் இல்லை, தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த ஒன்றுதான். வலைபதிவுகள் பலருக்கு இனிப்பான விஷயம் கிடையாது, குழுமங்களில் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதனுடைய மாடரேஷன் உடன் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மாடரேஷன் இல்லாத எந்த விஷயமும் உகந்ததல்ல என்பது பெரிய ஆச்சர்யத்திற்குரிய விஷயம் இல்லை தான். என்னைப் போல் மாடரேஷன் பிடிக்காமலேயே பதிவெழுதத் தொடங்கியவர்களுக்கு பதிவுகள் விரித்துக் கொடுத்த எல்லை விசாலமானது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் கத்தும் தவளைகள் கிணற்றுக்குள்ளேயே ராஜாங்கம் நடத்த வேண்டியது தான்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In புகைப்படம்

கூர்க் புகைப்படங்கள் சில...

Reflection

Bamboo

Bamboo

Golden Temple

Kid

Kaveri

கூர்க் சென்றிந்த பொழுது எடுத்தவற்றில் சில புகைப்படங்கள்.

PS: ஒரு முக்கியமான டெஸ்டிங்கிற்காக இந்தப் பதிவு.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

Popular Posts